Monday, 1 May 2017

ஈரானின் நிலையும் தலைமை மாற்றங்களும்

சிரியாவில் இரசியாவுடன் இணைந்து உலக வல்லரசான அமெரிக்க எதிர்ப்பையும் பிராந்திய வல்லரசுகளான சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தனது ஆதரவாளரனா பஷார் அல் அசாத்தின் ஆட்சியை ஈரான் வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் அதன் தலைமையில் பெரும் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி ஈரான் புதிய அதிபரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அது வழமையாக நடைபெறுவது. ஆனால் ஈரானின் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி கமெய்னி கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்று நோய் எனவும் செய்திகள் வெளிவருகின்றன. அவருக்கு தற்போது வயது 77. இவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ வாய்ப்பு உள்ளதாக 2016-ம் ஆண்டு பிரெஞ்சு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிற்கு எதிரான நிலை அதிகாரம் தரும்
தற்போதைய உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமெய்னி 1989-ம் ஆண்டில் இருந்து பதவியில் இருக்கின்றார். உச்சத்தலைவராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் கால வரையறை இன்றிப் பதவியில் தொடரலாம். அமெரிக்காவிற்கு அழிவு வரட்டும் என்பதே ஈரானின் ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்லும் வாசகமாகும். இஸ்ரேல் என ஒரு நாடு இருக்கக் கூடாது என பகிரங்கமாகவும் உறுதியாகவும் சொல்லுபவர்கள் ஈரானிய ஆட்சியாளர்கள் மட்டுமே. அமெரிக்கக் கடற்படைக்கலன்களுக்கு பாரசீக வளைகுடாவிலும் ஏடன் வளைகுடாவிலும் அடிக்கடி ஈரானியப் போர்க்கப்பல்கள் ட் தொந்தரவு கொடுப்பதாக அமெரிக்கக் கடற்படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் திகதி திங்கட்கிழமை அமெரிக்க நாசகாரிக் கப்பலான யூ.எஸ்.எஸ் மஹானுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவகையில் அதை ஈரானியக் கடற்படைப் படகுகள் அண்மித்தன. மஹான் கொடுத்த சமிக்ஞைகளையும் பொருட்படுத்தாமல் ஈரானியக் கப்பல்கள் முன்னேறியபோது மஹான் எச்சரிக்கை வேட்டையும் வெடிக்கச் செய்தது. அதையும் மீறி ஈரானியக் கப்பல் நகர்ந்த போது மஹான் தனது பாதையை மாற்றிக் கொண்டது. இந்த மாதிரியான சம்பவங்கள் 2016-ம் ஆண்டு மட்டும் 35 தடவைகள் நடந்ததாக அமெரிக்கக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மூன்று தூண்கள்
மேற்காசியாவையும் வட ஆபிரிக்காவையும் பொறுத்தவரை சவுதி அரேபியாவிற்கு அடுத்ததாக ஈரான் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். அப்பிராந்தியத்தில் 2016-ம் ஆண்டு அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி 412.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எகிப்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். ஈரானின் மக்கள் தொகை 78.8மில்லியனாகும். மிள் எழுச்சியுறக்கூடியதும் தாங்குதறன் கொண்டதுமான பொருளாதாரம், தொழில்நுட்ப விஞான வளர்ச்சி, கலாச்சார மேம்பாடு ஆகிய மூன்றும் முக்கிய தூண்களாகக் கொண்டு ஈரானை அதன் மதவாத ஆட்சியாளர்கள் வழிநடத்துகின்றார்கள். ஈரானியப் பொருளாதாரம் ஈரான் மீதான மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் பெரிதளவில் சீரடையவில்லை. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியின் பொருளாதாரச் சீர்திருத்தம் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என பழமைவாதிகள் வாதிடுகின்றனர். 

ஈரானில் உள்ள முக்கிய அதிகார மையங்கள்:
1.
அதிபர்: இவர் மக்களால் நேரடியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார்.
2.
பாராளமன்றம்: 290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தெடுக்கப்படும். ஈரானியப் பாராளமன்றம் Islamic Consultative Assembly என அழைக்கப்படும்.
3.
அறிஞர்கள் சபை: இது மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படும். இதில் 88 உறுப்பினர்கள் உள்ளனர்.
4.
உச்சத் தலைவர்: இவர் அறிஞர் சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தப் பதவிக்கு கால எல்லை இல்லை.
5. அரசமைப்புப் பாதுகாவலர் சபை: இது உச்சத் தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களைக் கொண்டது. அறிஞர் சபை, அதிபர் தெரிவிலும் பாராளமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முதலில் அரசமைப்புப் பாதுகாவலர் சபையின் அனுமதியைப் பெறவேண்டும்.
6. ஈரானியப் படைத்துறை


இவற்றில் உச்சத் தலைவர் பதவியே அதிக அதிகாரம் கொண்டதாகும். ஈரானியப் படைத்துறையின் தளபதி உச்சத் தலைவரே. அவரே நீதித் துறையில் உயர் பதவிகளில் இருப்போரையும் அரச ஊடகத் துறைக்குப் பொறுப்பானவரையும் நியமிக்கின்றார். உச்சத் தலைவர் பாராளமன்றம் இயற்ற முயலும் சட்டங்களையும் நிறுத்த முடியும்.


ஈரானிய அதிபர் தேர்தல்
ஈரானிய அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேவையான தகமைகள்:
1. ஈரானில் பிறந்த ஈரானியக் குடிமகனாக இருக்க வேண்டும்
2. ஈரானிய அரச மதமான இஸ்லாம் மீது இறைவன் மீதும் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும்.
3. ஈரானிய அரசியல்யாப்பிற்கு விசுவாசமுள்ளவராக இருக்க வேண்டும்.
4. 21 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
5. அரசமைப்புப் பாதுகாவலர் சபையின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.

2017 மே மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட 36பேர் விண்ணப்பித்திருந்தனர். 2017 ஏப்ரல் 20-ம் திகதி அரசமைப்புப் பாதுகாவலர் சபை அதிபர் தேர்தலுக்கான ஆறு வேட்பாளர்களை அங்கிகரித்தது:
1. ஹசன் ரௌஹானி(தற்போதைய அதிபர்)
2. எஷாக் ஜஹங்கிரி (தற்போதைய துணை அதிபர்),
3. எப்ராஹிம் ரைசி - Raisi (ஈரானிய முக்கிய வழிபாட்டிட நிர்வாகத் தலைவர்)
4. மொஹமட் பகர் கலிபாஃபா - Qalibaf (தெஹ்ரான் நகரபிதா),
5. மஹ்முட் அஹமடினெஜட்(முன்னாள் அதிபர்),
6. ஹமிட் பக்கை (முன்னாள் துணை அதிபர்)
மக்களின் நேரடியான வாக்களிப்பின் மூலம் அதிபர் தெரிவு செய்யப்படுவர். இவர்களது பரப்புரை விவாதம் போன்றவற்றை அரச தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்யும்.

