Monday, 3 July 2017

இந்தியாவின் மோடியும் அமெரிக்காவின் டிரம்பும்

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டபோது அமெரிக்கா வேறு டிரம்ப் வேறு மோடி வேறு இந்தியா வேறு என்பது உறுதியானது. இருவருக்கும் தத்தம் நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் வேறு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வேறு என்பது வெளிப்படையானது. இருவரும் சீர்திருத்தம் எனச் சொல்லிக் கொண்டு செய்யும் சீர்கேடுகள் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கான தேவை இரு நாடுகளின் கேந்திரோபாய நோக்கங்களுக்கு அவசியமானதாகவும். அந்தத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலகில் அதிக படைக்கலன்களை விற்பனை செய்யும் அமெரிக்காவும் உலகில் அதிக அளவு படைக்கலன்களை கொள்வனவு செய்யும் இந்தியாவும் கைகோர்த்துக் கொள்வதில் பெரிய பிரச்சனைகள் இருக்காது. தனது விற்பனைகள் தொடர்ந்தும் வளர்ச்சியடையுமிடத்து அற்ப மனித உரிமை மீறல்களை எல்லாம் அமெரிக்கா கண்டுகொள்ளாமல் இருப்பதில் கில்லாடி.

இந்தியா போன மோடி
இந்தியாவில் ஒரு நகைச்சுவை பிரபல்யம். அதன் படி சீன அதிபர் புது டில்லி சென்று மோடியிடம் உங்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ச்சியுடன் இந்தியா வந்துள்ளேன் என்றாராம். மோடியும் சொன்னாராம் நானும் உங்களைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் இந்தியா வந்துள்ளேன் என்றாராம். அந்த அளவிற்கு மோடி வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வார். ஆனால் அமெரிக்காவில் மோடி அதிக நாட்கள் செலவு செய்யவில்லை. 2019-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என அமெரிக்க வெளியுறவுத் துறை நம்புகின்றது. இதனால் மோடிக்கான வரவேற்பும் சிறந்த்தாக இருந்தது. ஜோர்ஜ் டபிளியூ புஷும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவின் ஆசியா நோக்கிய நகர்வுக்கு சீனாவிலும் பார்க்க இந்தியாவே சிறந்த நட்பு நாடு என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார்கள். டிரம்பும் அந்தக் கொள்கையையே தொடர்கின்றார்.

இஸ்லாமியப் பூச்சாண்டி
மோடி இந்தியாவில் இருக்கும் 189 மில்லியன் இசுலாமியர்களை வெறுப்பதாகக் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்தார். டிரம்ப் உலகெங்கும் இருக்கும் 1800மில்லியன் இசுலாமியர்களை வெறுப்பதாகக் காட்டிக் கொண்டு அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தார். இரண்டு பேரும் சமூக வலைத் தளங்களில் சீன் போடுவதிலும் ஃபில்ம். காட்டுவதிலும் சூரர்கள். மோடி பங்களா தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு கள்ளமாக வருபவர்களைத் தடுக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டியவர். டிரம்ப் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு இரகசியமாகக் குடியேறுபவர்களைத் தடுக்க வேண்டும் என முழங்கியவர். இருவரும் பரப்பியத்தைக் (populism) கையில் எடுத்து ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்.

அமெரிக்கா முதல் என்பதும் இந்தியாவில் உற்பத்தி என்பதும்
டிரம்ப் அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என்ற கொள்கையுடையவர். இது பல இந்தியர்களின் அமெரிக்கப் பச்சை அட்டைக் கனவை சிதைத்தது. மோடி இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்தவர். இருவரது கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துவராதவை. ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் புதிய அத்தியாயத்தின் முன்னுரையை எழுதியவர் பராக் ஒபாமாவின் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ஹிலரி கிளிண்டன். இவர்களின் பல வெளியுறவுக் கொள்கைகளை  தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் டிரம்ப் இந்தியாவுடனான உறவைப் பொறுத்தவரை அவர்களின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுகின்றார்.

பயங்கரவாத ஒழிப்பு
அமெரிக்காவும் இந்தியாவும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என உள்நாட்டிலும் உலக அரங்கிலும் முழங்குபவை. இரு நாடுகளினதும் பயங்கரவாத எதிர்ப்பு பாக்கிஸ்த்தானில் சந்திக்கும் போது அது எப்போதும் சந்திப்பாக இருந்திருக்கவில்லை. பல கட்டங்களில் அது மோதலாகவே இருக்கின்றது. இந்தியாவுடனான உறவை வளர்க்க இந்த மோதல் தவிர்ப்பு அவசியம் என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா தனது படை நடவடிக்கைகளைத் தொடரும் வரை பாக்கிஸ்த்தானை அதிருப்திப் படுத்த அமெரிக்காவால் முடியாது. மோடியை மகிழ்ச்சிப்படுத்த கஷ்மீரில் செயற்படும் ஹிஸ்புல் முஜாஹிடீன் அமைப்பின் தலைவர் செய்யது சலாஹுதீனை ஒரு பயங்கரவாதியாக அமெரிக்கா மோடி அமெரிக்கா செல்வதற்கு முதல் நாள் அறிவித்தது. அதை மறுத்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துரை அவரை ஒரு விடுதலைப் போராளி என்றது. லக்ஷர் இ தொய்பா, ஹக்கானி அமைப்பு போன்ற இந்திய எதிர்ப்பு அமைப்புக்கள் பாக்கிஸ்த்தானில் இருந்து செயற்படுகின்றன. ஆனால் ஹிஸ்புல் முஜாஹிடீன் அமைப்பு முழுக்க முழுக்க கஷ்மீரில் இருந்து செயற்படும் ஓர் அமைப்பாகும். அதன் தலைவர் கஷ்மீரில் மிகவும் பிரபலமான ஒருவராகும். இவர் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரின் சட்டசபைத் தேர்தலில் 1987-ம் ஆண்டு போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். அந்தத் தேர்தலில் வாக்குப் பெட்டிகள் சட்ட விரோதமாக நிரப்பப்பட்டன என அவர் குற்றம் சாட்டி தன்னைத் தீவிரவாதியாக மாற்றிக் கொண்டார்.


