Friday, 29 August 2014

இரசியாவின் குடியேற்றவாதம்: உக்ரேனிற்குள் களவாக ஊடுருவும் இரசியப் படைகள்

 ஆகக் குறைந்தது ஆயிரம் இரசியப் படைகள் உக்ரேனிற்குள் களவாக நுழைந்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உக்ரேனிய அரச படைகளுக்கு எதிராக அண்மைக்காலங்களாக பெரும் கிளர்ச்சியை இரசியா தூண்டி விட்டுள்ளது. இந்த உக்ரேனிய உள்நாட்டு விவகாரத்தில் இரசியாவின் தலையீட்டை சிலர் "கம்யூனிசியத்திற்கு எதிரான போர்" என விமர்சிப்பதுண்டு. ஆனால் இரசியாவிற்கோ அல்லது உக்ரேனிற்கோ கம்யூனிசியத்துடன் எந்தத் தொடர்பும் கிடையாது. உக்ரேனில் நடப்பது இரசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியாகும்.

1991-ம் ஆண்டு    சோவியத் ஒன்றியம்   வீழ்ச்சி அடைந்த பின்னர்   அதில் ஓர் உறுப்பு நாடாக இருந்த உக்ரேன்   தனி நாடாகியது.   அப்போது  சோவியத் ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது.   இதானால் உக்ரேன் உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும்   இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய   அணுக்குண்டு  நாடாக உருவெடுத்தது.    தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது.   ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை.   அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம்   அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது   எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம்  அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk)  தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு  நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.    அவர் கேட்ட நிபந்தனை  பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.   அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை  இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள்  உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன.  இதை மீறும் விதமாக இரசியா கிறிமியாவைத் தன்னுடை இணைத்துள்ளது. உக்ரேன்  தன்னிடம்  இருந்த விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்படப் பல படைக்கலன்களை "விற்றுத் தின்ன" வேண்டிய நிலையும் அப்போது இருந்தது.  உக்ரேன் நாடு உருவான நாளில் இருந்து கிட்டத்தட்ட வக்குரோத்து நிலையில்தான அதன் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது. 

சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்    தனது ஆதிக்க நிலப்பரப்பை    இரசியா விரிவாக்கவே விரும்பியது.   அதன் முதல் முயற்ச்சியாக     இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து     சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின.    பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா,   தேர்க்மெனிஸ்த்தான்,   தஜிகிஸ்த்தான்,   உஸ்பெக்கிஸ்த்தான்    ஆகிய நாடுகள் இணைந்தன.   1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது.     பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில்   நடந்த ஆட்சி மாற்றத்தால்   அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின.    சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே   ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட    இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன.    2013-ம் ஆண்டு  உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. 

ஜேர்மனியும் இரசியாவும்
மேற்கு ஐரோப்பிய நாடுகள்  ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில்    தமது நிலப்பரப்பையும்  பொருளாதார வலயத்தையும்   விரிவாக்கிக் கொண்டு    முன்னாள் சோவியத் நாடுகளையும்    இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க      இரசியாவிற்கு    தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது.     அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில்    இணைந்திருந்த நாடுகளான     போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும்    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும்    இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது.   ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை    இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது.   ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி   இதை ஒட்டி ஆரம்பமானது.    உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும்  என இரசியா  உக்ரேனை நிர்ப்பந்தித்தது. 

கடந்த ஓர் ஆண்டாக உக்ரேனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இரசியாவிற்கும் இடையில் அகப்பட்டுத் தவிக்கின்றனர். இரசியா உக்ரேனின் ஒரு பகுதியான கிறிமியாவை தன்னுடன் இணைத்து ஒரு நில அபகரிப்பைச் செய்து கொண்டது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் பல இரசியப் பிடியில் இருந்து விலகி மேற்கு ஐரோப்பாவுடனும் அமெரிக்காவுடனும் இணைந்து கொண்டன. சோவியத் ஒன்றியத்தின் படைத்துறைக் கூட்டமைப்பாக இருந்த வார்சோ ஒப்பந்த நாடுகளில் இருந்து அவை விலகி இரசியாவின் எதிரி அமைப்பான நேட்டோவில் இணைந்து கொண்டன. மேற்கு நாடுகளின் ஆதிக்கம் தனது எல்லை வரை வருவதாக அஞ்சிய இரசியா எதிர் நடவடிக்கைக்களை எடுக்கத் தொடங்கியது. 

இரசிய குடியேற்ற ஆட்சியும் நேட்டோவும் 
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் இரசிய்ர்கள் பலர் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களை வைத்து இரசியா இப்போது அந்த நாடுகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர் முயல்கின்றது. இதை நொவோஇரசியா (Novorussiya) ஆனால் பெரும்பாலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியாவுடன் இணைந்து செயற்படுவதிலும் பார்க்க அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து செயற்படுவதை விரும்புகின்றன. மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஊடகங்களும் இதற்கு ஏற்ப்ப பரப்புரைகளை மேற்கொள்கின்றன. எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இது இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும்.   நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால்   மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து   அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக  வாழுகின்றனர்.ஆரம்பம் முதலே உக்ரேன் விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வரும் நாடு போலாந்து. உக்ரேனில் இருந்த இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச் அவர்களை பதவியில் இருந்து அகற்றி அங்கு மேற்குலகிற்கு சார்பான ஒரு ஆட்சியை அமைப்பதில் போலாந்து அதிக அக்கறை காட்டியது. ஐக்கிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் உக்ரேன் சென்று நிலைமைகள் தொடர்பாக உக்ரேன் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட போலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் தோமஸ் சீமோனியக் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெலைச் சந்தித்து உரையாடினார். பின்னர் அமெரிக்கப் படையினர் போலாந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைக்களில் ஈடுபடுவதாக இரு தரப்பினரும் பெண்டகனில் ஒடததுக் கொண்டனர். ஆனால் போலாந்தில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினர் உக்ரேனில் எந்த வித படை நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது. 

