Wednesday 13 July 2011

போலித் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பின் லாடனைப் பிடிக்க முயன்ற அமெரிக்கா.

பின் லாடன்

அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனம் பின் லாடன் தனது சகாக்களுடன் ஒரு தொடராபாளர் மூலம் தகவல்களையும் உத்தரவுகளையும் பரிமாறிக் கொள்கிறார் என்று குவாட்டமானோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல் கெய்தா கைதிகளைச் சித்திரவதை செய்து அறிந்து கொண்டது. இந்த தொடர்பாளரின் பெயரை அறிவதற்கு அமெரிக்காவிற்கு மூன்று வருடங்கள் எடுத்தன.  பாக்கிஸ்த்தானில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் இருந்து  இந்த மர்ம தொடர்பாளர் குடும்பப் பெயரை சிஐஏ அறிந்து கொண்டது.

அது முழுப்பெயர் அல்ல. தொடர்ந்த பல நடவடிக்கைகளினால் அவரது முழுப்பெயரும் வாகன இலக்கமும் குடும்பப் பெயரும் பெறப்பட்டது. அவர் குவைத்தில் பிறந்த பாக்கிஸ்தானியரான ஷேக் அபு அகமத். அவரது வாகனத்தை பல நாட்கள் பல தடவைகள் தொடர்ந்த போது. 2010 ஆகஸ்ட் மாதம் மர்மத் தொடர்பாளரின் இருப்பிடம் அறியப்பட்டது. அது அபத்தாபாத் என்னும் அழகிய நகரம். அந்த் இருப்பிடம் மூன்று மாடி மாளிகை வழமைக்கு மாறாக ஏழு அடிச்சுவரால் அந்த மாளிகை வளாகமும் ஒவ்வொரு மாடியும் மறைக்கப் பட்டிருந்தன.

மூன்று மாடி மாளிகையை செய்மதி மூலமும் நவீன கருவிகள் மூலமும் வேவு பார்த்த தேசிய பாதுகாப்பு முகவரகம் ஏமாற்றமடைந்தது. அந்த மாளிகைக்கு தொலைபேசித் தொடர்போ அல்லது இணையத் தொடர்பு வசதிகளோ இருக்கவில்லை. அதனால் அங்கிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. ஆனால் அப்படி ஒரு மாளிகைக்கு அப்படிப்பட்ட வசதிகள் இல்லாதிருப்பது சந்தேகத்தை வளர்த்தது. அங்கிருந்து குப்பைகள் வெளியில் வீசப்படுகிறதா என்று பார்த்தார்கள். குப்பைகளுக்குள் ஏதாவது தகவல் பெறலாம் என்று. அதுவும் இல்லை. மொட்டை மாடியில் வைத்து குப்பைகள் எரிக்கப்படுவதைக் கண்டனர். அங்குதான் பின் லாடன் இருக்கிறார் என்று அமெரிக்க உளவுத் துறை நம்பியது.

அம்மாளிகைக்குள் தாக்குதல் நடாத்தி பின் லாடனைக் கொல்லவோ அல்லது உயிருடன் பிடிக்கவோ அமெரிக்கா திட்டம் தீட்டியது. அதற்கு முன்னர் அங்கு இருப்பது பின் லாடன் தான் எபதை டி.என்.ஏ சோதனைமூலம் உறுதி செய்ய அமெரிக்கா விரும்பியது. அமெரிக்கா திட்டமிட்ட தாக்குதல் ஆபத்து நிறைந்தது அதனால் பின் லாடன் தான் அங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்ய அமெரிக்கா ஒரு தடுப்பூசித் திட்டம் ஒன்றை அங்கு செயற்படுத்த விரும்பியது. பின் லாடனின் மாளிகைக்குள் ஒரு தாதியை தடுப்பூசி போட அனுப்பி அங்குள்ளவர்களின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டது.
பின் லாடனின் இரண்டாம் மனைவியும் பிள்ளைகளும்

மருத்துவர் சக்ரி அல்ஃபிடியை இதற்காக அமெரிக்கா வேலைக்கு அமர்த்தியது அபொட்டாபாத் நகர் முழுவதும் Hepatitis B vaccine இற்கான விளம்பரங்கள் மருத்துவரால் செய்யப்பட்டது. பின் லாடன் மாளிகைக்கு ஒரு தாதியை ஒளிப்பதிவுக் கருவிகள் பூட்டப்பட்ட கைப்பையுடன் அனுப்பி அங்குள்ள பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளையாவது சேகரித்தால் போதும் என்று அமெரிக்கா நம்பியது. தாதிக்கு எப்படி தடுப்பூசி மருந்து செலுத்திய பின் இரத்தம் ஊசிமூலம் எடுப்பது என்றும் பயிற்ச்சி  அளிக்கப்பட்டது. பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகள் பின் லாடனின் மாதிரியுடன் ஒத்துப் போனால் அதிலிருந்து பின் லாடன் அங்கிருப்பதை உறுதி செய்யாலாம் என்பது சிஐஏயின் திட்டம். ஆனால் அவர்களால் எந்தஓரு டி.என்.ஏ மாதிரிகளையும் சேகரிக்க முடியவில்லை.  உள் சென்ற தாதி அங்கு நின்ற விலை உயர்ந்த வாகனங்கள் பற்றி விசாரித்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர் வெளியேற்றப்பட்டார். மருத்துவர் சக்ரி அல்ஃபிடியை இப்போது பாக் அரசு கைது செய்து விசாரித்து வருகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...