Friday, 11 March 2022

உக்ரேனில் கூலிப்படைகள் களமிறங்கியுள்ளனவா?

 

Silent Professionals என்ற நிறுவனம் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு உக்ரேனில் போரில் ஈடுபட படைத்துறையில் பணிபுரிந்தவர்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது. தனியார் படை என்பது கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட “கௌரவப் பெயராகும்”. சிரியா, லிபியா, ஆப்கான் போர்க்களங்களில் பெருமளவு தனியார் படையினர் அமெரிக்காவாலும் இரசியாவாலும் பாவிக்கப்பட்டனர். ஈழப்போரிலும் வெளிநாடுகளின் கூலிப்படைகள் செயற்பட்டன.  

கூலிப்படை வரலாறு

ஆரம்பத்தில் படையினருக்கான பின்புல வழங்கல் செய்தல், படையினருக்கான ஆபத்து பகுப்பாய்வு செய்தல், உளவு, வேவு போன்றவற்றில் தனியார் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உலகெங்கும் தற்போது உள்ள தனியார் படை அமைப்புக்களில் 70% அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூலிப்படைத்துறையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்காவின் சீல் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற Erik Prince என்பவர். இவரது தனியார் படை Blackwater என்னும் பெயரில் 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அது ஆப்கானிஸ்த்தானில் செயற்பட்டது. இவரது படைப்பிரிவு பத்து பில்லியன் டொலர் கூலிக்காக உக்ரேனில் உள்ள வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பயிற்ச்சியளிக்கின்றது என அமெரிக்காவின் Time சஞ்சிகை 2021 ஜூலை 7-ம் திகதி செய்தி வெளியிட்டது. 2020 பெப்ரவரி 23-ம் திகதி Erik Prince உக்ரேன் தலைநகருக்கு சென்று உக்ரேனிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். உக்ரேனிய படையில் இருந்து ஓய்வு பெற்றவர்களையும் உள்ளடக்கி ஒரு தனியார் படைப்பிரிவை அவர் உருவாக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 2022 மார்ச் 24-ம் திகதி உக்ரேனில் ஆரம்பித்த போரில் Erik Princeஇன் படையினரின் செயற்பாடுகள் மர்மமாக உள்ளன. இரசியாவின் மிகப்பிரபலமான விமான ங்களில் ஒன்றான Su-24 தாக்குதல் போர்விமானத்தை உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரேனியர்களிடமிருக்கும் Stinger போன்ற MANPAD ஏவுகணையால் Su-24ஐ சுட்டு வீழ்த்துவதற்கு போதிய பயிற்ச்சி தேவை. அவ் ஏவுகணைகள் தாழப்பறக்கும் விமானங்களை மட்டும் சுட்டு வீழ்த்த வல்லன. ஒலியிலும் வேகமாக பயணிக்கக்  கூடிய விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நீண்ட பயிற்ச்சியும் அனுபவமும் தேவை.

Erik Prince முன் வைத்த கோரிக்கையை பைடன் நிராகரித்தார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் எச்சந்தர்ப்பத்திலும் தமது படையை உக்ரேனுக்கு அனுப்பமாட்டேன் என அடிக்கடி சொல்கின்றார். Erik Prince அமெரிக்கா 2022இல் சேவையில் இருந்து நீக்கவிருக்கும் நாற்பத்தேழு F-16 போர்விமானங்களை வைத்து ஒரு தனியார் படையணியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் முன்வைத்ததாகவும் அதை அவர் நிராகரித்து விட்டார் எனவும் 2022 மார்ச் 4-ம் திகதி பிரித்தானிய நாளிதழான Daily Mailஇற்கு தெரிவித்திருந்தார். F-16ஐ உக்ரேனில் களமிறக்குவது புட்டீனை பெரும் சினப்படுத்தும் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். சுட்டு விழுத்தப்படாத விமானம் என்னும் பெருமையைக் கொண்டிருந்த F-16 விமானம் 2019 இந்திய பாக் மோதலில் இந்தியாவிடமிருந்த MiG-21 Bison விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது. அதை உக்ரேனில் உறுதி செய்யப்படுவதை F-16 உற்பத்தியாளர்கள் விரும்ப மாட்டர்கள். தான் 2021இன் இறுதியில் முன்வைத்த திட்டத்தை ஜோ பைடன் ஏற்றுக் கொண்டிருந்தால் உக்ரேனில் இன்று இத்தகைய இழப்பு நடந்திருக்காது என்கின்றார் Erik Prince. புட்டீன் உக்ரேனில் உள்ள நாஜிகளை இல்லாமற் செய்யப் படை அனுப்புகின்றேன் எனச் சொன்னது Erik Prince பயிற்றுவித்துக் கொண்டிருந்த திவிர வலதுசாரிப் படைப்பிரிவைத்தான். இவர்கள் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதாகும்.

உக்ரேனிய கூலிப்படை

உக்ரேனுக்குள் இரசியப் படையினர் புகுந்தவுடனே உக்ரேனிய அதிபர் வெளிநாட்டில் வாழும் உக்ரேனியர்களும் உக்ரேனை விரும்புபவர்களும் உக்ரேனுக்காக போராட விரும்புகின்றார்கள் என அறிவித்தார். அவர்களை வைத்து “International Legion of Territorial Defence of Ukraine” என்னும் பெயர் கொண்ட படையணியை தான் உருவாக்கப் போவதாகவும் சொன்னார். இது அவர் ஒரு தனியார் படையை (கூலிப்படையை) உருவாக்கப் போகின்றார் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. உலகெங்கும் உள்ள வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளும் நாஜிவாதிகளும் உக்ரேனைக் காப்பாற்றுவது என்ற போர்வையில் அங்கு களமிறங்கி உள்ளனர் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உக்ரேனில் போரில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தமது நாட்டுக்கு திரும்பி ஆபத்தான வகையில் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஒரு சதிக் கோட்பாடும் உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளால் அவர்கள் வாழும் நாடுகளுக்கு ஆபத்து என்பதால் அந்த நாடுகள் அவர்களை உக்ரேன் போர்முனைக்கு அனுப்பி கொல்ல முயற்ச்சிக்கின்றார்கள் என்பதே அச்சதிக் கோட்பாடு.

இரசியா சிரியாவில் கூலிப்படை திரட்டியது

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினர் பாரிய கட்டிடங்களுக்குள் நின்று போர் செய்யும் அனுபவத்தைப் பெற்றுள்ளனர். அவர்களை இரசியா தனியார் படையாக சேவைக்கு அமர்த்தி உக்ரேனில் களமிறக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியை சிரியாவின் deiresso24.net என்ற இணையத்தளம் வெளியிட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனும் வெளியிட்டது. 2022 மார்ச் 6-ம் திகதி அமெரிக்க Wall Street Journal இரசியா நகர்சார் போரில் அனுபவமுள்ள சிரியப் படையினரை நாள் ஒன்றிற்கு $200முதல் $300 வரையிலான கூலிக்கு ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் உக்ரேன் போரில் ஈடுபடுத்த ஆள் சேர்ப்பதாக செய்தி வெளியிட்டது.  சிரியாவில் இருந்து 16,000 படையினர் இரசியப்படையுனருடன் இணைந்து ச் உக்ரேனியர்களுக்கு "உதவி" செய்ய தயாராக உள்ளதாக இரசிய பாதுகாப்பு அமைச்சர்  2022 மார்ச் 11-ம் திகதி புட்டீனுக்கு தெரிவித்ததாக இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times தெரிவித்துள்ளது

புட்டீனின் கூலிப்படை

இரசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் இரசிய அதிபரின் நெருங்கிய நண்பருமான Yevgeniy Prigozhin  என்பவர் Wagner Group என்ற தனியார் படைப்பிரிவை வைத்திருக்கின்றார். இரசிய தனியார் படையினரின் வருமானம் அரச படையினரின் வருமானத்திலும் பார்க்க 7 மடங்கு அதிகமாகும். Yevgeny Prigozhin இற்குச் சொந்தமான Evro Polis நண்பரின் சிரியாவின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் 25விழுக்காடு உரிமம் பெற்றுள்ளதுசிரியாவில் தனியார் படையினரைப் பயன்படுத்தியமைக்கு இவருக்கு வழங்கப்பட்ட கூலியா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. உக்ரேனிய அதிபர் விலோடிமீர் ஜெலென்ஸ்கியை கொல்லும் பணியில் Yevgeniy Prigozhin யின் Wagner Group களமிறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் GB News தெரிவித்துள்ளது.

இரசியாவின் கை உக்ரேனில் மேலும் ஓங்கும் போது நேட்டோ நாடுகள் அதிக நிதியை உக்ரேனுக்கு வழங்கும். அந்த நிதியைப் பாவித்து உக்ரேன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள தனியார் படையினரை போரில் ஈடுபடுத்தும். 

Thursday, 10 March 2022

தாக்குப் பிடிக்குமா இரசியப் பொருளாதாரம்?

