Wednesday, 9 April 2014

இந்தியத் தேர்தல் ஒரு பார்வை

எண்பத்தி ஒரு கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து மே 12-ம் திகதிவரை நடைபெறும். அதாவது தேர்தல் 36 நாட்கள் நடைபெறும். மே 16-ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்தியாவின் தேர்தலைப் பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும்.

அதிக எண்ணிக்கையான் இளம் வாக்காளர்கள் 
81 கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முப்பத்து எட்டுக் கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் 18-இற்கும் 35இற்கும் இடைப்பட்ட வயதினரே. இவர்களில் பெரும் பான்மையானவர்களை எந்த அரசியல்வாதியும் கவரவில்லைசிறந்த கல்வி, சிறந்த பொருளாதாரம், ஊழலற்ற ஆட்சி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சிறந்த மருத்துவ வசதி என இவர்களது நீண்ட தேவைப் பட்டியலை எந்த ஒரு அரசியக் கட்சிகளாலும் நிறைவேற்ற் முடியாது.

முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் மோடி 
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற முன்னர் தனது கட்சியைப் பிடிப்பதில் வெற்றி கண்டு கொண்டிருக்கின்றார். மோடியின் கட்சியைப் பிடிக்கும் முயற்ச்சி அவரது கட்சியில் பிளவுகளை உருவாக்கியுள்ளது என்ற செய்தி அண்மைக் காலங்களாக கடுமையாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங் தான் கேட்ட தொகுதியில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காமையினால் கட்சி சார்பில் போட்டியிடாமல் தன்விருப்ப வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். இதற்காக ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். தான் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதாக ஜஸ்வந்த் சிங் ஊடகங்களிற்கு கண்ணீருடன் பேட்டியளித்தார். இன்னும் ஒரு மூத்த தலைவரான சுஸ்மா சுவராஜ் அவர்களும் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றார். இந்தியாவில் வீசும் மோடி அலையில் சுஸ்மா சுவராஜ் ஒதுக்கப்பட்டார் எனச் சொல்லலாம்.

ஆனால் பாரதிய ஜனதாக் கட்சியின் மிகவும் மூத்த தலைவரான எல் கே அத்வானி தான் மோடியுடன் நன்கு ஒற்றுமையாக இருப்பதாகக் காட்சிப்படுத்தியுள்ளார். எல் கே அத்வானி தனது தேர்தல் வேட்பு மனுத் தாக்கலிற்கு மோடியை உடன் அழைத்துச் சென்றதுடன் நரேந்திர மோடியை சிறந்த நிர்வாகி எனப் புகழந்துள்ளார். மேடியின் நிர்வாகத் திறன் அவரை இந்தியாவின் சிறந்த தலைமை அமைச்சராகச் செயற்பட உதவும் என்றார் எல் கே அத்வானி.
 நரேந்திர மோடி தேசிய அளவில் பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னணித் தலைவர்களான யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஸி, சுஸ்மா சுவராஜ், எல் கே அத்வானி ஆகியோரை ஓரம் கட்டி தலைமை அமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.

முன்னாள் கல்வி அமைச்சரான முரளி மனோகர் ஜோஸியின் தொகுதியை மோடி தனதாக்கி தான் போட்டியிடுகின்றார். வேண்டா வெறுப்புடன் ஜோஸி தனது தொகுதியை மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.  மோடி தனது வெற்றியை உறுதி செய்ய Vadodara and Varanasi, ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.

ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் பல முன்னணித் தலைவர்களை ஓரம் கட்டி முதலமைச்சர் ஆனவர் மோடி. குஜராத்தில் மூன்று தடவை முதலமைச்சராகத் வெற்றி பெற்ற மோடி அங்கு ஒரு தனிமனித அமைச்சரவையையே நடத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு உண்டு. பல முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை மோடியே வைத்திருப்பார்.  மோடி எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்துபவர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

என்னதால் மோடி அலை வீசினாலும் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெறமாட்டாது எனப் பல கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.  543 தொகுதிகளில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி 240 இற்கும் 260இற்கும் இடையிலான தொகுதிகளில் வெற்றி பெறலாம என எதிர்பார்க்கப்படுகின்றது.

2014 -ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடக்க விருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெற முடியாது என்ற நிலையில்  ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும்.
தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முதலாம் இடத்தையும் காங்கிரசுக் கட்சி இரண்டாம் இடத்தையும் பெறும் நிலையில் அம்மா ஜெயலலிதாவின் அண்ணா திரவிட முன்னேற்றக் கழகம், உத்தரப் பிரதேசத்து அக்கா மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மேற்கு வங்கத்து அக்கா மம்தா பனர்ஜீயின் திரினாமூல் காங்கிரசு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.  இவை மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் மூவரும் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சராகும் கனவுடன் இருக்கின்றார்கள். இவர்களிடை கடுமையான குணாதிசிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. ஆடமபரமான வாழ்கையையும் விலை உயர்ந்த அணிகலன்களையும் விரும்பும் திமிர் பிடித்தவர்  ஜெயலலிதா அம்மா. இவர் தான் அம்மா என அழைக்கப்படுவதை விரும்புபவர். திரினாமூல் காங்கிரசுக் கட்சியின் தலைவியான மம்தா பனர்ஜீ மிகவும் எளிமையாக ஆடைகளை அணிவார். இவர் அமெரிக்கா சென்ற போது இவரது மருமகள் தனக்கு முகப்பூச்சு வாங்கி வரும்படி வேண்டியிருக்கின்றார். முகப்பூச்சு அனுபவம் இல்லாத மம்தா ஆண்களின் முகப்பூச்சை வாங்கி வந்து மருமகளுக்குப் பரிசளித்திருக்கின்றார். பொதுவுடமைக் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி தான் ஆட்சியைக் கைப்பற்றிச் சாதனை புரிந்தவர் மம்தா. பார்ப்பன எதிர்ப்பில் உருவான திராவிட இயக்கத்தின் கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தன்வசமாக்கிச் சாதனை புரிந்தவர் பார்ப்பனத்தியான ஜெயலலிதா. ஜெயலலிதா கன்னடத்து உயர் சாதி அய்யங்கர் சமூகத்தை சேர்ந்தவர் என்றால் மயாவதி அக்கா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் காங்கிரசின் கோட்டையாக இருந்த உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி முதல்வராகிச் சாதானை புரிந்தவர் மயாவதி. இவருக்குப் பிடித்தமானது அதிக செலவு செய்து தனக்குத் தானே சிலை அமைப்பது. இதனால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து தேர்தலில் தோல்வியுற்று முதல்வர் பதவியை இழந்தவர்.  எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத இடத்து இந்த இரண்டு அக்காக்களும் ஒரு அம்மாவும் முக்கியத்துவம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவின் கட்சி 23இற்கும் 26இற்கும் இடைப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறலாம். மயாவதியில் திரிணாமுல் காங்கிரசு மேற்கு வங்கத்தில் இதே எண்ணிக்கையான தொகுதிகளில் வெற்றி பெறலாம. மாயாவதி 7 இடங்களில் வெற்றி பெறலாம். ஜெயலலிதா தலைமை அமைச்சராக வருவதைத் தான் ஆதரிப்பதாக மம்தா ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்தியத் தேர்தல்களத்தில் முக்கியமான மாநிலங்கள்..

உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதல் தடவையாக பாரதிய ஜனதாக் கட்சி தனது செல்வாக்ககி கணிசமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாடிக் கட்சி இரண்டு இடங்களைப் பெறுவதே கடினம். புதிதாக உருவான ஆம் ஆத்மி கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆந்திரா: தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தை காங்கிரசுக் கட்சி தெலுங்கான என்றும் சீமந்திரா என்றும் இரு மாநிலங்களாகப் பிரித்தது.  இரு மாநிலங்களிலும் மொத்தம் 42 தொகுதிகள் உண்டு. இதனால் சீமதிராவில் காங்கிரசு படு தோல்வியைச் சந்திக்கும். தெலுங்கானாவில் மாநிலத்தைப் பிரித்தமைக்காக சில தொகுதிகளில் வெற்றி பெறலாம்.

