Monday, 17 February 2020

சீனாவின் தொற்று நோயும் புவிசார் அரசியலும்


சீனாவில் உருவாகி உலகின் பல பாகங்களுக்கும் பரவிவரும் கொரோனா நச்சுக்கிருமி உலக அரசியலுடன் பிணைந்துள்ளது. அந்த நச்சுக் கிருமி தொடர்பான சரியான விஞ்ஞானப் புரிதல் இரண்டு மாதங்களாக கிடைப்பதற்கு அரிதாக இருக்கின்றது. அதன் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பான உண்மையான செய்திகளை அறிவது அதிலும் அரிதாக இருக்கின்றது.

தொற்று நோயும் அரசுறவுகளும்
நாடுகளுக்கு இடையிலான உறவுகள், உலகப் பொருளாதாரம், உலகப் போக்கு வரத்து போன்றவற்றில் இந்த தொற்று நோயின் தாக்கங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பதக்கப் பட்டியல் நாள்தோறும் வெளிவிடப்படுவது போல் ஒவ்வொரு நாட்டிலும் பாதிக்கப்பட்டவரக்ளினதும் கொல்லப் பட்டவர்களினதும் பட்டியல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சீனாவின் தொற்று நோயின் மையப்புள்ளியான வுஹான் நகரில் இருந்து பல அரசுறவியலாளர்களும் மாணவர்களும் வெளியேறியுள்ளனர். கிழக்கு ஐரோப்பாவின் போல்ரிக் பிராந்தியத்தில் உள்ள செய்தி வலைத்தளங்கள் ஐந்து இணையவெளித் திருடர்களால் ஊடுருவப்பட்டு லித்துவெனியாவில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு கொரோனா தொற்று நோய் பிடித்துள்ளதாக பொய்யான தகவல்கள் பதியப்பட்டன.


ஆட்சிமுறைமைத் தத்துவம்
கடந்த பத்து ஆண்டுகளாக சீனா தனது பொருளாதார வெற்றிக்கு அதன் ஆட்சிமுறைமை காரணம் எனப் பறைசாற்றி வருகின்றது. மற்ற நாடுகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுதந்திரத்தைப் பேணவும் சீனாவின் ஆட்சிமுறைமை உகந்தது என 2017இல் சீன அதிபர் அறிவித்திருந்தார். தொற்று நோய் பற்றிய அறிவும் செய்திகளும் மக்களிடையே பரப்பப்பட்டால்தான் அவர்கள் அது தொடர்பாக கவனமாக இருக்க முடியும். வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயற்படும் போது மட்டுமே அது சாத்தியம். ஆனால் சீன ஆட்சி முறைமை அதை அனுமதிப்பதில்லை என மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஐநா அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அதிபர் சீன அரசு காத்திரமாகவும் துரிதமாகவும் எடுத்த நடவடிக்கைகளால் தொற்று நோய் பரவும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.


நாடுகளிடையேயான உறவும் சமூகப் பிரச்சனையும்
சீனாவில் இருந்த தமது மாணவர்களை இந்தியா, பங்களாதேசம், இலங்கை போன்ற நாடுகள் அரச செலவில் தமது நாடுகளுக்கு திருப்பியழைத்தன. அதை சீனா தன்னை அவமானப் படுத்தும் செயலாகப் பார்த்தது. அதனால் சீனாவுடன் சிறந்த உறவைப் பேணும் பாக்கிஸ்த்தானும் கம்போடியாவும் தமது நாட்டு மாணவர்களை சீனாவிலே இருக்கும் படி பணித்தன. தம்மை பாக்கிஸ்த்தான் அரசு கைவிட்டதாக சீனாவில் உள்ள அதன மாணவர்கள் ஆத்திரப்பட்டனர். தமது அரசின் நடவடிக்கைகளை இந்தியாவுடன் எதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பாக்கிஸ்த்தானியர்கள் வழக்கமாகக் கொண்டவர்கள். பாக்கிஸ்த்தான் மாணவர்கள் தமது அரசு தம்மைக் கைவிட்டதாக குற்றம் சாட்டியும் இந்தியாவின் செயலுடன் ஒப்பிட்டும் காணிலிகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனார்.

இறைமைக்கு உட்பட்ட ஹொங் கொங் தீவு
சீனாவின் இறைமைக்கு உட்பட்ட ஹொங் கொங் தீவில் உள்ள ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. இரு ஆட்சி முறைமைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைக்க சீன பொதுவுடமைக்கட்சியினர் முயல்கின்றனர். அதற்கு ஹொங் கொங்கில் கடும் எதிர்ப்பு நிலவுகின்றது. சீனாவின் பிடியை தளர்த்த ஹொங் கொங்கில் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் வேளையில் சீனாவில் கொரோனா நச்சுக்கிருமிப் பிரச்சனை உருவானது. மற்ற நாடுகளைப்போல் சீனவிற்கும் ஹொங் கொங்கிற்கும் இடையில் மக்கள் போக்குவரத்து தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. ஆனால் சீனாவின் கைப்பாவையாக இருக்கும் ஹொங் கொங் முதல்வர் சீனாவுடனான எல்லையை மூட மறுத்து வருகின்றார்.

இறைமைக்கு அப்பாற்பட்ட தைவான் தீவு
தனக்கு என ஒரு தனியான ஆட்சிமுறைமையைக் கொண்ட தாய்வான் தீவை சீனா தன்னுடைய நாட்டின் ஒரு மாகாணம் என அடம்பிடிக்கின்றது. சீனாவுடன் மற்ற நாடுகள் அரசுறவுகளைப் பேணுவதை கடுமையாக எதிர்க்கின்றது. எந்த ஓர் உலக அமைப்பிலும் தைவான் உறுப்புரிமை பெறாமல் தடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரோனா நச்சுக் கிருமி தொடர்பாக நடத்திய கூட்டத்தில் தைவானும் பங்கு பெற முயன்றது. ஆனால் அதை சீனா தடுத்துவிட்டது. தைவானின் கோரிக்கையை ஆட்சேபிக்கும் செயலாக பல போர் விமானங்களை சீனா தைவான் வான்பரப்பினுள் பறக்க விட்டது.

உயர்தரத் தலைவராக தன்னை நினைப்பவர்
சீன அதிபர் ஜீ ஜின்பிங் தன்னை ஒரு மிகவும் உயர்தரமான (ultra-competent) தலைவராக சீனாவில் நிலை நிறுத்தியுள்ளார். தனது அதிகாரத்தையும் அவருக்கு முன்பு உள்ள தலைவர்களிலும் பார்க்க மிக அதிகரித்துள்ளார். சீனாவிற்கு உள்ளும் வெளியும் அவர் தொற்று நோய்ப் பிரச்சனையை சரியாகக் கையாளவில்லை என்றவகையில் செய்திகள் பரப்பப்படுகின்றன. மேற்கு நாட்டு ஊடகங்களில் நாளொரு ஆய்வுக் கட்டுரையும் பொழுதொரு செய்தியுமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெப்ரவரி 4-ம் திகதி கலிபோர்ணியாவின் சந்தியாகோவில் அமெரிக்காவிற்கான சீனத்தூதுவர் அங்கு வாழும் சீனர்களைச் சந்தித்த போது ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என ஒரு மாணவர் குரல் எழுப்பினார். இது போன்ற குரல்கள் சீனாவில் பல இணையத் தளங்களிலும் எழுந்துள்ளன. ஜீ ஜின்பிங்கின் ஆட்சியில் மிக மோசமான சுகாதார நெருக்கடியாகவும் பொருளாதாரச் சவாலாகவும் கொரோனா நச்சுக்கிருமிப் பிரச்சனை இருக்கின்றது.

பேச்சுரிமையின்மையால் பரவிய தொற்று நோய்
கொரோணாநச்சுக்கிருமியால் கொடிய நோய் உருவாகியுள்ளதாக வுஹான் நகர முதல்வர் சீன நடுவண் அரசின் அதிகாரிகளுக்கு அறிவித்த போது அவர் தனது நகர மக்களை தொற்று நோய் தொடர்பாக எச்சரிக்கை விடுக்காமல் தடுக்கப்பட்டமையால் தொற்று நோய் பரவுவது தடுக்க முடியாமல் போனது. தொற்று நோயை முதலில் அறிந்த மருத்துவர் அது தொடர்பான செய்தியை தனது மருத்துவ நணர்களுடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதால் அவர் காவற்றுறையினரால் விசாரிக்கப்பட்டார். அத்துடன் தனிமைப் படுத்தப்பட்டார். இறுதியில் அவரே அந்த நோய்க்குப்பலியானார்.

அரசின் இரும்புபிடி
சீனாவின் அரசு அதிகாரமிக்கது. பொதுவுடமை கட்சிய்க்கு மட்டுமே பொறுப்புக் கூறும் நிலைமை அங்கு உள்ளது. தொற்று நோயால் பீடிக்கப் பட்டிருக்கலாம் என யார் மீதாவது ஐயம் இருந்தால் அவர் உடனடியாக சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றார். தொற்று நோய் இல்லாமல் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தொற்று நோயால் பலர் பீடிக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. சீன அரசு தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி உல்லாச விடுதிகளை தொற்று நோய்க்கான மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது.