டிரம்பிற்கு முக்கியத்துவம்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு பரிஸ் சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரத்து செய்த டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இந்தியாவைக் கடுமையாக விமர்சித்ததால் பாதிக்கப்படுமா என்ற அச்சத்தை உருவாக்கியது. அந்த அச்சம் டிரம்ப் மோடிக்குக் கொடுத்த இரவு விருந்தின் போது தவிடு பொடியானது. டிரம்ப் மோடிக்கு தனது வதிவிடமான வெள்ளை மாளிகைச் மோடிக்குச் சுற்றிக் காட்டிய டிரம்ப் பின்னர் நடந்த விருந்தின் போது துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மத்தீஸ், டிரம்ப்பின் சிறப்பு ஆலோசகர் ஜெராட் குஷ்னர் உடபட 13 உச்ச மட்டத்தினரையும் அழைத்திருந்தார். இது டிரம்பிற்கு வழங்கப்பட்ட உச்சக் கௌரவமாகப் பார்க்கப்படுகின்றது. டிரம்பின் நிர்வாகத்தில் அமெரிக்காவின் முக்கிய பதவிகளில் ஒன்றான தெற்காசியாவிற்கும் நடுவண் ஆசியாவிற்குமான துணை அரசுத்துறைச் செயலர் பதவி இப்போதும் காலியாகவே உள்ளது. இதனால் உருவான நிர்வாகத்தின் கேந்திரோபாய இடைவெளி இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை இதுவரை பெரிதாகப் பாதிக்கவில்லை.

இந்தியா பழையனவற்றின் புகலிடமா?
உலகின் இரண்டாவது பெரிய சூட்டிகைக் கைப்பேசிச் சந்தை இந்தியாவாகும். அத்துடன் அந்தச் சந்தை மிக வேகமாக வளர்கின்றது. ஆனால் அமெரிக்க நிறுவனமான அப்பிளின் மிகப் புதிய கைப்பேசிகள் பல இந்தியர்களால் வாங்க முடியாமல் இருக்கின்றது. இதனால் அப்பிள் தனது பழைய ஐ-போன்-5-எஸ் கைப்பேசிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யத் தொடங்கியது. அத்துடன் நரேந்திர மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் திட்டத்தைத் திருப்திப்படுத்த புதிய ஐபோன்களை அப்பிள் இந்தியாவில் உற்பத்தி செய்யவும் தொடங்கியுள்ளது. இந்த பழையனவற்றை இந்தியாவிற்கு அமெரிக்காவிற்பனை செய்வது வெறுமனவே கைப்பேசிகளில் மட்டுமல்ல படைத்துறை உபகரணங்களிலும் செய்யப்படுகின்றது. அமெரிக்காவிற்கு இனித் தேவையற்றுதாகிவிட்ட F-16 போர் விமானங்களை அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் காலாவதியாகிப் போன தொழில்நுட்பங்கள் இந்தியாவில் கொட்டி அமெரிக்க நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன என F-16 உற்பத்தி பற்றிச்சிலர் கருத்து வெளியிட்டனர். பாக்கிஸ்த்தானிடம் ஏற்கனவே F-16 போர் விமானங்கள் இருக்கின்றன. சீனாவின் J-20 போர் விமானங்களுக்கு லொக்ஹீட் மார்ட்டினின் F-16 ஈடாக மாட்டாது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யும் F-16இல் புதியரக படைக்கலன்களும் உணரிகளும் பொருத்தப்படும் என இந்தியாவில் உள்ள F-16இன் இரசிகர்கள் வாதாடுகின்றனர்.

விமான இயந்திர உற்பத்திப் புள்ளி
இந்தியா இரசியாவிடமிருந்து வாங்கிய போர் விமானங்கள் பல அதிக அளவில் விபத்துக்களைச் சந்தித்தன. அவற்றின் தரம் சரியில்லை என இந்தியாவில் இருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் விமானங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாதமையால் அவை விபத்துக்களைச் சந்திக்கின்றன. ஆனால் விமான இயந்திர உற்பத்தித் துறையில் அமெரிக்கத் தொழில்நுட்பத்தையும் அனுபவத்தையும் பெறுவது இந்தியாவிற்கு அவசியமானதாகும். இதற்கான ஆரம்பப் புள்ளியாக F-16 உற்பத்தியை பார்க்கின்றது.

விமானந்தாங்கிகளுக்கான EMALS
EMALS என சுருக்கமாக அழைக்கப்படும் விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்களை பறக்க வைக்கவும் தரையிறங்கவும் செய்யும் Electromagnetic Aircraft Launch System என்னும் முறைமையை இந்தியாவிற்கு விற்பனை செய்ய 2015-ம் ஆண்டு அமெரிக்கா முடிவு செய்தது. இந்தியா தொடர்ச்சியான விநயம் மிக்க பல வேண்டுதல்களுக்குப் பின்னரே அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது. ஆனால் அமெரிக்காவின் F-35-C போர் விமானங்கள் மிகக் குறுகிய தூரம் பறந்து விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து மேலெழுந்து செல்லுவதுடன் உலங்கு வானூர்தி போல் ஓடு பாதையில் ஓடாமல் தரையிறங்கவல்லது. F-35 போர் விமானங்கள் EMALS தொழில்நுட்பத்தைக் காலாவதியாக்கிய பின்னரே EMALS இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் EMALSஇற்கு ஈடான தொழில்நுட்பம் இரசியாவிடமோ சீனாவிடமோ இல்லை.

