Saturday, 9 May 2015

இரு விற்பன்னர்களின் மோதலால் முடிவு செய்யப்பட்ட பிரித்தானியத் தேர்தல்

தேர்தலைமுடிவு செய்த படம்

பொதுவாக தேர்தல் என்றால் கட்சிகளின் கொள்கைகளின் மோதல், தலைவர்களின் திறமைகளின் மோதல் தேர்தல் கூட்டங்களில் செய்யும் பேச்சுக்களின் மோதல் என்பதை நாம் அறிவோம். ஆனால் பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல் பிரித்தானியா மக்களுடன் சம்பந்தமில்லாத இரு விற்பன்னர்களின் மோதலாக அமைந்தது. ஒருவர் பராக் ஒபாமாவை இரு தடவை வெற்றி பெறச் செய்த டேவிட் அக்ஸெல்றொட் மற்றவர் ஒஸ்ரேலியாவில் ஜொன் ஹோவார்டை நான்கு தடவைகள் வெற்றி பெறச் செய்த லிண்டன் குறொஸ்பி. இந்த லிண்டன் குறொஸ்பியே கொன்சர்வேர்டிவ் கட்சியின் பொறிஸ் ஜோன்ஸனை இரண்டு தடவைகள் இலண்டன் மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர். இவர்கள் தேர்தல் பரப்புரைகளை நடாத்துவது தொடர்பாக தந்திரோபாயங்களை வகுத்துக் கொடுப்பார்கள். பரப்புரை உத்திகளை வகுப்பார்கள். இவர்கல்இருவருக்கும் ஆளுக்கு ஐந்து இலட்சம் பவுண் கட்டணமாகச் செலுத்தப்பட்டது. கொன்சர்வேர்டிவ் கட்சிக்கு ஆலொசனை வழங்கிய லிண்டன் குறொஸ்பி தனிமனித நிந்தனைகள் செய்யத் தூண்டுவதில் பெயர் போனவர். ஆனால் கொன்சர்வேர்டிவ் கட்சியினர் டேவிட் கமரூன் தனிமனிதத் தாக்குதல் செய்யக் கூடியவர் அல்லர் எனக் கருதினர். அவர்கள் “David is too posh to push” என்றனர்

கொன்சர்வேர்டிக் கட்சிக்கு லிண்டன் குறொஸ்பி வகுத்த உபாயங்கள்:
1. தொழிற்கட்சித் தலைவர் எட்வர்ட் மில்லிபாண்ட் கொன்சர்வேர்டிவ் கட்சியின் தலைவரும் தலைமை அமைச்சருமான டேவிட் கமரூனுக்குச் சரியானதும் நம்பகத்தைமை வாய்ந்ததுமான மாற்றீடு அல்லர் எனப் பரப்புரை செய்வது. இதை ஒட்டி எட்வர்ட் மில்லிபாண்டிடம் நாட்டை ஒப்படைப்பது ஜிம்மி சவைலிடம் சிறுவர் பராமரிப்பு வேலையை ஒப்படைப்பது போன்ற கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவிடப்பட்டன. காலம் சென்ற ஜிம்மி சவைல் பிபிசியில் பணிபுரியும் போது பல சிறுவர்களை பாலியல் முறைகேட்டுக்கு உள்ளாக்கியவர்.
2 தொழிற்கட்சியுடன் தோழமையாக நடந்து கொண்ட தாராண்மைவாதக் கட்சிக்கு எதிராக தீவிர சந்தைப்படுத்தல் நுட்பங்களைப்பயன்படுத்தி செல்வாக்கிழக்கச் செய்தல்.
3. டேவிட்கமரூன் ஆட்சியில் இருபது இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்தமை, அரச பாதீட்டில் துண்டுவிழும் தொகைகளைக் குறைத்தமை, வருமானவரிகளைக் குறைத்தமை தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட பரப்புரைகளைச் செய்தல்.
4. டேவிட் மில்லிபாண்டின் பலவீனங்கள் மீது தாக்குதல் நடாத்துதல். இதற்காக அவர் அவசர அவசரமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படத்தை பத்திரிகைகளில் பிரசுரித்து வருங்கால பிரித்தானியத் தலைமை அமைச்சர் இப்படியா அசிங்கமாகச் சாப்பிடுவது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

கொன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தப் பரப்புரைகள் சில்லறைத்தனமானது என இரகசியமாக ஒப்புக் கொண்டார்கள்.

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புக்கள் கொன்சர்வேர்டிவ் கட்சியினருக்குத் திருப்தி அளிக்காத நிலையில் லிண்டன் குறொஸ்பி எல்லாம் எமக்குச் சாதகமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது என ஊக்கமளித்தார். பின்னர் கடைசித் துருப்பாக தொழிற் கட்சி ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் அது ஆங்கிலேயர்களுக்கு பெரும் பாதகமாக அமையும் என்ற பரப்புரையைட் தீவிரமாகச் செய்யச் சொன்னார்.

ஆனால் பாவம் தொழிற்கட்சிக்கு ஆலோசனை வழங்க வந்த டேவிட் அக்ஸெல்றொட்டின் உபாயங்களை நிறைவேற்றப் போதிய பணம் தொழிற்கட்சியிடம் இல்லை. இவரை அழைப்பது என்றவுடன் பணத்தட்டுப்பாட்டில் இருக்கும் எமது கட்சிக்கு இந்த அளவு பணம் செலவழித்து ஒரு ஆலோசகரைப் பெற வேண்டுமா என்ற கேள்வி தொழிற்கட்சியில் உள்ள சிலரிடமிருந்து எழுந்தது. அத்துடன் எமது ஊர்ப் பிரச்சனைகளைப்பற்றி இந்த அமெரிக்கர் எப்படி அறிவார் அவர் எப்படி எமக்கு ஆலோசனை சொல்வார் என்ற கேள்விகள் தொழிற்கட்சியினரிடம் எழுந்தது.

டேவிட் அக்ஸெல்றொட்டின் கருத்துப் படி பிரித்தானிய ஊடகங்கள் எல்லாம் மிகவும் கட்சி சார்பானவை. அமெரிக்க ஊடகமான ஃபொக்ஸ் நியூஸிலும் பார்க்க மோசமானவை பிரித்தானிய ஊடகங்கள்.