 


உக்ரேன் போரில் ஒரு நாளைக்கு எழு மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழிக்கும் இரசியாவிற்கு எதிராக சிறிய நாடாகிய சிங்கப்பூர் கூட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இரசிய அரசுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் சிங்கப்பூரில் இனி எந்த நிறுவனமும் நிதி திரட்ட முடியாது. சில இரசிய வங்கிகளுக்கு எதிராக சிங்கப்பூர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உட்பட்ட பல மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளும் இரசியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துடனும், கனடாவுடனும் பெரும்பாலும் நடுநிலையைக் கடைப்பிடிக்கின்ற நாடாகிய சுவிஸ்றலாந்தும் இணைந்து உக்ரேனின் கிழக்குப் பகுதி மாகாணங்களான Dontsk, Luthansk ஆகியவற்றை தனிநாடுகளாக அங்கீகரிக்கும் முன்மொழிவை ஆதரித்த 351 இரசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது.

ஒன்று திரண்ட புட்டீனின் எதிரிகள்

இரசியப்படைகளை உக்ரேனுக்கு அனுப்பியமைக்காகவும் உக்ரேனின் Dontsk, Luthansk மாகாணங்களை தனிநாடுகளாக அங்கீகரித்தமைக்காகவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சொத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, பிரித்தானியா, சுவிஸ்றலாந்து, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் முடக்கியுள்ளன. அது போலவே இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இரசியப் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. புட்டீனுக்கு நெருக்கமான பல இரசியச் செல்வந்தர்களுக்கு எதிராகவும் சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இரசிய ஊடகத்துறையை சேர்ந்த சிலருக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இரசிய நடுவண் வங்கியையும் விட்டு வைக்கவில்லை

இரசியாவின் நடுவண் வங்கிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் பல தடைகளை விதித்துள்ளன. பன்னாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கொடுப்பனவிற்கான தொடர்பாடல்களைச் செய்யும் SWIFT அமைப்பில் இருந்து பல இரசிய வங்கிகள் விலக்கப்பட்டுள்ளன. இரசிய அரசின் வெளிநாட்டு வருவாயைக் கையாளும் நிதி நிறுவனமான VEB.RFஇற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இரசிய விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகியவற்றின் வான் பரப்பில் பறப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.

நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies)

இரசிய வங்கிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க இரசியா நுண்மியநாணயங்களை பாவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போது Coinbase என்னும் நுண்மியநாணயங்களைக்  கையாளும் நிறுவனமும் இரசியாவிற்கு எதிராக செயற்படுகின்றது. அதில் உள்ள இரசியர்களுக்கு சொந்தமான 25,000இற்கு மேற்பட்ட கணக்குகளை அது தடை செய்துள்ளது. நுண்மியநாணயங்களைக் கையாளும் வேறு சில நிறுவனங்கள் இரசியர்களுக்கு எதிராக தடை விதிக்க மறுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் தனது தடைப்பட்டியலில் நுண்மியநாணயங்களையும் இணைத்துள்ளது. 

புட்டீனின் பொருளாதாரக் காப்பரண்

1991இல் இரசியா பட்ட கடனை அடைக்க முடியாத default நிலைய அடைந்திருந்தது. அதன் பின்னர் இரசியப் பொருளாதாரத்தை புட்டீன் சிறப்பாகக் கட்டி எழுப்பியமையால் புட்டீன் இரசியர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக இன்றும் இருக்கின்றார். ஆனாலும் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முன்னரே இரசியப் பொருளாதாரம் பல வலுவின்மைப் புள்ளிகளைக் கொண்டிருந்தது. 1. எரிபொருள் ஏற்றுமதியில் அதிக தங்கியிருப்பு. 2. வேலை செய்யக்கூடிய இளையோர் தொகை வீழ்ச்சியடைவது. 3. உட்-கட்டுமானக் குறைபாடு. 4. அயல் நாடுகளைத் தவிர வேறு நாடுகளுடன் வர்த்தக் உடன்படிக்கை இல்லாமை. 5. ஊழல். உக்ரேன் ஆக்கிரமிப்பிற்கு பின்னரான பிரச்சனைகளை இரசியா எப்படி சமாளிக்கப் போகின்றது?

இரசியப் பொருளாதாரத்தின் வலிமை

1. பெருமளவு எரிபொருள் இருப்பு: உலகிலேயே அதிக அளவு எரிவாயு இருப்பாக 1,668ரில்லியன் கன அடி இரசியாவில் உள்ளது. சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகிய இரசியா நாளொன்றிற்கு 9.7மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்கின்றது.

2. எண்மியப் படுத்தப்படுத்தலில் மேம்பட்ட நிலை: இரசியா தகவல் தொழில்நுட்பத்திலும் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. அது தன் பொருளாதார முகாமையில் எண்மியத் தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அதனால் அது உலக வர்த்தகத்தில் Faustian Bargain செய்யக்கூடிய நிலையில் உள்ளது.

3. அதிக தானிய உற்பத்தி: இரசியா ஆண்டுக்கு 116 மில்லியன் மெட்ரிக் தொன் தானியத்தை உற்பத்தி செய்கின்றது. இது உலக மொத்த உற்பத்தியில் 11% ஆகும்;

4. குறைந்த வெளிநாட்டுக் கடன்: இரசியாவின் வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி 2021 செப்டம்பர் நிலவரப்படி $1.62 ரில்லியன். அதன் வெளிநாட்டுக் கடன் $1.18 ரில்லியன். அமெரிக்கவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 130%, ஆனால் இரசியாவின் கடன் 20%. 2014-ம் ஆண்டு இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுக் கடனை $200 பில்லியனால் குறைத்தது.

5. வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு: 2022 ஜனவரியில் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு $640 பில்லியன்கள். உலகின் நான்காவடு பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் கொண்ட நாடு இரசியா.

6. படைக்கல ஏற்றுமதி: அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும் நாடு இரசியா. அதன் மூலம் இரசியா ஆண்டுக்கு $14பில்லியன் சம்பாதிக்கின்றது.

இரசியர்கள் வெளியேற்றம்

2022 இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட இரசியர்கள் ஜோர்ஜியா மூலமாக பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஜோர்ஜியா அறிவித்துள்ளது. அதே போல் நாள் தோறும் ஆறாயிரத்திற்கு அதிகமான இரசியரக்ளும் உக்ரேனியர்களும் தமது நாட்டினூடாக வெளிநாடுகளுக்கு செல்வதாக ஆர்மினியா தெரிவித்துள்ளது. இரசியாவில் இருந்து பின்லாந்துக்குச் செல்பவர்களின் தொகையும் 44,000ஆக உள்ளது. ஏற்கனவே இரசியாவில் இருந்து ஆண்டு தோறும் நான்கு மில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயந்து சென்று கொண்டிருந்தனர். அவரகளில் பெரும்பான்மையானவர்கள் படித்த இளையவர்கள். இரசியாவில் இளையோர் தொகை குறைவாகவும் முதியோர் தொகை குறைவாகவும் உள்ளதால் படித்த இளையோர் வெளியேறுவது இரசியாவின் உற்பத்தியைப் பாதிக்கும்.

போரை இரசியாவால் நடத்த முடியும்

இரசியாவின் நடுவண் வங்கிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடை அதன் $640பில்லியன் டொலர் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை பாதித்துள்ளது. $640பில்லியனில் $127 பில்லியனை இரசியா தங்கமாகவும், $70பில்லியனை சீன நாணயமான ரென்மின்பியிலும் உள்ளன. இது போன்று வேறுபல நாடுகளின் இரகசியமாக வைத்திருக்கும் தொகைகளும் சேர்ந்து மொத்தம் $300பில்லியன் இரசியா பாவிக்க கூடிய நிலையில் உள்ளது. உக்ரேன் போருக்கு ஆண்டுக்கு மூன்று பில்லியன் செலவாகலாம். ஆகையால் இரசியாவால் உக்ரேன் போரை தொடர்ந்து நடத்த முடியும்.

பன்னாட்டு நிறுவனங்கள்

Apple, Spotify, Oracle, H&M, Netflix, Honda, Google, Dell, Boeing, Nike, Ford, BMW, Walt Disney, Mc Donald, Coca Cola போன்ற நிறுவனங்கள் இரசியாவில் இருந்து வெளியேறிமை அந்த நிறுவனங்களுக்குத்தான் இழப்பீட்டைக் கொடுக்கும். அதில் பணிபுரிந்த இரசியர்கள் வேலை வாய்ப்பை இழக்கலாம். ஆனால் இந்த நிறுவனங்களின் உருவாக்கிய வெற்றிடத்தை காலப் போக்கில் இரசிய நிறுவனங்கள் நிரப்பி இலாபம் ஈட்டலாம்.