தீவிரப் போக்காளர்களை விரும்பும் உச்சத் தலைவர்
வேட்பாளர்களை தீவிரப்போக்குக் கொண்டவர்கள், பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள் என வகைப்படுத்துவது வழமையாகும். தீவிரப் போக்குக் கொண்டவர்கள் சார்பில் மூவர் நிறுத்தப்பட்டமையும் அவர்களுல் ஒருவராக  பிரபலமில்லாத எப்ராஹிம் ரைசி இருப்பதும் அவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையின் வெளிப்பாடு என சில நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் தலைமை வழக்குத் தொடுநனரான இவர் உச்சத் தலைவர் அலி கமெய்னிக்கு விருப்பமான வேட்பாளராவார். உச்சத் தலைவரின் முன்னாள் மாணாக்கருமாவார். எப்ராஹிம் ரைசியை உச்சத் தலைவர் கமெய்னி ஈரானிய முக்கிய வழிபாட்டிடத்தின் தலைமை நிர்வாகி ஆக்கி அவரை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். ஆனால் ரைசிக்கு அரசியல் அனுபவம் இல்லை. சீர்திருத்தத்தை பெரிதும் விரும்பும் மத்தியதர வர்க்கத்தினரின் வாக்குகளை இவர் பெறுவதற்குப் பெரிதும் உழைக்க வேண்டும். சில மேற்கு நாட்டு ஊடகங்கள் தேர்தல் முறை கேடுகள் மூலம் ரைசியை வெற்றி பெற வைக்கலாம் என எதிர்வு கூறுகின்றன. தற்போதைய உச்சத் தலைவர் சீர்திருத்தத்தை விரும்பாத பழமைவாதியாகும். ஆனால் கடந்த அதிபர் தேர்தலின் போதும் ஹசன் ரௌஹானி வெற்றி பெறுவதை உச்சத் தலைவர் விரும்பவில்லை. இருந்தும் ரௌஹானி வெற்றி பெற்றார். இம்முறை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரும் சீர்திருத்தவாதியான ரௌஹானி, திவிரவாதப் போக்குடையவர்களான எப்ராஹிம் ரைசி, மொஹமட் கலிபாஃப் ஆகிய மூவரில் ஒருவர் வரவே வாய்ப்புக்கள் உண்டு. உச்சத்தலைவர் 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சயீட் ஜலீல் என்ற வேட்பாளர் வெற்றி பெறுவதை விரும்பியதாக மேற்குலக ஊடகங்கள் பரப்புரை செய்தன. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. உச்சத் தலைவர் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என்கின்றது மேற்காசியாவின் பிரபல ஊடகமான அல் மொனிட்டர்.


சீர்திருத்தவாதி ஹசன் ரௌஹானி
சீர்திருத்தவாதியான தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானி மீண்டும் போட்டியிடுகின்றார். 1979-ம் ஆண்டுப் புரட்சியின் பின்னர் பதவியில் இருக்கும் அதிபர் மீண்டும் போட்டியிடும் போது தோல்வியடைவதில்லை. ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாக மேற்கு நாடுகள் ஈரான் மீது விதித்த தடையை தொடர் பேச்சு வார்த்தைகள் மூலம் நிறுத்தி வெறுமையாக இருந்த  ஈரானியத் திறைச் சேரியில் மீண்டும் நிதியால் நிரப்பியவர் ரௌஹானி. ரௌஹானியை ஈரானில் செல்வாக்கு மிக்கவராக்குவதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஈரானுடனான யூரேனியப் பதப்படுத்தல் உடன்பாட்டில் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தார் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப்பட்ட போது எரிபொருள் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.


அடுத்த உச்சத் தலைவர்
முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா கொமெய்னி 1989இல் காலமான போது அவரது மகன் அவரது இடத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப் பட்டது. மாறாக சிறந்த இஸ்லாமிய மார்க்கக் கல்விமானாகிய தற்போதைய கமெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரானின் உள்நாட்டு அரசியல் பல சிக்கல் மிகுந்த விட்டுக் கொடுப்புகளும் உடன்பாடுகளும் நிறைந்தவை. 1979இல் செய்த மதவாதப் புரட்சி அழிந்து போகாமல் இருப்பதில் மதகுருமார் அதிக கவனத்துடன் இருக்கின்றனர். மக்கள் விரோதச் செயற்பாடுகளை அவர்கள் எப்போதும் தடுக்கின்றனர். ஈரானில் அயத்துல்லா என்பது ஒரு பட்டமாகும். அதன் பொருள் இறைவரின் அடையாளம் என்பதாகும். இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருவரே ஈரானின் உச்சத்தலைவராக முடியும். இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் குரான் பற்றியும் உயர் அறிவுள்ளவர்கள் அவர்கள். தற்போது அறிஞர் சபையின் உறுப்பினரான சாதிக் அர்தெர்ஷிர் லரிஜானியும் (Sadeq Ardeshir Larijani) அதே சபையின் முதன்மைத் துணைத் தலைவருமான மஹ்மூக் ஹஷெமி ஷஹ்ரௌத்தியும் (Mahmoud Hashemi Shahroudi) அடுத்த உச்சத் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிகின்றது. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியும் அடுத்த உச்சத் தலைவராக வரலாம் எனவும் சொல்லப்படுகின்றது. லரிஜானி தற்போது தீர்ப்பாயச் சபையின் தலைவராகவும் செயற்படுகின்றார். ஷஹ்ரௌத்தி இறைவனால் அனுப்பப்பட்டவர் என பல மதகுருமார் நம்புகின்றனர்.

அமெரிக்காவுடன் போர் நடக்குமா?
ஈரானைப் பற்றியும் அதனுடன் செய்த யூரேனியப் பதப்படுத்தல் உடன்பாடு பற்றியும் தனது தேர்தல் பரப்புரையின் போது கடுமையாக விமர்ச்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான ஒரு போரையோ அல்லது தாக்குதலையோ தொடுக்க மாட்டார். அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களுக்கு ஈரான் கொடுக்கும் தொந்தரவுகளை ஒபாமா காலத்தில் பெரிது படுத்தாதது போல் டிரம்பும் செய்வார் என எதிர்பார்க்கலாம். ஈரானுடனான போர் ஒரு எரிபொருள் விலையை அதிகரிக்கும் அது உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதுடன் இரசியாவிற்கும் புட்டீனுக்கும் வலுவூட்டுவதாக அமையும். ஈரான் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை மீறாதவரை அதன் மீது யாரும் தாக்குதல் தொடுக்க மாட்டார்கள்.


ஈரானில் உள்ள மதகுருமார்களின் நாட்டுப்பற்றும் மதப் பற்றும் மிகவும் உறுதியானது. ஈரானிய மக்கள் சிறந்த விவேகிகள். வரலாற்றுப் பெருமை மிக்க இனத்தவர்கள். உன்னத கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். அவர்கள். பல ஆயிரம் ஆண்டுகள் தமது நாட்டை பல சவால்களுக்கு நடுவில் கட்டிக் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த நாட்டை யாராலும் அசைக்க முடியாது. 