Thursday, 7 May 2015

ஐ எஸ் அமைப்பின் அமெரிக்கத் தாக்குதல்

2015-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் ரெக்ஸஸ் மாநிலத்தில் கார்லண்ட் நகரில் நபிகள் நாயகத்தைக் கேலிச் சித்திரமாக வரையும் போட்டி நடக்கும் இடத்தில் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இத் தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தாமே செய்ததாக ஐ. எஸ் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் இஸ்லாமிய அரசு என்றும் அழைக்கப்படும் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் அமைப்பு இரண்டு நாட்கள் கழித்து உரிமை கோரியுள்ளது. இத் தாக்குதல் ஐ.எஸ் அமைப்பின் வலிமை வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இத் தாக்குதல் அமெரிக்காவில் ஐ. எஸ் அமைப்பு வேரூன்றியுள்ளது என்பதற்கான அறிகுறியல்ல என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவில் நடந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலுக்கு முதல் முறையாக ஐ எஸ் அமைப்பு உரிமைகோரியுள்ளமை கவனிக்கத் தக்கது. தமக்குத் தெரியாமல் நடந்த தாக்குதல்களுக்குக் கூட தீவிரவாத அமைப்புக்கள் உரிமை கோருதல் வழக்கம் என்கின்றது அமெரிக்கா.

கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடந்த இடத்திற்கு ரைபிள்களுடனும் கவசங்களுடனும் எல்டன் சிம்சன் என்பவரும் நதிர் சூஃபி என்பவரும் தாக்குதல் நடத்தச் சென்றனர். இப்படி ரைபிள் எடுத்துத்துச் சென்று தாக்குதல் செய்வது அமெரிக்காவில் ஓர் இலகுவான செயல். ஆனால் முஹம்மது நபி தொடர்பான கேலிச் சித்திரப் போட்டி ஓர் ஆத்திரமூட்டும் செயல் என்பதை உணர்ந்த அமெரிக்கக் காவற்துறை அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. SWAT எனச் சுருக்கமாக அழைகப்படும்  Special Weapons And Tactics பாதுகாப்புப் பிரிவு அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. இந்தப் பிரிவினர் வழமையான காவற்துறையினர் வைத்திருக்கும் படைக்கலன்களிலும் பார்க்க சிறந்த படைக்கலன்களையும் வைத்திருப்பர். அத்துடன் மறைந்திருந்து தாக்கக் கூடிய தொலைநோக்கிகளுடன் கூடிய துப்பாக்கிகளையும் வைத்திருப்பார்கள். தாக்குதலுக்குச் சென்ற எல்டன் சிம்சனும் நதிர் சூஃபியும் காவலுக்கு இருந்த ஒருவரைச் சுட்டுக் கொன்றார்கள். ஆனால் இவர்கள் இருவரையும் மற்றக் காவலாளிகள் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தாக்குதல் பலர் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய திட்டமிட்ட தாக்குதல் அல்ல ஒரு தனி ஓநாய் பாணித் தாக்குதல் (Own lone wolf-style strike) என்கின்றது அமெரிக்க அரசு. இத் தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கும் தொடர்பு இல்லை என அடித்துச் சொல்கின்றது அமெரிக்க அரசு.

ரெக்ஸஸ் மாநிலத்தின் கார்லண்ட் நகரில் தமது போராளிகள் இருவர் தாக்குதல் நடாத்தியதாக சிரியாவிலும் ஈராக்கிலும் பெரு நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ எஸ் அமைப்பு தமது வானொலி மூலம் தெரிவித்துள்ளது. அல்லாவின் ஆணைப்படி அவர்கள் தாக்குதல் நடாத்தியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது போல இறைநம்பிக்கை அற்றவர்களை எல்லா இஸ்லாமியப் போராளிகளும் கத்திகளால் குத்தியோ, வாகனங்களால் மோதியோ பள்ளங்களில் தள்ளி வீழ்த்தியோ கொல்ல வேண்டும் என்கின்றது ஐ எஸ் அமைப்பு.  இனிவரும் காலங்களில் அமெரிக்காவில் தமது போராளிகள் நடாத்தும் தாக்குதல் மேலும் மோசமாக இருக்கும் என்கின்றது ஐ எஸ் அமைப்பு.

இரு தாக்குதலாளிகள் செய்த தாக்குதலைத் தொடர்ந்து கேலிச் சித்திரப் போட்டியை ஒழுங்கு செய்த பமிலா கெல்லர் பேச்சுரிமையில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு விலக்கு கொடுக்க முடியாது என்றார். இவர் இப்படி ஒரு போட்டியை ஒழுங்கு செய்ய இடத்தைத் தேர்தெடுத்ததை அறிந்த  கார்லண்ட் நகரத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அதை உதாசீனம் செய்வதே சிறந்த வழி என்று எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 12,500டொலர் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. டலஸ் பிரதேச  இஸ்லாமியத் தலைவர் பமிலா கெல்லர் இனக் குரோதத்தைத் தூண்டுவதற்கு இஸ்லாமியர்களுக்குத் தூண்டில் போடும் நடவடிக்கையே இந்த கேலிச் சித்திரப் போட்டி என்றார். சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட உள்ளூர் மெதடிஸ்ற் கிருத்தவத் தலைவர் பேச்சுரிமை என்ற பெயரில் பமிலா இனக்குரோதத்தை வளர்க்கின்றார் என்றார்.  52 வயதான பமிலா கெல்லர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான குரோதத்தை வளர்க்கும் ஒரு இணையத்தை நடாத்தி வருகின்றார். இவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரது தந்தைக்கு அல்லாமல் மல்கம் எக்ஸ் என்பவருக்குப் பிறந்தவர் என்றும் அவர் இளைஞராக இருந்த போது ஒரு இஸ்லாமியராக இருந்தார் என்றும், ஒரு விலைமாதுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்றும் பரப்புரைகள் செய்தவர்.

