Friday, 14 October 2016

அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு எதிராக சீறிய சீனாவும் இரசியாவும்

தென் சீனக் கடலில் சீனாவுடனும் சிரியாவில் இரசியாவுடனும் கடுமையான முரண்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் படைத்துறை மேம்பாட்டைச் சமாளிக்க இரசியா சீனாவுடன் ஒத்துழைக்கத் தயாராகவிருப்பதாக இரசியப் படையின் Lt. Gen. Viktor Poznikhir  தெரிவித்துள்ளார். இத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமை விடுத்துள்ள படைத்துறைச் சவாலை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட விருக்கின்றது. சீனாவில் நடந்த சியாங்ஷன் மன்றத்தின் 7வது மாநாட்டிற்கு கலந்து கொள்ளச் சென்ற Lt. Gen. Viktor Poznikhir சீனப் பாதுகாப்புத் துறையினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தினார். Shangri-La Dialogue என அழைக்கப்படும் ஆசியப் பாதுகாப்பு உச்சி மாநாட்டிற்க்கு மாற்றீடாக சீனா நடத்துவது தான் சியாங்ஷன் மன்றத்தின் மாநாடு.
அச்சுறுதலான அமெரிக்காவின் தாட்
ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் எதிரி நாடுகளின் முதல் அணுக்குண்டுத் தாக்குதலை (first nuclear strike) எப்படி எதிர்கொளவது தொடர்பாக நீண்டகாலம் திட்டமிட்டுப் பெரும் பணச்செலவுடன் உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை தாட் என சுக்கமாக அழைக்கப் படுகின்றது. அதை ஆங்கிலத்தில் Terminal High Altitude Area Defence (THAAD) என அழைப்பர். தாட் எவுகணை எதிர்ப்பு முறைமை இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவரை கண்காணித்து அந்தத் தொலைவில் இருந்தே வரும் ஏவுகணைகளை அழிக்க வல்லது. தென் கொரியாவில் அமெரிக்கா நிறுத்தியுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமை சீனாவையும் இரசியாவின் பெரும் பகுதியையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்கா எதிரி நாட்டின் அணுக்குண்டுகளை முதலில் தனது ஏவுகணைகளை வீசி அழித்த பின்னர் எஞ்சியுள்ள எதிரியின அணுக்குண்டுகளால் தனக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் மூலம் அழிக்கலாம் என நம்புகின்றது. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரி ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வல்லது.

சியாங்ஷன் மன்றத்தின் 7வது மாநாடு
சியாங்ஷன் மன்றம் (Xiangshan Forum) 2016 ஒக்டோபர் 10-ம் திகதி முதல் 12 திகதிவரை நடாத்திய  என்னும் பாதுகாப்புத் துறை மாநாடு சீனாவில் நடைபெற்றது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செய்லாளார் கோத்தபாய ராஜ்பக்ச உட்பட 59 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் நிபுணர்களும் பங்குபற்றினர். ஊழல் வழக்குகில் சிக்கியிருக்கும் கோத்தபாய சீனா செல்ல இலங்கை அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையின் சார்பில் அந்த மாநாட்டில் பாதுகப்புத் துறைச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி உரையாற்றினார். அந்த மாநாட்டில் உரையாற்றிய சீன Maj. Gen. Cai Jun ஐரோப்பாவில் ஐக்கிய அமெரிக்கா நிறுத்தியிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் இரசியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்றவை என்பதற்கான சட்டபூர்வ ஆதரங்களை அமெரிக்கா முனவைக்கவில்லை என்றார். மேலும் அவர் சீனாவும் இரசியாவும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் தொடர்பாக ஒரே நிலையில் உள்ளதால் இரு நாடுகளினதும் கேந்திரோபாய நிலைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை ஒருமித்து எதிர்க்கும் என்றார்.
ஐக்கிய அமெரிக்கா ஈரானின் அணுக்குண்டுகளுக்கு எதிராக ஐரோப்பாவிலும் வட கொரியாவின் அணுக்குண்டுகளுக்கு எதிராக தென் கொரியாவிலும் நிறுத்தியுள்ள தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் முறையே இரசியாவினதும் சீனாவினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இரண்டு நாடுகளும் கருதுகின்றன. 2000கிலோ மீட்டர் வரை செயற்படக்கூடிய தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலக கேந்திரோபாயச் சமநிலையைக் குலைத்து பிராந்தியப் பாதுகாப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கின்றது என்றார் சீன Maj. Gen. Cai Jun.  சீனாவின் deputy chief of the Joint Staff Department, Admiral Sun Jianguo உடன் இரசியாவின் பிரதி பாதுகாப்புத் துறை அமைச்சர் அனடொலி அண்டனோவ் இணைந்து சியாங்ஷன் மன்றம் நடத்திய ஏழாவது பாதுகாப்பு மாநாட்டை ஒட்டி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினர். அதில் அமெரிக்காவின் தாட் முறைமைக்கு எதிரான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் ஆசிய பசுபிக் பிராந்தியமே அமெரிக்காவின் தாட் முறைமையால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது என சீனர் தெரிவித்தார். மேலும் அவர் அமெரிக்கா மொத்த ஆசிய ஐரோப்பிய மக்களை கேடயமாகப் பாவிக்கின்றது என்றார். இரசியர் அமெரிக்காவின் செயல் அளவிற்கு மிஞ்சியதும் திமிரானதும் என்றார். தாட் ஏவுகணை முறைமை இதுவரை போர் முனையில் பரீட்சிக்கப் படாதது என்பதல் அதன் உண்மையான தாற்பரியம் இன்னும் தெரியாது. ஆனால் இரசியாவும் சீனாவும் அதுபற்றி கொள்ளும் கரிசனையும் அதற்கு எதிராக இணைவதும் அது எந்தளவு தூரம் அச்சுறுத்தலானது என்பது பற்றிப் பறைசாற்றுகின்றது. அமெரிக்கா 2002-ம் ஆண்டுச் செய்து கொண்ட Anti-Ballistic Missile உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப் பட்சமாக விலகிக் கொண்டதையும் இருதரப்பினரும் கடுமையாகக் கண்டித்தனர்.

