Monday, 14 December 2020

அமெரிக்க சீன மும்முனைப் போர்

 

அமெரிக்க தரைப்படைத் தளபதி (ஜெனரல்) மார்க் மில்லே 2020 டிசம்பர் 8-ம் திகதி அமெரிக்க ஊடகமான Wall Street Journal இற்கு பேட்டியளிக்கும் போது சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஈடாக தன் படைத்துறையை வளர்ச்சியடையச் செய்து 2035-ம் ஆண்டளவில் அமெரிக்காவிற்கு இணையான ஒரு படைத்துறையை உருவாக்கி 2050-ம் ஆண்டளவில் அமெரிக்காவைத் தோற்கடிக்கக் கூடிய நிலையை எய்தவிருக்கின்றது என்றார். சீனாவைச் சமாளிக்கக் கூடிய வகையில் அமெரிக்கா தனது பொருளாதாரத்தையும் படைத்துறையையும் கட்டி எழுப்ப வேண்டும் என்றார் ஜெனரல் மார்க் மில்லே. மேலும் அவர் இரு பெருவல்லரசுகளின் போட்டி பெரும் போராக உருவெடுக்காமல் இருக்க அமெரிக்கா விண்வெளியிலும் இணையவெளியிலும் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நகர்வுகளைச் செய்யத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.



சீனக் கனவும் சீன விரிவாக்கமும்

இரு பெரும் சீனக் கனவுகள்

1. சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை 2021-ம் ஆண்டு நிறைவு செய்யும் போது சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கம்

2. 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டு நிறைவடையும் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (HARMONIOUS) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கம்.

சீன விரிவாக்கத்தின் இலக்குகள்:

1.  தென் சீனக் கடலை முழுமையாக தனதாக்கல்

2. தைவானைக் கைப்பற்றல்

3. அருணாச்சல பிரதேசம் – தெற்கு தீபெத்

4. கிழக்குச் சீனக் கடல்

5. மங்கோலியாவை சீனாவுடன் இணைத்தல்

6. இரசியா ஆதிக்கத்தை மத்திய ஆசியாவில் இல்லாமற் செய்தல்

7. மத்திய ஆசிய நாடுகளிலும் பாக்கிஸ்த்தானிலும் சீனப் படைத்தளங்கள்.



இரசிய சீன ஒத்துழைப்பு

சீனாவும் இரசியாவும் ஒன்றை ஒன்று ஐயத்துடன் நோக்கினாலும் பொது எதிரியான அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ள பல முனைகளின் ஒத்துழைக்கின்றன. 2012இல் இருந்து இரசியாவும் சீனாவும் இணைந்து கடற்போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா சீனாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்ப உருவாக்கலில் உதவி செய்து வருகின்றது என்றார். சீனா அமெரிக்காவுடன் படைத்துறைத் தொழில்நுட்பத்தில் போட்டியிடும் திறனை வளர்க்க இரசிய சீன நட்பு உதவியாக அமைகின்றது. 2014இல் உக்ரேனில் இரசியா தலையிட்டதன் பின்னர் அதிகரித்த அமெரிக்க இரசிய முறுகல் சீன இரசிய ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 2020 நவம்பரில் சூடான் துறைமுகத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இரசியாவின் நான்கு கடற்படைக் கப்பல்களும் 300 படையினரும் நிலைகொள்வதற்கான உடன்படிக்கையை இரசியா சூடான் அரசுடன் செய்துள்ளது. அமெரிக்கா, ஆபிரிக்கா, ஒஸ்ரேலியா ஆகிய கண்டங்கள் பெரும் கடல்களால் தனியாக பிரிக்கப்பட்டிருக்க ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அதில் இரசியா இரண்டு கண்டத்திலும் அகன்றுள்ளது. ஐரோப்பிய-ஆசியப் பெரு நிலப்பரப்பில் இரசியா, இந்தியா, சீனா ஆகியவை மக்கள் தொகை அடிப்படையில் பெரிய நாடுகள். இரசிய சீன ஒத்துழைப்பு இந்த பெரு நிலப்பரப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

சீனப் பொருளாதாரமும் படைத்துறையையும்

முத்துமாலைத் திட்டம் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் திட்டம் என நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே உலகின் பெரும் பகுதியை துறைமுக அபிவிருத்தி என்னும் பெயரில் சீனா சுற்றி வளைத்து விட்டது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விநியோகத் தொடரிக்கு என்ன மாற்றீடு என்று சிந்திக்கும் போது பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (Belt & Road Initiative) திட்டத்தை செயற்படுத்தி உலகின் பெரும் பகுதியை சீனா தன்னுடன் ஒரு விநியோகத்தொடரி மூலம் இணைக்கின்றது. விண்வெளிப் போர்த்திறன், ஹைப்பர் சோனிக் வேகப் படைக்கலனகள், விமானம் தாங்கிக் கப்பல்கள் என பலவகையில் தன்னைப் வலிமைப்படுத்தும் சீனா 2017-ம் ஆண்டு சீனா தனது நாட்டுக்கு வெளியே முதலாவது தனது படைத்தளத்தை ஆபிரிக்காவின் கொம்பில் உள்ள ஜிபுக்தி நாட்டில் அமைத்தது. உலகின் முன்னணிப் பொருளாதாரங்களில் சீனா மட்டுமே 2020-ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க தரைப்படைத் தளபதி (ஜெனரல்) மார்க் மில்லே சொல்லியது போல் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான நகர்வுகளை செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நடக்காமல் தடுக்கும். அவரது உட் கருத்து அமெரிக்கா சீனாவிலும் பார்க்க படைத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் பெருமளவு முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே. அதனால் அமெரிக்கா வர்த்தகப் போர், தொழில்நுட்பப் போர், நாணயப் போர் ஆகிய மும் முனைப் போரை செய்ய வேண்டியுள்ளது.



வர்த்தகப் போர்

சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வர்த்தக்ப் போர் என்பது, சுருங்கச் சொல்லின், இரண்டு நாடுகள் தமக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப் படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ஒன்றிற்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்தலாகும். டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்து வைத்த இப்போரை அவருக்குப் பின் பதவிக்கு வரும் ஜோன் பைடனும் தொடரவிருக்கின்றார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளைப் பிரித்தலை இணைபிரித்தல் (decopuling) என அழைக்கின்றனர். சீனாவில் இருந்து அமெரிக்கா பெருமளவு பொருட்களை இறக்குமதி செய்தல், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தமது உற்பத்திகளை செய்தல், அமெரிக்காவின் திறைசேரி விற்பனை செய்யும் கடன்முறிகளை சீனா வாங்குதல் (சீனாவிடம் அமெரிக்கா கடன் படுதலை இப்படிக் கௌரவமாக அழைப்பர்), சீனா மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்றல் என இரு நாடுகளும் பல துறைகளின் இணைந்துள்ளன. இந்த இணைப்பை இலகுவில் பிரிக்க முடியாது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் உலக விநியோகத் தொடரி (Supply chain) பெரிதும் தங்கியுள்ளது. இதைப் பிரிக்க நீண்ட காலம் எடுக்கும்,


தொழில்நுட்பப் போர்

தொழில்நுட்ப போர் என்பது ஒரு நாட்டின் தொழில்நுட்பம் வளராமல் தடுக்க இன்னொரு நாடு எடுக்கும் நடவடிக்கைகளாகும். குறைகடத்தி (Semiconductor) உற்பத்தியில் 2019-ம் ஆண்டுக்குரிய தகவல்களின் படி அமெரிக்கா 47%, தென் கொரியா 19%, ஜப்பான் 10% ஐரோப்பா 10%, தைவான் 6%, சீனா 5% என இருந்தது. அமெரிக்காவுடனும் தைவானுடனும் ஒப்பிடுகையில் சீனா குறைகடத்தி தொழில்நுட்பத்தில் நான்கு ஆண்டுகள் பிந்தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  இதை சீனாவின் வலுவின்மைப் புள்ளியாகப் பார்த்த அமெரிக்கா சீனாவிற்கான குறைகடத்தி ஏற்றுமதி மீது தடைகளை விதித்ததுடன் மற்ற நாடுகளையும் தடை செய்ய வற்புறுத்தியது. குறைகடத்திகள் சீனா உற்பத்தி செய்யும் பெருமளவு இலத்திரனியல் பொருள்களிற்கு அவசியமானவையாகும். அதிலும் சீனாவின் 5ஜீ தொழில்நுட்பத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்வதற்கும் அவசியமானவையாகும். அதைச் சமாளிக்க சீனா குறைகடத்தி உற்பத்தித் துறையில் 29பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டைச் செய்தது, அதற்கு போட்டியாக அமெரிக்கா 37பில்லியன் டொலர்களை அதே துறையில் முதலீடு செய்ய முடிவெடுத்தது. சீனா தான் முன்னணியில் இருக்கும் முக இனங்காணல் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு அரச அனுமதி பெற வேண்டும் என அறிவித்தது.

ஹுவாவே நிறுவனத்திற்கு தேவையான Semiconductorsஐ தைவானில் இருந்தே பெறப்பட்டு வந்தன. அமெரிக்கா ஹூவாவேயிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால் தைவான் சீனாவிற்கு Semiconductorsஐ ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது. அத்துடன் Semiconductorsஐ உருவாக்கும் Chip designing software ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டது. HiSilicon Kirin 9000 என்ற Semiconductorsஐ உருவாக்கும் சீனாவின் முயற்ச்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை. மென்பொருட்களை சீனாவிற்கு விற்பனை செய்வதை அமெரிக்கா தடை செய்தமை சீனாவின் பல Semiconductors உற்பத்தி நிறுவனங்களை நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சீனாவின் என்ற நிறுவனத்தின் Semiconductor Manufacturing International Corporation மீதும் அமெரிக்கா ஏற்றுமதி தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சீனாவின் ஷென்ஜெயின் பிராந்திய அரசு ஹூவாவே நிறுவனத்திற்கு Semiconductors உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்க நிதி உதவி வழங்கியுள்ளது.  உலகில் அதிக கைப்பேசிகளை விற்பனை செய்யும் ஹூவாவே நிறுவனத்திடம் போதிய அளவு நிதி இருக்கவில்லை.