இரசியாவின் ஒபரேசன் பூமாலை
உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் தமக்குத் தனிநாடு வேண்டும் எனக் கிளர்ச்சி செய்கின்றனர். இவர்களின் முதல் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப் போகும் உக்ரேனிற்கு பெரும் பிரச்சனை கொடுத்துத் தடுத்தல். இரண்டாவது நோக்கம் இரசிய ஆதிக்க நிலப்பரப்பை அதிகரித்தல். இரசியா இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட தனது படைகளை உக்ரேனுடனான தனது எல்லையில் குவித்து வைத்திருக்கின்றது. மலேசிய விமானம் உக்ரேனின் இரசியக் கிளர்ச்சிக்காரர்களின் பிராந்தியத்த்தில் சுட்டு விழ்த்தப்பட்ட பின்னர் உக்ரேனில் உள்ள இரசிய சார்ப்புக்  கிளர்ச்சிக்காரர்கள்மீது உக்ரேனிய அரசு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்கள் வசமிருந்து நிலப்பரப்புக்களை மீட்டது. தனக்கு சார்பான கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிச் செல்வதைப் பொறுக்காத இரசியா முதலில் உக்ரேனில் தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள் என்ற போர்வையில் தனது படையினரையும் படைக்கலன்களையும் அனுப்ப முயன்றது. அது கை கூடாமல் போனதால் இரசியா இப்போது களவாக ஆயிரம் படையினரை கனரகப் படைக்கலன்களுடன் உக்ரேனிற்குள் அனுப்பி வைத்துள்ளது. 

இரசியப் பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது           
உக்ரேனில் இரசியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு நாடுகளும் ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இரசியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இரசியா இப்போது தனது படைகளை உக்ரேனிற்குள் அனுப்பிய படியால் மேலும் இறுக்கமான பொருளாதாரத் தடைகள் விதிக்கபப்டலாம். ஏற்கனவே இரசியா பொருளாதார விழ்ச்சிச் சுழலில் அகப்பட்டு விட்டதாக இரசிய பொருளாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரசியா உக்ரேனிற்குள் படையினரை அனுப்பிய செய்தி வந்தவுடன் இரசிய நாணயமான ரூபிள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பல பன்னாட்டு வர்த்தக் நிறுவனங்கள் இப்போது இரசியாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தி வருகின்றன. இரசியா தனது மூலதனத் தேவையில் பாதிக்கு மேற்பட்டவற்றை மேற்கு நாடுகளிடமிருந்தே பெற்று வந்தது. இப்போது மேற்கு நாடுகளின் மூலதனச் சந்தை இரசிவிற்கு மூடப்பட்டுவிட்டது. இதற்கு மாற்றீடாக இரசிய தனத்க்குத் தேவையான மூலதனத்தை சீனாவிடமிருந்து பெறவேண்டி ஏற்படலாம். ஆனால் இரசியாவின் முழுத் தேவையையும் சீனாவால் திருப்தி செய்ய முடியாது. அத்துடன் சீன மூலதனத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டும். புளூம்பேர்க் இரசிய மூலதன நிலைமை பற்றி இப்படிச் சொல்கின்றது: 
  • Bloomberg report of August 3: “Not a single US dollar, Euro, or Swiss franc was lent to a Russian company in July ….(this is) the first time since the depths of the financial crisis that Russian companies have faced such a credit drought.”

Forbes இப்படிச் சொல்கின்றது.  :
  • The European market for Russian debt is shrinking from nearly $50 billion to $3 billion, despite the best efforts of European banks to keep their Russian business afloat. 
இரசியாவிடம் போதிய வெளிநாட்டுக் கையிருப்பு உண்டு அதை வைத்துச் சிலகாலம் சமாளிக்கலாம்.பின்னர் இரசியா "தனது மழைக்காலக் கையிருப்புக்களைப்" பாவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளபப்ட்டுள்ளது. இரசியாவில் இருந்து பல பண முதலைகள் தமது பணத்துடன் தப்பி ஓடுகின்றனர். 2014 ஆண்டின் முதல் காலாண்டில் இரசியாவில் இருந்து 221பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணம் வெளியேறியுள்ளது. 2013‍ம் ஆன்டின் மூலதன நிலைய 2014‍ம் ஆண்டிற்கும் பேணுவதாயின் இரசியா வெளிநாடுகளில் இருந்து 360பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இதற்கு அதிக விலை கொடுக்க வேன்டிய நிலையில் இரசியா உள்ளது. இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்திக்கப்போவது உறுதி என சில பொருளாதார நிபுணர்கள் அடித்துச் சொல்கின்றனர். இரசியாவும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக தானும் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இரசியாவின் எரிபொருளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்கியுள்ளன. அமெரிக்காவால் இந்த இடைவெளியை நீண்டகால அடிப்படையில் நிரப்ப முடியும். இரசியாவில் இருக்கும் அமெரிக்க வர்த்த நிறுவனங்களுக்கு எதிராக புட்டீன் பல நடவடிக்கைகளை எடுக்கின்றார். மக் டொனால்டின் பல கிளைகளை சுகாதாரக் காரணங்களைக் காட்டி மூடியுள்ளார். சிலர் ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல் இரசியாவின் பொருளாதாரத் தடையால் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் வங்குரோத்து நிலையை அடையப் போகின்றன என்கின்றனர். சொல்பவர்கள்தான் அறிவில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர். 

