Sunday, 31 October 2021

சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்தால் கலங்கிப் போயுள்ளேன்!

  


Tamil Advocacy Group ஒழுங்கு செய்த முதலாவது கலந்துரையாடலில் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்ன ஒரு வாக்கியம்: ஈழத்தமிழர் தொடர்பாக India ஒரு role play பண்ணும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா தனது role ஐ play பண்ணும்

இரண்டாம் கலந்துரையாடலில் சொன்ன இரு வாக்கியங்கள்:

ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் இந்தியாவை Involve பண்ண வைக்க வேண்டும்.

இந்தியாவை மீறி வேறு யாரும் தமிழர்கள் பிரச்சனையைக் கையாள முடியாது

இந்த 3 வாசகங்களைக் கேட்டதில் இருந்து நான் கலங்கிப் போயிருக்கின்றேன்.

நேரு கொத்தலாவலை ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சௌமியமூர்த்தி தொண்டமான் – ஜீஜீ பொன்னம்பலத்தை ஒன்றுபடமல் பிளவு படுத்தியதில் India’s role எமக்குத் தெரியும்.

தமிழ் மீனவர்களுக்கு பல வசதிகள் உள்ள கச்சதீவு தாரைவார்ப்பில் India’s role எமக்குத் தெரியும்.

1980களில் வேண்டுமென்றே பல போராளி அமைப்புகளை உருவாக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

விடுதலைப்புலிகளுக்கும் – ரெலோவிற்கும் இடையில் நடந்த மோதலில் India’s role எமக்குத் தெரியும்.

யாழ் மருத்துவமனைப் படுகொலை உட்பட்ட பல கொலைகளில் India’s role எமக்குத் தெரியும்.

படைக்கலன்களைக் கொடுங்கள் உங்களுக்கு நாம் பாதுகாப்பு என்ற தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையில் நடந்த இனக்கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2007-09 வரை நடந்த இனக்கொலைப் போரில் எத்தனை ஆயிரம் இந்தியப்படையினர் ரோல் பிளே பண்ணினார்கள் என்பதும் எமக்குத் தெரியும்.

அப்போரின் போது இந்தியக் கடற்படையினர் எமது கடற்பரப்பை சுற்றி நின்று பிளே பண்ணிய role எமக்குத் தெரியும்.

ரணில் தலைமை அமைச்சராகவும் சந்திரிக்கா அதிபராகவும் இருந்த வேளையில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை வழங்க சிங்களம் முன்வந்த போது அதைக் குழப்ப ரணில் ஆட்சியைக் கலைத்து ஜேவிபியையும் இணைத்து மஹிந்தவை தலைமை அமைச்சர் ஆக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வீடுகள் அழிப்பில் India’s role எமக்குத் தெரியும்.

மூன்று இலட்சம் அப்பாவிகள் கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2009 போரின் பின்னர் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் இலங்கையைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தின் வாசகங்களை மாற்றி இலங்கையை பாராட்டும் தீர்மானமாக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக வரும் தீர்மானங்களில் India’s role எமக்குத் தெரியும்.

India’s role என்று எங்களுக்கு ரீல் விடுகின்றார்கள்.

சுரேஸ் பிரேமசத்திரன் இந்தியா role play பண்ணும், பண்ண வைக்க வேண்டும் என்கின்றார்.

இந்தியா இனியும் role play பண்ணி இன்னும் எத்தனை இலட்சம் தமிழர்களை இந்தியா பலியெடுக்கப் போகின்றதோ என்பதை எண்ணி நான் கலங்கிப் போயுள்ளேன்.

பிரம ஹத்தி பிடித்த இந்தியாவை role play வைக்க வேண்டும் என்பவர்களுக்கு சித்தப் பிரமை என்பது மட்டும் உண்மை.

இந்தியா role play பண்ணுவதென்றால் இன்னும் ஓர் அமைதிப்படை என்னும் பெயரில் கொலைவெறி நாய்களின் படையா? இன்னும் ஒரு மண்டையன் குழுவா? 

ஐயோ தமிழினம் தாங்காதய்யா!

Thursday, 28 October 2021

சீன DF-41 மலை! இந்திய அக்னி-5 மடு!

 


சீனாவின் எப்பாகத்தையும் அணுக்குண்டுகளால் தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணைகளை 2021 ஒக்டோபர் 27-ம் திகதி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ஒடிசாவி மாநிலத்தின் கடற்பரப்பில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் இருந்து வீசிப் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்தியா தெரிவிக்கின்றது. அக்னி-5 ஆல் 1.1தொன் எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிச் செல்ல வல்லது. ஆனாலும் இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது. அக்னி-5 இந்தியாவிற்குத்தான் "அதிநவீனமனது" . சீனாவிற்கல்ல. அது சீனாவிற்கு அதிரடியாக அமையப்போவதுமில்லை. அணுக்குண்டுகளால் போர் செய்யும் போது நீயும் தொலைந்தாய், நானும் தொலைந்தாய் என்ற நிலைதான். அதில் யார் அதிக அணுக்குண்டுகளை அதிக வேகத்தில் வீசுவார்கள் என்பதுதான் முக்கியம். 

கண்டம் விட்டு கண்டம் பாயுமா? (ICBM?)

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை (Inter-continental Ballistic Missiles) என வகைப்படுத்தப்பட்டுள்ள அக்னி-5 ஏவுகணை சீனாவிற்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றது, சீனாவை கலங்க வைத்துள்ளது, சீனாவை கரிசனை கொள்ள வைத்துள்ளது என இந்திய ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை குறைந்தது 5500கிலோ மீட்டர் வரை பாயவேண்டும். ஆனால் அக்னி-5 5000கிலோ மீட்டர் தான் பாயக்கூடியது எனவும் கருதப்படுகின்றது. இந்து இதிகாசங்களில் அக்னி படைக்கலன் தேவர்களில் ஒருவரான அக்னிபகவானிற்கு உரியது. மகாபாரதப் போரின் 12-ம் நாள் போரில் அர்ச்சுனன் மன்னன் பகதத்தனை அக்னி அம்பு எய்து கொன்றான் எனக் கூறப்படுகின்றது.

அக்னி-5 ஹைப்பர்சோனிக் ஏவுகணையா?

