Friday, 3 April 2020

கொரோனாவும் அரசுகளும் சதிக்கோட்பாடுகளும்

கொரோனா நச்சுக்கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கின்றது. மனித வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல தொற்று நோய்கள் வந்திருந்தாலும் கொவிட்-19உலக நாடுகளுக்கு இடையிலான உறவிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா நச்சுக்கிருமியின் தோற்றம் பற்றி பல கற்பனைக் கதைகள் பரவுகின்றன.

சுகாதாரப் பிரச்சனையில் இருந்து பொருளாதாரப் பிரச்சனைவரை
சீனாவின் ஆரம்பித்ததாகக் கருதப்படும் கொவிட்-19முதலில் சுகாதாரப் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. அதற்குரிய மருந்தையும் சிகிச்சை வசதிகளையும் தேடும் போது அது ஒரு மருத்துவப் பிரச்சனையானது. அந்த இரண்டு பிரச்சனையையும் ஆரம்பத்தில் சீன அரசு கையாண்ட போது எழுந்த விமர்சனங்களால் அது அரசியல் பிரச்சனையாக மாறியது. சீனாவின் முக்கிய நகரமான உஃகான் தனிமைப் படுத்தப் பட்ட போதும் அதைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட போதும் பெரும் பொருளாதாரப் பிரச்சனை எழுந்தது. சீனாவின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப் பட்டு 2020இன் முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் தொழிற்றுறை உற்பத்தி 13.5% வீழ்ச்சியடைந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. 1979இன் பின்னர் முதற்றடவையாக சீனாவின் பொருளாதாரம் குன்றப் போகின்றது எனக் கருதப்படுகின்றது. சீனாவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாலும் உலகெங்கும் பல நாடுகளில் பரவியுள்ள கொவிட்-19அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் கௌரவப் பிரச்சனை
சீனாவில் இருந்துதான் கொரோனா உருவானது என்பதும் சீனா ஆரம்பத்தில் அந்த கிருமிகள் தொடர்பாக உண்மையான செய்திகளை வெளிவிடவில்லை என்ற குற்றச் சாட்டும் சீனாவிற்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக இருக்கின்றது. தான் கொரோனா கிருமிப்பரவலை மற்ற நாடுகளிலும் பார்க்க சிறப்பாகக் கையாண்டது என சீனா மார்தட்டுகின்றது. சீனா அரசு மேற்கொண்ட இறுக்கமான நடவடிக்கைகளால் 7.5மில்லியன் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன என்ற ஒரு பிரித்தானியப் பல்கலைக் கழகம் சீனா தனது நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்கு முன்னர் எடுத்திருந்தால் 95% உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என்ற குற்றச் சாட்டையும் முன் வைத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் சீனாவை வாயாரப் புகழ்ந்துள்ளது. ஆனால் பல மேற்கு நாட்டு ஊடகங்கள் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பொம்மை என்கின்றது. சீனாவிற்கு முன்னர் தைவான் உலக சுகாதார நிறுவனத்திற்கு கொரொனா நச்சுக் கிருமிகள் மனிதர்களில் இருந்து மனிதருக்கு பரவக் கூடியது என அறிவுறுத்தியிருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளின் தலைவர்கள் உலக சுகாதார நிறுவன அதிபர் மீது குற்றம் சாட்டினர். அவர் பதவி விலக வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. 


