Monday, 9 November 2020

பாரதிய ஜனதா கட்சியும் நூறு பிரபலங்களும்

  


தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பதில் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) அதிக முனைப்புடன் காய்களை நகர்த்துகின்றது. பாஜக அண்ணா திமுகவுடன் அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே 2021-ம் ஆண்டின் முற்பகுதியில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கான தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. பாஜக தனக்கு அதிக வாக்கு வங்கி தற்போது உள்ளது என்பதை மற்றக் கட்சிகளுக்கு உணர்த்த தமிழ்நாட்டில் குறைந்தது நூறு பிரபலங்களையாவது தனது கட்சியில் இணைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. நூறு பிரபலங்களை இணைத்தால் அவர்கள் மூலம் தேர்தல் தொகுதி ஒன்றிற்கு ஒரு பிரபலத்திற்கு 250வாக்குகள் பெற முடியும் என்றால் மொத்தம் 25,000 வாக்குகளை பாஜகவால் பெறமுடியும் என்ற நிலை ஏற்படுத்தலாம். தொகுதி ஒன்றிற்கு 25,000 என்றால் அது பல தொகுதிகளில் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் வலிமையை பாஜகவிற்கு கொடுக்கும். அதனால் பாஜகவை தம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட இரண்டு கழகங்களும் முன்வரும் என்பது பாஜகவின் திட்டம்.

கழகங்கள் கை கோர்க்கும்

அண்ணா திரவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தேவை ஏற்படும் போது மறைமுகமாக இணைந்து செயற்படுவதை வழமையாகக் கொண்டுள்ளன. இரண்டு கழகங்களும் பாஜகவைக் கழற்றி விடுவதில் ஒன்றுபட்டு குறைந்த தொகுதிகள் மட்டும் தருவோம் எனச் சொன்னால் பாஜக தனித்தோ அல்லது மருத்துவர் ரமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விஜயகாந்தின் தேதிமுக போன்றவற்றுடன் இணைந்து மூன்றாம் அணி ஒன்றை அமைத்து போட்டியிடலாம். கடந்த காலங்களில் மூன்றாம் அணி என ஒன்று போட்டியிடும் போது திமுக பின்னடைவைச் சந்திப்பதுண்டு. ஆனால் அந்த மூன்றாம் அணியில் பொதுவுடமைவாதக் கட்சிகள் இருக்கும். பாஜக அணியில் அவை இணைய வாய்ப்பில்லாத படியால் பாஜக தலைமையிலான மூன்றாம் அணி அண்ணா திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இரண்டு கழகங்களும் பாஜகவிற்கு சொற்ப தொகுதிகளை மட்டுமே தர முடியும் என அடித்துச் சொல்லக் கூடாது என்பதற்காகவே பாஜக தனது கட்சியில் நூறு பிரபலங்களை இணைக்க முடிவு செய்துள்ளது.

பாரதிராஜாவின் கட்சியானது

கர்நாடக மாநிலத்தில் காவற் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி புகழ் பெற்ற அண்ணாமலை என்பவர் 2020 ஓகஸ்ட் மாத இறுதியில் பாஜகவில் இணைத்துள்ளார். சிறந்த மேடைப்பேச்சும் ஊடகர்களை எதிர் கொள்ளும் திறனும் கொண்ட இவரிடம் நூறு பிரபலங்களை பாஜகவில் இணைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தமிழ்நாடு மாநிலத்திற்கான துணைத்தலைவராகவும் அவர் இணைக்கப் பட்டுள்ளார். கட்சிக்குள் புதிதாக வந்த ஒருவருக்கு முக்கிய பொறுப்புக்களை வழங்கியம பழைய முகங்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழரல்லாதவராகக் கருதப்படும் இவர் ஒரு கட்டத்தில் பாரத ஜனதா கட்சியை பாரதிராஜாவின் கட்சி எனவும் குறிப்பிட்டிருந்தார். பாஜகவில் இணைந்த முதலாவது பிரபலமாக நடிகை குஷ்புவைப் பார்க்கலாம். தமிழரல்லாத இவர் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்டவர் என்றாலும் அவரால் எத்தனை வாக்காளரைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே. அவர் திமுகவில் இருந்து காங்கிரசுக்கு தாவிய போது காங்கிரசுக் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை.

மிரட்டல் முறை

அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஒரு கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு அந்தக் கட்சியில் பிரபலங்கள் இணைவது ஒரு வகை. அதிகாரத்தில் உள்ள கட்சி பிரபலங்களை வருமானவரித்துறை, உளவுத்துறை, காவற்றுறை போன்றவற்றால் மிரட்டி தம்முடன் பிரபலங்களை இணைப்பது இன்னொரு வகை. அதிலும் திரைப்படத் துறையை சேர்ந்தவர்களின் திரைப்படங்கள் வெளியில் வராமல் பல் வேறு வழிகளில் தடை போட்டு மிரட்டி கட்சியில் இணைய வைக்கவும் முடியும்.


வந்தது வந்தாய் சிறுநீரக நோயுடன் வந்தாய்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அதிகம் கவனிக்கும் பிரபலம் நடிகர் ரஜனிகாந்த். அவரை தமிழ்நாட்டில் ஆட்சியை முதலில் கைப்பற்ற வைத்து பின்னர் பார்ப்பனப் பெண்ணான அவரின் மனைவியை ஆட்சியில் அமர்த்த சிலர் முயற்ச்சி செய்கின்றார்கள் எனவும் சிலர் கருதினர். அரசியலுக்கு வருவேன் வருவேன் கட்சி தொடங்குவேன் என அடிக்கடி சொல்லி வந்த ரஜனிகாந்த் தன் வயது ஓடிக்கொண்டிருப்பதையோ அத்துடன் தன் உடல் நலம் தேய்ந்து கொண்டிருப்பதையோ கருத்தில் கொள்ளவில்லை. 2021இல் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் என இருந்த அவருக்கு அவரது சிகிச்சை செய்யப் பட்ட சிறுநீரகமும் நாட்டில் பரவியுள்ள கொவிட்-19 தொற்று நோயும் அரசியில் ஈடுபட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது. ரஜனிகாந்த் ஒன்று பாஜகவிற்கு ஆதரவு அறிக்கையாவது விட வேண்டும் இரண்டு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு கோரிக்கை விட வேண்டும் என பாஜக எதிர்பார்க்கின்றது. பொதுவாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்க தயக்கம் காட்டும் ரஜனிகாந்த் இங்கும் தயக்கத்தை காட்டுகின்றார். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு தன்னை அது எப்படி பழிவாங்கும் என அவர் கரிசனை கொண்டுள்ளார். கமலஹாசனின் மக்கள் மய்யம் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டால் அதற்கு இருக்கும் செல்வாக்கையும் இழக்க நேரிடலாம். மக்கள் மய்யத்தின் வளர்ச்சி மற்றக் கட்சிகளிலும் பார்க்க திமுகவிற்கு அதிக வாக்கு இழப்பை ஏற்படுத்தலாம்.



திரையுலகப் பிரபலங்கள்.