இணைந்து பயிற்ச்சி
அமெரிக்காவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர் கொள்ள சீனாவும் இரசியாவும் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு முறைமையைக் கையாள்வது தொடர்பான படைத்துறைப் பயிற்ச்சியில் 2017-ம் ஆண்டு ஈடுபடவிருக்கின்றன. 2016-ம் ஆண்டு மே மாதம் இரு நாடுகளும் இணைந்து கணனி ஒப்புச்செய்லாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைப் பயிற்ச்சி (computer-simulated anti-missile drill) செய்தன. இதன் அடுத்த கட்டமாகவே 2017-இல் இரு நாடுகளும் இணைந்து இரண்டாம் பயிற்ச்சியைச் செய்யவிருக்கின்றன. இதன் விபரத்தை சீனா வெளிவிடவில்லை. ஆனால் அது எந்த ஒரு நாட்டையும் இலக்கு வைத்து நடத்தப் படவில்லை என சீனா சொல்கின்றது. சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜின் கன்ரொங் சீனாவும் இரசியாவும் ஏவுகணை எதிர்ப்புத் துறையில் அமெரிக்காவிலும் பார்க்கப் பின் தங்கியுள்ளன. அவற்றிற்கிடையிலான ஒத்துழைப்பு இந்தப் பின் தங்கிய நிலையைக் குறைக்கக் கூடியது என்றார். சீனப் படைத் துறை விஞ்ஞானக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் Luo Yuan தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரு நாடுகளும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.
2016 செப்டம்பர் மாதம் 29-ம் திகதி அமெரிக்காவின் சன் டியாகோ நகரில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான யூ.எஸ்.எஸ் கார்ல் வின்சனில் நின்று கொண்டு உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தியம் சீனாவின் படைத்துறை வளர்ச்சியை உணர்வதால் அமெரிக்கா தனது படைத்துறை முனையை அங்கு கூராக்க விருக்கின்றது என்றார். அவரது உரை சீனாவின் படைத்துறை வளர்ச்சியாலும் தென் சீனக் கடலில் சீனா செய்து கொண்டிருக்கும் விரிவாக்க நடவடிக்கைகளாலும் கலவரமடைந்துள்ள நாடுகளை ஆறுதல் படுத்த என்றது ஓர் ஹொங்கொங் ஊடகம். அமெரிக்கா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை மேலும் தாக்குதல் திறன் மிக்கவையாக்குவதுடன் நீர் மூழ்கிக் கப்பல்கள் போக முடியாத சிறு கடற்பரப்புகளுக்குள் சென்று தாக்குதல் செய்யக் கூடிய ஆளில்லாக் கலன்களையும் (undersea drones) உருவாக்க விருக்கின்றது என்றார் காட்டர். ஆசிய நாடுகளுடன் அமெரிக்கா கட்ட முயலும் படைத்துறை ஒத்துழைப்பு என்ற மாளிகையின் முதற் பிளவு பிலிப்பைன்ஸில் உருவாகியுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பிலும் பார்க்க சில ஆசிய நாடுகளுக்கு சீனாவின் பணம் அதிகம் தேவைப்படுகின்றது.

படைத்துறைத் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணியில் இருப்பது சீனாவையும் இரசியாவையும் ஒத்துழைக்க நிர்ப்பந்திக்கின்றது. சீன மூலதனமும் மலிவான ஊழியர்களும் இரசியத் தொழில்நுட்பத்துடன் இணைவது  அமெரிக்காவைக் கரிசனை கொள்ள வைக்கும்.

Monday, 10 October 2016

பாக்கிஸ்த்தானிலும் சீனாவிற்கு அமெரிக்கா ஆப்பு வைக்குமா?



எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும் பகுதியை ஒதுக்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. பாக்கிஸ்த்தானின் முத்துமாலைத் திட்டம், தரைவழிப்பட்டுப்பாதை, கடல்சார் பட்டுப்பாதை ஆகியவற்றில் பாக்கிஸ்த்தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.

திருகுப் புள்ளிகள்
மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகியவை சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் திருக்குப் புள்ளிகளாகும்.  இக் கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது.  ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி படை ஒத்திகையும் செய்யும்.

சீனாவிற்குப் பாதகமான ஆட்சி மாற்றங்கள்
சீனா பெரு முதலீடுகளைச் செய்த மியன்மாரிலும் இலங்கையிலும் சீனாவிற்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் அளவிற்கு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆட்சி மாற்றத்திலும் இந்தியாவும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டன.  இது போல இந்தியாவும் அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானில் அதிகரிக்கும் சீன ஆதிக்கத்திற்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். 2016 செப்டம்பர் மாதம் 17-ம் 18-ம் திகதிகளில் வெனிசுவேலாவில் நடந்த கூட்டுச் சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை. இதுவரை காலமும் கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்திய தலைமை அமைச்சர்களும் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் அக்கறையுடன் கலந்து கொள்வார்கள். அதன் உருவாக்கத்தில் ஜவகர் லால் நேரு முக்கிய பங்கு வகித்தார். வெனிசுவேலா உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாமல் விட்டது இந்தியாவின் வெளியுறவுத் துறையின் கொள்கை மாற்றமா? அமெரிக்காவிற்கும் வெனிசுவேலாவிற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் நிலவுகின்ற நிலையில் மோடி அமெரிக்காவைத் திருப்திப்படுத்த அதைப் புறக்கணித்தாரா அல்லது ஆரம்பத்தில் இருந்தே கூட்டுச் சேரா நாடுகளை வெறுப்புடன் பார்க்கும் அமெரிக்காவை மோடி திருப்திப் படுத்த முயல்கின்றாரா?

சீன பாக்கிஸ்த்தானிய உறவு
பாக்கிஸ்த்தானின் பல உட்கட்டுமானனங்களில் சீனா முதலீடு செய்துவருகின்றது. பாக்கிஸ்த்தானின் கஷ்கர் நகரத்திற்கும் குவாடர் நகரத்திற்கும் இடையிலான 3500 கிலோ மீட்டர் நீளப் பாதையை நிர்மாணிக்க சீனா உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தையும் சீனாவையும் இணைக்கும் கொரக்கோரம் நெடுஞ்சாலையை அகலப்படுத்தவும் சீனா உதவி செய்கின்றது. தொடர்ச்சியான் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ள பாக்கிஸ்த்தானியர்களுக்கு சீன முதலீடு ஒரு வரப்பிரசாதமாகும். பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரம் 4 விழுக்காடு தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆண்டு தோறும் புதிதாக வேலை தேடிவரும் முன்று மில்லியன் இளையோருக்கு வேலை கொடுக்க குறைந்தது 7 விழுக்காடாவது வளரவேண்டும். சீன முதலீட்டில் 25பில்லியன் டொலர்கள் வலு உற்பத்தி சார்ந்ததாக இருக்கின்றது. வழமையாக பாக்கிஸ்த்தானில் முதலீடு செய்யும் நாடுகள் தமது முதலீடுகளைக் குறைத்த வேளையில் சீனா பாக்கிஸ்த்தானில் அதிக முதலீடு செய்கின்றது. பாக்கிஸ்த்தான் தேவையான நேரம் எல்லாம் உதவி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது.

சீன பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரப் பாதை
ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமாகும். பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிக்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீனாவின் பொருளாதாரப் பாதை.