நாட்டுக்கு நாடு வித்தியாசமாக கையாளப்பட்ட கொவிட்-19
சிறியா நாடென்பதாலும் சிறப்பாக முகாமைப் படுத்தப்படுவதாலும் சிறந்த மருத்துவத் துறையைக் கொண்டிருந்த படியாலும் சிங்கப்பூர் கொவிட்-19நச்சுக்கிருமிப் பரவலை சிறப்பாகக் கையாண்டது. சிறப்பான ஒற்றையாட்சியைக் கொண்ட தென் கொரியாவாலும் சிறந்த முகாமையைக் கொண்ட ஜப்பானாலும் கோவிட்-19இன் பரவலை தடுக்க முடிந்தது. தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான இத்தாலி பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை மற்ற ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன. துருக்கிய ஆட்சியாளர்கள் முதலில் தமது நாட்டில் கொவிட்19 நச்சுக்கிருமி பரவவில்லை என்றது. இஸ்ரேல் தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை கொவிட்-19இற்கு எதிராக எடுத்தது. இலங்கை அரசு கொவிட்-19இல் அதிக கவனம் எடுத்தது. விரைவில் பாராளமன்றத் தேர்தலி நடத்தி அதன் அரசமைப்பு யாப்பின் 19வது திருத்தத்தை ஒழிப்பதில் அதிபர் அக்கறையாக உள்ளார்.
பண்டங்கள் அல்ல மனிதப் போக்கு வரத்தே பிரச்சனைக்குரியது.
சீனாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் இந்தியாவிலும் பாக்கிஸ்த்தானிலும் கோவிட்-19இன் பாதிப்பு பல ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க குறைந்த அளவில் இருக்கின்றது. கொவிட்-19 நச்சுக்கிருமியின் ஆரம்ப இடமான உஃகான் நகரில் இருந்து நேரடி விமானச் சேவையைக் கொண்ட தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொற்று நோய்ப்பரவல் துரிதமாகவும் அதிக அளைவிலும் இருந்தது. கொவிட்-19 நச்சுக் கிருமி மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுவதே அதிகம். அது உணவுப் பொருட்களிலோ மற்ற வர்த்தகப் பொருட்களிலோ அதிக மணித்தியாலங்கள் உயிருடன் இருக்காது.

பல விதமான சதிக் கோட்பாடுகள்
ஒவ்வொரு தடவையும் புது வகையான தொற்று நோய்க்கிருமிகள் உலகெங்கும் பரவும் போது மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்காக அக்கிருமிகளை உருவாக்கின என்பது முதலில் வைக்கப்படும் குற்றச் சாட்டாகும். இரண்டாவது குற்றச் சாட்டு உயிரியல் படைக்கலன்களுக்கு உற்பத்தி செய்த கிருமிகள் தப்பி விட்டன என்பது. மூன்றாவது ஒரு நாட்டில் அழிவை விளைவிக்க மற்ற நாடு பரவ விட்டது. ஐந்தாவது இது இலுமினாட்டிகள் உலகை அழிக்க செய்யும் வேலை. இவை மட்டுமல்ல இன்னும் பல நம்பமுடியாத ஆதாரமற்ற சதிக்கோட்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