ஐம்பதாயிரம் பேர் கொழுத்தப்பட்டனராம்
சீனாவில் இருந்து வெளியேறி மேற்கு நாடுகளில் வசித்து வரும் சீனாவைச் சேர்ந்த பல பில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட குவோ வென்குய் சீனாவில் பதைனைந்து இலட்சம் பேருக்கு மேற்பட்டவர்களை கொரோனா தொற்று நோய் பிடித்துள்ளதாகவும் அந்த நோயால் இறந்த ஐம்பதினாயிரம் பேரை சீனா கொழுத்தி எரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐயங்கள் அதிகமானால் ஊகங்கள் நிறையும்
கொரோனாநச்சுக் கிருமியின் உருவாக்க தொடர்பாக பல ஐயங்கள் நிலவும் போது பல ஊகங்களும் நிலவுகின்றன. முதலில் அது கடலுணவில் இருந்து பரவியது எனச் சொல்லப்பட்டது. பின்னர் அது பொகோலின் என்னும் ஒரு விலங்கின் இறைச்சியை உண்டதால் வந்தது எனச் சொல்லப்படுகின்றது. இவை ஐயங்கள் மட்டுமே எந்த ஒரு உலக உயர்தரப் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் கூட இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால் சீனா உயிரியல் படைக்கலன்களாக உருவாக்கிய தொற்று நோய்க்கிருமியாகிய கொரோனா தவறுதலாக நடந்த குழாய் வெடிப்பால் பரவத் தொடங்கி விட்டது எனவும் செய்திகள் வெளிவருகின்றன.


பொருளாதாரப் பாதிப்பு
சீனப் புத்தாண்டுக்காக பல உற்பத்தி நிறுவனங்கள் இரண்டு வாரங்கள் மூடப்படுவது வழக்கம். தொற்று நோயால் இந்த ஆண்டு அது நான்கு வாரங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உள்நாட்டுப் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. உலகெங்கும் நடக்கவிருந்த பல பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான உலக மாநாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்கு வரத்து குறைந்துள்ளதாலும் சீனாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிகள் பாதிக்கப் பட்டுள்ளதாலும் சீனாவில் உற்பத்தி குறைந்துள்ளது. இவற்றால் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. அதன் விளைவாக எரிபொருள் விலை குறைந்துள்ளது. இரசியாவின் டாஸ் செய்தி நிறுவனம் இரசியப் பொருளாதாரத்தில் சிறிய பாதிப்பு சீனத் தொற்று நோயால் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. வமையாக ஐயாயிரம் டொலர் போகும் உல்லாச விடுதி அறை வாடகை இப்போது ஆயிரம் டொலர்களாக உள்ளது. சீனத் தொற்று நோயால் உலக விநியோக வலைப்பின்னலில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சீனத் தொற்று நோயால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அளவீடு செய்ய முடியாமல் பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும் திண்றுகின்றனர். சீனாவின் பொருளாதாரம் 2020இல் ஆறு விழுக்காடு வளரும் என பன்னாட்டு நாணய நிதியம் முன்பு எதிர்வு கூறியிருந்தது. ஆனால் S&P என்ற பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தொற்று நோயால் அது ஐந்து விழுக்காடாக குறையும் எனச் சொல்கின்றது. 2003-ம் ஆண்டு சார்ஸ் நச்சுக்கிருமி சீனாவைத் தாக்கிய போது உலகப் பொருளாதார உற்பத்தில் சீனாவின் பங்கு 4% மட்டுமே ஆனால் தற்போது அது 17%ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் அப்படிப் பாதிக்கப்படும் போது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 0.4% முதல் 0.5% வரை குறைக்கப்படும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக உலக உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் சீனப் பொருளாதார நிபுணர்களின் கருத்து வேறு விதமாக உள்ளது. சீனாவின் Chinese Academy of Social Sciences (CASS)இன் பொருளாதார நிபுணர்கள் சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த இலக்கை 2020இல் எட்டும் என எதிர்வு கூறியுள்ளனர்.

கொரோணா தொற்று நோய் பரவும் வேகம் தணிந்துள்ளது என்பது மட்டுமே ஆறுதலான செய்தியாக இருக்கின்றது.




Monday, 10 February 2020

விமானம் தாங்கிக்கப்பல்களும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும்

அமெரிக்கா 10 விமானம் தாங்கிக் கப்பல்களையும் சீனாவும் இந்தியாவும் பிரித்தானியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில், இரசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன. சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. 2030-ம் ஆண்டு சீனா ஐந்து அல்லது ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவிடம் நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் பத்து உள்ளன. அவற்றுடன் அடுத்த தலைமுறை  ஃபோர்ட் வகை பெருவிமானந்தாங்கிகளின் (Ford Class super carriers) முதல் உற்பத்தியான USS Gerald R Ford(CVN 79)ஐ 2017இல் 13பில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணித்து முடித்து தொடர்ந்து பரிசோதித்து வருகின்றது. இரண்டாவது உற்பத்தியான USS John F Kennedy (CVN 79) 2019 டிசம்பரில் நிர்மானித்து முடிக்கப்பட்டது. 2058-ம் ஆண்டு அமெரிக்கா பத்து ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா கொண்டிருக்கும்.

விமானம் தாங்கிகளில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம்
ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை விமானந்தாங்கிக் கப்பல்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் மட்டுமே பாவிக்கின்றன. அமெரிக்காவின் படைத்துறை வலிமையிலும் அதன் உலக ஆதிக்கத்திலும் அதன் விமானம் தாங்கிக் கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் பாவிக்கும்  F-35B Lightning II என அழைக்கப்படும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் எதிரியின் எதிர்கால அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை.  அமெரிக்காவின் கடலாதிக்கத்தைத் தொடர்ந்து பேணுவதற்காக அவை உருவாக்கப்பட்டன. எதிரியின் எந்த வான் பாதுகாப்பையும் ஊடறுத்துக் கொண்டு சென்று தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாகத் திரும்பக் கூடிய வகையில் அவை உருவாக்கப்பட்டன. அவை மிகக் குறுகிய தூரம் மட்டும் ஓடி கப்பலில் இருந்து பறந்து செல்லும். தரையிறங்கும் போது உலங்கு வானூர்தி போல் ஓடு பாதை தேவையில்லாமல் இறங்கும். எதிரியின் ரடார்களுக்கு இலகுவில் புலப்படாதவை F-35B.


ஒலியிலும் ஐந்து மடங்கிற்கும் அதிக வேகம்
அமெரிக்காவின் பெருவிமானம் தாங்கிக் கப்பல்களையும் அவற்றில் உள்ள ரடார்களால் இனம் காணக் கடினமான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் சீனாவினதும் இரசியாவினதும் படைத்துறையினர் கருத்தில் கொண்டனர். இரசியா 2020இலும் சீனா 2030இலும் தமது படைத்துறையை உலகின் முதற்றரமானதாக்கும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டிச் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்க விமானம் தாங்கிகளை அவற்றின் பரிவாரங்களாக வரும் நாசகாரிகளையும் அவற்றில் உள்ளவிமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் தாண்டிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கின. சீனா தனது முதலாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2017இல் பரிசோதித்தது. அதனால் 2018-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை ஹைப்ப்ர் சோனிக் ஏவுகணைகள் செல்லுபடியற்றதாக்கி விட்டன என படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறப்பவற்றை சுப்பர்சோனிக் என்றும் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவற்றை ஹைப்பர்சோனிக் என்றும் அழைப்பர். 2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி இரசியாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் துறையில் அமெரிக்காவை மிஞ்சிய நிலையில் இருந்தன. அமெரிக்காவின் தாட் மற்றும் பேற்றீயோற்றிக் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் சீனாவினதும் இரசியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க முடியாத நிலை இருக்கின்றன. சீனா உருவாக்கியுள்ள  hypersonic glide vehicle (HGV) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையினது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் அதை ஏவப்பட்டவரால் அதன் திசையை மாற்ற முடியும். அதனால் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்ற அசையும் இலக்குகளை அவற்றால் துல்லியமாகத் தாக்க முடியும். அமெரிக்கா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இயக்க செயற்கை நுண்ணறிவைப் (artificial intelligence) பாவிக்கவுள்ளது.  ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றால் மட்டுமே துரிதமாக இயக்கி துல்லியமாக இலக்கைத் தாக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  

ஒலியின் வேகமும் ஒளியின் வேகமும்
ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து தப்புவதற்கு ஒளியின் வேகத்தில் லேசர் படைக்கலன்கள் மட்டுமே பயன்படும். லேசர் கதிர்கள் அது வீசப்படும் இலக்கை ஒளியின் வேகத்தில்  பாய்ந்து தாக்கி அழிக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் ஒளியிலும் பார்க்க வேகமாக இயங்கக் கூடியது ஒன்றுமில்லை. லேசர் கதிர்களை உருவாக்கி வீசுவதற்கு மிக அதிக மின்சாரம் தேவை. கடுமையான தூசு, மூடுபனி போன்றவை லேசர் கதிர்களின் செயற்பாட்டிற்கு இடையூறாகும். இவற்றைத் தவிர்க்க அமெரிக்கா விண்வெளிப்படையை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் உள்ள செய்மதிகளால் எதிரியின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இனம் காண முடியும். செய்மதியில் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து லேசர் படைக்கலன்கள் செயற்படும்.

