Tuesday 15 November 2011

தைவான்: அமெரிக்காவிலிருந்து ஒரு Indecent Proposal

அமெரிக்காவின் கடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஐரோப்பியா தனது நிதி நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவிக்கிறது. இந்த நெருக்கடிகள் மற்றைய நாடுகளையும் பாதிக்கிறது. செப்டம்பர் மாதம் பிலிப்பைன்சின் ஏற்றுமதி 27% வீழ்ச்சியைக் கண்டது. இந்த மாதிரியான நிலைமைதான் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த இரண்டு நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில். தென் கொரியாவின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 20% வீழ்ச்சியடைந்தது. வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகள்  அதிக வெப்பமடைவதைத் தவிர்த்து பணவீக்கத்தால் பாதிப்படையாமல் மென்மையான தரையிறக்கம் செய்ய முயலும். வேக மான வளர்ச்சி கண்ட சீனா இந்த மென்மையான தரை இறக்கத்தில் தோல்விகண்டுள்ளது. அங்கு பணவீக்கம் பிரச்சனையாக அமைந்துள்ளது. இந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு உலக அரசியல்வாதிகளும் பொருளியல் நிபுணர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர்.

சீனா தனது அப்பாவி மக்களைச் சுரண்டி குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கி குறைந்த உற்பத்திச் செலவுடன் பொருள்களை உற்பத்தி செய்து அதை உலகெங்கும் ஏற்றுமதி செய்து 3.2ரில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலவாணி உபரியாக வைத்துள்ளது. அதன் பெரும்பகுதியான 1.14ரில்லியன் டொலர்களை அமெரிக்காவிற்கு கடனாகக் கொடுத்துள்ளது. இதன் வட்டிகளை செலுத்துவதனால் அமெரிக்க பெரும் நிதி நெருக்கடியை எதிர் கொள்கிறது. சீனா தனது 3.2ரில்லியன் டொலர்கள் சொத்தை வைத்துக் கொண்டு உலக அரங்கில் தனது செல்வாக்கை உயர்த்த முயல்கிறது. தனக்கு எதிரான மனித உரிமைக் குரல்களைத் திசை திருப்பவும் முயல்கிறது.

அமெரிக்காவின் நிதி நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்காவில் இருந்து ஒரு Indecent Proposal சீனப் பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியராகப் பணிபுரியும்  பட்ரிக் சோவனெக் என்னும் அமெரிக்கரிடம் இருந்து வந்துள்ளது. அதன்படி
  • தாய்வானை அமெரிக்கா சீனாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அதற்குப் பிரதி உபகாரமாக சீனா அமெரிக்காவிற்கு கொடுத்த 1.14ரில்லியன் கடனை இரத்துச் செய்ய வேண்டும்.
  • இப்படிச் செய்வதனால் தாய்வானைத் தன்னுடன் இணைக்கும் சீனாவின் நீண்டகாலத் திட்டம் நிறைவேறும்.
  • தாய்வான் தொடர்பாக சீனா செய்யும் பாதுகாப்புச் செலவீனச் செலவான 500பில்லியன் அமெரிக்க டொலர்களை 2020இற்கு முன்னர் சேமிக்க முடியும்.
இதற்கான கணக்குகளை எப்படி பிசகு தீர்ப்பது என்பது பற்றியும் பேராசிரியர் பட்ரிக் சோவனெக் விளக்கியுள்ளார். அவரது Indecent Proposalஐ நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை பிரசுரித்துள்ளது.

1949/50இல் சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சி சீனாவை மக்கள் சீனக் குடியரசு என்றும்(செஞ்சீனா) சீனக் குடியரசு(தாய்வான்) என்றும் இரண்டாகப் பிரித்தது. செஞ்சீனா பொதுவாகச் சீனா என்று அழைக்கப்படுகிறது. அது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஒரு வல்லரசு. அத்துடன் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்டது. பொருளாதார உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. சீனா எப்போதும் தாய்வானைத் தனது ஒரு மாகாணம் என்றே கூறிவருகிறது. எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலோ அல்லது கூட்டங்களிலோ தாய்வானின் பிரதிநிதிகள் பங்கு பற்றுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. தாய்வானை சீனா ஆக்கிரமிக்காமல் அமெரிக்கா பாது காத்துவருகிறது. சீனாவின் அபரிமிதமான பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சிக்கு எதிராக தாய்வானை எத்தனை காலம் அமெரிக்காவால் பாதுகாக்க முடியும் என்று பல ஆய்வாளர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனது நட்பு நாடான(?) தாய்வானை வைத்து அமெரிக்கா பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது ஒரு பெரும் கல்விமானின்(?) கருத்து. இதற்குப் பின்னர் எத்தனை அமெரிக்காவின் நட்பு நாடுகள் அமெரிக்காவின் நட்பை மதிக்கும்? தாய்வானை விற்க அமெரிக்காவிற்கு என்ன உரிமை அருகதை உண்டு?

லெனின் தனது ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் என்னும் நூலில் சொன்னார் முதலாளிகள் உலகத்தை தங்களுக்குள் பிராந்திய ரீதியாகப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று.

இது தொடர்பான முந்தைய பதிவைக் காண கீழே சொடுக்கவும்:
தாய்வானை அமெரிக்கா சீனாவிற்கு தாரை வார்க்குமா?



 

1 comment:

ARV Loshan said...

பயனுள்ள ஒரு பதிவு..
நல்ல அலசல்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...