குவாடர் படைத்தளமாகுமா?
குவாடர் துறை முகத்தில் காலப் போக்கில் சீனக் கடற்படையின் தளம் அமைக்கப்படும் என்ற கரிசனை அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் உண்டு. சீனாவும் பாக்கிஸ்த்தானும் இந்தத் துறைமுக ஒப்பந்தமும் அதன் பாவனையும் படைத்துறை நோக்காங்களைக் கொண்டதல்ல எனத் தெரிவித்திருந்தாலும் அது நம்பும்படியாக இல்லை. குவாடர் துறைமுகத்தில் சீனா கடற்படைத் தளம் அமைத்தால் அது பஹ்ரேனில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவிற்கும் சவாலாக அமையும். அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்பிரிவின் மூலம் அமெரிக்கா வளைகுடா, செங்கடல், அரபுக்கடல், இந்து மாக்கடலின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் தனது ஆதிக்கத்தை வைத்துள்ளது. குவாடரில் சீனக் கடற்படைத் தளம் அமைந்தால் அது இந்தியாவின் மேற்குக் கரைக்கு ஆபத்தாக முடியும். இந்தியாவின் மேற்கு கரை முழுவதும் ஆபத்திற்கு உள்ளாகும். அதிலும் முக்கியமாக இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மும்பாய் நகரமும் அதன் துறைமுகமும் மட்டுமல்ல குஜாராத் மாநிலத்தில் உள்ள கந்தல், கேரளாவில் உள்ள கொச்சின் ஆகிய துறைமுகங்களும் சீனாவின் அச்ச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டி வரும். குவாடர் துறைமுகம் வர்த்தக ரீதியில் உகந்ததல்ல அது படைத்துறை நோக்கங்களை கொண்டுள்ளது என நம்புபவர்கள் பயணச் செலவை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அரபிக் கடலில் இருந்து கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்வதிலும் பார்க்க குவாடரில் இருந்து பாக்கிஸ்த்தானுடாகச் சீனாவிற்கு பல மலைகளைத் தாண்டிச் செல்லும் 1800கிலோ மீட்டர் நீளமான பாதையூடாக எடுத்துச் செல்வது செலவு மிக்கது என்கின்றார்கள் அவர்கள்.

குவாடருக்கு எதிராக ஈரான் - இந்தியாவின் சபஹார்
சீனாவின் குவாடர் துறைமுகத்திற்கு எதிராக இந்தியாவும் ஈரானும் ஆப்கானிஸ்த்தானும் இணைந்து ஈரானிய சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இணங்கியுள்ளன. ஆனால் குவாடர் துறைமுகத்தை சீனா முயல் வேகத்தில் அபிவிருத்தி செய்து கொண்டிருக்கையில் சபஹார் துறைமுக அபிவிருத்தி ஆமை வேகத்தில் நடக்கின்றது. குவாடர் துறைமுகத்தின் அபிவிருத்தி ஈரானின் சபஹார் துறை முகத்தை ஓரம் கட்டி விடும் என ஈரான் கரிசனை கொண்டுள்ளது.

பாக் படைத்தளபதியின் சீனப்பயணம்
2016-ம் ஆண்டு மே மாத 17-ம் திகதி பாக்கிஸ்த்தானியப் படைத்தளபதி ஜெனரல் ரஹீல் சரீவின் சீனப் பயணம் இரு நாடுகளுகும் படைத்துறை ரீதியில் நெருங்கி வருவதைச் சுட்டிக் காட்டியது. பாக்கிஸ்த்தானில் இருந்து வீசப்படும் அணுக்குண்டுகளைத் தாங்கிய ஏவுகணைகள இடைமறித்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியா பரீட்ச்சித்துப் பார்த்த மறுநாள் இந்தப் பயணம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சீனாவில் சீனத் தலைமை அமைச்சரையும் சீனாவின் மத்திய படைத்துறைச் சபையின் துணைத் தலைவரையும் அவர் சந்தித்தார். பாக்கிஸ்த்தானிய ஜெனரல் ரஹீல் சரீவ் பாக்கிஸ்த்தானுக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் உதவி செய்யும் சீனாவுடன் இந்தியாவின் புதிய ஏவுகணையால் உருவான இந்தியாவிற்கு சாதகமாக மாற்றப்பட்ட படைத்துறைச் சமநிலை பற்றி நிச்சயம் கலந்துரையாடி இருப்பார் என்றார் பாக்கிஸ்த்தானின் வெளியுறவுத் துறையின் உயர் அதிகாரி. இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனை மட்டுமல்ல பாக்கிஸ்த்தானுக்கு அமெரிக்கா அமெரிக்கத் தயாரிப்பான F-16 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான நிதி வசதிகளை அமெரிக்கா செய்வதை அமெரிக்கப் பாராளமன்றம் தடை செய்தததும் பாக்கிஸ்த்தான் படைத்தளபதியின் சீனப் பயணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்ததிருக்க வேண்டும். அமெரிக்காவின் F-16இற்குப் பதிலாக சீனாவின் J-10 போர் விமானங்களை வாங்க பாக்கிஸ்த்தான் முயற்ச்சி செய்கின்றது.

அதிருப்தியடைந்த பலுச் மக்கள்
குவாடர் ஒரு வறிய பிரதேசத்தில் அமைந்துள்ள துறைமுகம் என்பதைக் காட்டுவதற்கு பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை ஒரு செய்தியை மேற்கொள் காட்டியது. அதன்படி குவாடரில் ஒரு வீட்டில் களவெடுக்கச் சென்றவர்களுக்கு அங்கு அகப்பட்டது குடிக்கும் நீர் கொண்ட குவளைகள் மட்டுமே. கனிம வளங்கள் நிறைந்த பலுச்சிஸ்த்தானை பாக் நடுவண் அரசு சுரண்டிக் கொண்டு அங்கு எந்த அபிவிருத்திகளையும் செய்ய வில்லை. இந்தியாவும் பாக்கிஸ்தானும் சுதந்திரமடைந்த போது பாலாத்காரமாக பலுச்சிஸ்த்தான் பாக்கிஸ்த்தானுடன் இணைக்கப்பட்டது. புறக்கணிக்கப் பட்ட பலுச் மக்கள் பல ஆண்டுகளாக தனிநாடு கேட்டுப் போராடுகின்றார்கள். பாலுச்சிஸ்த்தான் மக்கள் தமது மண்ணில் செய்யப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம் சீனாவிற்காகவே செய்யப்படுகின்றன எமது நலன்களுக்கா அல்ல என்கின்றனர். பலுச்சிஸ்த்தானில் உருவாக்கப்படும் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதிகள் பாக்கிஸ்த்தானிலேயே மிகப் பெரிய விமானத் தளம் போன்றவை உள்ளூர் மக்களுக்கு நலன்களைக் கொண்டு வரப் போவதில்லை என பலுச் மக்கள் கருதுகின்றனர். சீனாவின் பொருளாதாரப் பாதைத் திட்டத்தால் பலுச் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய ஒரே நன்மை சீனப் பார ஊர்திகளின் டயர்களில் ஓட்டை ஏற்படும் போது அவற்றை ஒட்டவைக்கும் பணியின் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே என்கின்றார் ஒரு பலுச் பொருளியலாளர்.

