Monday 16 January 2012

ஈரானிய அணு விஞ்ஞானிகளைக் கொல்வது யார்?

ஈரானிய அணுவிஞ்ஞானிகள் தொடந்து கொல்லப்படுவதையிட்டு ஈரான் அதிக ஆத்திரமடைந்துள்ளது. 11-01-2012இலன்று பட்டப் பகலில் ஈரானிய அணு விஞ்ஞானியான முஸ்தபா அஹ்மதி றொஸானன் அவரது வாகனத்தின் அடியில் பொருத்தப்பட்ட காந்தக் குண்டு வெடித்தமையில் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்ட மூன்றாவது ஈரானிய அணு விஞ்ஞானி. இன்னொருவர் மீதான கொலை முயற்ச்சியில் இருந்து அவர் தப்பிவிட்டார். ஆத்திரமடைந்த ஈரான் அமெரிக்க அரசிற்கும் பிரித்தானிய அரசிற்கும் தனது அணு விஞ்ஞானியின் கொலையில் அவர்களின் உளவுத்துறைக்குச் சம்பந்தம் இருந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளது. ஈரானின் இக்கடிதம் அனுப்பிய செய்கை ஒரு அசாதாரண நிகழ்வாகவே பலராலும் கருதப்படுகிறது.  ஈரானிய அணுவிஞ்ஞானியின் கொலையை அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டனும் வழமைக்கு மாறான குரலிலே கடுமையகக் கண்டித்துள்ளார். ஈரானின் படைத்துறையின் பிரதி அதிபர் பிர்கேடியர் ஜெனரல் மசோட் ஜசயேரி விஞ்ஞானி கொலைக்கு அமெரிக்க பிரித்தானிய மற்றும் சியோனிஸ்ட் அரசுகள் பொறுப்பு என்றும் அரச பயங்கரவாதத்திற்கு துணை செய்பவர்கள் சரியான தருணத்தில் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று எச்சரித்தார்

ஈரானின் பூகோள முக்கியத்துவம்
ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பலமிக்க ஈரானால் ஹோமஸ் நீரிணையக் கட்டுப்படுத்த முடியும். கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. அணு ஆயுத பலம் மிக்க ஈரானால் உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஈரானின் அணு ஆயுத பலம்
அண்மைக் காலமாக ஈரானின் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் அதிக கரிசனை காட்டத் தொடங்கி இருக்கின்றன. அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பல பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஈரானிய சொத்துக்களை முடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு எதிரான பொருளாதரத் தடைகளைக் கொண்டுவரவுள்ளது. இந்த பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஈரானிய விஞ்ஞானி கொல்லப்பட்டுள்ளார்.

கொன்றது யார்?
32 வயதான முஸ்தபா அஹ்மதி றொஸானனை கொன்றது அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயா,  பிரித்தானிய உளவுத் துறையான எம்.ஐ.6ஆ, அல்லது இஸ்ரேலிய உளவாளிகளான மொசாட்டா?  பல படைத்துறை ஆய்வாளர்களைக் குடையும் கேள்வி இது. இந்தக் கேள்விக்கு விடை தேடும் போது இன்னிரு கேள்வி எழுகிறது. இம்மூன்று உளவுத் துறையும் இணைந்து செயற்பட்டதா, ஏதாவது இரு துறைகள் இணைந்து செயற்பட்டதா, அல்லது இவற்றில் ஒன்று தனித்துச் செயற்பட்டதா? ஈரானில் ஜுண்டல்லா இயக்கம் என்று ஒரு ஈரானிய அரசுக்கு எதிரான இயக்கம் இருக்கிறது. இது இக்கொலையச் செய்து குழப்பத்தைச் செய்திருக்கலாம் என்ற சங்தேகமும் உண்டு. ஆனல் ஜுண்டல்லா இயக்கத்திடம் இப்படி ஒரு கொலையைக் கச்சிதமாகச் செய்து முடிக்கக் கூடிய தொழில்நுட்பம் இல்லை. வேறு யாராவது இந்த இயக்கத்திற்கு இக்கொலையைச் செய்ய துணை போய் இருக்கலாம்.   ஹோமஸ் நெருக்கடியை மேலும் மோசமாக்க அமெரிக்கா இப்போது இருக்கும் உலக பொருளாதாரச் சூழலில் விரும்பாது. அதனால் அது ஈரானில் ஒரு குண்டு வெடிப்பை இப்போது விரும்பாது. பல படைத்துறை ஆய்வாளர்கள் விஞ்ஞானியை மொசாட்தான் கொன்றிருக்கலாம் என்று நம்புகின்றனர். போலிக் கொடி நடவடிக்கை மூலம் இஸ்ரேல் கொன்றிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். போலிக் கொடி(False Flag) நடவடிக்கை என்பது ஒரு நடவடிக்கையை ஒரு பகுதியினர் மேற்கொள்வர் ஆனால் சகலருக்கும் அது வேறு யாரோ செய்தது போல் இருக்கும். இப்படியான பல நடவடிக்கைகளை மொசாட் செய்துள்ளது. இஸ்ரேலிய உளவுத் துறையின அமெரிக்க அல்லது பிரித்தானிய உளவாளிகள் போல் தம்மைக் காட்டிக் கொண்டு பல மத்திய கிழக்கு நாடுகளில் செயற்படுவதுண்டு. இஸ்ரேலிய மொசாட் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கடவுட் சீட்டுகளைப் போலியாகத் தயாரிப்பது அம்பலத்திற்கு வந்ததுண்டு. இஸ்ரேலிய மொசாட்டைச் சேர்ந்தவர்கள் தம்மை அமெரிக்கர்களாகவோ அல்லது பிரித்தானியர்களாகவோ காட்டிக் கொண்டு ஜுண்டல்லா இயக்கத்தைக் கொண்டு செய்திருக்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...