Tuesday, 28 August 2018

டிரம்பிற்கு பேரிடிகளாக ஈரிடிகள்


இரசியா ஒரு புறம் ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் மறுபுறமும் என உக்ரேனை யாருடைய ஆதிக்கத்தில் வைத்திருப்பது என்ற போட்டியில் முக்கிய பங்கு வகித்தவர் விக்டர் யனுக்கோவிச். இவர் உக்ரேன் அதிபராக இருந்த போது உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு செய்யவிருந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்தவர். உக்ரேனில் 2014-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அவரை வெற்றி பெறவைக்க இரசியா கடும் முயற்ச்சி எடுத்தது. அந்தத் தேர்தலில் விக்டரை வெற்றி பெறவைக்க அமெரிக்கப் பரப்புரை வித்தகரான போல் மனபோர்ட் செயற்பட்டார். போல் மனபோர்ட் அரசியல் ஆலோசனைகள் பரப்புரைகள் போன்றவற்றிற்கு என ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருடன் Rick Gates என்பவரும் பணிபுரிந்தார். மனபோர்ட்டிற்கு Rick Gates வலது கரம். அமெரிக்க நலன்களுக்கு எதிராக அவர்கள் செயற்படுவதால் அவர்களை அப்போதே அமெரிக்காவின் சட்ட அமூலாக்க அமைப்பான FBI அவதானிக்கத் தொடங்கியது.

பரப்புரையில்(Lobbying) சம்பாதித்தது பல மில்லியன்
உக்ரேனின் இரசிய ஆதரவு ஆட்சியை அமைப்பதற்காக தேர்தல் பரப்புரைக்கு ஆலோசனைகள் வழங்கியதால் 60மில்லியன் டொலர்களை மனபோர்ட் சம்பாதித்திருந்தார். வருமான வரிப் புகலிட நாடுகளில் அவரது பணம் முதலிடப்பட்டிருந்தது. அவரது செலவுகளுக்கான கொடுப்பனவுகள் அங்கிருந்தும் மேற்கொள்ளப்பட்டன. விக்டர் யனுக்கோவின் ஆட்சி மக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்டு அவர் இரசியாவிற்கு தப்பி ஓடிய பின்னர் அவரது வருமானம் பெருமளவில் குறைந்தது அப்போது அவர் தனது வருமானத்தை மிகவும் குறைத்து வருமான வரித்துறையினருக்கு காட்டி வரி ஏய்புச் செய்தார். அவரது பல வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இருந்த பணமும் முதலீடுகளும் அவர் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கவில்லை. வருமானம் இல்லாமல் இருந்த மனபோர்ட் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தன் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்பின் பரப்புரைக் குழுவில் இணைந்தார். அவரது நீண்ட நாள் உதவியாளரான Rick Gatesஉம் அவருடன் இணைந்து கொண்டார். இரண்டு மாதங்களில் மனபோர்ட் அந்தக் குழுவின் தலைவராகினார். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்ற மூன்றாம் நாள் டிரம்பின் பரப்புரையின் வெளியுறவிற்கான குழுவின் தலைவராக இருந்த George Papadopoulos  இடமிருந்து டிரம்பை சந்திக்க இரசியா ஆவலாக இருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலை மனபோர்ட் Rick Gatesஇற்கு அனுப்பினார். அத்துடன் மனபோர்ட் டிரம்ப் அந்தச் சந்திப்பை மேற்கொள்வது உகந்தது அல்ல என்றும் பரப்புரைக் குழுவின் ஒரு சாதாரண உறுப்பினர் கலந்து கொள்ளலாம் எனவும் Rick Gatesஇடம் கூறியிருந்தார்.

அந்த நாள்
டிரம்பின் வாழ்க்கையில் முக்கியமான நாள் 2016 ஜூன் 9-ம் திகதி என வரலாற்றில் எழுதப்படுவதற்கான வாய்ப்புக்கள் இன்று மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அன்று போல் மனபோர்ட், டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர், மருமகன் ஜரெட் குஷ்னர் ஆகியோர் சில இரசியர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டனர். சந்திப்பின் நோக்கம் டிரம்பை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் மீது சேறு பூசுவதாகும். பின்னர் விசாரணையின் போது இப்படி ஒரு சந்திப்பு நடந்ததை டிரம்ப் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது. பின்னர் அச்சந்திப்பு இரசியப் பிள்ளைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பது தொடர்பானது எனத் தெரிவிக்கப்பட்டது.

அம்பலப்படுத்திய நியூயோர்க் ரைம்ஸ்
2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15-ம் திகதி போல் மனபோர்ட்டிற்கு கணக்குகளில் காட்டப்படாத வருமானம் உக்ரேனில் உள்ள இரசிய ஆதரவாளர்களிடம் இருந்து வந்ததாக நியூயோர்க் ரைம்ஸ் அமபலப்படுத்தியது. அந்தச் செய்தி வந்த நான்கு நாட்களில் மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க மனபோர்ட்டை தனது பரப்புரைக் குழுவில் இருந்து பதவி நீக்கம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் கோபுரம் என்னும் ஆடம்பர அடுக்கு மாடிக்குடியிருப்பில்தான் டிரம்பின் பரப்புரைக்கான தலைமைச் செயலகம் செயற்பட்டது. அதில் உள்ள வீட்டில்தான் மன்போர்ட் பரப்புரைக்காக குடியமர்த்தப்படிருந்தார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அங்கு தொடர்ந்து குடியிருந்து இரகசியமாக பரப்புரைக்குழுவிற்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மனபோர்ட்டின் ஆலோசனையின் பேரிலேயே டிரம்புடன் துணை அதிபராக மைக் பென்ஸ் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. டிரம்ப் தேர்தலில் வெற்றியடைந்த பின்னரும் அவரது அமைச்சரவைத் தெரிவும் போல் மனபோர்ட்டின் ஆலோசனையின் படி செய்யப்பட்டது.

இரசியத் தலையீடு பற்றி விசாரணை
2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியா தலையிட்டதா என்ற விசாரணையை அமெரிக்காவின் நீதித்துறையின் ஒரு பகுதியான FBI, பாரளமன்றத்தின் மூதவையின் புலனாய்வுக் குழு ஆகியன விசாரணையை ஆரம்பித்தன. போன் மனபோர்ட் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் திகதி தானாகவே சென்று மூதவையின் புலனாய்வுக் குழுவின் முன் மூடிய அறையில் இரகசியமாக சாட்சியமளித்தார். அதற்கு அடுத்த நாள் அதிகாலை FBIஇனர் போல் மனபோர்ட்டின் வீட்டில் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தப்பட்டது.