மேற்கு வங்கம்: 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏற்கனவே சொன்னது போல் மம்தா பனர்ஜீ அமோக வெற்றி பெறுவார். அங்கு பாரதிய ஜனதாக் கட்சிக்கு இடமில்லை எனச் சொல்லலாம்.  நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் சென்ற தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டும் பாஜகா வெற்றி பெற்றது, இம்முறை அரைவாசி இடங்களைக் கைப்பற்றலாம்.

பிஹார்: நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலத்தில் நிதிஸ் குமாரின் ஜனதளம் கட்சி, லாலுபிரசாத் யாதவ்வின் ராஸ்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. சில தொகுதிகளில் காங்கிரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு உரிய வேட்பாளர்களை நிறுத்துவதே சிரமமாக  இருக்கின்றது. இதனால் காங்கிரசுக் கட்சி தனது தோழமைக் கட்சியான ராஸ்ரிய ஜனதா தளம் கட்சியிடமிருந்து ஒரு வேட்பாளரைக் தானமாக வாங்கி தேர்தலில் போட்டியிட வைக்கின்றது.

தமிழ்நாடு: 39 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஓரிரு தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற வாய்ப்புண்டு. காங்கிரசு ஒரு இடத்தில் தன்னும் வெற்றி பெற மாட்டாது. அதிகப்படியான இடங்களில் ஜெயலலிதாவும் அடுத்தபடியாக கருணாநிதியின் திமுகவும் வெற்றி பெறும்.

காங்கிரசின் கோட்டைகளில் ஒன்றான கேரளாவில் இம்முறையும் காங்கிரசுக் கட்சி வெற்றி பெறும். அதேவேளை இன்னும் ஒரு காங்கிரசுக் கோட்டையான ஹரியானாவில் காங்கிரசு தனது செல்வாக்கை இழந்து விட்டது. பஞ்சாப்பில் காங்கிரசுக்கும் பாஜகாவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.  2009 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜஸ்த்தான் மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது இம்முறை ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும். 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் பாஜகா தனது செல்வாக்கை சிறிது உயர்த்தியுள்ளது.காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டைப் பார்ப்போமானால் காங்கிரசுக் கட்சி இம்முறைத் தேர்தலில் இரு நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஒன்று நூறுக்குக் கூடிய தொகுதிகளிலாவது வெற்றி பெற்று பாஜகாவிற்கு பாராளமன்றத்தில் சவாலாக வருவது. மற்றது ராகுல் காந்தியைத் தோல்வியடையாமல் செய்வது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இந்திராகாந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியின் மகனான வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் என்று தேர்தல் கூட்டத்தில் சூளுரைத்தார். இது பாஜகாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. காங்கிரசில் வெறுப்படைந்திருந்த இஸ்லாமியர்கள் காங்கிரசு தோல்வியடைந்து பாஜகா ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என்பதை வருண்காந்தியின் பேச்சால் நினைத்தர்கள். காங்கிரசுக் கட்சிதான் வருண் காந்தியை இப்படி ஒரு பேச்சை பேசும்படி தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதே போல் இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரான வருண்கான் வருண் காந்தி காங்கிரசுக் கட்சியின் ராகுல் காந்தி தனது அமேதி தொகுதிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார் என உரையாற்றியுள்ளார். இதை உடன் உணர்ந்த பாஜகா உசாரானது. வருண் காந்தியின் தாயாரான மனேக்கா கந்தி எனப்படும் மேனஹா காந்தி தனது மகன் சொல்வது தவறு எனப்பகிரங்கமாக அறிவித்தார்.

பணவலு மிக்க காங்கிரசுக் கட்சி இறுதி நேரத்தில் இப்படிப் பல உத்திகளைக் கையாளலாம்.

Thursday, 3 April 2014

அமெரிக்காவின் புதிய நீள் தூர எறிகுண்டுகள்

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் பாவிப்பதற்கென Long Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத் தாக்குதல் எறிகுண்டுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை அமெரிக்காவிடமுள்ள எறிகுண்டுகளில் மிக அதிக தூரம் பாய்ந்து தாக்கக் கூடியவையாகும்.
Long Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத் தாக்குதல் எறிகுண்டுகள் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இலக்குகளை நோக்கிச் சென்று தாக்கக் கூடியவை. இவை தூரத்தில் இருந்தே வீசக் கூடியவை என்பதால் வீசும் படையினர் தமக்குப் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு எதிரி இலக்குகளை நோக்கி இவற்றை வீசலாம். அமெரிக்கப்படைகளுக்கான உபகரணங்களைத் தயாரிக்கும் லொக்ஹீட் நிறுவனம் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு செய்த ஒரு திட்டத்தில் இந்த எறிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 71கடல் மைல்கள் தூரம் பாயக்கூடியவை. ஒரு கடல் மைல் என்பது 1852 மீட்டர்களாகும், கடலில் இருந்து வீசப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கக் கூடியவையுமாகும்.

அமெரிக்கக் கடற்படையினருக்கு உருவாக்கப்பட்டுள்ள
Long Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத் தாக்குதல் எறிகுண்டுகள் 2.2 மீட்டர் நீளமும் 155மில்லி மீட்டர் குறுக்கு விட்டமும், அரை மீட்டர் நீள் சிறகுகளும் உடையவை. ஒரு எறிகுண்டு 104கிலோ எடையுடையது. இவற்றை நாசகாரிக் கப்பல்களில் இருந்துஒரு நிமிடத்துக்கு 10 சுற்றுக் குண்டுகள் வீசக்கூடிய செலுத்திகளில் இருந்து வீசலாம். பலதரப்பட்ட எதிரி இலக்குகளை இவை துவம்சம் செய்யும்.

 
Long Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத் தாக்குதல் எறிகுண்டுகள் global positioning system (GPS) என்ற முறைமையைப் பாவித்து வழிகாட்டப்படும். இதனால் இந்த எறிகுண்டுகள் வழிகாட்டலுக்கு இணங்க பயணித்து எதிரி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றவை.

Tuesday, 1 April 2014

பின் லாடனைக் கண்டு பிடித்தது சித்திரவதையால் அல்ல என்கிறது அமெரிக்கப் பாராளமன்றம்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத்துறையினர் பன்னாட்டு மனித உரிமை நியமங்களுக்குப் முரணான வகையில் இசுலாமிய தீவிரவாதிகள் பலரை உலகெங்கும் கைது செய்து கள்ளத்தனமாகக் கடத்தி கியூபாவில் உள்ள குவாண்டமானோ தீவில் வைத்து சித்திரவதை செய்தனர்.

சிஐஏயின் வதை முகாம்கள்
தடுப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை சிஐஏ அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் நிறுவி அங்கு தான் சந்தேகிப்பவர்களைத் தடுத்து வைத்திருந்து பல சித்திர வதைகளைச் செய்தது. ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கெய்தா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Waterboarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது.
இந்த சித்திரவதையை விக்கிபீடியா இப்படிக் கூறுகிறது:
The prisoner is bound to an inclined board, feet raised and head slightly below the feet. Cellophane is wrapped over the prisoner’s face and water is poured over him. Unavoidably, the gag reflex kicks in and a terrifying fear of drowning leads to almost instant pleas to bring the treatment to a halt. According to the sources, CIA officers who subjected themselves to the water boarding technique lasted an average of 14 seconds before caving in. They said al Qaeda’s toughest prisoner, Khalid Sheik Mohammed, won the admiration of interrogators when he was able to last over two minutes before begging to confess.
சுருங்கக் கூறுவதானால் கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்ப்துதான் இந்த water boarding சித்திரவதை. ஐரோப்பாவில் மட்டும் 14 நாடுகளில் சிஐஏயின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தன. இவை எந்த நாட்டுச் சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. போலந்தில் சிஐஏ இரகசியத் தடுப்பு முகாம்களில் அல் கெய்தா சந்தேக நபர்களைச் சித்திரவதை செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. சிஐஏயின் "கைதுகளும் சிறை வைத்தலும்" எந்த ஒரு நாட்டுச் சட்டத்திற்கும் இசைய நடப்பவை அல்ல.

பலம் பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நிலையம்.
சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்களின் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின்  பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்-பாக் பிரிவு
அல் கெய்தாவின் முக்கிய களம் ஆப்கானிஸ்த்தானிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான எல்லைப் பிரதேசமாகும். இப்பிரதேசம் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ இல்லை. 9-11இன் பின்னர் சிஐஏயின் பிஏடி எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளன.

