Sunday 13 January 2013

இலங்கையில் அரசமைப்பு நெருக்கடி(constitutional crisis) உருவாகுமா?

இலங்கையின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி விட்டு இலங்கை பாராளமன்றம் தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 255 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைப் பாராளமன்றத்தில் 155 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். தொடர்ந்து தலைமை நீதியரசர் ஷிரானியைப் பதவி நீக்கம் செய்தார் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

பன்னாட்டு நீதியாளர்கள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, பொது நலவாய நாடுகள், மற்றும் பல மனித உரிமை அமைப்புக்களும் தலமை நீதியரசரைப் பதவி நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக தமது கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இலங்கை அரசின் எல்லா உறுப்புக்களும் தமது கைப் பொம்மைகளாகச் செயற்பட வேண்டும் என்ற அதிகார வெறியில் இலங்கையை ஆளும் மஹிந்த ராஜபக்சவும் அவரது உடன் பிறப்புக்களும் இருக்கின்றன என்று கருதப்படுகிறது.

ஷிரானிக்கும் ராஜபக்சவிற்கும் இடையிலான மோதலின் பின்னணி
இலங்கையின் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மன்னாரில் ஆரம்பித்தது. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் மன்னார் நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக கோத்தபாய ராஜ்பக்சவிற்கு நெருக்கமானவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனிற்கு மன்னார் நீதிபதி அழைப்பாணை விடுத்தார். இது நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை ஆரம்பித்து வைத்தது. இலங்கை நீதிச் சேவையின் செயலாளர் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார். உயர் நீதிமன்றத்திற்கு மஹிந்தவின் செயலாளருக்கு மிகவும் வேண்டியவர் ஒருவரை நியமிக்கும்படி மஹிந்த செய்த பரிந்துரைய பிரதம நீதியரசர்  ஏற்றுக் கொள்ளவில்லை.  இது மஹிந்த-ஷிரானி மோதலை மேலும் வளர்த்தது.  திவி நெகும சட்டம் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியது. திவி நெகும என்பது மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து மஹிந்தவின் இன்னொரு உடன் பிறப்பான பசின் ராஜபக்சவின் கீழுள்ள பொருளாதாரத் துறை அமைச்சுக்கு கொடுக்கும் சட்டம். இச் சட்ட மூலத்தின் 27 வாசகங்களில் 16 இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சில வாசகங்கள் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாசகத்தை நிறைவேற்றுவதற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப் படவேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது ஆட்சியாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. விளைவு பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி விலக்கும் பிரேரணை பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

என்ன இந்த  அரசமைப்பு நெருக்கடி(constitutional crisis)?
செயற்பாட்டுத் தத்துவங்கள் தொடர்பாகவோ அல்லது அரசியலமைப்பு யாப்புத் தொடர்பாகவோ தீர்வுகள் எட்ட முடியாத நிலை அரசமைப்பு நெருக்கடி எனப்படும். இது அரசின் உறுப்புக்களிடயே முரண்பாடுகள் ஏற்பட்டு ஒரு செயற்படாத நிலை உருவாகுவதாகும். அப்போது அரசமைப்பால் உறுதிசெய்யப்பட்ட கட்டுக்கோப்பும் சமநிலையும் கடுமையாகக் கலைந்து போகும். (A serious dislocation of country's constitutionally-guaranteed checks and balances.)

அரசமைப்பு நெருக்கடி உதாரணங்கள்

1. ஈரான்: 1953-ம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையும் பிரித்தானிய உளவுத் துறையும் Operation Ajax என்னும் குறியீட்டுப் பெயருடன் ஈரான் மன்னர் ஷாவிற்க்கு எதிராக செயற்பட்ட பிரதம மந்திரி  மொஹமட் மொஸெடேக்கின் அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தது. அப்போது ஈரானியப் படைத்துறையுனரும் மன்னர் ஷாவுடன் இணைந்திருந்தனர். மன்னர் ஷாவின் செயற்பாடுகள் அரசமைப்புக்கு முரணாக இருந்தன. பிரதம மந்திரி பதவி விலக மறுத்ததால் அரசமைப்பு நெருக்கடி ஒன்று அங்கு உருவானது. படைத்துறையினர் ஷாவுடன் இருந்தபடியால் அவர் தனது மன்னர் தன் செயற்பாடுகளைச் சரியானதாகப் பிரகடன்ப்படுத்திக் கொண்டார்.
 
2. பாக்கிஸ்த்தான்: 1997இல் பாக்கிஸ்த்தானியப் பிரதம மந்திரியாக இருந்த நவாஸ் ஷரிஃப் செய்ய முனைந்த அரசியலமைப்புத் திருத்தத்தை அப்போது தலைமை நீதியரசர் நிராகரித்திருந்தார். அவரைப் பதவி நீக்கம் செய்யும் படி குடியரசுத் தலைவருக்கு ஷரிஃப் உத்தரவிட்டார். அதை குடியரசுத் தலைவர் நிராகரிக்க குடியரசுத்தலைவரைப் பதவி நீக்கும் நடவடிக்கையில் ஷரிஃப் ஈடுபட்டார். மூன்று துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் அப்போது பாக்கிஸ்தானில் ஒரு அரசமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. பாக்கிஸ்தானிய அரசியலில் பெரும் பங்கு வகிக்கும் படைத்துறயினர் அப்போது தலையிட்டு நெருக்கடியைத் தவிர்த்தனர். பிரதம மந்திரி ஷரிஃப் பதவி விலகினார்.