பெரும் பொருளாதார பின்னடைவு நிச்சயம்

கடன்படு திறனைத் தரப்படுத்தும் நிறுவனமான Fitch இரசியா தனது கடனைக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இரசியாவின் சொத்தை அதற்கு கடன் கொடுத்தோரே முடக்கி வைத்துவிட்டு கடன் கேட்டால் இரசியா கடன் கொடுக்க மறுக்கும். இரசியாவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 19%. அமெரிக்காவின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 134%. உக்ரேன் போராலும் பொருளாதாரத் தடையாலும் இரசியாவின் மொத்த தேசிய உற்பத்தி 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை 35%ஆல் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 2022இல் மொ.தே.உ 5% சுருங்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. 2022இல் இரசியாவின் ஏற்றுமதி 13%ஆல் குறையும் எனவும் உள்நாட்டு கொளவனவு 10% வீழ்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023-ம் ஆண்டு இரசியப் பொருளாதார வளர்ச்சி சுழியமாக இருக்கும் அதைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஒரு விழுக்காடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசிய மக்கள் தொகை வீழ்ச்சியடைவதால் பொருளாதாரப் பின்னடைவு பெரும் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுதாது. இரசியா தனது சமூக நலக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதால் மக்களை சமாளிக்க முடியும். அதற்கு தேவையான வருமானத்தை இரசியா எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும். ஈரானிடமிருந்து பொருளாதார தடைகளையும் தாண்டி சீனாவும் இந்தியாவும் எரிபொருள் வாங்குவது போல் இரசியாவிடமிருந்தும் அவை எரிபொருள் வாங்கும். மலிந்த விலையில் கொடுக்க வேண்டிவரும். அஜர்பையானைத் தவிர்ந்த ஏனை மத்திய ஆசிய நாடுகளும் மொங்கோலியாவும் இரசியாவில் இருந்து எர்பொருள் மட்டுமல்ல மற்ற பொருட்களையும இறக்குமதி செய்யும். இந்த நாடுகள் இரசியா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யும் கறுப்புச் சந்தையாக மாறலாம்.  பொருளாதாரத் தடையால் மக்கள் விரக்தியுற்று அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என மேற்கு நாடுகள் நினைப்பது நடக்காது.

Tuesday, 8 March 2022

உக்ரேனில் இஸ்ரேலின் அமைதி முயற்ச்சி

  


யூதர்கள் வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததில் இருந்துத இருந்து பின்னர் சனிக்கிழமை சூரியன் மறையும் வரை கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்பது அவரகளின் மத மரபு. அதில் முக்கியமாக இயந்திரங்கள் மூலமான பயணம் மேற்கொள்ளக் கூடாது. மரபு ஒழுக்கத்தை வலியுறுத்தும் கட்சியின் தலைவரும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சருமான நஃப்த்தாலி பென்னட் 2022 மார்ச் ஐந்தாம் திகதி சனிக்கிழமை மரபையும் மீறி விமானம் ஏறி இரசியத்தலைநகருக்கு பயணம் செய்து அதிபர் விளாடிமீர் புட்டீனுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். 1976-ம் ஆண்டு இப்படி மரபு மீறி ஒரு வெள்ளிக்கிழமை இரவு சில அமைச்சர்கள் செயற்பட்டதால் இஸ்ரேலில் ஆட்சி கவிழ்ந்தது. விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்ப முன்னரே உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி இஸ்ரேல் இரு தரப்புக்குமிடையே பேச்சு வார்த்தை நடக்க உதவி செய்ய வேண்டும் என பகிரங்கமான வேண்டு கோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இருமுனைப் பிரச்சனை

இஸ்ரேல் முதலில் புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்பியதை கண்டிக்காமல் வருத்தம் தெரிவித்திருந்தது. பின்னர் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பைக் கண்டித்திருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களித்தது. இஸ்ரேல் நூறு தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களையும் உக்ரேனுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் படைக்கலன்களை அனுப்பும்படி உக்ரேன் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரேனில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்ற இஸ்ரேலியர்களின் விருப்பம் ஒரு புறம் புட்டீனைச் சினத்திற்கு உள்ளாக்க கூடாது என்பது மறுபுறமாக இஸ்ரேல் செயற்படுகின்றது. ஈரானைக் கையாள்வதற்கு இஸ்ரேலுக்கு இரசிய உறவு தேவைப்படுகின்றது. ஈரானும் இரசியாவும் தம் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றுபடும் போது இஸ்ரேலிய நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் இஸ்ரேல் கவனமாக இருக்கின்றது. ஈரானுக்கு இரசியா எஸ்-400 போன்ற வான் பாதுகாப்பு முறைமைகளை வழங்கினால் அது இஸ்ரேலுக்கு பாதகமாகும்.

குருவி தலையில் பனங்காய்

இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நஃப்த்தாலி பென்னட் கிரெம்ளினின் புட்டீனுடன் மூன்று மணித்தியாலங்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் ஜெர்மனி சென்று அதிபர் Olaf Scholzஉடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். கடந்த சில வாரங்களாக நஃப்த்தாலி பென்னட் பிரெஞ்சு அதிபர் மக்ரோன், உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கிச்(இவர் ஒரு யூதர்), அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோருடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். 2022 மார்ச் 2-ம் திகதி புதன் கிழமை இரசிய அதிபருடன் தொலைபேசியல் செய்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே இஸ்ரேல் தலைமை அமைச்சர் இரசியா சென்றார். அமெரிக்காவின் விருப்பத்தின் பேரில் இஸ்ரேல் செயற்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. இரசியாவில் உள்ள மரபுவழி கிருத்தவர்கள் ஜெருசேலம், பெத்தேலேகம் ஆகியவற்றை இஸ்ரேல் தன் முழுமையான ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என விரும்புவர்கள். புட்டீனும் அதை ஆதரிக்கின்றார். அதனால் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல்-இரசிய உறவு சீராக இருக்கின்றது. 2022-03-05 திகதி பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மறுநாள் தன அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி தனது முயற்ச்சி வெற்றி தருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதைச் சுட்டிக்காட்டி உக்ரேனில் நிலைமை மோசமாக இருக்கின்றது நாளடைவில் அது மேலும் மோசமாகலாம் என்பதால் சிறு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டியது எமது அறம்சார் கடமை என்றார். இரசியா மீது இஸ்ரேலுக்கென ஒரு அரசுறவியல் நெம்புகோல் இல்லாத போது இஸ்ரேலின் முயற்ச்சி புட்டீனின் மனதை மாற்றுவது கடினம். 

சிரியாவில் ஒத்துழைப்பு

வளைகுடா நாடுகளில் இருந்து சிரியாவூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கினால் ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாயுத் தேவைக்கு இரசியாவில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம் என்ற முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்ட போது இரசியாவின் வேண்டுதலின் பேரில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத அதை எதிர்த்தார். இதனால் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற அரபு வசந்தம் என்னும் பெயரில் அமெரிக்கா சதி செய்தது. அவருக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க 2015இல் சிரியாவிற்கு புட்டீன் தன் படையை அனுப்பினார். அப்போது இரசிய போர்விமானங்கள் அவ்வப்போது எல்லை தாண்டிச் சென்று அயல் நாட்டு வான் பரப்புக்களிற்குள் செல்வதுண்டு. அப்படிச் சென்ற ஒரு இரசியப் போர் விமானத்தை துருக்கு சுட்டு வீழ்த்தியது. இஸ்ரேல் இரசியப் போர்விமானங்கள் தன் நாட்டுக்குள் அறிவித்து விட்டு பறப்பதை அனுமதித்திருந்தது. அதற்குப் பதிலாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரான் சிரியாவில் வைத்து வழங்கும் படைக்கலன்களை லெபனானுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம அவற்றை இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதை இரசியா தடுக்கவில்லை. இஸ்ரேலின் முன்னாள் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ விளடிமீர் புட்டீனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.

இஸ்ரேல் தலைமை அமைச்சரின் இரசியப் பயண நோக்கங்கள்:

1. உக்ரேனில் உள்ள யூதர்களின் பாதுகாப்பு: 44 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உக்ரேனில் 0.2% விழுக்காடு யூதர்கள் மட்டும் வாழ்கின்றார்கள். இஸ்ரேல் அவர்களது பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்டுள்ளது. தற்போது உக்ரேனிய அதிபராக இருப்பவரும் ஒரு யூதர்.  தலைமை அமைச்சராகவும் இருந்தார்.

2. ஈரான் பேச்சு வார்த்தை: அமெரிக்காவும் ஈரானும் நடத்திக் கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையை இரசியா குழப்பலாம என இஸ்ரேல் கருதுகின்றது. அமெரிக்க ஈரானிய பேச்சு வார்த்தை முடிவிற்கு வரும் நிலையில் உள்ள வேளையில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் இரசியா சுதந்திரமாம ஈரானுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

3. இஸ்ரேலியர்களின் மீள் வருகை: உலகெங்கும் வாழும் யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்து குடியேறி பலஸ்த்தீனியர்களிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துள்ள நிலங்களில் குடியேறி அங்கு யூதர்களின் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் திட்டம். உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் இஸ்ரேல் சென்றுள்ளனர்.

உக்ரேனியப் போர் என்பது வெறும் நேட்டோ விரிவாக்கம் சம்பத்தப்பட்டது மட்டுமல்ல, இரசியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது உலகின் எதிர்காலத்தை முடிவு செய்யும் போர் ஆக உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போராகவும் இருக்கின்றது. பல நாட்டு தலைவர்கள் அப்போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்ச்சியில் ஈடு பட வேண்டும்.