மோசமான படை அமைப்பாக மாறிய சிஐஏ
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

சிஐஏயின் படைப்பிரிவு ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது.
சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் சிஐஏயின் படைப்பிரிவு எந்தவிதக் சட்டக் கட்டுப்பாடுமின்றி ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர்.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை.

பிடித்துக் கொல்லுதலும் கொன்று பிடித்தலும்

அல் கெய்தாவினருக்கு எதிரான சிஐஏயின் நடவடிக்கைகள் பிடித்துக் கொல்லுதல் என்ற செயற்பாட்டில் இருந்து கொன்று பிடித்தல் என்ற செயற்பாட்டுக்கு மாறியுள்ளதாகச் சிலர் தெரிவித்தனர். சிஐஏ தேவை ஏற்படும் போது தடை செய்யப்பட்ட நிலக்கண்ணி வெடிகளையும் பாவிக்கத் தயங்குவதில்லை என்றும் சில செய்திகள் கூறின. பின் லாடனைப் பிடித்துக் கொல்லப் போன அமெரிக்க சீல் படையினர் பின் லாடனின் மனைவி தற்கொலை அங்கி அணிந்திருக்கலாம் என்ற அச்சத்தில் பின் லாடனைக் கொன்று பிடித்தனர்.

கோழியா? முட்டையா?
சிஐஏ 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் தனது நடவடிக்கைகளை பலமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்கிறதா அல்லது தனது நடவடிக்கைகளை பலமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ள இரட்டைக் கோபுரத்தாக்குதலை சிஐஏ ஒழுங்கு செய்ததா என்ற கேள்வியும் இன்றுவரை உண்டு. Andreas von Bulow என்ற ஜெர்மனியர் த்னது  The CIA and September 11என்ற நூலில் இந்தக் கேள்வியையே முன்வைத்தார்.

அமெரிக்கப் பாராளமன்றத்தின் விசாரணையும் அறிக்கையும்.
அமெரிக்கப் பாராளமன்றத்தின் அவைகளான மக்களவை(காங்கிரஸ்) மூதவை(செண்ட்) ஆகியவற்றின் தெரிவுக்குழுவினர் மேற்கொண்ட விசாரனையின்படி அமெரிக்கப்பாதுகாப்புத்துறையினரும் உளவுத் துறையினரும் மேற்கொண்ட நீர்ப் பலகை சித்திரவதை  போன்ற கொடூரமான சித்திரவதைகளிலும் பார்க்க மரபுவழி விசாரணைகள் மூலமாகவே பின் லாடன் பற்றிய தகவல்கள் அறிய முடிந்தது.  காலித் ஷேக் மொஹமட் (Khalid Sheikh Mohammed) என்பவரை மட்டும் 183 தடவைகள் நீர்ப்பலகைச் சித்திரவதை செய்தார்கள். ஆனால் இவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் ஏற்கனவே அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரிந்தவையே. பின் லாடனின் இருப்பிடம் அறிய உதவியது அவரது தகவற்பரிமாற்றக்காரர்(messenger) பற்றி அறிந்த தகவல்களே. இந்தத் தகவல்களை வழங்கியவர் மரபுவழி விசாரணையிலேயே விசாரிக்கப்பட்டவராம்.
குவாண்டமானோ ஏமாற்றம்.
குவாண்டமானோக் கைதிகளிடம் இருந்து பின் லாடனின் இருப்பிடத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் பெற முடியாமல் போனது அமெரிக்காவிற்குப் பெரும் ஏமாற்றம். அவர்கள் எவரும் உண்மையில் பின் லாடனின் இருப்பிடம் அறிந்திருக்கவில்லை.

மர்ம தகவல் பரிமாற்றக்காரர்.
அமெரிக்கா பல அல் கெய்தா ஆதரவாளர்களை கிழக்கு ஐரோப்பாவில் சிறைவைத்துள்ளது. அங்குள்ள கைதிகளிடம் இருந்து அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பெற்றுக் கொண்ட ஒரே ஒரு பெறுமதி மிக்க தகவல் பின் லாடனுக்கு ஒரு நம்பிக்கை வாய்ந்த தகவல் பரிமாற்றக்காரர் இருக்கிறார் என்பதே. பின் லாடன் தனது இரட்ண்டால் நிலை சகாக்களுடன் இந்த தகவல் பரிமாற்றக்காரர் ஊடாகத்தான் தொடர்புகளை வைத்திருந்தார். அவரின் உண்மையான பெயரைக் கூட அவர்களால் பெறமுடியவில்லை. இந்நிலையில் அமெரிக்கா குவாண்டமானோ சிறைச்சாலையிலும் மற்றும் கிழ்க்கு ஐரோப்பியச் சிறைச் சாலைகளிலும் கைக்கொள்ளும் சித்திரவதை விசாரணை முறை பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. அங்கு பாவிக்கப்படும் நீரடிக்கும்பலகைச் சித்திரவதை முறையும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. இவை எல்லாம் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இற்கு பலத்த ஏமாற்றத்தையே அழித்தது. கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள கைதிகளில் முக்கியமானவர்கள் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட காலித் ஷேக் முகமதுவும் அல் கெய்டாவின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் அபு பராஜ் அல்-லிபியும். அவர்கள் தங்களுக்கு தகவல் பரிமாற்றக்காரர் பற்றி ஏதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். இப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது. 2005இல் பின் லாடன் இருப்பிடம் அறிவது என்பது ஒரு முடியாத காரியம் என்று ஆகிவிட்டது. விளைவு "ஆப்பரேஷன் கனன்போல்" இதில் பல சிஐஏ தலைகள் உருண்டன. பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் புதிய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.

தேசிய பாதுகாப்பு முகவரகம்.
தேசிய பாதுகாப்பு முகவரகம் என்பது உருவாக்கப் பட்டு அது நவீன கருவிகளைக் கொண்டு பல தொலபேசிதொடர்புகளையும் மின்னஞ்சன்களையும் களவாகப் பதிவு செய்தது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. பாக்கிஸ்த்தானில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் இருந்து மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் குடும்பப் பெயரை சிஐஏ அறிந்து கொண்டது. இது நடந்தது 2007இல். பின்னர் அதிக உளவாளிகள் பாக்கிஸ்த்தானிலும் ஆப்க்கானிஸ்த்தானிலும் களமிறக்கப்பட்டனர்.ஆனால் அவரது இருப்பிடம் பற்றிய தகவல் கிடைக்கப்படவில்லை. அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதாகவும் அறியப்பட்டது. அவரது இருப்பிடமும் அறிய முடியவில்லை. அல் கெய்டாவின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் அபு பராஜ் அல்-லிபியை மரபு வழிச் சித்திரவதை விசாரணை செய்ததன் மூலம் மர்ம தகவல்பரிமாற்றக் காரரின் பெயர் பெறப்பட்டது. அது முழுப்பெயர் அல்ல. தொடர்ந்த பல நடவடிக்கைகளினால் அவரது முழுப்பெயரும் வாகன இலக்கமும் குடும்பப் பெயரும் பெறப்பட்டது. அவர் குவைத்தில் பிறந்த ஷேக் அபு அகமத். அவரது வாகனத்தை பல நாட்கள் பல தடவைகள் தொடர்ந்த போது. 2010 ஆகஸ்ட் மாதம் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் இருப்பிடம் அறியப்பட்டது. அது அபத்தாபாத் என்னும் அழகிய நகரம். பிரித்தானிய ஆட்சிக்குக் கீழ் பாக்கிஸ்தான் இருந்தபோது அந்த நகரில் ஜேம்ஸ் அபத் என்பவர் அங்கு ஒரு கூர்க்காப் படைத் தளத்தை அமைத்தார். அவர் பெயாரால் அந்த நகர் அழைக்கப்பட்டது.
.காட்டிக் கொடுத்த ஏழடிச் சுவர்.
அபத்தாபாத்தில் மர்ம தகவல் பரிமாற்றக் காரரின் சகோதரரின் வீட்டை நோட்டம் விட்ட அமெரிக்க உளவுப் பிரிவினர் அங்கு வீட்டைச் சுற்றி 12 அடி உயரச் சுவரும் மாடிகளில் ஏழடிச் சுவரும் இருப்பதைக் கண்டனர். பின் லாடனின் உயரம் ஆறு அடி ஐந்து அங்குலம். அங்கு பின் லாடன் இருப்பார் என அமெரிக்க உளவுத் துறை நம்பவில்லை. அங்கு ஒரு முக்கியமானவர் இருக்கிறார் என்றுதான் உளவுப்படையினர் நினைத்தனர். அது ஒரு மூன்று மாடி மாளிகை.