Wednesday, 26 April 2017

வட கொரியாவில் வகுக்கப்பட்டுள்ள வியூகங்கள்



அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் லெப்டினண்ட் கேணலும் படைத்துறைச் சரித்திர வல்லுனரும் படைத்துறை ஆய்வாளருமான ஒலிவர் நோர்த் வட கொரியா மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் செய்வார் என எதிர்வு கூறியுள்ளார். வட கொரியா அடுத்த அணுக்குண்டு பரிசோதனை செய்யும் போது அல்லது ஏவுகணைப் பரிசோதனை செய்யும் போது அமெரிக்கா வட கொரியா மீது தாக்குதல் செய்யலாம் என்பதை சிரியா மீது அமெரிக்கா செய்த தாக்குதல் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாராளமன்றத் தெரிவுக் குழுவிற்கு சமர்பித்த  அறிக்கை ஒன்றின் படி ஓர் ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் மின்சாரம் இல்லாத நிலையை வட கொரியாவின் ஏவுகணைத் தாக்குதலால் செய்ய முடியும். அதனால் அமெரிக்காவில் பத்தில் ஒன்பது பேர் பட்டினியால் இறக்க வேண்டி வரும். அந்த அளவிற்கு வட கொரியாவால் அமெரிக்கா அச்சுறுத்தலை எதிர் கொள்கின்றது. வட கொரியா ஆறுவாரங்களில் ஓர் அணுக்குண்டைத் தாயாரிக்கக் கூடிய வகையில் முன்னேறியுள்ளது என்கின்றது நியூயோர்க் ரைம்ஸ்.

துணை அதிபர் மைக் பென்ஸ்
அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். வட கொரியா தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்து வந்த கேந்திரோபாயப் பொறுமைக் காலம் முடிவடைந்து விட்டது “the era of strategic patience is over” எனறார் மைக் பென்ஸ். மேலும் அவர் கடந்த இரண்டு வாரங்களாக சிரியாவிலும் ஆப்கானிஸ்த்தானிலும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் எமது புதிய அமெரிக்க அதிபர் எந்த அளவு உலகப் பிரச்சனைகள் தொடர்பாக திடமான கொள்கையுடன் இருக்கின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்றார். ஆனால் சிரியாவிலும் ஆப்கானிஸ்த்தானிலும் செய்த தாக்குதல்கள் தவித்துப் போய் இருக்கின்ற முயலை அடித்தது போன்றது. இரு நாடுகளும் உள்நாட்டுப் போரால் சின்னா பின்னமடைந்துள்ளன. அமெரிக்காவைத் திருப்பித் தாக்கும் நிலையில் சிரியா இல்லை. ஆப்கானிஸ்த்தானில் உள்ள தீவிரவாதிகளால் உடனடியான பதிலடியைக் கொடுக்க முடியாது. ஆனால் அமெரிக்காவிலோ அல்லது அதன் நட்பு நாடுகளின் மீதோ வட கொரியாவால் பேரழிவு விளைவிக்கக் கூடிய தாக்குதல்களைச் செய்ய முடியும். வட கொரியா மீது தாக்குதல் நடத்துவதாயின் அதன் படைவலுவை முற்றாக சிதைக்கக் கூடிய மிகப்பெரும் தாக்குதல்களைச் செய்ய வேண்டும்.

அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள்
உலகின் மூன்று முன்னணிப் படைக்கலன் தாங்கிகளான  U.S.S. Carl Vinson, U.S.S. Ronald Reagan, U.S.S. Nimitz ஆகிய முன்றையும் அவற்றின் பரிவாரங்களுடன் வட கொரியாவிற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இவை ஒவ்வொன்றும் மூன்று கால்பாந்தாட்ட மைதானங்களின் நீளம் கொண்டவை. ஒரு இலட்சம் தொன் எடை கொண்டவை.  தொண்ணூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல் விமானங்களைக் கொண்டவை. Arleigh Burke வகை வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பல்களால் பாதுகாக்கப் படுவை. கார்ல் வில்சன் விமானம் தாங்கிக் கப்பலின் பரிவாரத்தில் உள்ள நீர் மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஒன்று அல்லது இரண்டு AWACS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Airborne Warning and Control System கொண்ட விமானங்களும் கார்ல் வின்சனில் உண்டு. அத்துடன் லொக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் Aegis air defence system என்ற பாதுகாப்பு முறைமையும் அதில் உண்டு. கார்ல் வில்சனில் 400மீட்டர் ஆழத்தில் 40 கடல் மைல் வேகத்தில் பாயக் கூடிய நீரடிஏவுகணைகளும் உள்ளன.

அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்கள்
Arleigh Burke உலகின் மிகச் சிறந்த நாசகாரிக்கப்பலாகக் கருதப் படுகின்றது. கார்ல் வில்சனில் F-18 ஹோர்நெட் மற்றும் F-18 சுப்பர் ஹோர்நெட் போர் விமானங்களைக் கொண்டது. இதில் அமெரிக்காவின் மிகவும் புதிய தர F-35 போர் விமானங்களையும் இதில் இணைக்கலாம். இவை வேதியியல் மற்றும் உயிரியல் படைக்கலன்களை எதிரி பாவிக்கும் போது அவற்றால் மாசுபடுத்தப் பட்ட காற்றை உறிஞ்சி தூய்மைப் படுத்தக் கூடியவை. எதிரிக்குப் புலப்படாத் தன்மையையும் கொண்டவை. எதிரியின் வான் படைகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் கொண்டவை. எதிரியின் தரை, கடல், வான் இலக்குகளை நோக்கி வழிகாட்டல் ஏவுகணைகளை வீசக் கூடியவை.


வட கொரிய விமானப் படை
வட கொரிய விமானங்களால் இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்கு அண்மையாகப் போவது பற்றி நினைக்கவே முடியாது. வட கொரியவின் விமானப் படை 110,000 படையினரையும் 940 விமானங்களையும் கொண்டது. அப் போர் விமானங்கள் இரசியாவிடமும் சீனாவிடமிருந்தும் பெறப்பட்டவையும் அவற்றின் பிரதிகளுமாகும். அமெரிக்கா சீனாவைச் சுற்றி பல் வேறு படைத்தளங்களில் நிறுத்தியுள்ள போர் விமானங்கள் சீனாவை அடக்குவதற்கு நிறுத்தப்பட்டவையாகும். அவற்றிற்கு வட கொரிய விமானப்படை ஒரு சுண்டங்காயாகும். வட கொரியாவிடம் இருக்கும் சிறந்த விமானம் இரசியத் தயாரிப்பான மிக்-29 ஆகும். கார்ல் வின்சனில் உள்ள F-22 போர் விமானங்களுக்கு மிக்-29 இணையானவை எனச் சொல்ல முடியாது. மேலும் போர்முனை அனுபவம் வட கொரிய விமானிகளுக்கு இல்லை. மிக்-29 செலுத்து திறன் மிக்கது என்றாலும் வான் ஆதிக்கத்தில் F-22 மேன்மையானது. F-22 போர் விமானங்களுக்கு மிக்-29 இணையானவை இல்லை என்ற படியால்தான் இரசியா Su-27 போர் விமானங்களை உருவாக்கியது.

ஒஹையோ வகை நீர்மூழ்கிக் கப்பல்
அமெரிக்காவின் வழிகாட்டல் ஏவுகணைகளை வீசக்கூடிய ஒஹையோ வகை நீர்மூழ்கிக்கப்பலான மிச்சிகனும் வட கொரியாவை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் 154 டொமொஹோக் ஏவுகணைகள் Tomahawk cruise missiles உள்ளன. இது 560 அடி நீளமானது. இதில் சிறப்புப் படையணியைச் சேர்ந்த 66 போர்வீரர்கள் இருக்கின்றனர். அத்துடன் இதில் ஈரமற்ற இறங்குதளமும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் படைவீரர்கள் இரகசியமாக இறக்கப்பட்டு எங்காவது அதிரடித் தாக்குதல்களை மேற் கொள்ளும் திட்டம் இருக்கின்றது.