காசா முதல் டில்லிவரை
காசா நிலப்பரப்பில் ஓர் இஸ்லாமிய போதகர் கொரோனாவை அல்லா இஸ்லாமியர்களின் எதிரிகளை அழிக்க உருவாக்கினார் என்றார். மேற்குக் கரையில் உள்ள சிலர் இஸ்ரேல் இஸ்லாமியர்களை அழிக்க கொரோனா வைரஸை உருவாக்கிப் பரவவிட்டனர் என்கின்றனர். இந்தியாவில் சில மதவாதிகள் கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புகின்றார்கள் எனக் குற்றம் சாட்டி அதற்கு “ஜிகாடிஸ்ற் வைரஸ்” எனப் பெயரிட்டனர். சீனாவில் உஃகான் நகரில் இருந்து சீனத் தலைநகர் பீஃயிங்கிற்கும் பொருளாதாரத் தலைநகர் ஃசங்காயிற்கும் பரவியதிலும் பார்க்க அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு அதிகம் பரவியது ஏன் என சிலர் கேள்வி எழுப்பியதுடன் ஒரு வீட்டின் சமையலறையில் பிடித்த தீ அதன் இருப்பறைக்குப் பரவாமல் அடுத்த வீட்டுக்கு பரவியது எப்படி எனவும் கேள்வி எழுப்புகின்றனர். முதலாவது உண்மை கொரொனா மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும். சமையலறையில் தீப்பிடித்தவுடன் சமையல் அறையில் இருந்த பக்கத்து வீட்டுக்கார் தன் மீது பிடித்த தீயுடன் பக்கத்து வீட்டு இருப்பறைக்கு ஓடினால் பக்கத்து வீட்டில் தீப்பிடிக்கும். சமையலறையில் தீப்பிடித்தவுடன் அந்த வீட்டின் படுக்கையறையில் இருந்தவர் திடீரென எழுந்து வந்து துரிதமாகச் செயற்பட்டால் சமையலறைக்குள்ளேயே தீ அடக்கப்பட்டுவிடும். உஃகான் நகரில் இருந்து நியூயோர்க் நகருக்கு நேரடி விமானச் சேவை உண்டு. உஃகான் நகரில் அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் துணைத்தூதுவரகங்கள் இருக்கின்றன. மாதம் 900பேர் உஃகான் நகரில் இருந்து நியூயோர்க்கிற்கு பறப்புக்களை மேற்கொள்கின்றனர். மேற்கு நாடுகள் முதலில் கொவிட்-19 நோயை பரவவிட்டு மக்களின் நோய் எதிர்ப்பு வலுவால் அடக்கி மக்களின் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கும் திட்டத்துடன் இருந்தன. சுவாசக் கவசத்தை முகத்தில் அணிவது பயனில்லை என மேற்கு நாட்டு நிபுணர்களும் அரசியல்வாதிகளும் பரப்புரை செய்தனர். ஆனால் சுவாசக் கவசம் அனிந்த ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கிருமி பரவாது என்பது முற்றிலும் உண்மை. சீனாவின் பெரு நகரவாசிகள் எல்லோரும் கொவிட்-19 தொற்று நோய் பரவ முன்னரே சீனாவின் வளிமண்டலம் மாசு பட்டிருப்பதால் சுவாசக் கவசத்தை அணிந்த படியேதான் அவர்கள் வெளியே செல்வார்கள். அதனால் யாராவது கொவிட்-19 நோயால் பிடிக்கப்பட்டால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவது பெருமளவில் குறைக்கப்பட்டது. சீனா மக்களை வெளியில் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டால் அந்த உத்தரவிற்கு மக்கள் பணிந்தே ஆக வேண்டும். சீனாவெங்கும் 200மில்லியன் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் முகங்களை வைத்து ஆட்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தில் சீனா உலகில் முதன்மையாகத் திகழ்கின்றது. அதனால் வீட்டுக்குள் இருக்கும் உத்தரவிற்கு மக்கள் பணிந்தனர். சீனாவில் நோயாளிகளுக்கான சுவாசப் பெட்டிகளுக்கு தட்டுப்பாடு இத்தாலியில் இருந்தது போல் இருக்கவில்லை. இவற்றால் சீனாவால் நோய் பரம்பலையும் இறப்பையும் மட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உரிய நேரத்தில் உலக சுகாதார நிறுவனத்திற்கு கொவிட்-19 நோய் பற்றி எச்சரிக்க சீனா தவறியது மாநிடத்திற்கு எதிரான குற்றமாகும்.

அமெரிக்கப்படையினர் பரப்பினர் என்கின்றது சீனா
சீனாவின் உஃகான் நகரில் நடந்த பல நாடுகளின் படையினர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற வந்த அமெரிக்க படையினர் அங்கு கொவிட்-19 நச்சுக் கிருமியைப் பரப்பினர் என சீனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீன வெளியுறவுத் துறையின் பேச்சாளரான Zhao Lijian திட்டமிட்டு இப்படி ஒரு கதையைப் புனைந்து சீன சமுகவலைத்தளங்களில் பரவ விட்டார் என அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொற்று நோய் பரவ ஆரம்பித்த காலங்களில் சீனா எடுத்த பிழையான நடவடிக்கைகளை மறைக்கவே இப்படி ஒரு கதையை சீனா கட்டிவிட்டுள்ளது என்கின்றனர் அமெரிக்கர்கள். அமெரிக்க அதிபர் கொரொனாவிற்கு சீனநச்சுக்கிருமி எனப் பெயரும் சூட்டினார்.

போர் அனுபவமில்லா சீனாவின் போர்க்கால நடவடிக்கை
சீனாவின் படைத்துறையைப் பற்றி விமர்சிக்கும் மேற்கு நாட்டவர்கள் சீனர்களுக்கு போர் அனுபவம் இல்லை என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டுவார்கள். ஆனல் கொவிட்-19நச்சுக் கிருமியை ஒழிப்பதில் எடுத்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஒரு போர் நடந்தால் அதை சீனா எப்படிக் கையாளும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதிலும் சிகிச்சை அழிப்பதிலும் சீனா மனித இயந்திரங்களைப் பயன்படுத்தியது. நோயால் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு மருந்துகளையும் உணவையும் ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பியது. செயற்கை நுண்ணறிவில் சீனா எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதையும் சீனாவின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.