Sunday, 6 March 2022

இரசிய வான்படையும் உக்ரேனிய வான்படையும்

  


இரசியாவின் வான் வலிமைக்கு 26.9 புள்ளிகளைக் கொடுத்த ஒரு வான் வலு தரப்படுத்தும் நிறுவனம் உக்ரேனின் வான் வலிமைக்கு 2.4 புள்ளிகளை மட்டும் கொடுத்திருந்தது. இரசியாவிடம் 3863 போர் விமானங்களும் உக்கிரேனிடம் 210ம் இருக்கின்றன. இருந்தும் உக்ரேன் மீது இரசியா வான்-ஆதிக்கம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. உக்ரேனுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் களமிறங்கினால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் போர்த்துக்கலைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக MiG-31K ஒலியிலும் 2.8 மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய போர்விமானங்களை Kinzhal என்னும் அணுக்குண்டு தாங்கக் கூடிய மீயுர்-ஒலி வேக (ஹைப்பர்-சோனிக்)ஏவுகணைகளை இரசியாவிற்கு சொந்தமான போலந்தை அடுத்துள்ள கலினின்கிராட் நிலப்பரப்பில் இரசியா எண்ணிக்கை நிறுத்தியுள்ளது.

பறக்காத விமாங்கள் 300

உக்ரேனுக்கு குறைந்த நேரத்தில் பறந்து செல்லக் கூடிய வகையில் முன்னூறு Su-35 மற்றும் Su-30 போர்விமானங்கள் இரசியா நிறுத்தி வைத்துள்ளது. அவை இதுவரை உக்ரேனுக்கு பறப்புக்களை மேற்கொள்ளவில்லை. Su-34 விமானங்கள் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் ஏவுகணைகளை வீசக் கூடியவை. இரசியாவிடம் வான் மேலாண்மையை சிறப்பாகச் செய்யக் கூடிய எண்பது 4.5 தலைமுறை Su-35S விமானங்கள் உள்ளன. Su-30-SM (2) என்னும் பற்பணிப் போர்விமானங்கள் எண்பது உள்ளன. இவ்விரண்டு வகையான விமானங்களாலும் தாக்குதற்கான வான் எதிர்ப்பு (Offensive Counter-Air) மற்றும் பாதுகாப்பிற்கான வான் எதிர்ப்பு (Defensive Counter-Air) ஆகிய பணிகளைச் செய்து உக்ரேன் வான்பரப்பில் இரசியாவால் மீயுர்-வான் – வான் மேலாதிக்கத்தை (Air-supremacy) செய்ய முடியும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. உக்ரேன் மீது இரசிய வான்படை நடத்திய பறப்புக்களில் பெரும் பான்மையானவை இரவு நேரத்திலேயே நடந்தன. இரசியத் தரைப்படைக்கு போதிய நெருங்கிய பறப்பு ஆதரவு வழங்க முடியாமல் இரசியப் படைகள் இருக்கின்றன.

ஆயிரம் இருந்தும்

கடந்த பத்து ஆண்டுகளாக இரசியா பல பில்லியன் டொலர்களை புதிய விமானங்களை உருவாக்குவதற்கு செலவழித்து வருகின்றது. 2009இற்கும் 2020இற்கும் இடையில் இரசிய விமானப் படைக்கு 440 புதிய விமானங்களும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆளிலிவிமானங்களும் (Drones) இணைக்கப்பட்டன. இரசியா போர் ஆரம்பித்த போது உக்ரேனின் விமானங்களையும் ரடார்களையும் அழிக்க பல ஏவுகணைகளை வீசியது. அவற்றால் உக்ரேனிய போர் விமானங்களையோ ரடார்களையோ அழிக்க முடியாத வகையில் உக்ரேனியர்கள் அவற்றை பல இடங்களில் பரப்பி வைத்திருந்தார்கள். இரசிய ஆளிலிவிமானங்கள் தாக்குதலுக்கு வேவுபார்த்தலுக்கோ உக்ரேனில் பாவிக்கவில்லை எனச் செய்திகள் வருகின்றன. பல படைத்துறைச் சஞ்சிகைகள் இரசியாவின் ஆளிலிகள் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. மாறாக உக்ரேன் பெருமளவு ஆளிலிகளைப் பயன்படுத்துகின்றது. 

உக்ரேனின் ஆளிலிவிமானம்

சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்தபோது சிறந்த படைக்கலன் உற்பத்தி செய்யும் பிரதேசமாக உக்ரேன் இருந்தது. விமானம் தாங்கிக் கப்பல்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள் உக்ரேனில் தயாரிக்கப்பட்டன. அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு உக்ரேனியர்களிடம் இருக்கின்றது. ஆளில்லாப் போர்விமானங்களை உக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா மறுத்ததனால் உக்ரேன் தானாகவே ஆளில்லாப் போர்விமானங்களை உருவாக்கிவிட்டது. அவற்றில் மொத்தம் ஐம்பது கிலோ கொண்ட நான்கு குண்டுகளையோ அல்லது இரு வானில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஏவுகணைகளையோ எடுத்துச் செல்லலாம். ஆமைப்புறா என்னும் பொருள்பட உக்ரேன் மொழியில் Gorlytsa எனப் பெயரிடப்பட்டுள்ள உக்ரேனின் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக ஏழு மணித்தியாலம் பறக்கக் கூடியவை. ஐயாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தில் பறக்கக் கூடியவை. 

சண்டை ஆனால் சட்டை கிழியவில்லை

இரசியா உக்ரேன் மீது போர் தொடுத்து பத்து நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான உக்ரேனிய விமானங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. போர் ஆரம்பித்தவுடன் உக்ரேனின் வான்கலன்களையும் வான் பாதுகாப்பு முறைமைகளையும் இரசியா முற்றாக அழித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. உக்ரேனிடமிருந்த சோவியத் ஒன்றிய கால எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒன்றை இரசியா அழித்திருந்தது. அது போதிய உதிரிப்பாகங்கள் இல்லாமல் இடம் விட்டு இடம் நகர முடியாமல் இருந்தது. 2022 மார்ச் 6-ம் திகதி மட்டும் இரசியாவின் ஒரு Su-25, இரண்டு Su-30 SM, ஒரு ஆளிலிவிமானம், இரண்டு உலங்கு வானூர்தி ஆகியவற்றிச் சுட்டு விழுத்தியதாகவும் போர் தொடங்கியதிலிருந்து மொத்தம் 44 விமானங்களையும் 44 உலங்கு வானூர்திகளையும் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரேனியப் படையினர் தெரிவித்தனர்.

யானையின் சோளப்பொரி

புட்டீனின் படைகள் உக்ரேனை ஆக்கிரமிக்கும் போது அதனிடம் 98 தாக்குதல் விமானங்கள் உட்பட 210 போர் விமானங்கள் இருந்தன. ஐரோப்பாவில் நான்காவது பெரிய விமானப்படை உக்ரேனிடம் இருந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் உக்ரேனில் பல விமான உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் உக்ரேனின் விமானப்படை இரசியாவின் விமானப்படையுடன் ஒப்பிடுகையில் சோளப்பொரியும் யானையும்.

இரசிய வான்படையின் பிரச்சனைகள்:

1. குறைவான ஏவுகணைகள்: சிரியப் போரின் போது இரசியா பெருமளவு வழிகாட்டல்-துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளைப் பாவித்து விட்ட படியால் இரசியாவின் ஏவுகணைக் கையிருப்பு குறைந்து விட்டது. உக்கிரமமான போர் வரும் போது பாவிப்பதற்கு என இரசிய வான் படை தனது வானிலிருந்து தரைக்கு வீசும் ஏவுகணைகளை பாதுகாத்து வைத்திருக்கின்றது.

2. S-400 ஆப்பு வைக்கலாம்: உக்ரேன் வான் வெளியை இலக்கு வைத்து இரசியா தனது S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுத்தி வைத்திருக்கின்றது. அது 400கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கும் விமானங்களை உணர்ந்து தானாகவே அவற்றை சுட்டு வீழ்த்த வல்லது. உக்ரேனுக்கு மேல் பறக்கும் இரசிய விமானங்களை இரசியாவின் S-400 சுட்டு வீழ்த்தலாம் என இரசிய வான்படையினர் கரிசனை கொண்டுள்ளனர். இதுவரை ஒரு உக்கிரமான போரில் S-400 பயன்படுத்தப்படவில்லை. சிரியாவில் பாவிக்கப்பட்டது. போதிய அனுபவமில்லாமல் விமானங்களைப் பலியிட இரசிய வான்படை விரும்பவில்லை.

3. அனுபவமற்ற இரசிய விமானிகள்: இரசியப் போர்விமானிகள் ஆண்டு ஒன்றிற்கு நூறு மணித்தியாலங்கள் மட்டுமே விமானம் ஓட்டும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தமது விமானிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு 180 முதல் 240 மணித்தியாலம் விமானம் ஓட்டும் வாய்ப்பை கொடுக்கின்றனர். பெறுமதி மிக்க விமானங்களை அனுபவம் குறைந்த விமானைகளிடம் கொடுத்து பறக்க விட்டு அவை சுட்டு வீழ்த்தப்பட்டால் அல்லது விபத்திற்கு உள்ளானால் அது இரசியாவின் விமான விற்பனையைப் பாதிக்கும்.

4. Targeting Pod தட்டுப்பாடு: போர்விமானங்கள் தாக்குதலுக்கு செல்லும் போது Targeting Pod என்னும் கருவியை அதில் பொருத்தி விடுவர். அவை எதிரியின் தாக்கப்பட வேண்டிய இலக்குகளை இனம் காணும். இரசியாவிடம் போதிய அளவும் Targeting Pod இல்லை எனப்படுகின்றது.