விஜய், அஜித் ஆகிய திரையுலகப் பிரபலங்களில் அஜித் எப்போதும் ஒதுங்கி இருக்கவே விரும்புபவர். விஜய் அரசியிலுக்கு செல்லும் நோக்கத்துடன் தான் அவரது திரைப்பட பாத்திரங்களும் அவை பேசும் வசனங்களும் கடந்த சில ஆண்டுகளாக அமைந்திருக்கின்றன. ஆனால் அவர் கட்டியெழுப்பும் விம்பமும் பாஜகவின் கொள்கையும் ஒத்து போகதவையாக உள்ளன. அவரது வீட்டில் திடீர் வருமான வரிச் சோதனை நடந்தது. அவர் பாஜகவில் இணைய மாட்டார். அவரது தந்தையார் எஸ் ஏ சந்திரசேகர் விஜய் பேரில் தொடக்கிய கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என விஜய் அறிவித்துள்ளார். ஏதோ ஒரு வெளி மிரட்டலுக்கு அடிபணிந்துதான் சந்திரசேகர் கட்சி ஆரம்பித்திருக்கலாம். அடுத்த திரைப்படப் பிரபலம் சூர்யா. ஏற்கனவே சூர்யாவிற்கும் அவர் மனைவி ஜோதிகாவிற்கும் தந்தை சிவக்குமாருக்கும் பல கசப்பான மோதல்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. அவரும் பாஜகவில் இணைய மாட்டார். அடுத்த தமிழ்த் திரைப்பட பிரபலமான தனுஷ் இன்னும் பல வெற்றிப்படங்களை தொடர்ந்து தரும் வாய்ப்புள்ளதால் அந்த வாய்ப்பை சர்ச்சைக்குரிய பாஜகவில் இணைந்து கெடுக்க மாட்டார். அடுத்து தெலுங்கரான விஷால் பாஜகவில் இணைவதற்கான கொடுப்பனவு பேச்சு வார்த்தை செய்து கொண்டிருக்கின்றார். ராதிகாவும் அவர் கணவர் சரத்குமாரும் பாஜகவில் இணைவதற்கான பேச்சு வார்த்தையை செய்து கொண்டிருக்கின்றார்கள். ராதிகாவின் நாடகத் தயாரிப்புக்களுக்கு அங்கிருந்து பெரிதாக ஏதும் கிடைக்காது. சரத்குமார் தனது அரசியல் கட்சியை பாஜவுடன் இணைப்பதற்கு பிரதி உபகாரமாக அகில இந்தியப் பதவி ஒன்று பாஜகவில் தனக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜேந்தர், பார்த்திபன், பாக்கியராஜா ஆகியோரையும் பாஜக அணுகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் வடிவேலுவை பாஜகவில் இணைக்க தீவிர முயற்ச்சி நடக்கின்றது. அவர் அரசியலை வெறுப்பவர். அவர் மிரட்டலுக்கு பயந்து ஒரு கட்சிக்காக பரப்புரை செய்ததால் அவர் இழந்த திரைப்பட வாய்ப்பை இன்னும் ஈடு செய்ய அவரால் முடியாமல் இருக்கின்றார்.

வேல் எடுத்து விளையாடும் பாஜக

பாஜகவினர் தமது கட்சியில் இணைக்கத் துடிக்கும் இன்னொரு பிரபலம் முருகன். பாஜக கந்த சட்டிக் கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பை இகழ்ததை அரசியலாக்கி தனது செல்வாக்கை தமிழ்நட்டில் அதிகரிக்க முயல்கின்றது. தமிழ்நாட்டில் முருகனைப் பாதுகாக்க வேலுடன் ஆறுபடை வீட்டிற்கும் பாதயாத்திரை செய்வோம் என சூளுரைத்தனர். திடீரென்று பாஜகவினர் வேல் மீதும் முருகன் மீதும் அதிக அக்கறை காட்டுகின்றனர். வேலுடன் செல்ல ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க அண்ணா திமுக அரசு அனுமதி மறுத்தது. அதன் மூலம் பாஜகவின் சொல்படி ஆடுகின்றது அண்ணா திமுக என்ற குற்றச் சாட்டை பொய்ப்பிக்க அண்ணா திமுக முயல்கின்றது. இரு கட்சிகளும் சேர்ந்து ஆடுகின்ற ஒரு நாடகமாகவும் இது இருக்கலாம். ராமர் ரத யாத்திரை பாஜகாவிற்கு வட மாநிலங்களில் கை கொடுத்து தூக்கி விட்டது போல தமிழ்நாட்டில் வேல் யாத்திரை கை கொடுக்கும் என பாஜக போட்ட திட்டம் நிறைவேறவில்லை.

 

தேர்தலுக்கு முன் வாக்காளர்களை வாங்கி வெற்றி பெறுவது கழகங்களின் பாணி என்றால் தேர்தலின் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வாங்குவது அமித் ஷாவின் பாணி.

Monday, 2 November 2020

அமெரிக்கத் தேர்தல் களம்

  


நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நான்கால் பிரிபடக் கூடிய ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதலாம் திகதிக்குப் பின்வரும் செவ்வாய்க் கிழமையில் அமெரிக்க அதிபருக்கும் துணை அதிபருக்குமான தேர்தல் நடைபெறும். 2016-ம் ஆண்டு நான்கால் பிரிபடக் கூடியது. அதன் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமையாதலினால் மூன்றாம் திகதி வரும் செவ்வாய்க் கிழமையில் (03-11-2016) அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கின்றது. இலங்கையைப் போல அமெரிக்க அதிபர் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதில்லை. ஒவ்வொரு அமெரிக்க மாநிலத்திற்கும் என ஒதுக்கப்பட்ட தேர்தல் குழுக்கள் (Electoral College) அதிபரைத் தேர்ந்தெடுக்கின்றன.

தேர்தல் குழுக்கள் (Electoral College)

அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இரண்டு என நூறு உறுப்பினர்களை அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மூதவைக்கு மக்கள் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்கின்றனர். ஐம்பது மாநிலங்களில் இருந்தும் அவற்றின் மக்கள் தொகைகு ஏற்ப அமெரிக்க பாராளமன்றத்தின் மக்களவைக்கு 435 உறுப்பினர்களை நேரடி வாக்களிப்பின் மூலம் மக்கள் தெரிவு செய்கின்றனர். மூதவையின் நூற்றையும் மக்களவையின் 435ஐயும் பாராளமன்ற உறுப்பினர் இல்லாத வாஷிங்டனுக்கு மூன்று தேர்தல் குழுக்கள் எனவும் கூட்டி மொத்தம் 538 தேர்தல் குழுக்கள் (Electoral College) அமெரிக்காவில் உள்ளன. உதாரணத்திற்கு கலிபோர்ணியா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அது மக்களவைக்கு 53 உறுப்பினர்களையும் மூதவைக்கு இரண்டு உறுப்பினர்களையும் தெரிவு செய்கின்றது. அதனால் அங்குள்ள மொத்த தேர்தல் குழுக்கள் 55ஆகும். ஒருவர் அதிபராகத் தெரிவு செய்யப்படுவதற்கு இந்த குழுக்களில் உள்ளவர்களின் 270பேரின் வாக்குகள் தேவை. கலிபோர்ணியா மாநிலத்தின் மொத்த 55 தேர்தல் குழுக்களில் 28ஐ ஒரு அதிபர் வேட்பாளரும் மற்ற வேட்பாளர் 27ஐயும் பெற்றால் அந்த மாநிலத்தின் மொத்த 55 வாக்குகளும் அதிகப்படியான 28 தேர்தல் குழுக்கள் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு உரியதாக்கப்படும். இதை “வெற்றி பெற்றவர் எல்லாவற்றையும் அள்ளிக் கொள்ளுவார்” என்பர். Maine, Nebraska ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் “வெற்றி பெற்றவர் எல்லாவற்றையும் அள்ளிக் கொள்ளுவார்” என்ற முறைமை இல்லை. தேர்தல் குழுக்கள் மூலமான தேர்வு முறையால் இரண்டு கட்சிகள் மட்டும் ஆதிக்கல் செலுத்துவது இலகுவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு இரண்டு முதலாளித்துவக் கட்சிகளைத் தவிர வேறு தெரிவு இல்லை.

அமெரிக்க பாராளமன்றத் தேர்தலும் நடக்கின்றது.

