Monday 9 June 2014

எகிப்தில் தேர்தல் மூலம் படைத்துறை ஆட்சி!



எகிப்தில் முதற்தடைவையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்வு செய்யப்பட்ட அதிபர் முஹமட் மேர்சியைப் 2013 ஜூலை முதலாம் திகதி பதவியில் இருந்து தூக்கி எறிந்த எகிப்தியப் படைத் துறைத் தலைவர் அப்துல் ஃபட்டா அல் சிசி ஒரு தேர்தல் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படையினரின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டும் என எகிப்திய இளைஞர்கள் செய்த அரபு வசந்தம் என்னும் புரட்சி தடம் மாறிப் போய்விட்டது.

2011-
ம் ஆண்டு உருவான எகிப்தியப் புரட்சியின் பின்னணி.

1.
ஏப்ரல்-6 இயக்கம்(April 6 Movement)
அல் மஹால்லா அல் குப்ரா என்னும் எகிப்திய நகரில் 2008 ஏப்ரில் 6-ம் திகதி அங்குள்ள தொழிற்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது “ஏப்ரல் 6 இயக்கம்” என்னும் பேஸ்புக் குழு. ஏப்ரல் 6-ம் திகதி சகல ஊழியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த இயக்கம். இதன் ஆரம்பகர்த்தாக்கள் அஹ்மட் மஹேர், அஸ்மா மஹ்ஃபவுஸ், இஸ்ரா அப்துல் பட்டா ஆகியோர்கள். அஹ்மட் மஹேர் 2009இல் வேறு பதினாறு பேருடன் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவு இணையத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்த இயக்கத்திற்கு ஆதரவு பல்கிப் பெருகி இலட்சக்கணக்கன இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டனர். பெரும்பாலானோர் 20இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடைய படித்தவர்களே. மதசார்பற்ற இந்த இயக்கத்தினரே ஹஸ்னி முபராக்கை பதவியில் இருந்து விலக்கும் மக்கள் எழுச்சியை ஆரம்பித்தனர். ஏப்ரல் 6 இயக்கத்தைப் போலவே பல இயக்கங்கள் முபராக்கிற்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டிருந்தன. பல அமைப்புக்களின் கூட்டணியே முபராக்கை விரட்டியது.

2.
அஸ்மா மஹ்பூஸ் என்னும் ஒரு இளம் பெண்
அஸ்மா மஹ்பூஸ் என்னும் ஒரு இளம் பெண் முகப்புத்தகம் மூலம் இளைஞர் போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தாள் . ஆரம்பத்தில் அதிக ஆரவாரம் இல்லை. ஆனால் அவள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டபின் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஏப்ரல்-6 இயக்கமும் இணைந்து கொண்டது. எகிப்தின் சகல தரப்பினரும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளத் தொடங்கினர் எகிப்திய இளைஞர்கள் முபராக் ஆட்சியின் கொடூரம் சம்பந்தப்பட்ட படங்கள் காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து பகிரங்கப்படுத்தினர். வால் கொனிம் எகிப்திய எழுச்சி ஏற்பாட்டாளர் சமூக வலைத்தளங்கள் இருந்திருக்காவிடில் இந்த எழுச்சித் தீ மூட்டப்பட்டிருக்கது என்கிறார். facebook.com/ElShaheeed என்ற முகப்புத்தகப் பக்கத்திற்கு ஒரு சில வாரங்களில் எட்டு இலட்சம் இரசிகர்கள் திரண்டார்கள். எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தங்கள் எழுச்சிக்கான நாளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர். ஜனவரி 25-ம் திகதி எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்படும் எகிப்தியக் காவல்துறையினரின் விழாவிற்கான பொது விடுமுறை நாள். அதை எழுச்சியாளர்கள் தமது எழுச்சியின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தனர். முப்பது ஆண்டுகளாக மக்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்படும் நாளாக அது அமைந்தது. எகிப்தின் எழுச்சியாளர்கள் எகிப்திய படைத்துறையினருடன் நல்ல உறவை வளர்ப்பதில் மிகக் கவனமாகச் செய்ற்பட்டனர். நீங்களும் மக்களும் ஒன்றே என்ற அடிப்படையில் அவர்கள் படைத்துறையினருடன் நடந்து கொண்டனர்பின்னர் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு களமிறங்கியது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு அலெக்சாண்ட்ரியா போன்ற நைல் நதிக் கரையோர நகரங்களின் தெருக்களில் தனது ஆதரவாளர்களை இறக்கிப் போராட வைத்தது. இளைஞர்கள் புரட்சி ஆர்ப்பாட்டம் செய்யும் போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் முக்கிய தலவர்களுள் ஒருவரான மொஹமட் மேசி சிறையை உடைத்துக் கொண்டு தப்பினார். இதுவே அவருக்குப் பெரும் பிரச்சனையாக பின்னர் அமைந்தது