Thursday, 28 August 2014

மோதல் நிறுத்தத்தின் பின்னர் மார் தட்டும் ஹமாஸ்

2100 பலஸ்த்தீனியர்களும் 70 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் நடந்த‌ மோதலில் பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பெருந்தொகையான கட்டிடங்களும் கட்டுமானங்களூம் அழிக்கப்பட்ட நிலையில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் சொல்கின்றனர். ஹமாஸ் மானபங்கப்படுத்தப் பட்டதாகவும் இஸ்ரேல் தோல்வியடைந்ததாகவும் நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

வெற்றி இரும்புக் கூரைக்கே
அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் உருவாக்கிய இரும்புக் கூரை எனப்படும் எவுகணை எதிர்ப்பு முறைமைதான் ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் நடந்த போரில் வெற்றி பெற்றதாகப் படைத்துறை நிபுணர்கள் சொல்கின்றனர். ஹமாஸ் அமைப்பினர் மிகவும் சிரமப்பட்டு ஈரானில் இருந்து கொன்டு வந்து சேர்த்த ஏவுகணைகளையும் தாம் உருவாக்கிய ஏவுகணைகளையும் கண்மூடித்தனமாக இஸ்ரேல் மீது வீசினர். மொத்தமாக 4600இற்கும் அதிகமான ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 90 விழுக்காடு இரும்புக் கூரையால் அழிக்கப்பட்டு விட்டன. காசா இஸ்ரேல் எல்லையில் வசிக்கும் 6 இஸ்ரேலியப் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். எஞ்சிய 64 பேர்களும் மோதலில் கொல்லப்பட்டன் இஸ்ரேலியப் படைத்துறையினர்.

தோல்வியடைந்தது இஸ்ரேலியத் தலைமை அமைச்சரே
எகிப்தும் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இணைந்தே ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான மோதல் நிறுத்தத்தை ஏற்படுத்தினர். இஸ்ரேலில் உள்ள தீவிரப் போக்குடையவர்கள் இந்த மோதல் நிறுத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவிக்டொர் லீபெர்மன், பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யிட்ஷக் அஹரோனொவிச், தொடர்பாடல் துறை அமைச்சர் கிலட் ஏர்டன் பொருளாதாரத் துறை அமைச்சர் நஃப்டலி பெனெட் ஆகிய முக்கிய இஸ்ரேலிய அமைச்சர்கள் மோதல் நிறுத்தத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். ஹமாஸ் அமைப்பினரின் நிலக்கீழ் சுரங்கங்களை இஸ்ரேலால் முற்றாக அழிக்க முடியவில்லை. இத்தனை எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் மோதல் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொன்டார். இஸ்ரேலில் உள்ள வலதுசாரித் தீவிரவாதிகள் ஹமாஸ் அமைப்பு முற்றாக அழிக்கப்படவேண்டும் காசா நிலப்பரப்பை இஸ்ரேல் கைப்பற்றி அங்கு ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர். மோதல் தொடங்க முன்னர் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் பெஞ்சமின் நெத்தன்யாஹூ 82 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். மோதலின் பின்னர் இது 38 ஆக விழ்ச்சியடைந்துள்ளது.

நன்மைகள் பெற்ற காசா மக்கள்
இதுவரை காலமும் காசா நிலப்பரப்பின் வெளியுலகத் தொடர்பை இஸ்ரேல் தடுத்து வைத்திருந்தது. எகிப்து அதைக் கட்டுப்படுத்திக் கொன்டிருந்தது. இதனால் காசாவிற்குத் தேவையானவை எல்லாம் நிலக் கீழ்ச் சுரங்கங்களுடாகக் கடத்தியே செல்லப்பட்டன. காசா வாழ் மக்கள் மத்திய தரைக் கடலில் மீன்பிடிப்பது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது. மோதல் நிறுத்தத்தின் அம்சங்களாக இந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. காசாவில் இரு துறைமுகத்தையும் ஒரு விமான நிலையத்தையும் உருவாக்க இஸ்ரேல் அனுமதிப்பதாக உடன்பட்டுள்ளது. ஹாமாஸைப் பொறுத்தவரை இது  ஒரு வெற்றியாகும். இதனால் காசா வாழ் மக்கள் மோதல் நிறுத்த உடன்பாட்டை மகிழ்ச்சியுடன் வீதிகளில் இறங்கிக் கொன்டாடினர்.