குற்றச்சாட்டுகள்
2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30-ம் திகதி 12 குற்றச்சாட்டுகள் போல் மனபோர்ட்மீது சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. தேசத்துக்கு எதிரான சதி, பணச்சலவைச் சதி, வெளிநாட்டினருக்காக பதிவு செய்யப்படாத முகவராக செயற்பட்டமை, வெளிநாடுகளில் இருந்து வந்த வருமானத்தை கணக்குக் காட்டாமை, வரி ஏய்ப்பு போன்றவை குற்றச் சாட்டுகளாகும். அவரின் உதவியாளர் Rick Gatesமீதும் அதே போன்ற குற்றச் சாட்டுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. போல் மனபோர்ட்டுடனும்  Rick Gates உடனும் உக்ரேனில் இரசியாவின் நலன்களிற்காகப் பணி புரிந்த Van Der Zwaan  என்பவர் மீது 2018 பெப்ரவரி 20-ம் திகதி வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர் 2018 பெப்ரவரி 22-ம் திகது 32 குற்றச் சாட்டுகளைக் கொண்டு போல் மனபோர்ட் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அது நடந்து மூன்றாம் நாள் மனபோர்ட்டின் உதவியாளரான Rick Gates தனது குற்றங்களை ஒத்துக் கொண்டு உண்மையைச் சொல்லி தண்டனைகளை குறைக்கும் பேரத்தை செய்ய அரசு வழக்குத் தொடுநர்களுக்கு இணக்கம் தெரிவித்தார். இதனால் போல் மனபோர்ட் செய்த பல நிதி மோசடிகளுக்கான ஆதாரங்கள் கிடைத்தன.
தேர்தலுக்கு முன்னரே அம்பலம்
2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த பலர் இரசிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முன்னரே முன் வைக்கப்பட்டது. டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற போது சட்டமா அதிபராக இருந்த சலி கேற் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்த மைக்கேல் ஃபிளைனை அமெரிக்கப் படைத் தளபதியாக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். மைக்கேல் ஃபிளைன் இரசிய உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த படியால் இரசியா அவரை பயமுறுத்தி அமெரிக்கப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது சலி கேற்றின் கருத்து. பின்னர் சலி கேற்றை தனது குடிவரவுக் கொள்கைக்கு நீதிமன்றத்தில் ஆதரவு வழங்க மறுத்ததால் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்.

மைக்கேல் கொஹென்
2018 ஓகஸ்ட் 22-ம் திகதி போல் மனபோர்ட் வருமான வரி மோசடிக்காக ஐந்து குற்றங்களிலும் வெளிநாட்டு வங்கிக் கணக்கை வெளியிடாத ஒரு குற்றத்திற்கும் வங்கி மோசடிக்காக இரண்டு குற்றங்களிலும் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட ஏனைய குற்றங்கள் தொடர்பாக ஜூரர்கள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் போனது. அதே நாளில் டொனால்ட் டிரம்பினுடைய சட்ட ஆலோசகர் மைக்கேல் கொஹென் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு அரசுடன் ஒத்துழைத்து தண்டனையைக் குறைக்கும் பேரத்திற்கு இணங்கினார். டிரம்ப் அரசியலுக்கு வர முன்னர்  விலை மாதர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இரண்டு விலைமாதர்கள் டிரம்ப் தேர்தலில் போட்டியிட்ட போது அந்த இரகசியங்களை வெளியிடப் போவதாகத் தெரிவித்த போது டிரம்பின் சட்ட ஆலோசகரான மைக்கேல் கொஹேன் அவர்களுக்குப் பணம் கொடுத்து வாய் திறக்காமற் செய்தார். அந்தக் கொடுப்பனவுகளுக்கான நிதி அமெரிக்கத் தேர்தல் சட்டங்களை மீறியதாக இருந்தன. 2018 ஏப்ரலில் மைக்கேல் கொஹேனின் வீடு, விடுதி அறை, பணிமனை என்பன திடீர்ச்சோதனைகளுக்கு உள்ளாகின. அவரும் டிரம்பும் செய்த உரையாடல்களின் ஒலிப்பதிவுகளும் கைப்பற்றப்பட்டன. கொஹேன் தான் டிரம்பின் உத்தரவின் பேரிலேயா விலைமாதர்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்ததாக விசாரணையில் தெரிவித்தார். இந்த இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டமைக்கு முக்கியமாக நின்று செயற்பட்டவர் டெவிட் முல்லர் என்பவர். முன்னாள் FBI இயக்குனரான இவர் இன்னும் இரசியா 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டமைக்கான காத்திரமான குற்றச் சாட்டு எதையும் முன்வைக்க வில்லை, போல் மன போர்ட் மற்றும் மைக்கேல் கொஹென் ஆகியோர் செய்த குற்றங்களை மட்டுமே சிறப்பு விசாரணையாளர் டேவிட் முல்லர் கண்டு பிடித்துள்ளார்.

விசாரணையை ஆரம்பித்த முல்லர்
FBI அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயற்படுகின்றது. அதன் தலைமை இயக்குனரான ஜேம்ஸ் கொமி டிரம்ப் பதவி ஏற்க முன்னரே அவரது தேர்தல் பரப்புரைக்குழுவிற்கும் இரசிய உளவுத் துறைக்கும் தொடர்புகள் இருந்ததா என்பதைப் பற்றி துப்பறியத் தொடங்கினார்.
மைக்கேல் ஃபிளைன் மீதான குற்றச்சாட்டுக்கள் பல ஊடகங்களில் அடிபட டிரம்ப் மைக்கேல் ஃபிளைனை பதவியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்று. பின்னர் டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் தொடர்பு கொண்டு மைக்கேல் ஃபிளைன் அருமையான மனிதர் அவரை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் ஜேம்ஸ் கொமியை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு அழைத்த டிரம்ப் தான் விசாரணக்கு உட்படுத்தப்படவில்லை என பகிரங்கமாக அறிக்கை ஒன்றை விடும்படி வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் தனக்கு விசுவாசமாக நடப்பதாக ஒரு உறுதிமொழி வழங்கும் படியும் டிரம்ப் ஜேம்ஸ் கொமியைக் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜேம்ஸ் கொமி டிரம்பினதும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுக்களினதும் செயற்பாடுகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை நீதித்துறையிடம் கோரினார். இது டிரம்ப்பிற்கு தெரிய வந்தது. டிரம்ப் வழமையான செயற்பாடுகளுக்கு மாறாக ஜேம்ஸ் கொமியைப் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் ஏற்பட்ட பரபரப்புக்களுக்கு மத்தியில் அமெரிகாவின் துணைச் சட்டமா அதிபர் டேவிட் முல்லரை 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியா தலையிட்டதா என்பது தொடர்பாக சிறப்பு விசாரணையாளராக நியமித்தார். 

சட்டமாஅதிபரின் சட்டையைக் கழற்ற முடியுமா?
டிரம்ப் சிறப்பு விசாரணையாளர் முல்லரின் விசாரணையை நிறுத்த வேண்டும் அவரைப் பதவி விலக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளார். அவரை நேரடியாக டிரம்ப் பதவி விலக்க முற்பட்டால் அது நீதித் துறையின் செயற்பாட்டில் தலையிட்டதாகக் கருதப்படலாம். முல்லரை சட்டமா அதிபர் ஜெஃப் செஸன் பதவி விலக்கலாம். இரசியா அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது அதில் டிரம்பின் தேர்தல் பரப்புரையாளர்களுக்கு தொடர்புண்டு என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்வைத்ததால் அது தொடர்பான விசாரணை எல்லாவற்றிலும் இருந்து சட்டமா அதிபர் ஜெஃப் செஸன் தன்னைத் தானே விலக்கிக் கொண்டுள்ளார். அதை அன்றிலிருந்தே டிரம்ப் விரும்பவில்லை. டிரம்பை. முன்னாள் மூதவை உறுப்பினர் (செனட்டர்) என்ற வகையில் மூதவையில் முல்லருக்கு பல நண்பர்கள் உண்டு. அவர்களில் சிலர் டிரம்பிடம் அவரைப் பதவியில் இருந்து விலக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தனர். 2017 ஜூனில் டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் முல்லரைப் பதவி நீக்கம் செய்தால் டிரம்பை தாங்கள் பதவி நீக்கம் செய்வோம் என மிரட்டியிருந்தனர். அமெரிக்காவில் சட்டமா அதிபர் ஓர் அமைச்சர் ஆவார். அவரின் கீழ் சட்டத்துறை, சட்ட அமூலாக்கத்துறை, நீதித்துறை ஆகியன செயற்படுகின. உள்நாட்டு உளவுத் துறையான யும் சட்டமா அதிபரின் கீழ் உள்ள நீதித்துறையால் மேற்பார்வை செய்யப்படுகின்றது.