கவனமாக இருக்க வேண்டும்
மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு தொழில்நுட்பமும் வெளிநாட்டு முதலீடும் அவசியம். ஆனால் வெளிநாட்டு வியாபாரிகள் எப்போதும் தமது முதலீடுகளுக்கு அதுவும் இந்தியா போன்ற வெளிநாட்டினரை ஐயத்துடன் பார்க்கும் மக்கள் நிறைந்த நாடுகளில் குறுகிய காலத்தில் தமது முதலீட்டுக்கு விரைவாக இலாபம் ஈட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். உலகில் அதிக அளவு படைக்கலன்களைக் கொள்வனவு செய்யும் இந்தியா சரியான முறையில் பேச்சு வார்த்தைகளை நடத்தி சரியான ஒப்பந்தங்களைச் செய்தால் மட்டுமே காலாவதியானவற்றை இந்தியாவில் தள்ளுவதைத் தடுக்க முடியும்.

முக்கியமானவை மூன்று
படைத்துறை ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மேம்பாடு, சீனாவின் கடல்சார் விரிவாக்கத்தைத் தடுத்தல் ஆகிய மூன்றும் அமெரிக்காவும் இந்தியாவும் கவனம் செலுத்த வேண்டியவையாகும். இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். இரு நாடுகளினதும் அண்மைக்கால நகர்வுகளில் முக்கியமானவை. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கை செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கல் வசதி மாற்றிகளை மாற்றிக்கொள்ளும் இந்த உடன்படிக்கை 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. பத்து ஆண்டுகளாக இழுபறிப்பட்ட இந்த உடன்படிக்கை இந்தியாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எவ்வளவு கேந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சுட்டிக் காட்டுகின்றது.

பாதுகாப்புத் தொழில்நுட்பமும் வர்த்தகமும்
அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு இரு நாடுகளுக்கும் இடையில் செய்யப்பட்ட Defence Technology and Trade Initiative (DTTI) என்ற முன்னெடுப்பு உடன்பாடும் ஓர் உதாரணமாகும். 2012-ம் ஆண்டு அப்போது துணைப் பாதுகாப்புச் செயலராக இருந்த அஸ்டன் கார்ட்டர் இதை உருவாக்கினார். இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பில் உள்ள சிவப்பு நாடாக்களை அகற்றுவதே DTTIஇன் முக்கியமாகும். இதன் கீழ் ஆறு முக்கிய திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன. மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்கா தனது predator guradian drones என்னும் ஆளில்லாப் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டுள்ளது. இது காலாவதியான தொழில்நுட்பம் என்ற வகைக்குள் அடங்கவில்லை.


இரு நாடுகளிடையே உள்ள எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் சீனாவின் கடல்சார் விரிவாக்கத்திற்கு எதிராக இரண்டும் ஒத்துழைத்தே ஆகவேண்டும். 

Wednesday, 28 June 2017

டிரம்பின் பல போர் முனைகள்



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் அடிக்கடி பாவித்த வார்த்தைகள் போலிச் செய்திகள். அவற்றை அவர் தனக்கு எதிராகச் செயற்படும் சி.என்.என், வாஷிங்டன் போஸ்ற், நியூயோர்க் ரைம்ஸ் போன்ற ஊடகங்களுக்கு எதிராகப் பாவித்தார். போலிச் செய்திகள் என்ற சொற்றொடர் உலகெங்கும் பிரபலமடைந்துள்ளது. பிரித்தானியாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் கூட தாம் எழுதும் கட்டுரைகளில் அந்தச் சொற்றொடரைப் பாவிக்கின்றார்கள். தற்போது டிரம்ப் அதிகம் பாவிக்கும் வார்த்தைபழிவாங்கல்கள்”. அவருக்கு எதிராக தற்போது அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயற்படும் புலனாய்வுத் துறை செய்யும் விசாரணைகளை பழிவாங்கல்கள் என்ற வார்த்தை மூலம் சாடுகின்றார்.

