Thursday 17 October 2013

கடன் நெருகடி: அமெரிக்கா இல்லா உலகம் வேண்டுமென்கிறது சீனா.

அமெரிக்காவின் கடன் நெருக்கடி அபாயத்தால் சலிப்படைந்த சீனா அமெரிக்கா இல்லாத உலகம் வேண்டும் எனச் சொல்லியுள்ளது. அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்த நாடு என்ற வகையில் சீனா அமெரிக்காவில் ஏற்படவிருந்த கடன் நெருக்கடியை இட்டு கடும் அச்சத்தில் இருந்தது.

உலகின் பல நாடுகள் தமது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அமெரிக்காவின் நாணயமான டொலரில் வைத்திருக்கின்றன.  அமெரிக்க நாணயத்தின் பெறுமதி மற்ற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது எனப் பல நாடுகள் நம்புகின்றன.  அமெரிக்க அரசின் கடன் முறிகளை வாங்கி அதில் கிடைக்கும் வட்டியை பல நாடுகளும் பெரும் நிதி நிறுவனங்களும் வருமானம் ஈட்டுகின்றன. ஒரு அரசு தான் கடன் வாங்கும் போது கொடுக்கும் பத்திரம் கடன் முறி எனப்படும். அத்துடன் பல உலக வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்க டொலர்களிலேயே நடை பெறுகின்றன. இதனால் அமெரிக்க டொலர் ஒரு உலக நாணயமாகப் பார்க்கப்படுகிறது. சீனா இந்த நிலை மாறவேண்டும் எனச் சொல்கிறது. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேய்ன் அரபு நாடுகளின் எரிபொருள் வர்த்தகம் யூரோ நாணயத்தில் நடக்க வேண்டும் எனச் சொன்னார் அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். கொல்லப்பட்டார். லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபி அரபுநாடுகள் எரிபொருள் வர்த்தகத்தை தங்கத்திற்காக மேற்கொள்ள வேண்டும் என்றார். அவருக்கும் அதே கதிதான். இப்போது சீன அரசு ஊடகம் அமெரிக்க டொலர் உலக நாணயமாக இருக்கக் கூடாது என்கிறது. சீனா தனது ஏற்றுமதிக்கு பெரிதும் அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் அறுபது விழுக்காட்டிற்கு மேலானவை அமெரிக்கா உட்படப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் செய்யும் உற்பத்திப் பொருட்களாகும்.

