Sunday 29 November 2009

திசை தெரியாமல் தவிக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்


தமிழ் மக்கள் இலங்கையில் இனக் கொலை செய்து போர்க் குற்றங்கள் புரிந்தவர்களாக சரத் பொன்சேக்காவையும் மஹிந்த ராஜபக்சேயையும் கருதுகிறார்கள். சரத் பொன்சேக்கா ரணில் விக்கிரமசிங்கேயுடன் இணைந்துள்ளார். தமிழத் தேசியத்தின் எதிரிகளும் துரோகிகளும் சென்ற இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததால்தான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த அளவு பிரச்சனையும் என்று சொல்வதில் மகிழ்கிறார்கள். ஆனால் இன்று ரணில் யாருடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்? இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது அவர்கள் இங்கு வாழலாம் என்று "பெருந்தன்மையுடன்" கூறிய சரத் பொன்சேக்காவுடன். சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறிப் பெருமை தேடிக் கொண்டவருடன்.

இலங்கையில் நடக்க விருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பொன்சேக்கா அல்லது மஹிந்த ராஜபக்சே இருவரில் ஒருவர்தான் வெல்லப் போகிறார்கள். இவர்கள் இருவருமே தமிழின விரோதிகள். யார் வென்றாலும் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை. மேலும் துன்பம் தான் தருவார்கள். இவர்களில் யாரைத் தமிழர் ஆதரித்தாலும் சிலகாலம் கழித்து தமிழ்த் துரோகிகளும் விரோதிகளும் இவரை ஆதரிக்காமல் அவரை ஆதரித்திருந்தால் நன்மையடந்திருப்பீர்கள் என்றுதான் சொல்லப் போகிறார்கள்

தமிழர்களை ஒன்று திரட்டி ஒரு வாக்குப் பலத்தை தன்பின்னால் எடுக்க முயன்ற இந்தியா தோல்வியடைந்து விட்டது. தமிழர்களின் ஆயுத பலத்தை முறியடிக்க சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் செய்த இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்களை ஓரணியில் திரட்டும் அருகதையோ யோக்கியதையோ கிடையாது. அது தன் சுயநலத்திற்காகவே இதைச் செய்கிறது. குறைந்த பட்சம் மலையகத்தில் வாழும் தமிழரக்ளையே இந்தியாவால் ஓரணியின் கீழ் திரட்ட முடியவில்லை. தோட்டத் தொழிலாளர் காங்கிரசும் மலைய மக்கள் முன்னணியும் வேறு வேறு அணியில்! இது இந்தியாவிற்கு தமிழர்களை ஓரணியில் திரட்டும் திறமை இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

மஹிந்தவை ஆதரிக்க மறுக்கும் பிள்ளையான்.
இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிள்ளையான் தன்னால் மஹிந்த ராஜபக்சேயை ஆதரிக்க முடியாது என்று அறிவித்துள்ளார். தனது 18 மாத ஆட்சிக்காலத்தில் தன்னை எந்த அபிவிருத்தித் திட்டங்களையோ அல்லது வேலை வாய்ப்புக்களையோ தனது மக்களுக்காக செய்ய மஹிந்த ஆட்சி அனுமதிக்காததால் தன்னால் மக்களை மஹிந்த ஆதரியுங்கள் என்று சொல்ல எந்த சாதானைகளையோ வெற்றிகளையோ முன்வைக்க முடியாமல் இருக்கிறது என்றாராம் பிள்ளையான். இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் மூலம் பதவி ஏற்ற பிள்ளையானுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அரசியல் அறிவிலியான ராஜீவ் காந்தியால் தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் தரும் என்று சொல்லப் பட்டது இந்தப் 13வது திருத்தம். கிழக்கிலங்கையை தனது பிடியில் கொண்டுவரவும் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தவும் கருணாவை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்தது இந்தியா. கிழக்கிலங்கையில் இந்தியா ஆதிக்கத்தை விரும்பாத அமெரிக்கா பிள்ளையான கருணாவிடமிருந்து பிரித்தெடுத்து கருணாவை நாட்டை விட்டே ஓடச் செய்தது. கருணா பின் ராஜபக்சேக்களின் தீவிர ஆதரவாளராக மாறி இலங்கை வந்தார். அமெரிக்க ஆதரவு வேட்பாளரையே பிள்ளையான் ஆதரிப்பார். சந்தர்ப்பவாதிகள் என்றும் மாறலாம். நாளை பிள்ளையான் தனது கருத்தை மாற்றலாம்.

செய்வதறியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழர் முன் வைக்கக்கூடிய ஒரே திட்டம் இப்போது அதிகாரப் பரவலாக்கம் என்தே. ஆனால் அதிகாரப் பரவலாக்கம் என்பது சிங்களவர்களைப் பொறுத்தவரை ஒரு ரெம்ப ரெம்ப கெட்ட வார்த்தை. இதை எந்த குடியரசுத் தலைவர் வேட்பாளரும் முன் வைக்கமாட்டார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோ இயக்கப் பிரிவினர் இந்தியா சொல்பவர்களுக்கு ஆதரவு அளிக்கத் துடிக்கின்றனர். செய்வதறியாத வேறு சிலர் தாமே குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் ஒருவரை இறக்கினால் என்ன என்பதை யோசிகின்றனர்.

தமிழ் அரசியல் வாதிகள் சிலவற்றை மறந்து விட்டனர்:
  • தமிழர்களின் அதி தீவிர விரோதி யாரோ அவருக்குத்தான் சிங்களமக்கள் விரும்புவாரகள்.
  • இத் தேர்தலில் தமிழர்கள் வாக்குப் பலத்தை கருத்தில் கொள்ளாது பிரதம வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதையே சிங்களப் பேரினவாதிகள் விரும்புகிறார்கள்.
  • தேர்தல்களில் வாக்களிப்பதால் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...