5. அப்பாவிகளைக் கொல்லாமல் இருக்க: இரசிய வான்படையினரின் தாக்குதலில் அப்பாவி உக்ரேனியர்கள் அதிகம் கொல்லப்படுவதை இரசியரகள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருக்க இரசிய வான் படையினர் பற்ப்புக்களைக் குறைத்துள்ளனர்.

6. உக்ரேனின் குழப்பிகள்: உக்ரேன் பல்வேறு இலத்திரனியல் குழப்பிகளை  பாவித்து இரசியாவின் விமானங்கள் மற்றும் வழிகாட்டல் ஏவுகணைகளை குழப்பிவிடுகின்றது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை வேடமா உபாயமா?

உக்ரேன் அதிபர் விளாடிமீர் ஜெலன்க்ஸி தமக்கு போர்விமானங்களை தாருங்கள் என வலியுறுத்தி வேண்டினார். ஐரோப்பிய நாடுகளின் Eurofighter Typhoon, Rafael, Gripen ஆகிய சிறந்த விமானங்கள் இருக்கின்றன. உலகின் மிகச் சிறந்த Meteor ஏவுகணைகள் இருக்கின்றன. அவற்றைக் கொடுத்தால் உக்ரேனின் வான்பரப்புக்குள் இரசிய விமானங்களை வராமல் தடுக்கலாம். அவற்றைக் கொடுத்தால் புட்டீன் கடும் சினம் கொள்வார் என்பதால் அவற்றை ஐரோப்பிய நாடுகள் கொடுக்கவில்லை. மாறாக நேட்டோவில் இணைந்துள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய மற்றும் வார்சோ ஒப்பந்த நாடுகளிடமுள்ள பழைய சோவியத் தயாரிப்பு விமானங்களை உக்ரேனுக்கு  வழங்க ஏற்பாடு நடக்கின்றது. பல்கேரியாவிடம் பதினாறு Mig-29 பதினான்கு Su-25 போர்விமானங்கள் உள்ளன. போலாந்திடம் இருபத்தி மூன்று Mig-29 பதினெட்டு Su-22 விமானங்கள் உள்ளன. சுலோவாக்கியாவிடம் பதினொரு Mig-29 விமானங்கள் உள்ளன. இவற்றை உக்ரேனுக்கு வழங்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. சில ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. இந்த விமானங்கள் உக்ரேனிய விமானிகளுக்கு பழக்கப்பட்டவை அவற்றை உடனடியாக அவர்களால் செலுத்திக் கொண்டு பறக்க முடியும். ஆனால் Eurofighter Typhoon, Rafael, Gripen போன்றவற்றிற்கு நீண்ட காலப் பயிற்ச்சி தேவைப்படும் என ஐரோப்பிய நாடுகள் சொல்கின்றன. பல்கேரியா, போலாந்து, சுலோவாக்கிய நாடுகள் தம்மிடமுள்ள பழைய விமானங்களை உக்ரேனுக்கு கொடுத்து விட்டு அவற்றிற்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் போர் விமானங்களை வாங்கும். எல்லாமே வியாபாரம்தான். சோவியத் தயாரிப்பு விமானங்களை இரசியாவிற்கு எதிரான போரில் உக்ரேன் பாவிக்கும் போது அதே போன்ற விமானங்களை இரசியாவும் பாவிக்கும் போது இரசியப் படையினரையும் அவர்களின் வான் பாதுகாப்பு முறைமையும் குழப்பத்திற்கு உள்ளாகி நட்புச் சூடு (Friendly Fire) அதிக அளவில் இரசியத் தரப்பில் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் நேட்டோ நாடுகளின் உபாயமாக இருக்கலாம்.

நாள் செல்ல செல்ல உக்ரேனில் கடுமையான வான் சண்டை நடக்கும். பெலரஸில் உள்ள S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தேர்வுக்கு உட்படுத்தப்பட அமெரிக்க நிபுணர்கள் இரகசியமாக களமிறங்குவார்கள். இஸ்ரேல் தனது வான்படைக்கு அனுபவம் தேடி அலைகின்றது.

Friday, 4 March 2022

உக்ரேனில் காதாநயகனான துருக்கியின் ஆளிலிவிமானம்

  


ஒவ்வொரு போரிலும் ஒரு படைக்கலன் போரின் திசையை மாற்றி வியக்கவைக்கும். இதுவரை நடந்த இரசிய உக்ரேன் போரில் கதாநாயகனாகத் திகழ்வது துருக்கியின் ச்ஆளிலிப் போர்விமானமாகும். இவற்றில் இருந்து வீசப்படும் மலிவான ஏவுகணைகள் இரசியாவின் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான இரசிய தாங்கிகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. இரசியப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொடுத்த ஜவலின், NLAW ஆகிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளிலும் பார்க்க துருக்கியின் Bayraktar TB-2 இரசியாவிற்கு அதிக இழப்பை குறைந்த ஆபத்துடன் ஏற்படுத்துகின்றன. உக்ரேனிடமிருக்கும் பாதுகாப்பற்ற ஆளிலிவிமானங்களை போர் ஆரம்பித்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள் குருவி சுடுவது போல இரசியப்படையினர் சுட்டுத்தள்ளி விடுவார்கள் என சில படைத்துறை நிபுணர்கள் எதிர்பார்த்தனர். 

பலரதப்பு பாராட்டு

படைத்துறை ஊடகங்களில் இருந்து நிதித்துறை ஊடகங்கள் வரை பல ஊடகங்கள் Bayraktar TB-2ஐப் பற்றி சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் ஆளிலிப் போர்விமானங்களை துருக்கி வாங்க முற்பட்ட போது அவை துருக்கியுடன் தொடர்பில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய்ச் சேரும் என்பதால் அமெரிக்கா விற்பனை செய்ய மறுத்தது. அதைத்தொடர்ந்து துருக்கி தானே அவற்றை உற்பத்தி செய்யத் தொடங்கியது. முதலில் குர்திஷ் போராளித் தலைவர்களைக் கொல்ல துருக்கி தனது ஏவுகணை தாங்கிச் செல்லும் ஆளிலிகளிப் பயன்படுத்தியது. அதில் கிடைத்த அனுபவம் துருக்கியை உலகின் முன்னணி ஆளிலி உற்பத்தி நாடாக்கியது. தற்போது Bayraktar TB-2 துருக்கியின் “தேசம் பெருமை” ஆக கருதப்படுகின்றது.

வழிகாட்டல் ஏவுகணைகள்

துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலி விமானங்கள் 25கி.மீ(15.5மைல்) தொலைவில் உள்ள இலக்குகளையும் இனம் காணக்கூடிய சிறந்த ஒளிப்பதிவுக் கருவிகளைக் (Camera) கொண்டவை. இனங்காணல், வேவுபார்த்தல், போன்றவற்றைச் செய்யக் கூடிய வகையில் அவற்றில் உள்ள ஒளிப்பதிவுக் கருவிகளின் துளைகள் (aperture) அகலமானவையாக உள்ளன. அந்த ஒளிப்பதிவுக் கருவிகள் மிக உயரமான இடத்தில் குளிரான சூழலிலும் சிறப்பாகச் செயற்படும். மணித்தியாலத்திற்கு 80மைல் வேகத்தில் நான்கு திறன் – வழிகாட்டல் ஏவுகணைகளைச் (Smart laser guided missiles) சுமந்து கொண்டு பறக்கக் கூடியவை. தாங்கிச் செல்லக் கூடிய மொத்த எடை 121 இறாத்தல். இயந்திர வலு 105 குதிரைவலு. 25,000 அடி உயரத்தில் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடியவை, Tactical Block 2 என்பதன் சுருக்கமே TB2. அவற்றின் மற்ற சிறப்பம்சங்கள்:

     Low Light (LL-NIR) Camera
    Common FOVs for IR, HDTV and LL-NIR Cameras
    Laser Range Finder and Target Designator
    Laser Pointer and Illuminator
    Internal Boresight Unit
    All-Digital Video Pipeline
    Advanced Image Processing
    Multi Target Tracking
    Simultaneous Target Tracking on IR, HDTV
    and LL-NIR Videos
    Accurate Target Geo-Location
    Determination of Coarse and Speed of
    Moving Target
    Inertial Measurement Unit (IMU)
    Accurate Stabilization
Bayraktar TB-2 ஆளிலிவிமானம் நிலக்கட்டுப்பாட்டகம், தரவுமுனையம், தூரக்காட்சியமைப்பு (remote display) முனையம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. அமெரிக்காவின் பிரபலமான MQ-9 Reaper ஆளிலிவிமானத்துடன் ஒப்பிடுகையில் பாரம் குறைந்ததும் மலிவானதுமாகும். உக்ரேனிடம் 25 Bayraktar TB-2 ஆளிலிவிமான ங்கள் உள்ளன. மேலும் பலவற்றை உக்ரேன் துருக்கியிடமிருந்து வாங்கவிருக்கின்றது.