வூஹரின் உள்ள Semiconductors உற்பத்தி நிறுவனம் ஒன்று நிதித் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

Yangtze என்ற Memory Chip உற்பத்தி நிறுவனமும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. 

நாணயப் போர்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தமது சொந்த நாணயத்தின் பெறுமதியை தாமாகவே குறைத்தல் நாணய்ப் போர் ஆகும். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையும் போது அந்த நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பதுடன் இறக்குமதி குறையும். 2020இல் அமெரிக்க டொலரின் பெறுமதி எட்டு விழுக்காட்டிற்கு மேல் வீழ்ச்சியடையும் என்றும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு டொலரின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியை அமெரிக்காவால் தடுக்கவும் முடியாது. தடுப்பதை அமெரிக்கா விரும்பவும் செய்யாது. சீன நாணயத்திற்கு எதிராக டொலரின் பெறுமதி குறையும் போது சீனாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி குறையும். அதைத் தடுக்க சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கும். டொலரின் பெறுமதி குறையும் போது அமெரிக்காவில் உள்ள சீன முதலீடுகளின் பெறுமதியும் குறையும்.

வர்த்தகப் போரால் சீனாவிற்கு மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளும், தொழில்நுட்பப் போரால் தைவான், தென் கொரியா போன்ற நாடுகளும் நாணயப் போரால் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உட்பட ஏற்றுமதியில் தங்கியிருக்கும் நாடுகளும் பாதிப்படையும்.

Tuesday, 8 December 2020

ஜப்பானுக்கு எதிராக புட்டீனின் குங்ஃபூ நகர்வு

 


வட மேற்கு பசுபிக் கடலில் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் பிராந்தியம் என்கின்றனர். இத்தீவுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிணக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்கின்றது. 2020 டிசம்பர் முதலாம் திகதி அத்தீவுகளில் இரசியா தனது எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது பிணக்கை தீவிரப்படுத்தியுள்ளது.


இரண்டு போர்களும் பல ஒப்பந்தங்களும்

1786-ம் ஆண்டு இரசியப் பேரரசி கதரீன் கியூரில் தீவுக் கூட்டம் தனது நாட்டின் ஒரு பகுதி எனப் பிரகடனம் செய்திருந்தார். 1855-ம் ஆண்டு இரசியாவும் ஜப்பானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கியூரில் தீவுக் கூட்டங்களின் நான்கு தீவுகள் ஜப்பானுக்கு உரியவை என்றும் ஏனைய வட பகுதி தீவுகள் இரசியாவிற்கு உரியவை என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. 1905-1906 இல் நடந்த ஜப்பானுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போரில் இரசியா தோல்வியடைந்ததால் கியூரில் தீவுக் கூட்டத்தின் சக்லின் தீவின் தென் பகுதி ஜப்பானுக்கு சொந்தமானது என ஒத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டாம் உலக போரின் முடிவில் இரசியா (சோவியத் ஒன்றியம்) முழு கியூரில் தீவுக் கூட்டத்தையும் தனதாக்கிக் கொண்டது. அங்கிருந்த ஜப்பானிய மொழி பேசும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலக அமைதியை நிலைநாட்ட 1951-ம் ஆண்டு நடந்த சன் ஃபிரான்சிஸ்க்கோ மாநாட்டில் ஜப்பான் கியூரில் தீவுகள் மீதான எல்லா உரிமைகளையும் கைவிட வேண்டும் என்று முடிவு செய்ததுடன் கியூரில் தீவுகளின் மீதான இரசியாவின் (சோவியத் ஒன்றியத்தின்) இறையாண்மையையும் அங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதில் சக்கலின் தீவு தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படவில்லை. அது இரு நாடுகளுக்கும் சொந்தமானவை எனக்கருதப்பட்டது.



பனிப்போர்க்காலம்

1956-ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் மீண்டும் ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டன. அதன் படி கியூரில் தீவுக் கூட்டத்தின் சிறுபகுதியான சிக்கோட்டன், ஹபோமாய் ஆகிய தீவுகள் ஜப்பானிற்கு வழங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு ஜப்பானும் அமெரிக்காவும் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொண்டதை விரும்பாத சோவியத் ஒன்றியம் ஜப்பானின் அந்நியப் படைகள் இருக்கும் வரை கியூரில் தீவில் ஜப்பானுக்கு இடமில்லை எனவும் 1956-ம் ஆண்டு செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாகவும் அறிவித்தது. கியூரில் தீவுக் கூட்டங்களில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்ளலாம் என சோவியத் கரிசனை கொண்டிருந்தது.

சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர்

1991 சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவும் ஜப்பானும் கியூரில் தீவுக் கூட்டங்கள் தொடர்பாக தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன.

இதுருப், குணசீர், சிக்கோட்டன், ஹபோமை ஆகிய நான்கு தீவுகள் தொடர்பாக 2000-ம் ஆண்டில் விளடிமீர் புட்டீன் ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 2013-ம் ஆண்டு ஒரு தீவிர பேச்சு  வார்த்தையை இரு நாடுகளும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கையில் இரசியா உக்ரேனுக்கு எதிராக செய்த நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஜப்பான் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டது.

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர்

ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர் யோசிகிடே சுகா பதவிக்கு வந்த பின்னர் 2020 செப்டம்பரில் இரசிய அதிபர் புட்டீனுடன் தொடர்பு கொண்டு கியூரில் தீவுப் பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தார். அத்துடன் இரசிய ஜப்பானிய வர்த்தகத்தை விரிவு படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார். அவரின் எண்ணத்தை விளடிமீட் புட்டீன் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

 

இரசியாவின் பசுபிக் வாசலில் அந்நியரா?

இரசியாவில் இருந்து பசுபிக் நாடுகளுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் வர்த்தகம் நடை பெறுவதற்கு இரசியாவின் கிழக்கெல்லையில் உள்ள கியூரில் தீவுக் கூட்டம் முக்கியமான ஒன்றாகும். நடுவண் ஆசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை இரசியா எதிர் கொள்வதற்கும் கியூரில் தீவுக் கூட்டம் இரசியாவிற்கு அவசியமானதாகும்.

புட்டீனின் குங்குஃபூ அடி

சிரியா, உக்ரேன் ஆகிய நாடுகளில் செய்தது போல் தனது திடீர் படை நகர்வுகள் மூலம் பிராந்திய நலன்களை தூக்கி நிறுத்துவதில் மீண்டும் ஒரு முறை புட்டீன் வெற்றி கண்டுள்ளார். கியூரில் தீவில் தனது படை நிலைகளை வலுப்படுத்தியதன் மூலம் புட்டீன் ஜப்பானுடன் செய்யும் பேச்சு வார்த்தைகளில் தனது நிலையை வலிமையாக்க செய்த நகர்வுதான் கியூரில் தீவுகளில் எஸ்-300 ஏவுகணை ஏதிர்ப்பு முறைமைகளை நிறுத்தியது. இரசியாவுடன் இதுவரை மட்டுப்படுத்தப் பட்ட வர்த்தகத்தை செய்யும் ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த இரசியாவுடன் அதிக வர்த்தகம் செய்ய விரும்புகின்றது என்பதை புட்டீன் ஜப்பானிய தலைமை அமைச்சருடனான பேச்சு வார்த்தையின் போது உணர்ந்து கொண்டுள்ளார். குங்குஃபு சண்டை வீரரான புட்டீன் எதிரியின் வலுவற்ற புள்ளியை அறிந்து தாக்குதல் செய்கின்றார்.


Monday, 7 December 2020

நுண்மிய நாணயத்தில் புகலிடம் தேடும் அமெரிக்கா

  


பெரும் செல்வந்தர்கள் தமது மிகை நிதிக் கையிருப்பை பங்குச் சந்தை, அரசுகளின் கடன் முறிகள், புதிய முயற்ச்சிகள், தனியார் நிறுவனங்களின் கடன் முறிகள், தங்கம் போன்ற உயர் பெறுமதி உலோகங்கள், விளைபொருள் எதிர் நோக்கு ஒப்பந்தம், வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப தமது நிதியைப் பெருக்குவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு தங்கள் முதலீடுகளை அவர்கள் அடிக்கடி மாற்றிக் கொள்வர். வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஊழியர் நலன் நிதியம், ஊழியர் ஓய்வூதிய நிதியம் போன்றவை தமது நிதியைப் பெருக்கவும் பாதுகாக்கவும் என்றும் விழிப்புடன் இருந்து பல துறைகளின் முதலீடு செய்கின்றன.

உறுதியான பொருளாதாரமும் முதலீடும்

பல நாடுகள் தங்களின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை தங்கம், பன்னாட்டு நாணய நிதியம், அமெரிக்க திறைசேரி கடன் முறிகள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன. அமெரிக்க டொலர், ஜப்பானிய யென், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ ஆகிய நாணயங்கள் பன்னாட்டு நாணயங்கள் எனப்படுகின்றன. வலுவான பொருளாதாரம், உறுதியான ஆட்சி, வெளிப்படைத்தன்மையுள்ள நிதிக் கொள்கை, நம்பிக்கையான நடுவண் வங்கி ஆகியவற்றைக் கொண்டுள்ள நாடுகளின் நாணயங்களிலும் கடன் முறிகளிலும் மற்ற நாடுகள் தங்கள் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை முதலீடு செய்வர். உலகில் ஓர் உறுதியற்ற பொருளாதார நிலவும் போது நம்பிக்கையான நாடுகளின் நாணயங்களில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்வர். பல அரசுகளும் முதலீட்டாளர்களும் அமெரிக்க திறைசேரியின் கடன்முறிகளில் முதலீடு செய்வதை வழமையாகக் கொண்டுள்ளனர். அவர்கள் வாங்கும் கடன் முறிகளின் கிடைக்கும் விலை அதிகரிப்பும் வட்டியும் அவர்களுக்கான வருவாயாக அமையும். அமெரிக்காவின் பணவீக்க விழுக்காட்டிலும் பார்கக வட்டி விழுக்காடு குறைவாக இருப்பதால் டொலரின் பெறுமதி குறையும். அமெரிக்காவால் வட்டி விழுக்காட்டை கூட்ட முடியாத நிலை தற்போது உள்ளது.



