Friday, 4 July 2014

ஜூலை ஐந்தின் முத்துக்களே

சிறு கூட்டுக் குருவிக்கும்
சிறகடிக்க ஆசை
ஒரு கூட்டுப் புழுவிற்கும்
சிறை உடைக்க ஆசை
எம் ஈழத் தமிழர்க்கும்
விடுதலை வேட்கை எனத்
திரியாகிக் கரியாகிப் போனீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே 

குண்டு மழையிடை 
கந்தகம் சந்தணமாக 
வெந்தகம் நீறாக 
தாயத்தாகம் தாரகமாக 
தாராள மனத்துடன் - நாம் 
பாராள வேண்டி நின்றீரே 
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே 

பெற்றவரைப் பிரிந்து
உற்றவரை மறந்து
மற்றவர் விடியலுக்காய்
கதிரோடு புதிரானீர்
உம் விதியை உம் கையிலெடுத்தீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

நன்னுடல் பொடிப்பட
செம்புலப் புயநீரென
செந்நீர் நிலம்புணர
பொன்னுடல் உருகிட
புகழுடல் பெற்றீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

படர் துயர் துடைக்க
இடர்கள் பல நீக்க
நெல்லியடியில் நேர்த்தியாய்
நேற்று நீர் அடித்தீர்
பெரும்படை தகர்த்தீர்
எதிரியின் நம்பிக்கை பொடியாக்கினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

நாடெங்கும் எதிரிகளஞ்சினர்
பாரெங்கும் பலரும் வியந்தனர்
வலுவிலா இனத்தின் விலாவானீர்
புது நிலை கொடுத்தீர் 
புது வகை வகுத்தீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

களமுனைச் சமநிலை சிதறடித்தீர் 
உடலால் ஊடறுத்தீர்
கடலால் வழி தடுத்தீர்
ஈழக்காதலால் இரையானீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

நங்கையர் கொங்கை அரியும்
கொடுங்கையர் சிரம் கொய்ய
தியாகத்தின் உச்சத்தில்
ஒளிரும் தீபமாகினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

படை நகர்த்தல் பல தடுத்தீர்
படைக்கலன்கள் பறித்தெடுத்தீர்
ஆழ்கடலில் நீள் கலனகள் மூழ்கடித்தீர்
மண் மீட்க மானம் காக்க இரையாகினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

விடுதலைக்கு எனக் கருவாகி
விடுதலை வேள்வியில் கரியாகி
விடு தமிழர் தலை என வித்தாகிப்
போன கருவேங்கைகளே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

ஆட்காட்டிக் குருவிகள் ஆங்கே
அதிகரித்துப் போனதனால்
சிட்டுக்குருவிகள் இங்கே
சுடலைக் குருவிகளாயின
ஞானியர் பொய்யுடன் என்றதைப்
பொய்யாக்கி உம்முடலை
மெய்யுடலாக்கி
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே

இன்னும் பகை ஒளியவில்லை
இன்னும் துயர் தீரவில்லை
மீண்டும் எம் மண் வருவீர்
கதிர் ஒளியோடு ஒன்றாக
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
மீண்டும் தாய் மண் வருவீர் வருவீர்

Sunday, 29 June 2014

அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Close-in Weapon Systems

ஃபேலாங்ஸ் சுடுகலன்களை இப்போது அமெரிக்கா தனது கடற்படைக்கு என உருவாக்கியுள்ளது. லேசர் கதிர்கள் மூலம் தாக்குதல் நடாத்தும் ஃபேலாங்ஸ் படைக்கலன்கள் அமெரிக்காவிற்கு சீனாவிற்கு இடையில் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் படைவலுப் போட்டியின் ஓர் அம்சமாகும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறை முந்தியவையாகும். அமெரிக்காவின் வலிமை மிக்க கடற்படையைச் சமாளிக்க சீனா பலவழிகளின் முயல்கின்றது.

முதலாவதாக சீனா தனது நீர்முழ்கிக் கப்பல்களை அதிநவினப்படுத்தி வருகின்றது. சீனாவின் நீர்முழ்கிக் கப்பல்களின் தரம் வலு ஆகியவை படு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது.

இரண்டாவதாக சீனா அமெரிக்கச் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி அமெரிக்கக் கடற்படையின் தொடர்பாடல்களை முடக்கக் கூடிய திறனைப் பெற்றுள்ளது. அத்துடன் இணையவெளியில் ஊடுருவி அமெரிக்கக் கடற்படையின் தொடர்பாடல்களை அழிக்கும் வலிமையும் சீனாவிடம் உண்டு.

மூன்றாவதாக நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டோர்ப்பீடோக் குண்டுகளை சீனா மேம்படுத்தி வருகின்றது.

நான்காவதாக அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களைத் தாக்கக் கூடிய ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றது. இவை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் எனப்படும்

இவற்றில் சீனாவின் நான்காவது ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடிய ஏவுகணைகள் அமெரிக்கக் கடற்படைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. சீனா தனது WU-14 எனப்படும் ஹைப்பர் சோனிக் என்னும் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சோதனை செய்து பார்த்தது.
சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதே வேளை அமெரிக்கா 2008-ம் ஆண்டின் பின்னர் தனது பொருளாதாரப் பிரச்சனைகளால் தன் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் தமது படையின் திறனை குறைந்த செலவில் அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்

சீனாவின் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய WU-14 ஏவுகணைகள் சீனா தனது கடற்படையை அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி உயர்த்தி விட்டதாக அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் பாதுகாப்புத் துறைக் குழு அறிவித்தது.

சீனாவின் WU-14  ஏவுகணைகளையும் லேசர் கதிர்கள் மூலம் தாக்கியழிக்கக் கூடியதாக அமெரிக்கா தனது Phalanx பாதுகாப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பாதுகாப்பு முறைமை Close-in weapon systems
அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமை என்று அழைக்கப்படுகின்றது.  இதைச் சுருக்கமாக CIWS என அழைக்கப்படுகின்றது.


