Friday 16 July 2010

சீன ஆயுத வலிமையும் இந்திய மடைமையும்


உலகில் அதிக எண்ணிக்கையிலான படையினரைக் கொண்டது சீனா. அதன் படையினரின் எண்ணிக்கை இருபத்தி எட்டு இலட்சத்திற்கும் மேலானதாகக் கணிக்கப்படுகிறது. எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட போர் டாங்கிகள், நாலாயிரத்திற்கு மேற்பட்ட போர் விமானங்கள், அறுபதிற்கு மேற்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்கள், அறுபதிற்கு மேற்பட்ட போர் கப்பல்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. எண்ணிக்கை தெரியாத அணு ஆயுதங்கள்.

உலக படை வலிமையில் ஐக்கிய அமெரிக்கா முதலாம் இடத்தையும் சீனா இரண்டாம் இடத்தையும், இரசியா மூன்றாம் இடத்தையும் இந்தியா நான்காம் இடத்தையும் ஐக்கிய இராச்சியம் ஐந்தாம் இடத்தையும் வகிக்கின்றன. பாக்கிஸ்த்தான் பதினைந்தாம் இடத்தில் இருக்கிறது.

இலங்கையில் சீனா
அண்மையில் அவுஸ்த்திரேலியத் தமிழ் வானொலிக்குப் பேட்டியளித்த இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி இலங்கையில் சீனாவின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தைப் பற்றியும் அதனால் இந்தியாவிற்கு உள்ள ஆபத்தைப்பற்றியும் குறிப்பிடுகையில் சீனக் கடற்படை இந்தியாவின் கடற்படையிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் இந்தியக் கடற்படை சீனாவின் கடற்படையிலும் பார்க்க நவீனமானது என்றார். நான் சென்ற ஆண்டு வாங்கிய கணனி எனது நண்பன் மூன்று ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கணனியுடன் ஒப்பிடுகையில் நவீனமானதாகத்தான இருக்கும். ஆனால் அடுத்த ஆண்டில் எனது நண்பன் புதுக் கணனி வாங்கும் போது அவனது கணனி எனது கணனியிலும் நவீனமாகிவிடும். இலங்கையில் சீன படைகள் எதுவும் இல்லாத நிலையில் இருப்பதிலும் பார்க்க இலங்கையில் அம்பாந்த்தோட்டையிலும் முல்லைத்தீவிலும் சீனப் படைகள் இருக்கையில் சீனாவின் இந்தியா மீதான தாக்குதல் திறன் அதிகமானதாகவே இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மருமகள் தாலி அறுவதற்கு மகனைக் கொன்றதைப் போன்றது. இந்தியா தமிழ்த்தேசிய போராட்டத்தை அழிக்கவும் தலையெடுக்காமல் இருக்கவும் இலங்கையில் சீனாவுடன் இணைந்தும் சீனாவிற்குப் பல விட்டுக் கொடுப்புகளைச் செய்தும் தன் பிராந்திய நலன்களைப் பலியிட்டு வருகிறது.

தீராத எல்லைப் பிரச்சனை
இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் தீராத எல்லைப் பிரச்சனை இருக்கிறது. முக்கியமாக அருணாச்சலப் பிரதேசத்தில் இது ஒரு கொதி நிலையில் உள்ளது. அண்மைக்காலங்களில் சீனா இப்பகுதியின் ஊருடுவல்களை மேற் கொண்டது. இந்தியா தனது எல்லை என்று சொல்லப் பட்ட பகுதிகளுக்குல் சீனப் படைகள் ஊடுருவி தமது தளங்களையும் முகாம்களையும் அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 50,000இற்கும் 60,000இற்கும் இடைப்பட்ட துருப்புக்களைக் கொண்ட இரு பெரும் படையணிகளை அருணாச்சலப் பிரதேரத்திற்கு நகர்த்தியது. இதற்கு சீனா தனது எச்சரிக்கையை சென்ற மாதம் ஆறாம் திகதி இப்படி வெளியிட்டது: India’s current course can only lead to a rivalry between the two countries. India needs to consider whether or not it can afford the consequences of a potential confrontation with China.” சீனா இரசியாவுடனும் வியட்நாமுடனும் தனது எல்லைப் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்துவிட்டது. சீனா சோவியத் வீழ்ச்சியின் பின்னர் இரசியாவுடன் சுமூக உறவுகளை ஏற்படுத்தி வருகிறது. முன்னர் இரசியாவின் எல்லையில் இருந்த படைகளை இப்போது அதிகம் இந்திய எல்லைகளுக்கு நகர்த்தியுள்ளது.