முல்லருக்கு எதிராக மூதவை உறுப்பினர்கள்
முல்லரின் விசாரணைகள் தமது கட்சிக்கு பாதகமானது என உணர்ந்த டிரம்பின் குடியரசுக் கட்சியினர் தற்போது சட்ட மாஅதிபர் ஜெஃப் செஸன் பதவி விலக்குவதற்கு ஆதரவாக மாறியுள்ளனர் என Steve Bannon தெரிவித்துள்ளார். இவர் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவின் நிறைவேற்று அதிகாரியாக இருந்து தேர்தலில் டிரம்ப் வென்ற பின்னர் வெள்ளை மாளிகையின் தந்திரோபாய வகுப்பாளராகப் பதவி ஏற்றவர். பின்னர் பதவியில் இருந்து விலகிக் கொண்டவர். ஆனால் 2018 நவம்பரில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தால் மக்களாட்சிக் கட்சியினர் டிரம்பை பதவியில் இருந்து விலக்குவார்கள் என்றும் Steve Bannon கூறியுள்ளார். நடாளவிய அடிப்படையில் டிரம்பை ஆதரிப்பவர்கள் 35விழுக்காட்டிலும் குறைவு என்றாலும் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் 85விழுக்காடு ஆக உள்ளது. டிரம்ப் பதவியில் இருந்து விலக்கப்படுவதற்கான வாய்ப்பு 45விழுக்காடாக அதிகரித்துள்ளது.


கவசத்துடன் களமிறங்கப் போகும் கணக்காளர்

டிரம்பின் நிதித்துறைக்குப் பொறுப்பாக இருந்த Allen Weisselbergக்கு தண்டனையில் இருந்து தப்பும் கவசத்தை இரசியாவின் தேர்தல் தலையீடு தொடர்பான விசாரணையைச் செய்தவர்கள் வழங்கியுள்ளார்கள். முறைகேடுகளைத் தேடுவதாயின் பணப் போன பாதைகளைத் தேடு என்பது விசாரணையைப் புலனாய்வு செய்பவர்கள் பின்பற்றும் அடிப்படை விதி. குற்றத்தை ஒப்புக் கொண்ட கொஹென் சொன்னது போல் டிரம்ப் விலைமாதர்களின் வாய்களை அடைக்க கொடுத்த பணம் தொடர்பான தகவல் மட்டுமல்ல டிர்மபின் வருமான வரி தொடர்பாகவும் இவரால் தகவல்களை வழங்க முடியும். இவர் என்ன சொல்லப்போகின்றார் என்பதில் டிரம்பின் எதிர்காலம் தங்கியுள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட கவசத்தை Immunity Deal என அழைக்கின்றார்கள் அந்த Deal என்ற சொல்லுக்குள் பல மறைந்துள்ளன. அவை பலவற்றை வெளிக்கொண்டு வரலாம்

கடைசி அம்பு 
மைக்கேல் கொஹெனும் போல் மனபோர்ட்டும் தண்டிக்கப்படுவது டிரம்பிற்கு நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்தப் போவதில்லை. விலைமாதர்களுக்கான கொடுப்பனவை டிரம்பின் வேண்டுதலின் பேரில் செய்தேன் என கொஹேன் தெரிவித்தமை உண்மை என நிரூபிக்கப்படும் வரை டிரம்பிற்கு ஆபத்தில்லை.  டிரம்ப் தான் அப்படிச் செய்யவில்லை என மறுத்தும் உள்ளார், ஆனால் விசாரணையாளர் டேவிட் முல்லர் இன்னும் பலரை நீதியின் முன் நிறுத்துவார். அதில் இறுதி ஆள் டிரம்ப்தான்

Monday, 20 August 2018

துருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்


2018-ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து 2018-08-10-ம் திகதி வரை துருக்கிய நாணயமான லிராவின் பெறுமதி 40விழுக்காட்டால் விழ்ச்சியடைந்தது. அதில் மோசமான வீழ்ச்சியாக 25 விழுக்காடு வீழ்ச்சி 2018-08-6-ம் திகதி முதல் 10 திகதி வரை ஏற்பட்டது. அந்த ஆடிக் கடைசி வெள்ளியை லிரா ஆடிய வெள்ளி என அழைக்கலாம். லிராவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் துருக்கிய அதிபர் ரெசெப் எர்டோகானுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவுடன் முறுகல் இல்லாத பல நாடுகளின் நாணயங்களின் (சீனா, இந்தியா, ஆர்ஜெண்டீனா, உட்பட) அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளன. உலகப் பொருளாதார உற்பத்திக்கு துருக்கியின் பங்களிப்பு ஒரு விழுக்காடாக இருப்பதால் துருக்கியின் பொருளாதார ஏற்ற இறக்கம் கரிசனைக்குரியது. துருக்கிய நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி மற்ற வளர்முக நாடுகளின் நாணயப் பெறுமதிகளையும் விழச்செய்தது.

அளவுசார் தளர்ச்சியும் இறுக்கமும் (QUANTITATIVE EASING & TIGHTENING)
இந்திய ரூபா, இரசிய ரூபிள், சீன யுவான், ஆர்ஜெண்டீனாவின் பெஸோ, சிலியின் பெஸோ, தென் ஆபிரிக்க ரண்ட் ஆகிய நாணயங்கள் இந்த ஆண்டு தொடர்ந்து பெறுமதி வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் தமது அளவுசார் தளர்ச்சியை (Quantitative Easing) நிறுத்தின. அந்த நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி குன்றியிருந்தபோது பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட தமது நாட்டின் வங்கிகளிடம் பணப்புழக்கத்தை அதிகரித்தமையை அளவுசார் தளர்ச்சி எனச் சொல்லி அதை இலகுவாக விபரிக்கலாம். ஒரு நாடு அளவுசார் தளர்ச்சியைச் செய்யும் போது அந்த நாட்டின் வட்டி விழுக்காடு குறையும். அப்படிக் குறையும் போது அந்த நாட்டு நாணயத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள். அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அளவுசார் தளர்ச்சியைச் செய்யும் போது பன்னாட்டு முதலீட்டாளர்கள் தமது கையிருப்பில் இருந்த அவற்றின் நாணயங்களை விற்று அதிக வட்டி கொடுக்கும் வளர்முக நாடுகளின் நாணயங்களை வாங்கினர். இப்போது அந்த வளர்ச்சியடைந்த நாட்டு நாணயங்கள் அளவுசார் தளர்ச்சியை நிறுத்தியுள்ளன. ஒரு நாட்டில் அதன் நடுவண் வங்கி அளவுசார் தளர்ச்சி செய்யும் போது அது புதிதாக நாணயங்களை உருவாக்கி அந்த நாட்டின் திறைசேரிப் பத்திரங்களை வாங்கும். அதனால் அந்த நடுவண் வங்கியின் ஐந்தொகையின் (Balance Sheet) பெறுமதி அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஐரோப்பிய நடுவண் வங்கியின் ஐந்தொகைப் பெறுமதி 1.5ரில்லியன் டொலரில் இருந்து 5.5ரில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளான மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வேலையற்றோர் தொகை குறையத் தொடங்கியுள்ளன. அவை அளவுசார் இறுக்கத்தைச் (QUANTITATIVE TIGHTENING) செய்யத் தொடங்கியுள்ளன. அளவுசார் இறுக்கம் அளவுசார் தளர்ச்சிக்கு எதிர்மறையானது. நடுவண் வங்கிகள் தம்மிடம் இருக்கும் திறைசேரிப் பத்திரங்களை வங்கிகளுக்கு விற்பனை செய்து அவற்றிடம் இருந்து பணத்தை வாங்கும். இதனால் வங்கிகள் கையில் உள்ள நாணயப் புழக்கம் குறையும். வங்கிகளுக்கு இடையிலான வட்டி விழுக்காடு அதிகரிக்கும் அது பணவீக்கத்தை தடுக்கும். அதனால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் வளர்முக நாடுகளின் நாணயங்களை விற்று  வளர்ச்சியடைந்த நாடுகளின் நாணயங்களை வாங்கும். இதனால் ரூபாக்களும் லிராக்களும், பெஸோக்களும் 2018 ஆரம்பத்தில் இருந்து பெறுமதி வீழ்ச்சியடைகின்றன. 2017 நவம்பரில் அமெரிக்க நடுவண் வங்கி தனது அளவுசார் இறுக்கத்தை ஆரம்பித்தது.