மீண்டும் ஏமாறிய தேசிய பாதுகாப்பு முகவரகம்
மூன்று மாடி மாளிகையை செய்மதி மூலமும் நவீன கருவிகள் மூலமும் வேவு பார்த்த தேசிய பாதுகாப்பு முகவரகம் மீண்டும் ஏமாறியது. அந்த மாளிகைக்கு தொலைபேசித் தொடர்போ அல்லது இணையத் தொடர்பு வசதிகளோ இருக்கவில்லை. அதனால் அங்கிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. ஆனால் அப்படி ஒரு மாளிகைக்கு அப்படிப்பட்ட வசதிகள் இல்லாதிருப்பது சந்தேகத்தை வளர்த்தது. அங்கிருந்து குப்பைகள் வெளியில் வீசப்படுகிறதா என்று பார்த்தார்கள். குப்பைகளுக்குள் ஏதாவது தகவல் பெறலாம் என்று. அதுவும் இல்லை. மொட்டை மாடியில் வைத்து குப்பைகள் எரிக்கப்படுவதைக் கண்டனர்.

வாலைத் தேடியவர்களுக்கு தலை கிடைத்தது.
பின் லாடன் எங்கோ ஒரு குகைக்குள் இருப்பதாகத்தான் சிஐஏ நினைத்தது. இந்த மூன்று மாடி மாளிகையில் பின் லாடன் இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் வீடாக அது இருக்கலாம் என்று மேற்கொண்ட உளவு நடவடிக்கைகளில் அங்கு பின் லாடன் இருப்பதை உறுதி செய்து கொண்டனர். வாலைத் தேடியவர்களுக்கு தலை அகப்பட்டது. இப்போது 2011 பெப்ரவரி.


பெண்டகனும் சிஐஏயும் கலந்துரையாடின
சிஐஏ அதிபர் லியோன் பனெட்டா பெண்டகனின் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான வில்லியம் மக் ரவனை சிஐஏ பணிமனைக்கு பெப்ரவரி மாதம் அழைத்து அந்த மாளிகைமீது தாக்குதல் நடந்தும் திட்டங்களை வகுத்தார். அவர்கள் மூன்று மாற்றுத் திட்டங்களை வகுத்தனர். 1. பி-2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் குண்டு வீசி மாளிகையைத் தாக்குவது. 2. ஹெலிக் கொப்டர்கள் மூலம் படையினரை மாளிகைக்குள் இறக்கித் தாக்குவது. 3. பாக்கிஸ்தானின் உளவுத் துறையுடன் இணைந்து தாக்குவது.

ஒசாமாவைக் கொல்ல ஒபாமாவின் ஒப்புதல்
மார்ச் 14-ம் திகதி சிஐஏ அதிபர் லியோன் பனெட்டா மூன்று மாற்றுத் திட்டங்களுடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். பாதுகாப்புச் செயலர் ரொபேர்ட் கேர்ட்ஸ் இரண்டாம் திட்டமான ஹெலிக்கொப்டர் தாக்குதலை விரும்பவில்லை. அது ஆபத்தானது என்றார் அவர். விமானமூலம் தாக்குதல் நடத்துவதாயின் இரண்டாயிரம் இறாத்தல் எடையுள்ள 32 குண்டுகள் வீச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விளைவு மாளிகை இருந்த இடத்தில் பாரிய கிடங்கு. ஆனால் பின் லாடன் கொல்லப்பட்டார் என்பதை உறுதி செய்ய முடியாது. பாக்கிஸ்த்தானுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது நம்பகரமானது அல்ல என்றும் கூறப்பட்டது. பல வாதப் பிரதி வாதங்களின் பின்னர் பராக் ஒபாமா தனக்கு சில மணித்தியாலங்கள் தருப்படி கேட்டார். 16 மணித்தியாலச் சிந்தனைக்குப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் உயர் அதிகாரிகளை அழைத்த ஒபமா ஹெலிக் கொப்டர்கள் மூலம் படையினரை மாளிகைக்குள் இறக்கித் தாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அவருக்கு அத்திட்டம் பற்றி விளக்க முற்பட ஒபாமா அவர்களை இடைமறித்து போய் செய்து முடியுங்கள் என்றார். ஏற்கனவே அமெரிக்கப் படையினர் அபதாபாத் மாளிகை போல் ஒன்றை அமெரிக்காவில் உருவாக்கி தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பாக்கிஸ்தானுக்கு அறிவிப்பு
பாக்கிஸ்தானுக்கு அறிவிக்கும் நேரத்தை அமெரிக்கர்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டனர். முன் கூட்டி அறிவிக்காவிடில் பறக்கும் ஹெலிக்கொப்டர்கள் மீது பாக்கிஸ்தானியப்படைகள் தாக்குதல் நடத்தலாம். பாக்கிஸ்த்தானுக்கு வழங்கிய தகவல் அல் கெய்டாவிற்கு கசியப் போதிய கால அவகாசம் இல்லாதவகையில் தாக்குதலுக்கு சற்று நேரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இந்த உண்மை வெளிவந்தால் பாக்கிஸ்த்தானில் தீவிரவாதிகள் கிளர்ந்து எழலாம் என்பதற்காக இரு நாடுகளும் இதை மறுக்கின்றன.

பின் லாடன் மீதான தாக்குதல் விபரம்
பின் லாடனுக்கு ஜெரேனிமோ என்னும் குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டது. அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், நிலம் ஆகிய மூன்று முனைகளிலும் சண்டையிடக்கூடிய சீல்(SEAL) பிரிவினர் ஒசாமா பின் லாடனைக் கொல்லும் சண்டையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கடல் Sea, வான் Air, தரை Land ஆகிய சொற்களின் முதல் எழுத்துக்களில் இருந்து SEAL என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது. SEAL படைப்பிரிவில் மிக நேர்த்தியாகத் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் இந்தப் படை நடவைக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இவர்களை TEAM - 6 என அழைப்பர். ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள ஜலலாபாத்தில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் மாளிகையில் வீரர்களை இறக்கியது. அவர்கள் சுவர்களைக் குண்டுகளால் தாக்கினர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த ஆணைக் காப்பாற்ற ஒரு பெண் குறுக்கே பாய்ந்தார். அவர் சுடப்பட்டார். அவர் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் மனைவி. ஒரு ஹெலிக்கொப்டர் பின் லாடனின் பாதுகாவலரின் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் எவரும் கொல்லப்படவில்லையாம். பின் லாடன் இருந்த அறையின் சுவர்களைத் தகர்த்தே தாக்குதல் அணியினர் உள்புகுந்தனர். அங்கு இருந்த பின்லாடனின் மனைவியும் இரு மகன்களும் பயத்தில் ஓடிப்போய் தந்தையைக் கட்டிக் கொள்ளுதல் இயல்பு. அதை அமெரிக்கர் பின் லாடன் மனைவியைக் கேடயமாகப் பாவித்தார் என்கின்றனர்.

பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து கணனிகள் மற்றும் பதிவேடுகளை அமெரிக்கத் தாக்குதல் அணியினர் எடுத்துச் சென்றுள்ளனர். அவை அமெரிக்காவிற்கு அல் கெய்தாவிற்கு எதிரான நடவடிக்கைகளிற்குப் பெரிதும் உதவும். பின் லாடனின் நிதி மூலங்கள் ஆயுதக் கிடங்குகள் ஆயுதம் வழங்குபவர்கள் போன்றவை பற்றிய தகவல்கள் அவற்றில் இருக்கலாம்.

பின்லாடன் துப்பாக்கிச் சண்டை புரிந்ததாக முதலில் சொன்ன அமெரிக்கா பின்னர் அதைத் திருத்திக் கொண்டது.

பின்லாடனின் உடலை ஹெலிக்கொபடரில் எடுத்துச் சென்று அரபுக் கடலில் இசுலாமிய முறைப்படி கிரியை செய்துவிட்டுவீசினராம்.

Monday, 31 March 2014

உக்ரேனின் கிரிமியாவிற்குள் இன்னும் ஒரு பிரிவினை?