அக்னி-5 தனது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகத்தில் பாயும் எனச் சொல்லப்படுகின்றது. அக்னி-5 ஏவுகணை 17.5மீட்டர் உயரமும் 2மீட்டர் விட்டம் கொண்ட குறுக்கு வட்டமும் கொண்டது. ஏவப்படும் போது அதன் எடை 49,000 முதல் 55,000கிலோ கிராம் வரை இருக்கும். இதை பார ஊர்திகளில் எடுத்துச் சென்று தெருக்களில் இருந்து ஏவலாம். நிலையான ஒரு ஏவுதளம் தேவையில்லாத ஏவுகணை என்பதால் அதை இலக்கு வைத்து எதிர்கள் தாக்குவது கடினமாகும். அக்னி-5 ஏவுகணைகளை இந்தியா 2013-ம் ஆண்டிலும் 2015-ம் ஆண்டிலும் 2016-ம் ஆண்டிலும் பரிசோதித்தித்து பின்னர் 2018இல் இரண்டு தடவை பரிசோதித்தது. அக்னி-5இல் கணினி, வழிகாட்டல் முறைமை ஆகியவையும் உள்ளன. இந்தியாவின் முதலாவது அக்னி-1 ஏவுகணை 700கிமீ பாயக்கூடியது. அக்னி-2 2000கிமீ, அக்னி-3 ஏவுகணையும் அக்னி-4 2500முதல் 3000கிமீ வரை பாயக்கூடியவை. அக்னி-5இன் உண்மையான பாய்ச்சல் தூரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகின்றது. அது உண்மையில் 8000கிமீ பாயக்கூடியது எனவும் சொல்லப்படுகின்றது. அதை அறிந்தால் ஐரோப்பிய நாடுகள் குழப்பமடையலாம் என்பதால் குறைத்துச் சொல்லப்படுகின்றது என்கின்றார்கள். அக்னி-5 ஏவுகணையை  எதிரிகளின் அலைவரிசைகளில் மூலம் குழப்ப முடியாது எனவும் சொல்லப்படுகின்றது. 

பல இலக்குகளைத்தாகும் அக்னி-6 MIRTV

Multiple Independently Targetable Re-entry Vehicle (MITRV) என்பது பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளை தாமாகவே அழிக்கக் கூடியவை. இந்தியா தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் அக்னி-6 ஏவுகணையில் பத்து அணுக்குண்டுகளை தாங்கிச் சென்று பத்து இலக்குகளைத் தாக்கும் வல்லமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் National Interest ஊடகம் இந்தியா இதை உருவாக்கும் வல்லமையைப் பெறும் என்று 2018இல் எதிர்வு கூறி இருந்தது. அக்னி-5 மூன்று மட்டங்களைக் கொண்டது அக்னி-6இல் நான்கு மட்டங்கள் இருக்கும்.

ஹைப்பர்சோனி பிரம்மோஸ்-2

இந்தியா இரசியாவுடன் இணைந்து உருவாக்கும் பிரம்மோஸ்-2 ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஏழு மடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளாகும். ஆனால் அவற்றின் பாய்ச்சல் தூரம் 1000கிமீ மட்டுமே. தரையில் இருந்து 14கிமீ செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து பின்னர் இலக்கை நோக்கி ஏறக்குறைய 90பாகை செங்குத்தாக விழும் (Deep-Dive) பிரம்மோஸ்-2 ஏவுகணை உலகில் உள்ள வழிகாட்டல் ஏவுகணைகளில் (Cruise Missiles) வேகம் கூடியது எனக்கருதப்படுகின்றது. மலைகளிற்குள்ளும் பாறைகளுக்கு உள்ளும் உள்ள இலக்குகளை பிரம்மோஸ்-2 நிர்மூலம் செய்யக் கூடியது. செங்குத்தாக விழக்கூடிய வகையில் அவற்றை உருவாக்கியது ஒரு சிறந்த உபாயமாக கருதப்படுகின்றது. அதனால் பிரம்மோஸ்-2 ஒரு செலவு குறைந்த ஏவுகணையாகும். இரசியாவும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய SU-31-MKI என்னும் பற்பணி-வானாதிக்க போர்விமானத்தில் பிரம்மோஸின் இன்னொரு வகை எவுகணைகள் பொருத்தக் கூடியதாக இருப்பது இந்தியாவிற்கு மேலதிக வலுவைக் கொடுக்கின்றது. ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை தாங்கிய SU-31-MKI விமானங்கள் 122ஐக் கொண்ட 222 Sqadron என்னும் பெயர் கொண்ட விமானப்படையணி சீனாவைத் தாக்குவதற்கென தமிழ்நாட்டின் தஞ்சாவூர் விமானத் தளத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது.

சீனாவின் கிழக்குக் காற்று என்னும் பொருளுடைய DongFeng ஏவுகணைகள் நான்கு தலைமுறையாக உருவாக்கப்படுகின்றது அதன் நான்காம் தலைமுறை DongFeng-41 (DF-41) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாய்ச்சல் தூரத்தில் இது உலகின் இரண்டாவது வலிமை மிக்க ஏவுகணையாகும்.  அதன் பாய்ச்சல் தூரம் 12,000கிமீ முதல் 15,000கிமீ அக்னி-5இன் பாச்சல் துரத்திலும் இரண்டு மடங்கிலும் அதிகமானது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையான DF-41 இன் வேகம் ஒலியிலும் பார்க்க 25மடங்கு ஆகும். இது ஆறு முதல் பத்து வரையிலான அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளைத் தாக்க வல்லது. இதன் ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கக் கூடிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகில் எந்த நாட்டிடமும் இல்லை.  அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஒரு விண்வெளிப்படையை (Space Force) அமைத்தால் மட்டுமே சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும். இந்தியாவின் Centre for Strategy and Technologyயின் இயக்குனர் ராஜ்ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன் இந்தியாவைக் காப்பாற்றுவாரா?

சீனா 2021 ஓகஸ்ட் மாதம் பரிசோதித்த உலகைச் சுற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் அமெரிக்கா என்னும் அம்மியே ஆடிப்போயுள்ள போது இந்தியக் கடுதாசி?

Monday, 25 October 2021

ஏவூர்திகளில்(Rockets) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இணைக்கும் சீனா

  


சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எப்படி எதிர்கொள்வது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் சீனா இன்னும் ஒரு படி மேல் போய் உலகத்தை பகுதியாகச் சுற்றிவந்து இலக்குகளைத் தாக்கும் ஹப்பர்சோனிக் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுர்தியை (Rocket) பரிசோதித்துள்ளது எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. சீனா 2021 ஜூலை மாதம் செய்த பரிசோதனையை ஒக்டோபர் மதம்தான் பிரித்தானிய நாளிதளான Financial Times பகிரங்கப்படுத்தியது. அமெரிக்க இணையவெளி ஊடகம் ஒன்று சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எப்படித் தவிர்ப்பது எனத் தெரியாமல் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை இருப்பதாக பெண்டகனைச் சேர்ந்த Robert Wood என்பவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. அதேவேளை ஒக்டோபர் 21-ம் திகதி அமெரிக்காவின் கடற்படையும் தரைப்படையும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பரிசோதித்ததாக அமெரிக்கப்பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்தது.  

Mach பெறுமானம்

ஒலியிலும் பார்க்க வேகமாக பாய்பவற்றை supersonic என அழைப்பர். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்திலும் அதிகமான வேகத்தில் பாய்பவற்றை ஹைப்பர்சோனிக் என அழைப்பர், பறக்கும் விமானம், பாயும் ஏவுகணை ஆகியவற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வருமது Mach என்னும் அளவீடாகும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையின் வேகம் Mach 5 எனப்படும். தாரை எந்திரத்தில் (Jet Engines) இயங்கும் விமானங்களால் ஆகக் கூடுதலாக Mach 3.5 வேகத்தில் பறக்கும். Ramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 3.5 முதல் Mach 6 வரையிலான வேகத்தில் பாயலாம். Scramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 15 வரையிலான வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றை தற்போதுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது. சீனாவின் செய்கை படைக்கலப் போட்டியை உருவாக்கும் என சில அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட வேறு சில அதை மறுத்துள்ளன.