டொலரில் வாங்கிய கடன்கள்
1990களில் இருந்து வளர்முக நாடுகள் டொலரில் பெருமளவு கடனகளை வாங்கின. வளர்முக நாடுகள் டொலரில் வாங்கிய கடன்கள் 1990இல் 642பில்லியனில் இருந்து 2000இல் 2.17பில்லியனகளாக அதிகரித்தன. டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது கடன் பட்ட நாடுகளின் மீளளிப்புச் சுமையும் வட்டிக் கொடுப்பனவுச் சுமையும் அதிகரிக்கின்றது. பதின் மூன்று வளர்முக நாடுகளின் டொலர் கடன், வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, மொத்த தேசிய உற்பத்தி ஆகியவற்றை ஒப்பீடு செய்த பன்னாட்டு கொடுப்பனவுகளுக்கான வங்கி (Bank of International Settlements) சிலி, ஆர்ஜெண்டீனா, துருக்கி, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் நாணய நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளது என்றும் தென் ஆபிரிக்கா, பிரேஸில் இரசியா, மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் அந்த அபாயம மிதமாக உள்ளது என்றும் சவுதி அரேபியாவிலும் சீனாவிலும் அந்த அபாயம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. சீனாவும் சவுதி அரேபியாவும் பெருமளவு வெளிநாட்டு நாணயக் கையிருப்பைக் கொண்டுள்ளவை. சீனா டொலரில் வாங்கிய கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 4விழுக்காடு மட்டுமே.

ஆடிட்டர் ஆடீட்டார்
துக்ளக் ஆசிரியர் கணக்காய்வாளர்(ஆடிட்டர்) குருமூர்த்தியை இந்திய நடுவண் வங்கியான ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் சபையில் ஒருவராக நியமிக்கப்பட்ட போது இந்திய ரூபாவை பெறுமதியை ஓர் அமெரிக்க டொலருக்கு 25 ரூபாவாக உயர்த்துவேன் என்று சூளுரைத்தார். ஆனால் மறுநாளே இந்திய ரூபா என்றுமில்லாத அளவு வீழ்ச்சியடைந்தது. இந்திய ஏற்றுமதியோ அல்லது இந்தியாவில் வெளிநாடுகளின் முதலீடோ இமயம் போல் உயர்ந்தால் மட்டுமே அவரது சூளுரை சாத்தியமாகும். அப்படி நடப்பதற்கான வாய்ப்புக்கள் ஏதுமே இல்லை. மாறாக இந்தியாவின் ஏற்றுமதியிலும்($25.77பில்லியன்) பார்க்க இந்தியாவின் இறக்குமதி($43.77பில்லியன்) 2018 ஜூலையில் மிகவும் அதிகரித்தது. இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டுச் செலவாணியிலும் பார்க்க இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் இந்தியச் செலவாணி அதிகரித்துக் கொண்டே போகின்றது.


இரசியப் பொருளாதாரத் தடையை சமாளித்த துருக்கி.
2015-ம் ஆண்டு துருக்கி தனது F-16 போர் விமானத்தால் சிரியாவில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த இரசியாவின் SU-24 போர்விமானம் தனது நாட்டுக்குள் வந்தது எனச் சொல்லிச் சுட்டு வீழ்த்தியது. அதனால் ஆத்திரமடைந்த இரசிய அதிபர் புட்டீன் துருக்கிக்கு எதிராக பல பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தினார். துருக்கியின் பல விவசாயப் பொருட்கள் இரசியாவிற்கு ஏற்றுமதி செய்யவதற்கான தடை, துருக்கிக்கு இரசியர்கள் உல்லாசப் பயணம் செய்வது கூட தடை, துருக்கியர்கள் இரசியாவில் வேலை செய்வதற்குத் தடை, இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்புத் தடை எனப் பல தடைகள் விதிக்கப்பட்டன. துருக்கி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரசியா 7வது இடத்தில் இருக்கின்றது. துருக்கியின் எரிவாயுவில் 98 விழுக்காடு இரசியாவில் இருந்து விநியோகிக்கப்படுகின்றது. ஆனால் இரசியப் பொருளாதாரத் தடையை துருக்கி சமாளித்தது மட்டுமல்ல அதன் பிறகு துருக்கியும் இரசியாவும் சிரிய விவகாரத்தில் நெருங்கி ஒத்துழைத்தது. இரசியா செய்த பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

துருக்கியின் வலி தனிவலி
மற்ற வளர்முக நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் துருக்கி வெறு பல புவிசார் அரசியல் பிரச்சனைகளையும் பல உள்நாட்டுப் பிரச்சனைகளையும் எதிர் கொள்கின்றது. கடந்த சில ஆண்டுகளா துருக்கி பல நிலைமாற்றங்களைக் காண்கின்றது. நேட்டோ படைத்துறை கூட்டமைப்பில் இருந்து கொண்டு இரசியாவுடன் உறவை வளர்க்கின்றது. மக்களாட்சி துருக்கியில் கேள்விக்குறியாகியுள்ளது. அதிபருக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டு பாராளமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பொறுப்புக்கூறல் குறைவடைந்த நிலையில் அதிபர் ஊழல் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. அதிபரின் பொருளாதாரக் கொள்கைகள் விநோதமானவையாக இருக்கின்றன என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

டிரம்ப்-எர்டோகான் முறுகல்
2016-ம் ஆண்டு துருக்கியில் முறியடிக்கப்பட்ட படைத்துறைப் புரட்சியில் தொடர்புடையவர் என்ற குற்றச் சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் அண்டுரு பிறன்ஸன் துருக்கியில் சிறைவைக்கப்பட்டுள்ளார். 2018 ஜூலையில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த நேட்டோக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் துருக்கிய அதிபர் எர்டோகானைச் சந்தித்த டிரம்ப் பாதிரியார் பிறன்ஸனை விடுதலை செய்யுமாறு வேண்டு கோள் விடுத்திருந்தார். அதற்குப் பதிலாக இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் துருக்கியர் ஒருவரை விடுவிக்க வேண்டும் என எர்டோகான் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் இஸ்ரேல் தனது சிறையில் இருந்த துருக்கியரை விடுதலை செய்தது. ஆனால் துருக்கி பாதிரியார் பிறன்ஸனை சிறையில் இருந்து மாற்றி வீட்டுக்காவலில் வைத்தது. இது டிரம்பை ஆத்திரப்படுத்தியதால் துருக்கியின் இரு அமைச்சர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையை டிரம்ப் விதித்தார். பதிலடியாக டிரம்பின் அமைச்சரவையில் இருந்த இருவருக்கு துருக்கி பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் அமெரிக்க துருக்கி முறுகலை உருவாக்கும் என்ற அச்சத்தில் ஏற்கனவே வலிவிழந்திருந்த துருக்கிய நாணயமான லிராவின் பெறுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதனால் துருக்கியப் பொருட்கள் அமெரிக்காவிற்கு மலிவான விலையில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது. ஏற்கனவே துருக்கியின் அலுமினியத்திற்கு டிரம்ப் இறக்குமதி வரியை அதிகரித்திருந்தார். லிராவின் பெறுமதி வீழ்ச்சியால் அந்த வரிவிதிப்பு செயலிழந்தது. உடனே (2018-08-10- லிரா ஆடிய வெள்ளி) டிரம்ப் துருக்கிய அலுமினியத்திற்கான இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கினார். உடனேயே லிராவின் பெறுமதி பெருமளவில் விழ்ழ்ச்சியடைந்தது.