அமெரிக்காவின் சில மாநிலங்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை அடிப்படையாக வைத்து உள்நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதைத் தடை செய்துள்ளன. சில நீதிபதிகள் இதனால் ஷரியாச் சட்டத்தை அடிப்படையாக வைத்துத் தீர்ப்புக்கள் வழங்குவதாகக் கருதப்படுகின்றது. ரெக்ஸஸ் மாநில சட்ட் சபையும் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட சட்டத்தை ஆதரிப்போர் இச்சட்டம் இஸ்லாமிற்கு எதிரானது அல்ல என்றும் பொதுவாக வேற்று நாடுகளின் வேற்று மதங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்குவதைத் தடுப்பதாகும் என்கின்றனர்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாரிஸ் நகரில் நடாத்தப் பட்ட தாக்குதலுக்கும் ரெக்ஸஸ் மாநிலத்தின் கார்லண்ட் நகரில் நடாத்தப் பட்ட தாக்குதலுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவில் ஐ எஸ் அமைப்பு பயிற்ச்சிகளையோ அல்லது பாசறைகளையோ வைத்திருக்க முடியாது என்கின்றது அமெரிக்க அரசு.

31 வயதான எல்டன் சிம்சன் தாக்குதலுக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் தன்னை ஒரு புனிதப் போராளியாக அல்லா ஏற்றுக் கொள்வார் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எல்டன் சிம்சன் என்பவரும் நதிர் சூஃபி என்பவரும்  நடாத்தியா தாக்குதலுக்கும் ஐ எஸ் அமைப்பிற்கும் நேரடித் தொடர்பு இல்லை என அமெரிக்கா அடித்துச் சொன்னாலும் இரண்டு அம்சங்களை இங்கு உறுதியாகச் சொல்லலாம்:

1. அமெரிக்காவின் பல்வேறு உளவுத் துறை அமைப்புக்களால் எல்லாத் தீவிரவாதத் தாக்குதல்களையும் முன் கூட்டியே அறிய முடியாது.
2. ஐ எஸ் அமைப்பிற்கும் ரெக்ஸஸ் தாக்குதலுக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிடினும் இஸ்லாமியத் தீவிரவாதம் அமெரிக்காவையும் ஊடறுக்கக் கூடியது.

Monday, 13 April 2015

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சீனா இந்தியாவின் கணனிகளை ஊடுருவிக் கொண்டிருக்கின்றதாம்

சீனாவின் இணையவெளி ஊடுருவல் (Cyber Hacking) செய்யாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு நாள் தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கப் புலனாய்வுத் துறையான FBIஇன் இயக்குனர் ஜேம்ஸ் கொமி சீனாவின் இணையவெளி ஊடுருவல்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் எல்லா வத்தக நிறுவனங்களும் உள்ளாகியுள்ளன என்றார். கடந்த பத்து ஆண்டுளாக இந்தியாவின் பல்வேறுபட்ட அரச மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கணனிகளை யாருமறியாமல் ஊடுவல் செய்து வருவதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இணைய வெளி ஊடுருவலும் போரும்(Cyber hacking and Cyber warfare)
இணையவெளி ஊடுருவல்கள் தனிப்பட்டவர்களாலும் நிறுவனங்களாலும் மட்டுமல்ல அரசுக்களாலும் செய்யப்படுகின்றன. தகவல் திருட்டு, வங்கி விபரங்களை அறிந்து பணங்களை முறைகேடான மாற்றீடு செய்தல், வர்த்தக நிறுவனங்கள் பெரும் தொகை செலவழித்துக் கண்டறிபவற்றையும் கண்டு பிடிப்பவற்றையும் திருடுதல், ஒரு நாட்டுப் படைத்துறை இரகசியங்களைத் திருடுதல் போன்ற பல இணையவெளி ஊடுருவல்கள் மூலம் பெறப்படுகின்றன. இவை போக பொழுது போக்கிற்காக இணையவெளி ஊடுருவல்கள் செய்பவர்களும் உண்டு. ஒரு நாட்டின் இணையவெளிக்குள் ஊடுருவி அதன் கணனிகளைச் செயலிழக்கச் செய்வது இணைய வெளித் தாக்குதல் எனப்படும். இதன் மூலம் ஒரு நாட்டின் பல குடிசார் வழங்கல்களை முடங்கச் செய்வதுடன் பல படைத்துறை நடவடிக்கைகளையும் செயலிழக்கச் செய்யலாம். முக்கிய தகவல்களை அழித்தல், பல பொறிகளை இயங்காமல் முடக்குதல், தொடர்பாடல்களை ஒற்றுக் கேட்டல், தொடர்பாடல்களை முடக்குதல், தொடர்பாடல்களை திசைதிருப்புதல் இப்படிப்பல செய்ய முடியும் போன்றவை இணையவெளிப் போர் எனச் சொல்லலாம்.
வருங்காலத்தில் நாடுகளுக்கிடையிலான போர் தரை, கடல், விண்வெளி மார்க்கமாக மட்டுமல்லாமல் இணையவெளியிலும் நடக்கவிருக்கிறது. அதற்கான தாயாரிப்புக்களில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மட்டுமல்ல பல போராளி இயக்கங்களும் இதில் தமது திறமையை வளர்த்து வருகின்றன.

சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
அமெரிக்காவின் படையினர் இணையவெளியிலும் செய்மதித் தொடர்புகளிலும் பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்பதை உணர்ந்த சீனா இணைய வெளியில் தனது போர் முறைகளை வளர்த்தது. அத்துடன் செய்மதிகளை நிலத்தில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் அழிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது.

இந்தியப் படைத்துறை இரகசியங்கள் சீனாவின் கையில்
சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.

FireEye நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பிறைஸ் போலண்ட்  ஆசியாவில் உள்ள பலநாடுகளின் மீது இணையவெளி ஊடுருவலகளும் தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன என்கின்றார். 2011-ம் ஆண்டு Shady Rat என்னும் குறியீட்டுப் பெயருடன் சீனாவில் இருந்து பல ஆசிய நாடுகளினது அரசகளினதும் தனியார் நிறுவனங்களின் கணனித் தொகுதிகள் மீது ஊடுருவல்கள் செய்யப்பட்டதாக McAfee என்னும் இணையவெளிப் பாதுகாப்பு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் எல்லாக் குற்றச் சாட்டுகளையும் சீனா மறுக்கின்றது.

Friday, 10 April 2015

நகைச்சுவைக் கதை: பாக்கிஸ்த்தானியுடன் படுக்க முடியாது.

மத்திய கிழக்கில் ஒரு யூதன் ஒரு இந்தியன் ஒரு பாக்கிஸ்த்தானி ஆகிய மூவரும் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இடையில் ஒரு இடத்தில் வண்டி பழுதடைந்து விட்டது. நேரமோ இரவு. அவர்கள் மூவரும் அண்மையில் இருந்த ஒரு வீட்டுக் கதைவைத் தட்டினார்கள்.

