Monday 28 March 2022

வெளிநாடு வாழ் தமிழர்கள் இலங்கையில் முதலிடலாமா?

  


நெசவு செய்யும் திறமைமிக்க தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் ஒரு நெசவுத்தறி போட கடன் கேட்டால் அவருக்கு கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் முன்வரலாம். இன்னொரு நெசவுத் தொழிலாளி தனது வருமானத்தில் தினமும் மது அருந்தி கைநடுக்கம் ஏற்பட்ட பின்னர் அவரால் போதிய அளவு நெய்ய முடியாத நிலையில் அவரது வருமானம் குறைந்து உணவிற்கு திண்டாடும் போது அவர் தனக்கு கடன் தரச் சொல்லி கேட்டால் யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். இலங்கையும் இனக்கொலைப் போருக்கு அளவிற்கு மிஞ்சி கடன் பட்டு பின் பட்ட கடனுக்கு வட்டி கொடுக்க புதிய கடன் பட்டு விட்டு மேலும் கடன் பட முடியாத நிலையில் அங்கு வந்து முதலீடு செய்யுங்கள் என்று இனக்கொலைக்கு உள்ளான இனத்தைச் சேர்ந்தவர்களை கேட்க முடியுமா? சொல்லுவார் சொல்ல கேட்ப்பார்க்கு மதியென்ன?

யோக்கியன் வாறான் செம்பை எடுத்து வை

எனக்கு தெரிந்த ஒருவர் இலங்கை நாணயம் பெறுமதி இழந்துள்ளமையால் அங்கு இப்போது முதலீடு செய்வது உகந்தது என எண்ணி முதலீடு செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தான் பாலமாக இருக்கத் தயார் என அறிவித்தவுடன் தன் முடிவை மாற்றிக் கொண்டார். பாலமே இந்தளவு கேவலமானதாக இருக்கையில் அதை நம்பி பயணித்தால் என்ன நடக்குமோ என அவர் அஞ்சுகின்றார். 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டு அதற்கும் அப்பால் சென்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என்றாராம் சுமந்திரன். 2009 நடந்த போரின் போது மருத்துவமனைகளும் சட்ட பூர்வமான குண்டு வீச்சு இலக்கு எனச் சொல்லிய கோத்தபாய ராஜபக்ச கூட்டிய கூட்டத்தில் தான் சுமந்திரன் இந்தக் கருத்தை முன்வைத்தார். பாலம் மட்டும் கேவலமானதல்ல பாலம் சொல்லும் படகான 13 ஓட்டை மிகுந்தது அதை நம்பி யாரையா இறங்குவார்? புலிகள் இனச்சுத்தீகரிப்பு செய்தனர் ஆனால் சிங்களவர் இனக்கொலை செய்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற யோக்கியரின் கூற்றை நம்பி யார் இலங்கையில் முதலீடு செய்வார்.

விடுதலை வேட்கைக்கு எதிராக சுமந்திரனின் சதியா?

இலங்கையில் தமிழரகளுக்கு சுதந்திரம் வழங்காமல் சிங்களத்தால் இழுத்தடிக்க முடியாது. சிங்களத்தின் அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் நிச்சயம் பொங்கி எழுவார்கள். தந்தை செல்வாவின் போராட்டத்தை அடக்குமுறையால் இல்லாமல் செய்தார்கள். பின்ன அதிலும் பார்க்க வலிமை மிக்க போராட்டம் வந்தது. அது போல சிங்களத்தை சிதறடிக்கக் கூடிய ஒரு போராட்டம் இனி எந்த நேரத்திலும் ஆரம்பமாகலாம். அடுத்த தீபாவளி, அடுத்த பொங்கல், அடுத்த ஆடி அமாவாசை எனப் பலவற்றைக் கேட்டு விரக்தியடைந்திருக்கும் மக்கள் செய்யும் கிளர்ச்சி அபாயகரமானதாக இருக்கும். புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்தால் அம் முதலீடு மக்கள் கிளர்ச்சிக்கு எதிரான அடக்கு முறையால் அழிக்கப்படும். அதனால் மக்கள் கிளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என சிங்களமும் சுமந்திரனும் கணக்குப் போடுகின்றார்கள். அடுத்த விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்கள் உதவி செய்யாமல் தடுப்பதற்காக சுமந்திரன் செய்யும் சதிதான் வெளிநாடு வாழ் தமிழர்களை முதலீட்டுக்கு அழைக்கின்ற செயலா?வ்

ஒரு நாளில் ஒரு இலட்சம் டொலர் இழப்பீடா?

இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு ஒருவர் ஒரு மில்லியன் டொலரை முதலீடு செய்யும் போது முதலில் டொலரை ரூபாவாக மாற்றும் போது ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பின்னர் ரூபாவின் பெறுமதி மேலும் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தால் முதலிட்டவருக்கு ஒரு இலட்சம் டொலருக்கு மேல் இழப்பீடு ஏற்படும். தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இனி வீழ்ச்சியடைய இடமில்லை. இலங்கையில் செய்த முதலீட்டை இலகுவில் மீண்டும் வெளிநாட்டுக்கு கொண்டு வர முடியாது. இலங்கைப் பொருளாதாரம் இனி மீழவும் எழும் (Rebound) என யாரும் சொல்லாத நிலையில் நிதித்துறையில் அறிவில்லாத சுமந்திரன் எந்த ஒரு நிதி ஆலோசனையும் பெறாமல் எப்படி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் செய்யும் முதலீட்டிற்கான பாலமாக தன்னை முன்னிறுத்த முடியும்?

தரம் தாழ்த்திய நிறுவனங்கள்

இலங்கையில் ஏற்கனவே முதலீடு செய்த பன்னாட்டு தனியார் முதலீட்டாளரகள் இலங்கைக்கு கொடுத்த கடனை எப்படி மீளப் பெறுவது என்பது தொடர்பாக பன்னாட்டு சட்ட நிறுவனமான White & Case LLP என்னும் பன்னாட்டு சட்ட நிறுவனத்தை அணுகியுள்ளனர். இலங்கையில் பொருளாதார சூழலை அடிப்படையாக வைத்து. S&P, Fitch, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கைய தரம் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவை இன்னும் இலங்கையின் தரத்தை மீளவும் உயர்த்த முன்னர் சுமந்திரன் ஏன் அங்கு முதலீடு செய்வது பற்றி சிந்திக்கின்றார்?  உலக நாடுகளுக்கான ஊழல் பட்டியலில் இலங்கை எத்தனையாவது இடத்தில் இருக்கின்றது என சுமந்திரனுக்கு தெரியுமா? பிரித்தானிய தொழிற்கட்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சுமந்திரனைச் சந்திக்கும் போது இலங்கைக்கு ஜீஎஸ்பி+ வரிச்சலுகையை நிறுத்தும் படி மேற்கு நாட்டு அரசுகளிடம் பரப்புரை செய்வது பற்றி பேசிய போது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தான் செய்ய மாட்டேன் எனச் சொல்லிய சுமந்திரன், மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க போராடிய சுமந்திரன் இப்போது இலங்கைக்கான முதலீட்டு தரகராக செயற்படுகின்றாரா?

அரசியல் உறுதிப்பாடில்லாத இலங்கை

ஒரு நாட்டில் முதலீடு செய்வதாயின் அங்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும். இலங்கையில் பொருட்கள் விலை ஏற ஏற மக்கள் அரசுக்கு எதிராக போராடுவது அதிகரிக்கும். அத்துடன் 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றினால் அதற்கு எதிராக பௌத்த அமைப்புக்களும் பிக்குகளும் ஆட்சிக்கு எதிராக கொதித்து எழுவர். வலிமையற்று தலையெடுக்க முடியாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் இனவாத தீயை மூட்டுவார்கள். கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது ஆட்சியாளர்களை சுட்டுக் கொல்லவும் சிங்களவர்கள் தயங்க மாட்டார்கள். அதனால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டு படைத்துறையினர் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம் உண்டு. இத்தகைய இடர்(Risk) மிகு சூழலில் எந்த முட்டாள் இலங்கையில் முதலீடு செய்ய பாலமாக இருப்பான்?