சீனாவின் கேந்திரோபாயத் தவறு
பாக்கிஸ்த்தானில் பிரிவினைவாதம் தீவிரவாதம் ஆகியவற்றின் இதய பூமியான பலுச்சிஸ்த்தானில் சீனா தனது முதலீட்டைச் செய்வதும் பலுச் மக்களுக்கு தான் நண்பன் என்று அவர்களை நம்ப வைக்காமல் முதலீடு செய்வது சீனா செய்யும் கேந்திரோபாயத் தவறாகும். பாக்கிஸ்த்தான் பலுச் மக்களை அடக்குவதற்காக சீன முதலீட்டைப் பாவிக்கின்றதா என்ற ஐயமும் நியாயமானதே. பலுச்சிஸ்த்தான் மாகாண முதல்வரின் பொருளாதார ஆலோசகர் சீனாவின் ஒவ்வொரு பார ஊர்தியும் பாக்கிஸ்த்தானியப் படையினர் தாங்கிகளும் கவச ஊர்திகளும் புடை சூழச் செல்வது செலவு மிக்க ஒன்றாகும் என்கின்றார். 2004-ம் ஆண்டே குவாடரில் கார் ஒன்றில் வைத்து வெடிக்கச் செய்யப் பட்ட குண்டால் மூன்று சீனப் பொறியியலாளர்கள் கொல்லப்பட்டனர். குவாடர் துறைமுகத்தைச் சூழவுள்ள பிரதேசத்தில் செய்யப் பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளால் உள்ளூர் மக்கள் தமது மண்ணில் தாமே சிறைவைக்கப் பட்டுள்ளதாக உணருகின்றனர். போதிய பாதுகாப்பின்மையால் பலுச்சிஸ்த்தானில் பல சீனத் திட்டங்கள் தொடங்க முடியாமல் இருக்கின்றன. பாக்கிஸ்த்தானின் சிந்து மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பலுச் இன மக்கள் பாக்கிஸ்த்தானுடன் ஒன்றிப் போய் உள்ளனர். பலுச்சிஸ்த்தானில் 54 விழுக்காடு பலுச் இனத்தவரும் 30 விழுக்காடு பக்துன் இனத்தவரும் வசிக்கின்றனர். இது பலுச்சிஸ்த்தானை ஒரு தனிநாடாகப் பிரிப்பதற்கு உகந்ததாக இல்லை. ஆனால் தொடர்ந்து பாக்கிஸ்த்தானால் புறக்கணிக்கப்பட்டுவரும் பலுச் இன மக்களிடையே மோசமான ஒரு தீவிரவாதத்தை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து உருவாக்க முடியும். அது சீனாவின் குவாடர் துறைமுகத்திற்குப் பெரும் சவாலாக அமையும்.

பாக்கிஸ்த்தானுக்கு எதிராக அண்மைக்காலங்களாக அமெரிக்காவும் இந்தியாவும் எடுக்கும் நடவடிக்கைக்கள்:

1. அமெரிக்கப் பாராளமன்றத்தில் பாக்கிஸ்த்தானை ஒரு பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாகப் பிரகடனப் படுத்தும் சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவும் அமெரிக்காவும் படைத்துறை ஒத்துழைப்புக்களை அதிகரித்து வருகின்றன. ஒரு நாட்டின் படை நிலைகளை மற்ற நாடு தனது பராமரிப்பு மற்றும் எரிபொருள் மீள் நிரப்புதலுக்குப் பாவிக்கக் கூடியவகையில் இரு நாடுகளும் LEMOA என்னும் ஒப்பந்தம் செய்துள்ளன.
3. நரேந்திர மோடி பலுச்சிஸ்த்தானியப் பிரிவினைவாதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் இந்திய சுதந்திர நாளன்று உரையாற்றினார்.
4. கஷ்மீரில் இந்தியப் படைகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் செய்பவை பொதுவாக இரகசியமாக வைக்கப்படும். ஆனால் 2016 செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா செய்த தாக்குதலுக்கு பெரும் பரப்புரை செய்யப் பட்டது.
5. ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பாக்கிஸ்த்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு எனச் சொன்னார்.
6. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா செய்யும் பல நகர்வுகள் இஸ்லாமியத் தீவிரவாதிகளை பலுச்சிஸ்த்தானை நோக்கி நகரச் செயவதாக இருக்கின்றது.
7. இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான நதிகளின் நீர்ப் பங்கீடு தொடர்பாக உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீர் பகுதியான ஊறியில் நடந்த தாக்குதலின் பின்னர் பாக்கிஸ்த்தானை தனிமைப் படுத்தும் முயற்ச்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
9. அமெரிக்காவும் இந்தியாவும் Communications and Information Security Memorandum Agreement (CISMOA) என்னும் ஒப்பந்தம் செய்யவிருக்கின்றன. இதன் படி அமெரிக்காவின் பல தொடர்பாடல் தொழில் நுட்பங்களை இந்தியா வாங்க முடியும்.
10. முன்பு அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்வதில்லை எனத் தடுத்து வைத்திருந்த பல படைக்கலன்களை அமெரிக்கா தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளது.
11. அமெரிக்காவும் இந்தியாவும் செய்யவிருக்கும் Basic Exchange and Cooperation Agreement for Geospatial Intelligence (BECA) என்னும் ஒப்பந்தத்தின் படி இந்தியப் படைத்துறைத் தலைமை தனது போர்விமானங்களுடனும் போர்க்கப்பல்களுடனும் பாதுகாப்பான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் இரு நாடுகளும் தமது உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இவை யாவும் சீனாவின் ஆதிக்கம் பாக்கிஸ்த்தானில் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளே. சீனாவிற்கு நிலைமையை மேலும் சிக்கலாக்க ஜப்பானும் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் சீனாவுக்கு எதிரான ஒரு மூக்கூட்டணியை உருவாக்க முயல்கின்றது.  பாக்கிஸ்த்தானில் பிரச்ச்னைகளைக் கிளறி அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் ஆட்சி மாற்றம் எற்படுத்தி மட்டும் அந்த நாட்டை அமெரிக்காவால் தனக்கு சார்பாக மாற்ற முடியாது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஆட்சியாளர்களிலும் பார்க்க பாக்கிஸ்த்தானியப் படைத்துறை அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. மக்களிடையே படைத்துறைக்கான ஆதரவும் அதிகம். பாக்கிஸ்த்தானியப் படைத்துறைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நல்ல உறவு இல்லை. பாக்கிஸ்த்தானுடன் நல்லுறவை வளர்த்து வரும் சவுதி அரேபியாவின் பங்கு எப்படி இருக்கும்? ஆனால் சீனாவால் பாக்கிஸ்த்தானில் செய்யவிருக்கும் முதலீடுகளுக்கு அமெரிக்காவால் ஈடு கொடுக்க முடியாது.