மேற்குலகு இந்தியாவின் பக்கமா?
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் சீனா இந்தியாவுடன் போர் புரிந்தால் மேற்குலகம் தம்பக்கமே நிற்கும் என்று நம்புகிறார்கள். மேற்குலகம் சீனா இந்தியாவை ஆக்கிரமித்து வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்பது உண்மைதான். ஆனால் தமக்கு எதிர் காலத்தில் மிகப் பெரிய சவாலாக அமையப் போகும் இரு நாடுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டு பொருளாதார ரீதியில் சீரழிவதை அவை நிச்சயம் விரும்பும். அப்படி ஒரு போரில் இருபக்கத்திற்கும் ஆயுதங்களை விற்பனை செய்து தமது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும்.

சீனா தொழில் நுட்பத்தில் பின்தங்கியதா?
சீனா தொழில் நுட்பத்தில் பின்தங்கியுள்ளது என்று இந்தியா நம்புகிறது. உலக தகவல் தொழில் நுட்ப வெளிமூல(I. T Out sourcing) வர்த்தகத்தில் சீனாவின் பங்கு 5% இந்தியாவின் பங்கு 43%. இதை மட்டும் வைத்துக் கொண்டு சீனா தொழில் நுட்பத்தில் பிந்தங்கியது என்று சொல்லி இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அன்னியச் செலவாணி இருப்பில் சீனா முதலாமிடத்திலும் இந்தியா 159வது இடத்திலும் இருக்கின்றன. தகவல் தொழில் நுட்பத்தில் சீனா இந்தியாவிலும் பார்க்கப் பின்தங்கி இருக்கலாம் ஆனால் பல தொழில்நுட்பங்களில் அது முன்னணியில் திகழ்கிறது. சீனா ஏவுகணைத்துறையில் பாரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. அது அமெரிக்கவையே அசர வைத்துள்ளது. செய்மதிகளை அழித்தொழிக்கும் தொழில் நுட்பத்தில் சீனா அதிக கவனம் செலுத்துகிறது. அமெரிக்கா தனது படை வலிமைக்கு செய்மதிகளில் அதிகம் தங்கி இருக்கிறது என்று அறிந்தே சீனா அதைக் குறிவைத்து தனது தொழில் நுட்பத்தை வளர்க்கிறது. இந்திய ஏவுகணைகள் ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் வல்லமையுடையன என்பதை சீனா அறிந்துள்ளது. இவை சீனாவின் பெரும் பகுதிகளைக் குறிவைக்கக்கூடியன என்பதை சீனா நன்கு உணர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப ஒரு மாற்று வழியை ஏற்படுத்த தீவிர முயற்ச்சியில் இறங்கியுள்ளது. தீபெத்தை அண்மித்த பிரதேசங்களில் தனது ஏவுகணைகளை பாரிய அளவில் இந்தியாவைக் குறிவைத்து அமைத்துள்ளது.

இந்தியாவுக்குள் சீனா
மாவோயிஸ்ட் கொள்கைகளைக் கொண்டா நக்சலைட்டுக்கள் இந்தியாவுக்குள் ஒரு சீனப் படையா என்ற கேள்விக்கு என்ன பதில்?

சீனா இந்தியாவைக் கூறு போடலாம்.
தேவை ஏற்பட்டால் இந்தியாவைப் பலநாடுகளாகப் பிரிக்கும் எண்ணத்தைக் சீனக் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டுள்ளார்கள். இதை அவர்கள் பகிரங்கப் படுத்தியும் உள்ளனர்.

சீன அணு ஆயுதங்கள்
உலகிலேயே இப்போது மிகத் தீவிரமாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. சீனாவின் இரகசியம் பேணும் திறன் உலகிலேயே மிக இறுக்கமானது. அதனால் சீனாவின் படைத்துறைச் செலவீனம் எவ்வளவு அதன் பலம் எவ்வளவு என்பது எமக்குத் தெரியாது. அதன் உண்மையான பலம் நாம் கொண்டதிலும் பார்க்க நிச்சயம் அதிகமானது.

3 comments:

Che said...

/* இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் வெளிவுறவு கொள்கை "மருமகள் தாலி அறுவதற்கு மகனை கொன்றது" போன்றது.*/

I don't know what to say that it is very true.

http://rkguru.blogspot.com/ said...

சீனாவின் பலம் இந்தியாவின் பலவீனம் நன்கு புரியவைத்தீர்கள்...நல்ல பதிவு

ttpian said...

சினா ஆப்பு! ம்ஹீம் !!
எனக்கு மந்திரி பதவி- எனது குத்தியாளுக்கு அதிக பணம்
தமிழன் இருந்தால் என்ன?அழிந்தால் என்ன?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...