லேசர் கதிர் உற்பத்திப் பிரச்சனை
லேசர் கதிர்களை உற்பத்தி செய்வதற்கு அதிக அளவிலான மின்சாரம் தேவை. சாதாரண விமானம் தாங்கிக் கப்பல்களில் இடப்பிரச்சனை பெரும் பிரச்சனையாகும் ஆனால் ஃபோர்ட் வகை பெருவிமானந்தாங்கிகளால் (Ford Class super carriers) அப்பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும். விமானம் தாங்கியில் லேசர் கதிர்களை உருவாக்கத் தேவையான மின்சாரத்தை பெருமளவில் உற்பத்தி செய்துமின்தேக்கிகளில் (capacitor) சேமித்து வைக்க வேண்டும். தொடர்ச்சியாக அல்லது சமாந்தரமாக இணைக்கப்பட்ட பல மின்தேக்கிகள் அதற்கு தேவைப்படும். அவற்றிற்கு பெருமளவு இடம் தேவைப்படும்.  ஃபோர்ட் வகை விமானம் தாங்கிகளில் அணுவலு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இரட்டை இயந்திரங்கள் உள்ளன. அவை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக விமானம் தாங்கிகளை கடலில் செயற்பட வைக்கும் எண்ணத்துடம் உருவாக்கப்பட்டவை.  அதனால் ஃபோர்ட் வகை விமானம் தாங்கிகள் லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அழிக்க முடியும்.

இந்தியாவின் காளி
இந்தியாவிடம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. மேலும் ஒரு கப்பலை உருவாக்கும் திட்டமும் இந்தியாவிடம் உள்ளது. தீபகற்பமான இந்தியாவின் 3214 கிலோ மீட்டர் நீளமான மேற்குக் கரையை பாக்கிஸ்த்தானிடமிருந்தும் 1822கிலோ மீட்டர் நீளமான கிழக்குக் கரையை சீனாவிடமிருந்தும் பாதுகாப்பதற்கு இந்தியாவிற்கு ஐந்து விமானம் தாங்கிக் கப்பல்கள் தேவை என சில படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். அவற்றை இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO)யும் Bhabha Atomic Research Centre (BARC)உம் இணைந்து இலத்திரன் அதிர்வுகளை வீசும் கருவிகளை உருவாக்கியுள்ளன. அதற்குப் பொருத்தமாக காளி எனப் பெயரும் சூட்டியுள்ளனர். Kilo Ampere Linear Injector என்பதன் முதலெழுத்துக்களே காளி என அழைக்கப்படுகின்றது. அது எதிரியின் ஏவுகணைகளை நோக்கி pulses of Relativistic electron beam இலத்திரன் அதிர்வுகளைக் கொண்ட கதிர்களை வீசும். லேசர் கதிர்கள் எதிரியின் இலக்கில் துளையிடும். ஆனால் இந்தியாவின் காளியின் கதிர்கள் எதிரியின் இலக்கில் படும் போது அவற்றின் இலத்திரனியல் செயற்பாட்டை முற்றாக அழிக்கும். அதனால் ஏவுகணை செயலிழந்து போகும். எதிரியின் விமானங்கள் மற்றும் பல எண்ணிக்கையில் வரும் ஆளில்லா விமானங்களையும் காளி இடைமறித்து அழிக்கக் கூடியது. KALI 80, KALI 200, KALI 1000, KALI 5000 and KALI 10000 என இந்திய தொடர்ச்சியாக காளியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருந்தால் இந்தியாவால் நுண்ணலைக் கதிர்களை (Microwave) உற்பத்தி செய்யும் படைக்கலன்களை விரைவில் உருவாக்க முடியும். ஒளியின் வேகத்தில் பாயும் நுண்ணலைக் கதிர்கள் மூலம் எதிரியின் ஏவுகணைகளையும் விமானங்களையும் இடையில் வைத்தே கருக்கி அழிக்க முடியும்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிற்கும் அவற்றை எதிர்க்கும் ஒளியின் வேகக் கதிர்களை உருவாக்கிகளிற்கும் இடையில் படைத்துறைப் போட்டி தொடரும்

Monday, 3 February 2020

ஐரோப்பிய நாடுகளின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்


பிரித்தானியாவும் ஜேர்மனியும் அமெரிக்காவிடமிருந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ வாங்கியுள்ளன. அதிலும் சிறந்த F22 போர்விமானங்களை அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விற்பச்னை செய்வதில்லை. பிரான்ஸ் தனது படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையது. இரசியா எஸ்யூ-35, எஸ்யூ-57 ஆகிய ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்கின்றது. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவீடன் ஆகிய சிறந்த போர்விமானங்களை உற்பத்தி செய்யக் கூடிய நாடுகள் தமது ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களைத் தாமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளன.

பல தலைமுறைகள் கண்ட விமான உற்பத்தி
ஒலியிலும் குறைந்த வேகத்தில் பறந்த போர் விமானங்கள் முதலாம் தலைமுறைப் போர்விமானங்களாக 1940 – 1950 வரை இருந்தன. இவற்றில் கதுவிகள் (ரடார்கள்) இருந்திருக்கவில்லை. அவற்றுக்கு என தற்பாதுகாப்பு முறைமையும் இருந்திருக்கவில்லை. அதையடுத்து ஒலியின் வேகத்தில் பறக்கக் கூடிய இரண்டாம் தலைமுறைப் போர் விமானங்கள் 1960கள் வரை இருந்தன. அவற்றில் வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை உணரக்கூடிய கதுவிகள் உள்ளடக்கப்பட்டன. சிறந்த வளியியக்கவசைவியல் (aerodynamics) அவற்றின் முக்கிய அமசமாகும். அதனால் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடியவையாக அமைந்தன. மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்கள் 1960களில் உருவாக்கப்பட்டன. சிறந்த பறப்புத் திறனும் திருப்பு திறனும் கொண்டவையாக அவை இருந்தன. அமெரிக்காவின் F-4 இரசியாவின் மிக்-23 ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நான்காம் தலைமுறைப்போர் விமானங்கள் ஒலியிலும் அதிக வேகமாகப் பறக்கக் கூடியவையாகவும் வானில் இருந்து வானிற்கும் வானிலிருந்து தரைக்கும் குண்டுகளைப் பொழியக் கூடியவையாக அமைந்தன. MiG-29, Su-27, F/A-18, F-15, F-16, மிராஜ்-2000 ஆகிய நான்காம் தலைமுறைப் போர் விமானங்கள் 1970களில் இருந்து பாவனைக்கு வந்தன அவற்றின் மேம்படுத்தப் பட்ட வடிவங்கள் இன்றும் பாவனையில் இருந்து போர் முனையில் சாகசங்கள் செய்கின்றன. நான்காம் தலைமுறைப் போர்விமானங்கல் தொடர்ந்து மேம்படுத்தப் பட்டுக்கொண்டிருந்ததால் நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்கள் என அவை பெயரிடப்பட்டன. அவற்றில் ரடாருக்குப் புலப்படாத தன்மை உள்ளடக்கப்பட்டன. அதிக அளவு படைக்கலன்களை அவை தாங்கிச் செல்லக் கூடியவையாகவும் அமைந்துள்ளன. அமெரிக்காவின் F/A-18E/F Super Hornet ஐரோப்பாவின் Eurofighter Typhoon, சுவீடனின் Saab JAS 39 Gripen பிரான்ஸின் Dassault Rafale ஆகியவை முன்னணி நான்கரையாம் தலைமுறைப் போர் விமானங்களாகும்.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்
ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளையும் மிகப் புதிய ரகக் கணனிகளையும் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக் கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை. இலத்திரனியலில் இவை உச்சத்தைத் தொட்டுள்ளன. இணையவெளிப் போர் கூட இவற்றால் செய்ய முடியும். இதில் உள்ள கணினிகள் எதிரியின் கணினித் தொகுதிகளைச் செயலிழக்கச் செய்யும். அமெரிக்கா 2007-ம் ஆண்டு தனது F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை சேவையில் ஈடுபடுத்தியது. அதன் தொழில்நுட்பங்களை சீனா இணையவெளியூடாக திருடியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. அதன் மூலம் சீனா தனது J-20 போர்விமானங்களை உருவாக்கியது. விமான எந்திர உற்பத்தியில் பின்தங்கியுள்ள சீனாவால் அமெரிக்காவின் எந்திரங்களைப் பிரதி பண்ண முடியவில்லை. J-20 விமானங்களின் எந்திரங்களின் இரைச்சல் அவற்றைப் புலப்படா விமானம் இல்லை என விவாதிக்க வைக்கின்றது. இரசியாவின் SU-37 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அமெரிக்காவின் F-22 மட்டுமே பரவலாக போர்முனையில் வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அமெரிக்காவின் F-35 இலத்திரனியலில் மிகவும் மேம்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். வான்படை, கடற்படை, கடல்சார் படை ஆகிய முப்படைகளிலும் பாவிக்கக் கூடிய மூன்று வகையான F-35 போர்விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விமானம்தாங்கிக் கப்பலில் பாவிக்கப்படும் F-35 மிகக்குறுகிய தூரம் ஓடி வானில் எழும்பவும் உலங்குவானூர்தி போல் செங்குத்தாக தரையிறங்கவும் வல்லன.

பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறை விமானம்
2018-ம் ஆண்டு பிரித்தானியா தனது Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் மாதிரி அமைப்பைக் காட்சிப்படுத்தியது. 2020-ம் ஆண்டு இதற்கான முழுத் திட்ட வரைபும் செய்து முடிப்பதற்கென்று இருபது பில்லியன் பவுணை பிரித்தானிய அரசு ஒதுக்கியுள்ளது. மொத்த உற்பத்திச் செலவு மிக மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இத்தாலியையும் சுவீடனையும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சுவீடனின் விமான உற்பத்தித் துறை சிறந்த இலத்திரனியல் போர்முறைமைகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளதால் அதன் அனுபவம் சிறந்த பங்களிப்பைச் செய்யக் கூடும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35இன் உற்பத்தியில் கணினி முறைமைகளின் குறியீடுகளில் பெரும்பாலானவற்றை பிரித்தானியர்களே எழுதினர். அந்த அனுபவம் மேலும் விருத்திச் செய்யப்பட்டு ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தில் பாவிக்கப்படும். Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் எந்திரத்தை பிரித்தானியாவின் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டது. Tempest(சூறாவளி) போர் விமானம் 20300-ம் ஆண்டுதான் முழுமையான பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்
முழுமையாக எதிரியால் புலப்படாத தன்மை, ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பறக்கும் திறன, துல்லியமாகத் தாக்குதல், செயற்கை விவேகத்தின் மூலம் மிகத்துரிதமான செயற்பாடு, விமானியில்லாமலும் விமானியாலும் இயங்கும் திறன், லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களைக் கொண்டிருத்தல், எதிரியின் எந்த வான் பாதுகாப்பையும் ஊடறுத்தல் ஆகியவை ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின் முக்கிய அம்சங்களாகும். ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் தமது உடன் பறப்பு விமானங்களாக பல ஆளில்லா போர் விமானங்களை தாமாகவே இயக்கிக் கொண்டு பறப்பவையாக இருக்கும்.

பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின்
பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்ய முயல்கின்றன. பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பல்களும் பாவிக்கக் கூடிய போர் விமானங்களையும் இணைத்து உற்பத்தி செய்ய விரும்புகின்றன. ஆனால் ஜேர்மனிக்கு அது தேவையற்ற ஒன்றாகும். மிராஜ், டச்டோல்ஃப் ஆகிய விமானங்களை உற்பத்தி செய்த Dassault Aviation நிறுவனமும் ஜேர்மனியின் Airbus நிறுவனமும் இந்த உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்க விருக்கின்றன. ஜேர்மனியின் Airbus இயந்திரத்தை உற்பத்தி செய்யும்.

ஒன்றுபடுதல் அவசியம்
இரசியாவின் படைத் தொழில் நுட்ப வளர்சியையும் இரசியாவின் விரிவாக்க நோக்கத்தையும் கருத்தில் கொண்டால் மேற்கு ஐரோபிய நாடுகளுக்கு ஆறாம் தலைமுறைப் போர்விமானம் அவசியமானதாகும். பிரித்தானியாவும் பினான்ஸும் தமது வல்லரசு நிலையைப் பேணுவதும் அவசியம். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரச்சூழல் அவை தனித்தனியே உற்பத்தி செய்வதிலும் பார்க்க ஒன்று அட்டு உற்பத்தி செய்தல் நன்று.

Monday, 27 January 2020

இரசியாவில் புட்டீனால் புட்டீனுக்கான அரசியலமைப்பு


2020 ஜனவரி 20-ம் திகதி இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் தனது நீண்டகால நண்பரான டிமிட்ரி மெடேவை தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதுடன் இரசியாவின் அரசியலமைப்பை மாற்றுவதற்கான சட்ட மூலத்தை இரசியப் பாராளமன்றத்தில் சமர்ப்பித்தார். ஸ்டாலினைப்போல் தானும் பதவியில் பல ஆண்டுகள் நிலைப்பதற்கு புட்டீன் முயல்கின்றார் எனச் சொல்லபடுகின்றது.

வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருப்பவர்
1999-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9-ம் திகதி இரசியாவின் அப்போதைய அதிபர் பொறிஸ் யெல்ஸ்ரின் தனது தற்காலிக தலைமை அமைச்சராக விளடிமீர் புட்டீனை நியமித்தார். அப்போதைய இரசியப் பொருளாதார நெருக்கடியை பொருளாதாரம் படித்தவரான புட்டீன் திறைமையாகக் கையாண்டதால் தனக்கு அடுத்த அதிபராக புட்டீனே வருவார் என யெல்ஸ்ரின் அறிவித்தார். புட்டீன் தற்காலிக தலைமை அமைச்சராக பதவியேற்ற சில நாட்களில் இரசியத் தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள குடியிருப்பு தொடர்மாடிகளில் நடந்த குண்டு வெடிப்புக்களுக்கு காரணமாகவிருந்த செஸ்னியத் தீவிரவாதிகளுக்கு எதிராக அவர் எடுத்த கடும் நடவடிக்கைகள் இரசிய மக்களிடையே அவரது மதிப்பை உயர்த்தியது. அன்றிலிருந்து இன்றுவரை புட்டீன் தன்னை ஒரு அசைக்க முடியாதவராக இரசிய ஆட்சி பீடத்தில் வைத்திருக்கின்றார். இரண்டு தடவை தலைமை அமைச்சராகவும் நான்கு தடவை அதிபராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அந்த நிலையை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தக்க வைக்கும் வகையில் 67 வயது நிரம்பிய புட்டீன் நாட்டு மக்களுக்கு 2020 ஜனவரி 15-ம் திகதி ஆற்றிய உரை அமைந்தது. அதன் பின்னர் இரசியாவில் புதிய தலைமை அமைச்சர் நியமிக்கப்பட்டார்.

நீட்டிய கரத்தை நிராகரித்த நேட்டோ
1990-ம் ஆண்டு மிக்கையில் கொர்பச்சோவும் 1991இல் பொறிஸ் யெல்ஸ்ரினும் இரசியா நேட்டோவில் இணைவதற்கு வைத்த முன்மொழிபுகள் நிராகரிக்கப்பட்டிருந்தும் புட்டீன் 2000-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் வைத்து அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனிடம் இரசியாவில் நேட்டோவில் இணைக்கும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அதுவும் நடக்கவில்லை என்பதால் தன் வழி தனி வழி என இரசியாவை உலக அரங்கில் சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்ததைப் போன்ற நிலைக்கு உயர்த்தும் முயற்ச்சியில் அவர் இறங்கினார். அதற்காக இரசியாவை படைத்துறையில் உலகின் முதன்மை நாடாக்கும் இருபது ஆண்டுத் திட்த்தை 2000-ம் ஆரம்பித்தார்.



இரசியாவைத் தனிமைப்படுத்த முடியுமா?
இரசியாவைத் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் அமெரிக்காவும் மற்ற நேட்டோக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் 2014-ம் ஆண்டில் இருந்து கடுமையாக முயற்ச்சிக்கின்றன. 2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுவில் இரசியா தன்னுடன் இணைத்த கிறிமியா உக்ரேனுக்கு சொந்தமானது என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 100 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை 24 நாடுகள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இது இரசியாவைத் தனிமைப்படுத்தும் முதல் முயற்ச்சியாகப் பார்க்கப்பட்டது. இந்த நாடுகள் இரசியா மீது விதித்த பொருளாதாரத் தடை இரசியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தின. இரசிய நாணயமான ரூபிளின் வீழ்ச்சி பொருளாதார வளர்ச்சி குன்றியமை, பன்னாட்டுக் கடன்களை இரசியா பெற முடியாமற் போனமை எனச் சில பின்னடைவுகளை இரசியா சந்தித்தது. ஆனால் பொருளாதாரம் படித்த புட்டீன் இரசியாவின் வலுவிழந்த நாணயப்பெறுமதியை நாட்டுக்குச் சாதகமாக்கி ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுத்தார். மற்ற எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைந்து செயற்படுவதைத் தீவிரப்படுத்தினார். இவற்றால் இரசியாவில் புட்டீனை விரும்புவோர் தொகை 85 விழுக்காடாக உயர்ந்தது.