என்னடா இந்த வாஷிங்டனுக்கு வந்த சோதனை
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்கர்கள் எல்லோருக்கும் மருத்துவக் காப்புறுதி கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதற்காக அவர் ஒரு காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது அமெரிக்க அரசின் செலவை அதிகரிக்கும் என பழமைவாதிகளைக் கொண்ட ரீபார்ட்டிக் குழுமத்தை சேர்ந்த அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் நம்புகிறார்கள். அமெரிக்க அரசின் செலவு கூடினால் அது மக்கள் மீதான வரிச் சுமையை அதிகரிக்கும் என அவர்கள் வாதிடுகிறார்கள். இதனால் அவர்கள் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்திற்கு பல விதத்தில் மக்கள் பிரதிநிதி சபையில் முட்டுக் கட்டை போட்டார்கள்.  அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்தார்கள். இதனால் பல அமெரிக்க அரச பணிமனைகள் இழுத்து மூடப்பட்டன. அத்துடன் அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்த மறுத்தார்கள். அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்க அரசின் செலவுகள் அதிகரித்து சென்றும் வரிவிதிப்பு வருமானம் குறைந்தும் செல்லும் போது அமெரிக்க அரசின் கடன் கட்டு மீறி அடிக்கடி செல்லும். அப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் அமெரிக்காவில் கடன் நெருக்கடி ஏற்படும். ஒரு அரசு தான் பட்ட கடன்களுக்கான நிலுவைகளையும் வட்டிகளையும் உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் புதிய கடன்கள் பெற முடியாமலும் இருக்கும் போது கடன் நெருக்கடி உருவாகும். இதனால் அந்த அரசுக்கு மற்ற நாடுகளும் நிதி நிறுவன்ங்களும் கடன் கொடுக்கத் தயங்கும். இதனால் அந்த நாட்டின் கடன்படு தரம் தாழும். கடன் படு தரம் தாழும் போது புதிய கடன் பெறுவது கடினமாகவும் அதிக வட்டி கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும்.  ஒரு அரசு தான் பட்ட கடன்களுக்கான நிலுவைகளையும் வட்டிகளையும் உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் புதிய கடன்கள் பெற முடியாமலும் இருக்கும் போது கடன் நெருக்கடி உருவாகும். இதனால் அந்த அரசுக்கு மற்ற நாடுகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்கத் தயங்கும். இதனால் அந்த நாட்டின் கடன்படு தரம் தாழும். கடன் படு தரம் தாழும் போது புதிய கடன் பெறுவது கடினமாகவும் அதிக வட்டி கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும்.  ஒபாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தில் தமக்கு வேண்டியபடி மாற்றம் செய்யாவிடில் அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுத்தும் கடன் உச்சவரம்பை உயர்த்த மாட்டோம் என்றும் அமெரிக்கப் பாரளமன்றத்தின் மக்கள் சபையில் உள்ள பழமைவாதிகளைக் கொண்ட ரீபார்ட்டி குழுமம் எச்சரித்துக் கொண்டிருந்தது.  இது உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் கடைசி நேரத்தில் அமெரிக்கப் பாராளமன்றம் பெரும் இழுபறிக்குப் பின்னர் அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தை அங்கிகரித்துடன் கடன் உச்ச வரம்பையும் அதிகரித்தது.

பராக் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை எதிர்க்கும் பாராளமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து கொண்டிருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்த பின்னர் பலர் மனம் மாறினர். பராக் ஒபாமா மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். அவரது எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் மக்களவையில் பெரும்பான்மையினாராக இருக்கின்றனர். மூதவையில் மக்களாட்சிக் கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். அமெரிக்க கடன் உச்சவரம்பை உயர்த்தும் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

அமெரிக்கக் கடன் நெருக்கடி தவிர்க்கப்பட்டதால் உலகெங்கும் பங்குச் சந்தைகளிலும் நிதிச் சந்தைகளிலும் நிம்மதிப் பெருமூச்சு விடப்படுகின்றன. உலகெங்கும் பங்குகளின் விலைகள் அதிகரித்தன. 