லேசர் மூலம் அழிக்கும் முறைமை 

உயர் பகுதிறன் (high-resolution) கொண்ட தேடிக் கண்டு பிடிக்கும்
infra-red camera , விரைவு சுடுகலன் rapid-fire, கணனியால் இயங்கும் ரடார் , 20மில்லி மீட்டர் துப்பாக்கி முறைமை, லேசர் ஒளி பாய்ச்சி ஆகியவை அமெரிக்கா உருவாக்கியுள்ள Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமையின் முக்கிய அம்சங்களாகும்

அமெரிக்கக் கடற்படையின் மற்ற எல்லாப் பாதுகாப்பு முறைமைகளையும் முறியடித்துக் கொண்டு அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க வரும் ஒலியிலும் பார்க்கப் பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளையும் பறந்து வரும் விமானங்களையும் அமெரிக்கா தற்போது உருவாக்கும் Phalanx பாதுகாப்பு முறைமை தனது லேசர் கதிர்களால் கருக்கி அழிக்கும்.

Sunday, 22 June 2014

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் திருகுபடும் துருக்கி

துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது.  புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.

ஒரு இசுலாமிய நாடான துருக்கி மேற்கு நாடுகளுடன் இணைந்து மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினது உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. துருக்கி ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான தனது உறவை சமநிலையில் வைத்திருக்கப் பெரும் பாடு படுகின்றது. ஈரானியர்கள் விசா நடைமுறையின்றிப் பயணிக்கக் கூடிய ஒரே ஒரு நாடு துருக்கியாகும். இதைப் பயன்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் பிரதான தளமாக துருக்கியைப் பயன்படுத்துகிறது. சிஐஏயின் உளவாளி ஒருவர் துருக்கியின் இஸ்த்தான்புல் விமான நிலையத்தில் எட்டு ஈரானியப் போலிக் கடவுட்சீட்டுகளுடன் பிடிபட்டதன் பின்னர் அமெரிக்கா துருக்கியை ஈரானுக்கு எதிரான உளவு நடவடிக்கைத் தளமாகப் பயன்படுத்துவது அம்பலமாகியது. இது அமெரிக்க துருக்கி உறவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் சிரியாவின் பஷார் அல் அசாத்திற்கு எதிராக நேட்டோ கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கா துருக்கியை ஏமாற்றி விட்டது.


துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் பல முனைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றி அங்கு சுனி முசுலிம்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என துருக்கி விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா அசாத்தின் ஆட்சிக்கு மாற்றீடாக வரும் சுனி முசுலிம்களின் ஆட்சி ஒரு மதவாத ஆட்சியாக அமையும் என்றும் மற்ற இனக்குழுமங்களான அலவைற், குர்திஷ் ஆகிய இனங்களுக்கும் கிரிஸ்த்தவர்களுக்கும் எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் என்றும் அமெரிக்கா அஞ்சுகின்றது. துருக்கி சிரியக் கிளர்ச்சி இயங்கங்களில் தீவிர மதவாதப் போக்குடைய அல் நஸ்ராவிற்கு உதவி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை.

சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களிற்கு துருக்கி உதவி செய்வதால் சிரியப் படைகள் தம்மிடமுள்ள வலுமிக்க இரசிய ஏவுகணைகளால் துருக்கி மீது தாக்குதல் நடாத்தலாம் என்ற அச்சம் துருக்கிய மக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டுகின்றது. இதைத் தவிர்க்க துருக்கி சீனாவிடமிருந்து அதன் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நான்கு பில்லிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முற்பட்டது. இது அமெரிக்க படைக்கல விற்பனையாளர்களை ஆத்திரப்படுத்தியது. துருக்கிக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வழங்க அமெரிக்காவின் ரத்தியோன் (Raytheon) லொக்ஹீட் மார்டின் (Lockheed Martin) ஆகிய நிறுவனங்களும் பிரேஞ்சு இத்தாலிய கூட்டு நிறுவனமான யூரோசமும் (Eurosam), இரசியாவின் ரொசோபொரொன் ஆகிய நிறுவனங்கள் சீனாவின் Precision Machinery Export-Import Corporation நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தோற்றுவிட்டன. சீனாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமை மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மலிவாக இருக்கின்றது என்கின்றது துருக்கி. அமெரிக்கப் பாராளமன்றம் துருக்கிக்கு அமெரிக்கா வழங்கும் நிது உதவியை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே மற்ற நேட்டோ நாடுகள் பாவிக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமையுடன் துருக்கி சீனாவிடம் இருந்து வாங்க முயலும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையுடன் இணைக்கக் கூடாது என நேட்டோ நாடுகள் சொல்கின்றன. அப்படி இணைக்கும் போது சீனா நேட்டோ நாடுகளின் படைத்துறை இரகசியங்களை இணையவெளியூடாகத் திருடி விடும் என அவை அச்சம் வெளியிட்டுள்ளன. நேட்டோவின் பொதுச் செயலர் நேட்டோவின் உறுப்பு நாடுகள் பாவிக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படக் கூடியவையாக இருத்தல் அவசியம் எனச் சொல்லியுள்ளார்.

சீனாவில் வாழும் துருக்கிய வம்சாவழியினரும் சீனர்களும் மோதல்
2014-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் தீவிரவாதிகள் இரு பார ஊர்திகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு கைக்குண்டுகளை வீசிக்கொண்டு போய் பொதுமக்கள் நிரம்பிய மரக்கறிச் சந்தையில் மோதி 31 பேரைக் கொன்றனர். இது நடந்தது சீனாவின் உறும்கி நகரிலாகும். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக் கூடாது, மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழங்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.

தீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும்  சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட  முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.

சீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்கப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.

2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான  காரணங்கள்:
1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது.  2.  உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது.  3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது ம். 4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள். இவற்றுடன் இன்னும் ஒரு உலக அரசியல்-வர்த்தகக் காரணமும் உண்டு.

சீனாவில் துருக்கியரக்ளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக துருக்கியில் பரப்புரை செய்யப்பட்டு துருக்கி சீனாவுடனான வர்த்தகத்தைத் துண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இது சீனாவில் நடக்கும் சீனர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையிலான மோதல் வெளியில் இருந்து தூண்டப்படுகின்றதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்புரிமை கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றது. இதானால் துருக்கி பிரேசில், இரசியா, சீனா, இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான பிரிக்ஸில் இணைவது பற்றி ஆலோசித்து வருகின்றது. அத்துடன துருக்கி சீனா, இரசியா, கஜகஸ்த்தான், கிர்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெஸ்கித்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாகவும் ஆலோசிக்கின்றது.