இருதரப்பும் இன்னும் எத்தனை நாட்கள் மோதாமல் இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Monday, 25 August 2014

சீனப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலான கூட்டாண்மைக் கடன் பளு(Corporate debts)

சீனாவில் உள்ள கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt) உலகிலேயே பெரியதாகும். 2013-ம் ஆண்டு இக்கடன் 142ரில்லியன்(14,200 கோடி) அமெரிக்க டொலர்களாக இருந்தது.  ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt) 13.1ரில்லியன்கள் மட்டுமே. சீனக் கூட்டாண்மைகளின் கடன் சீனவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 120 விழுக்காடாகும். 2014-ம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் சீன நிறுவனமான Shanghai Chaori Solar தனது கடன நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை சீன பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியது.  கடன் மீளளிப்பு வலுக்களைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடும் நிறுவனமான Standard & Poor சீனாவின் கூட்டாண்மைகளின் கடன் பளு ஆபத்தான வகையில் உயர்வாக இருக்கின்றது என அறிவித்தது. 1. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த படியால் கூட்டாண்மைகளின் நிதிநிலைமை பாதிப்படைந்தமை; 2. சீன அரசு நாட்டில் கடன் வழங்குதல்களைக் கட்டுப்படுத்தியமை; 3. அதிகரித்த வட்டி ஆகியவை சீனக் கூட்டாண்மைகளின் கடன் பளுவை அதிகரித்தன. சீனக் கூட்டாண்மைகளின் இலாபத்திறன் ஆறு விழுக்காடாக இருக்கும் நிலையில் அவற்றின் கடன்களின் வட்டி விழுக்காடு ஏழிற்கும் அதிகமாக இருப்பது ஒரு நல்ல பொருளாதார அறிகுறியல்ல. சீனக் கூட்டாண்மைகளின் நிதிப் பாய்ச்சல் சீராக இல்லாத்தால் கடன்பளு மேலும் அதிகரிக்கின்றது. நிதிப் பாய்ச்சல் குறைவதால் கடன் படுதலைத் தொடர்ந்து கடன் பளுவால் நிதிப்பாய்ச்சல் குறைதன் என்பது ஒரு தொடர் சுழற்ச்சியாகி நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் கடனுக்கும் அதன்மொத்தப் பெறுமதிக்கும் அதன் உள்ள விகிதாசாரம் கடன் நெம்புத் திறனாகும்(debt leverage). சீனாவில் நிதி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கூட்டாண்மைகளின் கடன் நெம்புத் திறன் 113 விழுக்காடாக இருக்கின்றது. அதாவது ஒரு மில்லியன் பெறுமதியான ஒரு கூட்டாண்மை 113 மில்லியன்கள் கடன் பட்டுள்ளது. இந்தக் கடன் நெம்புத்திறன் குறைவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதைத் தடுக்க சீன அரசு சீனப் பொருளாதாரத்திற்கு நான்கு ரில்லியன் யூவான்களை உட்செலுத்தியது. இதில் பெரும் பகுதி கூட்டாண்மைகளுக்கு கடன்வழங்குவதாக அமைந்தது. அவற்றில் பெரும்பகுதி சீனா முன்னுரிமை கொடுத்த துறைகளில் முதலிடப் படவேண்டும் எனபது சீன அரசின் நிபந்தனையாக இருந்தது. ஆனால் அத்துறைகள் இலாபத் திறன் குறைந்தனவாக இருந்தன.

தற்போது சீனவின் கூட்டாண்மைகளின் கடன்களில் நிலுவை செலுத்த முடியாத கடன்கள்(non-performing loans அதாவது உரிய நேரத்தில் மாதாந்த கடன் கொடுப்பனவையோ அல்லது வட்டிகளையோ கொடுக்க முடியாத கடன்கள்) அதிகரித்துச் செல்கின்றன. இது ஒரு ஆபத்தான நிலை என கூட்டாண்மைகளின் கடன்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவின் மேற்பார்வை செய்யும் National Development and Reform Commission இன் கூட்டாண்மை கடன் வழங்குதலை மேற்பார்வை செய்யும் பிரிவில் சீன அரசு பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. அப்பிரிவின் தலைவரை இடமாற்றம் செய்து புதியவரை அப்பதவிக்கு அமர்த்தியுள்ளது.

தற்போது கூட்டாண்மைத் துறையில் ஏற்பட்டது போன்ற ஓர் ஆபத்தான கடன் அதிகரிப்பு 1998-இல் இருந்து 2001-ம் ஆண்டு வரை சீன அரச துறையில் ஏற்பட்டது. அப்போது சீன அரசு சீனப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக உள்கட்டமைப்புக்களிலும் (infrastructure) வீடுகள் மற்றும் கட்டிங்களிலும் (Real Estate)பாரிய முதலீடுகளைச் செய்தது. இதற்காக சீன அரசு பெருமளவில் கடன்பட்டது. கடன் பளுவைக் குறைக்கும் முகமாக வட்டி விழுக்காடு செயற்கையாக குறைந்த நிலையில் வைத்திருக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் பெரு வளர்ச்சியைக் கண்டது. 1998இல் இருந்து 2001 ஆண்டு வரை சீன அரச கடனின் அசூர வளர்ச்சி ஆபத்தானது எனப் பொருளாதார நிபுணர்கள் அப்போதும் எச்சரித்தனர். ஆனால் சீனா அந்தக் கடன் பளுவைச் சமாளித்து விட்டது.