3.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. இது  எகிப்தில் செயற்பட்ட ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்னர் தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதினர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு இருந்த மிகப்பரவலான ஆதரவு இருந்தபடியால் அது இளைஞர்களினபோராட்டத்துடன் இணைந்தவுடன் ஹஸ்னி முபராக்கின் படைத்துறை ஆட்சி ஆட்டம் கண்டது.

4.
விட்டுக் கொடுத்த அமெரிக்கா.
லிபியாவில் அரபு வசந்தம் பெரும் உள்நாட்டுப் போராக மாறியிருந்த போது எகிப்தில் பெரும் உயிரிழப்பின்றி புரட்சி வெற்றி பெற்றது. அமெரிக்காவின் எகிப்தியப் பிடியான எகிப்தியப் படைத்துறை கவனமாகக் காய்களை நகர்த்தி தன் இருப்பை உறுதி செய்து கொண்டது. ஹஸ்னி முபராக்கை பதவி விலகச் செய்தது. எழுச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஆலோசனைப்படி நியமிக்கப்பட்ட துணைத் தலைவர் ஒமர் சுலைமான் ஒரு முபாரக் கையாளே. அவருடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி ஹிலரி கிளிண்டன் எகிப்திய மக்களைக் கேட்டுக் கொண்டார். அது எகிப்திய மக்களை ஆத்திரபடுத்தியது. ஒமர் சுலைமான் சாட்டுக்கு சில அரச ஒட்டுக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நாடாத்தினார். ஒமர் சுலைமான் எகிப்திய மக்கள் மக்களாட்சிக்குத் தயாரில்லை என்று கூறிக்கொண்டார். மக்கள் ஆத்திரம் இன்னும் அதிகமானது. அமெரிக்கா சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது. அரசியலமைப்பு இரத்துச் செய்யப்பட்டது. பாராளமன்றம் கலைக்கப்பட்டது. உச்ச படைத்துறைச் சபை (Supreme Military Council)  பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் கொண்டு வரப்பட்டது. தரிக் அல் பிஸ்ரி என்னும் கல்விமான் தலைமையில் அமைக்கப் பட்ட குழு புதிய அரசியல் அமைப்பை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தன்னை முன்னிலைப்படுத்திய மொஹமட் மேர்சி விரட்டப்பட்டார்.
புரட்சி செய்த இளைஞர்களிடம் ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லாமையினால் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு 2011-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளமன்றத் தேர்தலிலும் 2012 ஜூனில் நடந்த அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றது. மொஹமட் மேர்சி எகிப்திய அதிபரானார். அவர் தன்னை முன்னிலைப்படுத்தியும் இசுலாமிய ஷரியாச் சட்டப்படி நாட்டை நடத்தவும் முனைந்தார். தனது அதிகாரத்தை அதிகப்படுத்தும் படி சட்டங்களை பிரகடனப்படுத்தினார். ஒரு மத பக்தரான அப்துல் ஃபட்டா அல் சிசியைப்  படைத் துறை அதிபராக்கினார். 2012 நவம்பரில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது மேர்சி நாட்டை மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றார் என உணர்ந்த இளைஞர்கள் மீண்டும் 2013 ஜூன் மாதம் மேர்சியின் முதலாம் ஆண்டு நிறைவின் போது கிளர்ந்து எழுந்தனர். மேர்சியால் நியமிக்கப்பட்ட படைத் துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி  மேர்சியை பதவியில் இருந்து விலக்கிச் சிறையில் அடைத்தார். சிறை உடைப்பும் அவருக்கு எதிரான ஒரு குற்றச் சாட்டாகும்.