இரசிய ஆட்சி முறைமைச் சவால்கள்
1993-ம் ஆண்டு வரையப்பட்ட இரசிய அரசியலமைப்புச் சட்டப்படி இரசியாவின் ஆட்சி முறைமை தலைவரால் நடத்தப்படும் கூட்டாட்சி குடியரசு (federal presidential republic) என விபரிக்கப்படுகின்றது. ஆனால் தனிமனித ஆதிக்கம், ஊழல் போன்றவற்றால் அது மாசு படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன் வைக்கப்படுகின்றது. மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்படும் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. புட்டீன் தனது ஆட்சிக்காலத்தை நீடிக்க 2008-ம் ஆண்டு இரசியாவின் அரசியலமைப்பைத் திருத்தி அதிபரின் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தினார்.. பாராளமன்றத்தின் அனுமதியுடன் தலைமை அமைச்சரை அதிபர் நியமிப்பர். பாராளமன்றம் இரு அவைகளைக் கொண்டது அமெரிக்காவில் உள்ளது போல கீழவைக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநில அரசுகளும் இரு உறுப்பினர்களை மேலவையான கூட்டாட்சித் சபைக்குத் தெரிவு செய்யும். இரசியர்கள் பொதுவுடமை ஆட்சியின் கீழ் 70 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி முறைமை பற்றிய அனுபவம் குறைவு. அதனால் ஒரு தனிப்பட்ட மனிதரின் அடக்கு முறையின் கீழ் வாழ்வது அவர்களுக்கு சிரமமல்ல. ஆனால் ஊழல் குறைந்ததும் பொறுப்புக் கூறும் தன்மை மிக்கதுமான  ஒரு நிர்வாகக் கட்டமைப்பை புட்டீனால் உருவாக்க முடியவில்லை. பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடக் கூடிய மக்களாட்சி முறைமை இரசியாவில் இருக்கின்றது. ஆனால் அக்கட்சிகள் எவ்வளவு சுதந்திரமாகச் செயற்படுகின என்பது கேள்விக்குறியே. புட்டீனை எதிர்த்த அலெக்ஸி நவன்லி சிறையில் அடைக்கப்பட்டார் விமர்சித்த பொறிஸ் நெமொ மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புட்டீன் பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றார். 2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புட்டீனின் ஐக்கிய இரசியக் கட்சி இரசியப் பாராளமன்றத்தின் 450 தொகுதிகளில் 335ஐக் கைப்பற்றி வைத்திருக்கின்றது.  பழைமை வாதத்தையும் தேசிய வாதத்தையும் கலந்த கொள்கையுடைய கட்சி இரு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. சில கட்சிகள் பல கட்சி முறைமை இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக போலியாக புட்டீனால் உருவாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச் சாட்டையும் மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றார்கள்.
புதிய அமைச்சரவை
இருபது ஆண்டுகளாக தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் புட்டீன் இன்னும் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனையை முற்றாகத் தீர்க்கவில்லை. இரசியாவில் வங்குரோத்து அடையும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு 57% அதிகரித்திருந்தனர். இருபது மில்லியன் இரசியர்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றார்கள். இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைக்குத் தான் காரணமல்ல என்று இரசியர்களுக்கு உணர்த்தும் பொருட்டு இரசியாவின் முழு அமைச்சரவையையும் புட்டீன் பதவி விலகச் செய்து புதிய தலைமை அமைச்சராக அதிகம் அறியப்படாத மிக்கையில் மிஷுஸ்டீனை நியமித்தார். இவர் இரசியாவின் வருமானவரித்துறைக்கு பொறுபான உயர் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இரசிய வருமானவரித்துறையை எண்மியமயப்படுத்தி (Dgitalization) இரசிய அரச நிதியின் நிலையை சீர் செய்தவர். புட்டீனைன் அமைச்சரவை மாற்றத்தை பாராளமன்றத்தின் 434 உறுப்பினர்களில் 383 பேர் ஆதரித்து வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இரசியாவின் பொருளாதாரத்தை சீர் செய்யும் நோக்குடனே புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அது 416பில்லியன் பெறுமதியான தேசியத் திட்டங்களை நிறைவேற்றப் போகின்றது. “எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் எமது நாட்டின் உலகத் தராதரத்தையும் இத்திட்டங்கள் உயர்த்தும்” என்றார் புட்டீன்
2018-ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் அதிபராகப் பதவி ஏற்ற விளடிமீர் புட்டீன் 2024-ம் ஆண்டு வரை பதவியில் இருக்கலாம். அதன் பின்னர் அவரது நிலை என்னவாகும் என்ற கேள்விக்கு புட்டீன் கொடுக்கும் பதில் பின்னரும் நானே வேறு வடிவில் வருவேனே. ஆம் 2024இன் பின் அதிபராகப் பதவி வகிக்க முடியாத புட்டீன் தலைமை அமைச்சரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் இரசியாவின் அரசியலமைப்பைத் திருத்தப் போகின்றார். அதன் பின்னர் அவரே தலைமை அமைச்சராக இருப்பார். 2020 ஜனவரி 15-ம் திகதி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் இதை வெளியிட்டுள்ளார். இரசியாவின் சீர்திருத்தச் சபையின் அதிகாரங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. 2024-ம் ஆண்டின் பின்னர் புட்டீனே அதன் தலைவராகவும் பணியாற்றலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  புட்டீனின் வலது கரமாக நீண்ட காலம் இருந்தவரும் புட்டீனுக்குப் பின் அவரது இடத்தை நிரப்பக் கூடியவராகக் கருதப்பட்ட தலைமை அமைச்சர் மெட்வேடேவ் இப்போது ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இரசியாவில் ஓர் அரசியல் சீர்திருத்தம் அவசியம் என்பதை மேற்கு நாட்டினர் மட்டுமல்ல இரசியாமீது மிகுந்த பற்றுள்ள இரசியர்களும் கடந்த பல ஆண்டுகளாகக் கூறிவருகின்றனர். ஆட்சியாளர்களின் பொறுப்புக் கூறல் பொறிமுறைமை மேம்படுத்தப் பட வேண்டும் என்பது பலராலும் உணரப்பட்டுள்ளது. இரசியப் பாராளமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுப்பது அதன் முதற்படி. சதுரங்க விளையாட்டிலும் குங்குஃபு சண்டையிலும் தேர்ச்சி பெற்ற முன்னாள் உளவுத்துறை அதிபரான புட்டீன் சிரியாவில் தனது நகர்வுகளைச் சாமர்த்தியமாக்ச் செய்து தனது எதிரிகளைத் திணறடித்தார். அதே போல் புட்டீன் தனது பொருளாதார அறிவை இரசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்த வேண்டும். அவரது புதிய அரசியலமைப்பு சதுரங்க விளையாட்டில் அரசரைப் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தும் CASTLING போல் புட்டீனைப் பாதுகாப்பான அதிகார நிலைக்கு உயர்த்தாமல் இரசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய வகையில் அமைய வேண்டும். இரசியாவின் முன்னாள் சதுரங்க உலகச் சம்பியன் கஸ்பரோவ் புட்டீன் தன்னை இரசியாவின் உச்சத் தலைவராக்க முயல்கின்றார் எனக் குற்றம் சாட்டுகின்றார்.வ்

Monday, 20 January 2020

சுலேமானீக்குப் பின்னர் ஈரானும் ஈராக்கும்


ஏழாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய ஈரானியர்கள் மதிநுட்பம் மிக்கவர்கள், பண்பாடு நிறைந்தவரக்ள், அவர்களது விருந்தோம்பல் உலகமறிந்தது. அத்தகைய பெருமை மிக்க ஈரானின் சிறப்புப்படையணியான குட்ஸின் தளபதி காசெம் சுலேமானீயைக் கொன்றதை அமெரிக்கா பலமுனை வெற்றியாகப் பார்க்கின்றது. லிபியாவின் பென்காசியில் அமெரிக்கத் தூதுவர் கொல்லப்பட்டமைக்கு சுலேமானீ பொறுப்பு என நம்பிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மூதவை உறுப்பினர் மைக் பொம்பியோ பல மாதங்களாக சுலேமானியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். 2019 ஜூலையில் அதிபர் டொனால்ட் டிரம்பினது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு தருணம் பார்த்துக் காத்திருந்தார். சுலேமானியைக் கொன்றதன் மூலம் இனி ஒரு அமெரிக்கத் தூதுவர் கொல்வது தடுக்கப்பட்டது மட்டுமல்ல 1. எதிர் காலத்தில் ஈரானின் அதிபராக சுலேமானீ வரமுடியாமல் போனமை, 2. ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை தடுத்தமை, 3. தீவிர அமெரிக்க விரோதக் கொள்கையுடைய ஹிஸ்புல்லா அமைப்பின் உச்ச நட்பை அழித்தமை போன்றவையும் அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றிகளாகக் கருதலாம். 