2020 நவம்பர் 3-ம் திகதி அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் 435 தொகுதிகளுக்குமான தேர்தலும் நடைபெறுகின்றது. மக்களவைக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது ஜோ பிடனின் மக்களாட்சிக் கட்சி மக்களவையில் அதிக பெரும்பான்மையுடன் இருக்கின்றது. ஆனால் மூதவையில் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையுடன் இருக்கின்றது. ஒரு மூதவை உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். ஆனால் மொத்த மூதவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சுழற்ச்சி முறையில் நடைபெறும். 2020 நவம்பர் 03-ம் திகதி 35 மூதவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடை பெறுகின்றது. இதில் மக்களாட்சிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி மூதவையிலும் அது பெரும்பான்மையுடன் இருக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. ஒரு அதிபர் சிறப்பாக செயற்பட மக்களவையிலும் மூதவையிலும் அவருக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

கேள்விக் குறியான மக்களாட்சி

கலிபோர்ணியா மாநிலம் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாகும். அங்கு 718,000 மக்களுக்கு ஒரு தேர்தல் குழு என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வையோமிங் (Wyoming) மாநிலத்தில் 193,000 மக்களுக்கு ஒரு தேர்தல் குழு எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாட்டால் அமெரிக்க தேர்தல் முறைமை மக்களாட்சி முறைமைக்கு விரோதமானது எனப்படுகின்றது. 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஹிலரி கிளிண்டனுக்கு டொனால்ட் டிரம்பிலும் பார்க்க அதிக மக்கள் வாக்களித்திருந்த போதிலும் தேர்தல் குழு முறையினால தேர்தலால் டிரம்ப் வெற்றி பெற்றார். பெரிய ஒரு சில மாநிலங்கள் மற்ற மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க இந்த தேர்தல் குழு முறைமை உதவி செய்கின்றது என அதை விரும்புபவர்கள் சொல்கின்றனர். மொத்த ஐம்பது மாநிலங்களில் California, New York, Texas, Florida, Pennsylvania, Ohio, Illinois, Michigan, New Jersey, North Carolina, Virginia ஆகிய பதினொரு மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஒரு வேட்பாளரால் அதிபராக முடியும். 1787-ம் அமெரிக்க அரசியல் யாப்பு வரையும் போது குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதா அல்லது பாராளமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதா என்ற இருதரப்பு விவாதங்களின் உடன்பாடுதான் தேர்வுக் குழு முறைமை.

இரு கட்சிகளைத் தவிர வேறு தேர்வில்லை.

அமெரிக்கத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி மக்களாட்சிக் கட்சி என இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் அதிக பணம் செலவழிக்கப்படும். இம்முறை குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் மக்களாட்சிக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றார்கள். ஒவ்வொரு வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறக் கூடிய மாநிலங்கள், வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்கள் என உள்ளன. அத்துடன் கடும் போட்டி நிலவும் மாநிலங்களும் உள்ளன. 2020 ஒக்டோபர் 29-ம் திகதிய நிலவரப்படி மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் கலிபோர்ணியா, நியூ யோர்க், இலியான, நியூ ஜேர்சி, போன்ற பெரிய மாநிலங்கள் உட்பட பத்தொன்பது மாநிலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நிலை உள்ளதாக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் அவருக்கு 207 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கும். மேலும் ஏழு மாநிலங்களில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளன. அவற்றில் இருந்து ஜோ பிடனுக்கு 72 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கலாம். இரண்டிலும் மொத்தமாக அவருக்கு 279 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கலாம் என்பதால் அவர் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகின்றது. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 17 மாநிலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவற்றில் இருந்து 83 தேர்தல் வாக்குகளைப் பெறுவார். டிரம்ப் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ள ஆறு மாநிலங்களில் இருந்து 42 தேர்தல் குழு வாக்குகளை டிரம்ப் பெறலாம். அதனால் டிரம்ப் 125 தேர்தல் குழு வாக்குகளைப் பெறலாம். கடும் போட்டி நிகலும் எட்டு மாநிலங்கள் எல்லாவற்றிலும் டிரம்ப் வெற்றி பெற்றாலும் அவரால் தேவையான 270 வாக்குகளைப் பெற முடியாது. நடளாவிய கருத்துக் கணிப்பில் ஜோ பிடனுக்கு ஆதரவாக 51.4% மக்களும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக 42.8% மக்களும் உள்ளனர். இவை யாவும் 2020 ஒக்டோபர் 29-ம் திகதி நிலவரங்கள். இறுதி நேரத்தில் செய்யப்படும் பரப்புரைகள் மற்றும் ஒரு வேட்பாளரைப் பற்றிய அந்தரங்க தகவல்களை அம்ப்லமாக்குதல் போன்றவை நிலைமையை மாற்றலாம்.

ஒதுக்கப்பட்ட உலகம்

வழமையாக தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலும் நேரடி தொலைக் காட்சி விவாதங்களிலும் உலக அமைதி, உலக ஒழுங்கு போன்றவை காத்திரமான பங்கு வகிக்கும். இந்த முறை அவை பெரிதாக அடிபடவில்லை. துணை அதிபர்கள் பதவிக்குப் போட்டியிடும் மைக் பென்ஸுக்கும் கமலா ஹரிஸுக்கும் இடையில் நடந்த விவாதத்தில் உலக வெப்பமயமாதல் மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவை விவாதிக்கப்பட்டன. சிரியாவில் நடந்த பேரழிவு, பத்தொன்பது ஆண்டுகளுக்கு மேல் தொடரும் ஆப்காலிஸ்த்தான் போர், மனித உரிமை மீறல் போன்றவற்றைப் பற்றிய விவாதமே நடக்கவில்லை எனச் சொல்லலாம். கொவிட்-19 தொற்று நோயை டிரம்ப் கையாண்ட விதம் அவருக்கு பெரும் பாதகமாக அமைந்துள்ளது. கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் ஒன்றான புளோரிடா மாநிலத்தில் டிரம்பிற்கு எதிரான பரப்புரையில் நாவன்மை மிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஈடுபட்டுள்ளார்.

தபால் மூலம் அளிக்கப் படும் வாக்குகளில் குளறுபடிகள் நடந்தன என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் பதவியில் தான் தொடருவேன் என அடம் பிடிப்பார் எனவும் அஞ்சப்படுகின்றது. அதனால் நாட்டில் பெரும் கலவரம் உருவாகலாம் எனவுக் எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதற்கு தயாரான நிலையில் உள்ளது. 2020 நவம்பர் 3-ம் திகதி நடக்கும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் உலக அமைதிக்கோ அல்லது செழுமைக்கோ உதவாது.

Monday, 26 October 2020

விமானம் தாங்கி கப்பல் போட்டியில் இந்தியா

 

கடல் எல்லைகளைக் கொண்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு வலிமையான கடற்படை அவசியம். கடலோர வளங்களையும் கரையில் இருந்து 200 கிலோ மீட்டர் தூர கடற்பொருளாதார வளத்தையும் பாதுகாப்பதற்கும் கடற்போக்குவரத்தை பாதுகாப்பதற்கும் கடற்படை அவசியமானதாகும். முன்பு பிரித்தானியாவும் தற்போது அமெரிக்காவும் தமது கடற்படை வலிமை மூலமாகவே தம் உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தின. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அதன் பொருளாதார வலிமையும் கடற்படை வலிமையுமே தூக்கி நிறுத்தின.

சீனாவினதும் அமெரிக்காவினதும் விமானம் தாங்கிக் கப்பல்கள்

சீனாவிடம் தற்போது இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. முதலாவது இரசியாவிடமிருந்து வாங்கிய லியோனிங். மற்றது சீனாவே உருவாக்கிய ஷாண்டோங். சீனா மேலும் இரண்டு புதிய விமானம் தாங்கிக் கப்பல்களை சீனா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அவை அறுபதாயிரம் தொன் எடையுள்ள நடுத்தர அளவு விமானம் தாங்கிக் கப்பல்களாகும். சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் 2023இல் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அமெரிக்காவின் பதினொரு விமானம் தாங்கிக் கப்பல்களும் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). விமானம் தாங்கிக் கப்பல்களின் தரவரிசை அவற்றின் எடை, தங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை, அவற்றில் இருந்து விமானங்கள் கிளம்பிச் செல்லும் முறைமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். விமானம் தாங்கிக் கப்பல்களில் மிகச் சிறந்தவை மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). அவை:

1. ஒரு இலட்சம் தொன் அல்லது அறுபத்தி நான்காயிரம் மெட்ரிக் தொன் எடையுள்ளவை

2. தொண்ணூறு விமானங்களைக் கொண்டிருக்கும்.