கேந்திரோபாயப் பங்காளி
துருக்கி அதிபர் எர்டோகவன் நியூயோர்க் ரைம்ஸில் திறந்த ஆசிரியத் தலையங்கம் ஒன்றை எழுதினார். அதில் அமெரிக்கா-துருக்கி இடையிலான 70 ஆண்டு கால கேந்திரோபாய உறவு, துருக்கி நேட்டோவின் உறுப்புரிமை. பொதுவுடமைப் பரம்பலுக்கு எதிர்பில் துருக்கியும் இணைந்து செயற்பட்டமை கொரியப் போரில் துருக்கி அமெரிக்காவுடன் இணைந்து போரிட்டமை, 1962 கியூபா நெருக்கடி: துருக்கி துருப்புச் சீட்டாகப் பாவிக்கப்பட்டமை ஆகியவற்றை விளக்கி எழுதி அமெரிக்கா தனது கேந்திரோபயாப் பங்காளிக்கு துரோகம் செய்ததாக விளக்கியிருந்தார்.

முறுகல்களுக்கான காரணிகள்
1. அமெரிக்காவில் இருந்து செயற்படும் Fethullah Gulen என்ற துருக்கியர் துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு சதி செய்கின்றார் அவரை அமெரிக்கா நாடுகடத்த வேண்டும் என்பது துருக்கிய அதிபர் எர்டோகானின் நிலைப்பாடு,
2. துருக்கி பயங்கரவாத அமைப்புக்களாகக் கருதும் சிரிய குர்திஷ் போராளிக் குழுக்களுடன் (P.Y.D./Y.P.G.) அமெரிக்க உறவு வைத்திருக்கின்றது.
3. துருக்கி இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்கியது
4. துருக்கிக்கு விற்பனை செய்ய இருந்த நூறு அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களான F-35 டிரம்ப் நிறுத்தியுள்ளார்.
பணவீக்கம் 16%.
5. சிரியாவில் துருக்கி ஈரானுடனும் இரசியாவுடனும் நெருங்கிய ஒத்துழைப்பைச் செய்கின்றது. சிரிய விவகாரம் அமெரிக்காவிற்கு ஒரு கேந்திரோபாயத் தோல்வி எனக் கருதப்படுகின்றது.
6. டிரம்ப் இறக்குமதி வரிகளை அதிகரித்து வர்த்தகப் போர் தொடுத்த நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும்.
7. டிரம்பின் வேண்டுதலின் படி துருக்கி அமெரிக்கப் பாதிரியாரை சிறையில் இருந்து முழுமையாக விடுதலை செய்திருந்தால் 2018 நவம்பரில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்திருக்கும்.

சிரியாவில் துருக்கி
3.5 மில்லியன் சிரியர்கள் துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இரசிய ஆசியுடன் துருக்கி அஃப்ரினையும் அல் பப்பையும் தனதாக்கியது, அது துருக்கிய ஆட்சியின் கீழ் உள்ளது. பொது இடங்களுக்கு எர்டோகானின் பெயர் வைக்கப்படுகின்றது. துருக்கிமொழி அங்கு போதிக்கப்படுகின்றது துருக்கிய ஆதரவுப் போராளிகளுக்கு துருக்கி சம்பளம் வழங்குகின்றது. துருக்கியில் இருந்து மின் இணைப்பு
இதிலிப்பை முழுமையாக துருக்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியவில்லை, அங்கு பல அவதானிப்பு நிலையங்கள் என்ற போர்வையில் தனது 1300பேரைக் கொண்ட படை நிலைகளை துருக்கி நிறுத்தியுள்ளது. இத்லிப்பை முழுமையாக தன் வசமாக்க இரசிய ஆதரவை துருக்கி வேண்டி நிற்கின்றது அஃப்ரினும், அல் பப்பும் இதிலிப்பும் இல்லாமல் பஷார் அல் அசாத்தால் பதவியில் நீடிக்க முடியும். அசாத்துக்கு சில எலும்புத் துண்டுகளைக் கொடுக்க இரசியா தயாராக உள்ளது அலேப்பேயிற்கு அண்மையாக துருக்கியுடன் எல்லையைக் கொண்ட பல நகரங்களை அசாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இரசியா தயாராக உள்ளது. முதலாம் உலகப் போரின் பின்னர் சிரியாவினதும் ஈராக்கினதும் வட பகுதிகளை துருக்கி தன்னுடன் இணைக்க முயன்ற போது அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. அந்தக் கனவை இப்போது துருக்கி இரசிய உதவியுடன் நிறைவேற்றப்பார்க்கின்றது. இஸ்லாமிய நாடான துருக்கி சிரியாவில் கால்பதிப்பதையோ அதன் விரிவாக்கத்தையோ இஸ்ரேல் தடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும். ஈரானைத் தனிமைப்படுத்தும் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் காய் நகர்த்தல்களுக்கு துருக்கி ஈரானுடன் கொண்டுள்ள உறவு தடையாக இருக்கின்றது. அதனால் துருக்கி வலுவிழக்கச் செய்யப்பட வேண்டிய ஒரு நாடாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கருதும் என ஊகிக்கலாம்.

நிதிச் சந்தியின் மிகையான நடவடிக்கையா? யூதச் சதியா?
துருக்கியின் அலுமினியம் உருக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் இரண்டு விழுக்காடு மட்டுமே. அதன் ஏற்றுமதி அமெரிக்காவில் சந்திக்கும் வரி அதிகரிப்பு ஒரு நாளில் 25விழுக்காடு வீழ்ச்சியை துருக்கிய நாணயத்தில் ஏற்படுத்தியமை பொருளாதாரத் தர்க்க அடிப்படையில் பிழையான ஒன்றே

எர்டோகானின் விநோதமான பொருளாதாரக் கொள்கை
அமெரிக்காவின் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது பல வளர்முக நாடுகளின் நாணயங்கள் நெருக்கடியைச் சந்திப்பது தவிர்க்க முடியாது. டொலரின் பெறுமதி ஏறும்போது எரிபொருட்கள் இறக்குமதி செய்வதற்கு பல நாடுகள் அதிக விலை கொடுக்க வேண்டும். அதனால் அந்த நாடுகளில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும். அதுபோலவே பல இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப பொருளாதார நகர்வுகளை அந்த நாடுகள் செய்ய வேண்டும். துருக்கிய அதிபர் எர்டோகானின் பொருளாதாரக் கொள்கைகள் விநோதமானவை. துருக்கியின் அதிகார மிக்க தலைவரான அவர் வட்டி என்பது தீமையான ஒன்று, அதை அதிகரிக்க மாட்டேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர். துருக்கியில் பணவிக்கம் 16விழுக்காடாக இருக்கின்றது. இது இந்தியாவினது பணவீக்கத்திலும் இரு மடங்கிற்கு மேல். பணவிக்கம் அதிகரித்தால் நடுவண் வங்கி வட்டி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும் என்பது அடிப்படைப் பொருளாதார விதி. அதைத் துருக்கி செய்யாததால் அதன் நாணயத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெறுப்புக் காட்டத் தொடங்கியதால் அதன் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.