சிரியாவில் மோதல்
2011-ம் ஆண்டு அரபு வசந்தம் என்னும் பெயரில் சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போரில் முதற்தடவையாக சிரிய அரச படைகளின் போர்விமானம் ஒன்றை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க ஆதரவுடன் பல போராளி அமைப்புக்கள் சிரிய மாகாணமான ரக்காவில் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக போர் செய்து கொண்டிருக்கையிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. சிரிய மக்களாட்சிப்படை என்னும் பெயரில் இயங்கு அந்த போராளி அமைப்புக்களின் கூட்டமைப்பின் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக சிரிய அரசுக்குச் சொந்தமான இரசியத் தயாரிப்பு விமானமான எஸ்.யூ-22 தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்கக் கடற்படையின் F/A-18E Super Hornet . அந்த எஸ்.யூ-22 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. இது குர்திஷ் போராளிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். ஆனால் இரசியா இதனால் கடும் விசனம் அடைந்துள்ளது. சிரியப் போர் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தும் போது இருவகைகளில் இரசியா பாதிக்கப்படுகின்றது. இரசியப் போர்விமானங்களின் மீது உலக படைக்கலச் சந்தையில் நம்பிக்கை வீழ்ச்சியடைகின்றது. இரசியாவின் நட்பு நாடுகள் தமது இறைமையை இரசியாவால் எந்த அளவு பாதுகாக்க முடியும் எனச் சிந்திக்கின்றன. அமெரிக்கா தலைமையில் இயங்கும் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, ஒஸ்ரேலியா, டென்மார்க், இத்தானி ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டுப்படையினரின் விமானங்களுக்கு எதிராக தான் தாக்குதல் செய்யப்போவதாக இரசியா அறிவித்துள்ளது. இது ஏற்கனவே கொதிநிலையில் இருக்கும் சிரியப் போர் முனையை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. பராக் ஒபாமாவிலும் பார்க்க டொனால்ட் டிரம்ப் ஐ எஸ் அமைப்பினரை ஒழிப்பதில் அதிக தீவிரம் காட்டுகின்றார் போல் இருக்கின்றது. ரக்கா மாகாணம் எரிபொருள் வளமும் பல முக்கிய தெருக்களையும் கொண்டது. தெருக்களைப் பாவிப்பதற்கான வரி மூலமும் எரிபொருள் விற்பனை மூலமும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் தமது தலைநகர் ரக்காவில் பெரும் தொகைப் பணத்தைப் பெறுகின்றனர். அங்கு வாழும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களிடம் பாதுகாப்பு வரியையும் வசூலிக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தை சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான சுனி அரபுக்களும் குர்திஷ் போராளிகளும் கைப்பற்றுவது ஐ எஸ் அமைப்புக்கு மட்டுமல்ல அசாத்திற்கும் பெரும் இழப்பாகும் என்பதோடு போருக்குப் பின்னரான சிரியாவில் அமெரிக்காவிற்கு ஒரு பிடியுமாகும். 

ஹோமஸ் நீரிணையில் ஈரானும் சீனாவும்
ஈரானின் ஆளில்லாப் போர் விமானம் ஒன்றை ஜூன் ஆறாம் திகதி அமெரிக்கப் போர்விமானங்கள் சிரியாவில் வைத்துச் சுட்டு வீழ்த்தின. பின்னர் ஜூன் 20-ம் திகதி மீண்டும் ஒரு படைக்கலன்கள் தாங்கிய ஈரானில் தயாரிக்கப் பட்ட ஆளில்லாப் போர் விமானம் ஒன்றை அமெரிக்காவின் F-15 போர்விமானம் சுட்டு வீழ்த்தியது. அது மட்டுமல்ல உலக எரிபொருள் விநியோகத்தின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகுப் புள்ளியான ஹோமஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையும் கட்டார் கடற்படையும் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டன. அதே பிராந்தியத்தில் ஈரானும் சீனாவும் இணைந்து கடற்படைப் போர்ப் பயிற்ச்சியில் ஈடுபட்ட்ன. சீனா ஹோமஸ் நீரிணையில் அமெரிக்க ஆதிக்கத்தை இட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது. அங்கு வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் பெரும் பகுதியை அமெரிக்காவால் தடுக்க முடியும் என்பதை சீனா அறியும். சீனாவும் ஈரானும் ஒரு புறமும் மற்ற வளைகுடா நாடுகள் மறுபுறமுகாக ஒரு போட்டிக்களம் ஹோமஸ் நீரிணையில் உருவாகுகின்றது.
சிரியாவிலோ ஈராக்கிலோ அமெரிக்கப் படையினர் கால் பதிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் பராக் ஒபாமா செயற்பட்டார். ஆனால் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கப்படையினரின் ஈடுபாடு அதிகரித்து வருகின்றது. தரைப்படையைச் செயலில் இறங்க்குவது டிரம்பைப் பொறுத்தவரை பெரும் பிரச்சனை இல்லை ஆனால் படையினர் அப்படி ஒன்றை விரும்பவில்லை. சிரியப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு எதுவுமே இல்லை என்பதை அமெரிக்கப் படைத்துறையினர் அறிவர். ஈராக்கில் 50 விழுக்காடு சியா இஸ்லாமியரும் 48 விழுக்காடு சுனி இஸ்லாமியரும் வாழ்கின்றனர். இஸ்லாமிய அரசு அமைப்பை ஈராக்கில் ஒழித்துக் கட்டிய பின்னர் சியா இஸ்லாமியர்கள் தமக்கு எதிராக சதாம் ஹுசேயினின் ஆட்சிக்காலத்தில் இருந்தே செய்யப்பட்ட அட்டூழியங்களுக்கு தம்மேல் பழிவாங்கலாம் என ஈராக்கில் உள்ள சுனி இஸ்லாமியர்கள் அஞ்சுகின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது ஈரானிய மதவாத ஆட்சியாளர்களின் கொள்கையாகும். இது நடக்கக் கூடாது என்பது வளைகுடா நாடுகளில் ஆட்சியில் உள்ள மன்னர்களினது நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அமெரிக்காவின் கடப்பாடாகும். ஈரானை மனதில் வைத்துக் கொண்டே டொனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்டார். ஈரானும் இரசியாவும் நாளுக்கு நாள் ஒன்றிணைது செயற்படுகின்றன. துருக்கியும் இரசியாவிற்கும் இடையிலான உறவு சீரடைந்து கொண்டு வருகின்றது. சிரியாவில் இரசியாவின் படை நடவடிக்கைகளால ஆத்திரமடைந்த ஐ எஸ் அமைப்பினர் தமது போராளிகளை இரசியாவிற்கு அனுப்பாமல் தடுப்பதற்கு துருக்கியினதும் ஈரானினதும் ஒத்துழைப்பு இரசியாவிற்கு அவசியமாகும். இதனால் சிரியாவையும் ஈராக்கையும் மையப்படுத்தி இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முறுகல் நிலை வளர்ந்து வருகின்றது. 