Fractional Orbital Bombardment System என்பது என்ன?

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஊக்கி ஏவூர்தி (Booster Rocket), நழுவு வண்டி (Glide Vehicle) என இருபகுதிகளைக் கொண்டது. குண்டைக் கொண்ட Glide Vehicleஐத்தாங்கியபடி Booster Rocket நிலத்தில் இருந்து கிளம்பி மேல் நோக்கிய பாதையில் 62மைல்களுக்கு மேல் பயணித்து விண்வெளிவரை சென்று குண்டைக் கொண்ட Glide Vehicleஐ மேலும் மேல் நோக்கு உந்தித் தள்ளிவிடும் மிக உயரச் சென்ற Glide Vehicle புவியீர்ப்பினாலும் தன் உந்துவலுவாலும் கீழே விழும்போது ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குக்கு மேற்பட்ட வேகத்தில் தரையில் தனது இலக்கை நோக்கி பாயும். குண்டு இல்லாமலே ஒரு நழுவு வண்டி (Glide Vehicle) பூமியில் மோதுகையில் அதன் மிதமிஞ்சிய வேகத்தால் பாரிய சேதம் ஏற்ப்படும். அதில் குண்டுகள் அல்லது அணுக்குண்டு இணைக்கப்பட்டால்…..? இப்போது ஏவூர்தி மேல் நோக்கியப் பயணித்து பூமியை பகுதியாகச் சுற்றிவரும் போது மிகத் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கலாம்.  பூமியை சுற்றி ஏவூர்திகள் (Rockets) ஒரு வட்டப்பாதையில் அல்லது நீள்வட்டப்பாதையில் வலம் வரும். பூமியை முழுமையாகச் சுற்றாமல் பூமியின் ஒரு பகுதிக்கு மேலால் மட்டும் ஏவூர்தி சுற்றுவதை பகுதிச் சுற்று (Fractional Orbit) என்பர். இந்தப் பகுதிச் சுற்றை குண்டு வீச்சுக்கு பாவிப்பதை 1960களில் சோவியத் ஒன்றியம் உருவாக்கியது. அதன் மூலம் குண்டுகளை தொலைவில் உள்ள இலக்கின் மீது வீசுவதை பகுதிச் சுழல்தடக் குண்டுவீசல் (Fractional Orbital Bombardment System என அழைப்பர். சீனா அதே போன்ற ஏவூர்தியை ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கச் செய்யும் பரிசோதனையை 2021 ஓகஸ்ட் மாதம் செய்தது. அதில் குண்டுகள் ஏதும் பொருத்தப்படவில்லை. சீனாவின் அடுத்து வரும் பரிசோதனைகள் அதில் குண்டுகளையும் அணுக்குண்டுகளையும் இணைத்துச் செய்யப்படலாம். நீண்ட பயணம் என்பது சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் முக்கிய பகுதியாகும். அப்பெயரையே சீனா தனது புதிய ஏவூர்ந்திக்கு இட்டுள்ளது. சீனா நீண்ட பயணம் (Long March) என்னும் பெயரில் ஒரு ஏவூர்தியை (Rocket) விண்வெளியில் 2021 ஜூலை 27-ம் திகதி ஏவியது. அது ஒலியிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயக்கூடியது. அது பூமியை பகுதியாகச் சுற்றிவந்து தனது இலக்கின் மீது அணுக்குண்டை வீசக் கூடியது எனச் சொல்லப்படுகின்றது.

Glider Vehicle எனப்படும் மிதவை வண்டிகள்

ஹைப்பர் சோனிக் வழிகாட்டல் ஏவுகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒட்சிசனையும் தன்னிடமுள்ள எரிபொருளையும் பாவித்து தனது உந்து வலுவைப் பெற்றுக் கொள்ளும். இவற்றை காற்று சுவாசிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பார்கள். ஏவூர்திகள் வளிமண்டலத்திற்கும் மேலே செல்வதால் அவை தமக்கு தேவையான ஒட்சிசனை திண்ம வடிவத்தில் காவிக்கொண்டு செல்ல வேண்டும். Glider Vehicle எனப்படும் மிதவை வண்டிகள் மூலம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பல நாடுகள் உற்பத்தி செய்ய முயல்கின்றன. அதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன.  அவற்றில் இரசியாவும் சீனாவும் ஒரு படி முன்னேறி அணுக்குண்டுகளை காவிச் செல்லும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஈடு கொடுக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஒதுக்கிய நிதியை அதிகரித்துள்ளது. 2021இல் ஒதுக்கிய நிதி $3.2பில்லியன் 2020இல் $3.8பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு முகவரகம் மேலதிகமாக $247.9மில்லியன் நிதியைக் கோரியுள்ளது.  சீனா உருவாக்கியுள்ள பகுதியான சுழல்தட குண்டுவீச்சு (Fractional Orbital Bombardment – FBO) முறைமை மூலம் செலுத்தப்படும் ஏவூர்ந்து(Rocket) சீனாவில் இருந்து புறப்பட்டு தென்துருவத்தின் மேலாகப் பாய்ந்து அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் இடைமறிப்பு ஏவுகணைகளைத் தவிர்த்து தனது இலக்கின் மீது குண்டு வீசலாம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமை வடதுருவத்தில் உள்ள அலாஸ்கா பனிப்பரப்பில் உள்ளது. சீனா பரிசோதித்த பகுதியான சுழல்தட குண்டுவீச்சு எதிர்பார்த்த இலக்கை துல்லியமாக தாக்காமல் 24மைல் தொலைவில் விழுந்ததாக Financial Times தெரிவித்திருந்தது. அதன் படி அதனால் அசைந்து கொண்டிருக்கும் ஓர் அமெரிக்க விமானம் தாங்கியை துல்லியமாக தாக்க முடியாமல் போகலாம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தமது இலக்கில் இருந்து 520அடிகள் மட்டும் தவறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது


.அமெரிக்காவின் Aegis Combat System

Massachusetts Institute of Technologyஐச் சேர்ந்த அணுப்படைக்கலன்கள் நிபுணரான டேவிட் ரைட் சீனா ஏற்கனவே அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமை முறியடிக்கும் திறனைப் பெற்றுள்ளது என்றார். சீனா அமெரிக்காவை மிஞ்சுவது மட்டும் போதாது மிதமிஞ்சிய நிலையை அடைய வேண்டும் என்பதற்காக பூமியைச் சுற்றிப் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குகின்றது எனக் கருதப்படுகின்றது. அமெரிக்கா தனது Aegis Combat System என்னும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் முறைமைகளை தனது நாசகாரிக் கப்பல்களில் பொருத்தி உலகக் கடற்பரப்பெங்கும் மிதக்க விட்டுள்ளது. இவற்றையும் மிஞ்சும் வகையில் சீனா ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்ச்சிதான் அதன் பகுதியான சுழல்தட குண்டுவீச்சு (Fractional Orbital Bombardment முறைமையாகும்.

