Thursday 2 January 2014

சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பல் வெற்றீகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் கடந்த முப்பத்தி ஏழு நாட்களாக கடலில் பல நூற்றுக்கு மேற்பட்ட சோதனைகளை வெற்றீகரமாக செய்து முடித்துள்ளது. லியோலிங்கின் தாக்குதல் முறைமை வியூகம அமைக்கும் திறன் ஆகியவை நன்கு பரிசோதிக்கப்பட்டன. யாவும் திட்டமிட்டபடி நடந்தன என்கின்றது சீன ஊடகம் ஒன்று.

சீனாவின் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலுடன் நீர்மூழ்கிக்கப்பல்கள், ஃபிரிக்கேட் கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், சேவைவழங்கு கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 2013 நவம்பர் ஆரம்பித்து 2012 ஜனவரி 2-ம் திகதி முடிவடைந்த லியோனிங்கின் பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஏவுகணைகளை அழிக்கக் கூடிய இரு நாசகாரிக் கப்பல்களான Shenyang உம் Shijiazhuang உம் இணைந்திருந்தன. அத்துடன் ஏவுகணைகளை வீசும் கப்பல்களான Yantai உம் Weifangஉம் உடன் சென்றன. சில படைத் துறை நிபுணர்கள் இந்த நான்கு கப்பல்களும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கப் போதுமானவை அல்ல என்கின்றனர். பொதுவாக சீன நாசகாரிக் கப்பல்கள் மற்ற நாட்டுக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியவை என்கின்றனர். இதனால் போதிய அளவு படைக்கலனகளை இவற்றால் எடுத்துச் செல்ல முடியாது. அத்துடன் ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் விமானங்களை இறக்கவும் பின்னர் அதிலிருந்து பறக்கச் செய்யவும் விமானிகளுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்ச்சி தேவை எனப்படுகின்றது. இதனால் சீன விமானம் தாங்கிக் கப்பல் முழுமையான செயற்பாட்டில் இறங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுக்கலாம்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரேயினிடம் இருந்து வாங்கப்பட்ட பழைய விமானம் தாங்கிக் கப்பலை சீனா சீர் செய்து தனது லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியுள்ளது. 1985இல் இருந்தே சீனா தனது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்தியது. விமானம் தாங்கிக் கப்பல்களைப் பற்றி அறிவதற்காக சீனா முதலில் 1985-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவிடமிருந்து அதன் பழுதடைந்த HMAS Melbourne விமானம் தாங்கிக் கப்பலையும் பின்னர் இரசியாவிடமிருந்து Minsk, Kiev ஆகிய கப்பல்களையும் உக்கிரேய்னிடமிருந்து Varyag  கப்பலையும் வாங்கி அவற்றின் தொழில் நுட்பங்களை முதலில் அறிந்து கொண்டது.  இவற்றில் Varyag இப்பொது லியோனிங்காக உருமாற்றப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு சீன மாகாணமான லியொனிங்கின் பெயர் இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்குச் சூட்டப்பட்டது. பலத்த சிரமங்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே Varyag கட்டி இழுத்துவரப்பட்டது.


சீனாவின் படைத்துறை முன்னேற்றங்கள்
உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட மக்கள் விடுதலைப் படை எனப்படும் சீனப் படை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2050 ஆண்டு உலகின் மிகப்பெரிய படையாகத் திகழும் நீண்டகாலத் திட்டத்தை ஆரம்பித்தது. அதன்பின்னர் விண்வெளிப்போர் முறை, இணையவெளிப்போர்முறை, உட்படப் பல துறையிலும் வேகமாக முன்னேறிவருகிறது. ஒரு Space Stationஐ அமைத்து அதில் விண்கலங்களை வெற்றிகரமாக இறக்கியது. அமெரிக்காவின் Global Positioning System (GPS)இற்குப் போட்டியாக 15 செய்மதிகளைக் கொண்ட Beidou GPS ஐ உருவாக்கி வருகிறது. உலக நாடுகளில் இரசியாவும் சீனாவும் மட்டுமே அமெரிக்காவின் GPS இல் தங்கியிருக்காத நாடுகளாகும். Global Positioning System (GPS) குடிமக்களுக்கும் படைத்துறையினருக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி முறைமையாகும். சீனாவின் Global Positioning System (GPS) அமெரிக்காவிற்கு வர்த்தக ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் சவாலாக அமையும். உலகின் எந்தப் பகுதிக்கும் தனது படையினரை விரைவாக நகர்த்தக் கூடியதாக Y-20 என்னும் பாரிய போர்முனைப் போக்குவரத்து விமானத்தை உருவாக்கியது. ராடார்களுக்கு அகப்படாத stealth fighter விமானத்தின் தனது இரண்டாம் தலைமுறை J31 சீனா உருவாக்கி விட்டது. விண்வெளிப்பயணத்துறையில் பெரும் முன்னேற்றமாக சீனா தனது 120 tonnes rocket engineஐயும் வெற்றீகரமாகப் பரீட்சித்துவிட்டது. சீனா தனது  Z-10 தாக்குதல் உழங்கு வானூர்திகளை பாரிய அளவில்(mass production) உற்பத்திசெய்கிறது. சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் எந்த ஒரு விபத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபடவில்லை என மார்தட்டிக் கொள்கின்றது. தனது பாதுக்பாப்பு முன்னேற்பாடுகள் அந்த அளவிற்கு உயர் தரம் வாய்ந்தது என்கிறது சீனா.

சீனா தற்போது இரண்டு Type-94வகை Ballistic ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர் மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் ஒரேயடியாக 12 ஏவுகணைகளை வீசக் கூடியவை.  அவற்றின் பாய்ச்சல் தூரம் 7000 முதல் 13000கிலோ மீட்டர்கள் அதாவது 4300முதல் 8100 மைல்கள் சென்று தாக்கக் கூடியவை. சீனா இப்போது நான்கு புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகின்றது. இவை Type-96வகையைச் சார்ந்தவை. இவற்றால் 16 முதல் 24 வரையிலான Ballistic ஏவுகணைகளைத் தாங்கிச் செல்ல முடியும். சீனாவிடம் 200முதல் 240 வரையிலான அணுக்குண்டுகள் இருக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவிடம் மூன்று கடற்படைப் பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவிடம் நான்கு பிரிவுகளும் ஜப்பானிடம் ஒரு பிரிவும்  அமெரிக்கா, பிரிதானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் ஆறு பிரிவுகளை வைத்திருக்கின்றன. அமெரிக்கா தனது கடற்படைக்கு Ford வகை விமானம் தாங்கிக் கப்பல்களை இணைந்த பின்னர் சினாவின் கடற்படை அமெரிக்கக் கடற்படைக்கு கிட்டவும் நிற்க முடியாத நிலை ஏற்படும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைப் பற்றிப் பார்க்க இங்கு சொடுக்கவும்: அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...