Saturday 16 March 2013

கருணாநிதியின் அடுத்த நாடகம் தயார்

2009 நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் உண்ணாவிரத நாடகமாடி கருணாநிதி வெற்றியீட்டினார். தமிழ்நாடு சட்ட சபையில் எதிர்கட்சித் தலைவர் பதவி கூடக் கிடைக்காத அளவிற்கு தோல்விகண்ட கருணாநிதிக்கு தனது குடும்பத்தின் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ள 2014இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

2009ஐப் போலவே நன்கு திட்டமிட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதை தன் குடும்ப ஊடகங்களின் உதவியுடன் உண்மைகளை மறைத்து தனது வாக்கு வங்கியின் வாக்காளர்களையாவது திருப்திப்படுத்தி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கருணாநிதி இனிவரும் நாட்களில் காங்கிரசுக் கட்சியின் நடுவண் அரசை கடுமையாகத் திட்டி தன்னை 2009 ஏமாற்றி இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரசு அரசு துரோகம் செய்துவிட்டது என்று அழுது தீர்க்கப் போகிறார். பின்னர் தான் தனது ஈழ உடன் பிறப்புக்களிற்கு துரோகம் செய்த காங்கிரசுக் கட்சியுடன் உறவை முறித்து கொண்டு நடுவண் அரசில் இருந்து வெளியேறி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவார். இவையாவும் காங்கிரசுக் கட்சியின் ஆசியுடன் நடைபெறும்.

கருணாநிதியின் நாடகத்தின் உச்சக் கட்டம் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியினரும் தமது கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் தமிழ்நாடு மாநில காங்கிரசு கட்சியை ஆரம்பித்து கருணாநிதியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். விஜயகாந்தையும் இதில் இணைத்துக் கொள்ளலாம். பின்னர் மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களுடன் கருணாநிதி இணைந்து தனது குடும்பத்தினருக்கு அமைச்சுப் பதவியைத் தேடிக்கொள்வார்.

ஆனால் கருணாநிதியின் நாடகம் இம்முறை பலிக்காமல் இருக்க ஜெயலலிதா கடும் முயற்ச்சி எடுப்பார். ஈழத் தமிழர்களுக்கு தான் ஆதரவு போல் காட்டிக் கொள்வார்.

இவை எதனாலும் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவால் நன்மை ஏற்படுவதாயின் இந்திய நடுவண் அரசில் நெடுமாறன் ஐயாவைப் போல் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், சீமானைப் போல் ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் வைக்கோவைப் போல் ஒருவர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் வரவேண்டும். அவர்கள் இந்தியாவின் தென்மண்டலத்தில் இருக்கும் தமிழின விரோதப் பூனூல்களை அகற்ற வேண்டும்.

13-03-2013-ம் திகதி வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரசில் Competitive caring about Sri Lanka என்னும் தலைப்பில் கட்டுரை எழுதிய சுசிலா ரவீந்திரநாத் மீளமைக்கப்பட்ட டெசோவோ பாலச்சத்திரனின் குண்டு துளைத்த உடலைப் பார்த்து எழுந்த உணர்வலையோ ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்கிறார். தமிழ்நாட்டுக் அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு ஈழத் தமிழர் ஆதரவுக் குரல்களை உயர்த்துகின்றன என்கிறார். ஆனால் அவர் கட்டுரையை முடித்த விதம் கூர்ந்து கவனிக்கத் தக்கது. தமிழ்நாடு என்னதான் ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் உணர்ச்சி வசப்பட்டாலும் அது தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளைப் பாதிக்காது என்பதுதான் கடந்த கால அனுபவம் கூறும் உண்மை என்கிறார். ஆனால் இந்த முறை இது நிலைமையை மாற்றுமா என்ற கேள்விதான் அவரது இறுதி வரி.

இப்போது தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்தும் போராட்டம் இனி எத்திசையில் பயணிக்கும் என்பது தான் சுசீலாவின் கேள்விக்கான பதிலைக் கூறும்.

இங்கு இன்னும் ஒன்று கவனிக்க வேண்டும். சுசிலாவின் கட்டுரைக்குப் பின்னூட்டமிட்ட பேராசிரியர் கோபன் மகாதேவா தனது பின்னூட்டத்திற்கு பாச உணர்ச்சி ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் பயன் ஏதுமில்லை எனத் தலைப்பிட்டுள்ளார்.

SENTIMENTS APPRECIATED, BUT NETT RESULTS ZERO

The above article by Sushila Ravindranath clearly summarises the current sentiments in Tamil Nadu about the undue delay by the Sri Lanka government in solving the differential problems of the Tamil-speaking minorities in Sri Lanka. Her simplicity is excellent. In my view, as seen over the last 3-4 decades, the linguistic brotherhood and sentiments expressed by the Tamil Nadu Tamils to the Tamil-speaking population of Sri Lanka are greatly appreciated, but the nett results as far as the solution of their internal political problems are concerned have been, on the whole, ZERO. This is unfortunately so because, they have to make their final contributions through India's Central Government as a part of trying to solve their own problems in India, and hence their contributions are diluted, distorted, and sometimes turn negative.

தமிழ்நாட்டு மக்கள் என்னதான் கொதித்தாலும் அதன் செயற்பாடு நடுவண் அரசின் மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். நடுவண் அரசினூடாக ஈழப் பிரச்சனை அணுகப்படும் போது அது குறைக்கப்படுகிறது, திரிபு படுத்தப் படுகிறது, சில வேளைகளில் எதிர்மறையாக்கப்படுகிறது என்கிறார் பேராசிரியர் மகாதேவன்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...