உக்ரேனில் இருந்து இரசியா பிரித்தெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்ட கிறிமியாவில் இருந்து இன்னும் ஒரு பிரிவினைக்குத் தூபமிடப்பட்டுள்ளது. கிறிமியாவில் வாழும் டாட்டார் இனக்குழுமத்தினரின் தலைவர்கள் தாம் இரசியாவுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை என்றும் ஒரு கருத்துக் கணிப்பின் மூலம் பிரிந்து தனியாகச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிறிமியாவை துருக்கி தேசத்தவர்களின் ஒட்டோமன் பேரரசு ஆண்டு வந்தனர். பின்னர் அவர்களிடமிருந்த்து கிறிமியாவை 1774-ம் ஆண்டு போரின் மூலம் பறித்துக் கொண்டனர்.     1853-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து கிறைமியாவைப் பறிக்க ஒட்டோமன் பேரரசு, பிரான்சு, பிரித்தானிய ஆகிய நாடுகள் கிறைமியா மீது போர் தொடுத்தன. 1853-ம் ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை போர் நடந்தது. இதில் இரசியா  பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறைமியாவைத் தனதாக்கியது. 1917-ம் ஆண்டு இரசியப் புரட்சியின் போது கிறைமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் இரசியப் படைத்தளமானது. 1921-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசானது.  1942-ம் ஆண்டு உலகப் போரின் போது ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்ற ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது. 1944-ம் ஆண்டு கிறைமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜேசேப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறைமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர்.  1945-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்ற நிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக (Crimean Oblast) மாற்றப்பட்டது.  . 1954-ம் ஆண்டு கிறைமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் பொரிஸ் யெல்ஸ்ரின் கிறைமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் இருக்க வைத்து கிறைமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார். 1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறைமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் திகதி கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதன்படி கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்புச் செல்லாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு 100நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 11நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கிறிமியாவில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்படும் போது டாட்டார் இனத்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. டாட்டார் இனக் குழுமத்தினரில் பெரும்பான்மையானவர்கள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. டாட்டார் இனத்தவர்களை மேற்கு நாடுகள் தூண்டிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. கிறிமியாவில் இருக்கும் டாட்டார்கள் மீண்டும் 1944இல் செய்தது போல நாடுகடத்தப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டனர்.

கிறிமியாவின் பூர்வீக குடிகளில் டாட்டார் இனத்தினரும் அடங்குவர். இவர்கள் இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் ஹிடலரின் நாஜிப் படைகள் கிறிமியாவிற் படை எடுத்த போது அவர்களுடன் ஒத்துழைத்த குற்றத்திற்காக கிறிமியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டு சோவியத் ஒன்றியத்தின் நடு ஆசியப் பிராந்தியங்களில் ஒன்றான உஸ்பெக்கிஸ்த்தானிற்கு அனுப்பப்பட்டனர். பின்னர் பல இரசியர்கள் சோவித் ஒன்றிய அரசால் கிறிமியாவில் குடியேற்றப்பட்டு கிறிமியாவில் இரசியர்கள் பெரும்பான்மையாக்கப்பட்டனர்.

இப்போது கிறிமியாவில் வாழும் மூன்று இலட்சம் டாட்டார் இனத்தினர் இரசியாவிற்கு சவாலாகப் புதிய பிரச்சனையைக் கிளப்புகின்றனர். தம்மத்தியிலும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு தாம் விதியைத் தாமே நிர்ணயிக்க வேண்டும் என கிறிமிய நகரான Bakhchisarayவில் கூடி முடிவெடுத்துள்ளனர். இவர்களின் தலைவர்களில் ஒருவரான ருபாட் சுபரோவ் கிறிமிய டாட்டார்கள் கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்படுவதை விரும்பவில்லை என்கின்றார்.

Tuesday, 25 March 2014

நாணயமற்ற சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்கும் கனவு.

இலங்கை போன்ற உலகில் உள்ள அயோக்கிய நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் சீனா தனது பொருளாதாரத்தைப் பற்றி சரியான தகவல்களை வெளிவிடுவதில்லை. சீன அரசின் புள்ளிவிபரங்கள் நம்ப முடியாதவை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இப்படிப்பட்ட சீனா தனது நாணயமான ரின்மின்பி யுவானை உலக நாணயமாக மாற்றும் திட்டத்துடன் இருக்கின்றது.

சீன அரசின் முக்கிய பெரும் பொருளாதார நோக்கங்கள்:
1. ஏற்றுமதியிலும் உள்கட்டமைப்பிலான முதலீட்டிலும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரத்தை மீளமைத்து உள்நாட்டுக் கொள்வனவில் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தல்
2. ஆண்டொன்றிற்கு 7.5 விழுக்காட்டிற்கும் அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுதல்
3. நிதிச் சந்தையைச் சீரமைத்து மிகை கடன்
வழங்கலை இல்லாமல் செய்தல்.

உலக நாணயமாக டொலர் வேண்டாம் யூவான் வேண்டும்.                   சீன அரசின் நீண்ட கால பொருளாதார நோக்கங்களில் முக்கியமானதாக தனது யூவான் நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதாக உள்ளது. அதன் ஒரு படியாக இனிவரும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் வட்டி வீதத்தில் அரச கட்டுப்பாட்டைக் நீக்கி நிதிச் சந்தை அதை தீர்மானிக்க வழி செய்யப்படும் என மார்ச் 12ம் திகதி சீன அரசு அறிவித்தது. ஆனால் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்ற மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீன நாணயம் நினைத்த மாத்திரத்தில் மாற்ற நாணயங்களாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். சீனாவில் கட்டுப்பாடின்றி வெளிநாட்டவர்கள் முதலீடுகள் செய்யக்கூடியதாகவும் அவற்றைத் தேவைப்படும் போது விற்று காசாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சீனாவின் மூலதனக் கணக்கு திறந்து விடப்படல் வேன்டும்.  சீனாவின் வங்கித் துறை நவீன மயப்படுத்த வேண்டும். சீனாவின் நிதிச் சந்தை தாராளமயப்படுத்த வேண்டும்.

சீனாவின் வீட்டு விலை பெரும் சரிவைச் சந்திக்குமா?.                         2011-ம் ஆன்டுவரை சீனப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொன்டிருந்தது.இதனால் பல கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினர். இதனால் சீன நகரங்களில் வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வீட்டு விலைகள் மிகவும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. இதைச் சமாளிக்க சீன அரசும் தனியார்களும் வீடுகளைக் அதிகமாக நிர்மாணித்தனர். வீட்டு விலைகள் அதிகரித்துக் கொன்டு போவதால் பலர் வீடுகளை வாங்குவதை ஒரு முதலீடாகக் கொன்டனர். பல நகரங்களில் வீட்டு விலைகள் 20 விழுக்காடு அதிகரித்தன. பலர் வீடுகளை வாங்கி அவற்றின் விலை அதிகரிப்பை இலாபமாகக் கருதி வாடகைக்குக் கூட விடாமல் வெறும் வீடுகளாக வைத்திருந்தனர். இவர்களில் பலர் வீடுகளை வங்கிகளில் கடன் பெற்றே  வாங்கினர். ஆனால் கடந்த இரண்டு ஆன்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைந்தது. கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வந்து வேலை பெற்றவர்கள் வேலைகளை இழந்து மீன்டும் கிராமங்களுக்குச் சென்றனர்.  இதனால் வீட்டு விலைகள் சரிவடைந்து. வங்கிகள் தாம் வழங்கிய கடன்களை மீளப்பெற முடியாமல் போகலாம் என இப்போது அஞ்சப்படுகின்றது. இது பெரிய அளவில் நிகழும் போது சீனாவிலும் சில மேற்கு நாடுகளில் ஏற்பட்டது போன்ற ஒரு கடன் நெருக்கடி ஏற்படலாம் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தின் மீது கடுமையான கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் வைத்துள்ள சீன அரசால் இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சீனாவின் போட்டித் திறன் குறைவடைகின்றதா?                         சீனா உலகச் சந்தையில் மற்ற நாடுகளிலும் பார்க்கக் குறைந்த விலையில் தனது உற்பத்திப் பொருட்களை விநியோகித்தல் சீனாவின் பொருளாதாரவளர்ச்சிக்குப் பெரிதும் உதவிக் கொன்டிருக்கின்றது. சீனாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம் என்பதால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தியை வேறு நாடுகளில் இருந்து சீனாவிற்கு மாற்றின. இதுவும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. சீனாவில் பலதொழிற்துறைகளில் ஊழியர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. சீனத் தொழிலாளர்கள் உயர் தொழில்நுட்பத் துறைகளில் வேலை செய்வதையே விரும்புகின்றனர். சீன ஊழியர்களின் வேதனம் ஆண்டு ஒன்றிற்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இவற்றால் சீனாவின் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இது சீனாவின் உலகச் சந்தையில் போட்டியிடு திறனைப் பாதிக்கின்றது. இந்திய நாணயப் பெறுமதி அண்மைக் காலங்களாக வீழ்ச்சி அடைந்து கொன்டிருப்பதால் வெளிநாட்டு நிறுவங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் உற்பத்திச் செலவு குறைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளன. ஜப்பான் சீனாவுடன் உள்ள உறவு கிழக்குச் சீனக் கடலில் உள்ள் தீவுகளுக்கு யாருக்குச் சொந்தம் என்ற முரண்பாட்டால் பாதிப்படைவதால் பல ஜப்பானிய நிறுவனங்களும் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளன.