வலுவிழந்து நிற்கும் அமெரிக்க டொலர்

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந்த நாட்டின் பொருளாதார நிலை, வட்டி விழுக்காடு, அரசியல் உறுதிப்பாடு, பாதீட்டு குறை, ஏற்றுமதி/இறக்குமதி இடையிலான வித்தியாசம் போன்றவற்றில் தங்கியுள்ளது. 2020இன் பிற்பகுதியில் உள்ள பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 2023 டொலர் 15% வீழ்ச்சியடையலாம் என கோல்ட்மன் சாக்ஸ் எதிர்வு கூறியுள்ளது. Standard Chartered வங்கியின் சிங்கப்பூரில் உள்ள ஓர் ஆய்வாளரான Eric Robertsen அதை உறுதி செய்துள்ளார். தற்போது டொலரின் பெறுமதி உண்மையான பெறுமதியிலும் பார்க்க அதிகமாக உள்ளது என்பது கோல்ட்மன் சாக்ஸின் கருத்து. அதற்கான காரணம் கொவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட உலகப் பொருளாதார உறுதியற்ற தன்மையால் பல முதலீட்டாளர்கள் டொலரில் தங்கள் முதலீடுகளைச் செய்தமையே. உலக பொருளாதாரம் சீரடையும் போது அவர்கள் டொலரை விற்பனை செய்து வேறு இடங்களில் முதலீடு செய்யும் போது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும்.

புகலிடம் தேடும் முதலீட்டாளர்கள்

கொவிட்-19 தொற்று நோயின் பின்னர் அமெரிக்காவின் வட்டி விழுக்காட்டை அதிகரிக்க முடியாத அளவிற்கு அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பல முதலீட்டாளரகளும் அரசுகளும் தங்கள் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அமெரிக்காவில் இருந்து எடுத்து வேறு நாடுகளில் முதலீடு செய்கின்றார்கள். தற்போது பெறுமதி குறைந்திருக்கும் இந்திய ரூபாயில் பலர் முதலீடு செய்கின்றார்கள். அமெரிக்க – சீன வர்த்தகப் போர், தொழில்நுட்பப் போர், நாணயப் போர் ஆகியவை தீவிரமடையும் போது சீனா அமெரிக்க திறைசேரியின் கடன் முறிகளை வாங்குவதைக் குறைக்கும் போது அல்லது நிறுத்தும் போது அமெரிக்க டொலரின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியடையலாம்.



நுண்மிய நாணயங்கள்

அமெரிக்க டொலரின் பெறுமதி கேள்விக்குறியான நிலையில் நுண்மியமிய நாணயங்களில் (Cryptocurrency) பெருமளவு முதலீடு செய்யப்படுகின்றது. உலகெங்கும் பல நுண்மியமிய நாணயங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதும் அதிகம் பேசப்படுவதும் பிட்கொயின்(Bitcoin) ஆகும். 2020-ம் ஆண்டு பின்கொயினின் பெறுமதி 13%இற்கு மேல் அதிகரித்துள்ளது. அதேவேளை அமெரிக்க டொலர் சுட்டியின் மதிப்பு 9% வீழ்ச்சியடைந்துள்ளது. பிட்கொயினின் பெறுமதி அதிகரிப்பு தங்கத்தின் பெறுமதி அதிகரிப்பிலும் மற்றும் பல நாடுகளின் பங்குச் சுட்டிகளின் அதிகரிப்பிலும் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் நுண்மியமிய நாணயங்கள் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்க அற்றவர்களாக இருந்தனர். அவற்றின் தொடர்ச்சியான் பெறுமதி வளர்ச்சியால் பல நாடுகளின் அரசுகள் நுண்மியமிய நாணயங்களை உருவாக்கியுள்ளன. சமூக வலைத்தளமான முகநூலும் 2021-ம் ஆண்டு லிப்ரா என்னும் நுண்மியமிய நாணயத்தை உருவாக்கவுள்ளது.

அமெரிக்க டொலருக்கு போட்டியாக மற்ற நாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிப்பைத் தடுக்கவும். உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் நுண்மியமிய நாணயங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கவும் அமெரிக்காவின் நடுவண் வங்கி (Federal Reserve) தானும் ஒரு நுண்மியமிய நாணயத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும் (Digital Currencies and Cryptocurrencies)

இணையவெளியில் பலநாட்டு நாணயங்கள் பரிமாறப்படுகின்றதுடன் கொள்வனவுகளுக்கான கொடுப்பனவுகளாகவும் இருக்கின்றன. அவை எண்மிய நாணயங்கள் (Digital Currencies) எனப்படுகின்றன. ஆனால் நாடுகளின் நடுவண் வங்கிகள் பொருளாதார முகாமைக்காக உருவாக்கும் நாணயங்கள் போல இணையவெளியில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies) என அழைக்கப்படுகின்றன. எண்மிய நாணயங்களிற்கு என பெறுமதி இல்லை எந்த நாட்டு நாணயம் இணையவெளியில் பரிமாறப்படுகின்றதோ அந்த நாணயத்தின் பெறுமதிதான் அதற்கு உண்டு. தனாக பெறுமதி அதிகரிப்பதுமில்லை குறவதுமில்லை. ஆனால் நுண்மிய நாணயங்கள் தமக்கென ஒரு பெறுமதியைக் கொண்டுள்ளன. அவற்றில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ஏற்பவும் அவற்றின் மீதுள்ள நம்பிக்கைக்கு ஏற்பவும் அவற்றின் பெறுமதி ஏறி இறங்கும். மரபு வழி நாணயங்களின் பின்னால் ஓர் அரசு, அதன் நடுவண் வங்கி ஆகியவை இருக்கும். நாணயத் தாள்களில் அவற்றின் நாடுகளின் நடுவண் வங்கி சார்பில் கையொப்பமிட்டிருக்கும். பிட்கொயின் போன்ற நுண்மியநாணயங்களுக்கு அந்த மாதிரி இல்லை. இணையவெளியிலும் ஊழல்கள் நடக்க வாய்ப்புண்டு எனது பெயரில் இருக்கும் நுண்மிய நாணயம் எனக்குத் தெரியாமல் இன்னொருவர் பெயருக்கு மாற்றப்படலாம்.



அரச நணயத்தாள்கள் (Fiat Currencies): தங்கம் போன்றவற்றின் ஆதாரப் பின்னணியின்றி நாட்டில் அரசு புழக்கத்தில் விட்டுள்ள நாணயங்கள்

தொகுப்புச் சங்கிலிப் பேரேடு: இது ஒரு வகையான இணையவழி பேரேடு. இது வெளிப்படைத்தன்மையும் பாதுகாப்பும் மிகுந்தது. இதன் பாவனையாளர்கள் வெளி உதவியின்றி தாமாகவே தமது நாணய இருப்பைக் கையாளலாம். எண்மிய நாணயங்கள், நுண்மிய நாணயங்கள் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கு தொகுப்புச் சங்கிலிப் பேரேடு தொழில்நுட்பம் அவசியமானதாகும்.

எண்மிய நாணயங்கள் (Digital currencies): இவை வங்கிகளால் எண்மிய வடிவத்தில் பாவனைக்கு விடப்பட்ட நாணயங்களாகும்.

நுண்மிய நாணயங்கள் (Cryptocurrency): இவை பாதுகாப்பான நுண்மிய நாணயங்களாகும். தகவல்மறைப்பியல் அல்லது கமுக்கவியல் (Cryptography) என்ற தொழில்நுட்பத்தைப் பாவிப்பதால் இவை அந்தப் பெயரைப் பெற்றன. அத்தொழில்நுட்பம் பாவிக்கப்படுவதால் போலி நாணயங்களை உருவாக்க முடியாது. ஒரு நாணயக்கையிருப்பின் மூலம் இரட்டைக் கொடுப்பனவு செய்யும் ஏமாற்று வேலைகள் செய்ய முடியாது. பொதுவாக இவை எந்த ஓர் அரசினாலோ நடுவண் வங்கியாலோ கட்டுப்படுத்தப்படுத்தப் படாதவை. அதனால் இவை பரவலாக்கப்பட்ட நாணயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

நடுவண் வங்கி எண்மியநாணயங்கள் (Central Bank Digital Currency)

எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும் அதிகமாகப் பாவிக்கப்படுவதால் பல அரசுகளும் அவற்றின் நடுவண் வங்கிகளும் அவற்றில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளன. நடுவண் வங்கிகளின் நுண்மியநாணயங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. அவை நடுவண் வங்கி எண்மியநாணயங்கள் (Central Bank Digital Currency) என அழைக்கப்படுகின்றன. உலகெங்கும் 200பில்லியன் டொலர் பெறுமதியிலும் அதிகமான 5400இற்கும் மேற்பட்ட நுண்மிய நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. முதல் எண்மிய நாணயமான e-Gold என்பது கடன் அட்டை மோசடி செய்யும் சட்ட விரோதக் கும்பல்களால் நடத்தப்பட்டது. பிரேசில், இரசியா, இந்தியா, சீனா தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டொலரின் உலக ஆதிக்கத்தை எண்மிய நாண்யத்தின் மூலம் ஒழிக்க முடியும் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தன.

எக்குவேடர், சீனா, சிங்கப்பூர், செனகல், தூனீசியா ஆகிய நாடுகள் நுண்மிய நாணயங்களை புழக்கத்தில் விட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று நோய்களுக்கான கொரோனா கிருமிகள் நாணயத்தாள்கள் மூலமும் பரவும் என்ற அச்சமும் எண்மிய நாணயங்களின் புழக்கத்தை அதிகரித்துள்ளன. எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும் கொடுப்பனவுகளையும் பணப்பரிமாற்றத்தையும் செய்ய இலகுவானவையாகவும் மலிவானவையாகவும் இருக்கின்றன. எண்மிய நாணய கொடுப்பனவுகள் அமெரிக்க டொலரின் உலகளாவிய பாவனையைக் குறைக்கும் என நம்பப்படுகின்றது. அந்த இடைவெளியை அமெரிக்க நடுவண் வங்கி தனது சொந்த நுண்மிய நாணயத்தால் நிரப்ப முயல்கின்றது. நுண்மிய நாணயங்களை நடுவண் வங்கிகளும் அறிமுகம் செய்வதால் இணையவெளியில் நடக்கும் கொடுப்பனவகளைப் பற்றியும் நாணயப் புழக்கத்தையும் நடுவண் வங்கிகளால் அறிந்து கொள்ளவும் கட்டுப்படுத்தவும் முடியும். வரி எய்ப்பு மற்றும் பணச்சலவை போன்றவற்றை தடுக்க முடியும். 