அமெரிக்காவின் விண்வெளிப்படை

அமெரிக்கா 2020-ம் ஆண்டு தனக்கு என ஒரு விண்வெளிப்படையை உருவாக்கியது. அதற்கு என பல சிறிய குறைந்த உயரத்தில் செயற்படும் Black Jacket எனப்படும் பல செய்மதிகளை உருவாக்கியது. அவற்றை ஒன்றிணைக்க Pitboss என்னும் மென்பொருளையும் உருவாக்கியுள்ளது. Black Jacket இன் முக்கிய பணி உலகெங்கும் அமெரிக்காவிற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளைக் கண்காணிப்பதாகும். அமெரிக்காவின் விண்வெளிப்படைக்கும் சீனாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கும் இடையிலான போட்டிச் செய்திகளை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள்

அமெரிக்காவின் படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை ஊடகங்களிற் சிலவற்றையும் படைத்துறை ஆய்வாளரகள் சிலரையும் தமது கைக்குள் வைத்திருப்பது வெளிப்படையான ஒன்று. அவர்கள் அமெரிக்காவின் எதிரிகளின் படை வலிமையையும் அவர்களால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தையும் மிகைப்படுத்தி எழுது அமெரிக்காவை பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒருக்கத் தூண்டுவார்கள். அமெரிக்காவின் படைக்கல உற்பத்தியில் பெரும்பகுதி தனியார் துறையினரிடம் உள்ளன. அதேவேளை பாதுகப்புச் செலவு அதிகரித்தால் அமெரிக்கா தம்மீது அதிக வரியை சுமத்தும் என அஞ்சும் செல்வந்தர்கள் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்ற செய்தியை விரும்புவதால் அவர்களுக்கு சார்பான ஊடகங்களும் ஆய்வாளர்களும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவூர்தி பரிசோதனையால் ஆபத்து எல்லை என எழுதுகின்றனர்.

பிரித்தானிய நாளிதழான Financial Times வெளியிட்ட செய்தியை மறுத்த சீனா தான் பர்சோதித்தது மீளப்பாவிக்கக் கூடிய விண்வெளி ஓடம் என்கின்றது. சீனாவைச் சுற்றவர அமெரிக்கா பல படைத்தளங்களை வைத்துள்ளது. அவற்றில் இருந்து பல அணுக்குண்டுகளை அமெரிக்காவால் சீனா மீது வீச முடியும். சீனாவில் இருந்து ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் குறைந்த தொலைவில் கூட அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ளன. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவிற்கு இன்னும் நெருக்கமாகச் சென்று புலப்படா விமானங்கள் மூலம் அணுக்குண்டுகளை சீனா மீது வீசலாம். இவற்றை மிஞ்சக் கூடிய வகையில் சீனா செயற்படுகின்றது.

Saturday, 23 October 2021

சீனா ஒரு வளர்முக நாடா?

 


சென்ற நூற்றாண்டின் இறுதிவரை சீனா தனது படை வலிமையை இரகசியமாகவே வைத்திருந்தது. அமெரிக்காவும் இரசியாவும் தங்கள் படைவலிமையை பகிரங்கப்படுத்தி “எங்கிட்டே மோதாதே” என்ற செய்தியை ஒன்றிற்கு ஒன்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. சீனா தனது படைவலிமையை இரகசியமாக வைத்திருந்து “என் வலிமை உனக்குத் தெரியாது, எங்கிட்டே வச்சுக்காதே” என்ற அமைதியான செய்தியை வெளிவிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் சீனா தனது “பொதுவுடமை” ஆட்சி எனப்படும் ஆளுமையில் தன்னாட்டு இளையோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது வலிமையை பகிரங்கப்படுத்த தொடங்கியது. சீனாவின் பாரிய நீர்மூழ்கிகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பரிசோதனைகள், விமானம் தாங்கிக் கப்பல் கட்டுமானங்கள் இரகசியமாக மேற்கொள்ள முடியாதவை ஆகும்.

வளர்முக நாடாக இருக்க சீனா விரும்புகின்றது

தொழில்நுட்பம் வர்த்தகம். உள் நாட்டுப் போக்குவரத்து, நகர கட்டுமானம் போன்றவற்றில் பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்க சீனா முன்னேறியிருந்தாலும் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகவே முன்னிலைப்படுத்துகின்றது. உலக வங்கியினதும் ஐக்கிய நாடுகளினதும் கட்டளைவிதிகளின் படி சீனா ஒரு வளர்முக நாடாக கருதப்படுகின்றது. சீன அரசும் தன்னை ஒரு வளர்முக நாடாக கருதப்படுவதையும் அடையாளப்படுத்தப்படுவதையும் விரும்புகின்றது. ஆனால் எது வளர்முக நாடு எது வளர்ச்சி அடைந்த நாடு என பகுத்து அறிவதில் ஒரு ஒருமித்த உடன்பாடு இல்லை. ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடா என முடிவு செய்வதில் அதன் பொருளாதார உற்பத்தி, தனிநபர் வருமானம், குடிமக்கள் சராசரி வாழும் காலம், கல்வி நிலைமை போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.

உலக வங்கியின் நிலை

உலக வங்கி வளர்முக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற பாகுபாட்டைப் பயன்படுத்தாமல் 1. உயர் வருமானம். 2. உயர்-நடுத்தர வருமானம். 3. குறை-நடுத்தர வருமானம். 4. குறைந்த வருமானம் என நாடுகளைப் பிரித்து வைத்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது ஜீஎஸ்பி வரிச் சலுகை வழங்குவதில் இதையே பாவிக்கின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை அதன் மக்கள் தொகையால் பிரிக்க வருவதை தனிநபர் வருமானமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உலக வங்கி நாடுகளைத் தரம் பிரிக்கின்றது. அந்த வகையில் சீனாவின் தனிநபர் வருமானம் $10,410 ஆகும். அதனால் சீனா உயர்-நடுத்தர வருமான நாடாக உலக வங்கியால் பார்க்கப்படுகின்றது.

ஐநாவின் மனித மேம்பாட்டு சுட்டி (Human Development Index – HDI)



மனித மேம்பாட்டுச் சுட்டி மக்களின் வருமானம், ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து வசதி, தொடர்பாடல் வசதி, பாதுகாப்பு, சூழல் மாசு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றது. ஐநாவின் கணிப்பின்படி இச்சுட்டிப்பட்டியலில் நோர்வே உச்சத்தில் இருக்கின்றது அமெரிக்கா 17-ம் இடத்தில் இருக்க இலங்கை-72. சீனா-85, இந்தியா-131, பங்களாதேசம்-133, பாக்கிஸ்த்தான்-154 ஆகிய நிலைகளில் இருக்கின்றன.