ஏற்கனவே மெக்சிக்கோ, இந்தோனேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடன் துருக்கியும் இணைந்து மின்ற்(MINT) என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. சீனா ஈரானையும் துருக்கியையும் தன்னுடன் இணைத்து ஒரு மத்திய தரைக்கடல் சுழற்ச்சி மையத்தை உருவாக்க முயல்கின்றது.
இப்படிப்பட்ட உலக அரசியல், பொருளாதார, படைத்துறைக் காரணிகள் அண்மைக்காலங்களாக துருக்கி அரசுக்கு எதிராக ஒரு மக்கள் கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்ற ஆண்டு துருக்கிய ஆட்சியாளர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டன. சீனாவுடன் துருக்கியின் உறவும் வர்த்தகமும் வளர துருக்கியில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளும் வளரும்.

டோ(ர்)ப்பீடோ (Torpedo)என்னும் தன்னுந்துக் குண்டுகள்

டோ(ர்)ப்பீடோ என்னும் தன்னுந்துக் குண்டுகள் நீருக்கடியில் எதிரி இலக்குகள் மீது வீசப்படுபவை. இவை நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் கடற்படைக்கப்பலில் இருந்தும் குண்டு வீச்சு விமானங்களில் இருந்து நீரில் அல்லது நீருக்குள் இருக்கும் இலக்குகள் மீது ஏவப்படும் குண்டுகளாகும். பொதுவாக நீருக்கடியில் 2,500 அடிகள் அதாவது  760 மீற்றர் ஆழத்தில் மணிக்கு நாற்பது முதல் ஐம்பது கடல் மைல்கள் வேகத்தில் இயங்கக் கூடியவை. இவற்றின் தாக்கு தூரம் ஒரு மைல் முதல் பத்து மைல்கள்வரையானதாகும். டோ(ர்)ப்பீடோ என்னும் பெயர் ஒருவகை மீனினத்தின் பெயரில் இருந்து வந்தது. டோ(ர்)ப்பீடோ என்னும் மீனினங்கள் ஆபிரிக்காவின் மேற்கு மற்றும் வடக்குக் கரையோரக் கடலில் வாழும் ஒருவகை மீனாகும். இவை மின்சாரம் பாய்ச்சக் கூடியவை. டோ(ர்)ப்பீடோவின் எடையை ஒட்டி heavy weight என்றும் light weightஎன்றும் இரு வகைப்படுத்தப்படும்.

பொதுவாக ஏவுகணைகள்  rocket engines அல்லது  jet engines இலில் வேலை செய்ய்யும். ஆனால் நீருக்கடியில் இவை இரண்டும் வேலை செய்யாது. இதனால்  டோ(ர்)ப்பீடோக்கள் வேறு இருவகையான முறையில் இயக்கப்படுகின்றன:

1. Batteries and an electric motor மூலமாக இயங்கச் செய்யப்படும். இவை இலகுவாக இயக்கக் கூடியன.
2.  சிறப்பு வகையான எரிபொருள் மூலம் இயங்கச் செய்யப்படும். கார்களில் இயங்கு இயந்திரங்கள் சூழலில் இருக்கும் காற்றில் இருந்து ஒட்சிசனை எடுத்து எரியச் செய்து இயங்கும் ஆனால் நீருக்கடியில் இது சாத்தியமில்லை. இதனால் சிறப்பு வகை எரிபொருளான OTTO fuel

டோ(ர்)ப்பீடோ என்னும் தன்னுந்துக் குண்டுகளில் வெடிபொருட்கள், வெடிக்கவைக்கும் முறைமைகள், வழிகாட்டி முறைமைகள், உந்துகை முறைமை ஆகியவை உள்ளன. பொதுவாக இவற்றின் வெடிக்க வைக்கும் முறைமை இலக்கில் மோதும் போது செயற்படும். இவற்றின் வழிகாட்டு முறைமை இவை தாக்கும் கப்பலில் அல்லது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வரும் ஒலிஅலையை அடிப்படையாக வைத்துச் செயற்படும். அமுக்கிய காற்றில் இருந்து அதாவது Compressed air இன் மூலம் டோ(ர்)ப்பீடோ முதலில் உந்தப் படும் பின்னர் அவை தமது உந்து முறைமையாலும் வழிகாட்டு முறைமையாலும் இலக்கை நோக்கிப் பாயும்.

 டோ(ர்)ப்பீடோவில் பலவகைகள் உண்டு.

Black Shark Torpedo
Black Shark Torpedo அதாவது கரும் சுறா Torpedo 2004-ம் ஆண்டு இத்தாலியில் உருவாக்கப்பட்டவை இவை. 21 அங்குல குறுக்கு விட்டமும்  21 அடி நீளமுமானவை. இவை மணிக்கு ஐம்பது கடல் மைல்கள் வேகத்தில் ஐம்பது மைல்கள் தூரம் பாயக் கூடியவை. இவை நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கப்பல்களையும்  நீர் மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்க வல்லவை. இவை heavyweight வகையைச் சார்ந்தவை.


F21 Heavyweight Torpedo
F21 Heavyweight Torpedo அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவையாகும். இவையும் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து செலுத்தப்பட்டு கப்பல்களையும்  நீர் மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்க வல்லவை. F21 Heavyweight Torpedo பத்து மீற்றரில் இருந்து ஐநூறு மீரற்றர் ஆழத்தில் செயற்படக் கூடியவை. silver oxide-aluminium பட்டரிகள் இவற்றில்  பாவிக்கப்படுகின்றது.  இவை அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்க

Spearfish Heavyweight Torpedo
Spearfish Heavyweight Torpedo பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டவை. இவை ஆழ்கடலில் மட்டுமல்ல கடற்கரை ஓரங்களிலும் தாக்குதல் நடாத்தக் கூடியவை. இவை திரவ எரிபொருளைப்பாவித்து gas turbine engineமூலம் இயக்கப்படும். அத்துடன் முன்னூறு கிலோ எடையுள்ள Aluminised PBX  வெடிபொருளைக் கொண்டிருக்கும். Heavyweight Torpedoவகையான Torpedoகளில் இவை வலுக்கூடியவையாகக் கருதப்படுகின்றது.