அது ஒரு விவசாயின் வீடு அவனும் அவர்களை அன்புடன் உள்ளே அழைத்து உபசரித்து சுவையான உணவுகள் பரிமாறினான். மூவரும் அவன் வீட்டிலேயே இரவு தங்க முடியுமா என அந்த விவசாயியைப் பணிவன்புடன் கேட்டனர். அதற்கு விவசாயி தனது சிறு வீட்டில் இருவர் மட்டும் தங்க முடியும் என்றான். அதற்கு யூதன் எனது இனம் உலகமெல்லா அலைந்து துன்பப்பட்ட இனம் என்னால் எந்த மோசமான இடத்திலும் தங்க முடியும் என்றான். விவசாயி யூதனை தொழுவத்திலும் இந்தியனையும் பாக்கிஸ்த்தானியையும் வீட்டுக்குள் படுக்க ஏற்பாடு செய்தான்.

சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் நின்ற யூதன் தொழுவத்தில் பன்றி இருக்கிறது எனது மத தத்துவப்படி என்னால் அங்கு நித்திரை கொள்ள முடியாது என்றான். அதற்கு இந்தியன் எமது நாட்டில் மக்கள் தெருவோரத்திலேயே படுத்து உறங்குவார்கள். சிவபெருமானும் திருமாலும் பன்றியாக அவதாரம் எடுத்தவர்கள். அவை கடவுளின் வடிவங்கள். என்னால் அங்கு தங்க முடியும் என்று போய் தான் தொழுவத்தில் தங்கினான்.


சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் நின்ற இந்தியன் தொழுவத்தில் பசு இருக்கிறது. நான் இன்று குளிக்கவே இல்லை. எனது மத தத்துவப்படி பசு இருக்கும் இடம் புனிதமானது. அங்கு நான் குளிக்காமல் தங்க முடியாது என்றான். அப்போது பாக்கிஸ்த்தானி சரி இப்போது எனது முறை எப்படியும் நான் தொழுவத்தில் சமாளிக்கிறேன் என்று சொல்லி தான் போய்த் தொழுவத்தில் தங்கினான்.

சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் பசுவும் பன்றியும் மிகவும் பரிதாபகரமான முகத்துடன் நின்றன.

Tuesday, 7 April 2015

நகைச்சுவைக் கதை: காயத்திரி மதிரத்திரமும் விபசாரிகளும்

அந்தக் கோவிலில் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்த சாவித்திரியைப் பார்த்து பட்டாபி ஐயர் மிகவும் அக்கறையோடு ஏன் அம்மா கவலையுடன் இருக்கிறாய் என்று விசாரித்தார். அதற்கு சாவித்திரி "ஐயரே ஆசையுடன் இரண்டு பேசும் பெண் கிளிகள் நிறையப் பணம் கொடுத்து வாங்கினேன். அவற்றிற்கு சரஸ் என்றும் லக்ஸ்மி என்றும் பெயரும் வைத்தேன். ஆனால் அவை இரண்டும் நாள் முழுவதும் பேசுவது "நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா???" என்ற வசனம் மட்டுமே. " என்று கவலையுடன் சொல்லி முடித்தாள்.

பட்டாபி ஐயர் "இதெல்லாம் பழக்க தோஷம் தான். என்னிடம் நரேஸ், சுரேஸ் என இரண்டு ஆண்கிளிகள் இருக்கின்றன. அவை காலையில் சுப்ரபாதம் பாடும். மதியம் திருவாசகம் பாடும். மாலையில் பஜகோவிந்தம் பாடும். மற்றும்படி தினமும் ஆயிரத்தெட்டுத் தடவை காயத்திரி மந்திரம் உச்சரிக்கும். உனது இரு பெண்கிளிகளையும் கொண்டு வந்து எனது வீட்டில் விடு. அவை ஒன்றாகப் பழகட்டும். எனது ஆண்கிளிகளின் நல்ல பழக்கத்தை உனது கிளிகளும் பழகிக்கொள்ளும். அவையும் தோத்திரங்கள் மந்திரங்களைச் சொல்லும்" என்றார்.

அதற்கு சாவித்திரி சரி ஐயரே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்கள். கொண்டு வருகிறேன் என்றாள்.

பட்டாபி ஐயர் வருகின்ற புதன்கிழமை ஏகாதசி அன்றே கொண்டு வாடியம்மா என்றார்.

சாவித்திரி பட்டாபி ஐயர் சொன்னபடியே புதன் கிழமை குரு ஹோரையின் போது தனது கிளிகளை பட்டாபி ஐயர் வீட்டிற்கு கொண்டு போனாள். ஐயர் சாவித்திரியின் கிளிகளான சரஸையும் லக்ஸ்மியையும் தனது காயத்திரி மந்திரத்தை கண்மூடி உச்சாடனம் செய்து கொண்டிருந்த ஆண்கிளிகளான நரேஸ், சுரேஸ் இருக்கும் கூட்டைத் திறந்து உள்விட்டுக் கதவை மூடினார். உள்ளே சென்ற சரஸும் லக்ஸ்மியும் "நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா???" என்றன.

கண்ணைத் திறந்து பார்த்த நரேஸும் சுரேஸும் உடனே ஆகாயத்தை நோக்கி நாம் இவ்வளவு காலமும் பாடிய பாடல்களுக்கும் உச்சாடனம் செய்த காயத்திரி மந்திரமும் எதற்காகச் செய்தோமோ அதற்கான பலன் இன்று கைகூடியிருக்கிறது" என்றன.

Saturday, 4 April 2015

ஈரானுடனான அணுக்குண்டுப் பேச்சு வார்த்தையில் வெற்றியடைந்தது யார்?