சமமற்ற வருமானப் பங்கீடு

சீனாவின் பல்வேறு பிரதேசங்களைப் பார்க்கும் போது அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு மோசமாக இருக்கின்றது. சீனாவின் கரையோரமாக அமைந்த கிழக்குப் பிராந்தியம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் உள்ளகப் பிரதேசங்கள் வளர்ச்சி குன்றுதலாக இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் தொகையில் 80விழுக்காட்டினர் நகரப்புறங்களில் வாழுகின்றனர். ஆனால் சீனாவி அது 60% மட்டுமே. சீனா தொழில்துறையில் பெரு வளர்ச்சி கண்டாலும் அதன் உற்பத்தித் துறையில் பெரும்பகு கீழ்-முனை உற்பத்தியாக (low-end manufacturing) இருக்கின்றது.

உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)

உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதனால் பல வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவை ஒரு வளர்முக நாடாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization) உறுப்புரிமை உள்ள நாடுகளை அந்த நிறுவனம் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகள் என வகைப்படுத்தவில்லை. உறுப்பு நாடுகள் தாமே தமது நிலையை முடிவு செய்து கொள்ளலாம். அதனால் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு நாடு தன்னை வளர்முக நாடாகப் பிரகடனப் படுத்தியமையை மற்ற நாடுகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். உலக வர்த்தக் நிறுவனத்தின் விதிகளைப் பின்பற்றுவதில் வளர்முக நாடுகளுக்கு இருக்கும் சலுகைகளை பாவிப்பதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்தியது. 2019 ஜூலையின் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் சீனாவின் வளர்முக நாடு நிலையை இல்லாமற் செய்யும்படி தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் சீனா தனது நிலையை மாற்ற மறுத்தது. 2020இல் அமெரிக்கா உலக வர்த்தக நிறுவனத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற குரலும் அமெரிக்காவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அமெரிக்கா டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சீனாமீது தொடுத்த வர்த்தகப் போர் தனது வர்த்தக விதிமுறைகளுக்கு மாறானது என உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்தது,

2021 செப்டம்பரில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியக்கதிரிலிருந்து மின் பிறப்பாக்கும் தகடுகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் முடிவிற்கு எதிராக சீனா கொடுத்த ஆட்சேபனை தொடர்பாக உலக வர்த்தக நிறுவனம் தனது முடிவை வெளியிட்டது. அது சீனாவின் ஆட்சேபனையை நிராகரித்தது.

சீனாவிற்கு எதிரான உ.வ.நி இன் முடிவு

2021 ஒக்டோபர் 20 முதல் 22-ம் திகதி வரை நடந்த உலக வர்த்தக நிறுவனத்தின் கூட்டத்தில் சீனாவின் கைத்தொழில் கொள்கை சமமான போட்டியை பாதிக்கின்றது என அமெரிக்கா தெரிவித்தது. மற்ற மேற்கு நாடுகள் சீனா தனது சந்தையை மேலும் தாராளமயப்படுதல் செய்ய வேண்டும் என்றன. இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தில் சமநிலை இல்லை என்றது. சமமான போட்டியை உருவாக்குதல், தாராளமான சந்தையை(திறந்த சந்தை) ஏற்படுத்தல், உற்பத்தித் துறைக்கு தேவையற்ற அரச உதவிகளைத் தடுத்தல் போன்றவை உலக வர்த்தக நிறுவனத்தின் முக்கிய பணிகளாகும். ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தில் உரையாற்றிய சீனப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். உ.வ.நி இன் முடிவை கடுமையாக ஆட்சேபித்த சீனா தன்னை தவறாக கையாள்வதாக தெரிவித்தது.

பொய்யர் கூட்டம்

அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பன்னாட்டரங்கில் எந்த அளவு பொய்களை சொல்லும் என்பதை ஒவ்வொரு ஈழக் குடிமகனும் நன்கறிவான். சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை மிகைப்படுத்தி பொய் சொல்கின்றது. சினா பொதுவுடமை ஆட்சி என்னும் பெயரில் நடத்தும் அரச முதலாளித்துவ ஆட்சி சிறப்பாக நடக்கின்றது என்பதைக் காட்ட சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை உயர்த்திக் காட்டுகின்றது. அதேவேளைகளில் மற்றநாடுகளின் உழைப்பை சுரண்டுவதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.

Wednesday, 20 October 2021

சீனா இரகசியமாக நிர்மாணிக்கும் ஆளில்லா போர்க்கப்பல்

 


சீனாவின் வடகிழக்குப்பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உள்ள தலியன் துறைமுகத்தில் பல கடற்படைக்கலன்களை இரகசியாமகா உற்பத்தி செய்கின்றது. சீனா தன்னுடைய  விமானம் தாங்கிக் கப்பலுக்கும் லயோனிங் எனப் பெயரிட்டுள்ளது. தலியன் துறைமுகத்தில் 2017-ம் ஆண்டு ஒரு பெரிய இறங்குதுறையை சீனா கட்டி முடித்தது. அதிலிந்து அங்கு பல நீமூழ்கிகளையும் போர்க்கப்பல்களையும் செய்மதிகள் மூலம் அவதானிக்கப்படுகின்றன. அங்கு இரண்டு ஆளில்லாத தாக்குதல் போர்க்கப்பல்களை சீனா உருவாக்கி பரிசோதிப்பதாக அமெரிக்காவின் US Navy Institute தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் Xiaopingadao துறைமுகதில் பெருமளவு கடற்படைக் கட்டுமானங்கள் செய்யப்படுகின்றன. அங்கு இடம் போதாமையால் தலியன் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. தலியன் நகரம் சிறந்த நிதித்துறை நிலையமாகவும் அதன் கடற்கரை உல்லாசப்பயணிகளை கவர்வதாகவும் உள்ளன. தலியன் கடற்கரையை உல்லாசப் பயணிகள் பாவிப்பதை தடை செய்துவிட்டு அதை கடற்படைக்கலன் கட்டும் நிலையமாக சீனா மாற்றியுள்ளது. 


சீனா தனது 5Gஅலைக்கற்றை தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளையும் முந்திக் கொண்டு உருவாக்கி 6Gதொழில்நுட்ப உருவாக்கத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. ஆளில்லாமல் இயக்கப்படும் மகிழூர்ந்துகள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றில் 5G மற்றும் 6G அலைக்கற்றை தொழில்நுட்பங்களையும் செயற்கை நுண்ணறிவையும் இணைத்து பாவிக்கும் போது அவற்றின் செயற்பாடுகள் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் பெரும் சவால்களாக அமையும். ஆளில்லா கப்பல்களை Uncrewed Surface Vessels (USV) என அழைப்பர். அவற்றைப் பரீட்சித்து பார்பதற்கு ஒரு பரந்த கடற்பரப்பு தேவை என்பதால் தலியன் துறைமுகம் உருவாக்கப்பட்டது. 

