Saturday 27 April 2013

செங்கோடு தாண்டிய சிரியாவும் சிந்திக்கும் அமெரிக்காவும்

சிரியாவின் ஆட்சியாளர்களின் படையினர் வேதிப்படைக்கலன்களை (chemical weapons) தமது உள்நாட்டுப் போரில் பாவித்தால் அது செங்கோடு தாண்டியது போலாகும் என்று அமெரிக்கா 2011இல் சிரிய அதிபர் அல் அசாத்தை எச்சரிந்து இருந்தது. இப்போது அல் அசாத் ஆதரவுப் படையினர் வேதிப்படைக்கலன்கள் பாவித்தமைக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா ஏன் தாமதிக்கிறது?

அமெரிக்கத் தயக்கம் ஏன்?
அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னரும் சிரியாவில் ஒரு படைத்துறைத் தலையீட்டைச் செய்யவும் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கவும் அமெரிக்கா காட்டும் தயக்கம் அதனது மத்திய கிழக்கு நட்பு நாடுகளையும் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. துருக்கி, கட்டார், சவுதி அரேபியா ஆகிய அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் சற்று அதிருப்தியடைந்துள்ளன. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனும் உளவுத்துறையான சிஐஏயும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களிற்கு படைக்கலன்களை வழங்க விடுத்த வேண்டுகோளை அமெரிக்க நிர்வாகமான வெள்ளை மாளிகை மறுத்து விட்டது. பராக் ஒபாமாவின் நிர்வாகம் படைத்துறையிலான தலையீட்டிற்கும் படைக்கலன்கள் வழங்குவதற்கும் காட்டும் தயக்கத்தின் முக்கிய காரணங்கள்:

1. பஷார் அல் அசாத்தின் பின்னர் வரும் ஆட்சியாளர்கள் இசுலாமிய அடிப்படைவாதிகளாக இருக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
2. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கும் படைக்கலன்கள் அவர்களுக்குள் ஊடுருவியிருக்கும் அல் கெய்தா போன்ற தீவிரவாத அமைப்பினரின் கைகளுக்குப் போவதுடன் அவற்றை இயக்கும் பயிற்ச்சியையும் அவர்களுக்கு வழங்கிவிடும். இதில் முக்கிய இடம் பெறுவது விமான எதிர்ப்பு ஏவுகணைகள்.
3. சீனா, இரசியா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு தமது தீவிர ஆதரவைக் காட்டுகின்றன. இரசியாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சிரியாவிற்கு எதிராகக் கொண்டுவந்த இரு தீர்மானங்களை இரத்துச் செய்து விட்டன. தனது ஒரே ஒரு படைத்தளம் உள்ள நாடான சிரியாவில் இரசியா மிகப் புதிய தர விமான எதிர்ப்பு முறைமையை நிறுவியதுடன் தனது நிபுணர்களையும் அங்கு சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இது சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்களை கடினமாக்கியுள்ளது.
4. சிரியாவில் அமெரிக்காவின் நடவடிக்கையையும் இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரான ஒரு அமெரிக்கச் செயற்பாடாக இசுலாமியத் தீவிரவாத இயக்கங்கள் பரப்புரை செய்யலாம்.
5. ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் விட்ட தவறுகளை குறிப்பாக ஈராக்கில் போர் தொடுத்தமை, தானது நிர்வாகம் செய்யக் கூடாது என்பதில் ஒபாமா கவனமாக இருக்கிறார். 

சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலங்கள் வழங்குவதிலும் சிரியாவில் தலையிடுவதிலும் அமெரிக்க நிர்வாகம், படைத்துறை, உளவுத்துறை ஆகியவற்றிடையே உள்ள முரண்பாடு போல ஐரோப்பிய நாடுகளிடையும் முரண்பாடு இருக்கிறது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுவதில் பிரான்சும் பிரித்தானியாவும் தீவிரம் காட்டுகின்றன. ஆனால் ஜெர்மனியும் ஸ்கண்டினேவிய நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் விரைவில் இது பற்றிக் கூடி முடிவெடுக்க இருக்கின்றனர். இவர்கள் ஒரு மனதாக முடிவெடுக்காவிடில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனித்தனியாக தமது முடிவுகளை எடுத்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவலாம்.