மொஹமட் மேர்சிக்குப் பின்னர் இடைக்கால அதிபராக அட்லி மன்சூர் படைத்துறையினரால் நியமிக்கப்பட்டார். இசுலாமிய சகோதரத்து அமைப்பினர் வேட்டையாடப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். 2013 செப்டம்பரில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தடைசெய்யப்பட்டது. ஒரே நாளில் எழுநூறு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினருக்கு எதிராக "நீதி விசாரணை" செய்யப்பட்டு இறப்புத் தண்டனை விதிக்கப்பட்டது. படைத் துறைத் தளபதி அப்துல் ஃபட்டா அல் சிசி 2014 ஜனவரியில் ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.

எகிப்திற்கு புதிய அரசமைப்புச் சட்டப்படி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்த அப்துல் ஃபட்டா அல் சிசி தானே அதிபர் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். மே 26, 27,28 திகதிகளில் தேர்தல் நடந்தது. அவருக்கு எதிரானவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் படி வேண்டுதல் விடுத்தனர். 2012 ஜூனில் மேர்சி வெற்றி பெற்ற தேர்தலில் வாக்காளர்களில் 52விழுக்காட்டினர் வாக்களித்தனர். அதிலும் அதிகமானவர்களை வாக்களிக்கச் செய்ய சிசி பலத்த முயற்ச்சி செய்தார். இரண்டுதடவைகள் தேர்தல் இறுதி நேரம் நீடிக்கப்பட்டு ஒரு நாளில் முடிவடைய வேண்டிய தேர்தல் மூன்று  நாட்கள் நடந்தன. வாக்காளரக்ளில் 47.5 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் சிசி வாக்களித்தவர்களில் 96 விழுக்காட்டினருக்கு அதிகமானவர்களின் வாக்குகளைப் பெற்றார். ஆனால் சிசிக்கு எதிரானவர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடந்தன என்றும் வாக்களித்தவர்களின் தொகை மிகைப்படுத்தப்பட்டவை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

2014-
ம் ஆண்டு உருவாக்கப் பட்ட அரசியலமைப்பின் படி இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு எகிப்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எகிப்த்தின் படைத் துறையினரின் உச்ச சபையில் இருந்தே நியமிக்கப்பட வேண்டும். எகிப்திய தலைமை அமைச்சரையோ வேறு எந்த அமைச்சரையோ அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது. இனி வரும் பாராளமன்றத் தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் தமது வேட்பாளர்களை வேறு அமைப்புக்களின் சார்பில் நிறுத்த முடியும்.

மொத்தத்தில் எகிப்தில் படைத்துறையினருக்கு எதிராக 2011இல் மக்கள் செய்த எழுச்சி தடம் மாறி இப்போது படைத்துறையினரின் கையில் வேறு விதமாக ஆட்சி மீண்டும் போய் இருக்கின்றது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அப்துல் ஃபட்டா அல் சிசி யின் ஆட்சியை விரும்புகின்றன. அவர் எகிப்தில் ஒரு உறுதியான ஆட்சியை அமைப்பார், எகிப்தின் பொருளாதாரத்தை நன்கு முன்னேற்றுவார், மக்களுக்கும் படைத்துறையினருக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவார் என ஆசிரியத் தலையங்கங்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதித் தள்ளுகின்றன. எகிப்த்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியில் அமர்ந்ததை சவுதி அரேபியா விரும்பவில்லை. மேர்சியின் ஆட்சியுடன் அமெரிக்கா உறவை வளர்த்ததையும் சவுதி அரேபியா விரும்பவில்லை. சவுதி-அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்பட்டது. மல்லைகைப் புரட்சியின் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய கிழக்கில் ஒரு சமநிலைக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதை எகிப்தின் புதிய ஆட்சியாளர் மூலம் சீர் செய்ய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் விரும்புகின்றன. மல்லிகைப் புரட்சியும் அதைத் தொடர்ந்து துனிசியா, எகிப்த்து, லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் குழப்பங்களும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கைகளை மீறியனவையாகவே இருக்கின்றன.