சீனாவும் எண்மிய நாணயமும்

சீனாவில் பெருமளவு கொடுப்பனவுகள் எண்மிய நாணயத்தால் செய்யப்படுகின்றது. சீனர்கள் அதிக அளவு கைப்பேசிகளைப் பாவிப்பதால் அது நடக்கின்றது. சீனாவில் பிச்சைக்காரர்களுக்கு கூட எண்மியக் கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றன. 2020 ஜூன் மாதத்தில் சீன நடுவண் வங்கி தனது நுண்மியநாணயத்தை பரீட்சார்த்த அடிப்படையில் ஆரம்பித்தது. சீனாவில் 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் வருபவர்கள் பாவிக்கக் கூடியவகையில் சீனா செயற்படுகின்றது. அதன் மூலம் சீனாவின் நுண்மியநாணயத்தின் பாவனையை உலகெங்கும் பரப்பலாம் என்பது சீனாவின் இலக்கு. பிட்கொயின் தனது நாட்டில் பாவிக்கப்படுவதை இல்லாமல் செய்வதற்கும் அமெரிக்க டொலர் மீது சீன அரசும் மக்களும் தங்கியிருப்பதைத் தடுப்பதற்கும் சீனா தனது நுண்மியநாணயத்தை அறிமுகம் செய்துள்ளது.

2020 செப்டம்பரில் அமெரிக்கா நுண்மியநாணய உருவாக்கத்தை திவிரப்படுத்தியமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. உலகில் மற்ற நாடுகள் தமது நாட்டு நாணயத்தில் நம்பிக்கை குறையும் போது அமெரிக்க டொலருக்கு தம் கையிருப்பை மாற்றுவர். இப்போது அமெரிக்க டொலர் மீது நம்பிக்கை குறைந்த நிலையில் வேறு நாடுகளின் நாணயத்திற்கு டொலர் மாற்றப்படாமல் இருக்க அமெரிக்கா தனது நுண்மிய நாணயத்தை உருவாக்குகின்றது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் சீனா முதலிடம் பெறாமல் இருப்பதில் அமெரிக்கா தற்போது அதிக கரிசனை காட்டுகின்றது. நுண்மிய நாணயத்தில் சீனாவிற்கு இணையாக அல்லது முன்னதாக நுண்மிய நாணயத்தை அமெரிக்க மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பாவிக்கப்பண்ண அமெரிக்கா முயல்கின்றது.

Sunday, 29 November 2020

இஸ்ரேல் சவுதி கள்ளக் காதலும் ஈரானிய விஞ்ஞானி கொலையும்

  



இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூ சவுதி அரேபியாவிற்கு சென்று சவுதியின் பட்டத்துக்குரிய இளவரசரைச் சந்தித்தார் என்பதை சவுதியின் வெளியுறவுத் துரை அமைச்சர் ஃபசல் பின் ஃபார்ஹல் அல் சவுத் மறுத்துள்ளார். இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாகூ, சவுதியின் மொகமட் பின் சல்மன், துருக்கியின் ரெசெப் எர்டோகான், ஹங்கேரியின் விக்டர் ஓபன், பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன், பிரேசிலின் ஜெர் பொல்சொனாரோ, இரசியாவின் விளடிமீர் புட்டீன், இந்தியாவின் நரேந்திர மோடி, மெக்சிக்கோவின் மானுவேல் ஓப்ரடோர் ஆகியோர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அவருக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தவர்கள் ஆகும். ஆனால் அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் கலக்கமடைந்தவர்களாக இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாகூ, சவுதியின் மொகமட் பின் சல்மன் ஆகிய இருவரும் இருக்கின்றார்கள். புதிய அமெரிக்க அதிபர் ஜோன் பைடனை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இருவரும் நிச்சயமாக கலந்துரையாடி இருப்பார்கள்.

எந்த ஆண்டி பெருவல்லரசு?

இஸ்ரேல் அமெரிக்க உறவு உறுதியானதாகவே கடந்த பல பத்தாண்டுகளாக இருக்கின்றது. சில வேளைகளில் இஸ்ரேல் தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதுமுண்டு. 1996-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய போது நெத்தன்யாகூ அரபு இஸ்ரேலிய மோதல்களின் வரலாறு பற்றி கிளிண்டனுக்கு பாடம் எடுப்பது போல் நடந்து கொண்டார். சினமடைந்த கிளிண்டன் பேச்சு வார்த்தையின் பின்னர் “எந்த ---- ஆண்டி இங்கு பெருவல்லரசு (Who is the f—king superpower here?) என தனது உதவியாளர்களிடம் கேள்வி எழுப்பினாராம். பொதுவாக அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர்கள் மக்களாட்சிக் கட்சியின் அதிபர்களுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலுக்கு அதிக சாதகமாக நடந்து கொள்வார்கள். ஆனாலும் டிரம்பைப் போல் இஸ்ரேலுடன் தாராளமாக எந்த ஓர் அமெரிக்க அதிபரும் நடந்து கொண்டதில்லை. டிரம்பின் வெளியுறவுத் துறையினரும் அவரது யூத மருமகனும் ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரசுறவை ஏற்படுத்த வழிவகுத்தனர். இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசேலத்தை இஸ்ரேலுடன் இணைத்து ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். இஸ்ரேல் சிரியாவிடமிருந்து அபகரித்த கோலான் குன்று பகுதிகளை இஸ்ரேலுடன் பன்னாட்டு நியமங்களுக்கு முரணாக இணைத்ததை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். இஸ்ரேலின் ஜேருசேலம் இணைப்பு நடவடிக்கையை பலஸ்த்தீனியர்கள் எதிர்த்த போது டிரம்ப் அவகளுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தினார். பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தின் வாஷிங்டன் பணிமனையை மூட உத்தரவிட்டார். அத்துடன் பலஸ்த்தீனியர்களின் மேற்கு கரையில் இருந்த அமெரிக்க துணைத் தூதுவரகத்தையும் மூட உத்தரவிட்டார். இஸ்ரேலுக்கு அச்சம் கொடுப்பவராக இருந்த ஈரானியப் படைத் தளபதி காசிம் சுலேமானியைக் ஈராக்கில் வைத்து ட்ரம்பின் படையினர் குண்டு வீசிக் கொலை செய்தனர். புதிய அமெரிக்க அதிபர் ஜோன் பைடன் பலஸ்த்தீனியர்கள் விவகாரத்தில் சற்று அவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுப்பார். அவர் இஸ்ரேலுக்கு எதிராகச் செய்யும் நகர்வுகள் அறுதிப் பெரும்பானமையில்லாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் நெத்தன்யாகூவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதில் போய் முடியலாம்.

அரபு மக்களுக்கு உதவாத சவுதி அரச குடும்பம்.

2019-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் தலைவராக இருந்த சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த அல் ஃபைசல் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள இரகசிய அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை உறவுகளை அம்பலப்படுத்தினார். வஹாபிசமும் சியோனிசமும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக வளர்த்து விட்டவை எனக் குற்றம் சாட்டுவோரும் உண்டு. சவுதி அரச குடும்பமே பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூட குற்றச்சாட்டு உள்ளது என்பது மட்டுமல்ல சவுதி அரச குடும்பம் உண்மையில் யூதர்கள் என்ற ஐயம் தெரிவிப்போரும் உள்ளனர். பதினொரு நூல்களுக்கு மேல் எழுதிய செயட் அபூரிஸ் என்ற பலஸ்த்தீனிய ஊடகவியலாளர் அரபு நாட்டு ஆட்சியாளர்களை மேற்கு நாடுகளின் அடிவருடிகள் என்றே விபரித்தார். அவர்கள் தங்கள் குடிமக்களின் நலன்களில் அக்கறை இல்லாதவர்கள் என்பதும் அவரது குற்றச் சாட்டு. 2005-ம் ஆண்டு இறந்த சவுதி அரசர் பஹ்ட்டை சோம்பேறி, ஊழல்காரர், அறிவற்றவர், குடிகாரர், காணொலி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என விபரித்திருந்தார். அரபு நாடுகளில் இருக்கும் ஆட்சியாளர்கள் சட்டபூர்வமானவர்கள் அல்லர் என்பது அவரது ஆணித்தரமான கருத்து. அரபு நாட்டு ஆட்சியாளர்களை மேற்கத்தைய நாடுகளினதும் எரிபொருள் நிறுவனங்களினதும் மாவட்ட அலுவலகர்கள் என அவர் தனது நூல்களில் விபரித்திருந்தார். சவுதி அரேபியா இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளை பேணுவதன் மூலம் சவுதியில் தமக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களின் விபரங்களை இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றது. சவுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க சவுதியில் செயற்படும் இஸ்ரேலிய உளவுப் படையினர் தீவிரமாகச் செயற்படுகின்றனர். இஸ்ரேல் கைப்பற்றிய அரபு நிலங்களைவிட்டு வெளியேறும் வரை அதனுடன் உறவு இல்லை என சவுதி அரேபியா சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

சவுதியும் டிரம்பும்

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மான் ஆட்சியில் தனது பிடியை இறுக்குவதற்கு டிரம்ப் உதவியாக இருந்தார். ட்ரம்பின் மருமகனுடனும் அவர் நல்ல உறவை வைத்திருந்தார். யேமனில் சவுதி அரேபியா செய்த தாக்குதல்களுக்கும் டிரம்ப் படைக்கல உதவிகளையும் நேரடி நிபுணத்துவ உதவிகளையும் செய்தார். சவுதியில் இருந்து வெளியேறி துருக்கியில் வசித்த ஊடகரான ஜமால் கஷோக்ஜியின் உண்மையான கொலையாளிகளை தண்டிப்பதில் டிரம்ப் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் ஜோன் பைடன் நிச்சயம் அக்கறை காட்டுவார்.