தமிழர்களின் நிலை
தெற்காசியப் பிராந்தியத்தில் பாக்கிஸ்த்தானை ஒட்டி எழுந்துள்ள ஆதிக்கப் போட்டி பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள தமிழர்களையும் பாதிக்கக் கூடிய பிரச்சனை மட்டுமல்ல தமிழர்கள் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புமாகும். பாக்கிஸ்த்தானில் நடக்க விருந்த தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு மாநாட்டில் இலங்கை பங்குபற்ற மறுத்ததற்கு இந்தியாவின் வேண்டுதல் மட்டும் காரணமாக இருந்திருக்காது. அமெரிக்காவின் வற்புறுத்தலும் காரணமாக இருந்திருக்க வேண்டும். இதில் புதைந்துள்ள உண்மை பாக்கிஸ்த்தான் தொடர்பாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயற்படுகின்றன என்பதை உறுதி செய்கின்றது. இலங்கைக்கு கடந்த பல ஆண்டுகளாக பாக்கிஸ்த்தான் பல உதவிகளைச் செய்து வந்தது. பாக்கிஸ்த்தான் இலங்கையின் செயலை ஒரு முதுகில் குத்திய செயலாக உணரும் என்பது நிச்சயம். அதைப் போலவே சீனாவும் இதைக் கரிசனையுடன் நோக்க வாய்ப்புண்டு. இந்தப் புவிசார் அரசியல் போட்டியில் தமிழர்கள் என்ன நிலையை எடுக்கப் போகின்றார்கள்? 2017-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழர்கள் தாம் ஜெனிவாவில் முற்றாக ஏமாற்றப் பட்டதை உணர்ந்து கொள்வார்கள். அந்த பட்டறிவு இனி எவ்வளவு உதவப் போகின்றது?

Wednesday, 5 October 2016

ஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு

ஐ எஸ் அமைப்புடன் பங்காண்மை அடிப்படையில் நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவரை ஐ எஸ் அமைப்பினர் மாற்றியதைத் தொடர்ந்து இந்தப் பிளவு உருவாகியுள்ளது.  நைஜீரியாவில் தனித்துச் செயற்பட்டு வந்த பொக்கோ ஹரம் அமைப்பு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்பட்டு வந்த ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்புடன் இணைந்து கொண்டது. ஐ எஸ் அமைப்பிற்கு உலகெங்கும் இருக்கும் பிரபல்யமும் அதனிடம் இருக்கும் பெருமளவு பணமும் பொக்கோ ஹரம் அமைப்பின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது பொக்கோ ஹரம் ஐ எஸ் அமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்றும் கட்டுப்படாதவர்கள் என்றும் இரு பிரிவாகப் பிளவு பட்டுள்ளது.

பொக்கோ ஹரம் அமைப்பின் வரலாறு
2002-ம் ஆண்டு மொஹமட் யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொக்கோ ஹரம் அமைப்பு ஆரம்பத்தில் இசுலாமிய மத போதனையை ஏழைப் பிள்ளைகளுக்கு செய்து வந்தது. பின்னர் இது இசுலாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது.  பின்னர் 2009-ம் ஆண்டு படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்துவதை இவர்கள் வழமையாகக் கொண்டிருந்தனர். பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கல் நடத்தியது. 2009 ஆண்டு நைஜீரியப் படையினர் இந்த அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதன் தலைவரைக் கொன்றதுடன் பலரைக் கைதும் செய்தனர். கொல்லப்பட்ட தலைவர் மொஹமட் யூசுப்பின் உடலின் படத்தை தொலைக்காட்சியில் காட்டிய நைஜீரிய அரசு பொக்கோ ஹரம் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது என மக்களுக்கு அறிவித்தனர்.  2010-ம் ஆண்டு இவர்கள் மீண்டும் அபுபக்கர் செக்கௌ தலைமையின் கீழ் திரண்டு எழுந்தனர். சிறைச் சாலையின் மீது தாக்குதல் நடாத்தி தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தனர். 2010-ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் 2011 நத்தார் தினத்திலும் இவர்கள் கிறித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்திப் பலரைக் கொன்றனர். தம்மீது நடாத்திய தாக்குதல்களுக்கு அவை பழிவாங்கல்கள் என்றனர் பொக்கோ ஹரம் அமைப்பினர். 2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை பொக்கோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என அறிவித்தனர். அத்துடன் பொக்கோ ஹரம் அமைப்பிற்கும் அல் கெய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க அரசு கருத்து வெளியிட்டது. 2013-ம் ஆண்டு ஒரு இசுலாமிய வழிபாட்டு நிலையம் மீது தற்கொடைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். பல இசுலாமிய மத போதகர்களையும் தலைவர்களையும் இலக்கு வைத்துப் பல தாக்குதல்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டில் கமரூன் நாட்டில் இவர்கள் தமது முதல் தாக்குதலை மேற்கொண்டனர். இவர்கள் உலகில் கவனத்தை ஈர்த்தது 12 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் படிக்கக் கூடாது என்று சொல்லி பாடசாலைகளின் பயின்று கொண்டிருந்த பெண்களை இவர்கள் கடத்திச் சென்ற போதே. இவர்களின் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் இதுவரை நைஜீரியாவில் இருபதினாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

இரத்த வெறி கொண்ட அபு பக்கர் ஷெக்கௌ
பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவர் அபு பக்கர் ஷெக்கௌ இரத்த வெறியுடன் செயற்படுவதாக ஐ எஸ் அமைப்பு குற்றம் சாட்டியது.
பொக்கோ ஹரம் அமைப்பின் நிறுவனரான காலம் சென்ற மொஹமட் யூசுப்பின் மகன் அபு முஸப் அல் பர்னாவியை ஐ எஸ் அமைப்பினர் பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவராக அறிவித்தனர். இந்த நியமனத்தை எதிர்த்த அபு பக்கர் ஷெக்கௌ தனியாக தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றுள்ளார். பொக்கோ ஹரம் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இருப்பதில்லை. பல உள் மோதல்கள் நிறைந்த அமைப்பு அது. பிராந்தியத் தளபதிகள் பலர் தான் தோன்றித்தனமாக நடப்பார்கள். அபு பக்கர் ஷெக்கௌவின் கடுமையான நிலைப்பாடும் இரக்கமற்ற செயல்களும் பலரை அவரை வெறுக்க வைத்தன. பொக்கோ ஹரம் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மம்மன் நூர் என்பவர் அபு பக்கர் ஷெக்கௌவிற்கு இஸ்லாமிய போதனைகளின் அடிப்படைகள் போதிக்கப் படவேண்டும் என்றார். ஷெக்கௌவின் இரக்கமற்ற செயற்பாடுகளால் பல போராளிகள் பொக்கோ ஹரம் அமைப்பில் இருந்து வெளியேறினர். 2012-ம் ஆண்டு பொக்கோ ஹரம் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று வேறு ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்.