Torpedo 62 (Torpedo 2000)
Torpedo 62 ஐ சுவீடன் நாடு ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்கின்றது. இவை அணுக்குண்டுகளளயும் தாங்கிச் செல்லக் கூடிய்வை. எந்த வகையான கடற்படைக்கப்பல்களுக்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கும் எதிராக இவற்றால் தாக்குதல் செய்ய முடியும். நீருக்குக்கிழ் 500 மீற்றர் ஆழத்தில் இருந்து இவற்றைச் செலுத்த முடியும். heavy weigh வகையைச் சார்ந்த இவற்றின் எடை 1450கிலோவாகும்.


SeaHake mod 4
ஜேர்மனியத் தயாரிப்பான் SeaHake mod 4 டோ(ர்)ப்பீடோக்களும் heavyweight வகையைச் சார்ந்தவை. நீருக்கடியில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குவதற்காக fibre optic wire guidance என்னும் வழிகாட்டல் முறைமையை இவை கொண்டிருக்கின்றன. இவை 255 கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. மணிக்கு ஐம்பது கடல்மைல் வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றின் பாய்ச்சல் தூரம் 50 கிலோ மீற்றர்களாகும்.

VA-111 Shkval
இரசியத் தயாரிப்பான VA-111 Shkval  டோ(ர்)பீடோக்கள் 21 அங்குல குறுக்கு விட்டமும் 27 அடி நீளமுமானவை. இவற்றின் எடை 2700 கிலோ ஆகும். இது மற்ற நாட்டு டோ(ர்)பீடோக்களின் எடையுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும். இவை அணுக்குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இவை தமது வழிகாட்டலுக்கு நான்கு செதில்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். வாயுக் குமிழிகளை வெளியே தள்ளிக் கொண்டு பயணிக்கும் இவற்றின் வேகம் மற்ற நேட்டோ நாடுகளின் டோ(ர்)பீடோக்களின் வேகங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமானதாகும்.

MU90/Impact என்பதும்A244/S Mod 3 என்பதும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்த் உருவாக்கிய light weight டோ(ர்)பீடோக்கள்ஆகும். அமெரிக்ககவின் light weight டோ(ர்)பீடோக்கள் MK 54 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Saturday, 14 June 2014

சதி வலைக்குள் அகப்பட்ட ஈராக் மூன்றாகப் பிளவு படுமா?

மத்திய கிழக்கில் லிபியாவின் மும்மர் கடாஃபி ஈராக்கின் சதாக் ஹுசேய்ன் என இரு பெரும் தலைவர்கள் இருந்தார்கள். இருவரும் மதசார்பற்ற ஆட்சியை நடாத்தினார்கள். கடாஃபி தனது நாட்டில் பலகலைக்கழகம் வரை இலவச கல்வியை வழங்கினார்.சதாம் கட்டாய இலவசக் கல்வியை வழங்கினார். கடாஃபி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். சதாம் நாடெங்கும் மின் விநியோகத்தை இலகுவாக்கினார். பல் வேறு இனக் குழுமங்களைக் கொண்ட லிபியாவில் இன மோதல்கள் இன்றி கடாஃபி ஆட்சி செய்தார். சியா மற்றும் சுனி முசுலிம்களிடையே மோதல் இல்லாமல் சதாம் ஆட்சி செய்தார்.

ஈராக் பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: ஈராக்

சதாமும் கடாஃபியும் அடக்குமுறை ஆட்சியாளர்களாகவே இருந்தார்கள். இதற்குக் காரணம் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்கள் அவர்களது ஆட்சிகளைக் கவிழ்க்க தொடர்ந்து சதி செய்து கொண்டே இருந்தனர். சதாம் குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவர முயன்றார். அதை அவர் படைவலு மூலம் சாதிக்க முற்பட்டார். கடாஃபி மற்ற நாடுகளுடன் இணைந்து ஒரு ஐக்கிய ஆபிரிக்க்க அரசை உருவாக்க முற்பட்டார். சதாம் மசகு எண்ணெய் விலையை அமெரிக்க டொலரில் நிர்ணயிப்பதை நிறுத்தி யூரோவில் நிர்ணயிக்க வேண்டும் என்றார். கடாஃபி  ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலையை இத்தனை கிராம் தங்கம் என நிர்ணயிக்க வேண்டும் என்றார். அமெரிக்க டொலருக்கு எதிராக செயற்பட்ட இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டனர். ஈராக்கில் அமெரிக்கா படை எடுத்தது. சதாம் ஹுசேய்ன் நீதி விசாரணை செய்து தூக்க்கில் இடப்பட்டார். லிபியாவில் நேட்டோப் படைகள் குண்டு மாரி பொழிந்தன. மும்மர் கடாஃபி தப்பி ஓடுகையில் நீதிக்குப் புறம்பான முறையில் கொல்லப்பட்டார்.

ஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு "மக்களாட்சியை" உருவாக்கினர். ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருக்கின்றார். ஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது. ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria    என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். இது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள பிரதேசங்களை இணைத்து ஒரு இசுலாமிய அரசை உருவாக்க வேண்டும் எனப் போராடுகின்றது. இது திடீரென ஈராக்கின் வட பிராந்தியத்தில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறிவருவது முழு உலகத்தையுமே ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது சில கணிப்பீடுகள் பத்தாயிரம் என்கின்றன. தம்மிலும் பார்க்க பத்து மடங்கு அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஈராக்கின் அரச படைகளை சின்னா பின்னப்படுத்தி வருகின்றன.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வளமிக்க கேர்குக் நகரத்தை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றிக் கொண்டது. குர்திஷ் மக்களின் தலைவர் மஸ்ஸோட் பர்ஜானி குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு அரசு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார்.

ஈராக்கில்  சுனி முசுலிம்களுக்கு என ஒரு அரசு, சியா முசுலிம்களுக்கு என ஒரு அரசு, குர்திஷ்களுக்கு என ஒரு அரசு என மூன்றாகப் பிளவு படும் ஆபத்து இப்போது அதிகரித்துள்ளது. இதில் சுனி முசுலிம்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், சியா முசுலிம்களுக்கு ஆதரவாக ஈரானும், குர்திஷ் மக்களுக்கு துருக்கியும் ஆதரவாகச் செயற்படுகின்றன. பலகாலமாக குர்திஷ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்து வந்த துருக்கி இப்போது அவர்களுடன் நல் உறவை வளர்த்து வருகின்றது. ஈராக்கில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு அரசு உருவானால் அது துருக்கியின் நட்பு நாடாக அமைவதுடன் துருக்கிக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் அமையும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. குர்திஷ் மக்களுக்கு துருக்கியின் ஆதரவிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள துருக்கியத் துணைட் தூதுவரகத்தில் பணி புரிந்த 80 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்தமைக்கும் தொடர்பு உண்டு.