நால்வரின் இரகசிய சந்திப்பு

2020 நவம்பர் 22-ம் திகதி பெஞ்சமின் நெத்தன்யாகூ அமைச்சரவைக் கூட்டத்தை திடீரென இரத்துச் செய்து விட்டு தனிப்பட்ட விமானம் ஒன்றில் ஏறிப் பறந்ததாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிப்பது நெத்தன்யாகூ – சல்மான் சந்திப்பை உறுதி செய்கின்றது. நெத்தன்யாகூ, சவுதி இளவரசர் சல்மான், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ இஸ்ரேலின் உளவுத் துறையான மொசாட்டின் தலைமை இயக்குனர் யொஸ்ஸி கொஹென் ஆகியார் சவுதி அரேபியாவின் செங்கடல் கரையோர நகரமான நியோமில் சந்தித்து ஐந்து மணி நேரம் உரையாடியுள்ளார்கள். இவர்களின் சந்திப்பின் முக்கிய நோக்கம் ஈரானை இனி எப்படிக் கையாள்வது என்பது பற்றியே இருந்திருக்கும் என மேற்காசியாவின் புவிசார் அரசியலை புரிந்தவர் எவரும் அடித்துச் சொல்வர். ஆனால் 2021 ஜனவரி 20-ம் திகதி டிரம்பின் ஆட்சி முடியுமுன்னர் ஈரான் மீதான ஒரு தாக்குதல் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்குமா என அறுதியிட்டு சொல்ல முடியாது.  

ஈரான் அணு விஞ்ஞானி கொலை

ஒரு புறம் ஈரானுக்கு எதிராக சில அரபு நாடுகளும் இஸ்ரேலும் கள்ள உறவுகளையும் பகிரங்க உறவுகளையும் வளர்க்கும் போது மறுபுறம் ஈரானின் நான்காவது அணு விஞ்ஞானி மோஷேன் ஃபக்ரிஸாதேவை கொல்லப்பட்டார். இது ஈரானில் கொல்லப்பட்ட நான்காவது விஞ்ஞானியாகும். இது வரை கொல்லப்பட்டவர்களில் உயர் தரமான விஞ்ஞானியும் ஆவார். எல்லாக் கொலைகளிற்கும் இஸ்ரேல் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. 2021-ம் ஆண்டு ஜூன் 18-ம் திகதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் ஒரு படைத்தளபதிதான் அதிபராக வரவேண்டும் என ஈரானில் தீவிரப் போக்குடையவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றார்கள். 2019இல் நடந்த தளபதி சுலேமானி கொலையும் இந்த அணு விஞ்ஞானி கொலையும் ஈரானில் ஒரு அதிதீவிரவாதப் போக்குடையவர் ஒருவரே அதிபராக வருவதை நிச்சயப் படுத்தியுள்ளது. அதை இஸ்ரேலும் விரும்புகின்றது. ஏனென்றால் ஈரானில் திவிரவாதப் போக்குடையவர்களின் கை ஓங்கும் போது ஈரானுக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோன் பைடனுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை சுமூகமாக நடக்காது.  ஈரானின் இரண்டு பெறுமதிமிக்க குடிமக்கள் கொல்லப் பட்டமை ஈரானால் அவர்களைப் பாதுகாக்க இயலாத நிலையைக் காட்டுவதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈரானிய ஆட்சியாளர்கள் மீது கரி பூசுவது அந்த ஊடகங்களின் நோக்கங்கள். அந்த ஊடகங்கள் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளன. ஆனால் இஸ்ரேலைக் கண்டிக்கும் வாக்கியங்களை அவை எழுதவோ பேசவோ இல்லை. ஈரான் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் உளவுத்துறைகளை விஞ்சக் கூடியவகையில் தனது உளவுத்துறையை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளின் கணவரும் யூதருமான ஜெரார்ட் குஷ்ணர் வெள்ளை மாளிகையின் உயர் பதவியான அதிபரின் மூத்த ஆலோசகர் பதவியில் இருக்கின்றார். டிரம்ப் 2017 ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குஷ்ணர் சவுதியின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மானுடன் நெருங்கிய நடபை வளர்த்துள்ளார். குஷ்ணர் 2020 டிசம்பர் முதல்வாரம் இஸ்ரேலுக்கும் சவுதிக்குமான பயணம் ஒன்றை மேற்கொள்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம்: 1. சவுதி – இஸ்ரேல் உறவை மேலும் நெருக்கமாக்குவது 2. கட்டார்(கத்தார்) நாட்டின் மீது சவுதி அரேபியா, எகிப்த்து, ஐக்கிய அமீரகம் ஆகியவை மேற்கொண்டுள்ள பொருளாதாரத் தடையையும் மற்றும் நெருகுவாரஙக்ளை நீக்குவதாகும். அதன் மூலம் கட்டார்(கத்தார்) ஈரான் மீது தங்கியிருப்பதை இல்லாமல் செய்யலாம்.

 

 

http://www.veltharma.com/2020/11/blog-post_24.html

http://www.veltharma.com/2013/01/blog-post_28.html

Wednesday, 25 November 2020

தைவானைச் சுற்றி ஆசியப்படை வலுப்பெருக்கல் போட்டி

 

இந்திய-சீன மற்றும் இந்திய-பாக்கிஸ்த்தான் படைத்துறைப் போட்டி தீவிரமடைவதற்கான காரணம் அமெரிக்கா தைவானைப் பாதுகாப்பதற்கு செய்யும் நடவடிக்கைகளாகும். அமெரிக்கக் கடற்படையின் Rear Admiral Michael Studeman 21/11/2020 தைவானிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டதாக தைவானில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. இவர் அமெரிக்கப் படையின் ஆசிய பசுபிக் கட்டளையகத்தின் உளவுப் பிரிவின் உயர் அதிகாரியாவார்.  இதற்கு முன்னர் அமெரிக்கப் படையினர் தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. கடந்த ஓராண்டாக அமெரிக்கா பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை தைவானிற்கு விற்பனை செய்தது சீனாவைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

1995-96 தைவான் நெருக்கடி

1994 பில் கிளிண்டன் தைவானிய அதிபர் லீ டெங் கூ அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்தார். சீனாவுடனான உறவைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க நாடாளமன்றம் 1995 மே மாதம் மக்களவையில் 396-1 என்ற பெரும்பான்மையுடனும் மூதவையில் 97-1 என்ற பெரும்பான்மையுடனும் அவருக்கு பயண அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1979 ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க சீன அரசுறவை நிலை நிறுத்திய போது தைவானும் சீனாவின் ஒரு பகுதி என ஒத்துக் கொள்ளப்பட்டது. 1995 ஜூலை தான் படித்த கோர்ணல் பல்கலைக் கழகத்தில் தைவானின் மக்களாட்சி பற்றி தைவானிய அதிபர் லீ டெங் கூ உரையாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை இலக்கு வைத்து 1995-ஜூலை முதல் தொடர் ஏவுகணைச் சோதனைகடற்படைப் போர் ஒத்திகை போன்றவற்றைச் செய்தது. சீனப் படைகள் ஃபிஜீயன் மாகாணத்திற்கு பெருமளவில் நகர்த்தப்பட்டனர்அவர்களை வைத்து ஈரூடக தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டது. தைவானை கைப்பற்றும் நகர்வுகளைச் சீனா செய்வதை அறிந்த அதிபர் பில் கிளிண்டன் USS NIMITZ, USS INDEPENDENT என இரு விமானம் தாங்கிக் கப்பல்களின் தலைமையில் இரு பெரும் கடற்படைப்பிரிவுகளை தைவான் நீரிணைக்கு அனுப்புகின்றார். அந்த இரண்டு கடற்படைப் பிரிவுகளையும் தம்மால எதிர் கொள்ள முடியாது என உணர்ந்த சீனா தனது தைவான் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கைவிட்டதுஇது சீனாவின் மூக்குடைபட்ட ஒரு நிகழ்வாகும். சினம் கொண்ட சீனா அவசரமாக இரசியாவிடமிருந்து பல தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள், எழுபத்தாறு SU-30-MKK, இருபத்தினான்கு SU-30-MK2 ஆகிய போர்விமானங்கள் போன்றவற்றை வாங்குகின்றது. அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது படைவலுவை உயர்த்த முடிவு செய்து. அதன் நீண்ட காலத் திட்டத்தால் அது இன்று அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய ஒரு படைத்துறையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா இன்று சீனாவின் வளர்ச்சியை இட்டு கரிசனை கொண்டுள்ளது. சீனாவின் படைத்துறை வளர்ச்சி அது தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை தனதாக்கி அங்கு தன் படை நிலைகளை நிறுவ வழிவகுத்தது. அதைத் தடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அந்த தீவுகளுக்கு மேலாக அமெரிக்கா தனது போர் விமானங்களைப் பறக்க விடுவதும் அத்திவுகளுக்கு அண்மையில் தனது கடற்படைக் கலன்களை அனுப்புவதும் மட்டுமே அமெரிக்காவால் செய்ய முடிந்தது. இது பிலிப்பைன்ஸ் ஆட்சியாளர்களை அமெரிக்காமீது அதிருப்தி கொள்ள வைத்தது.

சீனாவின் அயல் நாடுகளின் கரிசனை

சீனாவின் கிழக்குப் பக்கம் ஜப்பானும் தென் கொரியாவும் சீன அச்சுறுத்தலைச் சமாளிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றன. ஒன்று தனது படைவலிமையைப் பெருக்குவது இரண்டாவது அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது. மேற்குப் புறம் இந்தியா சீனப் படைத்துறை வளர்ச்சியால் அதிக கரிசனை கொள்கின்றது. சீனா அருணாச்சலப் பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்கின்றது. ஆரம்பத்தில் இந்தியா இரசியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பையும் இரசியாவிடமிருந்து பெருமளவு படைக்கலன் கொள்வனவையும் செய்கின்றது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களால் இந்தியா தனது பாதுகாப்பையிட்டு முழுமையான மனநிறைவு அடையவில்லை. அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பு உருவாக்கி அதிகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் படை வலிமை அதிகரிப்பால் பாக்கிஸ்த்தானைச் சிந்திக்க வைக்கின்றது. அதுவும் தன் படைவலிமையை அதிகரிக்கின்றது. இந்தியா தனக்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள படை வலிமை இடைவெளியை அமெரிக்க உறவால் நிரப்ப முயல பாக்கித்தானும் தனக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள படைவலிமை இடைவெளியை சீன உறவால் நிரப்ப முயல்கின்றது.

