Monday 23 May 2011

மீண்டும் ஒர் ஆயுத ஒப்படைப்பு


இயக்கங்களும் எங்கட பொடியங்களும்
1977இலும் 1983இலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தமக்கு இனி ஆயுதப் போராட்டம்தான் ஒரே வழி என்று நம்பினர். விளைவாக பல இளைஞர்கள் தம்மை "இயக்கங்களில்" இணைத்துக் கொண்டனர். பெரியோரும் "எங்கடை பெடியங்கள்" என்று அவர்களுக்கு தமது ஆதரவுகளை வழங்கினர்.

இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்த முடியும். இலங்கைப் படையினர் தமது முகாம்களை விட்டு வெளியே வர அஞ்சினர். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொழும்பில் அவ்வப்போது வெடித்த குண்டுகள் மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதித்தது. கலங்கி நின்றது சிங்கள் அரசு.

தமிழர்களை ஆயுதங்களை ஒப்படைக்கும் படி நிர்ப்பந்தித்த இந்தியா.
இலங்கைச் சிங்கள அரசு பலவகையிலும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தால் திணறிக் கொண்டிருந்த நிலையில் அரசியல் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தி(உண்மைப்பெயர் ராஜீவ் கான்) அப்போதையஇலங்கை இலங்கை குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் தந்திர வலைக்குள் சிக்குண்டார். ராஜீவ் காந்தி(கான்) இலங்கைத் தமிழ் இயக்கங்கள் அனைத்தும் தங்கள் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். ஜே ஆரும் ராஜீவும் ஒர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். அப்போது இலங்கைத் தமிழர்களுக்கும் ராஜீவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை இந்தியப் படையிடம் ஒப்படைக்க வேண்டும். பதிலாக தமிழர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும். ஆனால் இதுவரை ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் முறைப்படி நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் இந்தியாவால் மேற் கொள்ளப்படவில்லை. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான வடக்கு-கிழக்கு இணைப்பை இலங்கை அரசு அரசமைப்பில் இருந்து நீக்கிய போது இந்தியா ஒன்றும் கூறாமல் இருந்தது. ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் நிறைவேற்றப்படத் தேவையில்லை என்று திரைமறைவில் இந்தியா இலங்கையிடம் கூறியிருந்தது என்று நம்புவோரும் உண்டு. அந்த ஒப்பத்தத்தில் தமிழர்களுக்கு சாதகமான எதுவும் இதுவரை இலங்கை அரசால் நிறைவேற்றப்படாதமையை அவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் படைகளுக்கான எரிபொரும் நிரப்பு வசதிகளும் சிலாபத்தில் அமையவிருந்த அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொடர்பாடல் வசதிகளும் இரத்துச் செய்யப்பட்டன. இவை இரண்டுக்காகவுமே இந்தியா தமிழர்களில் தனக்குஅக்கறை இருப்பதுபோல் இந்தியா காட்டிக் கொண்டது. ஒப்பந்தப்படி இந்தியா தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொண்டது. ஆனால் தமிழர்கள் அம்போ எனக் கைவிடப்பட்டனர் இந்தியாவால். விளைவு 1987இற்குப் பின்னர் இலங்கையில் மூன்று இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தத்தின் போது அதை அதிகம் எதிர்த்தவர்கள் சிங்கள மக்களே. இன்றும் அதை எதிர்க்கின்றனர். பல தமிழர்கள் அந்த ஒப்பந்தத்தால் தமக்கு எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று நம்பினார்கள்.

மீண்டும் தமிழர்கள் கையில் ஆயுதம்
அன்று தமிழர்கள் ஆயுத போராட்டத்தால் அன்றைய இலங்கை அரசு திணறியது போல் இன்றுள்ள இலங்கை அரசு போர்க்குற்றச் சாட்டால் திணறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் அதேபோன்ற ஒரு நாடகம் இப்போது அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு இலங்கை மீது போர்குற்றத்தையும் மானிடத்திற்கு எதிரான குற்றத்தையும் சுமத்தியுள்ளது. இதற்கு ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என்ற கோரிக்கையை உலகெங்கும் வாழும் தமிழர்களும் பல மனித நேய அமைப்புக்களும் வலியுறுத்தி உள்ளன. இது இப்போது தமிழர்கள் கையில் சிங்கள அரசிற்கு எதிராக உள்ள ஒர் ஆயுதம்.