3. மின்காந்த தொழில்நுட்பம் மூலம் குறைந்த அளவு தூரம் பறந்து விமானங்கள் வானில் பறக்கும்.

அமெரிக்காவின் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் இரண்டு விமானங்கள் பறந்து செல்லக் கூடியவை.

பின் தங்கிய சீனா

சீனா தனது விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு இரசியாவின் எஸ்யூ-33 போர்விமானங்களை வாங்க முயற்ச்சித்த போது இரசியா அவற்றை விற்பனை செய்ய மறுத்து விட்டது. பின்னர் சீனா உக்ரேனிடமிருந்து அரைகுறையாக வடிவமைக்கப் பட்ட எஸ்யூ-33 விமானங்களை வாங்கி Reverse Engineering மூலம் உருவாக்கிய விமானங்கள் சரியாக வேலை செய்யவில்லை. Reverse Engineering மூலம் இயந்திரஙக்ளை உருவாக்குவது மிக மிக கடினமானது என்ற படியால் சீனாவால் சிறந்த போர் விமானங்களை உருவாக்க முடியவில்லை. அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனல் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியாவின் பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.



இந்தியவினதும் சீனாவினதும் கரையோரங்கள்

இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம், மியன்மார், இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. தென் சீனக் கடலின் தொண்ணூறு விழுக்காடு தன்னுடையது என உரிமை கொண்டாடும் சீனா பல நாடுகளின் எதிர்ப்பை எதிர் கொள்கின்றது.

மலபார் போர்ப்பயிற்ச்சி

இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பில் மலபார் போர்ப்பயிற்ச்சி முக்கிய பங்கு வகிக்கும். 1992இல் இருந்து அமெரிக்கா, இந்தியா, இணைந்து செய்து வந்த இப்போர்ப்பயிற்ச்சியில் 2015இல் ஜப்பான் இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே இப்போர்ப்பயிற்ச்சியை சீனா ஐயத்துடனும் சினத்துடனும் பார்த்தது வருகின்றது. மலபார் போர்ப்பயிற்ச்சியில் இனி ஒஸ்ரேலியாவும் இணைந்து கொள்ளவிருக்கின்றது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து குவாட் என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவக்கி வருகின்றன. இது ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் என்பதை மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்தமை எடுத்துக் காட்டுகின்றது. இந்தியாவிற்கு எதிரான போர் ஏற்படும் போது இந்த மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு உதவக் கூடிய வகையில் ஒப்பந்தம் செய்தல் அவசியமானதாகின்றது.

அமெரிக்க தளங்களைப் பாவிக்கக் கூடியக இந்தியா

2016—ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் செய்து கொண்ட செயலாதார பரிமாற்ற ஒந்தக் குறிப்பணை(Logistics Exchange Memorandum of Agreement) இந்தியாவிற்கு உலகின் பல பகுதிகளிலும் உள்ள அமெரிக்க படைத்தளங்களை பாவிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்தி இந்தியாவின் கடற் போக்கு வரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவிற்கு வலிமை மிக்க கடற்படை தேவை. இந்தியாவின் இரண்டாவது வி/தா கப்பல் முப்பதினாயிரம் எடையுள்ள சிறிய வகை வி/தா கப்பலாகும்.. இந்தியா இரசியாவிடமிருந்து 2013இல் வாங்கி மேம்படுத்திய வி/தா கப்பலான விக்கிரமாதித்தியா 44,500 தொன் எடையுள்ளது. அமெரிக்காவிடமிருந்து மின் காந்தம் மூலம் விமானங்களை கப்பல்களில் இருந்து பறக்கவைக்கும் தொழில் நுட்பத்தை வாங்கும் அனுமதிய இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. சீனா அத்தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல்

சீனா விரைவில் நான்கு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்ட ஒரு நாடாக உருவெடுப்பதால் இந்தியாவிற்கு மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் அவசியமானதாகின்றது. ஒரு விமானம் தாங்கிக் கப்பல் பராமரிப்பிற்காக மூன்று மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டி இருக்கும். சீனா தனது நான்கு விமானம் தாங்கிக் கப்பல்களையும் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராக நகர்த்த முடியாது என்றாலும் இந்தியா அரபிக்கடல், இந்து மாக்கடல், வங்கக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல் அவசியமாகின்றது. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் சீனாவினுடையவற்றிலும் பார்க்க சிறியதாகும். இந்தியக் கடற்படையினரும் மூன்றாவது கப்பலுக்கு நீண்ட காலமாக வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். விமானம் தாங்கிக் கப்பல் என்பது ஒற்றைக் கப்பல் அல்ல. அதற்கு என்று பல பரிவாரக் கப்பல்கள் அவசியம். ஒரு விமானம் தாங்கிக் கப்பலைச் சுற்றிவர நாசகாரிக் கப்பல்கள், நீர்மூழிகிக்கப்பல்கள், கரையோரக் கப்பல்கள் என்பன எப்போதும் இருக்க வேண்டும்.

சீனா விமானம் தாங்கிக் கப்பல்களை அழிப்பதற்கு என்று பலவகையான  ஏவுகணைகளையும் நீர்மூழ்கிக்கப்பல்களையும் தானுந்தி நீரடி ஏவுகணைகளையும் (Torpedoes) உருவாக்கி வைத்துள்ளது. அவற்றில் இருந்து தனது விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான இடைமறிப்பு ஏவுகணைகளை இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற வேண்டியதும் அவசியமானதாகின்றது. அத்துடன் இரு நாடுகளும் இதில் இணைந்து பாதுகாப்பு முறைமைகளை உருவாக்கவும் வேண்டும்.

Friday, 23 October 2020

குவாட்டில் (QUAD) இலங்கை இணையுமா?

 


குவாட் என்னும் பெயரில் இரண்டு அமைப்புக்கள் உள்ளன. ஒன்று குவாட் குழு. அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவற்றைக் கொண்ட வர்த்தகக் கூட்டமைப்பு. மற்றது குவாட் பாதுகாப்பு உரையாடல் என்னும் பெயர் கொண்டது. இது ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஒஸ்ரெலியா ஆகைய நாடுகளைக் கொண்ட ஒரு முறைசாரா கேந்திரோபாய அமையம் ஆகும். இதை ஆங்கிலத்தில் Quadrilateral Security Dialogue என்றும் சுருக்கமாக QUAD என்றும் அழைப்பர். 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைய விரும்புவதால் அதை QUAD+ எனவும் அழைக்கின்றனர். இது சீனாவை அடக்க உருவாகவிருக்கும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பின் முன்னோடி. சீனாவின் நடுத்தர காலக் கொள்கை ஆசியாவில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கமும் உலக அரங்கில் அமெரிக்காவினதும் சீனாவினதும் இருதுருவ ஆதிக்கமும் எனவும் நீண்ட காலக் கொள்கை உலகில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கம் எனவும் கருதப்படுகின்றது. இதைத் தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவை நெருங்கிச் சென்ற இரசியா தனது நெருக்கத்தை நிறுத்தி சீனாவிற்கான தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் நிறுத்தியுள்ளது.

