Thursday 19 April 2012

இலங்கைப் பயணம்: சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா

இந்த ஆண்டு இலங்கைப் பத்திரிகைகளில் இதுவரை வந்த நகைச்சுவைகளில் மிகச் சிறந்த நகைச்சுவை இந்திய இணை அமைச்சர் வி நராயாணசுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியதே. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று சுஸ்மா சுவராஜ் தலைமையில் போருக்கு பிந்திய ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக என்று சொல்லிக் கொண்டு இலங்கை சென்றது. அது பசில் ராஜபக்ச, மலையத் தொழிற்சங்கவாதிகள், மலையக அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடபடப் பலதரப்பினரைச் சந்தித்தனர். இக்குழுவின் பயணம் தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் வி நராயாணசுவாமி தனது திருவாய் மலர்ந்தருளினார். இக்குழுவினர் 15-ம் திகதியில் இருந்து 21-ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர்.

இந்திய உளவுத் துறைக்குத் தெரியாதா?

இலங்கையில் இப்போதைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை இலங்கைப் பத்திரிகைகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இந்திய உளவுத் துறை இலங்கையில் செயற்படுகிறது. இலங்கை நிலைமையைப் பற்றி இந்திய உளவுத் துறைக்குத் தெரியாததை சுஸ்மிதா சுவராஜ் கண்டறியப் போகிறாரா? இதிலும் பார்க்க நடிகை சுஷ்மிதா சென்னை அனுப்பி இருக்கலாம். அவருக்கு இலங்கை ஆட்சியாளர்கள் காட்டு காட்டு என்று காட்டியிருப்பார்கள்.


மீண்டும் பதின்மூன்று பல்லவி மீண்டும் நாமம்

இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் இந்த ஆண்டு இறுதியில் தனது இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. இலங்கை ஆட்சியாளர்களைச் சந்தித்த சுஸ்மா சுவராஜ் பதின்மூன்றாம் திருத்தத்தை அமூல் செய்யும் படி வலியுற்த்தினார். ஐக்கிய நாடுகள் சபையில் போர்த்துகீசியப் பிரதி நிதியியின் உரையைத் தனது உரை என்று எண்ணி வாசித்துச் சாதனை புரிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிடம் பதின்மூன்றுக்கு மேல் சென்று தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று கூறிவிட்டுப் பின்னர் அப்படி ஒன்றும் கூறவில்லை என்று மஹிந்த ஏமாற்றினார். சுஸ்மா ஏற்கனவே நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பதால் அவருக்கு காது குத்தப்படலாம். சுஸ்மா சுவராஜ் அவர்களும் ஒரு அப்பட்டமான பேரினவாதியே. அவர் இலங்கைப் பேரினவாதிகளுக்கு தொடர்ச்சியாகப் புகழாரம் சூட்டினார்.

உண்மையான நோக்கம்
இலங்கை அரசு ஒரு தூதுக் குழுவை இலங்கை அனுப்பியதன் நோக்கத்தை கலாநிதி விக்கிரமபாகு
"ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரவளித்துள்ளமையால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக் குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக்குழுவின் திட்டம்" என குற்றம் சாட்டினார். ஆனால் தூதுக் குழுவின் முக்கிய நோக்கம் வேறு. இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை சில முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது:
1. இந்தியாவின் அதிகார மையமான தென்மண்டலத்தில் இருப்பவர்களின் சாதிய நலன்கள்.
2. இந்தியாவை ஆள்பவர்களின் குடும்ப நலன்கள்
3. இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்தியப் பெரும் முதலாளிகளின் நலன்கள்.
இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு இலங்கை தொடர்பாக இந்தியா தனது செயற்திட்டங்களை வகுத்துக் கொள்கிறது. இதற்கு சிங்கள மக்களுடன் ஒரு சிறந்த நட்பை இந்தியா பேண வேண்டியது அவசியமாகிறது. அப்படி வகுத்த கொள்கைகளும் செயற்திட்டங்களும் ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு தமிழ்நாட்டில் 2011இல் ஒரு பெரும் தேர்தல் தோல்வியைக் கொடுத்தது. இந்த தேர்தல் காரணங்களுக்காக இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி அமைக்கத் தயாரில்லை. இலங்கையில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்துவதைப்பற்றி இந்திய ஆட்சியாளர்களோ கொள்கை வகுப்பாளர்களோ அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இலங்கையில் பெருகிவரும் சீன ஆதிக்கம் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் ஐக்கிய அமெரிக்காவையும் அதிகம் கவலையடைய வைத்தது. அதனால் இலங்கையின் மனித உரிமை மீறல்களை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். வட இந்தியாவில் இடைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் அதிகரித்த தமிழ்நாட்டு வாக்காளர்களின் தேவையும் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நெருக்குதல்களும் இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வைத்தது. இதனால் இலங்கை அதிருப்தி அடைந்தது. இதனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்து இலங்கை தொடர்பான இந்தியாவின் தற்போதைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் தேர்தல் காரணங்களுக்காக கொள்கை மாற்றம் தேவைப்படாது என்று எண்ணினர். அதனால் இந்தியாவின் சகல கட்சிகளைச் சேர்ந்தவரகளை இலங்கைக்கு அனுப்பி அவர்களை இலங்கை கவனிக்க வேண்டிய மாதிரிக் கவனித்தால் அவர்கள் இலங்கை சார்பான இந்தியாவின் தற்போதைய கொள்கைகளை ஏற்றுக் கொள்வர் என நினைத்தது. அதில் முதல் இடியைப் போட்டவர் ஜெயலலிதா.