JARI USV

சீனா உருவாக்கும் ஒரு ஆளிலிக் கப்பலுக்கு JARI எனப் பெயரிடப்பட்டுள்ளது. US Navy Institute இன் கருத்துப்படி JARIஇல் அளவிற்கு அதிகமான படைக்கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. JARIஇன் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டே இரண்டாவது ஆளில்லாக் கப்பல் உருவாக்கப்படுகின்றது. JARI USV 15மீட்டர் நீளமும் 20தொன் எடையும் கொண்டது. படைக்கலன்களாக 30மிமி பீராங்கி, லேசர் வழிகாட்டல் ஏவுகணை வீசிகள், நான்கு கலன்கள் கொண்ட மேல் நோக்கிய வீசும் வசதிகள், தரையில் இருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள், நீருக்கடியில் வீசும் Torpedoes ஆகியவை உள்ளன. அந்த வகையில் JARI USV வான் பாதுகாப்பு, போர்க்கப்பல் அழிப்பு, நீமூழ்கி வேட்டை போன்றவற்றை செய்யக் கூடியவை. 

JARI USVயின் வெற்றீகரமான உற்பத்தியைத் தொடர்ந்து சீனா மேலும் ஒரு ஆளிலிக்கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பத அமெரிக்க செய்மதிகள் அவதானித்துள்ளன. ஆனால் அதன் சிறப்புத்தன்மை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவின் பெரிய நாசகாரிக் கப்பல்களை இலக்கு வைத்து அது உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். தென் கொரியாவின் Sejong the Great அமெரிக்காவின் Arleigh Burk ஆகிய நாசகாரிக் கப்பல்கள் சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. 

அமெரிக்க தனது Sea Hunter என்னும் ஆளிலிக் கப்பல்களைப் பிரதி பண்ணியே சீனா தனது ஆளிலிக் கப்பல்களை உருவாக்குவதாக அமெரிக்கா சொல்கின்றது. 


Sunday, 17 October 2021

Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவில் முன்னேறியசீனா

  


செயற்கை நுண்ணறிவில் அமெரிக்கா பின் தங்கியதால் சீனா முன்னேறிவிட்டது என்ற செய்தி பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் மென்பொருள் பிரிவின் முதன்மைப் பதவியில் இருந்த நிக் சைலன் அமெரிக்கா போதிய நிதியை மென்பொருள் துறைக்கு ஒதுக்கவில்லை என்பதை ஆட்சேபித்து தன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்க மென்பொருள்துறைக்கு போதிய நிதி ஒதுக்காத நிலையில் சீனா அதற்கென பெருமளவு நிதியை ஒதுக்கியபடியால் அமெரிக்காவை விட சீனா செயற்கை நுண்ணறிவில் முன்னணியில் இருக்கின்றது என்பது நிக் சைலனின் குற்றச் சாட்டாகும்.

சீனாவிற்கு வாய்ப்பான அதன் மக்கள் தொகை

அமெரிக்காவின் மக்கள் தொகை 339மில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1,433 மில்லியனாகவும் உள்ளன. சீனா தனது நாட்டு மக்கள் தொடர்பான எல்லாத் தகவல்களையும் திரட்டி கையாள்கின்றது. ஓர் அமெரிக்கக் குடிமகனின் எல்லாத் தகவல்களையும் அரசு திரட்டி வைத்திருப்பதை அமெரிக்க மக்கள் தமது சுதந்திரத்தையும் அடிப்படை உரிமையையும் பாதிப்பதாக கருதுகின்றார்கள். சீனாவின் அதிக மக்கள் தொகை இருப்பதால் அரசு திரட்டும் தகவல்களும் அதிகமாக உள்ளன. அவற்றை கணினி மயப்படுத்தி தரவு நிரல்படுத்துவதற்கு உயர்தர மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.

சீனா சென்ற Microsoft

சீனா செயற்கை நுண்ணறிவு வளர்வதற்கு சிறந்த களமாக உள்ளபடியால் 2018-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான மென்பொருள்களை உருவாக்க தாம் விரும்புவதாக Microsoft நிறுவனம் தெரிவித்தது. 2019இல் Microsoft நிறுவனம் சீன படைத்துறையின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்வறிவு மேம்படுத்தலில் செயற்பட்டது. அவற்றில் சீனாவின் சிறுபான்மையினரைக் கண்காணிப்பது முதன்மையானதாக இருந்தது. அதனால் அமெரிக்க முதவை உறுப்பினர்(செனட்டர்) Ted Cruz அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக நோக்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறைக்கு உதவக் கூடாது என தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். ஆனால் தாம் வெட்டு விளிம்பு (Cutting-Edge) தொழில்நுட்ப விரிவாக்கத்தில் உலகெங்கும் ஒத்துழைப்பதாக Microsoft தெரிவித்தது. Microsoft நிறுவனம் உருவாக்கிய Environmental Mapping தொழில்நுட்பம் சீனாவின் செயற்கை நுண்ணறிவின் மூலமான பொதுமக்கள் கண்காணிப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையானது. சீனாவெங்கும் பொருத்தப்பட்டுள்ள 200மில்லியன்களுக்கும் அதிகமான கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் முகங்கள் மூலம் மனிதர்களை இனம் காணும் (Facial Recognition) மென்பொருள்கள் இணைக்கப்பட்டுள்ளன. சீனாவில் ஒருவர் தலைமறைவானால் அவரை ஒரு சில நிமிடங்களுக்குள் அந்த கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் கண்டு பிடித்துவிடும்.

Microsoft ஐப் போல பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து பல தொழில்நுட்பங்களில் செயற்படுகின்றன. சீன அரசு தனது நாட்டில் இருந்து பல மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்கின்றது. சில அமெரிக்கப் பலகலைக்கழங்கள் சீன அரசுடன் இணைந்து ஆய்வுகள் செய்கின்றன. அப்பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளுக்கு தேவையான நிதி அமெரிக்காவில் இருந்து கிடைக்காமையினால் அவை சீனாவை நாடுகின்றன. டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இவற்றிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சீனாவின் 5G & 6G அலைக்கற்றை தொழில்நுட்பம்

சீனாவின் OPPO நிறுவனம் “6G AI-Cube Intelligent Networking” என்னும் தலைப்பில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் எப்படி செயற்கை நுண்ணறிவைப் பாவித்து 6G அலைக்கற்றை உருவாக்குவது என்பது பற்றி விளக்கியுள்ளது. 4G இலும் பார்க்க 5G ஆயிரம் மடங்கு விரைவாகச் செயற்படும். 5Gஇலும் பார்க்க 6G ஆயிரம் மடங்கு வேளையில் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 6G தொழில்நுட்பத்தை கைப்பேசிகளில் செயற்படுத்துவதற்கு அவை செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட படிமுறைகளை(Algorithms) உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும்.

