Friday 31 August 2012

ஈரானில் வெடித்த எகிப்தியக் குண்டு

ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு மேற்கு நாடுகள் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், ஈரானின் அணு உலைகளை இஸ்ரேல் தனித்தோ அல்லது ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தோ தாக்கலாம் என்ற பரபரப்புச் சூழலில் ஈரானில் அணிசேரா(கூட்டுச்சேரா) நாடுகளின் உச்சி மாநாடு நடக்கிறது. ஈரான் இந்த மாநாட்டை ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிராக மற்ற நாடுகள் தன்னுடன் அணிசேரவைப்பதற்கு முயற்ச்சி செய்கிறது. ஈரான் அணிசேரா நாடுகளின் மாநாட்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போல ஒழுங்கு செய்துள்ளது என்கிறது பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை.

அணி சேரா நாடுகள்
முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, முன்னாள் எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர், முன்னாள் இந்தோனிசியப் பிரதம சுகர்ணோ, முன்னாள் யூக்கோஸ்லாவிய அதிபர் ஜோசேப் டிட்டோ முன்னாள் கானா அதிபர் குவாமி நிக்குவுமா ஆகியோரது உழைப்பால் 1961இல் பெல்கிரேட்டில் உருவாக்கப்பட்டது அணிசேரா நாடுகள் இயக்கம். நேட்டோ ஒப்பந்த நாடுகளின் அணியிலோ அல்லது வார்ஸோ ஒப்பந்த அணியிலோ சேராமல் தாமாகக் கூடி அணிசேரா நாடுகள் என்று தம்மை அழைக்க விரும்பின. தற்போது 120 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அணிசேரா நாடுகள் இயக்கம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒரு பலமிக்க அமைப்பாகும். ஆனால் அணிசேரா நாடுகள் ஒரு அணியில் சேர்வதில்லை. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் பனிப்போர் நிலவிய போது அணிசேரா நாடுகள் இயக்கத்திற்கு இருந்த முக்கியத்துவம் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அண்மைக்காலத்தில் பெரு வல்லரசான ஐக்கிய அமெரிக்காவை அறிக்கைகள் மூலம் தாக்குவதை தலையாய கடமையாகக் கொண்டுள்ளன.

ஈரானின் கனவு
ஈரானை பன்னாட்டு அரங்கில் தனிமைப்படுத்த ஐக்கிய அமெரிக்கா பெரு முயற்ச்சி எடுத்து வரும் வேளையில் ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக அணிசேரா நாடுகளை அணி திரட்ட முயல்கிறது. மாநாட்டு மண்டபத்தின் வெளியே தனது நாட்டில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானிகள் பாவித்த குண்டுகளால் சிதறிய வாகனங்களைக் காட்சிப்படுத்தியது. அத்துடன் மாநாடு நடக்கும் மண்டபத்திற்குள் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானிகளின் குடும்பத்தினரை முன் வரிசையில் கொல்லப்பட்டவர்களின் படங்களைத் தாங்கிய படி அமர்த்தியது. மாநாட்டில் பேசிய ஈரானிய ஆன்மிக்கத் தலைவர் அயத்துல்லா கொமெய்னி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையை தாக்கிப் பேசினார்.  கொமெய்னி தனது உரையில் சிரியாவைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சிரியா ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு ஈரான் பெருதும் உதவிவருகிறது.

பான் கீ மூன்
இஸ்ரேலால் தாக்கப்படும் அபாயம் மேற்கு நாடுகளின் பொருளாதார்த தடை ஆகியவற்றுக்குள் தவிக்கும் ஈரான் உலக அரங்கில் தனது பலத்தையும் செல்வாக்கையும் தூக்கி நிறுத்த தனது நாட்டுத் தலைநக் டெஹ்ரானில் நடக்கும் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை பயன்படுத்த எண்ணி இருந்தது. அந்த நம்பிக்கையில் முதல் விழுந்த அடி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் மாநாட்டில் ஆற்றிய உரையால் விழுந்தது. பான் கீ மூன் ஈரானின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார். பான் கீ மூன் ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் வேண்டுகோள் விடுத்தன. பான் கீ மூன் அங்கு பங்கு பற்றச் சம்மத்தித்தது தமக்குக் கிடைத்த வெற்றி என ஈரான் கருதியது. ஆனால் பான் கீ மூன் ஆற்றிய உரை ஈரானுக்குச் சாதகமாக இருக்கவில்லை.

குண்டைத் தூக்கிப் போட்ட எகிப்திய அதிபர்
டெஹ்ரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில் மல்லிகைப் புரட்சிக்குப் பின்னர் பதவிக்கு வந்த எகிப்திய அதிபர் மொஹமட் மோசியின் உரை பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் மொஹமட் மோசி சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக மாநாட்டில் உரையாற்றியது ஈரானுக்குப் பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும்  இருந்தது. சுனி முஸ்லிம் இனத்தவரான மொஹமட் மோசி சிரியாவில் கிளர்ச்சி செய்யும் சுபி இஸ்லாமையர்களுக்கு ஆதரவாகப் பேசியது ஆச்சரியம்ல்ல. ஆனால் சிரிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் ஈரானிய ஆட்சியாளர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.  மோசி சிரியாவில் நடக்கும் வன்முறை தனது இருதயத்தில் இருந்து இரத்தம் கொட்டச் செய்கிறது என்றார். ஈரானியத் தொலைக்காட்சியில் மோசியின் உரையின் பல பாகங்கள் தணிக்கை செய்யப்படன. தான் பன்னாட்டு அரங்கில் தனிமைப் படுத்தப்படவில்லை என பறை சாற்ற இருந்த ஈரானுக்கு மோசியின் உரை ஒரு பெரும் குண்டைத் தூக்கிப் போட்டது போல் இருந்தது. அணி சேரா நாடுகளிடையே ஈரானுக்கு ஆதரவில்லை என்பதை மோசியின் உரை கோடிட்டுக் காட்டுகிறது. 1979இல் முன்னாள் எகிப்திய அதிபர் அன்வர் சதாத் இஸ்ரேலுடனான காம் டேவிட் உடன்படிக்கையில் கையொப்பமிட்டதில் இருந்து ஈரான் எகிப்திய உறவு சீராக் இருக்கவில்லை. அதன் பிறகு ஈரானுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் எகிப்திய அதிபர் மொஹமட் மோசியாகும்.

Star of the Show மொஹமட் மோசி
அணிசேரா நாடுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவர் நட்சத்திரத் தலைவராக இருந்திருக்கிறார்கள். கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ரோ, லிபிய அதிபர் மும்மர் கடாஃபி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் அணிசேரா நாடுகளிடை மிகவும் விரும்பத்தக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது நடக்கும் மாநாட்டில் Star of the Show மொஹமட் மோசிதான். படையினரின் பிடியில் இருந்து எகிப்தை மீட்டு அங்கு தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் மொஹமட் மோசி. இப்படிப்பட்ட ஒருவர் ஈரானைத் தாக்கி உரையாற்றியது அணிசேராநாடுகளிடை ஒரு அதிர்வலையை ஏற்படுட்தி உள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...