வட கொரியா ஓராண்டுகாலப் பேச்சு வார்த்தையின் பின்?
வட கொரியாவுடன் ஐக்கிய அமெரிக்கா 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மிகவும் இரகசியமாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின்னணியில் சீனா இருக்கின்றது. அது அமெரிக்காவை ஓராண்டு வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதன் அணுக்குண்டு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தையும் நிறுத்த முயற்ச்சிக்கும் படி வேண்டியுள்ளது. அப்பேச்சு வார்த்தை பயனளிக்காவிடில் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சீனா தடை போடாது என்ற உறுதி மொழி வழங்கியுள்ளது. ஆனால் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து விட்டு அமெரிக்கா வரை பாயக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றது. வட கொரியாவுடன் ஓராண்டின் பின்னர் அமெரிக்கா போர் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகலாம். ஆனால் வல்லரசு நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அதனால் ஓராண்டு கழித்து அமெரிக்கா வட கொரியா மீது தாக்குதல் நடக்கும் போது சீனா சும்மா இருக்க மாட்டாது.   2017 ஜூன் நான்காம் வாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வட கொரியாவை வழிப்படுத்த சீனா எல்லா முயற்ச்சியும் செய்தது ஆனால் முடியவில்லை எனப்பதிவிட்டார். இந்தப் பதிவு சீன உயர் அதிகாரிகள் வட கொரியா தொடர்பான பேச்சு வார்த்தைக்கு அமெரிக்க செல்லத் தாயாரான வேளை வெளிவந்தது. அத்துடன் அப்பதிவு வெளிவந்த சில மணித்தியாலங்களில் அமெரிக்காவின் B-1 போர் விமானங்கள் இரு கொரியாக்களையும் பிரிக்கும்  38th parallel என்னும் எல்லைக் கோட்டை ஒட்டிப் பறந்து சென்றது. 

புதிதாக ஒரு பெரு வல்லரசு உருவாகும் போது அது ஏற்கனவே இருக்கும் பெருவல்லரசுடன் மோதலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது. சோவியத் ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரத்தில் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தன. அதனால் அவை இரண்டுக்கும் இடையில் நேரடிப் போர் நடக்கவில்லை. பனிப்போர் என்னும் பெயரில் பெரும் போட்டி நிலவியது. ஆனால் உலகப் பெருவல்லரசாக நிலைப்பதற்கு தேவையான பொருளாதார வலு சோவியத் ஒன்றியத்திடம் இல்லாததால் அது சிதைந்து போனது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வல்லரசாக உருவெடுத்த போது ஸ்பெயினிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் பெரும் கடற்போர் நடந்து ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டது. நெப்போலியன் பிரான்சை பெரு வல்லரசாக்க முயன்றபோது இரசியாவுடனும் பிரித்தானியாவுடனும் போர் புரிந்து தோற்கடிக்கப்பட்டர். உதுமானியப் பேரரசு உலகை ஆள முற்பட்டதால் முதலாம் உலகப் போரும் ஹிட்லர் உலகை ஆள முற்பட்டதால் நடந்தன. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் பெருவல்லரசாக முயன்று கொண்டிருக்கும் சீனாவிற்கும் ஏற்கனவே உலகப் பெருவல்லரசாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு போர் நடப்பது தவிர்க்க முடியாது என்பது 2400 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த துசிடைட் பொறி என்னும் கோட்பாடு எதிர்வு கூறியுள்ளது. இந்த இரண்டு நாடுகளையும் அவர் மனதில் வைக்காமல் ஸ்பார்ட்டா மற்றும் எதென்ஸ் ஆகிய இரு நகர அரசுகளுக்கும் இடையிலான முப்பதாண்டுப் போரை அனுபவமாகக் கொண்டே அவர் துசிடைட் பொறி என்னும் கோட்ப்பாட்டை முன்வைத்தார். ஏற்கனவே வளர்ந்திருந்த ஸ்பார்ட்டா தீடீரென வளர்ந்த எதென்ஸை பார்த்து உருவான பயத்தால் போர் தவிர்க்க முடியாத ஒன்றானது என்றார் துசிடைட். பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து புதிதாக உருவான 15 வல்லரசுகளில் 11 பெரும் போரைச் சந்தித்தன. கடந்த பத்து ஆண்டுகளாக பல உலக அரசியல் ஆய்வாளர்கள் சீனாவும் அமெரிக்காவும் Thucydides’s trap அகப்படுமா என்பதைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் நடக்கக் கூடிய களங்களின் பட்டியலில் உச்சத்தில் இருப்பது தென் சீனக் கடல் என்றாலும் அந்தப் பிராந்திய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக சீனா தனது பக்கம் இழுக்கும் வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு ஒரு போ முனையைத் திறக்க அமெரிக்கா விரும்பாது. தென் கொரியா தனது மண்ணில் போர் நடப்பதை விரும்பவில்லை. ஆனால் சண்டப் பிரசண்டனாக இருப்பது ஜப்பான் மட்டுமே. கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடக்கலாம் அதில் அமெரிக்கா உடனடியாக களத்தில் இறங்கும். இதனால்தான் சீனா தென் சீனக் கடலில் செய்யும் தீவு நிர்மாணங்களைப் போல் கிழக்குச் சீனக் கடலில் செய்யவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் António Guterres அமெரிக்கா உலக விவகாரங்களில் இருந்து விலகுவது ஆபத்து எனச் சொல்கின்றார். அமெரிக்கா உலக விவகாரங்களில் இருந்து விலகுவதை தடுக்கும் பொருட்டு தான் அமெரிக்க நாடாளமன்ற உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதை தடுப்பேன் என்றும் சொல்கின்றார். உலகம் உருப்படுமா?