சீனாவில் கடன் நெருக்கடி ஏற்படுமா?                                                                                                  Shanghai Chaori Solar Energy Science & Technology Co என்னும் சீன நிறுவனம் மார்ச் மாத ஆரம்பத்தில் தனது வெளிநாட்டுக் கடன் நிலுவையை செலுத்த முடியாமல் போனது உலக நிதிச்சந்தையை உலுப்பியது. இது சீனாவில் ஒரு கடன் நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்வியை உருவாக்கியது.  இதற்கு முன்னர் 2014ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு சீன நிறுவனம் தனது கடன்நிலுவை செலுத்த முடியாத நிலையில் இருந்து தப்பித்துக் கொன்டது. தப்பிக்க வைத்தது சீன அரசா அல்லது சீன அரச வங்கியா என்பது பற்றி யாருக்கும் தெரியாது.  சீனாவில் கடன் அதிகரிப்பு விழுக்காடு அதன் பொருளாதாரவளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இரண்டு இரண்டு  இருக்கின்றது. இப்படியான நிலை இருந்த நாடுகள் பல கடன் நெருக்கடியில் அகப்பட்டதாக வரலாறு சான்று சொல்கின்றது. இதே நிலை சீனாவிற்கும் ஏற்படுமா என்ற அச்சம் இப்போது அதிகரித்துக் கொன்டிருக்கின்றது. 2008 ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து சீனாவின் ஏற்றுமதி குறையத் தொடங்கியது. இதனால் உள்ளூரில் வேலைவாய்ப்புக் குறைந்து மக்கள் அரசுககு எதிராகக் கிளர்ந்து எழுவதைத் தடுக்க சீனா தனது உள்நாட்டு முதலீட்டை கன்னா பின்னா என அதிகரித்தது. தனது வங்கிகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க உத்தரவிட்டது. சீனா தனது பொருளாதாரத்திற்கு நானூறு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஊக்குவிப்பைக் கொடுத்தது. பிபிசி தொலைக்காட்சி சீன அரசின் உள்நாட்டு முதலீட்டைப்பற்றி சீனா எப்படி உலகை ஏமாற்றியது என்ற ஆவணப்படத்தில் விபரித்தது. சீன அரச முதலீட்டால் சீனாவில் 26,000 மைல்கள் நீளமான வேகப் பெருந்தெருக்கள் கட்டப்பட்டன, முப்பது விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன, ஐந்து நாட்களுக்கு ஒரு வானத்தைத் தொடும் உயர்மாடிக்கட்டிடங்கள் எழுப்பப்பட்டன, இருபத்தைது நகரங்களில் மெட்ரோ தொடரூந்து முறைமை உருவாக்கப்பட்டது, ஆறாயிரம் மைல்கள் நீளமான உயர்வேகத் தொடரூந்துப் பாதைகளும் தரிப்பு நிலையங்களும் உருவாக்கப்பட்டன, உலகிலேயே நீளமான மூன்று பாலங்கள் கட்டப்பட்டன இப்படி சீன அரச முதலீட்டைப் பட்டியலிட்டது பிபிசி. தனது நாட்டின் பொருளாதாரவளர்ச்சி குன்றாமல் இருக்க சீனா இந்தச் முதலீட்டு அதிகரிப்பைச் செய்தது. சீன அரச முதலீடு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 40விழுக்காட்டில் இருந்து 50ஆக உயர்த்தப்பட்டது. இது சீனாவால் தொடர்ந்து செய்ய முடியாத முதலீட்டு நிலை எனப் பொருளாதார நிபுணர்கள் விபரித்தனர். கடந்த ஐந்து ஆன்டுகளாக சீனாவின் கடன்வளர்ச்சி 71 விழுக்காடாக இருக்கிறது. சென்ற ஐம்பது ஆண்டு வரலாற்றில் இப்படியான மிகை கடன் வளர்ச்சியைச் சந்தித்த 33 நாடுகளில் 22 நாடுகள் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி பொருளாதார மந்த நிலைக்கு உள்ளாகின. சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும் வங்கிகளின் கடன்வழங்கல் அதிகரிப்பும் சீனாவில் விலைவாசி உயர்வையும் கடன் நெருக்கடியையும் கொண்டு வரலாம் என்ற அச்சத்தில் சீனா தனது நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தது. சீன வங்கிகளுக்கு கடன் கொடுப்பதை வெகுவாகக் குறைக்கும் படி உத்தரவிடப்பட்டது.

சீனாவின் நிழல் வங்கிகள்                                             நிழல் வங்கிகளுக்கான இலகு வரைவிலக்கணம் ஒன்றை இங்கு கொடுப்பது பொருத்தமானதாகும். அரசு அனுமதி பெற்ற வங்கிகளின் செயற்பாட்டை அரசுக்குத் தெரியாமல் செய்யும் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் நிழல்வங்கிகள் எனப்படும். சீன அரசானது வங்கிகள் கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்தியது. ஆனால் கடனுக்கான தேவை சீனாவில் தொடர்ந்தும் உயர் நிலையிலேயே இருந்தது. இதனால் நிழல்வங்கிகள் பல உருவாகி மக்களுக்கு கடன்களைக் கொடுக்கத் தொடங்கியது. இது கட்டுக்கடங்காமல் வளர்ந்து எட்டு ரில்லியன் (எட்டு இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான துறையானது. இது பொருளாதாரத்தின் மீதான சீன அரசின் இறுக்கமான பிடியை இழக்கச் செய்தது. சீனாவில் பெரும் கடன் அதிகரிப்பு ஏற்பட்டது. அது எந்த அளவு என சீன அரச பொருளாதார நிவாகிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை. சீன அரசு நிழல் வங்கித் துறைக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்தது.

 உக்ரேன் விவகாரம் சீனாவிற்கு சாதகமாகலாம்.
உக்ரேன் விவகாரத்தில் இரசியாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டுவரும் பொருளாதாரத் தடை சீன நாணயத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது. இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் நடவடிக்கைகள் ஒரு போர் ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது. அப்படியான் ஆபத்து அமெரிக்க டொலர், பிரித்தானியப் பவுண், ஐரோப்பிய ஒன்றிய யூரோ ஆகிய நாணயங்களின் பெறுமதியைப் பாதிக்கலாம். இதனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமும் உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செல்வாணியைக் கையில் கொண்டதுமான சீனாவின் நாணயம் ஒரு பாதுகாப்பான நாணயமாக உருவாகலாம்.