ஈரான் வழி தனி வழி
ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவால் தமது நாட்டில் கொரொனா நச்சுக் கிருமி பரப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்கா ஈரானுக்கு வழங்க முன்வந்த மருந்துப் பொருட்களையும் ஈரான் வாங்க மறுத்தது. அந்த மருந்திலும் ஈரானியர்களைக் கொல்லும் நச்சுக் கிருமிகளை உள்ளடக்கி அமெரிக்கா அனுபும் என்றன ஈரானிய ஆட்சியாளர்கள்.

டிரம்பின் ஆதரவாளர்கள் வேறு வழி
டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் டிரம்பின் தேர்தல வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்ய அவரின் எதிரிகள் கொவிட்-19 நோயின் தாக்கம் பற்றி வேண்டுமென்றே மிகைப்படுத்திக் கூறுகின்றார்கள் என்கின்றனர். நியூயோர்க் மாநில மருத்துவ மனைகளில் இருந்து திட்டமிட்டு அவலங்கள் பற்றிய செய்திகள் பரப்பப்படுகின்றன என டிரம்ப் ஆதரவாளர்கள் ஆத்திரப்படுகின்றனர். 5ஜீ தொழில்நுட்பத்தை

பில் கேட்ஸ் முன்கூட்டி திட்டமிட்டாரா?
2015-ம் ஆண்டு ஆற்றிய ஓர் உரையில் வரும் காலத்தில் 10மில்லியன் மக்கள் இறக்கலாம் என எதிர்வு கூறியிருந்தார். மென்பொருள் உற்பத்தி வர்த்தகரான அவர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப மென் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அவரது நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, கணனிகள் தாமாகவே கற்றுக் கொள்ளல் ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நடக்கவிருப்பவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத் தரவுகளை மிகப்பெருமளவில் திரட்டி அவற்றில் இருந்தும் தற்போது நடக்கும் மாற்றங்களில் இருந்தும் எதிர்காலத்தை அவர்கள் கணிக்கின்றார்கள். அதில் அவர் கண்டதைப் பகிர்ந்து கொண்டார். இந்த கொவிட்-19 நோய்ப்பரமலால் அவருக்கு ஏதாவது நன்மை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதாவது கிடைத்தால் அவர் மீது குற்றம் சாட்டுவது நியாயமானது. டீன் கூன்ஸ் என்ன்னும் நாவலாசிரியர் 1981-ம் ஆண்டு எழுதிய The Eyes of Darkness நாவலில் 2020 ஆண்டளவில் நிமோனியா போன்ற ஒரு கடுமையான நோய் உலகெங்கும் பரவும். அது சுவாசப்பை சுவாசக் குழாய் போன்றவற்றைத் தாக்கும். எந்த ஒரு மருந்தாலும் அதை தடுக்க முடியாது என எழுதினார். அந்த நோய்க்கு அவர் ஃஉகான்-400 எனப்பெயரிட்டிருந்தார். பில் கேட்ஸிலும் பார்க்க அவரது எழுத்து மிகவும் துல்லியமாக இருக்கின்றது.

எகிப்த்தியரின் எகத்தாளம்
எகிப்திய நடிகர் ஒருவர் எகிப்தியரை கொரோனா ஒன்றும் செய்ய முடியாது என்றார். உப்புப் போட்ட மீனும் வெங்காயமும் உண்ணும் எம்மிடம் கொரோனா கிருமி வந்தால் அதுதான் அழியும் என்றார். எம்மை ஒன்று கூட வேண்டாம் என்கின்றார்கள் ஆனால் நாம் கூடுவோம்; எம்மை முத்தமிட வேண்டாம் என்கின்றார்கள் ஆனால் நாம் முத்தமிடுவோம் என்றார் அந்த நகைச்சுவை நடிகர். ஆனால் இப்போது எகிப்து நோயாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றது. பல எகிப்தியப் பத்திரிகைகள் Egypt is "untouchable" and that Egyptians "are immune" to coronavirus எனச் செய்திகளையும் வெளியிட்டிருந்தன. எகிப்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் எகிப்தியர்கள் கடவுளால் பாதுகாக்கப்படுபவர்கள் என்றனர். எகிப்திய மத போதகர்கள் இஸ்லாமியர்களை எந்தக் கிருமியும் தாக்காது என்றனர்.