குவாட் உரையாடல்

சீனாவின் பொருளாதாரபடைத்துறைதொழில் நுட்ப வளர்ச்சியும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் ஜப்பானையும் ஒஸ்ரேலியாவையும் கரிசனை கொள்ள வைக்கின்றது. இதனால் ஜப்பான் நான்குமுனை உரையாடல் (Quadilateral Dialogue) என்னும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட உரையாடலைத் தொடக்குகின்றது. இதன் நோக்கம் இந்து மாக்கடலிலும் பசுபிக் மாக்கடலிலும் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய நான்கு நாடுகளும் ஒத்துழைத்தல் எனச் சொன்னாலும் அதன் உண்மையான நோக்கம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் படைவலிமையை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பாகும்.

தைவான் சீனாவின் மணிமுடி

சீனாவின் தொழில்நுட்ப வலுவின்மையான புள்ளிகளில் semiconductors உற்பத்தியும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியான அந்தத் துறையில் அமெரிக்கா, தென் கொரியா, தைவான் ஆகியவை உலகில் முன்னணியில் திகழ்கின்றன. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக்குதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.  உலகெங்கும் துறைமுகங்களைத் தேடித் தேடி அபிவிருத்து செய்யும் சீனாவிற்கு 15 துறைமுகங்களைக் கொண்ட தைவான் பெரும் வாய்ப்பாகும். தைவானை சீனா கைப்பற்றினால் பசுபிக் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 2019 ஜனவரியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தைவான் சீனாவினது ஒரு பகுதி என்றும் தேவை ஏற்படின் படைகளைப் பாவித்தாவது அதை சீனாவின் ஒரு பகுதியாக்குவோம் என முழங்கினார். தைவானின் தனித்துவத்தை காப்பாற்றுவோம் என அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது. அது தைவானியர்களின் சுதந்திரத்தில் கொண்ட அக்கறையால் அல்ல பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே.

சீனாவிற்கு எதிராக இந்தியாவை இழுத்த அமெரிக்கா

தைவானை நோக்கி சீனாவின் படைநகர்வுகளிற்கு பதிலடியாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா மூன்று தடவை தனது கடற்படையை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையில் உள்ள தைவான் நீரிணைக்கு அனுப்பவேண்டியிருந்தது. சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சித்தால் ஒரு அமெரிக்க சீனப் போர் நிச்சயம் ஊருவாகும். இதில் சீனாவிற்கு பாதகமான சூழலை ஏற்படுத்த இந்தியா சீனா எல்லையில் சீனாவிற்கு எதிராக படை நகர்த்தலைச் செய்ய வேண்டும் என்ற திட்டம் இரகசியமாக ஆலோசிக்கப்பட்டது. சீனா தைவான் போரில் ஈடுபடும் வேளையில் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்திய கைப்பற்ற திட்டமிட்டது. அமித் ஷா பாக்கிஸ்த்தானும் சீனாவும் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரை எப்படியும் மீட்போம் என இந்தியப் பாராளமன்றத்தில் முழங்கினார். அதை எப்படியோ அறிந்த சீனா தைவான் போரின் போது இந்தியா அப்படி ஒரு படை நகர்வை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு போர் செய்ய முடிவு செய்துள்ளன. பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரினூடாக சீன அமெரிக்க பொருளாதாரப் பாதை செல்கின்றது.

இரு குழுக்கள்

பாக் + சீனா ஒரு புறம் அமெரிக்கா+ஜப்பான்+இந்தியா+ஒஸ்ரேலியா+ தென் கொரியா + வியட்நாம் இன்னொரு புறம் என்ற போட்டி நிலை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. குவாட் பாதுகாப்பான கடற் போக்கு வரத்தை உறுதி செய்தல் என்னும் பெயருடன் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு. இது நேட்டோ போல் நெருக்க மாக இருக்காது. அமெரிக்கா நேட்டோ நாடுகளைப் பாதுகாக்க எடுத்த பொறுப்பைப் போல் சீனாவின் அயல்நாடுகளை சீனாவிடமிருந்து பாதுகாக்க முழுப்பொறுப்பு எடுக்காது. ஆனால் தனது தீவிர ஒத்துழைப்பை வழங்கும்.

இரசியாவின் நிலைப்பாடு

2014-ம் ஆண்டு கிறிமிய இணைப்பின் பின் நெருங்கி வந்த இரசிய சீன உறவு 2019இல் இருந்து நெருக்கம் குறைந்து கொண்டு போகின்றது. மத்திய ஆசியாவில் சீனா செய்யும் நகர்வுகளை இட்டு இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு வழங்க ஒத்துக்கொண்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு முறைமையை விநியோகிப்பதை தாமதப் படுத்தியுள்ளது. சீனாவின் நட்பு நாடாக வட கொரியாவும் கம்போடியாவும் மட்டும் இருக்கின்றன.

ஜோ பைடனின் தலைமையில் அமெரிக்கா

அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பில் ஜோன் பைடனும் அதிக அக்கறை காட்டுவார். டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக வர்த்தகப் போர் செய்ய தயாராக இருந்தார். பைடன் அதில் அக்கறை காட்டமாட்டார். ஆனால் இந்தியாவின் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக நிற்பார். கமலா ஹரிஸ் இந்தியப் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இந்துத்துவாவாதிகளைச் சினமடையச் செய்யலாம். சீனாவுடன் டிரம்பின் வர்த்தகப் போர். பைடனும் தொடர்வார். ஆனால் அமெரிக்காவிற்கு பாதகம் ஏற்படாத வகையில் அவரது நடவடிக்கைகள் இருக்கும். தைவானை அவரும் காப்பாற்றுவார். டிரம்ப் இருந்திருந்தால் தைவானில் இரகசியமாக இருக்கும் அமெரிக்கப் படைகள் அதிகரிக்கப் பட்டிருக்கலாம். ஜோன் பைடன் உலக தாராண்மைவாத்தை கையில் எடுப்பாரானால் ஆதிக்கப் போட்டி மற்றும் படைத்துறைப் போட்டி ஒரு புறம் இருக்க வர்த்தக ஒத்துழைப்பை சுமூகமாகச் செய்யும் முயற்ச்சியில் இறங்குவார்ஆசியான் நாடுகளும் சீனா, ஒஸ்ரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுமாக இணைந்து மொத்தம் பதினைந்து நாடுகள் Regional Comprehensive Partneship (RCEP) என்னும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்தது. இதுவும் ஆதிக்கப் போட்டி ஒரு புறமிருக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமூகமாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் வளர்ச்சி சீனாவின் ஆதிக்க மனப்பான்மையை குறைக்க உதவாது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஊரை அடிச்சு உலையில் போடுவது என்றால் சீனாவின் வெளியுறவுக் கொள்கை “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என் விட்டுக்கு வரும்போது என்ன கொண்டு வருவாய் என்பதே”


Tuesday, 24 November 2020

ஈரான் மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் செய்வாரா?

ஈரானை சுற்றி அமெரிக்கப்படைகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் “நொருக்கும் பதிலடி” கொடுப்போம் என ஈரான் 2020-11-17 செவ்வாய்க்கிழமை சூளுரைத்தது. இஸ்ரேலுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யாதது ஒன்று உண்டென்றால் அது ஈரான் மீது தாக்குதல் நடத்தாததுதான். டிரம்ப் பதவியில் இன்னும் இரண்டு மாதங்களே இருக்க முடியும் என்ற நிலையில் அதையும் செய்ய முயல்கின்றார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. குறைந்தது ஈரானின் நடான்ஸ் நகரத்தில் உள்ள யூரேனியம் பதப்படுத்தும் நிலையிலாவது தாக்குதல் நடத்த வேண்டும் என டிரம்ப் தனது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் செய்வதை துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத் துறைப் பதில் செயலர் கிறிஸ்டோபர் மில்லர் உட்பட பலர் ஒத்துக் கொள்ளவில்லை. 2020 நவம்பர் 21-ம் திகதி அமெரிக்காவின் பி-52 (B-52H “Stratofortress) குண்டு வீச்சு விமானங்கள் ஈரானைச் சுற்றவுள்ள அமெரிக்க படைத்தளங்களுக்கு அனுப்பப்பட்டன. 

ஈரான் அசையாது

2020 நவம்பர் 20-ம் திகதி ஈரானிய அரசு தனது நட்பு அமைப்புக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஈரானின் சிறப்புப் படையணியின் தளபதி இஸ்மயில் கானி ஈராக்கில் உள்ள ஈரான் சார்பு தீவிரவாதக் குழுக்களுடன் அமெரிக்கத் தாக்குதல் தொடர்பாக கலந்துரையாட ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். இஸ்ரேல் ஒழிக, அமெரிக்கா அழிக என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் ஈரானின் மதவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் செய்ய வேண்டும் என இஸ்ரேல் கடந்த இருபது ஆண்டுகளாக முயன்று வருகின்றது. ஈரானுடைய மலைகளும் பாறைகளும் நிறைந்த பூகோள அமைப்பு அதை இலகுவில் தாக்கி அழிக்க முடியாத ஒரு நாடாக வைத்திருக்கின்றது.

டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலும்

டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஜரார்ட் குஷ்ணர் ஒரு யூதராவார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் உயர் ஆலோசகராக பதவி வகிக்கும் குஷ்ணர் அங்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கின்றார். அவரும் சவுதி அரேபிய பட்டத்துக்குரிய இளவரசரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலுக்கு சாதகமான பல நகர்வுகள் மேற்காசியாவில் நடந்தன. பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் தமது தலைநகரம் எனக் கொண்டாடிய கிழக்கு ஜெருசேலம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது. அத்துடன் ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகர் என இஸ்ரேல் அறிவிக்க அதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. சிரியாவிடமிருந்து இஸ்ரேல் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் இஸ்ரேல் சிரியாவிடமிருந்த அபகரித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோலான் குன்றுகள் இஸ்ரேலின் ஒரு பகுதி என அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. பலஸ்த்தீனியர்களின் மேற்குக் கரைப் பிரதேசத்தில் இஸ்ரேல் செய்த யூதக் குடியேற்றங்களை அமெரிக்கா சட்ட விரோதமாக கருதமாட்டாது என்றும் டொனால்ட் டிரம்ப் பிரகடனம் செய்தார். ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரச உறவுகளை உருவாக்க டிரம்பின் ஆட்சி முன்னின்று உழைத்தது. இஸ்ரேல் மிகவும் வெறுத்த ஈரானின் படைத் தளபதியை கசீம் சுலேமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொலை செய்தது.

பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

பாதுகாப்புச் செயலர் எனப்படும் பாதுகாப்பு அமைச்சுப் பதவியில் இருந்த மார்க் எஸ்பரை நவம்பர் 6-ம் திகதி நடந்த தேர்தலில் தான் தோல்வியடைந்த பின்னர் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். ஆப்கானிஸ்த்தானில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் அமெரிக்கப் படையினரை வெளியேற்றாமை போன்ற காரணங்களுக்காக அப்பதவி நீக்கம் நடந்ததாக சொல்லப்பட்டாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த மார்க் எஸ்பர் மறுத்தமையும் ஒரு முக்கிய காரணமாகும் எனக் கருதப்படுகின்றது. இதற்கிடையில் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிறையன் தான் பதவியில் இருந்து விலக முன்னர் கட்டார்(கத்தார்) நட்டிற்கு எதிராக ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, எகிப்த்து, பாஹ்ரேன் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள முற்றுகையை நீக்குவேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டார்(கத்தார்) நாட்டின் மீதான முற்றுகையால் அந்த நாடு ஈரானில் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஈரானின் இந்த அரசுறவியல் நெம்பு கோலை வலிமையிழக்கச் செய்யவே இந்த நடவடிக்கை.  

இஸ்ரேல் பாஹ்ரேன் உறவு

இஸ்ரேல் சிரிய எல்லையில் ஆட்கொல்லி கண்ணிவெடிகளை புதைக்கப்பட்டதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரானியப் படை நிலைகள் மீது இஸ்ரேல் 2020 நவம்பர் 18-ம் திகதி தாக்குதல் நடத்தியது. அதில் இரு சிரியப் படையினர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்தது. அந்த தாக்குதலைத் தொடர்ந்து பாஹ்ரெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் லத்திஃப் அல் ஜயானியும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணம் செய்தனர். அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பாஹ்ரேனிய அதிகாரிகள் சூழ ஒரு பேச்சு வார்த்தை இஸ்ரேலியத் தலைநகரில் நடந்தது. பாஹ்ரேனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை சுமூகப் படுத்தவே அமெரிக்க மற்றும் பாஹ்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பயணம் செய்ததாக சொல்லப்பட்டது. இருவரும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணித்தமை மிகவும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.



யூரேனிய பதப்படுத்தல் ஒப்பந்தம்

2015-ம் ஆண்டு P-5+1 எனப்படும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளையும் ஜேர்மனியையும் கொண்ட குழுவுடன் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை செய்தது. அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் 90 நாட்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கும் கையொப்பம் இடவேண்டும். இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் கடுமையாக எதிர்த்தன. டொனால்ட் டிரம்ப் 2016 நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2017 ஜனவரியில் பதவி ஏற்றார். 2017 ஒக்டோபரில் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து கையொப்பமிடவில்லை. அதனால் மற்ற ஆறு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செய்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. ஈரான்மீது அமெரிக்கா மேலதிகப் பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜொன் பைடன் தான் மீண்டும் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பேன் எனச் சொல்லியுள்ளார். அப்படி அங்கீகரிக்கும் போது ஈரான் அந்த ஒப்பந்தப்படி மட்டுப்படுத்தப்பட்ட யூரேனியப் பதப்படுத்தலைச் செய்யலாம். அதை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் விரும்பவில்லை. இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவுடனும் சவுதி அரச குடும்பத்துடனும் தனிப்பட்ட அடிப்படையில் அதிக நட்புக் கொண்ட டொனால்ட் டிரம்ப் தான் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற முன்னர் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலை தடுக்கும் நடவடிக்கையை செய்ய முயல்கின்றார் என நம்பப்படுகின்றது. டிரம்ப் ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் ஒப்பந்தத்தை இரத்துச் செய்த பின்னர் ஈரான் தன்னிடமுள்ள பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்பை 12 மடங்காக உயர்த்தியுள்ளது. இப்போது ஈரானிடம் இரண்டு அணுக்குண்டுகளை உருவாக்கக் தேவையான பதப்படுத்தப்பட்ட யூரேனியம் உள்ளது. அத்துடன் ஜோன் பைடனுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்தால் அதில் தொலை தூர ஏவுகணைகளை மட்டுப்படுத்தும் நிபந்தனை உள்ளடக்கப் படுவதை ஈரான் ஏற்றுக் கொள்ளாது எனவும் அறிவித்துள்ளது. அமெரிக்கா யூரேனியம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் பெருமளவு யூரேனியத்தைப் பதப்படுத்தியதும் ஒப்பந்த மீறலாகும்.

பாஹ்ரேய்னின் முக்கியத்துவம்

ஈரானின் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகள் பாறைகளுக்கு உள்ளே அறுபது அடிகளுக்கு மேற்பட ஆழத்தில் உள்ளன. அவற்றின் மீது அமெரிக்கா தாக்குதல் செய்வதற்கு பாஹ்ரேனில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் பங்கு மிக முக்கியம். அதற்கு பாஹ்ரேனின் ஒத்துழைப்பு அவசியம். பாஹ்ரேயின் வெளியுறவுத் துறை அமைச்சரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒன்றாக இஸ்ரேலுக்கு பயணித்ததின் நோக்கம் பாஹ்ரேனின் ஒத்துழைப்பைப் பெறுவதாக இருக்கலாம். சியா இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக்  கொண்ட பாஹ்ரேனில் சுனி இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி நடக்கின்றது. அங்கிருந்து சியா இஸ்லாமிய நாடான ஈரானின் மீது தாக்குதல் செய்யப்பட்டால் பாஹ்ரேனில் உள்ள சியா இஸ்லாமியர்கள் கிளர்ந்து எழலாம். அதை அடக்குவதற்கான முன்னேற்பாட்டை செய்ய வேண்டும். அதற்கு இஸ்ரேலிய உளவுத்துறையின் பங்களிப்பு அவசியம்.

ஈரானின் மீதான தாக்குதல் சியா இஸ்லாமியர்களைப் பெரும் பான்மையினராக கொண்ட ஈராக்கிலும் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். ஈரானின் ஆதரவு பெற்ற சியா இஸ்லாமியப் போராளிகள் அமைப்பான ஹிஸ்புல்லாவும் மற்ற போராளி அமைப்புக்களும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம். இதனால் அமெரிக்க படைத்துறை மற்றும் வெளியுறவுத் துறை நிபுணர்கள் ஈரான் மீதான தாக்குதலை எதிர்ப்பார்கள். ஆனால் ஜோன் பைடனின் வெற்றி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போரைக் கொண்டு வரும் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் எக்காளமிட்டுள்ளார். ஈரான் மூன்று பக்கம் மலைகளையும் நான்காம் புறம் பெரும் கடலையும் எல்லைகளாக கொண்ட ஆக்கிரமிக்க முடியாத கோட்டை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது உலக எரிபொருள் உற்பத்தியையும் விநியோகத்தையும் பெருமளவில் பாதிக்கும். ஈரானை ஏவுகணைகளால் தாக்குவது குளவிக் கூட்டில் கல்லெறிவது போன்றது. ஈரானின் ஆதரவு பெற்ற பல போராளி அமைப்புக்கள் வட அமெரிக்காவிலும் மேற்காசியாவிலும் உள்ள அமெரிக்காவின் படைத்துறை, அரசுறவியல், குடிசார் நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம்.

டொனால்ட் டிரம்பைப் பொறுத்தவரை தனக்கு அடுத்ததாகப் பதவிக்கு வரவிருக்கும் ஜோன் பைடனுக்கு எப்படி சிக்கல்களை ஏற்படுத்துவதுதான் முக்கியமானதாகும்.


Monday, 23 November 2020

அவியுமா அமித் ஷாவின் பருப்பு?

  


இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சதிஸ்கர், ஜார்கண்ட், கேரளா மஹாராஸ்ட்ரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆட்சி நடக்கவில்லை. இந்தியப் பொருளாதாரத்தை பாஜகவின் பிடியில் வைத்திருக்க மஹராஸ்ட்ரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதன் ஆட்சி நடக்க வேண்டும். இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் பெரிய மாநிலங்களாகும். மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக இருக்கின்ற போதிலும் மொத்த பொருளாதார உற்பத்தி அடிப்படையில் மஹாரஸ்ட்ரா முதலாம் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உத்தரப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியப் பாராளமன்றத்தின் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவைப் பெற மாநில சட்ட சபைகளிலும் பாஜக வலிமை பெற்றிருக்க வேண்டும். 

தளபதி அமித் ஷா

குஜராத்தில் மூன்று தடவை பாரதிய ஜனதாக் கட்சியை ஆட்சியில் அமரச் செய்து புகழ் பெற்ற நரேந்திர மோடியின் தளபதியாக விளங்கியவர் அமித் ஷா. மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகிய போது மாநில அரசியல்வாதியாக இருந்த அமித் ஷா 2014-ம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவரானார். தற்போது மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருக்கின்றார். இந்தியாவின் உள் துறை அமைச்சர் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, காவல் துறை, மாநில அரசுகள், ஆட்சி மொழி ஆகியவற்றிற்கு பொறுப்பான அமைச்சாகும். மாணவப் பருவத்திலேயே மதவாத ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்த அமித் ஷா தனது 33வது வயதில் குஜராத் சட்ட சபை உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து பாஜகவின் தேர்தல் கடமைகளில் முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆரம்ப கால அரசியல் செயற்பாடே காங்கிரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களை பாஜக பக்கம் இழுத்து பாஜகவின் உறுப்பினராக்குவதே. அதை குஜராத் முழுவதும் வெற்றிகரமாக செயற்படுத்தியதால் குஜராத் மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு 2001-ம் ஆண்டு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இன்றுவரை அமித் ஷா குஜராத்தில் காங்கிரசுக் கட்சியை தலையெடுக்க அனுமதிக்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் எதிர்கட்சியில் இருந்து ஆட்களை தமது கட்சிக்கு இழுப்பதில் மட்டும் அமித் ஷா வல்லவரல்லர். தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை பெரிய அளவில் கட்சி மாறச் செய்வதிலும் திறன் மிக்கவர். இதற்காக அவர் பஞ்சதத்திரத்தில் கூறப்படும் சாம, பேத, தான, தண்டம் ஆகியவற்றை பயன்படுத்துவார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்தியாவில் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் வருமான வரித்துறை, சிபிஐ என்னும் சட்ட அமூலாக்கத் துறை மற்றும் பல உளவுச் சேவைகளை தமது தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள் என்ற குற்றச் சாட்டும் பரவலாக உண்டு. ஒரு நடிகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இல்லாவிடில் அவரது வீட்டில் வருமான வரி திடீர் சோதனை, அவரது திரைப்படத்திற்கான தடை போன்றவை மேற்கொள்ளப்படுவதாகவும் நம்பப்படுகின்றது.