John Avery on Iran: Iran has an ancient and beautiful civilization, which dates back to 5,000 BC, when the city of Susa was founded. Some of the earliest writing that we know of, dating from approximately 3,000 BC, was used by the Elamite civilization near to Susa. Today’s Iranians are highly intelligent and cultured, and famous for their hospitality, generosity, and kindness to strangers. Over the centuries, Iranians have made many contributions to science, art and literature, and for hundreds of years they have not attacked any of their neighbors. Nevertheless, for the last 90 years, they have been the victims of foreign attacks and interventions, most of which have been closely related to Iran’s oil and gas resources. The first of these took place in the period 1921-1925, when a British-sponsored coup overthrew the Qajar dynasty and replaced it by Reza Shah.

நிறைவேறாத கனவுகள்
ஈரானின் கடற்படையை அழிப்பது, ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி நிலைகளை அழிப்பது போன்றவை கூட சுலேமானீயைக் கொல்வதற்கு ஈடாகாது என மைக்கேல் பிரெஜென்ற் என்னும் ஈராக்கில் பணியாற்றிய அமெரிக்கப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி அமெரிக்க பாராளமன்றத்தின் முன் சாட்சியமளித்திருந்தார். அந்த அளவிற்கு அமெரிக்காவின் பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலளிப்பவராக சுலேமானீ திகழ்ந்தார். 2003இல் இருந்தே அமெரிக்காவிற்கு எதிராக ஈராக்கில் ஈரான் செயற்படுகின்றது. யேமன் முதல் ஈராக்வரை அமெரிக்க நகர்வுகளைச் சிக்கலாக்குவதில் சுலேமானீ வெற்றி கண்டார். ஆனால் அமெரிக்காவை மேனா (MENA) என்று அழைக்கப்படும் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்கப் பிரதேசத்தில் இருந்து விலக்க முன்னர் சுலேமானி கொல்லப்பட்டார். அல்ஜீரியா, எகிப்த்து, லிபியா, லெபனான், சிரியா, யேமன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஈரானிய பேரரசை உருவாக்கும் ஈரானிய மதவாதிகளின் கனவு கரு நிலையில் இருக்கும் போதே சுலேமானீ கொல்லப்பட்டார்.


மைக் பொம்பியோ காத்திருந்த தருணம்
2018 மே மாதம் அமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்த்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஓராண்டு பொறுத்திருந்த ஈரான் 2019 மே மாதம் ஹோமஸ் நீரிணையூடாகச் செல்லும் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் செய்யத் தொடங்கியது. அடுத்த மாதம் அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது. அதற்கு அடுத்த மாதம் பிரித்தானியக் கொடியுடன் சென்ற ஒரு எரிபொருள் தாங்கிக் கப்பலைக் கைப்பற்றியது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதலைச் செய்து. பின்னர் 2019 டிசம்பரில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் செய்யப்பட்டதில் ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டார். அதை ஈரானின் ஆதரவு பெற்ற படைக்குழுக்களே செய்தன என அமெரிக்கா குற்றாம் சாட்டியது ஆனால் இந்த தாக்குதல்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஈரான் மறுத்தது. ஈரானின் சேட்டைகளுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்காது என ஈரான் கருதுவதாக அமெரிக்கா நம்பியது. அதனால் காத்திரமான பதிலடி கொடுக்கும் முடிவை அமெரிக்கா எடுத்தது. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக்குழுக்களின் நிலைகளில் தாக்குதல் செய்து ஐம்பது போராளிகளைக் கொன்றது. அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டின் இறுதி நாளில் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தை போராளி அமைப்பினர் முற்றுக்கையிட்டு முன்னரங்க காவல் நிலைகளை அழித்தனர்.  இந்தச் செயல் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ காத்திருந்த தருணத்தை அவர் காலடியில் போட்டது. சுலேமானீ இலகுவாகக் கொல்லப்பட்டார்.  ஜனவரி 3-ம் திகதி சுலேமானீ கொல்லப்பட்டவுடன் சவுதி இளவரசர் தனது உடன்பிறப்பான துணைப் பாதுகாப்பு அமைச்சரை அவசரமாக அமெரிக்கா அனுப்பினார். அவரது பயணத்தின் நோக்கம் ஒரு அமெரிக்க-ஈரான் மோதலை தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.

ஈராக் மீது ஈரானின் பிடியை அமெரிக்கா தகர்க்குமா?
ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை அமெரிக்கா ஒழிப்பதற்கான முதற்படியாக சுலேமானீயின் கொலை அமைந்துள்ளது.  ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்திற்கு எதிராக இனி அமெரிக்கா காய்களை நகர்த்தும். அதனால் ஈரான்-அமெரிக்க மோதல் களமாக ஈராக் மாறும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. ஈராக்கியப் பாராளமன்றம் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தாலும் அது தலைமை அமைச்சரின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராது. தற்காலிக தலைமை அமைச்சராக இருக்கும் அதில் அப்துல் மஹ்தி ஈரானின் ஆதிக்கம் ஈராக்கில் அதிகரிக்கும் போது தனக்கு ஆபத்து எனக் கருதுவதால் அவர் ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவர் ஒப்புதல் அளித்தால் அமெரிக்க நடுவண்வங்கியில் உள்ள ஈராக்கிய அரசின் கணக்கு முடக்கப்படும் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா ஈராக்கிற்கு விடுத்துள்ளது. சுலேமானீயுடன் கொல்லப்பட்ட ஈராக்கிய பொது நகர்வு அலகின் தளபதியின் இழப்பு பல படைக்குழுக்களைக் கொண்ட அந்த அலகை நிலை குலையச் செய்துள்ளது. 

பழிவாங்குமா ஹிஸ்புல்லா? 
சுலேமானீயின் படுகொலை உலகெங்கும் உள்ள சியா இஸ்லாமியர்களுக்கு அமெரிக்கா மீது உள்ள வெறுப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈரானியத் தளபதி காசெம் சுலேமானியையும் ஈராக்கிய போராளிக் கூட்டமைப்பான பொது நகர்வுக் குழுவின் தளபதி அபு மஹ்டி அல் முஹண்டிஸையும் கொன்றமைக்கு ஈடான பழிவாங்கல் செய்யப்பட வேண்டும் என ஹிஸ்புல்லா அமப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா 2020 ஜனவரி 5-ம் திகதி சூழுரைத்திருந்தார். மேலும் அவர் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் தமது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப்படையினரை அகற்றும் வகையில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி அமெரிக்கப்படையினருடன் ஒரு நேரடி மோதலை ஹிஸ்புல்லாவால் செய்வது கடினம். இஸ்ரேலின் அச்சுறுத்தல் லெபனானில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில் ஹிஸ்புல்லா உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக சிரிய உள்நாட்டுப் போரில் பெரும் ஆளணி இழப்பை ஹிஸ்புல்லா சந்தித்துள்ளது. லெபனானின் அரச படைகளுக்கு அமெரிக்கப்படையினர் பயிற்ச்சியளித்து வருகின்றனர். அவர்களின் மீது சிறிய அளவிலான அதிக தாக்குதலை ஹிஸ்புல்லா மேற்கொள்ளலாம். சுலேமானீயின் கொலையால் அவரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப் படும் ஹிஸ்புல்லா உட்பட்ட படைக்குழுக்கள் கிளர்ந்து எழு வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமாக இருக்கலாம். அந்த கிளர்ச்சியை அடக்கும் போர்வையில் அந்தப் படைக்குழுக்களை முற்றாக அழிப்பதற்கு அமெரிக்க முற்படலாம் என்பதையும் ஹிஸ்புல்லா உணரும். ஹிஸ்புல்லா வெறும் படைக்கலத் தாக்குதல் மட்டுமல்ல இணையவெளித்தாக்குதல்களையும் செய்யக் கூடியது. 

ஈரான் குழம்புமா?
சுலேமானீ கொல்லப்பட்டவுடன் ஈரானிய மக்கள் ஆட்சியாளர்களின் பின்னால் திரண்டது உண்மை. ஈரானின் கலாச்சார நிலையங்கல் உட்பட 52 நிலகள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை ஈரானியர்களை ஆத்திரப்படுத்தியது மட்டுமல்ல பொருளாதாரச் சிக்கல்களால் அதிருப்தி கொண்டிருந்தவர்களையும் அரசு சார்பானவர்களாக்கியது. ஆனால் ஈரான் கொடுத்த பதிலடி போதாது என்பதை அவர்கள் உணரும் போது அவர்கள் அரசுக்கு எதிராகத் திரும்பலாம். அமெரிக்காவின் உளவிற்கான எதிர்ப்பு நடவடிக்கையை ஈரான் சரியாகச் செய்யவில்லை. ஈரானின் பெரும் சொத்தான தளபதியை அமெரிக்க உளவாளிகள் நிறைந்த லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு காசெம் சுலேமானீயை போதிய பாதுகாப்பின்றி அனுப்பியது தவறானது என ஈரானியர்கள் கருதினால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுக்கலாம். உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தி பல ஈரானியர்களை ஈரானியப் படையினர் கொன்றதும் ஈரானிய மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது. அந்த சினத்துடன் ஈரானியப் பொருளாதார தேய்வால் ஏற்படும் விரக்தி இணையும் போது ஈரானிய ஆட்சியாளர்கள் பெரும் உள்நாட்டுக் குழப்பத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இது எவ்வளவு தூரம் சரியானது என்பதை 2020 பெப்ரவரியில் நடக்கும் ஈரானியப் பாராளமன்றத் தேர்தலில் எதிர்பார்க்கலாம். 2019 மே மாதம் ஈரானுக்கு எஸ்-400 என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமையை விற்பனை செய்ய இரசியா மறுத்திருந்தது. ஆனால் ஈராக்கிற்கு விற்பனை செய்ய இரசியா தற்போது முன்வந்துள்ளது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஈரானின் ஆதிக்கம் வளர்வதை இரசியா விரும்பவில்லை. அதனால் இரசியாவிடமிருந்து பெரும் உதவியை ஈரான் எதிர்பார்க்க முடியாது. 