இலங்கை உலக அரங்கில் பகிரங்க கொள்கை ஒன்றையும் திரைமறைவுக் கொள்கை ஒன்றையும் வைத்திருக்கின்றது. தன்னுடைய திருவோட்டை நிரப்புவதற்கு ஏற்ப அவ்வப்போது தன் கொள்கையை திரித்துக் கொள்ளும். இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுடைய அரசுறவியலாளர்கள் கொழும்பு சென்றால் அவருக்கு பதின்ம வயதுப் பெண்கள் (சிலருக்கு ஆண்கள்) உட்பட பரிமாறி அவர்களை நன்கு விருந்தோம்பும். இதையறியாமல் சில தமிழ் அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இலங்கை சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை வைத்திருக்கின்றது மற்ற உலக நாடுகளை தனது அறிஞர்களைப் பயன்படுத்தி சிறப்பாகக் கையாள்கின்றது எனப் பிதற்றுவார்கள்.

சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் சீனாவை தங்களது எல்லாச்சூழலிலும் உதவும் நண்பனாகப் பார்க்கின்றனர். இந்திய இந்துக்களை இந்தியாவில் பௌத்த மதத்தை ஒழித்துக் கட்டியவர்களாவே பார்க்கின்றனர். தாராண்மைவாதம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால் இலங்கையில் பராமரிக்கப் பட்டு வந்தது. ரணிலின் தில்லுமுல்லுக்களால் அது இலங்கையில் இப்போது படுதோல்வியடைந்துள்ளது. உலக அரங்கிலேயே ஓரம் கட்டப்பட்ட தாராண்மைவாதம் இனி ஒரு புதிய வடிவத்தில் வரமுயற்ச்சிக்கலாம். இந்தியா சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு தன்மீது இருக்கும் பகைமையை நீக்க கடந்த சில ஆண்டுகளாக பெரு முயற்ச்சி செய்கின்றது. அது இன்னும் வெற்றியளிக்க வில்லை. இந்தியாவை ஏமாற்றும் கலையில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் விற்பன்னர்களாக இருக்கின்றார்கள். சிங்கள பொதுவுடமைவாத தீவிரவாதிகளையும் தமிழ்பிரிவினைவாதிகளையும் அழிப்பதில் இந்தியா கூலி வாங்காத கூலிப்படையாக இலங்கைக்காக செயற்பட்டது. இலங்கையின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா அதைச் செய்யவில்லை தனது பிராந்திய நனலைக் கொண்டே செய்தது என்பதை சிங்கள பௌத்த பேரினவாதிகள் நன்கறிவர்.

சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவானது போல் இந்த நூற்றாண்டில் ஆசியாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றில் சீனாவும் வட கொரியாவும் கம்போடியாவும் இருக்கும். மற்றதில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, வியட்னாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகியவை உட்பட மேலும் ஒரு சில நாடுகள் இருக்கும். சுவீடன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் இல்லாமல் இருந்தன. அது போல் ஆசியாவிலும் பல நாடுகள் இருக்க முடியும். தற்போதைய சூழலில் பிலிப்பைன்ஸ் என்ன செய்யும் என சொல்ல முடியாமல் இருக்கின்றது. ஆனால் அங்கு உள்ள அமெரிக்கப் படைத்தளம் தற்போதைக்கு அகற்றப்பட மாட்டாது. அமெரிக்கா தலைமையிலான சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பு தற்போது குவாட் என அழைக்கப்பட்டாலும் அது வேறு பெயரைப் பெறும். குவாட் என்பது நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தை அமைப்பு மட்டுமே.

இலங்கை எந்தக் கூட்டமைப்பில் சேரும் எனற கேள்விக்கான விடை அது எதிலும் சேராது ஆனால் சீனாவுக்கு எதிராக எந்த ஒரு நகர்வையும் செய்ய மாட்டாது. எந்தச் சூழலிலும் இலங்கைக்கு ஆதரவாக ஐநா பொதுச் சபையில் இலங்கைக்காக இரத்து அதிகாரத்தைப் பாவிக்கும் ஒரு நாட்டின் நட்பு இலங்கைக்கு அவசியம். பொதுநலவாய நாடுகள், ஐநா துணை அமைப்புக்கள் போன்றவற்றில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு அவசியம். இலங்கை சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் சீனா இலங்கையில் உள்ள பௌத்த சிங்கள பேரினவாதிகளைப் பயன்படுத்தி தனக்கு ஏதுவான ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை பாயும். சீனாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி அது சிங்கப்பூருக்கு செய்யும் ஏற்றுமதியிலும் பார்க்க குறைவானது. இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்க்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி அதன் மொத்த ஏற்றுமதியில் 75%இலும் அதிகமானதாகும். அந்த நாடுகள் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்தால் இலங்கை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். ஆகையால் இலங்கை எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் சேரமாட்டாது.

சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் போட்டியில் இலங்கை சீனா பக்கம் நிற்கும். அப்போது அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கும். எமக்கு உரிமைகளைப் பெற்றுத்தரும். சர்வதேசம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியா எனது நண்பன் என்பவையெல்லாம் மனப்பால் மட்டுமே.

இலங்கையும் அமெர்க்காவும் Status of Forces Agreement (SOFA) செய்தாலும் ஆதற்கு இணையான வசதிகளை இலங்கை சீனாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.


Monday, 19 October 2020

பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஒளிரும் இரசியா

  


இரசிய நடுவண் வங்கி ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலையின்கீழ் 2021இன் ஆரம்பத்தில் இருந்து 2023இறுதி வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் மசகு ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை இருபத்தைந்து டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. கொவிட்-19 தொற்று நோயின் மோசமான இரண்டாவது அலைத்தாக்குதல்புவிசார் அரசியல் குழப்பங்கள்முன்னணி நாடுகளிடையேயான வர்த்தகப் போர்நாடுகளின் கடன் பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இரசிய நடுவண் வங்கி தனது எதிர்வு கூறலைச் செய்துள்ளது. 

பொருளாதார வளரச்சி

மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளாலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலையாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல சவால்களை இரசியப் பொருளாதாரம் எதிர் கொண்ட போதும் பல மேற்கத்தைய பொருளியல் வல்லுனர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இரசியப் பொருளாதாரம் உறுதியாக இருக்கின்றது. 2013 முதல் 2019வரை இரசியப் பொருளாதாரம் சராசரியாக ஒரு விழுக்காட்டால் வளர்ச்சியடைந்தது. இரசிய நிதியமைச்சர் இரசியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தி 2020இல் 4விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் எனத் தெரித்தார். பன்னாட்டு நாணய நிதியமும் இரசியப் பொருளாதாரம் 2020இல் 4.1விழுக்காட்டால் சுருங்கும் என எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை 2021இல் 2.8விழுக்காட்டால் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அது 2019இல் 4.5 விழுக்காடாக இருந்த இரசியாவின் பணவீக்கம் 2020இல் 3.7 விழுக்காடாகத் தணியும் எனவும் கருதுகின்றது. 2020 ஜூலையில் உலக வங்கி இரசியாவின் பொருளாதாரம் 6விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறிய போது இரசிய நடுவண் வங்கி தனது வட்டி வீதத்தை 4.25 விழுக்காடாகக் குறைந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது மிகக்குறைந்த வட்டி விழுக்காடாகும். அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் இரசியப் பொருளாதர வளர்ச்சி எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டது.

 

 

மசகு எண்ணெயின் விலை பீப்பா ஒன்றிற்கு முப்பது டொலராகக் குறைந்தாலும் இரசியாவின் பொருளாதாரம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்கு இரசிய அரச நிதியத்திடம் நிதி இருக்கின்றது அதற்கு முன்னர் இரசிய அரசு அறிவித்திருந்தது. 2020 ஒக்டோபர் 14-ம் திகதி உலகச் சந்தையில் எரிபொருள் விலை 42 டொலராக இருந்தது.