பணச்சலவைக்கு வழியா?

2009 ஆண்டில் நடந்த போரின் பின்னரும் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டது. இலங்கையில் பெருந்தொகை பணத்தைக் கொள்ளை அடித்து வைத்திருந்தவர்கள் அவற்றை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஒரு வழியாக அது இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. அதன் படி வெளிநாடு வாழும் இலங்கையர் ஒரு மில்லியன் டொலரை வெளிநாட்டு வங்கி ஒன்றில் இலங்கையில் கொள்ளை அடித்தவர்களின் பெயரில் வைப்பிலிட்டால் அதற்கு உரிய இலங்கை ரூபாக்களை கொள்ளையர்கள் அந்த வெளிநாட்டுப் பேர்வழியின் பெயரில் இலங்கையில் வைப்பிலிடுவார்கள். ராஜபக்சேக்களின் வெளிநாட்டு சொத்து பற்றி இந்த இணைப்பில் காணலாம்:

https://www.theguardian.com/world/2015/mar/20/sri-lanka-says-mahinda-rajapaksa-officials-hid-more-than-2bn-in-dubai

விளடிமீர் புட்டீனினதும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக பொருளாதார தடை என்னும் பெயரில் அவர்களின் சொத்துக்களை முடக்குவது போல் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இப்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருக்கும் அவர்களது பணத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இப்போது இன்னொரு முதலீட்டு அழைப்பு விடப்படுகின்றதா? அதற்கான தரகர் வேலையை பார்ப்பவர் யார்?

இலங்கை நடுவண் வங்கியும் மூலதனக் கணக்கும்

இலங்கை நடுவண் வங்கி இலங்கையில் இருந்து மூலதனம் வெளியேறுவதற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலங்கையில் முதலிடுபவர்கள் தேவை ஏற்படும் போது அந்த முதலீட்டை வெளியே எடுத்து வர முடியாது. திரவத்தன்மை (liquidity) குறைந்த முதலீட்டை சுமந்திரனின் முட்டாள்தனமான ஆலோசனையைக் கேட்ட்டு யாரும் செய்ய மாட்டார்கள்.

தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற இடத்தில் அவர் முதலீட்டுக்கு?

இனக்கலவரம் என்று அவ்வப்போது தோற்றுவித்து தமிழர்கள் சொத்தை கொள்ளை அடிப்பதையும் அழிப்பதையும் சிங்களவர்கள் தங்கள் பொழுது போக்காக கொண்டுள்ளனர். தமிழர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க அறிவுகெட்ட சுமந்திரனால் முடியுமா? இலங்கை அரசு தமிழர்களின் முதலீட்டை அரசுடமையாக்க மாட்டாது என சிங்களத்தின் வால் பிடியான சுமந்திரனால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? 

பழைய சத்தியஜித் ராயின் திரைப்படமொன்றில் ஒரு செல்வந்த வயோதிபர் கடும் நோய் வாய்ப்பட்டுவிட்டார். மருத்துவர் இனி ஆள் தப்பாது என்று சொல்லி விடுவார். அந்த நிலையில் அவரது குடும்பத்தினர் சோதிடரை அணுகுவார்கள் அவர் பார்த்துவிட்டு இவருக்கு ஆயுள் முடிந்து விட்டது ஆனால் ஒரு வழி இருக்கிறது என்றார். குடும்பத்தவர்கள் ஆவலுடன் என்ன எனக் கேட்கும் போது சோதிடர் சாதகத்தில் நல்ல மாங்கல்ய வலிமையுள்ள ஒரு பெண்ணை இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணின் பலனால் இவர் தப்புவார் என்பார்கள். அது போலத்தான் எந்த நேரமும் மண்டையைப் போடலாம் என்ற நிலையில் இருக்கும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சுமந்திரன் சொல்லும் அறிவுரை. ஆனால் புலம் பெயர் தமிழர்கள் வாழ வழியற்று இருக்கும் ஏழைப் பெண்களல்ல.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...