ஈராக் துண்டுபடும் நிலை ஏற்பட்டால் அங்கு ஒரு உறுதியான குர்திஷ் அரசு அமைய வேண்டும் என்பது துருக்கியின் விருப்பமாக உள்ளது.

ஈராக்கில் வைத்து ஈரானுக்கு ஒரு பாடம் புகட்ட சவுதி அரேபியா முயல்கிறது. ஈராக்கின் தற்போதைய சியா முசுலிம்களின் ஆட்சியைப் பாதுகாக்க ஈரான் பலவழிகளில் முயல்கின்றது. சியா முசுலிம்களின் தலைமையில் ஒரு உறுதியான ஆட்சி இருந்தால்தான் எரிபொருள் உறபத்தி சீராக நடக்கும் என அமெரிக்கா நினைக்கிறது. ஈராக்கில் பரம வைரிகளான அமெரிக்காவும் ஈரானும் இணைந்து செயற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான தனது விருப்பத்தை ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். ஆனால் சிரியாவிலும் லெபனானிலும் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு ஆதிக்கம் செலுத்துவதுடன் ஈராக்கில் ஈரானின் குடியரசுக் காவற்படையினரில் ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்காவை சற்று உறுத்தவும் செய்கின்றது. வெளி உதவியின்றி ஈராக்கின் சியா அரசு நிலைக்காது. ஈரானும் அமெரிக்காவும் ஒத்துழைத்தால் சவுதி அரேபிய அமெரிக்க உறவு மேலும் மோசமடையலாம். ஏற்கனவே சிரிய விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகு முறையில் சவுதி கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் ஈராக்கில் மூன்று அரசுகள் உருவாகும் சாத்தியம் அதிகமாகின்றது.

ஈராக்கின் தற்போதைய பிரச்சனையில் ஒரு சதிக் கோட்பாடும் இருக்கின்றது. ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் போது ஒரு பத்தாயிரம் படைகளையாவது வைத்திருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. ஆனால் ஈரானின் ஆட்சேபனையால் அது கைவிடப்பட்டது. அதன் விளைவாகத்தான் இப்போது ஈராக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்கின்றன அமெரிக்க சார்பு ஊடகங்கள். இது ஆப்கானிஸ்த்தானில் பெருமளவு அமெரிக்கப்படையினர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை ஆப்கானிஸ்த்தானியர்களுக்கு உணர்த்தவா?

Thursday, 12 June 2014

ஈராக்கில் அமெரிக்காவின் முகத்தில் கரி பூசப்படுகின்றது.

மத சார்பற்ற அரசு, நாட்டில் நல்ல சட்டமும் ஒழுங்கும், சீரான நீர் விநியோகம், மலிவு விலையில் மின் விநியோகம் இப்படி சதாம் ஹுசேய்னின் கீழ் இருந்த ஈராக்கில் பேரழிவு விளைவிக்கும் வேதியியல் படைக் கலன்கள் இருக்கிறது எனச் சொன்னது அமெரிக்கா. பின்னர் நேட்டோப்படைகளுடன் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு பேரழிவை விளைவித்தது. இப்போது ஈராக் பெரும் உள்நாட்டுப் போரில் அகப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலேயே கிறிஸ்த்தவர் ஒருவரை அமைச்சராகக் கொண்ட ஆட்சி சதாம் ஹுசேயினுடையதாக இருந்தது.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் பல பில்லியன்கள் செலவழித்து பயிற்ச்சி கொடுத்த ஈராக்கிய அரச படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளைக் கண்டதும் தமது சீருடைகளைக் களைந்து குடிமக்கள் ஆடைகளை அணிந்து கொண்டு தமது படைக்கலன்களையும் கைவிட்டு புகை பிடித்த எலிகளைப் போல் தலை தெறிக்க ஓடுகின்றனர்.    ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசலை 1300 போராளிகள் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கைப்பற்றினர். அத்துடன் அவர்கள் திக்கிரி நகரையும் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் மாகாண அரசக் கட்டிடம், காவற்துறைத் தலைமைச் செயலகம், பன்னாட்டு விமான நிலையம், இரு தொலைக்காட்சி நிலையங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன் சிறைகளை உடைத்து அங்கிருந்த தமது போராளிகளையும் விடுவித்தனர். மேலும் அவர்கள் மோசுல் நகரில் இருந்த துருக்கியின் துணைத் தூதுவரகத்தைக் கைப்பற்றி அங்கிருந்து மூன்று பிள்ளைகள் உட்பட 80 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். ஐந்து இலட்சம் பேர் ஒரு நாளில் இடப்பெயர்வுக்கு உள்ளாகினார்கள். பிஜி நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் மின் உற்பத்தி நிலையத்தையும் அவர்கள் தம் வசமாக்கினார்கள். 

 ஐ.எஸ்.ஐ.எஸ் இன் கட்டுப்பாட்டில் இப்போது சிரியாவின் அலெப்பே நகரின் வடக்கில் இருந்து பாக்தாத்தின் கிழக்கே உள்ள ஃபல்லுஜா நகரம் வரை ஒரு பெரும் நிலப்பரப்பு இருக்கின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கல் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria    என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறும் போது ஒரு தொகைப் படையினரை அங்கு வைத்திருக்க விரும்பியது. அப்படைகள் செய்யும் குற்றங்களை அமெரிக்கச் சட்டப்படி விசாரிப்பதா அல்லது ஈராக்கிய சட்டப்படி விசாரிப்பதா என்ற இழுபறி ஈராக்கிய அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இருந்ததால் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறின. இந்த அமைப்பை  Islamic State of Iraq and the Levant என்றும் அழைப்பர். மற்ற இசுலாமியப் போராளி அமைப்புக்கள் சிரியாவில் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடிக் கொண்டிருக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தனக்கு என ஒரு நாட்டை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றது.     அல் கெய்தாவின் விருப்பமும் அதுவே. ஐ.எஸ்.ஐ.எஸ் அல் கெய்தாவின் ஒரு இணை இயக்கமாக இருந்தது. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் செய்த சகோதரக் கொலைகளால் அல் கெய்தா அதிருப்தி அடைந்து தனக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கும் தொடர்பு இப்போது இல்லை என 2014-ம் ஆண்டு ஜனவரியில் அறிவித்தது.  துருக்கி ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றி வைத்துள்ள தனது நாட்டுக் குடிமக்களுக்கு ஏதாவது பாதகம் நடந்தால் ஐ.எஸ்.ஐ.எஸ்  மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என மிரட்டுகிறது. நேட்டோவின் ஓர் உறுப்பு நாடான துருக்கி நேட்டோவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.  அமெரிக்காவின் உதவியை ஈராக் கோரியுள்ளது. அமெரிக்கா மீண்டும் படைத்துறை ரீதியாகத் தலையிடாமல் ஈராக்கை ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து காப்பாற்ற முடியாது. 