அரச நிதி

2020 ஜனவரியில் இரசிய அதிபர் புட்டீன் இரசிய உட்கட்டுமானங்களிலும் சமூகத் திட்டங்களிலும் நான்கு ரில்லியன் ரூபிள்களைச் செலவு செய்வதாக உறுதியளித்திருந்தார். இரசியப் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு அது ஏதுவாக அமையும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அரச நிதியை சமாளிக்க அடிப்படை வருமான வரியை 2021இல் 13விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிக்க இரசிய அரசு உத்தேசித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பின் மூலம் இரசிய அரச வருமானம் அறுபது பில்லியன் ரூபிளால் அதிகரிக்கும். இரசியாவின் வருமானவரி விதிப்பு நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பிடுங்கி வறிய மக்களுக்கு உதவிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இரசிய அரசின் நிதிப்பற்றாககுறை 2020இல் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.1விழுக்காடாகவும் 2021இல் 2.4 விழுக்காடாகவும் 2022இல் ஒரு விழுக்காடாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசியாவில் முதலீடுகள்

ஐநாவின் அங்ராட்டின் அறிக்கையின் படி 2019-ம் ஆண்டு இரசியாவில் வெளிநாட்டு முதலிடு 31.7பில்லியன் டொலர்களாகும். இது 2018இன் 13பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த வளர்ச்சியாகும். ஐக்கிய இராச்சியம்சைப்பிரஸ்லக்சம்பேர்க்நெதர்லாந்துபஹாமாஸ்அயர்லாந்துபெர்மூடா ஆகிய நாடுகள் இரசியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இரசியாவின் கனிம வளம் மற்றும் இணையவெளி போன்றவற்றில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்படுகின்றன. இரசியாவின் ஆர்க்டிக் எரிபொருள் ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கு நாடுகள் விதித்துள்ளன. இரசிய அரச நிதியமும்இரசிய நேரடி முதலீட்டு நிதியமும் ஐக்கிய அமீரகத்தின் நிதியம் ஒன்றுடன் இணைந்து முகங்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. சீன இந்தத்த் துறையில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது.

பிராந்தியப் பிரச்சனைகள்

இரசிய அரசு பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெலரஸில் தேர்தலை எதிர்த்து மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்கின்றனர்அஜர்பைஜானும் ஆர்மேனியாவும் மோதிக் கொள்கின்றனகஜகஸ்த்தானில் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இரசியா முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான பெலரஸ்கஜ்கஸ்த்தான்ஆர்மேனியாஅஜர்பைஜான்கிரிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து யூரோ ஏசியன் பொருளாதார ஒன்றியம் என்னும் பொருளாதரக் கூட்டமைப்பு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போட்டியாக உருவாக்கியுள்ளது. 180மில்லியன் மக்களைக் கொண்ட அந்த பொருளாதாரக் கூட்டமைப்பு மிகப் பெரிய நாடாகிய இரசியாவுடன் பல மிகச் சிறிய நாடுகளை இணைக்க முயல்கின்றது. இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் என்பது மட்டுமல்ல முதலாம் உலகப் போரிற்கு முன்னர் துருக்கியால் ஆளப்பட்ட நாடுகள். இந்த நாடுகளில் துருக்கியும் தன் ஆதிக்கத்தை செலுத்த முயல்கின்றது. துருக்கியினதும் இரசியாவினதும் போட்டிக்களமாக ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் தற்போது மாறியுள்ளன.

இரசியாவின் படைக்கல ஏற்றுமதி

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இரசியா இருக்கின்றது. 2019-ம் ஆண்டு இரசியா 13பில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை ஏற்றுமதி செய்திருந்தது. இது 2018இலும் பார்க்க இரண்டு பில்லியன் டொலர் அதிகமாகும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி பல சவால்களைச் சந்திக்கின்றது. சீனா தனது உள்நாட்டு படைக்கல உற்பத்தியை அதிகரிக்கின்றது. இந்தியாவும் அதையே செய்வதுடன் அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை வாங்குகின்றது. கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் பின்னர் உலகில் பல நாடுகள் சிக்கன் நடவடிக்களை 2021-ம் ஆண்டு மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். சிக்கன நடவடிக்கை என வரும் போது பல நாடுகள் தமது படைக்கலன் கொள்வனவை குறைக்கும். இது இரசிய படைக்கலன் ஏற்றுமதியையும் பாதிக்கும்.

இரசியாவின் அரச நிதியம் 2020இன் ஆரம்பத்தில் 124பில்லியன் டொலர்களாக இருந்தது. கொவிட்-19 தொற்று நோயல் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க செய்த செலவால் 2020இன் இறுதியில் அது 95பில்லியன்களாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டில் இருந்து அது அதிகரிக்கத் தொடங்கலாம். ஆகையால் இரசியா தனது எதிரிகளால் உருவாக்கப்பட்ட சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளும்.

Tuesday, 13 October 2020

அமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021

 


2016-ம் ஆண்டு தைவான் சுதந்திரமான நாடு என்ற கொள்கையுடைய சாய் இங் வென் அதன் அதிபராகப் பதவியேற்றதில் இருந்து சீனா தைவானை தனது ஒரு மாகாணம் என வலியுறுத்துவது அதிகரித்தது. 2019 ஜனவரியில் அமைதியான வழியில் அல்லது அது முடியாதவிடத்து ஒரு போர் மூலமாகாவேனும் தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் சூளுரைத்தார். அதன் பின்னர் தைவான் வான்பரப்புக்கு சீன விமானங்களும் அதன் கடற்பரப்பினுள் சீனப் போர்க்கப்பல்களும் அத்து மீறுவது அடிக்கடி நடக்கின்றது. 2016-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வென்றவுடன் தைவான் அதிபர் தொலைபேசி மூலம் டிரம்புடன் பத்து நிமிடம் உரையாடியது சீனாவை ஆத்திரப்படுத்தியது. 2020 ஆகஸ்ட்டில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் தைவான் சென்றது சீனாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியது.



தைவானின் முக்கியத்துவம்

சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக போர் செய்தே ஆக வேண்டும். 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய நாடாக மாறும். அதனால் தைவானை சீனா கைப்பற்றுவதை அமெரிக்கா எந்த வகையிலும் தடுக்கும். 2021-ம் ஆண்டு சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சி செய்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.


சீனத் தாக்குதல்கள்

சீனா தைவானைக் கைப்பற்ற முன்னர் நான்கு பெரும் தாக்குதல்களைச் செய்ய வேண்டும். முதலாவது அமெரிக்க செய்மதிகளை ஏவுகணைகள் மூலம் அழிப்பதுடன் இணையவெளித் தாக்குதல் மூலம் அமெரிக்கப்படையினரின் தொடர்பாடல்களை நிர்மூலம் செய்ய வேண்டும். இரண்டாவது சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சீனப் பொருளாதாரதரத்தின் இதயமான கைத்தொழிற்பேட்டைகளை இலக்கு வைத்து தைவான் தனது மண்ணில் நிறுத்தி வைத்துள்ள ஏவுகணை நிலைகளை அழிக்க வேண்டும். மூன்றாவது அமெரிக்கா பசுபிக் மாக்கடல், இந்து மாக்கடல், ஜப்பான் கடல் ஆகியவற்றில் சீனாவை இலக்காகக் கொண்டு வைத்துள்ள பல படைத்தளங்களை அழிக்க வேண்டும். நான்காவதாக தைவான் நீரிணையில் உள்ள அமெரிக்க கடற்படையை அழிக்க வேண்டும். இறுதி நகர்வாக சீனா பெருமளவு படையினரை தனது கடற்கலன்கள் மூலம் 161கிமீ நீளமான தைவான் நீரிணையைக் கடந்து தைவானில் தரையிறக்கி தைவானைக் கைப்பற்ற வேண்டும்.

அமெரிக்காவின் இரண்டு தீவுச் சங்கிலிகள்.