Tuesday, 20 June 2017

மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் ஆடுபவர்களும் ஆட்டுவிப்பவர்களும்

மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் இணைந்த பிராந்தியம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக MENA என அழைப்பர். இது Middle East and North Africa என்பதன் சுருக்கமாகும். நாமும் இந்தப் பிராந்தியத்தை தமிழில் மெனா பிராந்தியம் என அழைப்போமாக. எந்த நாடுகள் இப்பிராந்தியத்தில் அடங்கும் என்ற சரியான வரையறை இல்லை என்றாலும் இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் மெனா பிராந்தியத்தில் உள்ளன. மௌரிட்டானியா, மொரொக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, இஸ்ரேல், லெபனான், ஜோர்தான், சிரியா, ஈராக், ஈரான், குவைத், சவுதி அரேபியா, பாஹ்ரேன், கட்டார். ஐக்கிய அரபு அமீரகம், யேமன், ஓமான், துருக்கி ஆகியவை இந்தப் பிரதேசத்தில் உள்ள முக்கிய நாடுகளாகும். பல்ஸ்த்தீனிய மேற்குக் கரை, காசா நிலப்பரப்பு ஆகியவையும் இந்தப் பிராந்தியத்தில் உள்ளன. இந்தப் பிராந்தியத்தில் உலக மக்கள் தொகையில் ஆறு விழுக்காட்டினர் வசிக்கின்றனர்.
முக்கிய பிராந்தியம்
உலக எண்ணெய் இருப்பில் 65 விழுக்காடும் இயற்கை எரிவாயு இருப்பில் 45 விழுக்காடும் இந்த மெனா பிராந்தியத்தில் இருக்கின்றன. ஆசியா, ஆபிரிக்கா ஆகிய இரு கண்டங்களையும் இது உள்ளடக்கி இருக்கின்றது. தெற்கு ஐரோப்பாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. ஆசியாவை ஐரோப்பாவுடனும் அமெரிக்காவுடனும் இணைக்கும் தரை மற்றும் கடல் வழிப்பாதை இப்பிராந்தியத்தின் ஊடாக நடைபெறுகின்றது. உலகக் கடற்போக்குவரத்தில் இரு முக்கிய திருகுப் புள்ளிகளான சூயஸ் கால்வாயும் ஹோமஸ் நீரிணையும் இப்பிராந்தியத்தில் இருக்கின்றன. உலக அரசியல் உறுதிப்பாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தப் பிராந்தியத்தில் அமைதி முக்கியமான ஒன்றாகும்.
என்றும் குழம்பியிருக்கும் குட்டையா?
மன்னர் ஆட்சி, படைத்துறையினரின் ஆட்சி, மதவாதம் கலந்த மக்களாட்சி, மக்களாட்சி எனப் பலவிதமான ஆட்சி முறைமைகள் இப்பிராந்தியத்தில் உள்ளன. வரலாற்றுப் பெருமை மிக்க இனங்களையும் நாடுகளையும் கொண்ட மெனாப் பிராந்தியத்தின் அண்மைக்கால வரலாற்றில் அரபு இஸ்ரேலிய மோதல், ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையில் நடந்த போர், குவைத் மீதான இராக்கியப் படையெடுப்பு, நேட்டோ நாடுகளின் ஈராக்கை ஆக்கிரமிப்பு, அரசு வசந்த எழுச்சி, சியா-சுனி மோதல் போன்ற பல மோதல்களால் மெனாப்  பிராந்தியம் அமைதி இழந்துள்ளது. 2014-ம் ஆண்டு திடீரென உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அரசுக்கு எதிராக பல நாடுகள் போர் தொடுத்துள்ளன.
ஆட்டுவித்தால் யார் ஆடார்?
2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் மெனா பிராந்தியத்தின் அமைதிக்கு மேலும் குந்தக்கம் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் பல நடந்துள்ளன.
1, சிரியாவில் ரக்கா நகரிலும் ஈராக்கில் உள்ள மொசுல் நகரிலும் இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிரான முற்றுகை.
2. ஈரானியப் பாராளமன்றத்தின்மீதும் ஈரானில் மதவாதம் கலந்த மக்களாட்சியை நிறுவியவருமான அயத்துல்லா கொமெய்னியின் கல்லறை மீதான தற்கொலைத் தாக்குதல்.
3. கட்டார் நாட்டைத் தனிமைப்படுத்த சவுதி அரேபியா, எகிப்த்து, ஐக்கிய  அரபு அமீரகம், பாஹ்ரேன், யேமன் உட்படச் சில நாடுகள் எடுத்த நடவடிக்கை.
4. ஈராக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் குர்திஷ் மக்கள் சுதந்திர நாடாக மாறுவதற்கான கருத்துக் கணிப்பு
5. துருக்கிக்கும் இரசியாவிற்கு இடையில் வளர்ந்து வரும் உறவு