1996-ம் ஆண்டு ஜப்பானின் அரச கடன் நெம்புத்திறன்  எண்பது விழுக்காடாக இருந்த போது ஜப்பான் கடன் நெருக்கடியைச் சந்திக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் தற்போது ஜப்பானில் அரச கடன் நெம்புத்திறன் இருநூறு விழுக்காடாக உயர்ந்து விட்டது. ஜப்பான் கடன் நெருக்கடியைச் சந்திக்காமல் தன் கடன் பளுவைச் சமாளித்துக் கொண்டே இருக்கின்றது.

சீனா தனது பொருளாதாரத்தை சந்தை சார் பொருளாதாரமாகச் சீர்திருத்தம் செய்வதை மேலும் துரிதப்படுத்தும் போது அது பலதுறைகளில் பொருளாதார் முன்னேற்றம் அடையும். அப்போது சீனக் கூட்டாண்மைகளின் இலாபத் திறன் அதிகர்த்து அவற்றால் கடன்பளுவைச் சமாளிக்கக் கூடிய நிலை ஏற்படுமென நம்பலாம்.

Monday, 18 August 2014

பலஸ்த்தீனத்தின் மீதான பாராமுகமும் முசுலிம்களிடையேயான ஒற்றுமை இன்மையும்


உலகெங்கும் பல கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்ற போதும் அவர்களால் பலஸ்த்தீன மக்களின் சொல்லோணத் துயரைத் துடைக்க முடியவில்லை. அரபு நாடுகளின் எண்ணெய் வளம் வலுமிக்க அரசுகள் எதுவும் பலஸ்த்தீன மக்களின் கண்ணீர் துடைக்க உதவவில்லை. இஸ்ரேல் தான் விரும்பிய போதெல்லாம் பலஸ்த்தீனியக் குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும்  தனது படைபலத்தால் தட்டிக் கேட்பாரின்றிக் கொன்று குவிக்க முடியும்இதற்கான காரணம் அவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையா?

சியா சுனி முரண்பாடு
முஸ்லிம்களிற்கிடையிலான முக்கிய வேறுபாடு சியா சுனி வேறுபாடாகும் சியா முஸ்லிம்களுக்கும் சுனி முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றது. ஆண் மகன் இல்லாத முகம்மது நபியின் மறைவின் பின்னர் அவரது உண்மையான வாரிசு யார் என்பதில் உருவான போட்டி சியா சுனி முஸ்லிம்களிடையேயான ஒரு போட்டியாக இன்றுவரை தொடர்கின்றது. இவர்களிடையேயான போட்டி அன்றிலிருந்து இன்றுவரை ஓர் அரசியல் போட்டியாகவே தொடர்கின்றது. இது ஒரு மத நெறி தொடர்பான முரண்பாடு அல்ல. முகம்மது நபியின் பிரியத்துக் குரிய மகள் ஃபாத்திமாவின் கணவர் அலிஇவர் ஒரு சிறந்த வீரனும் அறிஞருமாகும். இவரை நபியின் உண்மையான வாரிசாகக் கருதியவர்கள் சியா முஸ்லிம்கள் எனப்படுகின்றனர். முகம்மது நபியின் பிரியத்துக்குரிய மனைவி ஆயிஷாவின் தந்தை அபுபக்கர்தான் முகம்மது நபியின் உண்மையான வாரிசு என நம்பியவர்கள் சுனி முஸ்லிம்கள் எனப்படுகின்றனர். முகம்மதுவிற்குப் பின்னர் சியாப் பிரிவினரின் ஆட்சியில் உள்ள அடக்கு முறைகளையும் ஊழல்களையும் எதிர்த்த அலியின் மகன் சுனி முசுலிம் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டான். இதுவே இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாட்டை பெரும் முறுகலாக மாற்றியது. தற்போது உலகில் உள்ள முஸ்லிம்களில் பத்து முதல் இருபது விழுக்காட்டினர் மட்டும் சியா முஸ்லிம்கள் ஆகும். ஈரான், ஈராக், சூடான் போன்ற நாடுகளில் சியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

ஈரானியர்கள்
முஸ்லிம்களிடையிலான வேறுபாட்டின் முக்கிய காரணியாகத் திகழ்வது ஈரான். சொறஸ்றியன் என்னும் மதத்தைப் பின்பற்றி வந்தவர்கள் ஈரானியர்கள். ரோமானியர்களால் பாரசசீகத்தினர் என அழைக்கப்பட்ட ஈரானியர்களுக்கு என்று ஓர் உயரிய கலாச்சாரம் உண்டு. ஈரானியர்கள் தமது கலாச்சாரம் அரபுக்களிலும் பார்க்க உயர்வானது எனக் கருதுகின்றனர். ஈரானியர்கள் 651-ம் ஆண்டு அரபுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இசுலாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். இவற்றால் ஈரானியர்கள் அரபுக்களை விரும்புவதில்லை. ஈரானியர்களில் பெரும்பகுதியினர் சியா முஸ்லிம்கள். அரபுக்களில் பெரும்பான்மையானவர்கள் சுனி முஸ்லிம்கள். உலக அரங்கில் அரபு நாடுகள் ஒரு ஈடுபாடற்ற நிலையைக் கடைப்பிடிக்கும் போதெல்லாம் ஈரான் ஒரு செயற்படு நிலையைக் கடைப்பிடிக்கும். ஈரானுக்கு என்று ஒரு வல்லரசுக் கனவு உண்டு. ஈரான் அணுக்குண்டை உற்பத்தி செய்து அஜர்பைஜான், லிபியா, எகிப்து, அல்ஜீரியா ஆகியவற்றுடன் சவுதி அரேபியாவின் ஒரு பகுதியையும் தனது  ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்து ஒரு வல்லரசாக வேண்டும் என்பதே அக்கனவு. இதனை எல்லா அரபு நாடுகளும் எதிர்க்கின்றன. ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் என்றாவது ஒரு நாள் அணுக்குண்டை உற்பத்தி செய்யலாம் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. தான் அணுக்குண்டை உற்பத்தி செய்வதிலும் பார்க்க சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை வாங்க சவுதி திட்டமிடுகின்றது.