யொக்கோசுக்கா, ஒக்கினோவா ஆகிய ஜப்பானியத் தீவுகள், தென் கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் தீவுகள் ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. ஜப்பானியத் தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவுக் கூட்டம், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் மீது சீன கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் ஆனால் முற்றாக அழிக்க முடியாது. சீனாவிற்கு சீனாவைச் சுற்றியே ஒரு நுழைவுமறுப்பு/இடமறுப்பு (Anti-access/Area denial) தடையைப் போடவே இந்த இரண்டு சங்கிலிகளையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் முதற்கட்ட தாக்குதல்

அமெரிக்காவைப் பொறுத்தவரை போர் இரண்டு கட்டங்களாக இருக்கும். முதற்கட்டத்தில் அமெரிக்க கடற்படையும் வான் படையும் சீனாமீது பதில் தாக்குதல் செய்யும் போது நடக்கும் போரில் சீனாவின் கடற்படை முற்றாக அழிக்கப்படும். ஒரு போர் என்று வரும்போது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் ஒரு மணித்தியாலம் கூட நின்று பிடிக்காது என்பது நிபுணர்களின் கணிப்பு. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் மீது சீனா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசும். போரில் அமெரிக்கா ஈடுபடுத்தும் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களில் இரண்டை சீனா அழித்துவிடும் முன்றாவது சேதங்களுடன் விலகிச் செல்லும். சீனாவின் ஏவுகணைத் தளங்களை இந்த மோதலின் போது அமெரிக்கா இனம் கண்டு கொள்ளும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் சீனாவை நோக்கிப் பாயும் அவற்றில் பல சீனாவின் ரடார்களுக்கு பெரிய விமாங்களைப் போல் தோற்றமளித்து ஏமாற்றக் கூடியவை. ஆளில்லாப் போர்விமானங்கள் மீது சீன செய்யும் தாக்குதல்களை வைத்து அவற்றைத் தொடர்ந்து வரும் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் சீனாவின் வான் பாதுகாப்பு முறைமையை முற்றாக அழித்து விடும். அதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ், குவாம் தீவு, ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் உள்ள அமெரிக்கப் படைக்கலங்கள் பெரும் அழிவைச் சந்தித்திருக்கும். அமெரிக்காவின் ஹவாய் தீவு மற்றும் மேற்குக்கரை ஆகியவற்றிலும் சீனா தாக்குதல் செய்திருக்கும். முதலாம் கட்டப் போரில் அமெரிக்காவில் குடிசார் சேவைகள் பல சீனாவின் இணையவெளித்தாக்குதலால் செயலிழந்து இருக்கும். உலகெங்கும் உள்ள பல அமெரிக்கப் படைத்தளங்களில் சீனாவின் தொலைதூர ஏவுகணைகளும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். அமெரிக்கப் பொருளாதார உற்பத்தி நிலைகள் பல செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். முதலாம் கட்டப் போரில் அமெரிக்கா பெரிய இழப்பைச் சந்தித்து சீனாவின் தாக்குதல் திறனை அழிக்கும். அமெரிக்கப் படைகள் உலகப் பந்து எங்கும் பரந்து இருப்பதால் எல்லாவற்றையும் சீனாவால் அழிக்க முடியாது. சீனாவின் படைத்தளங்கள் யாவும் உலகப் பந்தைப் பொறுத்தவரை சிறு பகுதியில் மட்டுமே இருக்கின்றது.



மறைந்திருந்து வரும் F-35B

பொதுவாக விமானப் படைத்தளங்கள் பெரிய ஓடுபாதைகளுடன் இருக்கும் அவற்றை இனம் காண்பது எதிரிகளுக்கு இலகுவானதாக அமையும். ஆனால் அமெரிக்காவின் F-35B போர் விமானங்கள் குறுகிய தூரம் மட்டும் தரையில் ஓடி வானில் கிளம்ப வல்லன. அத்துடன் தரை இறங்கும் போது உலங்கு வானூர்தி போல் செங்குத்தாக இறங்க வல்லன அவற்றை அகலமான தெருவில் இருந்து வானில் பறக்க வைக்க முடியும். அதனால் விமானத் தளங்களில் இல்லாமல் வேறு மறைவிடங்களில் வைத்திருக்க முடியும். சீனாவைச் சுற்றவர உள்ள அமெரிக்கப் படை நிலைகளில் உள்ள பல போர் விமானங்கள் சீனத் தாக்குதலில் இருந்து தப்பி சீனாவை தாக்கச் செல்லும் போது அவற்றை சீனாவால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகும். அவற்றின் குண்டு வீச்சுக்களால் எஞ்சியுள்ள சீன படை நிலைகள் அழிக்கப்படும். F-35B போர் விமானங்களைச் தைவானிற்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் வலிமை அடைந்து வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே தைவான் அவற்றை வாங்க விரும்பியது. ஆனால் சீனாவை அது கடும் சினப்படுத்தும் என்பதால் அது தவர்க்கப்பட்டது. அமெரிக்க சீன முரண்பாடு மோசமடையும் போது அது நடக்கலாம்.

அமெரிக்காவின் இரண்டாம் கட்ட தாக்குதல்

ஜப்பானியத் தீவுகளை சீனா தாக்குதல் செய்தபடியால் ஜப்பான் ஒரு தாக்குதல் போரை சீனாவிற்கு எதிராக செய்யக் களமிறங்கும். அதே போலவே தென் கொரியாவும் களமிறங்கும். ஒஸ்ரேலியா அமெரிக்காவிற்கு துணை நிற்கும். பிரித்தானியா தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றை சீனாவிற்கு எதிராக களமிறக்கும். இந்தியா சீன எல்லைகளை நோக்கி படைகளை நகர்த்துவதன் மூலம் சீனாவின் கவனத்தை ஐதாக்கும். இந்திய விமானத் தளங்களில் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களில் இருந்து பெருமளவு போர் விமானங்கள் வந்து இறங்கும். கொல்கத்தா துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படை நிலை கொள்ளும். தென் சீனக் கடலில் சீனா நிர்மானித்த செயற்கைத் தீவுகளை ஜப்பான் அமெரிக்காவுடன் இணைந்து குண்டுகள் வீசி அழிக்கும். சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி முற்றாகத் தடைபடும். பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகம் அமெரிக்க முற்றுகைக்கு உள்ளாகும். இரண்டாம் கட்டப் போர் சீனாவைத் திக்கு முக்காடச் செய்யும் படைநகர்வுகள் அதிகம் நடக்கும் தாக்குதல் நடக்காது. சீன மண்ணில் எந்த ஓர் அந்நியப் படையும் கால் வைக்க முடியாது. சீனா மீதான தாக்குதலைத் மேலும் தொடர்ந்தால் சீனா அணுக்குண்டைப் பாவிப்பேன் என மிரட்டும். அந்த நிலையில் போர் நிறுத்தப்படும்.

இரசியாவும் மற்ற நாடுகளும்

அமெரிக்க சீனப் போரின் ஆரம்பத்தில் இருந்தே இரசியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தும். சீனாவிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்கும். ஆனால் போரில் இறங்காது. சீனாவிற்கான படைக்கலன் விற்பனையையும் இரகசியமாகவே மேற்கொள்ளூம். சீன மக்களுக்குத் தேவையான அதிதியாவசியத் தேவைகளை இரசியா தரைப்பாதையூடாக பகிரங்கமாக வழங்கும். இந்த சூழலை இரசியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்கலாம். வட கொரியா சீனாவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கும் ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் செய்யாது. வியட்னாம் தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும். வியட்னாம் சீன எல்லையில் தனது படைகளை நகர்த்தி சீனாமீதான அழுத்தத்தை அதிகரிக்கும். திபெத்தில் ஒரு மக்கள் எழுச்சியும் நடக்கும். இந்தியாவில் உள்ள திபெத்தியப் போராளிகள் சீனப் படைகள் மீது தாக்குதல் நடத்துவார்கள். நிலைமை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமைந்தால் இந்தியா சீனா கைப்பற்றிய தனது நிலங்களை மீட்கும் நகர்வுகளை மேற்கொள்ளும். தைவான் தன்னிடம் எஞ்சியுள்ள ஏவுகணைகளை சீனாவின் பொருளாதார நிலைகள் மீது ஏவும்.