மீண்டும் இந்தியாவிடம் சென்ற இலங்கை. மீண்டும் கபடம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இலங்கை தொடர்பு கொண்ட முதல் நாடு இந்தியா. இப்போது இலங்கைக்கும் இதியாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெளிவரும் செய்திகள் இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுப்பதாகக் கூறுகின்றன. 2008இலும் 2009இலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகள் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், படைத்துறைத் தீர்வு சரிவராது, அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படக் கூடாது என்று இந்தியா வலியுறுத்துவதாகத்தான் செய்திகள் கூறின. ஆனால் உண்மையில் இலங்கையை இந்தியா ஒரு படைத்துறை வெற்றிக்கே இட்டுச் சென்றது. போருக்கு இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் பல செய்தது. இலங்கை ஆகஸ்ட் 2009இல் முடிக்க இருந்த போரை பொதுமக்களின் இழப்பைக் கருத்தில் கொள்ளாது 2009-மே மாதத்திற்கு முன்னர் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக இந்தியாவி ஆய்வாளர் வி. எஸ் சுப்பிரமணியம் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாகஇந்தியா செய்தியாக வெளியில் விடுவது வேறு உண்மையில் நடந்து கொள்ளும் விதம் வேறு.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது நிச்சம்.
மஹிந்த ராஜபக்ச தண்டிக்கப்படுவது நிச்சயம் என்று அடித்துச் சொல்கிறார் இந்தியாவில் இருந்து வெளிவரும் வீக்கெண்ட் லீடர் சஞ்சிகையின் ஆசிரியர் வினோஜ் குமார். அவர் கூறியவை "நீண்ட காலம் காத்திருந்த நீதி கைக்கு எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வருடங்கள் அல்லது ஒரு பத்தாண்டுகள், ஏன் அதிலும் மேலும் எடுக்கலாம். ஆனால் நீதியின் கை நீட்டப்பட்டுவிட்டது. பிராந்திய வல்லரசுகளின் சிறகுகளிடை ஒதுங்கினாலும் தேசப்பற்று என்ற மந்திரத்தை உச்சரித்து மக்களைக் கொழும்பு வீதிகளில் திரட்டினாலும் நீதியின் கை குற்றவாளியை வேட்டையாடும்."

மீண்டும் இந்தியா தனது தேவையைத்தான் பூர்த்தி செய்யும்
இலங்கை அரசின் மீது மேற் கொண்டுள்ள போர்க்குற்றங்களை சாட்டாக வைத்து இந்தியா இலங்கயிடம் இருந்து தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளும். இனங்கை அரசு காலத்தை இழுத்தடித்து வரும் சம்பூர்த் திட்டம், காங்கேசன் துறைமுகத் திட்டம், இலங்கைக்கு இந்தியாவிற்கும் இடையிலான சீபா எனப்படும் வர்த்தக உடன்படிக்கை போன்றவற்றை நிறைவேற்ற தமிழர்கள் கையில் உள்ள ஆயுதமான போர்க்குற்றத்தை இந்தியா மீண்டும் பயன்படுத்தும்.

பதின்மூன்றிற்கு மேலாடை பகடைக்காயாகும்
தமிழர்கள் இலங்கை அரசின் மீதான போர்க்குற்றத்தைக் கைவிட வேண்டும் அதற்குப் பதிலாக இலங்கை அரசு தமிழர்களுக்கு இலங்கை அரசியல் அமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேல் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் என்று இந்தியா தமிழர்களை மீண்டும் நிர்ப்பந்திக்கும். இதனோடு சேர்த்து இந்தியா மீண்டும் தனது தேவைகளை இலங்கையில் நிறைவேற்றிக் கொள்ளும் ஆனால் பின்னர் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை நிறை வேற்றாது.

போர்க்குற்றம் பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். மீண்டுக் குற்றம் நடக்காமல் இருக்க வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்படுவதைப் பார்த்து மற்றவர்கள் குற்றம் புரியாமல் இருக்க வேண்டும். கொல்லப்பட்டவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல இலட்சக் கணக்கானோர். பாதிக்கப்பட்ட மக்கள் கணக்கிலடங்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை? எப்படிப் பெண்கள் மானபங்கப் படுத்தப் பட்டனர்? எப்படிக் கொல்லப் பட்டனர்? இவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். போர் நடக்கும் போது கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகச் சொன்னார் தமிழர்கள் இனி 20 தலை முறைக்கு ஒர் ஆயுத போராட்டத்தைப் பற்றி சிந்தித்தும் பார்க்கக் கூடாத அளவிற்கு அவர்களைத் தண்டிப்போம் என்று. இப்போதை சிங்கள அரசு தண்டிக்கப் படுவதைப் பார்த்து இனி வரும் சிங்களஅரசுகள் தமிழர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்கக் வைக்க வேண்டியது எமது கடமை. சிங்கள அரசு தண்டிக்கப்படுவதைப் பார்த்து இனி உலகின் எந்த ஒரு அரசும் அப்பாவிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மனித நேயம் மிக்க எல்லோரினது கடமை. போர்க்குற்றம் பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற் பட்டது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...