எர்டோகானின் அதிரடி நடவடிக்கைகள்
2018 ஓகஸ்ட் 14-ம் திகதி துருக்கியின் வர்த்தகர்கள் எர்டோகானைச் சந்தித்து லிராவை பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். 2018 ஓகஸ்ட் 14-ம் 15-ம் திகதிகளில் எர்டோகான் அமெரிக்காவிற்கு எதிராகவும் லிராவைப் பாதுகாக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்தார். லிராவை குறைவணிகத்தில் விற்பனை செய்வதற்கு எதிராகச் செயற்பட்டார். கட்டார் நாட்டின் உதவியைக் கோரினார். துருக்கிக்குச் சென்ற கட்டார் எமிர் அல் தனி துருக்கியில் 15 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக அறிவித்தார். 2017இல் துருக்கியில் செய்யப்பட்ட மொத்த வெளிநாட்டு முதலி 10பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் கட்டாரின் முதலீடு எத்தகையது என அறியலாம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்கள் மதுபானங்கள் உட்படப் பல பொருட்களின் இறக்குமதியை பெருமளவில் அதிகரித்தார். அமெரிக்காவின் இலத்திரனியல் பொருட்களை புறக்கணிக்குமாறு தன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நடவடிக்கைகளால் 15-ம் திகதி துருக்கிய நாணயமான லிராவின் பெறுமது ஐந்து விழுக்காடு அதிகரித்தது.

ஆவணி வெள்ளியில் மீண்டும் ஆடிய லிரா
ஆடிக் கடைசி வெள்ளியிம் பெரும் ஆட்டம் கண்ட துருக்கிய லிரா மீண்டும் ஆவணி முதல் வெள்ளியில் (2018-08-17)  5விழுக்காடு பெறுமதி வீழ்ச்சியால் மீண்டும் ஆட்டம் கண்டது. பாதிரியார் பிறௌன்ஸனை விடுதலை செய்யாவிடில் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது வியாழக்கிழமை துருக்கியில் வெள்ளிக் கிழமை நிராகரிக்கப்பட்டது.

நாடுகளின் நிதி நிலைமையை தரப்படுத்தும் நிறுவனமான Fitch துருக்கிய அரசு தங்கள் பொருளாதாரக் கொள்கையில் உலக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவித்தது. துருக்கிய நாணயமான லிராவின் வீழ்ச்சிக்கு எதிராக துருக்கி எடுத்த நடவடிக்கைகள் போதாது என்றது Fitch. வட்டி விழுக்காட்டை 1.5ஆல் அதிகரித்ததும் குறைவணிகத்தைத் தடைசெய்ததும் கட்டாரின் 15 பில்லியன் முதலீடும் போதாது என்பது Fitchஇன் கருத்து. 2018-ம் ஆண்டு துருக்கியின் இறைமைத் தரத்தை (sovereign rating) BB+ இலிருந்து BB இற்கு தாழ்த்தியிருந்தது.

துருக்கின் பிழையான பொருளாதார முகாமை, திறனற்ற ஊழல் நிறைந்த அரச கட்டமைப்பு ஆகையவை தான் துருக்கியின் பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணம். காரணம் அவை அல்ல எம் எதிரியான அமெரிக்காவே காரணம் என துருக்கிய மக்களை இலகுவாக நம்பவைக்க எர்டோகானுக்கு டிரம்ப் உதவி செய்துள்ளார்.


Monday, 13 August 2018

மேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி


அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை தன்னுடன் இணைந்து கொண்டமை இரசியாவை ஆத்திரப் பட வைத்தது. உக்ரேனும் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திரும் இணையலாம் என்ற நிலை வந்த போது இரசியா அங்கு படைகளை அனுப்பி கிறிமியாவை தனதாக்கிக் கொண்டது. அதனால் அமெரிக்கா இரசியா அடக்கப்பட வேண்டும் என வீறு கொண்டு எழுந்தது. பன்னாட்டு நியமங்களையும் மீறி சீனா தென் சீனக் கடற் பிராந்தியத்தின் 90 விழுக்காடு தனக்குச் சொந்தமானது என்கின்றது. தென் சீனக் கடலில் தான் நிர்மாணிக்கும் தீவுகள் படைத்துறைக்குப் பயன்படுத்தப்பட மாட்டாது எனச் சொன்ன சீனா. அந்த உறுதி மொழியையும் மீறி அத்தீவுகளில் படைத் தளங்களை உருவாக்கியது. சீன நிர்மாணித்த தீவு உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி பங்கின் போக்கு வரத்து சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதால் அமெரிக்காவும் ஜப்பானும் ஆத்திரமடைந்தன. ஈராக், சிரியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளில் ஈரானின் தலையீடு அதிகரித்து வருவதால் இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் அதிக கரிசனை கொண்டன. இவை போன்ற பல பிராந்திய முரண்பாடுகள் பல நாடுகளையும் தம் படைவலுவை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.

குறையும் இடைவெளியை அதிகரிக்க முயலும் அமெரிக்கா
இது வரை காலமும் ஐக்கிய அமெரிக்கா மற்ற வல்லரசு நாடுகளிம் பார்க்க மடைத்துறையிம் மிகவும் முன் தங்கி இருந்தது. இதை இடைவெளி நாளடைவில் சிறியதாகிக் கொண்டே போவதை உணர்ந்த அமெரிக்கா தன் படை வலுவைத் தொழிநுட்ப அடிப்படையில் மிகவும் முன்னேற்ற திட்டமிட்டுள்ளது. அமெரிக்கப் படைத்துறையான பெண்டகன் மிக அவசரமாக செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தை எல்லா படைக்கலன்களிலும் எல்லாப் படைதுறைச் செயற்பாடுகளிலும் உட்புகுத்துகின்றது.

ரடார்களும் விமானங்களும்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக போர்விமான உற்பத்திக்கும் அதை இனம் காணும் ரடார்கள் உற்பத்திக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. இலத்திரன் அலைகளை வைத்து எதிரி விமானங்களில் இருந்து வரும் வெப்பத்தை வைத்தும் ஒலியை வைத்தும் இனங்காணுவதும், அதை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை விமான உற்பத்தியாளர்கள் உருவாக்குவதுமாக இருந்த காலம் போய் எதிரியின் விமானத்தில் இருந்து வரும் மின்காந்த அலைகளை வைத்து இனம் காணும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இத்தாலியில் இப்போது ஃபோட்டோன்களை வைத்து எதிரி விமானங்களை இனம் காணும் (fully photonics-based coherent radar system) தொழில்நுட்பம் உருவாக்கப்படுகின்றது. இது உடனடி அதி உயர் வீச்சு பிரிதிறன் ரடார் (real-time ultra-high-range-resolution radar). இரசியாவும் "Radio-Photonic Radar"களை உருவாக்கியுள்ளது. இரசியாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் "Radio-Photonic Radar" பொருத்தப் பட்டிருக்கும். அவை எதிரி விமானங்களை துரிதமாகவு இலகுவாகவும் இனம் காணும். தற்போது அமெரிக்காவின் F-35 விமானத்தின் உணரிகள் எதிரி விமானங்கள் அதை இனம் காணுவதற்கு முன்னதாக அது எதிரி விமானங்களை இனம் கண்டு அழித்துவிடும். இந்த நிலைமையை மாற்றியமைக்கவே இரசியா "Radio-Photonic Radar"களை உருவாக்கியுள்ளது. இவை அமெரிக்காவின் புலப்படா விமானங்களை செல்லாக்காசாக்கலாம்.