ஹுவாவேயின் தானியங்கி மகிழூர்ந்துகள் (Autonomous Cars)

ஹுவாவே நிறுவனம் மற்ற நாடுகளை விட 5G தொழில்நுட்பத்தில் முந்தியமை அமெரிக்கர்களை பொறாமைக்கும் சினத்திற்கும் உள்ளாக்கியது. அதனால் அமெரிக்கா சீனா மீது ஒரு தொழில்நுட்பப் போரைத் தொடுத்து சீனாவிற்கு குறைகடத்திகளை (Semiconductors) ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. உலகிலேயே அதிக குறைகடத்திகளை உற்பத்தி செய்யும் தைவானையும் சீனாவிற்கான ஏற்றுமதியைத் தடைசெய்யும்படி வலியுறுத்தியது. ஹுவாவே வர்த்தக அடிப்படையில் 6G தொழில்நுட்பத்தை 2030அளவில் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது. அது செயற்கை நுண்ணறிவையும் 5G தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தானியங்கி வண்டிகளை உருவாக்கவிருக்கின்றது. ஹுவாவேயின் Intelligent World 2030 என்னும் அறிக்கையில் 2030-ம் ஆண்டு சீனாவின் மகிழூர்ந்துகளில் 20% தானியங்கிகளாக இருக்கும் என எதிர்வு கூறுகின்றது. ஹுவாவே நிறுவனம் சீனாவின் மகிழூர்ந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தானியங்கி மகிழூர்ந்துகளை உற்பத்தி செய்யவிருக்கின்றது. தற்போது சீனா மகிழூந்துகளை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியுள்ளது. 2030இல் நிலைமை மாறலாம்.

செயற்கை நுண்ணறிவால் சிஐஏ முகவர்களை அழித்த சீனா

அமெரிக்காவின் மருத்துவத்துறையில் சீனா ஊடுருவி தகவல் திருட்டு செய்வதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. பின்னர் சீனாவில் செயற்படுக் கொண்டிருந்த சிஐஏ முகவர்களுடன் எந்த தொடர்பையும் சிஐஏயால் மேற்கொள்ள முடியாதிருந்தது. பின்னர் அவர்கள் கொல்லப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும் இருக்கலாம் என்ற செய்தி வெளிவந்தது. இவற்றை வைத்துப் பாருக்கும் போது ஒரு செயல்முறை நடந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது: 1. மருத்துவத் தகவலை செயற்கை நுண்ணற்வின் மூலம் வடிகட்டி சீனாவில் பணிபுரியும் அமெரிக்கர்களின் படங்களை சீனா பெற்றுக் கொண்டிருக்கலாம். 2. சீனா தனது செயற்கை நுண்ணறிவு மூலம் முகம் மூலம் இனங்காணும் முறைமை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தையும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டிருக்கலாம். 3. அவர்களை கைது செய்து விசாரித்து அவர்களை தண்டித்திருக்கலாம்.

ஓரிமை (Singularity) என்னும் ஆபத்தான நிலை

கணினிகளின் செயற்கை நுண்ணறிவு கணினிகள் தாமாக கற்றறிந்து (Machine Learning) தம் அறிவை வளர்க்கின்றன. இது தொடர்ச்சியாக வளரும் போது முடிவில்லா அறிவை கணினிகள் பெற்றால் அது ஓரிமை (Singularity) என்னும் ஆபத்தான நிலையை எட்டலாம். ஒரு செயற்பாடு முடிவிலி பெறுமானத்தை ஏட்டும் நிலையை ஓரிமை (Singularity: A point at which a function takes an infinitive value) எனப்படும்.

Monday, 11 October 2021

சீனாவின் இரண்டு உதாரணங்களும் மூன்று செங்கோடுகளும்.

  



சீனாவின் முன் இரண்டு உதாரணங்கள் எப்போதும் மின்னிக் கொண்டே இருக்கும். ஒன்று அமெரிக்காவிற்கு படைத்துறையி சவாலாக விளங்கிய சோவியத் ஒன்றியம் மற்றது அமெரிக்கா கரிசனை கொள்ளுமளவிற்கு பொருளாதாரப் பெருவல்லரசாக எழுச்சியடைந்த ஜப்பான். சோவியத் ஒன்றியம் தன் வரவுக்கு மிஞ்சிய அளவில் படைத்துறைச் செலவை செய்து அமெரிக்காவிற்கு போட்டியாக, சில துறைகளில் அமெரிக்காவை மிஞ்சக்கூடிய அளவிற்கு, படைக்கலன்களை உருவாக்கியது. ஜப்பான் தனது நாட்டின் தனியார் துறையை கட்டுப்பாடின்றி கடன் படுவதை கண்காணிக்காமல் விட்டது.

கோபுரத்தை அழிக்கச் சென்று சாய்ந்த சோவியத் கோபுரம்

பொருளாதாரப் பிரச்சனை மீது அதிக கவனம் செலுத்தாத சோவியத் ஒன்றியம் செலவு மிக்க ஆக்கிரமிப்பு போரைச் செய்தது. 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா ஒரு தொலைத் தொடர்புக் கோபுரத்தை அமைத்தது. அது 2001இல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் வரை செல்லும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமைத்த தொலைதொடர்புக் கோபுரம் சோவியத் ஒன்றியத்தை உளவு பார்க்க உருவாக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் படை எடுத்தது. இதுவும் சோவியத் ஒன்றியம் என்ற கோபுரத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்தது.

சீனாவின் அமைதியான எழுச்சி 

சோவியத்தின் உதாரணத்தை கருத்தில் கொண்ட சீனா தனது வளர்ச்சிக்கு அமைதியான எழுச்சி எனப் பெயரிட்டுக் கொண்டது, அதன் படி மற்ற நாடுகளில் ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஆக்கிரமிப்பது போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டது. சீனா தனது உளவுத்துறைக்கு பெரும் செலவைச் செய்யவில்லை. சீனா தனது ஒரே ஒரு பெரிய அயல் நாடாகிய இந்தியாவிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க தீபெத்தை 1950இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தனக்கு கவசமான தீபெத்தை இந்தியா ஆக்கிரமிக்கலாம் என்ற ஐயத்தில் இந்தியா மீது 1962இல் போர் தொடுத்தது. அசாம் மாநிலத்தை சீனா கைப்பற்றிய போது இந்தியர்கள் வங்கிகளில் உள்ள நாணயத்தாள்களைக் கூட எரித்துவிட்டு தலை தெறிக்க ஓடினார்கள். தான் ஆக்கிரமித்த இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை கைவிட்ட சீனா அக்சாய் சின் என்னும் பகுதியை மட்டும் தன்வசம் இன்றுவரை வைத்திருக்கின்றது. அக்சாய் சின் தீபெத்தையும் உய்குர் மாகாணத்தையும் இணைக்கின்ற பிரதேசமாகும். அது இந்தியா வசம் இருந்தால் இரண்டிலும் தீவிரவாதிகளை இந்தியா வளர்த்து விடலாம் என்பதை இந்தியா கருத்தில் கொண்டு அக்சாய் சின் பிரதேசத்தை வைத்திருக்கின்றது. அதற்கு அச்சுறுத்தல் வராமல் இருக்க அந்த எல்லைப் பகுதியை எப்போதும் கொதிநிலையில் சீனா வைத்திருக்கின்றது. 1979இல் வியட்னாமுடன் சீனா ஒரு எல்லைப் போர் செய்தது. போரால் பொருளாதாரம் சீரழியும் என்பதால் சீனா போர்களைத் தவிர்த்து வருகின்றது.