அசையாது சீனா                                 சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தில் உள்நாட்டு மக்கள் கொள்வனவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இது மூன்றில் இரண்டு பங்காகும். சீனா தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களின் கொள்வனவு வலுவை பெருமளவு அதிகரிக்க வேன்டும். குறைந்த ஊதியம் கொடுத்து வேலைவாங்குவதில் இருந்து விலகினால்தான் சீனப் பொருளாதாரம் மேற்குநாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம். சீனாவின் பொருளாதாரத்தைப்பற்றி எழுதும் உலகப் பொருளாதார வல்லுனர்கல் அடிக்கடி பாவிக்கும் வார்த்தை நீர்க்குமிழி என்பதாகும். அது எப்போதும் வெடிக்கலாம். ஆனால் சீனாவின் நிதிக்கட்டமைப்பு ஆரம்ப நிலையேலேயே இப்போதும் உள்ளது. அதனால் நிர்வகிக்க இலகுவானது. சீன நிதிக்கட்டமைப்பில் அரச வங்கிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. பல தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்கள் கொண்ட மேற்கு நாடுகளைப் போல இல்லாமல் இருப்பதால் நாட்டில் பொருளாதாரத் திட நிலையை ஏற்படுத்துவதும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதும் சீன அரசிற்கு இலகுவானதே. எந்த ஒரு சீனவங்கியும் வங்குரோத்து நிலை அடையாது என்பது நிச்சயம். உலகிலேயே அதிக அளவான மூன்றரை ரில்லியன் (மூன்றரை இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்களை வெளிநாடடுச் செலவாணியாகக் கையிருப்பில் வைத்துள்ள சீன அரசு வங்குரோத்து நிலையை அடையப்போவதில்லை.

Monday, 24 March 2014

உக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா?

உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல தமிழர்களும் பக்கத்திலுள்ள "பிராந்தியப் பேரரசான" இந்தியாவை நம்பாமல் தொலைவிலுள்ள அமெரிக்க உலகப் பேரரசை நம்பிக் கெடக்கூடாது என்ற கூச்சல் சிலரால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூச்சலிடுபவர்கள் தங்கள் "வாதத்திற்கு" ஜோர்ஜியா மீது இரசியா 2008-ம் ஆண்டு செய்த ஆக்கிரமிப்பையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். இரசியா உக்ரேனியர்களுக்கு எதிராக மேற்கொண்ட இனக்கொலைகளைத் தெரிந்து கொண்டும் இவர்கள் இப்படிக் கூச்சலிடுவது "கொடுத்த காசுக்கு மேலாலை கூவுதல்" என்ற பதத்தைத்தான் நினைவிற்கு கொண்டு வருகின்றது.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா?
முதலில் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா என்பது பற்றிப் பார்ப்போம். இந்தியாவைச் சிலர் பிராந்திய வல்லரசு என்கின்றனர். பிராந்திய வல்லரசுக்கு இப்படி ஒரு வரைவிலக்கணம் உண்டு:
States which wield unrivaled power and influence within a region of the world possess regional hegemony.
இதன் பொருள்:  ஈடற்ற  வலிமையும் செல்வாக்கும் உலகின் ஒருபிரதேசத்திற்குள் செயலாட்சி புரியக் கூடிய ஒரு அரசு பிராந்திய ஆதிக்கமுள்ளது. சீக்கிம் நாட்டை தனது ஒரு மாநிலமாக இணைத்த போதும் பங்களா தேசத்தைப் பாக்கிஸ்த்தானில் இருந்து பிரித்த போதும் இந்தியாவிடம் ஒரு பிராந்திய ஆதிக்கம் இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவைச் சூழவுள்ள எந்த நாட்டிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதில்லை. இந்தியாவிடம் வலிமை இருந்தாலும் அது  ஈடற்ற வலிமை அல்ல. இந்தியாவிற்கு மிஞ்சிய வலிமை சீனாவிடம் இருக்கிறது. இந்தியாவின் வலிமைக்கு சவால் விடக்கூடிய வலிமை பாக்கிஸ்த்தானிடம் இருக்கிறது. நேப்பாளம், மியன்மார்(பர்மா), இலங்கை ஆகிய நாடுகளின் மேல் இந்தியாவின் ஆதிக்கம் இல்லை. பிரேமதாசாவின் அரசைக் கவிழ்க்க முற்பட்டு இந்தியா பல்லுடை பட்டதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா மூக்குடைபட்டதும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்தியாவின் உயர் இராசதந்திரிகளான விஜய் நம்பியார், கமலேஷ் ஷர்மா போன்றவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் போல் செயற்படுவதும், இந்திய வெளிநாட்டமைச்சர்கள் இலங்கை அதிபர் முன் பணிவுடன் நிற்பதும், நிருபாமா ராவ் போன்றவர்கள் இலங்கை அமைச்சர்கள் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்பதும் இந்தியாவிற்கும் பிராந்திய வல்லரசு என்ற சொல்லிற்கும் வெகு தூரம் என்பதைக் காட்டுகிறது.

உக்ரேனியர்களும்-இரசியாவும் தமிழர்களும்-இந்தியாவும்
இரசியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இரசியா உலகிலேயே அதிக நிலப்பரப்புக் கொண்ட நாடு. இந்தியாவிற்கும் கணிசமான நிலப்பரப்பு உண்டு. இரசியா தனது நிதி வளத்திற்கு மிஞ்சிய அளவிற்கு படை வலுவைக் குவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவும் அப்படியே. இரசியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்ட ஒரு வல்லரசு நாடு. இந்தியா அப்படியல்ல.  இரசியா தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை. இந்தியாவும் தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை.  ஒரு புளிய மரம் தனது நிழலில் இன்னொரு மரத்தை வளர அனுமதிக்காது. இரசியா உக்ரேனை அதனது அணுப் படைக்கலன்களை ஒப்படை உனது பிரதேச ஒருமைப்பாட்டிற்கு தான் உத்தரவாதம் என்று பொய் சொல்லிவிட்டு இப்போது உக்ரேனைப் பிய்த்து உதறுகிறது. இந்தியா தமிழர்களை அவர்களின் படைக்கலன்களை ஒப்படை உங்கள் பாதுகாப்பிற்கு தான உத்தரவாதம் என்று பொய் கூறி அவர்களைக் கொன்று குவித்தது.  1932-ஆம் 1933-ம் ஆண்டுகளில் இரசிய அரசு தனது விவசாயத் திட்டத்திற்கு ஒத்து வராத எழுபத்து ஐந்து இலட்சம் உக்ரேனியர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது. உக்ரேனின் பல பிராந்தியங்களில் இரசியர்களைக் குடியேற்றியது. இதற்குப் பின்னரும் இரசியாவைச் சார்ந்து நில்லுங்கள் என்றோ அல்லது இரசியாவைக் "கையாளுங்கள்" என்றோ யாராவது உக்ரேனியர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்கள் நிச்சயம் இரசியாவின் சில்லறைக் கைக்கூலிகளே.  இந்தியா தனது நாட்டிலுள்ள போலி அதிகாரப்பரவலாக்கத்திலும் அதிக அளவு அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. சில இந்திய அதிகார மையமான தென் மண்டலத்தில் இருக்கும் பிற்போக்குப் பூனூல் கும்பல்கள் தமிழன் என்பவன் சூத்திரன் அவள் ஆளப்பட வேண்டியவன், அவன் ஆளக்கூடாது என்பதில் உறுதியாக நிற்கின்றன. நேரு எஸ் தொண்டமானையும் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தையும் இணையவிடாமல் தடுத்தமை, நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம், சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம், கச்சதீவுத் தாரைவார்ப்பு, தமிழ் இளைஞர்களுக்கு படைக்கலப் பயிற்ச்சி கொடுத்து தனது காரியத்தை இந்தியா சாதிக்க முயன்றமை, ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம், அமைதிப்படையின் போர்க் குற்றம், ரணில் விக்கிரமசிங்க உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முன்வந்த போது இந்தியா அதைக்கடுமையாக எதிர்த்து நிறுத்தியமை,  இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வழங்க வந்த ரணிலின் ஆட்சியை இந்தியா  சந்திரிக்கா பண்டாரநாயக்காவையும் ஜேவிபியையும் இணைத்துக் கலைத்தமை, முள்ளிவாய்க்காலில் முடிந்த இனக்கொலையில் இந்தியாவின் பங்களிப்பு, 2008-ம் ஆண்டு மனித ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியமை இப்படியாக இந்தியத் துரோகப் பட்டியல் மிகவும் நீண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிராந்திய வல்லரசு அல்லாத இந்தியாவைப் பிராந்திய வல்லரசு எனப் பொய் சொல்லி அதை கையாளுங்கள். அதை விட்டு தூரத்தில் உள்ள அமெரிக்கப் பேரரசை நம்பாதீர்கள் எனச் சொல்பவர்களின் நோக்கம் தான் என்ன?