இறப்பிற்கு தண்ணி காட்டிய ஷெக்கௌ. 
நைஜீரியப் படையினர் பல தடவைகள் ஷெக்கௌவை கொலை செய்ய முயற்ச்சி எடுத்தனர். அவர் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் கூட ஒலி/ஒளிபரப்பப்பட்டன. ஆனால் எலாவற்றிலும் இருந்து அவர் தப்பி விடுவார். தனக்கோ தனது அமைப்பிற்கோ எதிரானவர்கள் அல்லது ஆப்பத்தானவர்கள் என நினைப்பவர்களை ஈவு இரக்கமின்றி அவர் கொன்று விடுவார். முஸ்லிம்களை ஷெக்கௌ கொல்வதை ஐ எஸ் அமைப்பால் தலைவராக நியமிக்கப்பட்ட அபு முஸப் அல் பர்னாவி கடுமையாக எதிர்த்து வந்தார்.

பெரும் உள் மோதல்
ஐ எஸ் அமைப்பினர் தலைமை மாற்றம் செய்ததால் பொக்கோ ஹரம் அமைப்பினுள் பெரும் உள் மோதல்கள் நடக்கின்றது. இதனால் பல போராளிகள் நைஜீரிய அரச படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். ஐ எஸ் அமைப்பினர் பல போராளிகளை கொல்லப்படக் கூடிய சூழ் நிலைகளை தொடர்ந்து உருவாக்கி வருவதால் ஐ எஸ் அமைப்பின் தலைவர்  அபு பக்கர் அல் பக்தாதி ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய உளவாளி என்ற கருத்து பரவலாக முன்வைக்க்ப் படுகின்றது.

Monday, 3 October 2016

சீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்



2017-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் சீன அதிபர் தெரிவில் ஷி ஜின்பிங் வெற்றி பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. 2012-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து ஷி ஜின்பிங் இரண்டு பணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றார். ஒன்று சீனாவில் தனது பிடியை இறுக்குவது. இரண்டாவது சீனாவில் ஊழலை ஒழித்தல். சீனாவில் ஆட்சியில் இருப்பவர் கட்சியையும் படைத்துறையையும் தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும். சீனாவில் நடக்கும் ஊழல்களால் சீன மக்கள் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன் டொலர்களை இழந்து கொண்டிருக்கின்றார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான சீன ஆட்சியாளர்களின் போர் ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதிபர் ஷி ஜின்பிங்கின் போர் எல்லாவற்றிலும் பார்க்க வலிமை மிக்கதும் ஆழமானதும் நீண்ட காலமாக நடப்பதாகவும் கருதப்படுகின்றது.

எங்கும் ஷி ஜின்பிங்
நடைமுறையில் சீனாவின் உச்ச அதிகாரமையம் Politburo Standing Committee ஆகும் இதில் தற்போது அதிபர் ஷி ஜின்பிங், தலைமை அமைச்சர் லி கெக்கியாங் உட்பட ஏழு பேர் உள்ளனர். மாவோ சே துங் அதிபராக இருந்தபோது தலைமை அமைச்சர் சூ என் லாயிற்கு கொடுத்த மரியாதை கூட ஷி ஜின்பிங்கிடமிருந்து லி கெக்கியாங்கிற்கு கொடுப்பதில்லை எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஷி ஜின்பிங் சீனாவில் அதிகாரம் மிக்கவராகக் காணப்படுகின்றார். ஷி துரிதமாக அதிகாரத்தை தன் வசப் படுத்தியது போல் வேறு எவரும் சீனாவில் செய்யவில்லை. அவரது தந்தைக்கு சீனப் பொதுவுடமைக் கட்சிக்குள் இருந்த செல்வாக்கும் அவருக்கு உதவியாக இருந்தது. கட்சி, படைத்துறை பொருளாதாரம், குடிசார் சமூக அமைப்பு என எல்லாவற்றிலும் தனது பிடிகளை அவர் இறுக்கிக் கொண்டிருக்கின்றார். பொருளாதார நிபுணரான லி கெக்கியாங்கை பொருளாதார விடயங்களில் கூட ஷி ஓரம் கட்டிவிடுகின்றார். முன்பு பொருளாதார விவகாரங்களை அரச சபையும் அதன் அமைச்சர்களுமே கையாண்டு கொண்டு வந்தனர். அந்த அதிகாரத்தை ஷி தனதாக்கிக் கொண்டார். 2012-ம் ஆண்டு அதிபராக வர முன்னரே சீனப் பொதுவுடமைக் கட்சியின் உச்சப் பதவியான பொதுச் செயலாளர் பதவியையும் படைத்துறையின் உச்சத் தளபதிப் பதவியையும் ஷி தனதாக்கிக் கொண்டார்.  கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் ஷி ஜின்பிங் தனது கொள்கைகளில் உறுதிப்பாட்டுடன் இருப்பதும் அவரது உள்நாட்டுச் செல்வாக்கை அதிகரிக்க உதவுகின்றது. உலக அரங்கில் சீனா எல்லாத் துறையிலும் முதன்மையான நாடாக இருக்க வேண்டும் எனச் சீனர்கள் விரும்புகின்றார்கள் என்பதை ஷி நன்கறிந்து வைத்துள்ளார். ஷியின் வெளிநாட்டுப் பயணங்களிற்கு சிகரமாக அமைந்தது அவரது பிரித்தானியப் பயணமாகும். பிரித்தானிய அரசியுடன் தங்கரததில் பவனி வந்தார் ஷி. 

ளைஞர் அணி
ஷி ஜின்பிங்கிற்கு எதிர்ப்புக் காட்டக் கூடிய ஒரு அமைப்பாசீப் பொதுவுமைக் கட்சியில் இளைஞர் பை இருக்கின்து. அதற்காநிதி ஒதுக்கீட்டை பெருவில் குறைந்து அதன் செயற்பாடுளை ஷி முடக்கியுள்ளார். 88 மில்லியன் உறுப்பினர்ளைக் கொண்ட இளைஞர் பையைச் சேர்ந்தோர் பொதுவுமைக் சியின் சார்பில் பேசுதற்கு டை செய்யப்பட்டுள்து. சீனப் பொதுவுமைக் சியின் முன்னாள் லைவர்ளின் பிள்ளைளை சக் குஞ்சுகள் (princelings) எசீனாவில் அழைப்பர். ஷியும் ஒரு இசக் குஞ்சுதான். ல இசக் குஞ்சுளின் வு ஷ்யிற்கு உண்டு. 

