Monday 21 March 2022

ஆட்டம் இழப்பாரா இம்ரான் கான்?

 

ச்

பாக்கிஸ்த்தானின் நாடாளுமன்றமாகிய தேசிய சபையில் தலைமை அமைச்சர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2022 மார்ச் 28-ம் திகதி விவாதிக்கப்ச்படவுள்ளது. பாக்கிஸ்த்தானின் ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் அதன் படைத்துறையும் உளவுத்துறையும் மிக்கிய பங்கு வகிக்கின்றன. பாக்கிஸ்த்தானின் ஆட்சியின் வெளியுறவுக் கொள்கைக்கும் அதன் ஆட்சியாளர்களின் இருப்பிற்கும் தொடர்புண்டு. இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்பிய சுல்ஃபிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்காவைக் கடுப்பேத்திய இம்ரான்

இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்த்தானில் களம் அமைத்து அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தாக்குதல்களை நடத்தி வந்தது. பாக்கிஸ்த்தானில் சிஐஏ வைத்திருந்த தளம் 2011இல் வெளியேற்றப்பட்டது. 2020இல் அமெரிக்கா சடுமென ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் அமைக்க சிஐஏ விரும்பியது. அங்கிருந்து அல் கெய்தாவினர் உட்பட பல தீவிர வாத அமைப்புக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முக்கியமாக ஆளிலிவிமானத் தாக்குதல் நடத்த சிஐஏ விரும்பியது. ஆனால் இம்ரான் கான் அதற்கு மறுத்து விட்டார். இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகளால் ஒரு படையணியாக மாறிவிட்ட சிஐஏயிற்கு பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் மிக அவசியமாக தேவைப்படுகின்றது. 2021 ஏப்ரலில் சிஐஏ இயக்குனர் வில்லியம்ஸ் பேர்ன் பாக்கிஸ்த்தான் சென்றிருந்த வேளையில் அவரைச் சந்திக்கக் இம்ரான் கான் மறுத்திருந்தார். 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படையினர் உக்ரேனை ஆக்கிரமிக்க 25-ம் திகதி இம்ரான் கான் திட்டமிட்டபடி தனது இரசியப் பயணத்தை மேற் கொண்டு அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்தித்து உரையாடினார்.

படைத்துறையுடன் பகைமை

பாக்கிஸ்த்தானின் படைத்துறையினரின் ஆதரவுடன் தான் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு படைத் துறையினருடன் நல்லுறவு இல்லை எனவும் சொல்லப்படுகின்றது. இம்ரான் கானின் தகவற் துறை அமைச்சர் ஃபவார்ட் சௌத்திரி நம்பிக்கை இல்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அவர்களது PTI கட்சியின் ஆதரவாளர்களில் ஒரு மில்லியன் பேர் அங்கு திரண்டிருப்பார்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அவர்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என மிரட்டியிருந்தார்.

களமிறங்கிய அமெரிக்க மனித உரிமை அமைப்பு

எங்காவது ஆட்சியில் இருப்பவர்கள் அமெரிக்காவிற்கு வேண்டப்படாதவர்களாக மாறும் போது அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் அங்கு களமிறங்குவது வழக்கம். இம்ரான் கானிற்கு எதிராகவும் அமெரிக்காவின் மனித உரிமைக் கண்காணிப்பகம் (HRW) செயற்படுகின்றடு. அது இம்ரான் கானின் கட்சியினர் மேல் மிரட்டல், ஆள் கடத்தல் எனப் பல குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்களாட்சி முறைமைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அது எந்தக்காலத்தில் அங்கு நடந்ததோ தெரியவில்லை!

யோக்கியவான் இம்ரான்

தன்னை பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்படி ஆலோசனைகள் வழங்கினார்கள் ஆனால் கையூட்டு கொடுத்து ஆட்சியை தக்கவைப்பது தன் கொள்கையல்ல என்றார் இம்ரான் கான். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தாம் நடுநிலை வகிப்பதாக பாக்கிஸ்த்தானியப் படையினர் தெரிவித்தமையை இம்ரான் கான் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர்கள் நல்லோர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதே அல்லாவின் ஆணை என்கின்றார் இம்ரான். அத்துடன் நிற்கவில்லை உணர்ச்சியற்ற மிருகங்கள் மட்டுமே நடுநிலை வகிக்கும் என்றார் இம்ரான். தனக்கு எதிராக திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக மீண்டும் தன்னிடம் வருவார்கள் என்றார் இம்ரான் கான்.

சிதறிக் கிடக்கும் உதிரிக் கட்சிகள்

இம்ரான் கானை எதிர்த்து நிற்பவர்கள் பாக்கிஸ்த்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷரிஃப், பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜர்தாரி, ஜமியத் உலெமா ஐ இஸ்லாம் கட்சியின் தலைவர் ரஹ்மான் ஆகியோராகும். முஸ்லிம் லீக் கட்சியிடம் 64 உறுப்பினர்களும், பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியிடம் 43 உறுப்பினர்களும் உள்ளனர். எதிர்க்கட்சிகள் இம்ரான் கானைப் பதவியில் இருந்து அகற்ற தமது வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டுள்ளனர். இம்ரான் கானின் PTI இடம் 116 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருபது பேர் கட்சி மாறியுள்ளனர். ஏனைய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 120 உறுப்பினர்கள் உள்ளனர். இம்ரான் கான் பதவியில் தொடர்வதற்கு பல்வேறு மாநிலக் கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க வேண்டும். இம்ரான் கான் தமது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை என அவரது கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இம்ரான் கானின் ஆளும் PTI கட்சியில் 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அறுதிப் பெரும்பான்மைக்கு 175 உறுப்பினர்கள் தேவை கூட்டணி  மேற்பட்ட ஆளும் கட்சியான இம்ரான் கானின் PTI என அழைக்கபடும் Tehriik-e-Insaf கட்சியின் நாடாளுமனற உறுப்பினரள் இம்ரானுக்கு எதிரான நம்பிக்கை இல்லத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது என முடிவு செய்தமை அவரது ஆட்சி கவிழ்வதை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டது. ஆனாலும் அவரது கட்சி வேறு ஒருவரை தலைமை அமைச்சராக்கி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு உண்டு. பொதுவாக ஆட்சி மாற்றம் நம்பிக்கையில்லா பிரேரணைகள் மூலம் பாக்கிஸ்த்தானில் நடப்பதில்லை. படையினர் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் வழமை. பாக்கிஸ்த்தான் எதிர் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நடுவில் அங்கு மக்களாட்சிக்கு விரோதமான செயல் நடப்பது நாட்டுக்கு உகந்தது அல்ல என படையினர் உணர்ந்துள்ளார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...