Sunday 16 December 2012

மஹிந்தவிற்கு தலையிடியாகிய இலங்கை சட்டவாளர் சங்கத்தின் அதிரடி முடிவு

15-12-2012இலன்று கூடிய இலங்கைச் சட்டவாளர் சபையினர் (Bar Association) இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கு பெரும் தலையிடி கொடுக்கக் கூடிய அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக மஹிந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கையின் சட்டத்துறையினரும் நீதித் துறையினரும் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். ஷிரானி பண்டாரநாயக்கவை இலங்கையின் தலைமை நீதியரசராக 2011இல் நியமித்தவர் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச. தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஷிரானியின் கணவரான பிரதீப் காரியவாசத்தை தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தவர் மஹிந்த ராஜபக்ச. மோசடிக்காக பிரதீப் காரியவாசத்தை பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச நீக்கினார். இப்போது ஷிரானியைப் பதவியி இருந்து நீக்க மஹிந்த தீவிர முயற்ச்சி செய்கிறார்.

மஹிந்தப் பிரயத்தனம்
இலங்கையின் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மன்னாரில் ஆரம்பித்தது. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் மன்னார் நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக கோத்தபாய ராஜ்பக்சவிற்கு நெருக்கமானவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனிற்கு மன்னார் நீதிபதி அழைப்பாணை விடுத்தார். இது நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை ஆரம்பித்து வைத்தது. இலங்கை நீதிச் சேவையின் செயலாளர் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார். உயர் நீதிமன்றத்திற்கு மஹிந்தவின் செயலாளருக்கு மிகவும் வேண்டியவர் ஒருவரை நியமிக்கும்படி மஹிந்த செய்த பரிந்துரையம் பிரதம் நீதியரசர்  ஏற்றுக் கொள்ளவில்லை.  இது மஹிந்த-ஷிரானி மோதலை மேலும் வளர்த்தது.  திவி நெகும சட்டம் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியது. திவி நெகும என்பது மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து மஹிந்தவின் இன்னொரு உடன் பிறப்பான பசின் ராஜபக்சவின் கீழுள்ள பொருளாதாரத் துறை அமைச்சுக்கு கொடுக்கும் சட்டம். இச் சட்ட மூலத்தின் 27 வாசகங்களில் 16 இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சில வாசகங்கள் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாசகத்தை நிறைவேற்றுவதற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப் படவேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது ஆட்சியாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. விளைவு பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி விலக்கும் பிரேரணை பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டின் சகல துறைகளையும் தமது பெருவிரல்களின் கீழ் வைத்திருக்கும் ராஜபக்சேக்களுக்கு நீதித் துறைமட்டும் தமது சொல்கேளாமல் இருப்பதைப் பெருட்படுத்த முடியவில்லை. பாராளமன்றில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பானமையும் உச்ச அதிகாரங்களைக் கொண்ட குடியரசுத் தலைவர் பதவியும் மஹிந்த ராஜபக்சவை உலகிலேயே மிக அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சித் தலைவராக மாற்றி விட்டது.

பாராளமன்றத் தெரிவுக்குழு
ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதிவியில் இருந்து விலக்கும் பிரேரணை 116 பாராளமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பாராளமன்ற அவைத் தலைவரிடம் சமர்ப்பித்தனர். பாராளமன்றத் தலைவர் ஷிரானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஒரு தெரிவுக் குழுவை அமைத்தார். ஷிரானியை  விசாரணைக்கு அழைத்தனர் பாரளமன்றத் தெரிவுக் குழுவினர். விசாரணையின் போது ஆளும் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டித் தீர்த்தனர். பாரளமன்றத் தெரிவிக்குழுவில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர். தெரிவுக் குழுவின் உள்ள ஆளும் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் 1000பக்கங்களடங்கிய குற்றப் பத்திரிகையக் ஷிரானியிடம் கொடுத்து மறுநாள் அதற்கு பதில் தரும்படி கூறினார்கள். ஷிரானி பாராளமன்றக் குழு பக்கச் சார்பானது அதைக் கலைத்து விட்டு வேறு ஒரு குழுவை அமைக்கும்படி பாராளமன்றத் தலைவரிடம் கூறிவிட்டு தெரிவுக் குழுவிற்கு தான் சமூகமளிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். பாராளமன்றத் தெரிவுக் குழு ஷிரானியைக் குற்றவாளி எனக் குறிப்பிடும் அறிக்கையை பாராளமன்றத் தலைவரிடம் சமர்ப்பித்தது. ஒரு திருடன் என்று குற்றம் சாட்டப்பட்டவனுக்கு கொடுக்கப்படும் கால அவகாசம் கூட ஷிரானிக்கு வழங்கப்படவில்லை.