அடுத்த தலைமுறைப் போர்விமானங்கள்
அமெரிக்காவின் F-22, F-35 ஆகியவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் எனப்படுகின்றன. சீனா தனது J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் என்கின்றது. இரசியாவின்  PAK/FA Sukhoi Su-57  ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாகும். அமெரிக்காவின் F-35, இரசியாவின் SU-57 ஆகியவை பல தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. F-35 போர்விமானத்தை முதலில் போர்க்களத்தில் தாமே பாவித்தோம் என்கின்றது இஸ்ரேலியப் படைத்துறை. F-35இல் உள்ளவை மென்பொருள் சிக்கல்கள் மட்டுமே அதை இலகுவாக சீர் செய்யலாம் என்கின்றனர் அதன் உற்பத்தியாளர்கள். இரசியா தனக்கு இப்போது PAK/FA Sukhoi Su-57  போர்விமானங்கள் பெருமளவில் தேவைப்படாது எனத் தெரிவித்துள்ளது. பல நாடுகளும் இப்போது ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. அமெரிக்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப 2030 முன்னெடுப்பு (Science and Technology 2030 initiative) ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துகின்றது.

அமெரிக்காவின் புதிய F-15
இதுவரை பல போர்முனைகளில் செயற்பட்ட F-15 C/D போர்விமானங்கள் F-15X Eagle என்னும் புதிய வடிவத்தைப் பெறவிருக்கின்றது. இவை வானாதிக்கம் செய்யக் கூடிய வகையில் உருவாக்கப்படவிருக்கின்றன. வானின் போர் விமானங்களிடையே நடக்கும் சண்டையைப் பொறுத்தவரை F-15 மன்னாதி மன்னனாகக் கருதப்படுகின்றது. F-15 போர்விமானங்களிலும் பார்க்க F-15X Eagle விமானங்கள் அதிக அளவு எடைகொண்ட படைக்கலன்களைத் தாங்கிச் செல்ல வல்லன. 24 வானிலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணைகள் அதில் பொருத்தலாம். மிகவும் புதிய உணரிகள் இவற்றில் பொருத்தப்படவிருக்கும் F-15X Eagle விமானங்களில் சிறந்த பறப்புக் கட்டுப்பாடு இருக்கும். F-15X Eagle விமானங்கள் குறைந்த பறப்புச் செலவைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. F-22இன் பறப்புச் செலவு மணித்தியாலத்திற்கு 35,0000டொலர்களாகும் ஆனால் F-15X Eagleஇன் பறப்புச் செலவு மணித்தியாலத்திர்கு 27,000 டொலர்கள் மட்டுமே. இதில் புலப்படாத் தொழில்நுட்பம் அதிக அளவில் இல்லை. இரசியா, சீனா போன்ற வலிமை மிக்க ரடார்களைக் கொண்ட நாடுகளுக்கு எதிராகக் களமிறக்கக் கூடியவை என்பதால் புலப்படாத் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. வானாதிக்கத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் போன்ற வலிமையற்ற ரடார்கள், வலிமையற்ற ஏவுகணைகல் இல்லாத எதிரிகளுடன் போரிடுவதற்கு F-15 சிறந்த போர்விமானமாகும். சிரியாவிற்குள் பலதடவைகள் ஊருடுவுவதற்கு இஸ்ரேல் F-15 C/D போர்விமானங்களையே பயன்படுத்தியது. புதிய F-15X Eagle விமானங்களை இஸ்ரேல் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. F-35விமானங்கள் கத்திகளில் Swiss Army Knife போல போர்விமானங்களில் பற்பணிகள் செய்யக் கூடியவையாக விமர்சிக்கப்படுகின்றது. ஆனால் அது ஒரு இலகுதர விமானங்களாகும்.

இரசியாவின் தாங்கிப்படை
தாங்கிகள் உருவாக்கத்தில் சிறந்து விளங்கும் இரசியாவின் T-14 Armata ஒரு சுப்பர் தாங்கி எனப் பெயரெடுத்துள்ளது. 1994 டிசம்பரில் இருந்து 1996 ஓகஸ்ட் வரை இரசியா செஸ்னியாவில் 5200படையினரை இழந்ததுடன் 52,000படையினர் காயப்பட்டனர். மேலும் 3000படையினர் காணமற் போயுள்ளனர். இது இரசியாவிற்கு அதிக கவசவாகனங்களும் தாங்கிகளும் தேவை என்பதை உணர்த்துகின்றது. இரசியாவின் T-14 Armata பல வகை0களில் அமெரிக்காவின் M1A2 Abrams தாங்கிகளிலும் பார்க்கச் சிறந்தவையாகும்

லேசர்களும் ஹைப்பர் சோனிக்கும்
ஒரு காலத்தில் போர் பற்றிய கதைகளில் கற்பனையாக இருந்து வந்த லேசர் படைக்கலன்கள் தற்போது ஆய்வு கூடங்களில் பரீட்சிக்கப் படும் நிலையை எட்டியுள்ளது. லேசர் படைக்கலன்கள் directed-energy weapons என அழைக்கப்படுகின்றன. அமெரிக்கா, சீனா, இரசியா ஆகிய நாடுகள் இதில் அதிக அக்கறை காட்டி கணிசமான முன்னேற்றமடைந்துள்ளன. ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை சீனாவும் இரசியாவும் உருவாக்கி வருகையில் அவற்றை எதிர் கொள்ள ஒரே வழியாக அமெரிக்கா லேசர் படைக்கலன்களை உருவாக்குகின்றது. அதே போல் சீனாவும் இரசியாவும் லேசர் படைக்கலன்களை உருவாக்குகின்றன. Directed-energy weapons என்பது high-energy laser என்றும் high-power microwave systems என்றும் இருவகைப்படும். இவை ஒளியின் வேகத்தில் சென்று இலக்குகளைத் தாக்குவதால் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் எவுகணைகளை இவற்றால் இலகுவாக அழிக்க முடியும். அத்துடன் மற்றப் படைக்கலனகளிலும் பார்க்க செலவு குறைந்தவையுமாகும்.

