பெப்ரவரி 4-ம் திகதி இலங்கையின் சுதந்திர தினவிழாவில் உரையாற்றும் போது இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இரு பெரும் கருத்துக்களை வெளிட்டார்: 1. இலங்கை இனப்பிரச்சனைக்கான இறக்குமதி செய்யப்பட்ட தீர்வில் தங்கியிருக்க முடியாது. 2. இனப் பிரச்சனைக்கான தீர்விற்கு வெளியார் செல்வாக்கைப் பாவிக்க முடியாது. இதில் முதலாவதான் இறக்குமதி செய்யப்பட்ட தீர்வு எனக் குறிப்பிட்டது அரசியல் முதுபெரும் நரியான ஜே. ஆர் ஜயவர்த்தனவும் அரசியன் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தியும் 1987இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தையே. மேலும் ராஜபக்ச இரண்டாவதாகக் குறிப்பிடும் வெளியார் செல்வாக்கு என்பது மேற்குலக நாடுகளாலும் இலங்கைமீது மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு தேவை எனக் கொடுக்கப்படும் அழுத்தம். அதாவது மஹிந்த ராஜபக்ச 13 தமிழர்களுக்குக் கிடையவே கிடையாது என்கிறார்.
பாவம் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பயணத்தின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது இலங்கை அதிபர் ராஜபக்ச தன்னிடம் 13-ம் திருத்தத்தின் மேல் சென்று தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார் என்றார். அதற்குப் பின்னர் ராஜபக்ச தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தான் அப்படி ஒரு வாக்குறுதி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கு வழங்கவில்லை என்றார். அப்படியென்றால் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் தான் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் செய்தது போல் யாரோ யாருக்கோ எழுதிய வைத்ததை கொழும்புப் பத்திரிகையாளர் மாநாட்டில் வாசித்தாரா? அல்லது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொய் சொன்னாரா? அல்லது மஹிந்த பொய் சொல்கிறாரா? இதுவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மௌனமாக இருப்பது ஏன்? கிருஷ்ணா 13இற்கு மேல் என்று ராஜபக்ச சொன்னதாகச் சொல்கிறார். ஆனால் ராஜபக்ச பதின்மூன்றே கிடையாது என்கிறார். இதில் இருந்து நாம் ஒரு முடிவிற்கு மட்டுமே வர முடியும். அதாவது இருவரும் சேர்ந்த்து தமிழர்களையும் உலகத்தையும் ஏமாற்றுகிறார்கள். கொழும்பு ஊடகம் ஒன்றில் எழுதிய ஒரு சிங்கள அரசியல் ஆய்வாளர் 13 கிடையாது என்று ஒன்றல்ல இரண்டல்ல ஆறு தடவைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவை இலங்கை ஏமாற்றி விட்டது என்கிறார்.மஹிந்த ராஜபக்ச தன்னிடம் 13-ம் திருத்ததிற்கும் அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்வதாக உறுதியளித்தார் என இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பத்திரிகையாளர்கள் மாநாட்டில் சொன்னதை கொழும்புப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்தது ஏன்?
இலங்கையில் தமிழர்களுக்கு போர் நடக்கும் போது வெளிநாட்டில் இருந்து படைக்கலங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. படைத்துறை ஆலோசகர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அயல் நாடு ஒன்றில் இருந்து இருபதினாயிரம் படையினரும் கள்ளத்தனமாக பின்கதவால் இறக்குமதி செய்யப்பட்டனர். போரின் போது ராஜபக்சவிற்குப் பயன்பட்ட இறக்குமதி தீர்வின் போது வேண்டாம்!
இலங்கையின் இனப்பிரச்சனைக்கு முதலில் சமஷ்டி என்னும் இணைப்பாட்சி முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. அதைப்பற்றிப் பல பொய்களைச் சொல்லிச் சொல்லி சமஷ்டி என்பதை ஒரு கெட்ட வார்த்தையாக்கிவிட்டனர் சிங்களவர்கள். இதில் சிங்கள இடதுசாரியினர் வலது சாரியினர் மதவாதிகள் பத்திரிகையாளர்கள் அனைவருமே திறமையாகப் பொய்களைச் சொல்லினர். தமிழர்களின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதப் பிரச்சனையாகப் பொய் சொல்லிச் சொல்லி முழு உலகத்தையும் நம்ப வைத்தனர். பின்னர் அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு தீர்வாக முன் வைக்கப்பட்டது. அதைப் பற்றிப் பொய் சொல்லிச் சொல்லி அதை ஒரு கெட்ட வார்த்தையாக்கினார்கள் சிங்களவர்கள். இப்போது முன்வைக்கப்படும் சொல் நல்லிணக்கம். இது இன்னும் எத்தனை நாட்கள்.

No comments:
Post a Comment