ஈராக்கை ஆட்சி செய்யும் சியா முசுலிமான நௌரி மலிக்கி சுனி முசுலிம்களின் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது கூட வன் முறையைக் கட்டவிழ்த்து விடுவார். தேசிய எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை சுனி முசுலிம்களுடன் பகிர்ந்து கொள்வதில்லைபல முக்கிய சுனி முசுலிம் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் ஒரு ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்துகிறார். இதானால் சுனி முசுலிம்களுக்கு ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியை ஐ.எஸ்.ஐ.எஸ் சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருகின்றது. ஈராக்கியப் படையினரின் பதவி உயர்வுகள் சரியான முறையில் த்குதி அடிப்படையில் மேற்கொள்ளாமல் அரசியல் அடிப்படையில் மேற் கொண்ட படியால் அரச படையினரிடையே பெரும் குழப்பம் நிலவுகின்றது. அவர்களின் மனோ நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு சியா முசுலிம் நாடான ஈரானின் ஆதரவு உண்டு. ஆனால் ஈரானிற்கு இப்போது பொருளாதாரத் தடையில் இருந்து சற்று ஆறுதல் பெற துருக்கியின் நட்பு பெரிதும் தேவைப்படுகின்றது. இதனால் ஈரானின் நிலை ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு போன்றதாகும். 
நேட்டோப் படைகள் மீண்டும் ஈராக்கில் கால் பதிக்க மாட்டா. இதனால் ஈராக்கில் நிலைமை சிரியாவிலும் மோசமாகலாம். 


Monday, 9 June 2014

எகிப்தில் தேர்தல் மூலம் படைத்துறை ஆட்சி!



எகிப்தில் முதற்தடைவையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்வு செய்யப்பட்ட அதிபர் முஹமட் மேர்சியைப் 2013 ஜூலை முதலாம் திகதி பதவியில் இருந்து தூக்கி எறிந்த எகிப்தியப் படைத் துறைத் தலைவர் அப்துல் ஃபட்டா அல் சிசி ஒரு தேர்தல் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படையினரின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டும் என எகிப்திய இளைஞர்கள் செய்த அரபு வசந்தம் என்னும் புரட்சி தடம் மாறிப் போய்விட்டது.

2011-
ம் ஆண்டு உருவான எகிப்தியப் புரட்சியின் பின்னணி.

1.
ஏப்ரல்-6 இயக்கம்(April 6 Movement)
அல் மஹால்லா அல் குப்ரா என்னும் எகிப்திய நகரில் 2008 ஏப்ரில் 6-ம் திகதி அங்குள்ள தொழிற்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது “ஏப்ரல் 6 இயக்கம்” என்னும் பேஸ்புக் குழு. ஏப்ரல் 6-ம் திகதி சகல ஊழியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த இயக்கம். இதன் ஆரம்பகர்த்தாக்கள் அஹ்மட் மஹேர், அஸ்மா மஹ்ஃபவுஸ், இஸ்ரா அப்துல் பட்டா ஆகியோர்கள். அஹ்மட் மஹேர் 2009இல் வேறு பதினாறு பேருடன் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவு இணையத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்த இயக்கத்திற்கு ஆதரவு பல்கிப் பெருகி இலட்சக்கணக்கன இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டனர். பெரும்பாலானோர் 20இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடைய படித்தவர்களே. மதசார்பற்ற இந்த இயக்கத்தினரே ஹஸ்னி முபராக்கை பதவியில் இருந்து விலக்கும் மக்கள் எழுச்சியை ஆரம்பித்தனர். ஏப்ரல் 6 இயக்கத்தைப் போலவே பல இயக்கங்கள் முபராக்கிற்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டிருந்தன. பல அமைப்புக்களின் கூட்டணியே முபராக்கை விரட்டியது.

2.
அஸ்மா மஹ்பூஸ் என்னும் ஒரு இளம் பெண்
அஸ்மா மஹ்பூஸ் என்னும் ஒரு இளம் பெண் முகப்புத்தகம் மூலம் இளைஞர் போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தாள் . ஆரம்பத்தில் அதிக ஆரவாரம் இல்லை. ஆனால் அவள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டபின் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஏப்ரல்-6 இயக்கமும் இணைந்து கொண்டது. எகிப்தின் சகல தரப்பினரும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளத் தொடங்கினர் எகிப்திய இளைஞர்கள் முபராக் ஆட்சியின் கொடூரம் சம்பந்தப்பட்ட படங்கள் காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து பகிரங்கப்படுத்தினர். வால் கொனிம் எகிப்திய எழுச்சி ஏற்பாட்டாளர் சமூக வலைத்தளங்கள் இருந்திருக்காவிடில் இந்த எழுச்சித் தீ மூட்டப்பட்டிருக்கது என்கிறார். facebook.com/ElShaheeed என்ற முகப்புத்தகப் பக்கத்திற்கு ஒரு சில வாரங்களில் எட்டு இலட்சம் இரசிகர்கள் திரண்டார்கள். எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தங்கள் எழுச்சிக்கான நாளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர். ஜனவரி 25-ம் திகதி எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்படும் எகிப்தியக் காவல்துறையினரின் விழாவிற்கான பொது விடுமுறை நாள். அதை எழுச்சியாளர்கள் தமது எழுச்சியின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தனர். முப்பது ஆண்டுகளாக மக்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்படும் நாளாக அது அமைந்தது. எகிப்தின் எழுச்சியாளர்கள் எகிப்திய படைத்துறையினருடன் நல்ல உறவை வளர்ப்பதில் மிகக் கவனமாகச் செய்ற்பட்டனர். நீங்களும் மக்களும் ஒன்றே என்ற அடிப்படையில் அவர்கள் படைத்துறையினருடன் நடந்து கொண்டனர்பின்னர் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு களமிறங்கியது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு அலெக்சாண்ட்ரியா போன்ற நைல் நதிக் கரையோர நகரங்களின் தெருக்களில் தனது ஆதரவாளர்களை இறக்கிப் போராட வைத்தது. இளைஞர்கள் புரட்சி ஆர்ப்பாட்டம் செய்யும் போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் முக்கிய தலவர்களுள் ஒருவரான மொஹமட் மேசி சிறையை உடைத்துக் கொண்டு தப்பினார். இதுவே அவருக்குப் பெரும் பிரச்சனையாக பின்னர் அமைந்தது