ஜெயாவின் அதிரடிக் காய் நகர்த்தல்
சட்டசபைத் தேர்தலில் தமிழின உணர்வாளர்களின் ஆதரவுடன் பெரும் வெற்றியீட்டிய ஜெயலலிதாவின் அடுத்த கனவு 2014இல் நடகக இருக்கும் பாராளமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியீட்டி தான் அடுத்த இந்தியப் பிரதமராக வேண்டும் என்பதே. ஏற்கனவே அவரது சோதிடர்கள் அவருக்கு இந்தியப் பிரதமராகும் யோகம் உண்டு என்று சொல்லிவிட்டனர். தான் ஒரு ஈழத் தமிழர்களைன் தீவிர ஆதரவாளர் என்று தன்னைக் காட்டிக் கொள்வதில் ஜெயலலிதா இப்போது அதிக கவனத்துடன் செயற்படுகிறார். இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை செல்லும் என்றவுடன் ஜெயலலிதா குழுவின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன் அதில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்தப் பயணம் வெறும் கண் துடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது. சிறிலங்கா அதிபருடன் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கும் ஒழுங்குகள் கூட இல்லை. அவருடன் விருந்து உண்ணவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனது கட்சியின் சார்பில் யாரும் போகமாட்டார்கள் என்றேல்லாம் கூறிப் போட்டார் ஒரு போடு. ஜெயலலிதாவைத் தொடர்ந்து உண்ணாவிரத நாடகமாடிய கலைஞர் கருணாநிதியும் தனது அரசியல் எதிர்காலத்திற்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை முக்கியம் என்பதால் தனது கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் இடம் பெறமாட்டார்கள் என்றார். ஜெயலலிதா அத்துடன் நிற்கவில்லை முதலமைச்சர்கள் மாநாட்டுக்குச் சென்ற இடத்தில் சில சந்திப்புக்களை மேற்கொண்டார். திரிணாமுல் காங்கிரசும், ஐக்கிய ஜனதா தளமும் இலங்கை செல்லும் குழுவில் இருந்து விலகிக் கொண்டன. இதனால் சுஸ்மிதா குழு பெரும் பலவீனம் அடைந்தது. தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தாம் மஹிந்த ராஜபக்சவுடன் அமர்ந்து விருந்து உண்டால் தமது அரசியல் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்று உணர்ந்து அந்த விருந்து உபசாரத்தை இரத்துச் செய்யும்படி இந்திய வெளியுறவுத் துறையைக் கெஞ்சினர்.

1 comment:

சத்தியா said...

எல்லா அரசியல் வியாதிகளும் ஆடு நனைகிறதே என்று ஓநாயின் பாத்திரம் தான் வகிக்கின்றார்கள். உணர்வுடன் தமிழனின் துன்பத்தை கண்டறிந்து அதற்கான தீர்வு என்ன என்பதனை தெளிவுற விளங்கிக் கொள்ள ஒரு ஓநாய்க்கும் நேரமில்லை. இவர்கள் தமது அடுத்த நாற்காலி கனவிலேயே எமது துன்பத்தை தமது சுயநலன்களுக்காக உபயோகிக்கின்றனர். எமது கண்ணீரில் உல்லாசக் கப்பல் விடுகின்றனர். இனியாவது நாம் இந்திய அரசியல் வியாதிகளை நம்பாது எம்மை பலப்படுத்த முயற்சிப்போம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...