களம் பல கண்ட Bayraktar TB-2

துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலிகள் சிரியா, லிபியா ஆகிய நாடுகழ்ளின் போர் முனையில் இரசிய தாங்கிகளுக்கும் கவச வண்டிகளுக்கும் எதிராக சிறப்பாகச் செயற்பட்டவை.. அஜர்பைஜானுக்கும் ஆர்மினியாவிற்கும் இடையில் நடந்த போரில் துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலிகள் ஆர்மினியாவிடமிருந்த பல இரசியத் தாங்கிகளைத் துவம்சம் செய்த போது உலகப் படைத்துறை நிபுணர்கள் ஆச்சரியப்பட்டனர். அதன் பின்னர் கனடா துருக்கிக்கு Bayraktar TB-2இற்கான ஒளிப்பதிவுக் கருவிகளை விற்பனை செய்வதை தடை செய்தது. அதனால் சிறந்த ஒளிப்பதிவுக் கருவிகளை துருக்கியே உற்பத்தி செய்கின்றது.

இரத்தம் குடித்த Bayraktar TB-2

இரசியாவின் போர்த்தாங்கிகளுக்கும் கவச வண்டிகளுக்கும் எரிபொருள் மீள்நிரப்புவதற்கு வந்த பல எரிபொருள் வண்டிகளை Bayraktar TB-2 ஆளிலிகள் தாக்கி எரிய வைத்தன. இதனால் பல கவச வண்டிகளையும் தாங்கிகளையும் இரசியப் படையினர் எரிபொருல் இல்லாததால் நடுவழியில் விட்டு தப்பி ஓடினர். இரசியப் படையினரின் முன்னேற்றம் தடைபட்டமைக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. 

இரசியாவின் S-400 தோற்கடிக்கப்பட்டதா?

இரசியா உக்ரேன் – பெலரஸ் எல்லையில் தனது S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உக்ரேனின் வான்வெளியை கண்காணிக்க நிறுத்தியுள்ளது. இருந்தும். Bayraktar TB-2 ஆளிலிவிமானம் இரசிய போர்த்தாங்கிகளையும் கவச வண்டிகளையும் தாக்கியழிக்கின்றது. சிறிய Bayraktar TB-2 ஆளிலிவிமானங்களை இரசியாவின் S-400ஆல் அழிக்க முடியாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

துருக்கி ஆளிலி விமானத்துறையில் பெறும் அனுபவமும் வெற்றியும் அது இனி வெளிநாடுகளில் போர்விமானங்களை வாங்கத் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா துருக்கி உட்பட பல நாடுகளுடன் இணைந்து உருவாக்கிய F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை துருக்கி இரசியாவிடமிருந்து S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவதால் துருக்கிக்கு விற்பனை செய்ய மறுத்து விட்டது. இதனால் துருக்கி தானே TF-X என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்தை உருவாக்குகின்றது. அத்திட்டம் 2025இல் நிறைவேறும் எனச் சொல்லப்படுகின்றது. துருக்கிக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் வளரும் நட்பு இந்தியாவைச் சிந்திக்க வைக்கும்.

Thursday, 3 March 2022

இரசியப் படையினர் உக்ரேனில் திணறுகின்றனரா?

  


“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள் உக்ரேனை ஆக்கிரமிக்க முயலும் இரசியப் படையினரைப் பற்றி வந்து கொண்டிருக்கின்றன. உலகின் இரண்டாவது பெரிய இரசியப் படைத்துறை 2021 மார்ச் மாதத்தில் இருந்து உக்ரேன் எல்லைகளில் இரசியா படை குவித்துக் கொண்டிருக்கின்றது. அது ஒரு திட்டமிட்ட நகர்வு. 2014இல் உக்ரேனியர்களும் அவரது நட்பு நாடுகளும் எதிர் பாராத விதமாக புட்டீன் செய்த படை நகர்வு வலுவான எதிர்ப்பின்றி நேர்த்தியாக நிறைவேற்றப்பட்டது. 2014 ஏப்ரலில் செய்யப்பட்ட நகர்வைப் போலவே 2022 பெப்ரவரியில் செய்யப்பட்ட நகர்வும் நன்கு திட்டமிடப்பட்டது. முந்தையது இரகசியமான நகர்வு. எதிரி தகவல்களை இணைய வெளி மூலம் திருடாமல் இருக்க தட்டச்சுகளைப் பாவித்து பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு தொலைநகல் மூலம் பரிமாறப்பட்டன. பிந்தைய நகர்வு பகிரங்கமாகச் செய்யப்பட்டது. எதிரியும் தயார் நிலையில் இருந்தான்.

தாமதம் ஏன்?

கடந்த பத்து ஆண்டுகளாக இரசியாவிற்கு ஆட்சேர்ப்பு மற்றும் புதிய படைக்கல இணைப்பு எனப்பல தீவிர நடவடிக்கைகளை புட்டீன் எடுத்திருந்தார். இரசியப் படையினர் கைப்பற்றிய பிரதேசம் பற்றிய படங்களைப் பார்க்கும் போது இரண்டு நாட்களின் பின்னர் முன்னேற முடியாமல் தவிக்கின்றார்கள் போலிருக்கின்றது. பிழையான போர்த்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் ஒரு சிறந்த படையினர் தவிக்கின்றனரா? சரியான போர்த்திட்டத்தை ஒரு மோசமான படையினரால் நிறைவேற்ற முடியவில்லையா? அல்லது ஒரு மோசமான போர்த்திட்டத்தை ஒரு திறனற்ற படையினரால் நிறைவேற்றவே முடியவில்லையா? இரசியாவின் செஸ்னியா பிரதேசம், ஜோர்ஜியா, சிரியா, உக்ரேனின் கிறிமியா ஆகியவற்றில் நடந்த போர்களில் இரசியப் படைகள் சிறப்பாகச் செயற்பட்டன. ஆனால் 1979இன் பின்னர் ஒரு வலிமை மிக்க எதிரியுடன் இரசியப் படையினர் முதற்தடவையாக 2022 பெப்ரவரி 24-ம் திகதியில் இருந்து மோதுகின்றனர். இரசியப் படையினர் முன்னேற முடியாதபடியால் இரசியா கொத்தணிக் குண்டுகள் காற்று அகற்றும் குண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட குண்டுகளைப் பாவிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

உக்ரேனியர்களின் கடும் எதிர்ப்பு

முதல் இரண்டு நாட்களும் உக்ரேனியப் படையினர் போராடியதிலும் பார்க்க அதிக உக்கிரமாக உக்ரேனியப் படையினர் போராடத் தொடங்கியுள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. 2014-ம் ஆண்டின் பின்னர் உக்ரேனியப் படையினருக்கு அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாட்டுப் படையினரும் தீவிர பயிற்ச்சி வழங்கியுள்ளனர். ஆனாலும் அவர்கள் வழங்கிய படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பாதுகாப்பு படைக்கலன்கள் மட்டுமே கேந்திரோபாய தாக்குதல் படைக்கலன்கள் அல்ல. நெடுந்தூர ஏவுகணைகள் உக்ரேனியர்களுக்கு வழங்கப்படவில்லை. தோளில் வைத்து வீசும் குறுந்தூர ஏவுகணைகள் தான வழங்கப்பட்டன.

உதவாக்கரையில் தொடங்கிய போர்

உக்ரேனின் தலைநகருக்கான குறுகிய தூரம் பெலரஸ் எல்லையில் இருந்து இருப்பதால் அங்கு படையினரைக் இரசியா குவித்தது. உக்ரேன் – பெலரஸ் எல்லையில் உள்ள அணுக்குண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட செர்னோபில் என்ற மக்கள் வசிக்காமல் நாற்புறமும் சுவர் கட்டி மூடிய நகரை இரசியப் படைகள் முதலில் கைப்பற்றினர். 2022 ஜனவரி 17-ம் திகதியில் இருந்து 38 நாட்கள் இரசியப் படையினர் பெலரஸில் காத்திருந்தனர். போதிய வசதிகள் இன்றி அவர்கள் பெலரஸில் காத்திருந்தமையால் சலிப்படைந்தனரா?

விநியோக (Logistics) வலுவில்லையா?

படையினருக்கான விநியோகம் என்பதில் இரசியப் படையினர் எப்போது திறமையற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என பல படைத்துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஜெனரல் ஒமர் பிரட்லி என்ற அமெரிக்கப் படைத்துறை அதிகாரி “கற்றுக் குட்டிகள் மூலோபாயம் பற்றிப் பேசுவார்கள். நிபுணர்கள் விநியோகம் பற்றிப் பேசுவார்கள்” என்றார். இரசியர்கள் தாம் கற்றுக் குட்டிகள் என உக்ரேனில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நலிவுப் புள்ளியை அறிந்த உக்ரேனியர்கள் இரசியாவின் விநியோகச் சேவைகள் மீது தமது தாக்குதலை தீவிரப்படுத்தினர். விநியோக வண்டிகள் அழிப்பதற்கு இலகுவானவை என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் உக்ரேனுக்குச் சென்ற இரசியப் படையினருக்கு தேவையான உணவு, சுடுகலன்கள், உதிரிப்பாகங்கள் போன்றவை சீராக விநியோகிக்கப் படவில்லை. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இரசியாவின் விநியோக முறைமையைப் பற்றி மோசமாக விபரிப்பதை நம்பக் கூடாது என விவாதிக்கலாம். ஆனால் சீன ஊடகமான South China Morning Post 2022 மார்ச் 2-ம் திகதி இரசியப் படையினர் உக்ரேனில் விநியோகப் பிரச்சனையை எதிர் கொள்கின்றனர் என செய்தி வெளியிட்டுள்ளது. 