தற்காலத்தில் இராசதந்திரப் பேச்சு வார்த்தை என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் முடிப்பது என்றாகி விட்டது. உலகின் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும் ஒரு புறமும் ஈரான் மறுபுறமுமாக இருந்து நடாத்தி பேச்சு வார்த்தையில் ஈரான் தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு முடிவை எட்டியுள்ளது. ஈரான் எமக்கு ஒரு பாடத்தை இங்கு போதிக்கின்றது. பேச்சு வார்த்தை என்பது வலியவர்கள் கொடுப்பதை மட்டும் மற்றவர்கள் ஏற்றுக் கொளவதுமல்ல வலியவர் என்னை நீ நம்புகிறாயா எனக் கேட்கும் போது மற்றவர்கள் மாடு போல் தலையாட்டுவதுமல்ல என்பதை தமிழர்களின் தலைவர்கள் எனத் தம்மைச் சொல்லுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உடன்படிக்கை தொடர்பாக உடன்பாடு
ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும் இணைந்து P5+1 என்னும் பெயரிலான குழுவாக ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கான யூரேனியப் பதப்படுத்துதலை நிறுத்துவது தொடர்பாகஒரு தொடர் பேச்சு வார்த்தை நடாத்தி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளன. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் திகதி ஈரானுடன் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கை எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாகவே இப்போது சுவிற்சலாந்து நகரான லௌசானின் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றுவரை ஈரான் தான் யூரேனியம் பதப்படுத்துவது சமாதான நோக்கங்களுக்கு மட்டுமே அணுக்குண்டு தயாரிப்பதற்கு அல்ல என அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

சவுதி ஒரு புறம் இஸ்ரேல் மறுபுறம்

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பாக இஸ்ரேல் மட்டுமல்ல சவுதி அரேபியாவும் அதிக கரிசனை கொண்டிருந்தது. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்தால் சவுதி அரேபியாவும் பாக்கிஸ்த்தானின் உதவியுடன் அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யலாம் என அஞ்சப்பட்ட்டது. இதனால் ஒரு அணுப் படைக்கலப் பரவலாக்கம் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்படலாம் எனவும் அஞ்சப்பட்டது . லிபியா, துனிசியா, அல்ஜீரியா, பாஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் முக்கிய எரிபொருள் வளப் பிரதேசங்களைத் தான் கைப்பற்ற வேண்டும் என்ற கனவு ஈரானிய மதவாத ஆட்சியாளர்களுக்கு உண்டு என சவுதி அரேபியா கருதுகின்றது. ஈரானின் இந்தக் கனவை அது அணுக்குண்டு மூலம் சாதிக்க நினைக்கிறது என்று சவுதி அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது போல் ஈரானையும் ஆக்கிரமிக்க வேண்டும் என சவுதி விரும்பியது.

ஈரானைத் தாக்கத் திட்டமிட்ட சவுதியும் இஸ்ரேலும்
ஈரானின் எல்லா பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்பையும் அழிக்க வேண்டும் என சவுதியும் இஸ்ரேலும் இரகசியமாக ஆலோசனை நடாத்தின. சியா முசுலிம் நாடான ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்வதையிட்டு சுனி முசுலிம் நாடான சவுதி அரேபியா இஸ்ரேலிலும் பார்க்க அதிக கரிசனை கொண்டிருந்தது. இஸ்ரேலும் சவுதியும் P5+1 நாடுகளிற்கும் ஈரானிற்கும் இடையி நடக்கும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் அது தமது நாடுகளுக்கு ஆபத்தாய் அமையும் என அஞ்சின. ஈரான் அணுக்குண்டைத் தயாரித்தால் முதலில் செய்வது சவுதியில் இருக்கும் புனித நகர்களான மக்காவையும் மதீனாவையும் கைப்பற்றுவதாகும். இத்னால் சவுதியும் இஸ்ரேலும் இரகசியமாக இணைந்து ஈரானின் அணு ஆய்வு நிலைகளைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. சவுதி அரேபியாவின் வான் பரப்பினூடாக பறந்து சென்று ஈரான் மீது தாக்குத நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். சவுதி அரேபிய விமானத் தளங்களைப் பாவித்தால் இஸ்ரேலுக்கு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலையங்களைத் தாக்குவது மேலும் இலகுவாகும். 1981-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி இஸ்ரேலிய விமானங்கள் சவுதி அரேபிய வான் பரப்பினூடாகப் பறந்து சென்று ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலைகளைத் தாக்கி அழித்தன. மலைகளும் பாறைகளும் நிறைந்த ஐந்து இடங்களில் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை அமைத்துள்ளது. அந்த ஆழத்திற்கு துளைத்துச் செல்லக் கூடிய குண்டுகளை ஏற்கனவே இஸ்ரேல் உருவாக்கிவிட்டதா அல்லது அமெரிக்காவிடமிருந்தோ அல்லது பிரான்ஸிடமிருந்தோ அவற்றை வாங்கிவிட்டதா என்பது ஒரு கேள்வியாக இருந்தது. இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட் ஏற்கனவே சவுதித் தலைநகர் ரியாத்தில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இரசிய ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த ஈரானிய அரசியல் ஆய்வாளர் செய்யது முகம்மது மராண்டி இஸ்ரேலும் சவுதியும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடாத்தினால் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுப்பதுடன் உலகப் பொருளாதாரத்தின் மீதும் பெரும் அடி விழும் எனவும் எச்சரித்திருந்தார்.

மரதன் பேச்சு வார்த்தை
ஈரானின் யூரேனியப் பதப்படுத்துதலை நிறுத்துவதற்கான இராசதந்திர முயற்ச்சி கடந்த 13 ஆண்டுகளாக  நடை பெற்றன. ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு அது தொடர்ச்சியாக இறுக்கப்பட்டது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை 1979-ம் ஆண்டு ஈரானில் மன்னர் ஷா ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதில் இருந்து ஆரம்பமானது. தொடர்ந்து 1995-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் தனது ஆணை மூலம் ஈரானில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தடை விதித்தார். 1996-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை ஈரானில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஈரானின் யூரேனியம் பதப்படுத்தலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஈரானுடன் அணு உற்பத்தி தொடர்பான எந்தவித வர்த்தகமும் செய்யக் கூடாது என்ற தடை 2006-ம் ஆண்டு விதிக்கப்பட்டது. இத்தடை 2007-ம் ஆண்டு மேலும் இறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது. ஐநா பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக 2008-ம் 2010-ம் ஆண்டுகளில் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா ஈரானின் வங்கிகள் மீது தடை விதித்தது. ஐக்கிய அமெரிக்காவுடன் பிரித்தானியாவும் கனடாவும் இணைந்து கொண்டன. 2012-ம் ஆண்டு ஈரானின் மைய வங்கி மீது அமெரிக்கா தடை விதித்தது. SWIFT என்னும் பன்னாட்டு வங்கிக் கொடுப்பனவு முறைமையில் இருந்து ஈரான் வெளியேற்றப் பட்டது. இவற்றால் ஈரானியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பு உள்ளானது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் பொறுத்தவரை அவர் ஈரானுடன் ஒரு போரை விரும்பவில்லை. ஈரானை அணுக்குண்டு தயாரிப்பதில் இருந்து தடுக்க 1. இஸ்ரேல் ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 2. அமெரிக்கா ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 3 அல்லது இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும். ஒபாமா இதில் எதையும் விரும்பவில்லை.  இது அமெரிக்காவின் மிக நெருக்கமாக மிக நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் இஸ்ரேலையும் சவுதி அரேபியாவையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. ஈரானுடனான பேச்சு வார்ததையை விரும்பாதவர்கள் இந்தப் பேச்சு வார்த்தையை கரடியுடன் நடனமாடுவதற்கு ஒப்பிட்டனர். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரச்சனை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என அவர்கள் எச்சரித்திருந்தனர். ஈரானுடனான பிரச்சனை வெறும் யூரேனியம் பதப்படுத்தல் பிரச்சனை மட்டுமல்ல. ஈரானின் ஆதரவுடன் செயற்படும் தீவிரவாதக் குழுக்கள் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.