3.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. இது  எகிப்தில் செயற்பட்ட ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்னர் தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதினர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு இருந்த மிகப்பரவலான ஆதரவு இருந்தபடியால் அது இளைஞர்களினபோராட்டத்துடன் இணைந்தவுடன் ஹஸ்னி முபராக்கின் படைத்துறை ஆட்சி ஆட்டம் கண்டது.

4.
விட்டுக் கொடுத்த அமெரிக்கா.
லிபியாவில் அரபு வசந்தம் பெரும் உள்நாட்டுப் போராக மாறியிருந்த போது எகிப்தில் பெரும் உயிரிழப்பின்றி புரட்சி வெற்றி பெற்றது. அமெரிக்காவின் எகிப்தியப் பிடியான எகிப்தியப் படைத்துறை கவனமாகக் காய்களை நகர்த்தி தன் இருப்பை உறுதி செய்து கொண்டது. ஹஸ்னி முபராக்கை பதவி விலகச் செய்தது. எழுச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஆலோசனைப்படி நியமிக்கப்பட்ட துணைத் தலைவர் ஒமர் சுலைமான் ஒரு முபாரக் கையாளே. அவருடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி ஹிலரி கிளிண்டன் எகிப்திய மக்களைக் கேட்டுக் கொண்டார். அது எகிப்திய மக்களை ஆத்திரபடுத்தியது. ஒமர் சுலைமான் சாட்டுக்கு சில அரச ஒட்டுக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நாடாத்தினார். ஒமர் சுலைமான் எகிப்திய மக்கள் மக்களாட்சிக்குத் தயாரில்லை என்று கூறிக்கொண்டார். மக்கள் ஆத்திரம் இன்னும் அதிகமானது. அமெரிக்கா சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது. அரசியலமைப்பு இரத்துச் செய்யப்பட்டது. பாராளமன்றம் கலைக்கப்பட்டது. உச்ச படைத்துறைச் சபை (Supreme Military Council)  பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் கொண்டு வரப்பட்டது. தரிக் அல் பிஸ்ரி என்னும் கல்விமான் தலைமையில் அமைக்கப் பட்ட குழு புதிய அரசியல் அமைப்பை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தன்னை முன்னிலைப்படுத்திய மொஹமட் மேர்சி விரட்டப்பட்டார்.
புரட்சி செய்த இளைஞர்களிடம் ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லாமையினால் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு 2011-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளமன்றத் தேர்தலிலும் 2012 ஜூனில் நடந்த அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றது. மொஹமட் மேர்சி எகிப்திய அதிபரானார். அவர் தன்னை முன்னிலைப்படுத்தியும் இசுலாமிய ஷரியாச் சட்டப்படி நாட்டை நடத்தவும் முனைந்தார். தனது அதிகாரத்தை அதிகப்படுத்தும் படி சட்டங்களை பிரகடனப்படுத்தினார். ஒரு மத பக்தரான அப்துல் ஃபட்டா அல் சிசியைப்  படைத் துறை அதிபராக்கினார். 2012 நவம்பரில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது மேர்சி நாட்டை மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றார் என உணர்ந்த இளைஞர்கள் மீண்டும் 2013 ஜூன் மாதம் மேர்சியின் முதலாம் ஆண்டு நிறைவின் போது கிளர்ந்து எழுந்தனர். மேர்சியால் நியமிக்கப்பட்ட படைத் துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி  மேர்சியை பதவியில் இருந்து விலக்கிச் சிறையில் அடைத்தார். சிறை உடைப்பும் அவருக்கு எதிரான ஒரு குற்றச் சாட்டாகும்.

மொஹமட் மேர்சிக்குப் பின்னர் இடைக்கால அதிபராக அட்லி மன்சூர் படைத்துறையினரால் நியமிக்கப்பட்டார். இசுலாமிய சகோதரத்து அமைப்பினர் வேட்டையாடப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். 2013 செப்டம்பரில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தடைசெய்யப்பட்டது. ஒரே நாளில் எழுநூறு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினருக்கு எதிராக "நீதி விசாரணை" செய்யப்பட்டு இறப்புத் தண்டனை விதிக்கப்பட்டது. படைத் துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி 2014 ஜனவரியில் ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.

எகிப்திற்கு புதிய அரசமைப்புச் சட்டப்படி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்த அப்துல் ஃபட்டா அல் சிசி தானே அதிபர் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். மே 26, 27,28 திகதிகளில் தேர்தல் நடந்தது. அவருக்கு எதிரானவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் படி வேண்டுதல் விடுத்தனர். 2012 ஜூனில் மேர்சி வெற்றி பெற்ற தேர்தலில் வாக்காளர்களில் 52விழுக்காட்டினர் வாக்களித்தனர். அதிலும் அதிகமானவர்களை வாக்களிக்கச் செய்ய சிசி பலத்த முயற்ச்சி செய்தார். இரண்டுதடவைகள் தேர்தல் இறுதி நேரம் நீடிக்கப்பட்டு ஒரு நாளில் முடிவடைய வேண்டிய தேர்தல் மூன்று  நாட்கள் நடந்தன. வாக்காளரக்ளில் 47.5 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் சிசி வாக்களித்தவர்களில் 96 விழுக்காட்டினருக்கு அதிகமானவர்களின் வாக்குகளைப் பெற்றார். ஆனால் சிசிக்கு எதிரானவர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடந்தன என்றும் வாக்களித்தவர்களின் தொகை மிகைப்படுத்தப்பட்டவை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

2014-
ம் ஆண்டு உருவாக்கப் பட்ட அரசியலமைப்பின் படி இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு எகிப்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எகிப்த்தின் படைத் துறையினரின் உச்ச சபையில் இருந்தே நியமிக்கப்பட வேண்டும். எகிப்திய தலைமை அமைச்சரையோ வேறு எந்த அமைச்சரையோ அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது. இனி வரும் பாராளமன்றத் தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் தமது வேட்பாளர்களை வேறு அமைப்புக்களின் சார்பில் நிறுத்த முடியும்.