புது டில்லிதானாம் ஜெனிவா
"ஜெனிவாவை நோக்கி தமிழர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் புது டில்லி அசையாமல் ஜெனிவா அசையாது. புது டில்லியை எப்படி அசைப்பது என்பதில்தான் தமிழர்கள் முழுக்கவனமும் செலுத்த வேண்டும்." இப்படி ஆலோசனை சொல்கிறார்கள் இந்திய ஆதரவுக் கூச்சலிடுபவர்கள். உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் ஜெனிவாத் தீர்மானங்களால் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் இல்லை என்று. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள  193 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளின் ஆதரவு பாலாஸ்த்தீனியர்களின் விடுதலைக்கு உண்டு.  இதை வைத்துக் கொண்டு எந்த ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பிலும் தீர்மானம் நிறைவேற்றி அவர்களிற்கு விடுதலை பெற்றுக்  கொடுக்க முடியவில்லை. இப்படி இருக்கையில் ஜெனிவாவில் தமிழர்களுக்கு விமோசனம் எப்படியும் கிடைக்காது என்பதை பன்னாட்டு யதார்த்தத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பாலஸ்த்தீனியர்களுக்கு அமெரிக்காவின் இரத்து அதிகாரம் போல் தமிழர்களுக்கு சீனாவினதும் இரசியாவினதும் இரத்து அதிகாரங்கள் தடையாக இருக்கும். தமிழர்கள் ஜெனிவாவிற்குப் போனாலும் காரியம் ஆகப் போவதில்லை. புது டில்லிக்குக் காவடி எடுத்தாலும் காரியம் நடக்கப் போவதில்லை.

ஜோர்ஜிய உதாரணம்.
இரசியா 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவின் கீழிருந்த இரண்டு தன்னாட்சியுள்ள பிரதேசங்களில் படை எடுத்து அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த போரில் அமெரிக்கா ஜோர்ஜியாவிற்கு உதவவில்லை. இதற்காக நாம் இந்தியாவிற்கு வால் பிடிக்க முடியாது. ஆனால் 2008-ம் ஆண்டின் பின்னர் ஜோர்ஜியா எப்படி இரசியாவைக் கையாள்கிறது என்பதை கூச்சலிடும் இந்தியக் கைக்கூலிகள் கருத்தில் எடுக்க வேண்டும். 2011-ம் ஆண்டு ஜோர்ஜியப் பாராளமன்றம் 19-ம் நூற்றாண்டில் இரசியா சேர்க்காசியர்களைக் கொன்றதை ஓர் இனக்கொலை எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இரசியாவின் தென் எல்லையில் உள்ள வட கௌக்கௌஸ் பிரதேசத்தில் தன்னாட்சி கோரிப் போராடும் மக்களுடன் தனது தொடர்புகளை ஏற்படுத்தியது. அவர்கள் ஜோர்ஜியாவிற்கு வருவதற்கு பயண அனுமதி(விசா) தேவையில்லை என அறிவித்தது.

அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகளா?
அமெரிக்காவிடம் போகாதே இந்தியாவிடம் போ எனக் கூச்சலிடுபவர்கள் அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள் என்கின்றனர். ஆனால் உக்ரேன் விவகாரத்தில் இந்தியா இரசியாவிற்கு ஆதரவு தெரிவித்தமை அவர்களின் கூற்றைப் பொய்யாக்குகிறது. வேலிக்கு ஓணான் கதைதான். இந்தியாவில் அதிகமாக உள்ள இளையோர் தொகையும் அதிகமாக உள்ள நடுத்தர வர்க்க மக்கள் தொகையும் இருப்பதால் உலக நாடுகளிற்கு இந்தியா ஒரு கவர்ச்சி மிக்க சந்தையாகத் தெரிகிறது. இதனால்தான் சில பெரிய நாடுகள் இந்தியாவின் நட்பை விரும்புகின்றன.

தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டதா?
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டது இதனால் இனித்தமிழர்கள் இந்தியாவை அணுகலாம் என்கின்றனர் இந்தியாவிற்காக கூச்சலிடுபவர்கள். பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரத்தில் இந்தியா பூட்டைத் திறக்கவில்லை என்று நன்கு தெரிகிறது. இந்தியக் கைக்கூலிகளான சம்பந்தனும் சுமந்திரனும் ஜெனிவாவில் நின்று செய்யும் பரப்புரைகள் இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு அள்ளி வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்நாட்டில் தமிழர்களின் கொந்தளிப்பு இந்தியாவை மாற்றியதா?
தமிழ்நாட்டில் தமிழர்கள் கொந்தளித்தது இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைபாட்டில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது என்கின்றனர் இந்தியாவிற்காகக் கூச்சலிடுபவர்கள். அப்படியாயின் தமிழர்களின் கோரிக்கையான வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா இனி முன்னிறுதி இலங்கையுடனான தனது அணுகுமுறையை மாற்றுமா?

இந்தியாதான் தமிழர்கள் முதல் எதிரை என்பதை என்று பாக்குநீரிணையின் இருபுறமும் உள்ள எல்லாத தமிழர்கள் உணர்கிறார்களோ அன்றுதான் தமிழர்களுக்கு ஒரு விடிவு வரும்.

அடங்குங்கடா!!!

Monday, 17 March 2014

சிரியக் கிளர்ச்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவில் அரசுக்கு ஒரு வெற்றி

அரபு வசந்தத்தின் ஓர் அம்சமாக உருவான சிரிய அதிபர் பஷார் அசாதத்திற்கு எதிரான கிளர்ச்சி மார்ச மாதம் பதினைந்தாம் திகதியுடன் முன்றாம் ஆண்டு நிறைவை எட்டியுள்ளது. ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களைப்ப்பலி கொண்ட சிரிய உள்நாட்டுப் போர் இருபது இலட்சம் மக்களை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கியது. ஐக்கிய நாடுகள் சபையின்  யூனிசெப இருபத்து மூன்று இலட்சம் சிறுவர்கள் வீடின்றி உணவின்றி கல்விவசதியின்றி இருக்கின்றனர் என்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பதுகாப்புச சபையின் தீர்மானங்கள் எதுவும் சிரிய மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்கின்றது யூனிசெப்.

முன்றாம் ஆண்டு நிறைவான சனிக்கிழமை  சிரிய அரச படைகள்   சிரிய லெபனானிய எல்லையில் உள்ள யப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியதாக சிரிய அரசு அறிவித்துள்ளது. யப்லவூட் நகரம் சிரிய லெபனானிய எல்லைப் பிரதேசத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் வசம் இருந்த கடைசி நகரமாகும். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய படைகளுடன் இணைந்து போராடுவதால் சிரிய லெபனானிய எல்லைப் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தாகும். ஹிஸ்புல்லா அமைப்புப் போராளிகளும் சிரியாவின் அரச படைகளும் இணைந்தே இந்தத் தாக்குதலை வெற்றிகரமாகச செய்தன.  

 சிரிய லெபனானிய எல்லையில் உள்ள யப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து லெபனானில் உள்ள சிரியக் கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தால் லெபனானில் பதட்டம் உருவாகியுள்ளது.

தலைநகர் டமஸ்கஸ் உட்படப் பல முக்கிய நிலைகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுததியுள்ள சிரிய அரச படைகளுக்கு யாப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியமை இன்னும் ஒரு கேந்திர முக்கியத்துவ வெற்றியாகும். சிரியக் கிளரச்சிப் படைகளுக்கு யாப்லவூட் நகர் ஒரு முக்கிய வழங்கற்பாதையாகவும் இருந்தது.

மூன்றாம் ஆண்டு நிறைவைப் பற்றி ஏதும் சொல்லாத சிரிய அரச ஊடகங்கள் சிரியா யாப்லவூட் நகரைக் கைப்பற்றியதை பெரிது படுத்தி அறிவித்தன. ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சிரியக் கிளர்ச்சிப் படைகள் செய்த பல கார் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கான தயாரிப்பு வேலைகள் லாப்வூட் நகரிலேயே செய்யப்பட்டன. ஆனால் சிரியக் கிளர்ச்சிப் படையினர் யாப்லாவூட் நகரைத் தாம் இன்னும் இழந்துவிடவில்லை என்கின்றனர்.

சிரியக் கிளர்ச்சி என்பது நித்திய கண்டம் தீர்க்காயுசு என்பதாகும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...