ஈரானுடனான உடன்பாட்டில் இஸ்ரேலின் இருப்பு உரிமையை ஈரான் அங்கீகரிக்க வேண்டும் என இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வலியுறுத்தி இருந்தார். அது பற்றி ஈரானுடன் எந்த உடன்பாடும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஈரானியப் படைத்தளபதி இஸ்ரேலை அழிப்பது தொடர்பாகவோ இஸ்ரேலைத் தப்பவைப்பது தொடர்பாகவோ பேச முடியாது எனச் சூளுரைத்திருந்தார்.

உளவு பார்த்த இஸ்ரேல்
ஈரானுடனான பேச்சு வார்த்தை தொடர்பாக சவுதி அரேபியாவிற்கு இரகசியமாகத் தகவல்கள் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் இஸ்ரேலுக்கு அப்படித் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் இஸ்ரேல் தனது உளவுத்துறையினரைப் பாவித்து லௌசான் நகரில் இருந்து தகவல்கள் பெற்றது அம்பலமாகியது. இஸ்ரேல் உளவுத் துறை மூலம் திரட்டிய தகவல்களை தனக்கு வேண்டிய அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டது.

உடன் பாட்டின் முக்கிய அம்சங்கள்
முதலாவது ஈரனிடம் இருக்கும் யூரேனியம் பதப்படுத்தும் Centrifuge எனப்படும் சுழலும் உருளைகளை பெருமளவில் குறைக்க வேண்டும். தற்போது ஈரான் 19,000 சுழலும் உருளைகள் வைத்திருக்கின்றது. இவற்றை 6000 ஆகக் குறைக்க வேண்டும்.
இரண்டாவது ஈரான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 விழுக்காடு மட்டுமே யூரேனியத்தைப் பதப்படுத்த முடியும். இந்த அளவு குறைவான பதப்படுத்தலால் ஈரானால் அணுக்குண்டு தயாரிக்க முடியாது.
மூன்றாவது ஈரான் தன்னிடம் தற்போது இருக்கும் பதப்படுத்தப் பட்ட யூரேனியத்தை 98 விழுக்காட்டால் குறைக்க வேண்டும். ஈரானிடம் தற்போது 10,000 கிலோ பதப்படுத்தப் பட்ட யூரேனியம் இருக்கின்றது இதை 300 கிலோவாகக் குறைக்க வேண்டும்.
நான்காவது ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தலை நடான்ஸ் என்னும் நகரில் மட்டுமெ செய்ய முடியும். அத்துடன் ஐ-ஆர்-1 எனப்படும் சுழலும் உருளைகளை மட்டுமே யூரேனியப் பதப்படுத்தலுக்குப் பாவிக்க முடியும்.  த்ற்போது ஈரான் ஐ-ஆர்-2 என்னும் சுழலும் உருளைகளை யூரேனியம் பதப் படுத்தப் பயன்படுத்துகின்றது. இதனால் விரைவாக யூரேனியத்தைப் பதப் படுத்த முடியும்.
ஐந்தாவது பன்னாட்டு அணுவலு முகவரகம் ஈரானில் தனது தேடல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ள முடியும்.
ஆறவது அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஈரான் எந்த கனநீர் அணு உலைகளையும் உருவாக்கக் கூடாது.
ஏழாவது தான் இதுவரை பாவித்த அணு உலை எரிபொருடகளை மீள்பாவனைக்கு உட்படுத்தக் கூடாது.

சுவிஸ் நகர் லௌசானில் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து எப்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடை நிக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்கப் பாரளமன்றம் முட்டுக் கட்டை போடுமா?
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஈரானுடனான உடன்பாடு தொடர்பாக மகிழ்ச்சி எங்கும் நிலவுகின்றது. ஆனால் ஒபாமாவிற்கு எதிர்கட்சியான குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அமெரிக்கப் பாராளமன்றத்தில் பல ஐயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையில் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாக சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. மக்களவை மீண்டும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஆனால் அதை இரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உண்டு. அமெரிக்க அதிபரின் இரத்தைச் செல்லுபடியற்றதாக்குவதற்கு பாராளமன்றத்தின் மக்களவையிலும் மூதவையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் குடியரசுக் கட்சிக்கு அது இப்போது இல்லை. இதனால் குடியரசுக் கட்சியினரால் பெருமளவு முட்டுக்கட்டை போட முடியாது. அவர்களால் செய்யக் கூடிய ஒரே செயல் ஈரானுடனான பேச்சு வார்த்தைக்கான நிதி ஒதுக்கீட்டை முற்றாக இல்லாமல் செய்வது மட்டுமே.