மொத்தத்தில் எகிப்தில் படைத்துறையினருக்கு எதிராக 2011இல் மக்கள் செய்த எழுச்சி தடம் மாறி இப்போது படைத்துறையினரின் கையில் வேறு விதமாக ஆட்சி மீண்டும் போய் இருக்கின்றது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அப்துல் ஃபட்டா அல் சிசி யின் ஆட்சியை விரும்புகின்றன. அவர் எகிப்தில் ஒரு உறுதியான ஆட்சியை அமைப்பார், எகிப்தின் பொருளாதாரத்தை நன்கு முன்னேற்றுவார், மக்களுக்கும் படைத்துறையினருக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவார் என ஆசிரியத் தலையங்கங்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதித் தள்ளுகின்றன. எகிப்த்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியில் அமர்ந்ததை சவுதி அரேபியா விரும்பவில்லை. மேர்சியின் ஆட்சியுடன் அமெரிக்கா உறவை வளர்த்ததையும் சவுதி அரேபியா விரும்பவில்லை. சவுதி-அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்பட்டது. மல்லைகைப் புரட்சியின் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய கிழக்கில் ஒரு சமநிலைக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதை எகிப்தின் புதிய ஆட்சியாளர் மூலம் சீர் செய்ய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் விரும்புகின்றன. மல்லிகைப் புரட்சியும் அதைத் தொடர்ந்து துனிசியா, எகிப்த்து, லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் குழப்பங்களும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கைகளை மீறியனவையாகவே இருக்கின்றன.

எகிப்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சிசிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார் பன்னாட்டு நாணய நிதியத்தைன் நிர்வாக இயக்குனர் Christine Lagarde. எகிப்திய மக்களுக்குத் தேவையான உதவியை பன்னாட்டு நாணய நிதியம் தயாராக இருப்பதாக அவர் சிசியிடம் தெரிவித்தார். மேற்கு உலகு நாடுகளுக்கு சார்பானவர்கள் எந்த நாட்டிலாவது ஆட்சியில் அமர்ந்தால் அங்கு பன்னாட்டு நாணய நிதியம் நிதி உதவி செய்வதும் கடன் கொடுப்பதும் ஒரு வழமையான நிகழ்வுகளாகும்.

சிறையில் இருக்கும் பதவி விலக்கப்பட்ட மொஹமட் மேர்சி புதிய அதிபர் தேர்தல் ஒரு படைத்துறையினரின் கலகம் என்றும் தனது ஆதரவாளர்களை அதற்கு எதிராகக் கிளர்ந்து எழும்படியும் அறைகூவல் விடுத்துள்ளார். எகிப்தில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகள் புதிய ஆட்சியில் திருப்தியடையவில்லை. மதசார்பற்றவர்களும் எகிப்தில் அரபு வசந்தத்தை ஆரம்பித்தவர்களும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிலும் பார்க்க சீர்திருத்தப்பட்ட படைத்துறையினரின் ஆட்சி பரவாயில்லை எனக் கருதுகின்றனர். எஞ்சியவர்கள் யார் ஆண்டாலும் நாட்டில் அமைதியும் பொருளாதார அபிவிருத்தியும்தான் முக்கியம் எனக் கருதுகின்றனர். சிசி பதவிக்கு வந்த பின்னர் சிசி மூவாயிரம் பேர்வரை கொல்லப்பட்டுவிட்டனர் என அவரது எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். சிசி பல ஊடகங்களைத் தடை செய்துள்ளார்.

26
உல்லாசப் பயணிகளுக்கான நிலைகள், 8 புதிய விமான நிலையங்கள், 22 கைத்தொழில் வலயங்கள் ஆகியவையும் அப்துல் ஃபட்டா அல் சிசியின் தேர்தல் வாக்குறுதிகளில் அடங்கும். அவரது திட்டங்களுக்கு 140 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். சிசி பதவி ஏற்ற மறு நாளே எகிப்திய உல்லாசப் பயணத் துறையை மீளவும் கட்டி எழுப்ப ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மகிழ்ச்சியில் இஸ்ரேல்.   
இசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சி எகிப்தில் ஒழித்துக் கட்டப்பட்டமை   இஸ்ரேலைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு உருவாக்கிய படைக்குழுதான் காசாவில் செயற்படும் ஹமாஸ் இயக்கம். இசுலாமிய  சகோதரத்துவ அமைப்பு ஆட்சிக்கு வந்தவுடன் துள்ளிக் குதித்த பல அமைப்புக்களில் ஹமாஸ் முக்கியமானது. மேர்சியின் ஆட்சி கலைக்கப் பட்டபின்னர் ஹமாஸிற்கு எதிரான சில நடவடிக்கைக்கள் எகிப்தில் எடுக்கப்பட்டன. ஹமாஸிற்க்கு ஈரானில் இருந்து கிடைக்கும் படைக்கல விநியோகங்களில் பெரும் பகுதி எகிப்தினூடாகச் செல்லும் சுரங்கப்பாதைகளினூடாக் நடக்கின்றன. எகிப்தின் ஊடாகச் செல்லும் சுரங்கப்பாதைகள் ஹ்மாஸின் பொருளாதர வருவாய்க்கும் முக்கியமானதாகும்.

எகிப்து மீண்டும் மேற்குலக சார்பு நாடானால் சிரியாவிற்கும் ஈரானிற்கும் ஆபத்து என்பதை அவற்றின் ஆட்சியாளர்கள் நன்கு உணர்வார்கள். அவர்கள் எகிப்தில் இசுலாமிய மதவாதிகளை ஊக்குவிக்கலாம். இனிவரும் காலங்களில் எகிப்து பொருளாதார மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வேளை உள்நாட்டுக் கலவரங்களையும் சமாளிக்க வேண்டும். சிசியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...