இணையவெளிப் போர்முறைமை
வட கொரியா தனது மரபு வழிப் போருக்கான வலிமை இன்மையைச் சீர் செய்ய மேற் கொண்ட ஒரு வழியே அதன் அணுக்குண்டுத் தயாரிப்பு. இணையவெளித் தாக்குதல் மூலம் அமெரிக்கப் படையினரின் அது தனவு வலிமையின்மையைச் சீர் செய்ய மேற்கொண்ட அடுத்த நடவடிக்கை தனது இணையவெளிப் போர்த் திறனை அதிகரித்தமையும் ஒன்றாகும். தொடர்பாடல்கள் முடக்கப்பட்டால் மாற்றுவழித் தொடர்பாடல் முறைமைகளையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இலத்திரனியல் அதிர்வலைகள் மூலம் அமெரிக்காவின் தொடர்பாடல் முறைமைகளை நிர்மூலம் செய்யக் கூடிய திறன் வட கொரியாவிடம் உண்டு. மட்டுப்படுத்தப் பட்ட அளவில் அணுக்குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் அந்த இலத்திரனியல் அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்கா இதுவரை எந்த போர் முனையிலும் தனது இணைய வெளித் தாக்குதல் முறைமையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதற்கான முதல் இலக்கு வட கொரியாவாக இருக்கலாம். வட கொரியாவின் கட்டளை-கட்டுப்பாட்டு பணியகத்தை அமெரிக்காவால் சிதைக்க முடியும்.

சீல் படைப் பிரிவு
அணமையில் அமெரிக்கப் படைகளும் கொரியப் படைகளும் இணைந்து மேற்கொண்ட போர் ஒத்திகையில் அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படையணியான சீல் படைப்பிரிவும் கலந்து கொண்டது. பில் லாடனைக் கொலை செய்த இந்தப் பிரிவு வட கொரிய அதிபரைக் கொல்லும் ஒத்திகையை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவால் கொல்லபடலாம் என்ற அச்சத்தில் முன்னாள் வட கொரிய அதிபர் தலைமறைவாக இருந்தார் எனச் சொல்லப்படுகின்றது.

அமெரிக்காவின் நட்பு நாடுகள்
அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பானும் தென் கொரியாவும் பகிரங்க சவால்களை வட கொரியாவிற்கு விடுக்கவில்லை. மூன்று இலட்சம் தென் கொரியத் துருப்புக்களும் முப்பதினாயினரம் அமெரிக்கப் படையினரும் வட கொரியாவுக்கு எதிராகப் போர் புரியத் தயார் நிலையில் உள்ளனர். தனது நாட்டை வட கொரியாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கை என்னும் பெயரில் ஜப்பானும் வட கொரியாவிற்கு எதிராகக் களமிறங்கலாம். ஜப்பான் அண்மையில் தனது உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை தென் சீனக் கடல்வரை அனுப்பி தனது வலிமையைப் பறை சாற்றியிருந்தது.

வட கொரிய அரசை சீனா செயலிழக்கச் செய்யாது.
சீனா தனது படைகளைப் பெருமளவில் வட கொரிய எல்லையை நோக்கி நகர்த்தியுள்ளது. கொரியத் தீபகற்பம் தனது எதிரிகளின் கைக்குப் போகக் கூடாது என்பதற்காக மூன்று இலட்சம் உயிர்களை பறி கொடுத்த சீனா அதை இலேசில் விட்டுக் கொடுக்க மாட்டாது என்பதை அமெரிக்கா நன்கு அறியும். வட கொரிய அரசைச் செயலிழக்கச் செய்யும் நிலையில் சீனா இல்லை. இறுதித் தீர்வாக வட கொரியாவின் பொதுவுடமைக் கட்சியின் இருப்பை உறுதி செய்த பின்னர் ஏற்கனவே உள்ள நிர்வாக மற்றும் கட்டமைப்புகள் மாற்றப்படாமல் வேறு ஆட்சியாளரை ஆட்சியில் அமர்த்துவதற்கு சீனா சம்மதிக்கலாம். சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பைச் சந்தித்த போது டிரம்ப் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்திருந்தார். சீனாவின் நாணய மதிப்புக் கொள்கையை திருகுதாளம் என விமர்சித்து வந்த டிரம்ப் அதைப்பற்றி ஜின்ப்ங்குடன் பேசவில்லை. சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு 45 விழுக்காடு வரி விதிப்புச் செய்வேன் எனச் சூழுரைத்து வந்த டிரம்ப் அதை இப்போது ஒத்திப் போட்டுள்ளார். தைவான் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கையை மாற்றுவேன் எனச் சொன்ன அதிபர் அதையும் கைவிட்டுள்ளார். இவை யாவற்றிற்கும் கைமாறாக வட கொரியாவின் அணுக்குண்டுப் பரிசோதனையை நிறுத்த சீனா உதவ வேண்டும் என்பது அவரது எதிர்ப்பார்ப்பு. ஆனால் தனக்குப் பாதகமில்லாத ஒரு சீரான ஆட்சிமாற்றத்திற்கு சீனா ஒத்துழைக்கும் ஓர் ஆட்சி உடைவிற்கு (regime collapse) ஒத்துழைக்காது. வட கொரியாவின் வர்த்தகத்தில் 90 விழுக்காடு சீனாவுடன் நடக்கின்றது. சீனாவின் உதவியின்றி வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை வெற்றியளிக்காது. ஹொங்கொங்கில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று வட கொரியா தொடர்பான சீனாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு சாதகமளிக்கக் கூடிய வகையில் திரும்பியுள்ளது எனத் தகவல் வெளியிட்டுள்ளது.  இரசியாவும் வட கொரியாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளது.

தயார் நிலையில் இல்லாத டிரம்ப் நிர்வாகம்.
டிரம்ப்பினுடைய அமைச்சரவை அனுபவமில்லாத ஓர் அமைச்சரவையாகும். பல முக்கிய பதவிகள் உட்பட அரச நிர்வாகப் பொறிமுறையின் அவசியமான ஐநூறுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு இன்னும் உரியவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஒரு போருக்குத் தயார் நிலையில் இல்லாத நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் இருக்கின்றது. இந்த வலுவற்ற தன்மை சீன அதிபருடனான பேச்சு வார்த்தையின் போது வெளிப்பட்டதாகச் சில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் கார்ல் வில்சன் நிலை கொண்டுள்ள இடம் தொடர்பாக டிரம் பத்திரிகையாளர் சந்திப்பில் பிழையான தகவல்களை வெளிய்ட்டார் என வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளது.