எகிப்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சிசிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார் பன்னாட்டு நாணய நிதியத்தைன் நிர்வாக இயக்குனர் Christine Lagarde. எகிப்திய மக்களுக்குத் தேவையான உதவியை பன்னாட்டு நாணய நிதியம் தயாராக இருப்பதாக அவர் சிசியிடம் தெரிவித்தார். மேற்கு உலகு நாடுகளுக்கு சார்பானவர்கள் எந்த நாட்டிலாவது ஆட்சியில் அமர்ந்தால் அங்கு பன்னாட்டு நாணய நிதியம் நிதி உதவி செய்வதும் கடன் கொடுப்பதும் ஒரு வழமையான நிகழ்வுகளாகும்.

சிறையில் இருக்கும் பதவி விலக்கப்பட்ட மொஹமட் மேர்சி புதிய அதிபர் தேர்தல் ஒரு படைத்துறையினரின் கலகம் என்றும் தனது ஆதரவாளர்களை அதற்கு எதிராகக் கிளர்ந்து எழும்படியும் அறைகூவல் விடுத்துள்ளார். எகிப்தில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகள் புதிய ஆட்சியில் திருப்தியடையவில்லை. மதசார்பற்றவர்களும் எகிப்தில் அரபு வசந்தத்தை ஆரம்பித்தவர்களும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிலும் பார்க்க சீர்திருத்தப்பட்ட படைத்துறையினரின் ஆட்சி பரவாயில்லை எனக் கருதுகின்றனர். எஞ்சியவர்கள் யார் ஆண்டாலும் நாட்டில் அமைதியும் பொருளாதார அபிவிருத்தியும்தான் முக்கியம் எனக் கருதுகின்றனர். சிசி பதவிக்கு வந்த பின்னர் சிசி மூவாயிரம் பேர்வரை கொல்லப்பட்டுவிட்டனர் என அவரது எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். சிசி பல ஊடகங்களைத் தடை செய்துள்ளார்.

26
உல்லாசப் பயணிகளுக்கான நிலைகள், 8 புதிய விமான நிலையங்கள், 22 கைத்தொழில் வலயங்கள் ஆகியவையும் அப்துல் ஃபட்டா அல் சிசியின் தேர்தல் வாக்குறுதிகளில் அடங்கும். அவரது திட்டங்களுக்கு 140 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். சிசி பதவி ஏற்ற மறு நாளே எகிப்திய உல்லாசப் பயணத் துறையை மீளவும் கட்டி எழுப்ப ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மகிழ்ச்சியில் இஸ்ரேல்.   
இசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சி எகிப்தில் ஒழித்துக் கட்டப்பட்டமை   இஸ்ரேலைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு உருவாக்கிய படைக்குழுதான் காசாவில் செயற்படும் ஹமாஸ் இயக்கம். இசுலாமிய  சகோதரத்துவ அமைப்பு ஆட்சிக்கு வந்தவுடன் துள்ளிக் குதித்த பல அமைப்புக்களில் ஹமாஸ் முக்கியமானது. மேர்சியின் ஆட்சி கலைக்கப் பட்டபின்னர் ஹமாஸிற்கு எதிரான சில நடவடிக்கைக்கள் எகிப்தில் எடுக்கப்பட்டன. ஹமாஸிற்க்கு ஈரானில் இருந்து கிடைக்கும் படைக்கல விநியோகங்களில் பெரும் பகுதி எகிப்தினூடாகச் செல்லும் சுரங்கப்பாதைகளினூடாக் நடக்கின்றன. எகிப்தின் ஊடாகச் செல்லும் சுரங்கப்பாதைகள் ஹ்மாஸின் பொருளாதர வருவாய்க்கும் முக்கியமானதாகும்.

எகிப்து மீண்டும் மேற்குலக சார்பு நாடானால் சிரியாவிற்கும் ஈரானிற்கும் ஆபத்து என்பதை அவற்றின் ஆட்சியாளர்கள் நன்கு உணர்வார்கள். அவர்கள் எகிப்தில் இசுலாமிய மதவாதிகளை ஊக்குவிக்கலாம். இனிவரும் காலங்களில் எகிப்து பொருளாதார மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வேளை உள்நாட்டுக் கலவரங்களையும் சமாளிக்க வேண்டும். சிசியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...