படைத்துறை
2016-ம் ஆண்டு ஜூலை மாதம் சீன மக்கள் படையின் கட்டளை கட்டுப்பாடு பணியகத்திற்குச் சென்ற ஷி ஜின்பிங் படைத்துறையினரி சீருடையை அணிந்து கொண்டு சென்றது பலரை ஆச்சரியப்பட வைத்தது. வழமையாக மாவோ சே துங் பாணியில் இளம் பச்சை நிற ஆடையுடனே எல்லா சீனத் தலைவர்களும் படையினரைச் சந்திக்கச் செல்வர். இந்த மரபை உடைத்ததன் மூலம் ஷி ஜின்பிங் படையிருக்கு நான் கட்சியை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்துபவன் மட்டுமல்ல உங்களில் ஒருவன் கூட என்ற செய்தியை சொல்ல முனைகின்றார் என்றார் அமெரிக்க உளவுத்திறையான சிஐஏயின் முன்னாள் உதவி இயக்குனரும் சீன மக்கள் படை தொடர்பான நிபுணத்துவம் பெற்றவருமான டெனிஸ் வைல்டர். ஷி ஜின்பிங் சீனப் படைத்துறையுன் உச்சத் தளபதியும் ஆவார். ஷி இற்கு முன்னர் இருந்த சீன அதிபர்களில் ஒருவர் மட்டுமே அந்தப் பதவியை வகித்தார். மாவோ சே துங் கூட உச்சத் தளபதி பதவியை வகிக்கவில்லை. சீன மக்கள் படையினரை படைத்துறைச் சீருடையுடன் சந்தித்ததன் மூலம் சீனப் படைத்துறையை ஷி ஜின்பிங் மறு சீரமைப்பதில் வெற்றி கண்டுள்ளார் என்பதையும் அவர் சீன மக்களுக்கும் உலகிற்கும் உணர்த்த முயல்கின்றார். ஊழலில் ஈடுபட்டதாக சீனப் படைத்துறையின் முன்னணித் தளபதிகளில் ஒருவரான ஷு கைஹௌ என்பவரை ஷி ஜின்பிங் கைது செய்திருந்தார். ஷு கைஹௌ தண்டிக்கப் படவில்லை ஆனால் புற்று நோய் மூலம் இறந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் இருந்த தமிழினிக்கு வந்த புற்றுநோய் மாதிரியானதா இது? சீன அதிபரின் படைத்துறைச் சீரமைப்பின் படி சீனப் படையினரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தால் குறைக்கப்படவிருக்கின்றது. சீனப் படைத் துறை தரைப்படை, கடற்படை, வான்படை, கேந்திரோபாய ஏவுகணைப் படை என நான்கு பிரிவுகளைக் கொண்டது. முன்னர் இவை படைத்துறை ஜெனரல்களைக் கொண்ட ஒரு திணைக்களத்தால் முகாமைப் படுத்தப்பட்டது. முன்னர் ஏழு பிராந்தியப் பிரிவுகள் இருந்தன. அதை ஷி நான்காகக் குறைத்துவிட்டார். தற்போது ஷி ஜின்பிங் அதை மாற்றி மையப் படைத்துறை ஆணையகத்தின் முகாமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மையக் கட்டுப்பாட்டு ஆணையகம் ஷியின் தலைமையில் இயங்குகின்றது. சீனாவின் பொதுவுடமைக் கட்சியில் உள்ள உட் குழுப் பிரிவுகளின் போட்டிகள் சீனப் படைத்துறைக்குள்ளும் ஊடுருவாமல் இருப்பதில் ஷி ஜின்பிங் அதிக கவனம் செலுத்தி அதை இல்லாமற் செய்ய முயல்கின்றார். ஷி ஜின்பிங்கிற்கு முன்னர் எந்த ஒரு சீன அதிபரும் சீனப் படைத்துறக்கும் பொதுவுடமைக் கட்சிக்கும் உள்ள தொடர்பைக் கட்டுப்படுத்தவோ அல்லது மறுசீரமைக்கவோ முயலவில்லை. கட்சி உறுப்பினர்கள் செய்யும் ஊழல்களை ஒழித்துக் கட்டுவதற்கு எதிராக ஷி ஜின்பிங் கடும் நடவடிக்கை எடுக்கின்றார். அதனால் ஊழல் செய்பவர்கள் படைத்துறையில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கு எதிராகப் படையினரைத் திருப்பக் கூடாது என்பதற்காகவே ஷி கட்சிக்கும் படைத்துறைக்கும் இடையிலான தொடர்பை கட்டுப்படுத்த முயல்கின்றார். சீனப் படைத்துறையின் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை (reporting structure) மாற்றியமைப்பதன் மூலம் சீனப் படைத்துறையை தனது இரும்புப் பிடிக்குள் கொண்டுவர ஷி ஜின்பிங் முயல்கின்றார். சீனாவைப் பொறுத்தவரை கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணிவேர் சீனப் படைத்துறையிடமே இருக்கின்றது. மொஸ்க்கோ பலகலைக்கழகமான உயர் பொருளியல் பாடசாலையின் சீனா தொடர்பான நிபுணரான வசிலி காஷிம் ஷி ஜின்பிங் கட்சியின் அதிகாரத்தின் அத்திவாரமாக சீனப் படைத்துறையை மாற்றுகின்றார் என்கின்றார்.