வட கொரிய அணுக்குண்டு வீச்சு
அமெரிக்கா வட கொரியாவை நோக்கி நகர்த்தியுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களையும்வற்றின் பரிவாரங்களையும் ஓர் அணுக்குண்டின் மூலம் வட கொரியாவால் அழிக்க முடியும். வட கொரியா தொடர்ச்சியாக அணுக்குண்டு வீசுவேன் என மிரட்டிக் கொண்டே இருக்கின்றது. இருந்தும் அமெரிக்கா தன் படைகளை ஏன் நகர்த்துகின்றது என்ற கேள்விகளுக்கு பல விடைகள் இருக்கின்றன.
1. வட கொரிய அணுக்குண்டு வீச்சுக்கு பதிலடியாக அணுக்குண்டை வீசி வட கொரியாவை அழிக்கலாம். ஆனால் இதை தென் கொரியா, ஜப்பான், சீனா, இரசியா ஆகிய வடகொரியாவின் நட்பு நாடுகள் கூட விரும்பாது. அவை கதிர்வீச்சால் பாதிக்கப்படலாம்.
2. அமெரிக்கா தென் கொரியாவில் நிறுத்தியிருக்கும் தாட் எனப்படும் ஏவுகணை முறைமை வட கொரியாவில் இருந்து கிளம்பும் எல்லாக் குண்டுகளையும் இடைமறித்து அழிக்கலாம். எதிரியின் பிரதேசத்தில் இருந்து கிளம்ப்பும் எல்லாக் குண்டுகளையும் ஏவுகணைகளையும் அவை கிளம்பிய உடனேயே எதிரியின் நிலத்தில் வைத்தே அழிக்கக் கூடிய எதிர்ப்பு முறைமையை அமெரிக்கா உருவாக்கிவிட்டிருக்கலாம்.
3. போர் என ஒன்று தொடங்கிய கணமே அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய முன்றும் இணைந்து வட கொரியாமீது பெரும் தொகையான குண்டுகளை வீசி அதன் எல்லாப் படைக்கலன்களையும் அழிக்கலாம்.
4. வட கொரியாவில் உளவு நடவடிக்கைகள் மூலம் படைத்துறை உயர் அதிகாரிகளை அரசுக்கு எதிராகத் திருப்பி வட கொரியாவின் அணுக்குண்டுகளை முதலில் கைப்பற்றலாம்.


எப்போது போர்?
வட கொரியப் பிரச்சனையை மையமாக வைத்து அதிக அளவு அமெரிக்கப் படைகளின் நட மாட்டம் சீனாவிற்கு அண்மையாக உருவாகியுள்ளது சீனாவிற்கும் ஓர் அச்சுறுத்தலே. சீனா மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடையை வட கொரியாவிற்கு எதிராக விதிப்பதே சீனாவின் சிறந்த தெரிவு. ஆனால் எந்த அளவிலான தடை வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை மனம் மாறவைக்கும் என்பதை யாராலும் எதிர்வு கூற முடியாது. வட கொரியாவின் அடுத்த ஏவுகணைப் பரிசோதனையை நிறுத்துவது அமெரிக்காவின் இலட்சியமாகும். ஆனால் வட கொரியா செய்யும் அடுத்த அணுகுண்டுப் பரிசோதனை போரை நிச்சயமாக்கும்.

Friday, 7 April 2017

சிரியாமீதான அமெரிக்காவின் தாக்குதல் கூறும் செய்திகள்


பிந்திக் கிடைத்த செய்திகளின்படி அமெரிக்காவின் தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பாராளமன்றத்தின் அனுமதி பெறாமல் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெறாமல் இறைமையுள்ள ஒரு நாடான சிரியாவின் மீது அமெரிக்கா மத்திய தரைக் கடலில் நிலை கொண்டுள்ள USS Ross, USS Porter ஆகிய வாழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல்களில் இருந்து 59 tomahawk ஏவுகணைகளை வீசியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொடுத்த காரணம் சிரிய மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுதை தடுப்பது அல்ல. தடை செய்யப்பட்ட வேதியல் படைக்கலன்களின் பரவலாக்கம் அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே அவர் கூறினார்.

இலக்குகள்
சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள அல் ஷயரட் விமானத்தளத்தின் மீதே அமெரிக்காவின் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 6 பேர் கொல்லப்பட்டத்தாக சிரியா அறிவித்துள்ளது.சிரியப் போர்விமானங்கள், அவற்றின் பாதுகாப்பான நிறுத்தும் இடங்கள், கதுவிகள் (radar equipment), படைக்கல சேமிப்பங்கள், விமான எரிபொருள் சேமிப்பு நிலையங்கள், வான் பாதுகாப்பு முறைமைகள் ஆகியவற்றை இலக்கு வைத்தே ஏவுகணைகள் வீசப்பட்டன.

இழப்புத் தொடர்பான முரண்பட்ட அறிக்கைகள்
இரசியாவின் அறிக்கையின் படி ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு: "extremely low". பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த ஆறு விமானங்கள் சேதமடைந்தன என்கின்றது இரசியா. 
சிரியாவின் அறிக்கையின் படி: "big material losses". தாக்குதல் நடத்துவது பற்றி இரசியாவிற்கு அமெரிக்கா கொடுத்த தகவல் சிரியாவிற்கு பரிமாறப்பட்டது. அதனால் அங்கிருந்து பல விமானங்கள் தப்பிச் சென்று விட்டன. பழுதடைந்த விமானங்கள்  மட்டுமே அழிக்கப்பட்டன. சிரிய வான் படைக்கு சிறிய அளவிலான ஆளணி இழப்பு ஏற்பட்டதற்கும் இதுவே காரணமாகும்.   தாக்குதலுக்கு உள்ளான அல் ஷயரத் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று மட்டுமே பயன்படுத்தப்பட முடியாதவகையில் சேதமடைந்துள்ளது. 

இரசிய நகர்வுகள்
இரசியா தனது கடற்படைக் கப்பல்களை சிரியாவை நோக்கி நகர்த்தியுள்ளது. இரசியாவின் frigate வகையைச் சார்ந்த The Admiral Grigorevich என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கிக் கப்பல் (a cruise missile-carrying) என்னும் கப்பலே சிரியாவின் டார்ட்டஸ் துறைமுகம் சென்றுள்ளது. மேலும் தாக்குதல்கள் நடக்காமல் இருக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் சிரியாவில் நிறுத்தப்படும் எனச் சொல்லியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரசியப் பிரதிநிதி சிரியாவில் அமெரிக்கா செய்த தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கின்றது எனவும் தாக்குதல் நடந்தவுடன் ஐ எஸ் அமைப்பினர் சிரிய அரச படைகள் மீது தாக்குதல் நடத்தினர் எனவும் குற்றம் சாட்டினார். ஈராக்கிலும் லிபியாவிலும் நீங்கள் அரச படைகளை அழித்ததால் அங்கு பயங்கரவாதிகள் பெருகி உள்ளது போல் சிரியாவிலும் நடக்க வேண்டுமா என அவர் மேற்கு நாடுகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவில் நடந்த வேதியியல் குண்டு வெடிப்புப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதையும் இரசியப் பிரதிநிதி கடுமையாகச் சாடினார்.