விநியோகம் சரி ஆனால் நினைத்தது நடக்கவில்லை

இரசியர்களுக்கு எப்போதும் தமது திட்டமிடலில் பெரும் நம்பிக்கை உண்டு. ஐந்தாண்டு திட்டங்கள் பல கண்டவர்கள். அவர்களின் திட்டப்படி 48 மணித்தியாலத்தில் உக்ரேனியப் படையினர் சரணடைவார்கள் அல்லது தப்பி ஓடுவார்கள். அதனால் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள், சுடுகலன், சாப்பாடு ஆகியவற்றுடன் மட்டும் சென்றார்கள். உக்ரேனியர்களின் எதிர்ப்பு எதிர்பார்த்ததிலும் உக்கிரமாக இருந்தது. இதனால்தான் இரசியப் படைகள் பின்னடைவைச் சந்திக்கின்றன என்ற கருத்தும் உண்டு.

தரை-விமானப் படைகளிடை ஒருங்கிணைப்பு இல்லையா?

கீவ் நகருக்கு தெற்கே உள்ள Hostomel விமான நிலையத்தை கைப்பற்ற முன்னரே அங்கு II-76 என்னும் துருப்புக்காவி விமானங்கள் இரண்டை இரசியா தரையிறக்க முயன்ற போது அவை சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை ஒவ்வொன்றிலும் நூறு படையினர் இருந்தனர். இரசியாவின் தரைப்படைக்கும் விமானப் படைக்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு செயற்பாடு இல்லை என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். நேட்டோவிற்கு சொந்தமான பல வான்சார் முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு ஆளிலி விமானங்கள் (air-borne early warning & control -AEW&C) உக்ரேன் நகர்களை வட்டமிட்டபடியே இருக்கின்றன. அதை இரசியாவால் முன் கூட்டியே அறிய முடியவில்லை. உக்ரேனியர்கள் கைது செய்த இரசியப் படையினரில் பலருக்கு தாம் ஏன் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டோம் என்பது தெரியாது என உக்ரேன் தெரிவித்தது.

எதிர்பாராதவற்றை எதிர்கொள்ள முடியவில்லையா?

எந்த ஒரு படை நகர்விலும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும். அப்போது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இரசியப் படையினர் 2014-ம் ஆண்டு உக்ரேனை ஆக்கிரமித்த போது எதிர் கொள்ளாத எதிர்ப்பை. 2022இல் சந்திக்கின்றனர். இது இரசிய படைத்தளபதிகள் எதிர்பார்த்திருக்க வேண்டிய எதிர்ப்பு. ஆனால் எதிர்பாராத எதிர்ப்பைச் சந்திக்கின்றார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட படையினரில் பெரும்பாலானவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஓராண்டு பயிற்ச்சி மட்டும் பெற்றவர்கள் என மேற்கு நாட்டு படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனித்து சென்ற தாங்கிகள்

போர்த்தாங்கிகள் காலாட் படையின் அல்லது வான் படையின் பாதுகாப்புடன் செல்வது வழமை. ஆனால் உக்ரேனுக்குள் இரசிய தாங்கிகள் வேறு பாதுகாப்பின்றிச் சென்றன. அதனால் துருக்கி கொடுத்த Bayrakrar TB2 ஆளிலி போர்விமானங்களில் இருந்து வீசிய ஏவுகணைகள், அமெரிக்கா கொடுத்த ஜவலின் ஏவுகணைகள் பிரித்தானியா கொடுத்த NLAW ஏவுகணைகள் ஆகியவை பல இரசிய தாங்கிகளை அழித்தன. தற்காலத்தில் போரின் முக்கிய பங்கு வகிப்பன வான்மேன்மையும் (Air superiority) வானாதிக்கமும் (Air dominance) ஆகும் இவை இரண்டையும் இரசியா நிலைநிறுத்தக் கூடிய வகையில் போதிய விமானப் படை அதனிடமிருந்த போதிலும் இரசியா தேவையான விமானங்களை உக்ரேனுக்கு அனுப்பவில்லை. இரசிய தாங்கிகள் பெரும்பலும் பகல் நேரத்தில் தமது நகர்வுகளைச் செய்வதால் பல இழப்புக்களைக் சந்திக்கின்றன. இரவில் பார்க்கக் கூடிய கருவிகள் தாங்கிகளில் பொருத்தப்படவில்லை. அவற்றிற்கு இரசியாவில் தட்ட்டுப்பாடு எனச் சொல்லப்படுகின்றது. 

பொறியியல் பிரிவு (Engineering Division)

படைத்துறையில் பொறியியல் பிரிவு (Engineering Division) முக்கிய பங்காற்றுகின்றது. இதில் பல்வேறுபட்ட துறைகள் உள்ளன. அதில் ஒன்று படையினரைன் போக்கு வரத்துக்கு வசதிகள் செய்வது. படையினரின் நகர்வைத் தடுக்க பாலங்கள் உடைக்கப்பட்டால் இந்தப் பிரிவினர் துரிதமாக பாலம் அமைத்துக் கொடுப்பர். தேவையான போது புதிய பாலங்களையும் அமைத்துக் கொடுப்பர். உக்ரேனியப் படையினர் இரசியப் படையினரின் முன்னேற்றங்களைத் தடுக்க பாலங்களை தகர்த்த போது இரசியாவால் புதிய பாலம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது  என்பது இரசியப் படையினரின் இன்னொரு நலிவற்ற புள்ளியாக கருதப்படுகின்றது. 

புட்டீனுக்கு மட்டுமே தெரிந்த புதிர்

இரசியா தனது முழு வலிமையுடன் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தினால் அதிக உயிரழப்பு ஏற்படும். அதனால் உலகெங்கும் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பும் என்பதை புட்டீன் உணர்ந்து தனது போர் முறையை வகுத்துள்ளாரா? நேட்டோ படையினர் ஈராக்கிலும் லிபியாவிலும் செய்தது போல் முதலில் வான் தாக்குதலால் எதிரியின் படைவலிமையை முற்றாக சிதைப்பது என்ற வழியை அவர் ஏன் பின்பற்றவில்லை? உயிரிழப்பைத் தவிர்க்கவா அல்லது அவரிடம் சரியான உளவுத்தகவல் இல்லையா? ஆனாலும் இரசியா தனது புதிய போர்விமானங்களான SU-35, SU-57, Checkmate போன்ற விமானங்களை ஏன் போரின் ஆரம்பத்தில் களமிறக்கவில்லை? ஏன் பரந்த அளவில் ஆளிலிப்போர்விமானங்கள் பாவிக்கப்படவில்லை? இவற்றிற்கான விடை புட்டீனுக்கு மட்டுமே தெரியும்.

இரசியப் படையினரின் முன்னேற்றம் தாமதப் பட்டாலும் அவர்கள் முன்னேறிய இடங்களை உக்ரேனியர்களால் 2022-03-03 வரை திரும்பக் கைப்பற்றவில்லை. இரசியா இனி மூர்க்கத்தனமாக தாக்கும். அதை முன் கூட்டியே அறிந்த நேட்டோ நாடுகள் போர்க்குற்றம் எனப் பேசத் தொடங்கிவிட்ட்னர். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் 02-03-2022 தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

முந்தைய கட்டுரைகள்:

1. புட்டீனின் உயிருக்கு ஆபத்தா?: https://www.veltharma.com/2022/02/blog-post_28.html

2. உக்ரேனும் புவிசார் அரசியல் கோட்பாடுகளும்:  https://www.veltharma.com/2022/02/blog-post_26.html

3. உக்ரேனில் அமெரிக்க Javelins, இரசிய T-90 Tanks, பிரித்தானிய NLAW: https://www.veltharma.com/2022/02/javelins-t-90-tanks-nlaw.html

4. புட்டீனின் இரண்டாம் சோவியத் ஒன்றியம்:  https://www.veltharma.com/2021/12/blog-post_30.html

Monday, 28 February 2022

புட்டீனின் உயிருக்கு ஆபத்தா?

  



புட்டீன் மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற செய்தியை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் பரப்புகின்றன. புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்பிய நான்காம் நாள் இரசியா மீதான பொருளாதாரத் தடையை மேற்கு நாடுகள் அதிகரித்த போது புட்டீன் தன்னுடைய அணுக்குண்டு வீசும் படைப்பிரிவை உயர் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மேற்கு நாடுகளில் அவரது மன நிலை குறிந்த செய்திகள் பரவலாக அடிபடத் தொடங்கியுள்ளன. வெள்ளை மாளிகை, அமெரிக்க மூதவை, பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரும் படைத்துறைப் பின்னணியைக் கொண்டவருமான இயன் தன்கன் சிமித் எனப் பலரும் புட்டீனின் மன நலம் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள்.

கைவீச்சு குறைந்து விட்டதாம்!