உலக அமைதிக்கு ஆபத்தா?
சீனப் படைத் துறை சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் ஆட்சியிலும் செலுத்தும் ஆதிக்கம் உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனச் சில படைத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனா கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் பெரும் முறுகல் நிலையைச் சந்தித்திருக்கும் வேளையிலும் பல நாடுகளில் சீனாவிற்கு சார்பான ஆட்சியாளர்களை ஐக்கிய அமெரிக்கா அகற்றும் வேளையிலும் சீனா ஒரு போருக்குத் தள்ளப்படும் ஆபத்து உண்டு என்கின்றார்கள் அவர்கள். 2030-ம் ஆண்டு சீனப் படைத்துறை அமெரிக்கப் படைத்துறையிலும் வலுமிக்கதாகவும் படை நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்யக் கூடியதாகவும் அமைய வேண்டும் என ஷி ஜின்பிங் திட்டமிட்டுள்ளார். சீனப் படைத்துறை தொழில்நுட்ப ரீதியில் பல விதங்களில் பிந்தங்கி உள்ளது என்பதை சீனப் படைத்துறையினரே ஒத்துக் கொண்டுள்ளனர். சீனப் படையினர் கடைசியாகப் புரிந்த போர் வியட்னாமிற்கு எதிராக 1979-ம் ஆண்டு நடந்தது. அதில் சீனப்படையின் செருப்பும் மென் தொப்பியும் அணிந்து கொண்டு சிவப்புக் கொடிகளை அசைப்பதன் மூலம் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தனர். களமுனை அனுபவம் இல்லாத சீனப் படையினர் ஒரு போர் என்று வரும் போது விமானம் தாங்கிக் கப்பல்களையும், ரடாருக்குப் புலப்படாத போர் விமானங்களையும் அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களையும் எதிர் கொள்ளும் அனுபவம் பெற இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும். தற்போது உள்ள நிலையில் ஜப்பானுடன் கூட ஒரு போர் செய்து சீனா ஒரு காத்திரமான வெற்றியை ஈட்டுமா என்பது ஐயத்திற்கு இடமானது. அப்படி ஒரு போரில் சீனா தோற்கும் போது அது சீனப் பொதுவுடமைக் கட்சியின் முடிவாகக் கூட அமையலாம். ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட 2008-ம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நடந்த பூமி அதிர்ச்சியின் போது சீனப் படையினர் செயற்பட்ட விதம் அவர்களது திறனற்ற தனமையை வெளிகாட்டியிருந்தது. தனது படையினருக்குப் பயிற்ச்சியளிப்பதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சீனா எந்த ஒரு நாட்டுடனாவது போர் புரிய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. அதன் மூலம் உலகம்  மட்டுமல்ல சீனாவும் கூட தனது படைத்துறையின வலுக்கள் வலுமின்மைகள் பற்றி உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கப் படையினர் தொடர்ந்து பல் வேறு நாடுகளில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் கொல்லப்படும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை சீனாவின் படையில் இருந்து தப்பி ஓடிச் சுட்டுக் கொல்லபடுபவர்களின் எண்ணிக்கையிலும் குறைவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சவால் மிக்க பாதை
எந்ததச் சீர்திருத்தமும் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். ஷி ஜின்பிங்கின் சீர்திருத்தமும் அப்படியே. அரசியல் விஞ்ஞானத்திற்கும் சட்டத்திற்குமான ஷாங்காய் பல்கலைக் கழகத்தின் கடற்படை நிபுணர் நீ லிக்சியாங் ஷியின் படைத்துறைச் சீர்திருத்தத்திற்கு படைக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புக்கள் உண்டு என்றார். அவர் அந்த எதிர்ப்பை திரிபுவாதத்திற்கு ஒப்பிட்டார். 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷி ஜின்பின்கிற்கு எதிராக சினப் பொதுவுடமைக் கட்சியின் இணையத்தளங்களில் சில கட்டுரைகளும் வெளிவந்தன. அதில் ஷி அதிகாரப் பசி மிக்கவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் கருத்து ஒரு எதிர்ப்பியக்கமாக வளரவில்லை. சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளராக ஷி இருப்பதால் அவரால் கட்சிக்குள் எழும் எதிர்ப்புக்களை இலகுவாக ஒழித்துக் கட்ட முடியும். மாவோ சே துங்கின் பின்னர் சீனாவில் அதிகாரம் மிக்க தலைவராக Deng Xiaopin இருந்தார். அதனால் அவரால் சீனாவில் பொருளாதார சீர்திருத்தத்தை ஆரம்பித்து வைக்கக் கூடியதாக இருந்தது. ஷி ஊழல் ஒழிப்பில் அதிக அக்கறை காட்டுகின்றார். சீனாவில் உருவாகிய மாபியாக் கும்பல்கள் காவற்துறையில் ஊழலை வளர்த்தது. அவர்கள் செய்யும் பாலியல் தொழிலுக்கும் போதைப் பொருள் விற்பனைக்கு காவற்துறையினரின் ஒத்துழைப்புத் தேவைப்பட்ட போது அவர்கள் பணத்தின் மூலம் காவற்துறயினரை விலைக்கு வாங்கினர். சீனாவின் பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையிலேயே ஊழல் ஆரம்பித்தது அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், சொத்துக்கள் காணிகள் விற்பனை செய்யும் போது பொதுவுடமைக் கட்சியினர் ஊழலில் ஈடுபட்டனர். அவர்கள் அரசு விற்பனை செய்பவற்றை தாமே குறைந்த விலை கொடுத்து வாங்கினர். முன்னாள் படைத்துறைத் தளபதி Zhou Yongkang நடுவண் படைத்துறை ஆணையகத்தின் அதிபராக இருந்த ஜெனரல் கௌ பொக்ஸியோங் போன்றோருக்கு எதிராகவும் ஷி துணிந்து அவர்கள் செய்த ஊழலுக்காக தண்டித்தார். இதனால் அவருக்குப் பல எதிரிகளும் உருவாகினார்கள். 2012-ம் ஆண்டு ஹிலரி கிளிண்டனை சந்திக்க ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஷி கலந்து கொள்ளவில்லை அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதியே அவர் கலந்து கொள்ளவில்லை என பிரித்தானியப் பத்திரிகையான தி இண்டிப்பெண்டற் செய்தி வெளியிட்டது. பின்னர் ஷி எதிராக புரட்ச்சிச் சதி நடப்பதாகக்கூட வதந்திகள் பரவின. ஷியின் சாப்பாட்டில் நஞ்சு கலக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் இருப்பதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டது.


பொருளாதாரமும் ஷி ஜின்பிங்கும்
2012- ம் ஆண்டு ஷி ஜின்பிங் பதவிக்கு வந்த போது 2008-ம் ஆண்டில் உலகில் உருவான பொருளாதாரப் பிரச்சனை சீனாவின் ஏற்றுமதியை பெரிதும் பாதித்துக் கொண்டிருந்தது. அதனால் ஷியின் தலைமையில் சீனா பல பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஷியின் தவறான கொள்கையோ அல்லது வழிநடத்தலோ சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்தமைக்குக் காரணம் அல்ல. சீனாவில் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கையில் சீனப் படைத்துறையில் மூன்று இலட்சம் பேர்களைக் குறைப்பது பல பொருளாதாரச் சவால்களையும் ஏற்படுத்தும். அதிபர் ஷி ஜின்பிங் படைத்துறைச் செலவைக் குறைக்கும் நோக்கத்துடனும் படைத்துறையின் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனுமே ஆட்குறைப்புத் திட்டத்தை முன்னெடுக்கின்றார்.  சீனாவின் பொருளாதாரம் 2008இன் பின்னர் ஏற்றுமதி குறைவதால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்ற போதிலும். சீனாவால் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். சீனக் கூட்டாண்மைகள் (corporations) ஆண்டு தோறும் மூன்று ரில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டுகின்றன. அதிலும் பல மடங்கு தொகையை சீன மக்கள் ஆண்டு தோறும் சேமிப்பதுடன் அவர்களது சேமிப்பு வளர்ச்சி ஆண்டுக்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டு போகின்றது. சீன அரசு சமுகப் பாதுகாபு நிதியம், அரசி நிதியம் (sovereign wealth) வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு ஆகியவற்றில் பல ரில்லியன் டொலர்களைக் கொண்டிருக்கின்றது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்த அரச நிதியங்களின் முதலீகள் இலாபகரமானதாகவே இருக்கின்றன. இதனால் சீன அரசு தனது பாதுகாப்புச் செலவைக் குறைக்க வேண்டிய எந்த நிர்பந்தத்திற்கும் முகம் கொடுக்கவில்லை. சீனப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்திலும் பார்க்க நான்கு மடங்கு கதியில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு அமெரிக்காவினதிலும் பார்க்க அதிகமானதாக வளரும். தற்போதைய படைத்துறை நிபுணர்களின் கருத்துப்படி Commanders win battles. Economies win wars. தளபதிகள் சண்டைகளில் வெல்வார்கள் பொருதாரங்கள் போரில் வெல்லும். சீனப் பொருளாதாரம் உலகில் மிகப் பெரியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமுண்டோ?


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...