அரபுத் தேசியவாதம்
எல்லா அரபுக்களும் முசுலிம்களல்லர். எல்லா முசுலிம்களும் அரபுக்களல்லர். அரபு நாடுகளின் வாழும் முசுலிம்கள் உலக மக்கள் தொகையின் இருபது விழுக்காட்டினர் மட்டுமே! அரபுக்கள் என்ற அடையாளம் மூவாயிரம் ஆண்டுகளாக இருக்கின்றது. அரபுத் தேசியவாதம் முதலாம் உலகப் போரின் பின்னர் முனைப்படைந்தது. அரபுக்கள் முதலாம் உலகப் போரின் முன்னர் உதுமானிய பேரரிசினால் இசுலாமிய மதப்படி ஆளப்பட்டார்கள். முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸுனாலும் பிரித்தானியாவினாலும் ஆளப்பட்டனர். பிரித்தானிய பிரெஞ்சு ஆட்சியின் போது அரபு மக்கள் தம்மைத் தாமே ஆள வேண்டும் என்ற கொள்கையால் உந்தப்பட்டனர். இவ்விரு நாடுகளில் இருந்தும் சுதந்திரம் பெற்ற பின்னர் 1948-ம் ஆண்டு அரபு நாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பது முன்னாள் எகிப்திய அதிபர் கமால் நாசர் முன்வைத்தார். பின்னர் 1958-ம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசு உருவாக்கப்பட்டது. இதில் ஈராக்கும் இணைவதாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடக்கவில்லை. அரபுநாட்டு ஆட்சியாளர்கள் ஒருவரை ஒருவர் ஐயப்படத் தொடங்கினார்கள். மன்னர் ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் படைத்துறை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களை வெறுத்தார்கள். அரபுக்கள் அவர்களது மொழி அடிப்படையில் ஒன்றாக முயன்றாலும் அவர்களிடையே இருந்த இனக்குழும வேறுபாடுகள் அவர்களை ஒன்று படுவதைத் தடுத்தது. அவர்களிடையே பல நூற்றுக் கணக்கான வேறுபாடுகள் இருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று முரண்படுவதும் உண்டு. சவுதி அரேபிய மன்னர் குடும்பம் கட்டார் மன்னர் குடும்பத்திலும் பார்க்க மேன்மையானது என நம்புகிறது. இதனால் இந்த அரச குடும்பங்களிடையே முரண்பாடு உண்டு. ஜோர்தான், சவுதி அரேபியா, லெபனான் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்குலக சார்பானவர்களாகவும் இருக்கிறார்கள். 1967-ம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த போரில் அரபு நாடுகள் படுதோல்வி அடைந்தவுடன் அரபுத்தேசியவாதம் வீழ்ச்சியடைந்தது. அன்வர் சதாத் இஸ்ரேலுடன் செய்த  காம்ப் டேவிட் உடன்படிக்கையுடன் அரபுத்தேசியவாதம் முடிவடைந்து விட்டது எனச் சொல்லலாம். அரபு நாடுகள் இப்படி ஒற்றுமையின்றிப் போன படியால் இஸ்ரேல் என்ற நாட்டின் தோற்றத்தையோ வளர்ச்சியையோ அவர்களால் தடுக்க முடியவில்லை. இப்போது எகிப்து    இஸ்ரேலுடன் நெருங்கிய உறவையும் சவுதி அரேபியா, ஜோர்தான் போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் இரகசிய உறவையும் பேணுகின்றன. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்ய முனைந்தால் இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் இணைந்து அதை முறியடிக்க இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி ஐக்கிய ஆபிர்க்கக் குடியரசு என்னும் பேரரசை உருவாக்க வேண்டும் என விரும்பினார். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தமக்கு என ஒரு நாணய நிதியத்தையும் பொது நாணயத்தையும் உருவாக்க வேண்டும் என விரும்பினார். அவரது எண்ணம் ஈடேறவில்லை. ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் ஹுசேய்ன் படை எடுப்புக்கள் மூலம் ஈரான், குவேய்த் ஆகியவற்றைத் ஈராக்குடன் இணைக்க முயன்றார். இதானால் அமெரிக்க ஆதிக்கம் மத்திய கிழக்கில் வலுப்பெற்றது.