ரக்காவிலும் மொசுலிலும் முற்றுகை
2014-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட இஸ்லாமிய அரசின் தலைநகரான ரக்கா நகர் மீது அமெரிக்கப்படையினரின் பின்புல ஆதரவுடன் சிரிய மக்களாட்சிப் படை என்ற பல பல படைக்கலன் ஏந்திய குழுக்களின் கூட்டமைப்பு தாக்குதல் தொடுத்துள்ளது. சிரிய மக்களாட்சிப் படையின் அரபுப் போராளிகளும் குர்திஷ் போராளிகளும் இணைந்து போராடுகின்றார்கள். துருக்கியின் அதிருப்தியையும் புறம் தள்ளி சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகளுக்கு படைக்கலன்களை வழங்கும் படி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்டுவதில் அரபுப் போராளிகளிலும் பார்க்க குர்திஷ் போராளிகளே அதிக திறமையாகவும் தீரமாகவும் போராடுகின்றனர். போர் முடிந்து ஐ எஸ் போராளிகள் ஒழிக்கப்பட்டுவிட்டால் சிரிய அரபுப் படைகளும் துருக்கிப் படைகளும் இணைந்து குர்திஷ் மக்கள் மீது ஒரு பெரும் அட்டூழியத்தை கட்டவிழ்த்து விடலாம். அப்போது அமெரிக்கா குர்திஷ் மக்களை காப்பாற்ற வரமாட்டாது என்பது வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம். தமது சிறுமிகளையும் பெண்களையும் ஐ எஸ் அமைப்பினர் கடத்திக் கொண்டு போய் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தற்கு பழிவாங்குவது மட்டுமே குர்திஷ் மக்களின் முதன்மைக் குறிக்கோளாக இருக்கின்றது. அமெரிக்கா சதாம் ஹுசேயினுக்கு எதிராகவும் ஈரானிய மதவாத ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் குர்திஷ் மக்களைப் போராடத் தூண்டி விட்டு பின்னர் அவர்களால் இனக்கொலை செய்யப்படும் போது பாதுகாக்க முன்வரவில்லை. சிரியாவிலும் ஈராக்கிலும் தற்போது பலத்த உயிரிழப்புக்களுடன் போராடும் குர்திஷ் மக்களை இம்முறையும் கால்வாரி விடுமானால் அவர்கள் மோசமான பயங்கரவாத அமைப்பாக மாறும் வாய்ப்பு உண்டு. ஜூன் 8-ம் திகதி சிரிய ஐ எஸ் படையினர் அரச படையிடமிருந்து கைப்பற்றி தம் தலைமைச் செயலகமாக வைத்திருந்த 17-ம் படைப்பிரிவின் தலைமையகத்தை குர்திஷ் போராளிகள் கைப்பற்றியதாக அறிவித்தனர். ரக்கா நகரின் இரு குடியிருப்புக்களை பலத்த எதிர்ப்பின்றி சிரிய மக்களாட்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கப் போர் விமானங்கள் வெண் பொஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிரிய அரச படைகளுக்குச் சொந்தமான ஆளில்லாப் போர் விமானம் ஒன்றை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா ஐ எஸ் போராளிகளுக்கு எதிரான தனது படை நடவடிக்கையின் போது சிரிய அரச படைகளுக்குப் பாதிப்பில்லாத வகையில் நடந்து வருகின்றது. ஆனாலும் அவ்வப்போது தவறுதலாக சில மோதல்கள் நடப்பதுண்டு. இதே போல்த்தான் சிரியாவிலும் ஈராக்கிலும்  செயற்படும் ஈரானியப் படைகளுடன் ஒரு நேரடி மோதலை அமெரிக்கா தவிர்க்க முயல்கின்றது. ஈராக்கிய நகரான மொசுலில் உள்ள ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக ஈராக்கிய அரச படைகளும் குர்திஷ் படைகளும் அமெரிக்க வான்படையின் ஆதரவுடன் போராடுகின்றன. சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகளிலும் பார்க்க ஈராக்கில் உள்ள பெஷ்மேர்கா அமைப்புக் குர்திஷ் போராளிகளையிட்டு துருக்கி குறைந்த அளவு அச்சம் கொண்டுள்ளது.

ஈரானில் ஐ எஸ் அமைப்பினர் தாக்குதல்
ஜூன் மாதம் 7-ம் திகதி ஈரானின் பாராளமன்றத்திலும் புதிய ஈரானின் நிறுவனருமான அயத்துல்லா கொமெய்னியின் கல்லறை மீதும் ஐ எஸ் அமைப்பினர் தற்கொடைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சியா இஸ்லாமியர்களின் கோட்டையான ஈரானில் ஒரு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது பல சுனி இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களின் கனவாகும். அந்தத் தாக்குதல் அவர்களுக்கு அதிக நிதியை சுனி முஸ்லிம் நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுத் தரும். கடந்த முப்பது ஆண்டுகளாக எந்தவித ஆபத்து விளைவிக்கக் கூடிய திவிரவாதத் தாக்குதலுக்கும் உள்ளாகாத ஈரான் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பல தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியாவே இருப்பதாக ஈரானின் படைத்துறையினர் தெரிவித்ததுடன். இதற்குப் பழிவாங்குவோம் எனவும் சூளுரைத்துள்ளனர். இது இரு நாடுகளும் ஒன்றன் மீது ஒன்று தமது கூலிப்படைகள் மூலம் ஒரு தொடர் தாக்குதல் செய்வதற்கு வழிவகுக்கலாம். அது பெரும் போரை நோக்கிச் செல்லலாம்.