அமெரிக்கா தைவானை அங்கீகரிக்கும் நிலையை நோக்கி நகர்கின்றது. 2020 ஒக்டோபர் ஆரம்பதில் அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் ஐம்பது பேர் அமெரிக்கா தைவானுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றைச் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றனர். அமெரிக்கவிலும் தைவானிலும் அமெரிக்கா தைவானில் படைத்தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. சீனா தைவானைக் கைப்பற்றும் நிலையை நோக்கி நகரும் போது தைவானை அமெரிக்கா ஒரு தனிநாடாக அங்கீகரித்து அங்கு தனது படைத்தளத்தை அமைக்க வேண்டி வரும்.

2021-ம் ஆண்டு தைவானைக் கைப்பற்றக் கூடிய அளவு வலிமை சீனாவிடம் இருக்காது. அமெரிக்காவை போர் தவிர்ந்த வேறு அரசுறவியல் நடவடிக்கைகள் மூலம் இரண்டு சங்கிலித் தீவுக் கூட்டங்களில் குறைந்தது அரைப் பங்கு தீவுகளில் இருந்தாவது அமெரிக்காவை வெளியேற்றி அங்கு சீனா படைத்தளங்கள் அமைத்த பின்னரே சீனாவால் தைவானைக் கைப்பற்றுவது பற்றி யோசிக்கலாம்.

Sunday, 11 October 2020

தன் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத வட கொரிய அதிபர்

  


வட கொரியாவின் பொதுவுடமைவாதத்தை கொள்கையாகக் கொண்ட தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழா 10/10/2020 சனிக்கிழமை பாரிய படை அணிவகுப்புடனும் பலவித படைக்கலன் காட்சிப்படுத்தலுடனும் கிம் இல் சங் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. 2017-ம் ஆண்டின் பின்னர் ஒரு படை அணிவகுப்பு நடந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் மேடைக்கு வரும்போது வாணவேடிக்கைகள் விண்ணை அலங்கரித்தன. வட கொரிய மக்கள் அவர் நீடூழி வாழ்க என கண்ணீர் மல்க குரல் எழுப்புவதை தொலைக்காட்சிகள் காண்பித்தன. வழமைக்கு மாறாக இந்த முறை படை அணிவகுப்பு இரவில் நடந்தது.

மிரட்டல் இல்லாத உரை

தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவில் 25 நிமிட உரையாற்றிய கிம் ஜொங் உன் தனது உரையில் அமெரிக்காவைப் பற்றியோ அதன் அதிபர் டிரம்பைப் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை என்பதுடன் அவர் எந்த ஒரு மிரட்டலையும் விடுக்கவில்லை. உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு தன் ஆறுதலையும் கிம் ஜொங் உன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர் விரவில் குணமடைய வேண்டும் என கிம் ஜொங் உன் செய்தி அனுப்பியிருந்தார். வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது மக்களுக்காக பணிபுரிந்த படையினரை அதிபர் பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தனது நாட்டுப் படைக்கலன்கள் தற்பாதுகாப்பிற்காக மட்டுமே; நாம் எந்த ஒரு முற்கூட்டிய தாக்குதல்களையும் மேற்கொள்ள மாட்டோம்; ஆனால் எமது பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் போது எமது முழு வலுவையும் நாம் பாவிப்போம் என்றார்.



மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜொங் உன்

கொவிட்-19 தொற்று நோயால் சீன எல்லையை மூடியமை, சூறாவளி, வெள்ள பெருக்கு, பொருளாதாரத் தடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரிய மக்களிடம் கிம் ஜொங் உன் மன்னிப்பு கேட்டார். கண்ணீரை அடக்கிக் கொள்ள அவர் அப்போது முயற்ச்சிப்பது போலிருந்தது. வட கொரியாவின் பொருளாதாரப் பிரச்சனைக்கு தான் காரணமல்ல வட கொரியாவின் எதிரிகள்தான் காரணம் என அவர் தனது மக்களுக்கு காட்ட முயன்றார் என சில விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



விம்பத்தை மாற்ற முயற்ச்சி

பொதுவாக வட கொரியா வெளிவிடும் காணொலிக் கீற்றுகள் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றை மறைமுகமாக உள்ளடக்கி இருக்கும். ஆனால் வட கொரியா அண்மையில் ஆங்கில மொழியில் வெளிவிட்ட காணொலிக் கீற்றி சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. வட கொரியாவின் மென்மையான பகுதியையும் செழிப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. பன்னாட்டு அரங்கில் வட கொரியாவிற்கு இருக்கும் குளப்படிகாரன் என்ற விம்பத்தை மாற்றும் முயற்ச்சியில் வட கொரியா ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.



மிகப் பெரிய ஏவுகணை

75-ம் ஆண்டு விழாவில் எல்லாவற்றிற்கும் மேலாக கவனிக்கப்பட்டது அங்கு காட்சிப்படுத்தப் பட்ட உலகின் மிகப் பெரிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை. 22சில்லுகள் கொண்ட ஒரு நீண்ட பார ஊர்தி அதைத் தாங்கிச் சென்றது. அது இதுவரை ஏவிப்பரிசோதிக்கப்படவில்லை. வட கொரியாவிடம் திண்ம எரிபொருள் (solid fuel) மூலம் இயங்கும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைகளிலும் பார்க்க திண்ம எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைகள் துரிதமாக நகர்த்தப்படக் கூடியவை. வட கொரியா 2017-ம் ஆண்டு பரிசோதித்த Hwasong -14 என்னும் கண்ட விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை 13,000கிமீ (8100மைல்) தூரம் 150கிலோ(330இறாத்தல்) எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிக் கொண்டு பாயக் கூடியது. அதனால் அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்க முடியும். தற்போது காட்சிப் படுத்தியது அதிலும் பெரிய தோற்றத்தைக் கொண்டது.

கருத்து வெளியிடாத தென் கொரியா

2020-10-10 சனிக்கிழமை வட கொரியா காட்சிப் படுத்திய ஏவுகணை பற்றி தென் கொரியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே வட கொரியா மேலும் வலிமையுள்ள ஏவுகணைகளை உருவாக்குவதாக தென் கொரியா தெரிவித்திருந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வட கொரியா தொடர்ந்து மேம்படுத்தப் பட்ட ஏவுகணைளை உருவாக்குவது ஏமாற்றமளிக்கின்றது என நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தலை கருத்தில் கொண்டாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் வேளையில் ஏவுகணைப் பரிசோதனை எதையும் நடத்தி டொனால்ட் டிரம்பை சங்கடத்திற்க்கு உள்ளாக்கவோ ஆத்திரப்படுத்தவோ கிம் ஜொங் உன் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது.. ஒரே ஒரு கட்சியும் ஆளும் கட்சியுமான தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறைவு நிகழ்வின் போதோ அல்லது அதற்கு ஓரிரு நாட்களின் முன்னதாகவோ பெரிய ஏவுகணைப்பரிசோதனையைச் செய்து உலகின் கவனத்தை கிம் ஜொங் உன் அவகளால் தன்பக்கம் திருப்பியிருக்க முடியும். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதை வைத்து தன் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கக் கூடியவகையில் வட கொரியாவிற்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்பதை கிம் ஜொங் உன் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் வட கொரியா தனது ஏவுகணைகளை மேம்படுத்துவதைக் கைவிடாமல் இருக்கின்றது. பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் தொலைதூர ஏவுகணை தற்போது இருக்கும் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்புத் தொழில்நுட்பத்தால் இடைமறிப்பதற்கு கடினமானதாகவிருக்கும். வட கொரியாவின் அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கின்றது.  அமெரிக்காவின் எந்தப் பாகத்திலும் அணுக்குண்டுகளை வீசக் கூடிய ஏவுகணைகள வைத்திருக்கும் வட கொரியா அமெரிக்காவை மிரட்டும் தன் முயற்ச்சியை மனம் தளராமல் தொடர்கின்றது.வ்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...