கவனமாகக் காய் நகர்த்தும் அசாத்
சிரிய அதிபர் மருத்துவர் அசாத் தனது காய்களைக் கவனமாக நகர்த்துகிறார். முதலில் முக்கியத்துவமற்ற பிரதேசங்களை கிளர்ச்சிக்காரர்களுக்கு விட்டுக் கொடுத்தார். அவற்றை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் யாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது என்ற முரண்பாட்டிலும் கிளர்ச்சிக்காரர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. பின்னர் அசாத் தனது வேதிப்படைகலன்கள் (chemical weapons)கவனமாகவும் மிகவும் குறைந்த அளவிலும் பாவிக்கிறார். மோதும் இருதரப்பினரும் தமது கட்டுப்பாடுப் பிரதேசங்களுக்குள் ஊடகர்களை அனுமதிப்பதில்லை. ஆரம்பத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ஆனால் தாம் கைப்பற்றிய சிரியப் படையினரைக் கொடுமைப்படுத்துவது, தம்மிடம் அகப்பட்ட ஆளும் அலவைற் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களைக் சித்திரவதை செய்வது, கிருத்தவர்களைக் கொடுமைப்படுத்துவது, கிருத்தவத் தேவாலயங்களை அழிப்பது போன்றவை அம்பலமானதும் அவர்கள் தமது பிரதேசத்தில் ஊடகர்களை அனுமதிப்பதில்லை.வேதிப்படைக்கலன்கள் பாவித்ததை உறுதி செய்ய பாவித்த இடத்தில் இருந்து மண்ணை நம்பிக்கையானவர்கள் மூலம் பெற்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

அசாத் வேதிப்படைக்கலன்கள் (chemical weapons) பாவிப்பதாக இஸ்ரேல் செய்தி வெளியிட்டது, அது உறுதி செய்யப்படவேண்டும் என்றது அமெரிக்கா. பின்னர் பிரித்தானியாவும் பிரான்சும் அசாத் வேதிப்படைக்கலன்களைப் பாவிப்பதாக தெரிவித்தன. மீண்டும் அமெரிக்கா அது உறுதி செய்யப்படவேண்டும் என்றது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்துவிட்டவுடன் ஜோர்தானிற்கு அமெரிக்கா தனது வேதிப்படைக்கலன்கள் (chemical weapons) தொடர்பான நிபுணர்களை அனுப்பி வைத்தது.  இப்படிப்பட்ட அமெரிக்காவிற்கு சிரியாவில் வேதிப்படைக்கலன்கள் (chemical weapons) பாவிக்கப்படுவதை முதலில் அறிவித்திருக்க வேண்டும். இறுதியில் சரின் வாயுக் குண்டுகள் இரண்டு இடங்களில் பாவிக்கப் பட்டதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றது அமெரிக்கா. ஆனால் தமக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள்தான் வேதிப்படைக்கலன்கள் பாவித்ததாக சிரிய ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அமெரிக்க நிர்வாகம் வேதிப்படைக்கலன்கள் பாவித்தமைக்கான ஆதாரங்கள் மேலும் தேவைப்படுவதாகச் சொல்கிறது. சிரிய ஆட்சியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாவித்தமைக்கு இன்னும் ஒரு காரணம் இருக்கலாம். அசாத் தான் வேதிப்படைக்கலன்கள் பாவித்தால் அதை எப்படி மேற்கு நாடுகள் கண்டறியும் என்பதையும் அதற்கு அவை எப்படி பதில் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் சோதித்துப் பார்க்கவே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒரு தாக்குதலை மேற்கொண்டார்.

தயக்கத்தின் பின்னர் தீவிரம்
தயக்கம் காட்டி வந்த அமெரிக்கா ஜோர்தானிய அதிபரை வாஷிங்டனுக்கு அழைத்திருப்பது அது ஒரு தீவிர நடவடிக்கையை நோக்கி நகர்கிறது என்பதையே காட்டுகிறது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...