சுலேமானீயின் திறன் தீவிரவாத அமைப்புக்களை உருவாக்கி, வளர்த்து அவற்றை புவிசார் நலன்களுக்குப் பாவிப்பதில் முதன்மையானதாக அமைந்திருந்தது. அமெரிக்க அரசுறவியலாளர்கள் அந்த அமைப்புக்களை கையாளும் வழிகள் தெரியாமல் கடந்த 40 ஆண்டுகளாக திணறுகின்றார்கள். அவற்றில் கையாளவதற்கு மிகவும் கடினமானது ஹிஸ்புல்லா அமைப்பு. அதனால் அமெரிக்காவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் சிறிய தாக்குதல்களில் தொடங்கி ஒரு பெரிய போராக மாறக்கூடிய வாய்ப்பு தற்போது அதிகமாகக் காணப்படுகின்றது. 

Wednesday, 8 January 2020

அமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை?

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் படையினரை ஈராக்கில் கொல்லக் காரணமாக அமைந்தவர், ஐம்பதினாயிரம் சியாப் போராளிகளைக் களத்தில் இறக்கி சிரியாவில் பஷார் அல் அசத்தின் ஆட்சியைத் தக்க வைத்தவர், ஈராக்கில் ஈரானின் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தவர் என அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானின் குட்ஸ் படைத் தளபதி காசெம் சுலேமானீயின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஈரானின் அடுத்த அதிபராக சுலேமானீ வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.  படைத்தளபதி சுலேமானீயிலும் பார்க்க அரசியல்வாதி சுலேமானீ மிகவும் ஆபத்தானவர் என்பதை ஈரானின் எதிரிகள் நன்கு அறிவர். 

துல்லிய உளவுத் தகவலும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணையும்
சுலேமானியைக் கொல்வதற்கு தயக்கம் காட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதியில் தனது பாதுகாப்புச் செயலர் மைக் பொம்பியோவின் வற்புறுத்தலுக்கு இணங்கி சுலேமானீ மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். லெபனான் சென்ற காசிம் சுலேமானி அமெரிக்க உளவாளிகள் நிறைந்த டமஸ்கஸ் மற்றும் பாக்தாத் விமான நிலையங்களூடாக ஈரான் திரும்ப முயன்றார். ஈராக்கில் செயற்படும் வலிமை மிக்க ஈரானியப் போராளிகளின் கூட்டமைப்பான Popular Mobilization Front (PMF)இன் தலைவர்Abu Mahdi al-Muhandis உடன் பேச்சு வார்த்தைகள் நடத்திவிட்டு பாக்தாத் விமான நிலையம் நோக்கி இருவரும் பயணித்துக் கொண்டிருக்கையில் அமெரிக்காவின் MQ Reaper என்ற ஆளில்லா விமனத்தில் இருந்து வீசப்பட்ட AGM-179 Joint Air-to-Ground Missile (JAGM) என்ற புதிய வகை ஏவுகணைகளால் படுகொலை செய்யப்பட்டார். உயர்தர உணரிகள், லேசர் வழிகாட்டல்கள், தொலைக்காட்சிக்கருவிகள், உட்படப் பல்வேறு வகையான வழிகாட்டல்களுடன் எந்த இலக்கையும் புகைகள், மூடுபனிகள் ஆகியவற்றின் மத்தியிலும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய அந்த ஏவுகணை சுலேமானியையும் முஹாண்டியையும் அந்த இடத்திலேயே கொன்றது.



பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கும் படுகொலை
ஈரானியர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரும் ஈரானிய உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னியின் பெருவிருப்பத்துக்குரியவருமான சுலேமானியின் கொலைக்கு ஈரான் எப்படியும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது. ஈரான் பதிலடி கொடுத்தால் ஈரானில் உள்ள கலாச்சார நிலையங்கள் உட்பட 52 நிலைகள் மீது புதிய படைக்கலன்களால் தாக்குதல் செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலடியாக அமெரிக்காவை 13 வழிகளில் எம்மால் தாக்க முடியும் என ஈரான் சூளுரைத்தது. அதன் முதல் வழியாக 2020 ஜனவரி 8-ம் திகதி ஈரான் 22 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கப்படை நிலைகள் மீது ஏவியது.



ஈரானின் 13 வழிகள் இப்படி இருக்கலாம்:
1. அமெரிக்கப் படைநிலைகள் மீது ஏவுகணை வீசித் தாக்குதல்
2. 9/11 பாணியில் விமானத் தற்கொடைத் தாக்குதல்
3. மீன் பிடிப்படகுகள் போல பயணித்து அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது தற்கொடைத் தாக்குதல்.
4. சீனாவிடமிருந்து வாங்கிய கப்பல் அழிப்பு ஏவுகணைகளை அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது வீசி அவற்றை அழிக்கலாம்.
5. அமெரிக்காவில் மக்கள் நெரிசல் நிறைந்த இடங்களில் வாகனத்தை ஓட்டி மக்கள் மீதி மோதிக் கொல்லலாம்.
6. நேர வெடி குண்டுகளை அமெரிக்க நகரங்களை வெடிக்க வைக்கலாம்.
7. ஹிஸ்புல்லா அமைப்பினர் மேற்காசியாவில் அல்லது வட ஆபிரிக்காவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தலாம்.
8. சவுதி அரேபிய எரிபொருள் உற்பத்தி நிலயங்களை ஏவுகணை வீசி அழிக்கலாம்.
9. இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து பெருமளவு ஏவுகணைகளை ஒரேயடியில் வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம்.
10. ஈரானின் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்கள் மூலம் அமெரிக்க தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்.
11. இரசியாவை ஹோமஸ் நீரிணையில் உள்ள ஈரானியத் துறைமுகம் ஒன்றில் ஒரு கடற்படைத் தளம் அமைக்க அனுமதிக்கலாம். அதன் மூலம் உலக எரிபொருள் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
12. சியா இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாஹ்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அங்குள்ள அமெரிக்கத் தளத்தை அகற்றலாம்.
13. ஈரானைச் சூழவுள்ள அமெரிக்கப் படை நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் அல்லது தற்கொடைத்தாக்குதல் செய்யலாம்.

இப்படியெல்லாம் நாம் யோசிக்கும் போது ஈரானும் அமெரிக்காவும் வேறு விதமாக யோசித்தன. ஆம் தீராப்பகை உலகப் பொருளாதாரத்திற்கு கேடாய் முடியும் என்பதால் வேறாய் யோசித்தார்கள்:
US: Shoot to kill
Iran: Shoot to miss 

Monday, 16 December 2019

அமெரிக்காவின் விண்வெளிப்படை

2020-ம் ஆண்டிற்கான அமெரிக்கப் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு $738பில்லியன் டொலர்கள். ஆகும். இது 2019இற்கான செலவிலும் பார்க்க 22மில்லியன் டொலர்கள் அதிகமானது.  அமெரிக்க மக்கள் இந்தச் செலவு மிக அதிகம் எனக் கருதுகின்றார்கள். அமெரிக்கா எதிர் கொள்ளும் அரச நிதிப் பற்றக்குறைக்கு மத்தியில் இந்த அதிகரித்த நிதி ஒதுக்கீடு அமெரிக்காவின் உலக ஆதிக்கம் எந்த அளவிற்கு சீனாவிடமிருந்தும் இரசியாவிடமிருந்தும் ஈரானிடமிருந்தும் சவால்களை எதிர் கொள்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து  போட்டியிட முயலும் பேணி சண்டேர்ஸ் அமெரிக்காவின் படைத்துறைச் செலவு அதிகரிப்பு கோழைத்தனமானது என்றார். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை படையினருக்கு 3.1% ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது. வெள்ளை மாளிகை கேட்டதிலும் பார்க்க மேலதிகமாக பன்னிரண்டு F-35 போர் விமானங்கள் வாங்கப்பட வேண்டும் என அமெரிக்கப் பாராளமன்றம் தீர்மானித்துள்ளது. ஒன்பது புதிய வெர்ஜீனியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு 22பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