முரண் பட்ட தீர்மானங்கள்
சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவித்தமை தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை இணைந்து கொண்டுவந்த தீர்மானத்தை இரசியா ஏற்க மறுத்தது. இரசியா தான் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. அதில் சிரியாவில் விசாரணைக்குச் செல்லவிருக்கும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் போதாது என அமெரிகா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சாட்

Tomahawk ஏவுகணைகள்
 Tomahawk ஏவுகணைகள் தரையில் இருந்தும், விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும் நீர்மூழ்கிகளில் இருந்தும் வீசக் கூடிய தொலைதூர ஏவுகணைகளாகும். இவை உறுதியாகப் பாதுகாக்கப்பட்ட தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க உருவாக்கப்பட்டவை. இவை ஒலியிலும் குறைந்த வேகத்தில் பாய்பவை என்றாலும் எந்தக் கால நிலையிலும் துல்லியமாக இலக்கைத் தாக்கக் கூடியவை. அமெரிக்க ஏவுகணைகளின் துல்லியத் தாக்குதலை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கணக்கற்றோர் கொல்லப்பட்டனர்.
பராக் ஒபாமா சிரியா வேதியியல் படைகலன்களைப் பாவித்தால் அது செங்க்கோட்டைத் தாண்டியது போல என பல முடை மிரட்டி இருந்தார். ஆனால் அவரால் செய்ய முடியாமல் போனதை டிரம்ப் செய்து முடித்துள்ளார். சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அடிக்கடி கூறி வந்த மேற்குலக ஊடங்கங்கள் தற்போது அதைப்பற்றிப் பேசுவதில்லை. 2016-ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐந்து முதல் ஆறு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் பல இலட்சக் கணக்கானோர்ர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வந்தன. சிரியப் பிரச்சனை பெருமளவில் தஞ்சக் கோரிக்கையானவர்களை உருவாக்கி பல நாடுகளில் அது குடிவரவுக்கு எதிரான கொள்கைகளாக உருவெடுத்தது. அதனால் கொல்லப்பட்டவர்களின் தொகையை வெளிவிடுவது நிறுத்தப்பட்டது.  அந்தக் கொலைகளை நிறுத்தாதவர்கள் இப்போது சரின் குண்டுப் பரவலாக்கத்தை நிறுத்த வேண்டும் எனத் துடிக்கின்றார்கள்.

சட்டபூர்வமானதா?
தனது நடவடிக்கைகான சட்ட பூர்வ அங்கீகாரம் பெறுவதற்கே டிரம்ப் வேதியியல் குண்டுகளின் பரவலாக்கம் அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றார். அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் எனக் கருதுமிடத்து அமெரிக்க அதிபர் ஒரு படை நடவடிக்கைக்கு உத்தரவிடலாம். போர் பிரகடனம் செய்யப்படாத ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது உலக நியமங்களுக்கு விரோதமானது. அதனால் இரசியா அமெரிக்காவின் தாக்குதலைச் சட்ட விரோதமானது என்கின்றது.

சிரியாவின் அறிக்கை
சிரியாவின் அறிக்கை அமெரிக்காவை கடுமையாகச் சாடவில்லை. அமெரிக்க ஏவுகணைத் தாக்க்குதல் கவனமில்லாதது, குறும்பார்வையுடையது, பொறுப்பற்றது என்று மட்டும் சிரியா சொல்லியிருக்கின்றது.சிரியத் தொலைக்காட்சி ஆக்கிரமிக்கும் செயல் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு குந்தகம் விளைவிக்கின்றது என்றும் சொல்லியிருந்தது. ஆனால் இரசியாவின் அறிக்கை கண்டனம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவுடன் சிரிய வான் வெளியில் அமெரிக்க விமானங்களுக்கும் இரசிய விமானங்களுக்கும் இடையில் தவறுதலான மோதல்களைத் தவிர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த உடன்பாட்டில் இருந்து இரசியா விலகுவதாக அறிவித்துள்ளது.

தவறு விட்ட இரசியா
 சிரியாவில் சரின் குண்டுகள் வெடித்ததால் அப்பாவிப் பொதுமக்கள் 80 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அந்த சரின் குண்டுகள் சிரியப் போராளிக்கள் வசமிருந்தவை என்றும்  அவை தவறுதலாக வெடித்தவை என்றும் இரசியா தெரிவித்திருந்தது. 2013-ம் ஆண்டு சிரிய அரச படைகள் வீசிய சரின் குண்டுகளால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இரசிய அதிபர் புட்டீன் தடுத்திருந்தார். சிரியாவில் உள்ள தடைசெய்யப்பட்ட வேதியியல் குண்டுகளைத் தான் அகற்றுவதாக உறுதியளித்திருந்தார். சிரியாவில் எந்த ஒரு தரப்பினர் கைகளிலும் தடை செய்யப்பட்ட வேதியியல் குண்டுகள் இல்லாமல் செய்ய இரசியா தவறிவிட்டது.

2013-ம் ஆண்டு இரசியப் படைகள் சிரியாவில் நிலை கொண்டிருக்கவில்லை. தற்போது லதக்கியாவில் சிரிய விமானப் படைத்தளமும் டார்ட்டஸில் கடற் படைத்தளமும் இரசியா வைத்திருக்கின்றது. ஒரு வல்லரசின் படைகள் நிலை கொண்டுள்ள ஒரு நாட்டில் இன்னொரு வல்லரசு குண்டு வீசுவது ஒரு பிரச்சனைக்கு உரிய நடவட்டிக்கையே. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் இரசியாவிற்கு அறிவித்த பின்னரே தாக்குதல் செய்யப்பட்டன என்றார். இரசியர்கள் எவரும் கொல்லப்படாமல் இருப்பதற்கான எல்லாஅ முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இரசிய அதிபர் புட்டீனின் பேச்சாளர் அமெரிக்கா மேற் கொண்ட ஏவுகணைத் தாக்குத்தல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பெரிதும் பாதிக்கும் என்றார்.

சிரியா மீதான தாக்குதல் சொல்லும் சேதிகள்
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா, யேமன், ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தனது படைத் தளபதிகளுக்கு உத்தரவும் அதிகாரமும் வழங்கியுள்ளார் என்ற செய்தி உறுதிப்படுதப்பட்டுள்ளது. இது ஈரானுக்கும் ஒரு மறைமுக எச்சரிக்கையை விடுக்கின்றது. 
  • சிரிய அதிபர் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கம் தற்போது அமெரிக்காவிற்கு இல்லை. அதனால் தொடர்ச்சியான தாக்குதல் நடக்காது. 
  • டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இரசிய உளவுத்துறை உதவி செய்தது. அவர் இரசியாவிற்கு சாதகமாக நடப்பார் என அவரது எதிரிகள் சொல்வதற்கு ஒரு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து இரசியா அவசரமாகக் கூட்டிய ஐநா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். 
  • கிறிமியா இணைப்பும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்படுவதை  தடுத்ததும் இரசிய அதிபர் புட்டீன் உலக அரங்கில் செய்த இரு பெரும் அதிரடி நடவடிக்கைகள். அவை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவால் விடுவதாக அமைந்தன.
  • பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோல்வியடைந்த பின்னர் உலகில் ஒரு துருவ ஆதிக்க நிலை உருவாகியுள்ளது என மேற்கு நாடுகள் நினைத்திருக்கையில் இரசியாவும் சீனாவும் அதற்கு அண்மைக்காலங்களாக பெரும் சவால்களை விடக்கூடிய வகையில் தமது படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நிலைமை இன்னும் அமெரிக்காவிற்குப் பாதகமாக உருவாகவில்லை என உணர்த்துகின்றது.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகள் எதிர்வு கூறமுடியாதவையும் மரபு வழியானவையும் அல்ல என்பதை அவர் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
  • இதே மாதிரியான நடவடிக்கையை வட கொரியாவிலும் எடுக்கத் தயங்க மாட்டேன் என்பதியும் அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.
  • மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் அமெரிக்கா தமது பிராந்தியதில் எந்த அளவிற்கு அக்கறையும் ஆதிக்கமும் செலுத்தப் போகின்றது என்பதையிட்டு கரிசனை கொண்டுள்ள வேளையில் அவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
  • அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஒரு சீரற்ற நிலையில் உள்ளது அதனால் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் செய்ய முடியாது எனக்கூறும் பல விமர்சகர்களுக்கு ஒரு பதில் கூறப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் எப்போதும் இல்லாத அளவு ஒரு புதிய அதிபருக்கான மக்கள் ஆதரவு மிகக் குறைந்த அளவில் உள்ளது. அதை மாற்றி டிரம்ப் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்ச்சி இதுவாக இருக்கலாம்.