துருக்கியர்
மேற்கொண்டு நாம் துருக்கியைப் பார்ப்போமானால். துருக்கி மற்றைய இசுலாமிய நாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அது ஒரு குடியரசு நாடு.  தேர்தல் மூலம் தனது பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கிறது. சம்பிரதாய குடியரசுத் தலைவர் கூட தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்அதன் அரசு மதசார்பற்றது. மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட ஒரே இசுலாமிய மக்களைப் பெரும்பான்மையினர்களாகக் கொண்ட நாடு துருக்கியாகும்அமரிக்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடு.பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கின்றது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, பால்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம், கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது. மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன் குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது. கருங்கடல், மத்திய தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது. முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவுடனும் பிரான்ஸுடனும் இணைந்து அரபு நாடுகள் தமது முதுகில் குத்தின என துருக்கி கருதுகிறது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியில் இருப்பதை துருக்கி விரும்பியது. இதனால் அது எகிப்துடன் முரண்பட்டு நிற்கின்றது. சிரியாவில் பஸார் அல் அசாத்திற்கு எதிரான் கிளர்ச்சிக்காரர்களுக்கு துருக்கி ஆதரவு தெரிவிக்கின்றது. இதனால் துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. துருக்கி பலஸ்த்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்கின்றது.
முசுலிம்கள் வாழும் நாடுகள்

ஆசிய நாட்டு முசுலிம்கள்
அரபுநாடுகளிலும் பார்க்க அதிக அளவு முசுலிம்கள் ஆசியாவில் வாழ்கின்றனர். ஆசியாவில் ஒரு பில்லியன் முசுலிம்கள் வாழ்கின்றனர் அரபு நாடுகளில் முன்னூறு மில்லியன் (முப்பது கோடி) முசுலிம்கள் மட்டுமே. அதிக அளவு முசுலிம்கள் வாழும் நாடுகள் இந்தோனேசியா, பாக்கிஸ்த்தான், இந்தியா, பங்காளாதேசம் ஆகியவையாகும். இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் வாழும் மக்கள் ஒரு மில்லியன்களுக்கும் (பத்து இலட்சம்) அதிகமாகும். இந்தோனேசியா, புரூனை, மலேசியா ஆகியநாடுகளில் முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆசியாவில் முசுலிம் வாழும் நாடுகள் அரபு நாட்டு முசுலிம்களுடன் கலாச்சார ரீதியில் சற்று வேறுபட்டு நிற்கின்றனர். பல ஆசிய நாடுகள் பலஸ்த்தீனிய விடுதலையை இராஜதந்திர ரீதியில் ஆதரிக்கின்றன. பலஸ்த்தீனியத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பெரிய ஆதரவு கிடைப்பதற்கு ஆசிய நாடுகளின் ஆதரவும் ஒரு காரணம். பலஸ்த்தீனிய விடுதலைக்கு இராசதந்திர ஆதரவு மட்டுமே கொடுக்க முடிந்தது. பலஸ்த்தீனியர்களின் படைத்துறைப் போராட்டத்திற்கு நேரடியான உதவிகளை அவர்களால் செய்ய முடியவில்லை.

இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
1928-ம் ஆண்டு இஸ்லாமிய மத அறிஞர்களாலும் போதகர்களாலும் ஹசன் அல் பன்னா என்ற பேரறிஞர் தலைமையில் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.  தொடங்கி இருபது ஆண்டுகளில் இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்தது. ஒவ்வொரு இசுலாமியரும், சமூகமும், அரசும் இசுலாமிய சட்டப்படியே நடக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது இ.ச.அமைப்பு. அது கல்விக் கூடங்கள், நியாய விலைக்கடைகள், மருத்துவ மனைகள் போன்றவற்றை நடாத்தி வந்தது. அப்துல் கமால் நாசர் செய்த புரட்சியின் போது இ.ச.அமைப்பு அவருடன் இணைந்து செயற்பட்டது. ஆனால் நாசர் நாட்டை சோஸலிச நாடாக நடத்த விரும்பினார். இ.ச.அமைப்பு இசுலாமியச் சட்டங்களை அமூல்படுத்தும் படி அவரை வேண்டியது. நாசரைச் சந்திக்கச் சென்ற இ.ச.அமைப்பின் தலைவர் பெண்கள் முக்காடு போடுவதைச் சட்டமாக்கும் படி வேண்டினார். அதற்கு நாசர் ஒரு வீட்டுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் தீர்மானிக்கட்டும். நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன;. மருத்துவக் கல்லூரியில் பயிலும் உமது மகளை முதலில் முக்காடு போடச் செய்யும். பிறகு நாட்டைப் பற்றிப் பார்ப்போம் என்றார். பின்னர் நாசருக்கும் இ.ச.அமைப்பிற்கும் இடையில் பகைமை ஏற்பட்டு. இ.ச.அமைப்பு எகிப்தில் தடை செய்யப்பட்டது. சிரியாவின் ஹமா நகரில் 1982-ம் ஆண்டு நாற்பதினாயிரம் இ.ச.அமைப்பின் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தற்போது சிரியாவில் ஆட்சியில் இருக்கும் பஷார் அல் அசாத்தின் சித்தப்பா ரிஃபாத் அல் அசாத்தால் மேற்கொள்ளபப்ட்டது. சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன், ஈரான், ஈராக், துனிசியா, பலஸ்த்தீனம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியக் கூட்டமைப்பு, ஓமான், குவைத், சிரியா, லிபியா, சோமாலியா, யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் உட்பட 50இற்கு மேற்பட்ட நாடுகளில் இ.ச.அமைப்பிற்கு கிளைகள் இருக்கின்றன. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு படைக்கலன் ஏந்திய போராட்டம் செய்யக்கூடாது என்ற நம்பிக்கையுடைய அமைப்பு. ஆனால் இதன் ஒரு கிளையே ஹமாஸ் அமைப்பு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பைப் பிடிக்காத எகிப்து, சவுதி அரேபியா, சிரியா ஆகிய நாடுகள் ஹமாஸ் அமைப்பை எதிர்க்கின்றன. காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியர்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் பெரிய அளவில் ஏதும் செய்யாதமைக்கு இதுவே காரணம்.