இந்தியாவில் பிரம்மாஸ்த்திரம்
இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய BrahMos Supersonic Cruise Missile என்னும் ஏவுகணைகளை இந்திய தனது படைத்துறையின் பிரம்மாஸ்த்திரம் என்கின்றது. மகாபாரத்தில் குறிப்பிடப்படும் பிரம்மாஸ்த்திரம் போல் முழு எதிரிகளையும் நொடிப்பொழுதில் அழிக்காவிடினும் பிரம்மோஸ் ஒலியிலும் பார்க்க 7 மடங்கு வேகத்தில் பாயக்கூடியது 500கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 300கிலோ மீட்டர் பாயக் கூடியது. கடல், வான், தரை ஆகிய மும்முனைகளிலும் பாவிக்கக் கூடிய வகையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது இந்தியா தனது பிரம்மோஸ் ஏவுகணைகளை சிறியதாக்கியுள்ளது. உயரத்தில் மூன்று மீட்டரையும்  எடையில் அரைவாசியையும் குறைத்து புதிய என்னும் ஏவுகணையை உருவாக்கியுள்ளது. சிறிதாக்கப்படும் போது அவை அதிக வேகத்துடனும் அதிக தூரமும் பாயக்கூடியவையாக அமையும். சிறிய ஏவுகணைகள் BrahMos NG சிரிய ரக போர்விமானங்களிலும் விமானம்தாங்கிக் கப்பல்களிலும் பாவிக்கக் கூடியதாக இருக்கும். இந்தியாவின் இரசியத் தயாரிப்பு SU-30MKI போர்விமானங்களிலும் உள்நாட்டு உற்பத்தி தேஜஸ் போர்விமானங்களிலும் சிறியதாக்கப்பட்ட BrahMos NG ஏவுகணைகளைப் பாவிக்கலாம். அத்துடன் கடற்படையினரின்  torpedo எனப்படும் நீருக்குக்கீழான ஏவுகணைகளாகவும் பாவிக்க முடியும். இந்திய விமானம் தாங்கிக் கப்பல்களில் செயற்படும் MiG-29K போர்விமானங்களிலும் பாவிக்கலாம். இப்படி பல துறைகளிலும் பாவிக்கப்படுவதால் BrahMos NG ஏவுகணைகளை பெருமளவில் உற்பத்தி செய்யும் போது குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும். இந்தியக் காலாட் படையினர் எதிரியின் கட்டளை-கட்டுப்பாட்டகத்தை அழிக்கவும் BrahMos NG ஏவுகணைகளைப் பாவிக்கலாம். அதிக MiG-29K போர்விமானங்களில் அதிக BrahMos NG ஏவுகணைகளைப் பாவிப்பதன் மூலம் இந்திய வான் படை தனது வான் ஆதிக்கத்தில் வலிமை மிக்கதாக்கலாம். இந்தியர்கள் எப்படைக்கலன்களை உருவாக்கினாலும் அது பாக்கிஸ்த்தானை எப்படிப் பாதிக்கும் எனச் சிந்திப்பது வழக்கம். பெரிய பிரம்மோஸ் பஞ்சாப் மாநிலம் வரைக்கும் பாயுமாம். சிறிய பிரம்மோஸ் தீவிரவாதிகள் நிறைந்த பாக்கிஸ்த்தானின் மேற்குப் பகுதி வரை பாயக்கூடியதாம்.
                                         
Remote Warfare என்னும் தூரப் போர்முறைமை
ஆளில்லாப் போர்விமானங்கள், இணையவெளிப் போர் ஆகியவை தூரப் போர்முறைமையை இலகுவாக்கியுள்ளன. ஆளில்லாப் போர்விமானங்கள் இலகுவாகத் தயாரிக்கக் கூடியவையாக மாறி வருகின்றன. சிரியப் போர் முனையில் பல் வேறு போராளிக் குழுக்கள் ஆளில்லாப் போர்விமானங்களை தாமே உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றன. சிரியாவில் இரண்டு தடவைகள் இரசியாவின் படை நிலைகள் மீது ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆளில்லாப் போர்விமானங்களால் தனது படை நிலைகள் மீது தாக்குதல்கள் நடக்கலாம் என்ற கரிசனையில் அமெரிக்கா ஆளில்லாப் போர்விமான எதிர்ப்பு முறைமைகளை உருவாக்கியுள்ளது.

செயற்கை விவேகம்
போர்க்களத்தில் செயற்கை விவேகம் பரந்த அளவில் பாவிப்பதற்கான முன்னெடுப்பை பல வல்லரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. பொதுவாக killer robots என அழைக்கப்படும் lethal autonomous weapons systems போன்றவற்றை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டப்படுகின்றது. எண்மியச் செயற்பாடுகளுக்கும் மனித உடற் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் குறைந்து கொண்டே போகின்றன. 2030இற்குப் பின்னர நடக்கவிருக்கும் போர்களில் செயற்கை விவேகம் கொண்ட கணினிகள்தான் ஜெனரல்களாக இருந்து போரை நடத்தும். போர்முனையில் ஆளில்லாவிமானங்களில் இருந்து தாங்கி வரை எல்லாவற்றிலும் பொருத்தப்பட்டிருக்கும் கணினிகளும் உணரிகளும் களநிலவரம் தொடர்பான தகவல்களைத் திரட்டி அந்த ஜெனரலுக்கு அனுப்ப அது இடும் கட்டளைப்படி போர் நகர்த்தப்படும். மரபு வழி நடவடிக்கைகளிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முழுக்க முழுக்க தாமாக தீர்மானம் எடுத்து எதிரியை அழிக்கக் கூடிய படைக்கலன்களும் போர் முனைகளில் செயற்படும்.

ஆறாம் படைக்கிளையாக விண்வெளிப்படை.
தற்போது தரைப்படை, கடற்படை, கடல்சார் படை(Marines), வான்படை, இணையவெளிப்படை, என இருக்கும் ஐந்து படைக் கிளைகளோடு இனி ஆறவது படைக்கிளையாக விண்வெளிப்படையும் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை A mix of scary sci-fi and futuristic optimism படைத்துறை நிபுணர்கள் என விபரிக்கின்றார்கள். ஏற்கனவே ஒரு நாட்டின் வானில் இருக்கும் அதனது செய்மதிகளை மற்ற நாடுகள் அழிக்காமல் பாதுகாப்பதும் மற்ற நாடுகளின் செய்மதிகளை செயலிழக்கச் செய்வதும் அழிப்பதும் இந்த விண்வெளிப்படையின் முக்கிய நோக்கமாக இருகும். தரையில் இருந்து செய்மதிகளை நோக்கி வீசப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பது முக்கிய செயற்பாடாக இருக்கும். அமெரிக்காவின் நாசாவும் வான்படையும் இணைந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக இது தொடர்பாக தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. பராக் ஒபாமாவிற்கு ஆளில்லா விமானங்கள் பிடித்திருந்ததைப் போல டொனால்ட் டிர்மப்பிற்கு விண்வெளிப்படை பிடித்திருக்கின்றது. இதனால் இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு இலகுவாகக் கிடைக்கின்றது. விண்வெளிப்படை ஒரு தனிப்பட்ட படைக்கிளையாக இல்லாமல் வான்படையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என பெண்டகனில் சிலர் கருதுகின்றனர்.

சீனா தொழில்நுட்பங்களை வாங்குவதைத் தடுத்தல்
சீன நிறுவங்கள் அமெரிக்க உயர் தொழில்நுட்ப நிறுவனங்கலை விலை கொடுத்து வாங்குவதன் மூலம் அமெரிக்கா உருவாக்கிய தொழில்நுட்பங்களைப் பெற்று வந்தது. இப்போது டொனால்ட் டிரம்ப் அதைப் பலவகைகளில் தடுத்துள்ளார். ஜேர்மனியும் இப்போது அதைச் செய்கின்றது. இதுவரை காலமும் சீன முதலீடுகளை ஊக்குவித்த ஜேர்மனி இப்போது ஜேர்மனிய உற்பத்தி நிறுவனமொன்றை சீனா வாங்குவதித் தடை செய்துள்ளது. Leifeld Metal Spinning என்னும் இயந்திர உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். மிகவும் உறுதியான உலோக உதிரிப் பாகங்களை அது உற்பத்தி செய்கின்றது. அவை வாகன மற்றும் வானூர்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படும். 2016-ம் ஆண்டு Kuka என்னும் இயந்திர மனிதர்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை சீனா 4.5 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கியது. இப்படிப் பல ஜேர்மன் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை சீனா வாங்கிக் கொண்டிருந்தது. தற்போது அமெரிக்காவின் பாதையைப் பின்பற்றி ஜேர்மனியும் சீனா தனது நாட்டில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை வாங்குவதைத் தடை செய்கின்றது.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி படைத்துறையை மேம்படுத்தி போரியலை மேலும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...