கட்டார் கட்டுபடாத காட்டாறு
சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி துண்டிப்பதாக அறிவித்தன. சவுதி அரேபியாவின் காசோலை அரசுறவியலில் தங்கியிருக்கும் சில நாடுகளும் கட்டாருடன் தமது தொடர்புகளைத் துண்டித்தன. அரசுறவியலில் முதிர்ச்சியடையாத (அல்லது வளர்ச்சியடியாத) டொனால்ட் டிரம்ப் தான் சவுதி அரேபியாவிற்குப் பயணம் செய்யும் போது விடுத்த வேண்டுகோளால்தான் கட்டார் தனிமைப் படுத்தப்பட்டது என மார்தட்டிக் கொண்டார். ஆனால் அது பகிரங்கமாகச் சொல்லக் கூடாத ஒன்று எனப் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்தப் பிரச்சனையில் அமெரிக்கா நடுநிலை வகிப்பதாக அதன் வெளியுறவுத் துறை உடன் தெரிவித்தது. ஆனால் பிராந்திய வல்லரசான துருக்கியும் உலக வல்லரசான இரசியாவும் கட்டார் நாட்டுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டின. துருக்கியப் பாராளமன்றத்தில் தேவை ஏற்படின் கட்டாருக்குப் படைகளை அனுப்புவதாகவும் முடிவு செய்யப்பட்டது. ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையில் உள்ள கடற்படுக்கையில் பெருமளவு எரிவாயு இருப்பு உள்ளது. அதைப் பங்கீடு செய்ய இரு நாடுகளும் பேச்சு வார்த்தை செய்வதை சவுதி அரேபியாவும் மற்ற நாடுகளும் ஐயத்துடன் நோக்குகின்றன. ஈராக்கிற்கு வேட்டைக்குச் சென்ற கட்டார் அரச குடும்ப உறுப்பினரையும் அவரது பரிவாரத்தையும் அங்குள்ள அல் கெய்தாவின் இணைக் குழு ஒன்று கடத்திச் சென்றது. அவர்களை ஒரு பில்லியன் டொலர்களைக் கொடுத்து மீட்டதை சவுதி பயங்கரவாதத்திற்கு உதவுவதாகச் சொல்கின்றது. கட்டார் மன்னர் தனது பதவியை 64 வயதில் துறந்து தன் மகனுக்குப் பட்டம் சூட்டியதால் மற்ற மன்னர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். நாட்டு மக்கள் தம்மை முதுமையால் பதவி விலகச் சொல்லிக் கேட்டால் அவர்களால் அதை அடக்க முடியும். ஆனால் தங்கள் புதல்வர்கள் கேட்டால் குடும்பத்துக்குள் குத்து வேட்டு நடக்கும் என்பதால் அவர்களுக்கு கட்டார் மன்னரின் செய்கை ஆத்திரத்தைக் கொடுத்தது. கட்டாரின் அல் ஜசீரா ஊடகம் கட்டார் அரச குடும்பத்தை விமர்சிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் சுதந்திரமாகச் செயற்படுகின்றது. மற்ற நாட்டில் நடப்பவற்றை பகிரங்கப் படுத்துவதும் மற்ற நாட்டு ஆட்சியாளர்களை ஆத்திரப்படுதுகின்றது.  

ஈராக்கிய குர்திஷ் மக்களின் சுதந்திரப் பிரகடனம்
குர்திஷ் மக்கள் பல தடவைகள் அமெரிக்காவுடன் இணைந்து செயற் பட்டிருக்கின்றார்கள். அவை யாவும் இரகசியமாக நடந்தவை. ஆனால் சிரியாவிலும் ஈராக்கிலும் அவர்கள் தற்போது அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகப் போராடுவது பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. பல அமெரிக்க உயர் அதிகாரிகள் தம்மைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதையிட்டு அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். அதனால் ஈராக்கில் உள்ள குர்திஷ் அமைப்புக்கள் 2017 செப்டம்பர் 25-ம் திகதி ஈராக்கில் இருந்து மூன்று மாகாணங்கள் பிரிந்து செல்வதா என்பது பற்றிய கருத்துக் கணிப்பை ஈராக்கில் செய்யப் போவதாக அறிவித்தனர். இதற்கு ஈராக்கிய அரசிலும் பார்க்க துருக்கியே முதலில் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. ஐக்கிய அமெரிக்காவும் தானது ஆதரவு இதற்கு இல்லை எனத் தெரிவித்தது. குர்திஷ் போராளிகள் பயங்கரவாதிகளாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது மெனா பிராந்தியத்தில் அடுத்த இரத்தக் களரிக்கு வழிவகுக்கலாம்.

நெருங்கி வரும் துருக்கியும் இரசியாவும்
ஈரான், சவுதி அரேபியா ஆகிய மூன்றும் மெனா பிரதேசத்தில் உள்ள முக்கிய அரசுகளாகும். இரசியா சிரியப் பிரச்சனையில் இணைந்து செயற்படுவதால் இரசியாவிற்கு சிரியாவிற்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்துள்ளது. சிரியப் பிரச்சனையில் வேறுபட்ட இரசியாவும் துருக்கியும் தற்போது இணைந்து செயற்படுகின்றன. துருக்கிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இரசியா நீக்கியுள்ளது. அத்துடன் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை துருக்கி வாங்கவுள்ளது. நேட்டோவின் உறுப்பு நாடாக இருக்கும் துருக்கி இரசியாவின் சர்ச்சைக்கு உரிய ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவது பெரும் பிரச்சனையைக் கிளறலாம்.

மெனோ பிராந்தியத்தில் மேலும் பத்து ஆண்டுகள் பிரச்சனை தொடர்வது மட்டுமல்ல மோசமாகும்.




Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...