தலைமை நீதியரசர் பதவி நீக்கப்பட்டால் புதிய தலைமை நீதியரசர் பதவியை எவரும் எடுக்கக் கூடாது என்றும் மீறி யாராவது பதவி ஏற்றால் அவரை இலங்கைச் சட்டவாளர்கள் புறக்கணிப்பார்கள் என்றும் 15-12-2012இலன்று கூடிய இலங்கைச் சட்டவாளர் சபையினர் (Bar Association) முடிவெடுத்தனர். இந்த முடிவு சரியாக நடைமுறைப்படுத்தப் படுமானால் இலங்கையின் சட்டத்துறையிலும் நீதித் துறையிலும் பெரும் நெருக்கடி ஏற்படும். இலங்கை அரசமைப்பு யாப்பு சிக்கல் நிறைந்தது சட்டவாக்கும் அதிகாரம் பாராளமன்ற்த்திடமும், சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதித் துறையிடம் மட்டுமே இருக்கிறது. இலங்கைப் பாராளமன்றம் காகம் கறுப்பு என்பது போல் ஒரு சட்ட வாசகத்தை நிறைவேற்றினால். அச்சட்டத்தின் படி காகம் பச்சை என்று நீதி மன்றம் தீர்ப்புக் கூறினால் அதில் தலையிடும் உரிமை பாராளமன்றத்திற்கு இல்லை. இதை பிரபல சட்டத்தரணி எஸ் நடேசன் Saturday Review வழக்கில் தெளிவாகக் கூறியிருந்தார்.

ராஜபக்சேக்கள் பின்வாங்குகிறார்களா?
ஷிரானிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்புக்கள் எழுந்ததைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச ஷிரானிக்கு எதிரான விசாரணை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார்.  பின்னர் பாராளமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையைப் பற்றி ஆராய இன்னொரு தன்னிச்சையான குழு அமைக்கப்படும் என்றார். இது பான் கீ மூன் இலங்கைப் போரின் போது இழைக்கப் பட்டதாக கருதப்படும் குற்றங்களை விசாரிக்க குழு மாறி குழுவாக நியமிப்பது போல் உள்ளது. மேலும் இலங்கை அரசு ஷிரானிக்காக பாராளமன்றத் தெரிவுக்குழு செய்தது நீதி விசாரணை அல்ல அது ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை மட்டுமே என்று தெரிவித்தது. இன்னொரு குழு அமைத்ததும் நடந்தது நீதி விசாரணை அல்ல என்பதும் ராஜபக்சேக்கள் ஷிரானிக்கு எதிரான அவர்களது நடவடிக்கைகளிற்கு  எழுந்த எதிர்ப்பினால் ஆடிப்போயுள்ளார்கள் என்றே தெரிகிறது. ராஜபக்சே ஆட்சிக்கு ஆதரவாக பல ஊடகங்களில் பிரச்சாரம் செய்தவரான ராஜீவ விஜேசிங்க தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றவியல் முன்மொழிவில் கையொப்பமிடவில்லை. கையொப்பமிடாத மஹிந்த கட்சியின் ஒரே ஒரு பாராளமன்ற உறுப்பினர்  ராஜீவ விஜேசிங்கவாகும். தன்னிடம் முன்மொழிவை வாசிக்காமல் கையொப்பமிடும்படி கேட்டார்கள் அதனால் அவர் கையொப்பமிடவில்லை என ராஜீவ லக்பீம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது கையொப்பமிட்ட மற்ற 116 உறுப்பினர்களைக் கேலி செய்வதாகவும் மஹிந்தவை மானபங்கப் படுத்துவதாகவும் இருக்கிறது. அது மட்டுமல்ல தலைமை நீதியரசருக்கு எதிரான முன்மொழிவு குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்குத் தெரியாமல் நடந்தது என்கிறார். இது மஹிந்த ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அல்லது மஹிந்த தன் மேல் களங்கம் வராமல் இருக்க ராஜித மூலமாக நாடகமாடுகிறரா?

 ஷிரானி உத்தமரல்லர்.
ஷிரானியின் வங்கிக் கணக்கொன்றில் குறிப்பிட்ட ஒரு மாத்தத்திற்கு மட்டும் மூன்று கோடிக்கு மேல் பணமாற்றங்கள் செய்யப் பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு பற்றிய விபரத்தை ஷிரானி வருமான வரி இலாகாவிற்கு மறைத்து விட்டார் என்பது பெரிய குற்றச்சாடுக்களில் ஒன்று. ஷிரானியின் வங்கிக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு 25 கோடி ரூபாக்கள் வரவிடப்பட்டிருப்பதாக ஒரு ஊடகம் வெளிவிட்ட செய்திக்கு அவரது வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். ஷிரானி பல கோடிகளுக்கு இலங்கை அரச திறைசேரி முறிகளையும் வாங்கியிருந்தார்.ஷிரானி அதிக எண்ணிக்கையான வங்கிக் கணக்குகளை வைத்திருந்தார் அவற்றிற்கிடையில் நடக்கும் பண மாற்றீடுகள் வருமானவரித் துறையைக் குழப்புவதாக இருக்கின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தை மறைத்த ஷிரானி விவகாரம்
ஷிரானி விவகாரம் பெருமளவில் ஊடகங்களில் அடிபட்டுக்கொண்டிருக்கும் போது மஹிந்த அரசு தனது மோசமான பாதிட்டை சத்தம் சச்சரவின்றி பாராளமன்றத்தில் நிறைவேற்றி விட்டது. பலருக்கு இரா சம்பந்தன் வரவு செலவுத் திட்டத்தின் போது விடுதலைப் புலிகளைப்பற்றி ஒரு மோசமான உரையாற்றிய செய்தி வெளிவந்த போதுதான் பலருக்கு வரவு செலவுத் திட்டம் இலங்கைப் பாரளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...