3. தாய்லாந்து: 2006-ம் ஆண்டு தாய்லாந்தில் பாராளமன்றம் தெரிவு செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டபோது பிரதம மந்திரி பதவி விலக மறுத்தார். அப்போது பல நீதி மன்றங்கள் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட தீர்ப்புக்களை வழங்கின.

4. கொங்கோ: 1960-ம் ஆண்டு கொங்கோவில் பிரதம மந்திரியும் குடியரசுத் தலைவரும் ஒருவரை ஒருவர் பதவி நீக்கம் செய்ததால் பெரும் நீதி மற்றும் நிர்வாக நெருக்கடி ஏற்பட்டது. அப்பொது படைத் தளபதி இருவரையும் பதவி நீக்கம் செய்து நிலமையைச் "சீர்" செய்தார்.

இலங்கை அரசமைப்பின் படி பாராளமன்றம் மட்டும் சட்டத்தை இயற்றலாம. சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் உரிமை நீதித் துறையிடம் மட்டுமே இருக்கிறது. பாராளமன்றம் இயற்றிய ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு இசைவானதா எனத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதித் துறையிடமே இருக்கிறது. பாராளமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தை பாராளமன்றம் நினைத்திராத ஒரு வியாக்கியானத்தை நீதித் துறை செய்தால் அதைப் பாராளமன்றம் நிராகரிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் ஒரு பிழையான வியாக்கியானத்தைக் கொடுத்தாலும் அதில் பாராளமன்றம் தலையிட முடியாது. வேண்டுமானால் இன்னும் ஒரு சட்டத்தை தான் நினைத்த படி இயற்றலாம். தலைமை நீதியரசரின் பதவி நீக்கம் தொடர்பாக பாராளமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் சட்டபூர்வமானதல்ல என்று இலங்கை உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கைப் பாராளமன்ற அவைத் தலைவரும்(சபாநாயகர்) மஹிந்த ராஜபக்சவின் அண்ணருமான சமல் ராஜபக்ச தெரிவித்தமை ஒரு அரசமைப்பு நெருக்கடியை உருவாக்கும் எனப் பலரும் கருதுகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பாராளமன்றம் தலைமை நீதியரசரை பதவி நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. மஹிந்த ராஜபக்சவும் அவரைப் பதவி நீக்கம் செய்தார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ளது ஒரு தத்துவார்த்த முரண்பாடே.  தற்போது இலங்கையில் ஏற்பட்டுல்லது நீதித் துறைக்கும் பாராளமன்றம் எனப்படும் சட்டவாக்கற்துறைக்கும் இடையில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடு மட்டுமே. நீதித் துறையில் உள்ள கணிசமான தொகையினரைத் தவிர மற்ற எல்லா அரச துறையினரும் மஹிந்த ராஜபக்சவின் சுட்டுவிரல் அசைவின் கீழ் செயற்படுகின்றன. இலங்கையில் இனி எவரும் தலைமை நீதியரசர் பதவியை ஏற்க மாட்டோம் என நீதித்துறையைச் சேர்ந்த எல்லோரும் ஒன்றுபட்டு நின்றால் ஒரு நெருக்கடி உருவாகலாம். மேலும் யாராவது ஒருவர் தலைமை நீதியரசர் பொறுப்பை ஏற்றபின்னர் நீதித் துறையைச் சேர்ந்த எல்லோரும் ஒன்றுபட்ட்டு அவரின் கீழ் செயற்பட மாட்டோம் என்று நின்றால் ஒரு நெருக்கடி ஏற்படலாம். இவை இரண்டில் முதலாவது நிகழ மாட்டாது. இரண்டாவதும் ஏற்படாது. ஆனால் நீதித் துறையில் இருக்கும் கணிசமான நீதியரசர்களும் சட்டவறிஞர்களும் புதிய தலைமை நீதியரசரைப் புறக்கணிக்கலாம். அதில் சில முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அது ஒரு அரசமைப்பு நெருக்கடியாக மாட்டாது.

மீண்டும் நீதிமன்றம் செல்வார் தலைமை நீதியரசர்
தலைமை நிதியரசர் ("முன்னாள்") ஷிரானி பண்டாரநாயக்க பதவி விலக மறுக்கலாம். அவரின் சட்ட ஆலோசகர்கள் அவர் பதவி விலகுவாரா என்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தன்னைப் பதவி நீக்க மஹிந்த அனுப்பிய கடிதத்தை ஷிரானி உச்ச நீதி மன்றத்தில் இனிச் சமர்ப்பித்து அது செல்லுபடியற்றது எனக் கோரலாம். அப்போது என்ன நடக்கும்? நீதித் துறையினர் தெருவில் இறங்கிப் போராடினால் அதிலும் அதிகமான தொகையினரை அதுவும் பொதுமக்கள் போல் படையினரை தெருவில் இறக்க மஹிந்தவால் முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...