Wednesday, 29 March 2017

தேசியவாதங்களும் தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும்

முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் பிழைத்துப் போகின்ற வேளைகளில் அந்தக் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்காக நடக்கின்ற பிழைகளுக்கு வேறு காரணங்களை காட்டி வெற்றி பெறுவது முதலாளித்துவவாதிகள் தொடர்ந்து செய்யும் செயல். இனவாதம், மத மோதல் போன்றவை அவர்கள் விரும்புக் கருவிகள். 2007-ம் ஆண்டின் பின்னர் உருவான பொருளாதார வீழ்ச்சிக்கு குடிவரவையும் வளர்முகநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதியும் காரணம் என தொடர்ந்து முன் வைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே தாழ் நிலையில் வைத்திருக்கின்றது என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மொத்த கடன் தொகையான 20ரில்லியன் டொலர்களில் சினாவின் பங்கு 1.157ரில்லியனும், ஜப்பானின் பங்கு 1.136 ரில்லியனுமாகும். 

பணவீக்கம் அதிகரிக்காமையும்(Deflation) மீள்வீக்கமும் (Reflation)
கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரிக்காமை (Deflation) பொருளாதாரப் பிரச்சனையாக இருந்தது. இப்போது கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி அதிகரிப்பு பல நாடுகளில் செய்யப்படுகின்றது. இது மீள்வீக்கம் (Reflation) என அழைக்கப்படுகின்றது. 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு தீர்க்கப்பட்டு இப்போது உலகப் பொருளாதாரம் வளரும் அறிகுறிகள் தென்படுகின்ற வேளையில் பலவிதமான தேசிய வாதங்கள் எழுந்துள்ளன. வெள்ளைத் தேசியவாதமும் பொருளாதாரத் தேசியவாதமும் உலக அமைதிக்கும் செழிப்பிற்கும் பாதகமான நிலையை எடுத்துள்ளன. 

பரப்பியவாதிகள் (Populists)
பரப்பியவாதிகள் என்போர் மக்களிடையே எது பிரபலமாக இருக்கின்றதோ அதை தமது கொள்கைகளாக வகுத்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகும். மக்களிடையே குடிவரவுக்கு எதிரான கருத்து அதிகரிக்கும் போது அவர்கள் குடிவரவுக்கு எதிரான கொள்கைகளைத் தமதாக்கிக் கொள்வர். ஒரு நல்ல ஆட்சியாளர் எடுத்த சிறந்த தொடர் நடவடிக்கைகள் மக்களுக்கு பல  குறுகிய காலத்தில் சுமைகளைக் கொடுத்தாலும் அவை நீண்டகாலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகளைக் கொண்டுவரும். குறுங்காலத்தில் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கையில் பரப்பியவாதிகள் தங்கள் கொள்கைகளை மக்களின் குறுங்கால நோக்கங்களுக்கு ஏற்ப வகுத்துக் கொள்வர். அதை வைத்து ஆட்சியையும் பிடித்துக் கொளவர். நல்ல ஆட்சியாளர் எடுத்த நடவடிக்கையின் பயன் தரும் போது பரப்பியவாதிகள் ஆட்சியில் இருப்பர். யாரோ போட்ட விதையின் அறுவடைகளைத் தாம் செய்து கொள்வர். 

குடிவரவு எதிர்ப்பு
பரப்பியவாதம், பொருளாதாரத் தேசியவாதம், வெள்ளைத் தேசியவாதம் ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டவர்களின் பரப்புரைகள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வெளியேறவேண்டும் என்பதற்கு அதிகப்படியானோர் வாக்களித்தனர். இதே போலத்தான் 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவும் அமைந்தது. இது ஒரு தொடர் சரிவாக வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் பரவுமா எனப் பலரும் அஞ்சிக் கொண்டிருக்கையில் நெதர்லாந்தில் தேசியவாதிகள் தேர்தல் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் மதவாதம் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் ஆகியவற்றைக் கொண்ட வலதுசாரியினர் இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட அதாவது பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையிலும் பார்க்க அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பெரு வெற்றியீட்டியுள்ளனர். அடுத்தாக பிரான்சில் 2017 ஏப்ரல் 23-ம் திகதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிக்கடி சடுதியான அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரும் பிரான்ஸில் நீண்ட காலமாகப் பெரும் அரசியல் மாற்றங்கள் நடக்கவில்லை. குடிவரவுக்கு எதிரான கொள்கைகான ஆதரவு பிரான்சில் அதிகரித்து வருகின்றது

வர்த்தகப்பாதுகாப்புக் கொள்கை(trade protectionism)
1988-ம் ஆண்டில் இருந்து சீனா செய்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் 2011-ம் ஆண்டு அது உலக வர்த்தக அமைப்பில் இணைந்து கொண்டதும் அதன் ஏற்றுமதியைப் பெருமளவில் அதிகரிக்கச் செய்தன. சீனா உலகின் தொழிற்ச்சாலையானது. அதனால் பல வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பல வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயின. வர்த்தகப்பாதுகாப்புக் கொள்கை(trade protectionism), குடிவரவு எதிர்ப்பு, உள்நாட்டு முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தல், பயமுறுத்தல் கலந்த ஒருபக்கச்சார்பு (belligerent unilateralism) ஆகியவையின் கலவையே தற்போதைய அமெரிக்க ஆட்சியாளர்களின் கொள்கை. தன்னுடய பதவியேற்பு உரையில் வர்த்தகப்பாதுகாப்புக் கொளை செழிப்பையும் வலிமையையும் தரும் என்றார் டொனால்ட் டிரம்ப். முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையில் உருவான பொருளாதார மந்தத்தின் போது தீவிரமான பொருளாதாரத் தேசியவாதம் பல நாடுகள் இறக்குமதிக்கு எதிரான வரிவிதிப்புக்களையும் தடைகளையும் செய்தன. அப்போதைய உலகப் பொருளாதாரக் கட்டமைப்புப் போல் 2007-ம் ஆண்டு இருக்கவில்லை. உலகமயமாதல் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளையும் பொருளாதார ரீதியில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பல நாடுகளை பாதிக்கக் கூடிய சிக்கலான நிலைமை இப்போது நிலவுகின்றது.