மேற்கு வங்காளம்.

மேற்கு வங்கத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்ட சபைக்கான தேர்தலில் 294 தொகுதிகளில் பாஜகவால் மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற திரிணாமுல் காங்கிரசுக் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளமன்றத் தேர்தலில் பெற்ற இரண்டு தொகுதிகளில் இருந்து 18 தொகுதிகளை 2019இல் பெற்றது பெரிய முன்னேற்றம் என்றாலும் நாடாளவிய அடிப்படையில் பாஜக பெற்ற வெற்றியுடன் பார்க்கையில் அது காத்திரமான வெற்றி அல்ல. மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரிணாமூல் காங்கிரசின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர அமித ஷா மாதம் இரண்டு தடவையும் பாஜகவின் செயற் தலைவர் ஜே பி நட்டா மாதம் மூன்று தடவையும் மேற்கு வங்கத்திற்கு பயணம் செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதிகள் நிறைந்த தலையீட்டின் பின்னர் மேற்கு வங்க அரசியலில் இனவாதமும் மதவாதமும் அங்கு தீவிரமடைந்து வருகின்றது. திரிணாமூல் காங்கிரசில் உள்ள இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகின்றார்கள். அதே வேளை சோனியாவின் காங்கிரசுக் கட்சியில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் அதில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைகின்றார்கள். இந்த இரு வகையான தாவல்களில் 2021 ஏப்ரல் மாதம் நடக்க விருக்கும் மேற்கு வங்க சட்ட சபைக்கான தேர்தல் முடிவுகள் தங்கியிருக்கின்றன.

நடந்து முடிந்த பிஹார் தேர்தல்

பிஹார் சட்ட சபைத் தேர்தலில் வீசிய பாஜக சார்பு அலை மேற்கு வங்கம் வரை பரவும் என பாஜகவினர் நம்புகின்றனர். ஆனால் பிஹாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறவில்லை. பிஹாரில் அமித் ஷாவின் தந்திரம் முதற்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு நிதிஸ்குமாருடன் அவருக்குத் தான் முதலமைச்சர் பதவி என்ற உறுதி மொழியை வழங்கி அவருடன் கூட்டணி அமைத்த போது பாஜக 110 தொகுதிகளிலும் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப் பட்டது. அதே வேளை பாஜக் இன்னும் ஒரு கூட்டணியை லோக் ஜன் சக்தி கட்சியுடன் செய்து கொண்டது. அதன் படி பாஜக போட்டியிடும் இடங்களில் லோக் ஜன் சக்தி கட்சி போடியிட மாட்டாது. பாஜகவிற்கு அது ஆதரவு வழங்கும் ஆனால் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து எல்லா தொகுதிகளும் பரப்புரை செய்யும். இந்த இரட்டை முக கூட்டணியால் பாஜக 74 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. உறுதி மொழி வழங்கிய படி நிதிஸ்குமார் முதலமைச்சராக்கப்பட்டார். ஆனால் இன்னும் ஓராண்டுக்குள் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றும். பாஜகவின் இரட்டை முகக் கூட்டணி அண்ணா திமுகாவிற்கும் காங்கிரசுக் கட்சி தன் வலிமைக்கு அதிக தொகுதிகளில் போட்டியிட்டு கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுகவிற்கும் சிறந்த முன்னுதாரணங்களாக அமைந்துள்ளன. 

கேரளா

கேரளாவின் சட்டசபைக்கான தேர்தல் 2021 ஜூன் மாதம் நடக்கவிருக்கின்றது. 2016-ம் ஆண்டு நடந்த கேரள சட்ட சபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 14% வாக்குகளைப் பெற்றிருந்த போதும் 140 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அது வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து இருபது தொகுதிகளிலும் போட்டியிட்ட போதும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதன் பின்பு பாஜக கேரளாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என்றாலும் 2021 ஜூனில் நடக்கவிருக்கும் தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற வாய்ப்புண்டு.

தமிழ்நாடு

2021 மே மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றாலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக உறுதியாக நிற்கின்றது. அதற்காக பல திரையுலகப் பிரபலங்களை தமது கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளது. அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைப்பதும் அறுபது தொகுதிகளில் போட்டியிடுவதும் அதன் முதல் இலக்கு. பின்னர் மாற்றுக் கட்சிகளின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 20விழுக்காட்டுக்கு அதிகமான உறுப்பினர்களை பாஜகவிற்கு தாவச் செய்து தமதி கட்சியைப் வலிமையக்குவதும் ஆட்சியைப் பிடிப்பதும் பாஜகவின் அடுத்த இலக்கு. அதை மனதில் கொண்டு அமித் ஷா 2020 நவம்பர் 21-ம் திகதி தமிழ்நாடு சென்றுள்ளார். அண்ணா திமுக இருபது தொகுதிகளுக்கு அதிகமான தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க தயாரில்லை. அண்ணா திமுகவின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தாம் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களுக்கு எதிராக வருமான வரித்துறை பாயாமல் இருக்க சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அண்ணா திமுகவின் இடைநிலைத் தலைவர்களும் தொண்டர்களும் 2019-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் தாம் வெற்றி பெற்றதற்கு பாஜகவுடன் அண்ணா திமுக அமைத்த கூட்டணிதான் காரணம் என நம்புகின்றார்கள்.

அமித் ஷாவின் தமிழ்நாட்டு வியூகம்

பாஜகவின் திட்டங்களுள் முதலாவது திமுகவை தேர்தலில் வெற்றியடையாமல் செய்ய வேண்டும். இரண்டாவது அண்ணா திமுகவை அடுத்துக் கெடுக்க வேண்டும். 2021 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அமித் ஷாவிற்கு தெரியும். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாநிதியின் மூத்த மகனான முக அழகிரியை இரண்டாவது மகன் மு க ஸ்டானிற்கு எதிராக திருப்பவும் அமித் ஷா முயல்கின்றார். திமுகவின் தேர்தல் வெற்றிகளுக்கு காரணமாக இருக்கும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலைகளை இல்லாமற் செய்ய வேண்டும். திமுகவில் இருந்து சிலரை கட்சி தாவச் செய்ய வேண்டும். இவற்றின் மூலம் திமுகவை வெற்றியடையாமல் தடுக்க வேண்டும். 2026-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் கழகங்களில் இருந்து முக்கிய தலைவர்களைப் பிரித்து பாஜகவுடன் இணைத்தும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டு தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவது அமித் ஷாவின் வியூகத்தில் முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டிற்கு நவம்பர் 21-ம் திகதி சென்ற அமித் ஷா அங்கு நடந்த அரச விழாவில் திமுகவை வாரிசுக் கட்சி எனச் சாடினார். அதற்கு பதிலடி கொடுத்த திமுக அரச செலவில் நடக்கும் அரச நிகழ்வை கட்சி அரசியல் பரப்புரைக் களமாக உள் துறை அமைச்சர் ஷா பயன்படுத்தினார் என்றது; அண்ணா திமுகவில் உள்ள வாரிசு அரசியல் அமித் ஷாவிற்கு தெரியவில்லையா என்றது; உள்நாட்டு விற்பனை வரியில் தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நிதியை ஏன் பாஜக அரசு வழங்கவில்லை எனக் கேள்வி எழுப்பியது; பாஜகவும் அண்ணா திமுகவும் இணைந்து செய்தவை இந்தி திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என தனது விவாத த்தை முன் வைத்தது. இரு தரப்பு விவாதங்களைப் பார்க்கும் போது திமுக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அமித் ஷா தோல்வியடைந்துள்ளார். அமித் ஷாவால் பாஜகவுடனான அண்ணா திமுக கூட்டணி தொடரும் என்பதை மட்டும் உறுதியாக்க முடிந்தது. அவர்கள் கேட்ட 60 தொகுதிகளுக்கு அண்ணா திமுக உடன்படவில்லை. கடந்த முறை தமிழ்நாட்டுக்கு அமித் ஷா பயணம் செய்த போது துக்ளக் குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் எதையும் அவர் செய்து முடிக்கவில்லை என்ற சினம் அமித் ஷாவிற்கு இருந்ததாம். செய்திகளில் அடிப்பட்டது ரஜனிகாந்தை அமித்ஷா சந்திக்கவில்லை.

குஜராத்தில் கட்சித் தொண்டனாக இருந்து ஊர் ஊராகச் சென்று பாஜக அரசை அமைத்தது போல் தமிழ்நாட்டில் செய்ய உள்துறை அமைச்சர் அமித ஷாவிற்கு நேரமில்லை. இந்தியா முழுவதும் மட்டுமல்ல கஷ்மீர் எல்லைகளிலும் அவரது கவனம் சிதறிக் கிடக்கின்றது. அதனால் தமிழ்நாட்டை அடுத்த பத்து ஆண்டுகளில் பாஜக கைப்பற்றும் வாய்ப்பு இல்லை.

 அமித் ஷாவால் நடிகர் ரஜனிகாந்தையோ கருணாநிதியின் மகன் அழகிரியையோ சந்திக்க முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பாஜகவில் இணைந்ததாகவும் தெரியவில்லை.  பாஜகவின் வாக்கு வங்கி சிறிதளவு அதிகரித்திருக்கலாம். ஆனால் அண்ணா திமுகவின் வாக்கு வங்கி அமித் ஷா முன் அதன் தலைவர்கள் குனிந்ததால் குறைந்திருக்கும். வ்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...