உடன் பாட்டின் தாற்பரியங்கள்
சுவிஸ் நகரான லௌசானில் P5+1 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் காணப்பட்ட உடன்பாடு தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ இந்த உடன்பாடு ஈரான் அணுக்குண்டு உருவாக்குவதைத் தடை செய்யாது மாறாக ஈரான் அணுக் குண்டு உற்பத்தி செய்வதற்கு வழிவகுக்கும் எனச் சொன்னார். ஈரானிடம் உள்ள எல்லா பதனிடப்பட்ட யூரேனியமும் அழிக்கப்படவேண்டும் என்பதும் ஈரான் எத ஒரு யூரேனியப் பதப்படுத்தலையும் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி இருந்தது. ஆனால் பல இஸ்ரேலியப் படைத்துறை ஆய்வாளர்கள் உடன்பாடு எதிர்பார்த்திலும் பார்க்கச் சிறப்பானதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். ஈரானுடன் எந்தவித பேச்சு வார்த்தையிலும் ஈடுபடாமல் அதன் யூரேனியம் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்க வேண்டும் எனப் பல இஸ்ரேலில் உள்ள தீவிரவாதச் சிந்தனை உள்ளவர்கள் கருதினார்கள். இவர்கள் தோற்கடிக்கப் பட்டுவிட்டதாக ஈரானில் உள்ளவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மகிழ்ச்சியில் ஈரான்
ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி தாம் பேச்சு வார்த்தை மேசையில் வழங்கிய உறுதி மொழியைக் காப்பாற்றுவோம் என்றார். ஈரானில் மக்களில் இருந்து உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி வரை அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அயத்துல்லா அலி கொமெய்னி இந்த உடன்பாட்டுக்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பது முதலில் சந்தேகத்திற்கு இடமானதாக இருந்தது. ஆனால் உடன்பாட்டால் ஈரான் மகிழ்ச்சியடைந்துள்ளது. ஈரானியர்கள் தெருவில் இறங்கி நடனமாடி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். பராக் ஒபாமாவின் உடன்பாடு தொடர்பான உரையின் காணொளியை ஈரானிய அரச ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்தன. பராக் ஒபாமா அமெரிக்காவில் இருந்து கொண்டே காணொளி மூலமாக லௌசான் நகரில் உள்ள பேச்சு வார்த்தையில் பங்கு பற்றியவர்களுக்கு உரையாற்றினார். அவரின் உரையாற்றும் காணொளியுடன் நின்று ஈரானியப் பிரதிநிதிகள் தம்மைத்தாமே ஷெல்ஃபி படங்கள் எடுத்துக் கொண்டனர்.
லௌசான் நகரில் செய்யப்பட்டது உடன்பாடு மட்டுமே. அங்கு யாரும் எந்த ஒரு பத்திரத்திலும் கையொப்பமிடவில்லை. உடன்பாடு தொடர்பாக ஆங்கிலத்தில் வெளிவிடப்பட்ட செய்திகளுக்கும் பார்சி மொழியில் வெள்விடப்பட்ட செய்திகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. ஈரான் போர்டோ, இஸ்ஃபஹன், நந்தாஸ், ஆரக் ஆகிய நகரங்களில் யூரேனியம் பதனிடும் நிலையங்களை வைத்துள்ளது. இதில் எந்த ஒன்றும் மூடப்படுவதாக உடன்பாட்டில் இல்லை.

இஸ்ரேலுக்கு வைக்கப்பட்ட பொறி

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரான்ஸ் பலஸ்த்தீனத்தை ஒரு அரசாக அங்கீகரிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ளாது. இதை அமெரிக்கா தனது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்துச் செய்வதாயின் லௌசான் நகரில் ஈரானுடன் செய்த உடன்பாட்டிற்கு எந்த முட்டுக்கட்டையும் இஸ்ரேல் செய்யக் கூடாது என நிபந்தனை இரகசியமாக விதிக்கபட்டிருந்தது. சவுதி அரேபியாவில் இருந்து பெருமளவு எதிர்ப்புக் கிளம்பவில்லை.

எரிபொருள் விலை வீழ்ச்சியடையும்
ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப்படுமிடத்து உலகில் எரிபொருள் விலை மேலும் வீழ்ச்சியடையவிருக்கின்றது. இது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் நன்மையளிக்கக் கூடியதாகும். ஆனால் எரி பொருள் விலை வீழ்ச்சி இரசியாவிற்கு மேலும் அடியாகப் போகின்றது. இதை ஈடு செய்ய இரசியா ஈரானுக்கு பெருமளவு படைக்கலன்களை விற்பனை செய்ய முயற்ச்சிக்கலாம்.

புவிசார் அரசியல் மாறுமா?
லௌசான் நகர் உடன்பாட்டைத் தொடர்ந்து  அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையிலான உறவு சீரடையலாம்.  இது மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் புவிசார் அரசியலைத் தலைகீழாக மாற்றலாம். துருக்கி-ஈரான் - அமெரிக்கஆகியவற்றின் முக்கூட்டு உறவு ஒன்று உருவாகும் சாத்தியம் உண்டு. இதன் மூலம் தற்போது உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் சிரியா, ஈராக், லெபனான், காசா நிலப்பரப்பு, யேமன் ஆகிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் மாற்றுக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஈரானுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி ஈரானில் உள்ள வலது சாரிகளையும் மேற்கு நாடுகள் சார்பானவர்களையும் ஊக்கப்படுத்துவதும் அமெரிக்காவின் ஒரு நோக்கமாக இருந்தது. 1979 இல் முறிந்து போன ஈரானிய அமெரிக்க உறவை மீண்டும் புதுப்பித்து வளைகுடாப் பிராந்தியத்தில் அமைதி பேணலில் ஈரானையும் ஒரு பங்காளியாக்கும் ஒபாமாவின் கனவு நிறைவேறுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது.

யார் ஆறாம் வல்லரசு
ஈரானுடனான பேச்சு வார்த்தைகளில் ஐந்து வல்லரசு நாடுகளுடன் ஆறாவது நாடாக ஜேர்மனி இணைந்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாயின் அதில் முதலிடம் ஜேர்மனிக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது இந்தியா, ஜப்பான், பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகியவற்றின் வல்லரசுக் கனவைக் கலைக்கிறதா என்ற கேள்வியும் தொடர்கின்றது.