தைவான் போரைத் தவிர்த்த சீனா

தைவானின் அதிபராக இருந்த லீ தெங் குயீயை அவர் கல்வி கற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகம் உரையாற்ற அழைத்தமைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக 1995இல் தைவானைக் கைப்பற்ற சீனா பெரும் படை நகர்த்தலைச் செய்தது. அதைத் தடுக்க அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் USS Nimitz என்ற விமானம் தாங்கிக் கப்பலையும் அமெரிக்காவின் ஏழாவது கடற்படைப் பிரிவையும் தைவான் நீரிணைக்கு அனுப்பினார். தைவானைக் கைப்பற்றுவதென்றால் அமெரிக்காவுடன் போர் புரிய வேண்டும் என உணர்ந்த சீனா பொருளாதாரப் பேரழிவைக் கொண்டுவரக்கூடிய போரைத் தவிர்த்தது. அமெரிக்காவின் இரண்டு கடற்படைப் பிரிவுகளை அழிக்கக்.கூடிய வலிமை அப்போது சீனாவிடம் இருக்கவில்லை.

ஜப்பானிடமிருந்து சீனா கல்லாதும் கற்றதும்

சீனாவும் ஜப்பானும் மன்னராட்சி நாடுகளாக இருந்தன. பின்னர் ஜப்பான் அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சியாக மாறி மக்களாட்சியை ஏற்படுத்திக் கொண்டது. சீனா அப்படிச்செய்யாமல் இருந்தபடியால் அங்கு பொதுவுடமைப் புரட்சி ஏற்பட்டது. ஜப்பான் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு தொடர்ச்சியாக பல ஆண்டுகள் ஏற்றுமதியைச் செய்து உலகப் பொருளாதார வல்லரசாக 1980களின் உருவானது. 1980களின் பிற்பகுதியில் பல அமெரிக்க நிறுவனங்களையும் சொத்துக்களையும் ஜப்பானிய நிறுவனங்கள் வாங்கின. அதை இரண்டாவது பேர்ள் துறைமுகத் தாக்குதல் (Pearl Harbour Attack) என அமெரிக்க தேசியவாதிகள் விபரித்தனர். பின்னர் அமெரிக்காவின் டொலருக்கு எதிராக ஜப்பானிய நாணயமான யென்னின் பெறுமதி பெருமளவில் அதிகரித்தது. ஆனாலும் ஜப்பானிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெருமளவு கடன் பட்டு தமது ஏற்றுமதியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தன. அதனால் ஜப்பானியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவை இன்றுவரை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.



சீனாவின் மூன்று செங்கோடுகள்

ஜப்பானிய தனியார் துறையினர் அதிக கடன் பட்டது போல் சீனத் தனியார் துறையினரும் அதிக கடன் பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிலும் சீனாவில் தொடர்ச்சியாக கட்டிடங்களின் விலைகள் ஏறிக் கொண்டிருந்த படியால் கட்டிடத் துறையினரால் அதிக கடன் படக் கூடியதாக இருந்தது. உலகிலேயே அதிக கடன் பட்ட கட்டிடம் கட்டும் நிறுவனங்களில் 80% சீனாவில் உள்ளன. இதனால் சீன நடுவண் வங்கியான சீன மக்கள் வங்கியும் சீனாவின் கட்டிடத் துறை அமைச்சும் இணைந்து கட்டிடத்துறையில் உள்ள நிறுவனங்களுக்கு 2020இல் மூன்று நிபந்தனைகளை விதித்தன. அவை மூன்று செங்கோடுகள் என அழைக்கப்படுகின்றன:

1. ஒரு நிறுவனத்தின் கடன் அதன் சொத்துக்களின் பெறுமதியின் 70%ஐத் தாண்டக் கூடாது.

2. நிறுவனத்தின் மூலதனத்திலும் (Equity) பார்க்க அதன் கடன் குறைவானதாக இருக்க வேண்டும்.

3. நிறுவனத்தின் காசுக்கையிருப்புக்கும் குறுங்காலக் கடனுக்கும் உள்ள விகிதம் ஒன்றாக இருக்க வேண்டும் அதாவது சமனாக இருக்க வேண்டும்.

சீனா இந்த மூன்று செங்கோடுகளை அறிமுகம் செய்தமைக்கு முக்கிய காரணம் வீடமைப்புக் குமிழி உருவாகக் கூடாது என்பதற்காகவே. ஒரு நாட்டில் தொடர்சியாக வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு போக அந்த நாட்டில் உள்ள நிறுவனங்கள் அதிக கடன் பட்டு அதிக வீடுகளைக் கட்டிக் கொண்டே போக ஒரு கட்டத்தில் நாட்டில் அளவிற்கு அதிகமாக வீடுகள் கட்டப்படும். அவற்றை வாங்க யாரும் இல்லாத நிலை ஏற்படும். அப்போது வீட்டு விலைகள் பெருமளவு வீழ்ச்சியடையும். அதை வீடமைப்புக் குமிழி என அழைக்கப்படுகின்றது. கட்டிடங்களையும் வீடுகளையும் கட்டிய நிறுவனங்கள் பட்ட கடனை அடைக்க முடியாமல் போகும். அதனால் வங்கிநொடிப்பு (Bankrupcy) நிலையை அடையும். அந்த கட்டிட நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும் அவற்றில் பங்குகளை வாங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள். அது பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படும். நிலைமை மோசமானால் பல வங்கிகள் கூட வங்கிநொடிப்பு நிலையை அடையலாம்.

சீனாவின் செங்கோட்டை மீறிச் செயற்பட்டதால் Evergrande என்னும் கட்டிட நிறுவனம் 2021 செப்டம்பரில் பெரும் கடன் நெருக்கடியை சந்தித்துள்ளது. அது வங்கிநொடிப்பு நிலையை அடையும் இடரை எதிர் நோக்குகின்றது. சீன அரசின் செங்கோட்டைத் தாண்டிய Evergrande நிறுவனத்திற்கு சீன அரசு நிதி உதவி செய்து அதை மீட்க மாட்டாது எனக் கருதப்படுகின்றது. சீனாவின் முன்னணி கட்டிடம் கட்டும் நிறுவனங்கள் முப்பதின் அரைப்பங்கு நிறுவனங்களுக்கு மேற்பட்டவை சீன அரசின் மூன்று செங்கோடுகளையும் தாண்டி நிதி நெருக்கடியில் உள்ளன என்று இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times பத்திரிகை ஆய்வு செய்து கட்டுரை ஒன்றைப் பிரசுரித்துள்ளது.

சீனர்கள் நீண்ட காலத் திட்டமிடுவதில் வல்லவர்கள். சீன நிறுவனங்கள்?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...