Monday 9 December 2013

சீனாவிற்கு ஆபத்தாகும் அமெரிக்க ஈரானிய உறவு

மத்திய கிழக்குத் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் கொள்கையில்  உலக எரிபொருள் விநியோகம், இஸ்ரேலின் பாதுகாப்பு, பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கர வாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை, பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களின் பரம்பலைத் தடுத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

அண்மைக் காலங்களாக அமெரிக்காவின் நட்புநாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியா, எகிப்து ஆகியவை அமெரிக்காவின் மத்திய கிழக்கு தொடர்பான கொள்கை தமக்குப் பாதகமாக மாறுவதாக உணர்கின்றன. இந்த நாடுகளின் ஊடகங்கள் இதை அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றன.சவுதியும் எகிப்தும் இரசியாவுடன் தமது நட்பை வளர்க்க முயல்கின்றன. 

சிரியப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை அங்கு இருக்கும் வேதியியல் படைக்கலன்களை அழிப்பது மட்டுமே. அங்கு நடக்கும் மோதல்கள் பற்றியோ அங்கு ஒரு இலட்சத்தையும் தாண்டிப் போயுள்ள உயிரழப்புக்களைப்பற்றியோ அமெரிக்கா கவலைப்படவில்லை. 

ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் தற்போது ஒன்றிற்கு ஒன்று அதிகம் தேவைப்படுகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை ஈரானைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்தப் பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்டால் ஈரானிய மக்கள் பெரிய சுமையில் இருந்து விடுபடுவார்கள். ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்காக சில விட்டுக் கொட்டுப்புக்களைச் செய்து ஈரான் அமெரிக்காவுடன் உறவை வளர்க்க ஈரான் விரும்புகிறது. 

ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டால் உலகில் எரிபொருள் விலை குறைந்து உலகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதாலும் ஈரானிற்கு அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவு ஏற்றுமதியைச் செய்ய முடியுமமென்பதாலும் அமெரிக்காவிற்கு ஈரானைத் தேவைப்படுகின்றது. மேலும் அமெரிக்காவும் ஈரானும் உறவில் நெருங்கி வந்தால் அது பல இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களைப் பலவீனப் படுத்துவதுடன் இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். 

அமெரிக்காவும் ஈரானும்  தம் நிலைப்பாட்டில் செய்துள்ள மாற்றங்கள் நாளடைவில் மேம்பட்டு ஒரு கேர்ந்திரோபாய பங்காண்மையாக மாறும் சாத்தியம் உண்டு. இதற்கு பாலஸ்தீனப் பிரச்சனை தடையாக இப்போது இருகின்றது. இத் தடையை  நீக்க பாலஸ்த்தீனத்தில் இரு அரசுத் தீர்வை அமெரிக்கா கொண்டுவரவேண்டும்.

1970களில் அமெரிக்காவும் ஈரானும் சவுதி அரேபியாவும் கேந்திரோபாயப் பங்காளிகளாக இருந்து கொண்டு சோவியத் ஒன்றியத்திற்கும் அதன் நட்பு நாடுகளாக இருந்த சிரியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளிற்கும் எதிராக ஒரு கேர்திரோபாய சமநிலையைப் பேணிக்கொண்டிருதன. ஈரான் மன்னாராக இருந்த ஷா மோசமான சுரண்டல் ஆட்சியைச் செய்து கொண்டிருந்த படியால் அங்கு மதவாதிகள் புரட்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றி ஈரானை அமெரிக்காவின் மோசமான எதிரி நாடாக மாற்றினர். பின்னர் காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அமெரிக்காவின் கேர்ந்திரோபாய நட்பு நாடாக மாற்றப்பட்டது. இப்போது ஜெனிவாவில் நடக்கும் ஈரானான பேச்சு வார்த்தையின் பின்னர் அமெரிக்காவின் பங்காளியாக ஈரான் மாறினால் அமெரிக்காவால் இலகுவாக ஹோமஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த முடியும். இதனால்  சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் மற்ற மூலப் பொருள் விநியோகத்தையும் ஆபிரிக்காவிற்க்கான சீன ஏற்றுமதியையு்ம் நினைத்த நேரத்தில்  இலகுவாகத் துண்டிக்க முடியும். தற்போது அமெரிக்கா பாஹ்ரெய்னில் இருக்கும் தனது கடற்படைத் தளத்தின் மூலம் ஹோமஸ் நீரிணையைப் பாதுகாத்துவருகின்றது. சீனா பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தை தனது நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கின்றது. அதில் இருந்து கொண்டு ஹோமஸ் நீரிணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரானுடன் சீனா இணைய வேண்டும். ஆனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை சீனா இரத்துச் (வீட்டோ) செய்யாதது கடும் அதிருப்தியை அளித்தது. இதனால் சீன ஈரானிய உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்க ஈரானிய கேந்திரோபாய இணைவு சீனாவிற்கு ஆபத்தாக முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...