பிரித்தானிய வானொலி ஒன்று புட்டீன் பற்றி நரம்பியங்கியல் (Nurology) நிபுணர் ஒருவரை பேட்டியும் கண்டது. அவர் புட்டீன் நடக்கும் போது அவரது வலது கையின் வீச்சு தூரம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டு போவதை வைத்துக் கொண்டு புட்டீனின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் புட்டீன் தற்போது இருக்கும் மனநிலையில் அவர் மற்றவரகளின் ஆலோசனைகளைக் கேட்க மாட்டார் என்றார். தனக்கு plastic surgery செய்து முகச் சுருக்கமின்றி இளமையாகத் தோற்றமளிக்கும் புட்டீன் தொடர்ச்சியாக steroid என்னும் மருந்தை உட்கொள்கின்றார் என்றும் செய்திகள் அடிபடுகின்றன. Steroid உட்கொள்பவர்களுக்கு irritability, anxiety, aggression, mood swing, manic symptoms and paranoia ஆகியவை ஏற்படும். அமெரிக்கவின் Newsweek சஞ்சிகை புட்டீனை வஞ்சமாகப் புகழ்ந்து எழுதிய கட்டுரையில் இரசியாவைக் கண்டு உலகம் அஞ்ச வேண்டும் என்ற தனது நோக்கத்தை புட்டீன் உக்ரேனில் நிறைவேற்றி விட்டார் என்கின்றது. அவர் செஸ்னியா, ஜோர்ஜியா, சிரியா, கிறிமியா ஆகியவற்றில் செய்த படை நடவடிக்கைகள் வெற்றியில் முடிந்ததையும் அச்சஞ்சிகை சுட்டிக் காட்டுகின்றது.

நுண்ணறிவாளி புட்டீன்

சோவியத் ஒன்றிய காலத்தில் பொருளாதாரம் படித்தவர் புட்டீன். சோவியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய அம்சம் நீண்ட காலத் திட்டமிடல். பொருளாதாரம் படித்துவிட்டு சோவியத்தின் உளவுத்துறையான கேஜிபியில் பணிபுரிந்தவர் புட்டீன். அத்துடன் குங்ஃபு விளையாட்டில் தேர்ச்சி பெற்று கறுப்பு பட்டி வென்றவர். நன்கு சதுரங்கம் ஆடக் கூடியவர். இவற்றால புட்டீன் நீண்ட காலத் திட்டமிடல், எதிரியின் தகவல்களை அறிந்து கொள்ளுதல், எதிரியும் நகர்வுகளை முன் கூட்டியே திட்டமிட்டு தன் நகர்வுகளை, தன் நகர்வுக்கு எதிரியின் நகர்வு எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளுதல் ஆகிய திறமைகளைப் பெற்றுள்ளார். அதனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை Genius – நுண்ணறிவாளன் என விபரித்தார்.

20-ம் நூற்றாண்டின் விபத்தை புட்டீன் சரி செய்வாரா?

1991-ம் ஆண்டு ஜெர்மனியை கிழக்கு என்றும் மேற்கு என்றுப் பிரித்த பேர்லின் சுவர் தகர்க்கப்படும் போது சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தில் உள்ள கிழக்கு ஜெர்மனியில் உளவாளியாகப் பணிபுரிந்தவர். எந்த சுவர் விழக்கூடாது என்ற நோக்கத்தில் அவர் பணி செய்தாரோ அதே சுவர் அவர் கண்முன் சரிந்தது. அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியமும் சரிந்தது. பனிப்போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் வெற்றி பெற்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இரசியாவிடமிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைந்தன. பனிப்போருக்குப் பின்னரான கிழக்கு ஐரோப்பிய நிலையை புட்டீன் ஏற்றுக் கொள்ளவில்லை, இது நம்ம ஏரியா. இது எதிரிகளிடம் போவதா என புட்டீன் மனதுக்குள் கொதித்தார். 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார் அரசியல் விபத்து சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்றார் புட்டீன்.

இரசியப் பொருளாதாரத்தை மீட்ட புட்டீன்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசிய அதிபராக வந்த பொறிஸ் யெல்ஸ்ரினின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக வலென்ரின் யுமாசேவ் என்பவர் இருந்தார். அவருடைய மகளையெ யுமாசேவ் திருமணம் செய்தார். யுமாசேவ் முலமாக யெல்ஸ்ரினுக்கு விளடிமீர் புட்டீன அறிமுகமானார். அவரது நிர்வாகத்தில் பணியும் புரிந்தார். 1999 ஓகஸ்ட் மாதம் புட்டீனை யெல்ஸ்ரின் தலைமை அமைச்சராக்கினார். 1998இல் மோசமான பொருளாதார நெருக்கடியை இரசியா சந்தித்தது. அதிலிருந்து இரசியாவை புட்டீன் சாதுரியமாக மிட்டெடுத்தார். அதில் முழு மகிழ்ச்சி அடைந்த யெல்ஸ்ரின் புட்டீனிடம் இரசியாவை 1999 டிசம்பரில் ஒப்படைத்தார். அன்றில் இருந்து இன்றுவரை இரசியாவின் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் விளடிமீர் புட்டீன் இருக்கின்றார். இரசிய அதிபர் தொடர்ச்சியாக இரண்டு தடவை பதவி வகிக்கலாம் என்ற அரசியலமைப்பை புட்டீன் மாற்றி தன் ஆயுள் முடியும் வரை தான் பதவியில் இருக்க வழி செய்தார்.

கொள்ளையர்களைக் கொள்ளையடித்தார்?

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் செல்வங்களை கொள்ளையடித்து பலர் பெரும் செல்வந்தரானார்கள். அவர்களை ஆதரத்துடன் பிடித்த புட்டீன் சிலரை சிறையில் அடைத்தார். மற்றவர்களிடம் உங்களையும் இப்படி அடைப்பேன் என மிரட்டினார். அவர்கள் தம் செல்வத்தை புட்டீனுடன் பகிர்ந்து கொண்டார்கள் அதனால் புட்டீன உலகின் முன்னணி செல்வந்தரானார். அவரது சொத்து மதிப்பு $190பில்லியன் எனக் கருதப்படுகின்றது. எல்லாச் செல்வந்தர்களையும் சிறையில் அடைத்தால் இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது புட்டீனுக்கு தெரியும்.

உறுதி மொழி வேறு உடன்படிக்கை வேறு

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவிற்கும் சோவியத் அதிபர் மிக்கையில் கோர்பச்சேவிற்கும் இடையில் தொடர் பேச்சு வார்த்தையில் நடந்தது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் பேக்கர் கோர்பச்சேவிடம் உரையாடும் போது அமெரிக்கா கிழக்கு ஜெர்மனியை மட்டும் தான் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கும். அதைத் தாண்டி ஒரு அங்குலம் கூட கிழக்கு நோக்கி நேட்டோ நகராது எனச் சொல்லியிருந்தார். அதன் பின்னர் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் வார்சோ ஒப்பந்த நாடுகளுமாக 14 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன. 2014 உக்ரேனின் கிறிமியாவை இரசியா கைப்பற்றிய போது ஜேம்ஸ் பேக்கர் தான் பேச்சு வார்த்தையின் போது சொன்னதை உடன்படிக்கையாக கருத முடியாது என்றார்.

ஜோர்ஜியாவிற்கும் உக்ரேனுக்கும் பாடம்

2006இல் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகிய ஜோர்ஜியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது விளடிமீர் புட்டீன் அதை ஆக்கிரமித்து துண்டாடினார். அதே போல 2014இல் உக்ரேனைத் துண்டாடினார். அத்துடன் உக்ரேன் அடங்கவில்லை. உக்ரேன் அதிபர் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரேனின் அரசிலமைப்பு திருத்தப்பட்டது. அதனால் சினமடைந்த புட்டீன 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனுக்குள் மீண்டும் இரசியப் படையை அனுப்பினார்.

மேற்கு நாடுகள் புட்டீன் மீது தனிப்பட்ட பொருளாதாரத் தடை விதித்தன. அவரது சொத்துக்கள் எங்கு இருக்கின்றன என்பது பற்றி மேற்கு நாடுகளால் அறிய முடியவில்லை. பனிப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிலவிய பாதுகாப்பு ஒழுங்கை புட்டீன் தகர்த்து விட்டார். 2022 பெப்ரவரி 27-ம் திகதி பிரித்தானிய வானிலியின் நேயர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் புட்டீனின் தலைக்கு ஏன ஒரு விலை குறிக்கக் கூடாது என பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரும் படைத்துறைப் பின்னணியைக் கொண்டவருமான இயன் தன்கன் சிமித்திடம் கேள்வியை முன் வைத்தார். அதற்கு அவர் நேரடியான் பதில் கொடுக்காமல் அப்படி ஒரு விலையும் குறிக்கப்படவில்லை என்றார். இப்போது பல மேற்கு நாட்டு ஊடகங்களில் போர் நடப்பது உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் அல்ல என்றும் போர் உக்ரேனுக்கும் புட்டீனுக்கும் இடையில்தான் நடக்கின்றது என்றும் பரப்புரைகள் நடக்கின்றன. புட்டீனுக்கு எதிராக இரசியர்களை கிளர்ச்சி செய்யும் நோக்கத்துடனேயே இரசியாமீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படுகின்றன. பொருளாதாரத் தடைகளைப் பார்த்து புட்டீன பின் வாங்கக் கூடியவர் அல்லர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. லிபியாவின் கடாஃபிக்கும் ஈராக்கின் சதாம் ஹுசேனுக்கும் நடந்தது  புட்டீனுக்கும் நடக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...