பலஸ்த்தீனியத் தேசியவாதம்
பலஸ்த்தீனம் என்ற சொல் இடம்விட்டு இடம் நகரும் மக்கள் எனப் பொருள்படும். கிரேக்கர்கள் முதலில் பலஸ்த்தீனம் என்னும் பெயரால் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தை அழைத்தனர். அப்பிரதேசம் இப்போது இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய ஆட்சியின்போது யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து தோன்றிய போது பலஸ்த்தீனியர்கள் என்றபதம் பரவலாகப் பாவிக்கப் படத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு இஸ்ரேல் உருவான ஓராண்டின் பின்னர் அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்தனஇந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதன் பின்னர் அரபுநாடுகள் பலஸ்த்தீன மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதில் அரபு நாடுகள் முரண்பட்டுக் கொண்டன. பலஸ்த்தீனம் தனது நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் எனச் சொன்னது ஜோர்தான். பலஸ்த்தீனம் வரலாற்று ரீதியாக தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என அடம்பிடித்தது சிரியா. சில நாடுகள் பலஸ்த்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் எனக் கருதின. மாறாக யசீர் அரபாத்  ஜோர்தான் பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதி எனக் கருதினார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் முஸ்லிம்களிடையே பிளவுகளை உருவாக்கியது. ஈரான் பலஸ்த்தீனம் தொடர்பான தீர்வுகளில் தனக்கும் பங்கு உண்டு என்றது. காஸா நிலப்பரப்பு எகிப்த்தின் கீழ் இருந்ததையும், மேற்குக்கரை ஜோர்தானின் கீழ் இருந்ததையும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. 1967-ம் ஆன்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் பலஸ்த்தீனியர்கள் ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளிற்கு இடம்பெயர்ந்தனர். ஜோர்தான் நாடுதான் முதலில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தியது. பின்னர் லெபனானில் பலஸ்த்தீனியர்களுக்கும் லெபனானியக் கிற்ஸ்த்தவர்களுக்கும் இடையில் மோதல் நடந்தது. பின்னர் சிரியப் படைகள் லெபனானிற்குள் சென்று பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினரைப் பெருமளவில் கொன்று குவித்தது. இதானல் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினர் லெபனானில் இருந்து வெளியேறினர். பின்னர் லெபனானில் எஞ்சியிருந்த பலஸ்த்தீனியர்களிடையே ஹிஸ்புல்லா அமைப்பு உருவானது. பலஸ்த்தீன விடுதலைக்கு என பல்வேறுபட்ட அமைப்புக்கள் உருவாகின. இவை ஒன்றுடன் ஒன்று முரண்படுவதும் உண்டு.

அரபுக்களின் பாராமுகம்
அரபு நாட்டு செல்வந்தர்கள் இலண்டனிலும் பரிஸிலும் லஸ் வேகஸிலும் ஓர் இரவில் செலவளிக்கும் பணத்தில் பலஸ்த்தீனியர்களுக்கு பெரும் நிவாரணம் தேடித்தர முடியும். 2014 ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் புனித ரம்ழான் வேளையில் இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் அப்பாவி பலஸ்த்தீனியர்களைக் கொன்றும் அவர்களது வாழ்வாதாரங்களை அழித்தும் கொண்டிருக்கையில் மற்ற அரபு நாடுகள் ஒரு சில நிவாரணப் பொருட்களை மட்டுமே அனுப்பின. காத்திரமான இராஜதந்திர நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. ஒரு பிரபல பலஸ்த்தீனிய கருத்துப் பட வரைஞர் பலஸ்த்தினத்தை ஒரு  பெண்ணாகச் சித்தரித்து அப்பெண்ணை இஸ்ரேல் நெஞ்சில் கத்தியால் குத்துவது போலவும் அரபு நாடுகள் அப்பெண்ணிற்கு முதுகில் குத்துவது போலவும் வரைந்திருந்தார். அரபு நாடுகள் கடந்த மூன்று ஹமாஸ்-இஸ்ரேலிய மோதல்களின் போதும் மௌனத்தையே கடைப்பிடித்தன. பலஸ்த்தீன அறிஞர்கள் சபை இந்த மௌனத்தைக் கடுமையான வார்த்தைகள் உள்ளடக்கிய அறிக்கையால் கண்டித்தது.

மோதல் நிலைகள் முஸ்லிம்களிடை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் பலஸ்த்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை முஸ்லிம்களால் தடுக்க முடியாமல்லிருக்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...