1978-ம் ஆண்டு சீனப் பொதுவுடமைக் கட்சி சீனப் பொருளாதாரத்தில் அரசின் கட்டுப்பாட்டைக் குறைப்பதாகவும் சந்தைப் பொறிமுறைமைப்படி பொருளாதாரம் செயற்பட அனுமதிப்பதாகவும் முடிவு செய்தது. பின்னர் 1980இல் ஐஎம்F எனப்படும் பன்னாட்டு நாணய நிதியத்திலும் இணைந்து கொண்டது. 1981இல் விவசாயிகளின் இலாபத்தை அரசுக்கு கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ள் அனுமதித்தது. 1984இல் தனது கரையோர நகர்களில் வெளிநாடுகள் முதலிடலாம் என அறிவித்தது. கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் தாரக மந்திரம் "எம் கடன் அமெரிக்காவிற்கு மலிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதே" என்பதே. அமெரிக்கர்களும் சீனப் பொருட்களை மலிவாக வாங்கினர். அமெரிக்காவின் தொழிலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் சீனாவில் ஊதியம் இருபதில் ஒரு பங்காகும். இதனால் பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தமது பொருட்களை உற்பத்தி செய்தன. அமெரிக்காவிற்கு தற்போது சீனா ஆண்டு ஒன்றிற்கு இரு நூறு பில்லியன் டொலர்களுக்கு அதிகமான ஏற்றுமதியைச் செய்கிறது. அமெரிக்காவில் சீனா ஐந்து பில்லியன் பெறுமதியான முதலிட்டையும் சீனாவில் அமெரிக்கா 51பில்லியன்கள் பெறுமதியான முதலீட்டையும் செய்துள்ளன.
அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த கடன் 1.28ரில்லியன் டொலர்கள். அதாவது 1.28இலட்சம் கோடி. இதில் எத்த அளவு என்பதை ஆர் இராசவிடம் அல்லது கனிமொழியிடம்தான் கேட்க வேண்டும். இந்த 1.28ரில்லியன்கள் அமெரிக்காவின் திறைசேரிக்கடனில் 22.8விழுக்காடும் அமெரிக்காவின் மொத்தக் கடனில் 8 விழுக்காடுமாகும். இப்போது கடன் பட்டவர்களிலும் பார்க்க கடன் கொடுத்தவர்கள்தான் அதிகமாகக் கலங்குகிறார்கள். அமெரிக்காவிற்கு கடன் கொடுத்த சீனாவும் கலங்கி நிற்கிறது. இதனால் சீன ஊடகம் 'de-Americanized world' - அமெரிக்கா இல்லாத உலகம் வேண்டும் என்றது. ஆனால் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் சீனா தனது அந்நியச் செலவாணியை முதலிட அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பதைத் தவிர வேறு சிறந்த வழிகள் இல்லை என்கின்றனர். அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தையும் நிதிச் சந்தையையும் தனது சொந்த நலனுக்காக விளையாடுகிறது எனப் பல சீனர்கள் நம்புகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே சில சீன பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவில் சீனா முதலிடுவதைக் குறைத்து சீனா தனது முதலீட்டைப் பரவலாக்க வேண்டும் என்றனர். ஆனால் சீனா தொடர்ந்தும் அமெரிக்கக் கடன் முறிகளை வாங்கிக் குவித்துக் கொண்டே இருந்தது. இதைத் தவிர சீனாவிற்கு வேறு பாதுகாப்பான வழிகளும் இல்லை. சிலர் சீனா அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம் எனவும் ஆலோசனை கூறினார்கள்.

சீனா அமெரிக்காவிற்கு கடன் கொடுக்காவிடில் அமெரிக்க டொலரின் மதிப்புக் குறையும். சீன நாணயமான யுவானின் மதிப்பு அதிகரிக்கும். இப்படி நடந்தால் சீனாவின் பொருட்களை அமெரிக்கர்களால் வாங்க முடியாத அளவிற்கு டொலரின் மதிப்புக் குறைந்தால் சீனாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி குறையும். அமெரிக்க நிறுவனங்கள் சினாவை விட்டு அமெரிக்காவிலேயே தமது பொருட்களை உற்பத்தி செய்யும். இவை இரண்டாலும் சீனாவில் உற்பத்தி பெரிதும் குறைவடையு. இதன் விளைவாக சீனாவில் வேலையில்லாப் பிரச்சனை பெரிதாகத் தலை தூக்கும். மக்கள் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள். இதனால் சீனா அமெரிக்காவிற்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்க வேண்டுமாயின் சீனா அமெரிக்கத் திறைசேரியின் கடன் முறிகளை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது அமெரிக்க அரசுக்கு சீனா கடன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்த ஆண்டும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்க அதிகமாக இருக்கும். இதனால் சினா தனது வெளிநாட்டுக் கையிருப்பில் மேலதிகமாக ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டொலர்களை எங்காவது முதலிட வேண்டும். சீனாவில் சிலர் அமெரிக்காவின் திறைச் சேரி முறிகளில் சீனா முதலிடுவதைக் குறைக்க வேண்டும் எனக் கூச்சலிடுகின்றனர். அப்படி முதலிடாவிட்டால் அது சீனாவிற்கே பாதகமான விளைவை ஏற்படுத்தும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...