அமெரிக்கக் குடியரசுத் தேர்தலும் ஈரானும்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஏற்கனவே அமெரிக்காவின் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. குடியரசுக் கட்சியின் சார்பின் போட்டியிட முயலுபவர்கள் ஈரானுக்கு எதிரான தமது வீர வசங்களை இனி மேலும் முறுக்கேற்றிப் பேச வாய்ப்புண்டு. ஒபாமாவின் வெளிநாட்டுக் கொளகையைத் தாக்கிப் பேசிவரும் குடியரசுக் கட்சியினர் தமது தாக்குதலை மேலும் அதிகரிப்பர். மக்களாட்சிக் கட்சி (Democratic Party) சார்பில் போட்டியிடவிருக்கும் ஹிலரி கிளிண்டனுக்கு அமெரிக்காவின் மிதவாதிகளிடமிருந்து ஆதரவு பெருக வாய்ப்புண்டு.

இஸ்ரேலின் மூன்று முக்கிய நிபந்தனைகளான இஸ்ரேலின் இருப்பை ஈரான் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஈரானின் பதப்படுத்தப் பட்ட யூரேனிய்ம் முற்றாக அழிக்கப்படவேண்டும், ஈரான் எந்த ஒரு யூரேனியம் பதப்படுத்தலையும் செய்யக் கூடாது ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இஸ்ரேலைத் தோற்கடிக்கும் எதுவும் ஈரானியர்களுக்கு வெற்றியே.

Friday, 3 April 2015

பிரித்தானியாவின் Global Combat Ship பூகோள தாக்குதல் கப்பல்கள்

ஐக்கிய இராச்சியத்தின் கடற்படைக்கு  Type 26 Global Global Combat Ship என்னும் பூகோள தாக்குதல் கப்பல்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இணைக்கப்படவிருக்கின்றன. Frigate வகையைச் சேர்ந்த பூகோள தாக்குதல் கப்பல்கள் பலதரப்பட்ட செயற்பாகுகளைக் கொண்டவையாகும். Frigate வகைக் கப்பல்கள் நாசகாரிக் கப்பல்களிலும் பார்கச் சிறியவையாகும். இவற்றைத் தொடர்ந்து இன்னும் பதினைந்து ஆண்டுகளில் Type 27 Global Global Combat Shipகள் ஐக்கிய இராச்சியக் கடற்படைக்கு இணைக்கப்படவிருக்கின்றன.

Type 26 Global Combat Ships அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களைச் செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தரை நடவடிக்கைத் தேவைகளையும் இவை செய்யக் கூடியவை. முதலில் பதின்மூன்று Type 26 Global Global Combat Ships உருவாக்கப்படவிருக்கின்றன. அத்துடன் துருக்கி, ஒஸ்ரேலியா, இந்தியா, மலேசியா, நியூசீலாந்து, பிரேசில், கனடா ஆகிய நாடுகளுக்கும் இக்கப்பல்களை விற்பனை செய்யப்படவிருக்கின்றன. ஒரு கப்பல்  250 முதல் 350 மில்லியன் பவுண்கள் பெறுமதியானவை என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை Type 45 Destroyersகளிலும் பார்க்க மலிவானவையாகும். சிலவகைச் சிறப்புதாக்குதல்கள் விடுவிப்புக்கள் போன்றவற்றில் Type 26 Global Global Combat Ships நன்கு செயற்படக் கூடியவை என எதிர்பார்க்கப்படுகின்றது

பொதுவாக Frigate வகைக் கப்பல்கள் குறைந்த விலைகளில் உருவாக்கப்படுபவை. இவை நாசகாரிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் சிறியவையும் குறைந்த அளவு ஏவுகணைகளைக் கொண்டவையுமாகும். ஆனால் Frigate வகைக் கப்பல்கள் ஆழம் குறைந்த கடல்களிலும் கரையோரங்களிலும் திறமையாகச் செயற்படக் கூடியவை. Littoral Combat Ship என்னும் வகைக்கப்பல்கள் Frigate வகைக் கப்பல்களிலும் சிறியவை.

British Aerospace (BAe) என்னும் நிறுவனமும் Marconi Electronic Systemsஎன்னும் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய நிறுவனமான BAE Systems ஐக்கிய இராச்சியப் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து Type 26 Global Global Combat Shipsகளையும் Type 27 Global Combat Shipsகளையும் உற்பத்தி செய்கின்றன. இதற்கான முதல் திட்ட வரைபு 2005-ம் ஆண்டு செய்யப்பட்டது.

வேறு வேறு தாக்குதல் படைக்கலன்களையும் உணரிகளையும் தேவைக்கு ஏற்ப இணைக்கும் வகையில் Type 26 Global Combat Ships வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் எதிர்களின் ரடார்களுக்குப் புலப்படாத stealth தொழில்நுட்பமும் இதில் உள்ளது. அத்துடன் ஒரு உழங்கு வானூர்தியையும் எடுத்துச் செல்லக் கூடியது. இதில் 118 ஊழியர்களும் 72 படைவீரர்களும் பயணிக்கக் கூடியது.

Type 26 Global Combat Ships  5,400தொன் எடையும், 148மீட்டர் நீளமும் 19 மீட்டர் அகலமும் கொண்டது. Type 26 Global Global Combat Ships இல் மூன்று வேறு மாதிரிகள் உருவாக்கப்படவிருக்கின்றன. முதலாவது வகை நீர் மூழ்கி எதிர்ப்புக்களுக்கும், இரண்டாவது வகை விமான எதிர்ப்புக்களுக்கும், மூன்றாவது வகை பொது நடவடிக்கைகளுக்கும் பயன் படக்கூடியன.
நீர் மூழ்கி எதிர்ப்பு வகைகள் Sonar எனச் சுருக்கமாக அழைக்கப்படும் SOund Navigation And Ranging என்னும் தொழில் நுட்பத்தைக் கொண்டவை. இவற்றால் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டங்களைத் தொலைவில் இருந்தே இனம் காணமுடியும்.



விமான எதிர்ப்பு வகை Type 26 Global Global Combat Ships களில தொலைதூர மற்றும் நடுத்தர தூரம் பாய்ந்து சென்று விமானங்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் பொருத்தப் பட்டிருக்கும்

எல்லா வகைகளிலும் 127mm calibre துப்பாக்கிகளும்  சுருக்கமாக CIWS என அழைக்கப்படும்  phalanx close-in weapon systems இரண்டும் இரண்டு 30mm oerlikon KCB பொருத்தப் பட்டிருக்கும். oerlikon KCB என்பவையும் சிறு துப்பாக்கிகளாகும். Type 26 Global Global Combat Ships அறுபது நாட்கள் கடலில் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை அத்துடன் 11,000 கிலோ மீட்டர்கள் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...