எரிபொருள் அரசியல்
அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைச்சரவை பற்றிப் பல குற்றச் சாட்டுகள் வந்த போதிலும் அவரது வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சனும் எரிபொருள் வளத்துறை அமைச்சர் ரிக் பெரியும் உலக எரிபொருள் உற்பத்தி பாவனை விநியோகம் ஆகியவற்றில் நிபுணர்கள். அமெரிக்கா உலகின் முதலாவது எரிபொருள் உற்பத்தி நாடாக உருவெடுத்த வேளையில் அவர்கள் தங்களது பதவியை ஏற்றுள்ளார்கள். அமெரிக்கா தனது வெளியுறவுத் துறையில் எரிபொருளை ஒரு கருவியாகப் தனக்கு ஏற்ப பாவிக்கக் கூடிய நிலைய அடைந்துள்ளது. 2011-ம் ஆண்டு அமெரிக்கா உலகிலேயே அதிக அளவு எரிவாய் உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்து இரசியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. 2014-ம் ஆண்டு அது அதிக அளவு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும் உருவெடுத்தது. ஒபெக் நாடுகள் கூட்டமைப்பு தமது உற்பத்தியை கட்டுப்படுத்தி எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்ய முயன்ற போது அமெரிக்கா தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து எரிபொருள் விலையை வீழ்ச்சியடையச் செய்கின்றது. 2017-ம் ஆண்டில் மசகு எண்ணெயின் விலை ஐம்பது டொலருக்கு மேல் அதிகரிக்க அமெரிக்கா அனுமதிக்காது போல் தெரிகின்றது. இது எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் இரசியாவின் பொருளாதாரம் தலையெடுக்காமல் செய்யும் உத்தியாகும். எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருப்பது பல வளர்முக நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பெரும் வாய்ப்பாகும். ஆனால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த நாடுகள் உலகின் பல் வேறு நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்காசிசாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கு பல வளர்முக நாடுகளில் இருந்து சென்று வேலைசெய்வோர் மூலமாகக் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின் எரிபொருள் கொள்கை பல்வேறுவிதமான தாக்கங்களை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்றது. 

முப்பரிமாண அச்சும் செயற்கை விவேகமும்
2007-ம் ஆண்டுக்கு முன்னர் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 2008-ம் ஆண்டு உருவான் பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவாக அமைந்தது. தற்போது முப்பரிமாண அச்சுக்கலையும் செயற்கை விவேகமும் (artificial intelligence) உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன. முப்பரிமாண அச்சு பல தொழிலாழர்கள் செய்யும் வேலைய மிகக் குறுகிய காலத்தில் மிகக்குறைந்த செலவுடன் செய்யக் கூடியது. செயற்கை விவேகம் பல தொழில்நெறிஞர்களின் வேலைகளைச் செய்யக் கூடியதாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. பல கணக்கியல் மற்றும் சட்டத்துறையைச் சார்ந்த பெரு நிறுவனங்கள் செயற்கை விவேக ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவிடுகின்றன. இதனால் பல சட்டம் மற்றும் கணக்கியல் படித்தவர்களின் வேலைகளை கணினிகள் மூலம் செய்யக் கூடியவகையில் செயற்கை விவேகத் தொழில்நுட்பம் வேகமாக வளர்கின்றது. முப்பரிமான அச்சுக்கலையாலும் செயற்கை விவேகத்தாலும் மேற்கு நாடுகளில் வெளிநாட்டவர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாக இருப்பதால் தேசியவாதிகள் குடிவரவுக்கு எதிரான கொள்கைய தீவிரப்படுத்தி வருகின்றார்கள். தற்போது 700மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பா 2050-ம் ஆண்டு 557முதல் 653 மில்லியன் மக்களையும் கொண்டதாகவிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. அந்த ஊழியர் இடைவெளியை அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு நிரப்பவிருக்கின்றார்கள். 

ஜப்பானின் பிரச்சனைக்குத் தீர்வு
உலக மக்கள் தொகை 1950இல் இருந்து 2000 வரை மூன்று பில்லியன்களில் இருந்து ஆறு பில்லியன்களாக அதிகரித்தது. ஆனால் 2000-ம் ஆண்டில் இருந்ததில் இருந்து 2050-ம் ஆண்டு ஐம்பது விழுக்காடு அதிகரிப்பை மட்டும் காணும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பானில் முதியோர் தொகை அதிகரித்தும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் செல்வதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க ஜப்பான் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களைத் தேட வேண்டி வருமென இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். ஜப்பானியத் தேசியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அதன் விளைவாக ஜப்பானில் செயற்கை விவேகத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருந்தது. Fukoku Mutual Life Insurance என்ற ஜப்பானிய நிறுவனம் செயற்கை விவேகத்தில் 200மில்லியன் யென் முதலீடு செய்ததன் விளைவாக உற்பத்தித் திறன் அதிகரித்ததால் முதலாம் ஆண்டில் மட்டும் 140மில்லியன்கள் சேமிக்கக் கூடியதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இயந்திர மனிதர்கள் எனப்படும் ரொபோக்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வளர்ச்சி நிலையில் வைத்துள்ள ஜப்பானுக்கு செயற்கை விவேகத் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் நன்மையைக் கொடுக்கின்றது. 

இந்தியாவும் சீனாவும்
இந்தியாவும் சீனாவும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட் வளர்முக நாடுகள். குறைந்த ஊதியத்தில் தொழில்செய்யக் கூடிய பலதரப்பட்ட ஊழியர்களையும் கொண்ட நாடுகள். இரண்டும் வேகமாக வளரும் பொருளாதாரங்கள். இர்ண்டு நாடுகளிலும் உறுதியான தலைமை உருவெடுத்துள்ளது. இரண்டு நாடுகளினதும் புள்ளி விபரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக அவை திரித்து வெளிவிடப்படுகின்றன. இரண்டு நாடுகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. சீனாவின் அதிகரிக்கும் முதியோர் தொகை பெரும் பிரச்சனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நீர்த்தட்டுப்பாடு மோசமாகிக் கொண்டிருக்கின்றது. அது தேசிய ஒருமைப்பட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. உலகமயமாதல் இருநாடுகளிலும் பல கோடி மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்து நீக்கியுள்ளது. இரு நாடுகளும் தான் எதிர்கால உலகப் பெரு வல்லரசுகளாக இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவெடுக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் மேற்கு நாடுகளில் பெருகும் தேசியவாதம், முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவை இரு நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவிருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி இவை உலகப் பெரு வல்லரசுகளாகுமா என்பதை ஐயத்திற்கு இடமாக்கியுள்ளது.  வேலை செய்யக் கூடிய மக்கள் தொகையைக் குறைவாகக் கொண்டுள்ள ஜப்பான் முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளது. ஜப்பானின் மிற்சுபிசி நிறுவனம் 2030-ம் ஆண்டு செயற்கை விவேகத்தால் 7.4 மில்லியன் வேலைகள் பறிபோகவிருக்கின்றது என்றும் ஐந்து மில்லியன் வேலைகள் மட்டும் உருவாக்கப்படவிருக்கின்றது என்றும் எதிர்வு கூறியுள்ளது.


மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தேசியவாதத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் இணைத்து ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் மேம்படாமல் தடுக்க முயல்கின்றன. அவை அதிகம் குறிவைப்பது சீனாவையும் இந்தியாவையுமே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...