விண்வெளிப்படை
1947-ம் ஆண்டின் பின்னர் புதிதாக ஒரு படைத்துறை விண்வெளிப்படை என்னும் பெயரில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிடமிருக்கும் தரைப்படை, வான்படை, கடற்படை. கடல்சார் படை கரையோரப் பாதுகாப்புப்படை ஆகியவற்றுடன் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விண்வெளிப்படைக்கு 2பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் விண்வெளிப்படை:
  1. விண்வெளியில் அமெரிக்கா சுதந்திரமாகச் செயற்படவும்
  2. விண்வெளியில் அமெரிக்கா துரிதமாகச் செயற்படவும்
தேவையான ஒழுங்கமைப்புக்கள், பயிற்ச்சிகள், உபகரணங்கள் வழங்கப்படவேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு சீனா தனது செய்மதி ஒன்றை தரையில் இருந்து ஏவுகணை ஒன்றை வீசி அழித்து ஒரு பரிசோதனையைச் செய்தது. பின்னர் விண்வெளியில் உள்ள உடைந்த செய்மதிகளை வாரி அள்ளக் கூடிய செய்மதிகளைப் பரிசோதித்தது. அதனால் சீனா விண்வெளியில் போர் நடவடிக்கைகளை விரிவு படுத்தும் முயற்ச்சியில் ஈடுபடுவதாக அமெரிக்கப் படைத்துறையின் அச்சம் வெளியிட்டனர். அதே துறையில் தாமும் இறங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தனர். இதனால் அமெரிக்கா விண்வெளிப்படையை உருவாக்குகின்றது. இதுவரை வான்வெளியில் (Sky) ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா விண்வெளியிலும் (space) ஆதிக்கம் செலுத்த முனைகின்றது.



அமெரிக்காவின் மேற்சட்டை செய்மதிகள்-2021 (JACKET -2021)
அமெரிக்காவின் பெரும்பாலான வேவுபார்க்கும் செய்மதிகள் தரையில் இருந்து 35,800கிலோ மீட்டர் உயரத்தில் செயற்படுபவை. அவற்றை உருவாக்க ஒரு பில்லியன் டொலர்கள் செலவாகும். அமெரிக்கா உருவாக்கவிருக்கும் SKY JACKET -2021 என்னும் செய்மதிகள் ஆறு மில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கப்படுகின்றன. இவை மரபுவழி செய்மதிகளிலும் பார்க்க குறைந்த உயரத்தில் செயற்படும். அதனால் பூமியின் மேற்பரப்பில் இருந்து துல்லியமாக தகவல்களைத் திரட்டக் கூடியன. அதனால் அமெரிக்காவின் விண்வெளிப் பாதுகாப்பில் SKY JACKET -2021 செய்மதிகள் இனி முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றன. இவற்றை ஒழுங்கு படுத்த Pit Boss என்னும் மென்பொருள் உருவாக்கப்படுகின்றன. Pit Boss திட்டம் என்பது விண்ணில் குறைந்த உயரத்தில் செயற்படும் செய்மதிகளில் இருந்து தகவல்களைத் திரட்டி அவற்றை நிரைப்படுத்துவதாகும். இது ஒரு பாரிய கணினி மென்பொருள் உருவாக்கும் திட்டமாகும். இதன் செயற்பாடுகள்  முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் மூலம் கணினிகளால் செய்யப்படும். செயற்பாடுகள் யாவும் துரிதமாக நடைபெறும். இத்திட்டத்தில் முதன்மை நிறுவனங்களாக பிரித்தானியாவின் BAE Systems உடன் அமெரிக்காவின் SEAKR Engineering, Inc and Scientific Systems Company ஆகியவையும் இணைந்து செயற்படும்.. இவற்றுடன் Microsoft, Applied Technology Associates, Advanced Solutions Inc, Kythera Space Solutions and NKrypt போன்ற கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து கொள்கின்றன.

எதிரியின் நடவடிக்கைகளை உடன் இனம் காணுதல்
பல நாடுகளும் ஜீ.பி.எஸ் எனப்படும் Global Positioning Sytem என்னும் முறைமையை வழிகாட்டலுக்கும் படைத்துறை நிலையறிதலுக்கும் பாவித்து வருகின்றன. 2018 நவம்பரில் நேட்டோப் படைகள் பின்னாந்துடன் இணைந்து போர்ப்பயிற்ச்சி செய்து கொண்டிருக்கும் போது பின்லாந்தினதும் நோர்வேயினதும் ஜீ.பி.எஸ் முறைமைகளை இரசியா குழப்பியது. அதனால் இரு நாடுகளினதும் வான் போக்குவரத்து ஆபத்திற்கு உள்ளானது. சிரியாவிலும் இரசியா இஸ்ரேலிய விமானங்களை அதே மாதிரிக் குழப்பியது. இரசியாவின் அலைவரிசைக் குழப்பல் ஜீபிஎஸ் முறைமையை செல்லாக்காசு ஆக்கிவிட்டது.  ஜீபிஎஸ்ஸிற்கு மாற்றீடாக Positioning, Navigation, and Timing (PNT) முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. . Pit Boss ஆல் மேற்சட்டை செய்மதிகள் இயக்கப்படும் போது பரிமாறப்படும் தகவல்களால் Positioning, Navigation, and Timing (PNT) எனப்படும் இடமறித்தல், வழிகாட்டல், நேரக்கணிப்பிடல் செயற்பாடு அதிக திறனுள்ளதாகின்றது. கிடைக்கும். விண்ணில் உள்ள பல செய்மதிகள் செயற்கை நுண்ணறிவின் மூலம் செயற்படும்போது பூமியில் எதிரியின் படை நடவடிக்கைகளை துல்லியமாகவும் துரிதமாகவும் இனம்காண முடியும். இதனால் சீனாவும் இரசியாவும் உருவாக்கும் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர் சோனி ஏவுகணைகளை அமெரிக்காவால் இடைமறித்து அழிக்க முடியும். மிகப் பரந்த அளவில் Pit Boss முறைமை செயற்படுவதால உலகெங்கும் உள்ள அமெரிக்கப் படை நிலைகளை எதிரியின் ஹைப்பர் சோனிக் ஏவுகணகளில் இருந்து பாதுகாக்கலாம்.

மின்காந்த அதிர்வுத் தாக்குதல்
மின்காந்த அதிர்வுகளை மிகப் பாரிய அளவில் ஒரு எதிரி நாட்டின் மேல் பரவச் செய்வதால் அங்கு பெரிய ஒரு பிரதேசத்தில் கணினிகள், தொலைத்தொடர்புகள், இணையவெளித் தொடர்புகள் போன்றவற்றையும் மின்வழங்கலையும் முற்றாக செயலிழக்கச் செய்ய முடியும். ஆனால் எந்த ஒரு கட்டுமானமும் அழிக்கப்பட மாட்டாது. ஒரு எறிகணை மூலமாகவோ அல்லது ஆளில்லவிமானம் மூலமாகவோ மின்காந்த அதிர்வு பிறப்பாக்கியை எதிரி நாட்டின் மேல் ஏவலாம். சென்ற நூற்றாண்டில் அமெரிக்கா பரிசோதித்த நியூட்டோன் குண்டும் இத்தகையதே. அது கதிர் வீச்சு மூலம் எதிரியின் படையினரை அழிக்கும். மின்காந்த அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய நாடுகளே செய்யவல்லனவாக இருந்தன.  ஆனால் இப்போது ஈரானும் வட கொரியாவும் அத் தாக்குதலைச் செய்யும் வலிமையை உருவாக்கி வருகின்றன. அமெரிக்கா மேல் அவை தாக்குதல் செய்தால் 18 ஆண்டுகளுக்கு ஓர் அமெரிக்க நகரத்தில் மின்விநியோகம் இல்லாமல் செய்யலாம். அதனால் பாரிய பொருளாதார இழப்பு ஏற்படும் அச்சம் உள்ளது. 2019 மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மின்காந்த அதிர்வுத் தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு என ஒரு அவசர நிறைவேற்றதிகாரக் கட்டளையைப் பிறப்பித்தார். அமெரிக்காவின் புதிய விண்வெளிப்படையும் குறைந்த உயரத்தில் செயற்படும் மேற்சட்டைச் செய்மதிகளும் அமெரிக்காவை மின்காந்த அதிர்வுத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதை உறுதி செய்யும்.

உலகெங்கும் ஆதிக்கம் செலுத்திய பிரித்தானியா இப்போது ஒதுங்கியிருந்து செயற்படுபவது போல் அமெரிக்காவும் செயற்படவேண்டும் என்ற கருத்து அமெரிக்கர்களிடையே வலுவடைந்து வந்தாலும் அமெரிக்க ஆட்சியாளர்களும் படைத்துறையினரும் இப்போதைக்கு அமெரிக்காவை உலக ஆதிக்கத்தை கைவிடச் செய்யும் நோக்கத்துடன் இல்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...