வித்தியாசமாகக் கையாள முயன்ற பிரித்தானியா
இரண்டு உலகப் போரிலும் பிரித்தானியா தனது மக்களின் உயிர்களின் பாதுகாப்பிலும் பார்க்க எதிரியை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்தியது. தனது மக்களின் அதிக உயிரிழப்புக்கள் அவர்களை தீவிரமாகப் போரில் ஈடுபடத் தூண்டும் என பிரித்தானிய ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அது போலவே கொவிட்-19கிருமிகளைப் பரவ விட்டு அதை அழிக்க முயன்றனர் என்ற குற்றச் சாட்டு சீனாவில் இருந்து வைக்கப்பட்டது. பிரித்தானியா ஆரம்பத்தில் பாடசாலைகளைக் கூட மூடாமல் இருந்தது ஆனால் பிரித்தானியப் பல்கலைக்கழகம் ஒன்று அதனால் ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என எச்சரித்தைத் தொடர்ந்து அந்த முயற்ச்சி கைவிடப்பட்டது. பின்னர் புதிய சட்டத்தின் மூலம் கோவிட்-19ஐ எதிர்வு கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா
இணைப்பாட்சி ஆட்சி முறைமையைக் கொண்ட அமெரிக்காவில் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான வகையில் கையாளும் நிலையைத் தவிர்க்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அவர் எடுக்கும் முயற்ச்சிக்கு கொவிட்-19கிருமிகளையும் பாவிக்க முயன்றார். அதனால் முதலாவதாக சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிகள் வருவதைத் தடை செய்தார். அதே போல் ஐரோப்பிய நாடுகள் செய்யாத படியால் ஐரோப்பாவில் இருந்தும் மக்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதைத் தடை செய்தார்.

மோசமான நிலையில் மேற்கு நாடுகளின் மருத்துவத் துறை
கொரோனா நச்சுக் கிருமி பல நாடுகளின் மருத்துவத் துறையின் கேவலமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. ரொனால்ட் ரீகன் -மார்கரெட் தட்சர் காலத்தில் இருந்தே முதலாளித்துவ நாடுகள் முதலாளிகளுக்கு விதிக்கப்படும் வருமான வரியைக் குறைப்பதற்கு அரச செலவுகளைக் குறைக்கத் தொடங்கினர். அவரகள் முதலில் கை வைத்தது மருத்துச்வத் துறை. அன்றிலிருந்து மேற்கு நாடுகளின் மருத்துவத் துறை வலுவற்றதாக இருக்கின்றது. சமூகவுடமைக் கொள்கையைக் கொண்ட ஸ்கண்டினேவிய நாடுகள் மட்டும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றன.

நோயிலும் இலாப நட்டக் கணக்கு
கொரோனா நோய் பரவலைத் தடுக்க மக்கள் நடமாட்டைத்தை இறுக்கமாகக் கட்டுப்படுத்தினால் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் தான் மேற்கு நாட்டு ஆட்சியாளர்களை ஆட்டிப்படைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் நோயால் வரும் இழப்பிலும் பார்க்க அதிக இழப்பை பொருளாதார அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டி வரும் என பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அச்சம்தான் அவரை துரித நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது. தமது மருத்துவத் துறையின் பலவீனத்தையும் தமது பொருளாதாரக் கரிசனையையும் மறைக்கவே பல சதிக் கோட்பாடுகளை அவர்கள் பரப்புகின்றார்கள்.

ஆய்வு கூடத்தில் உருவாக்கப் பட்டதா?
மரபணு மாற்றத்தின் மூலம் கொரோனா நச்சுக்கிருமி உருவாக்கப் படவில்லை என சில பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதன் தோன்றியதில் இருந்தே பல புதிய நச்சுக்கிருமிகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டு வௌவால்களில் கொரொனா நச்சுக் கிருமிகள் இருந்து வருகின்றன. 2002-ம் ஆண்டு வௌவால்களில் உள்ள கொரோனா நச்சுக்கிருமிகள் காட்டுப்பூனை போன்ற ஒரு மிருகதிற்குப் பரவி அங்கு உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்குப் பரவி சார்ஃச் என்னும் நோயைப் பரப்பியது, 2012இல் வௌவால்களில் இருந்த கொரோனா கிருமி பூனை போன்ற ஒரு காட்டு விலங்கிற்கு பரவி அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவி மெர்ஃச் என்ற நோயைப் பரப்பியது. 2019இல் வௌவால்களில் இருந்து எறும்பு தின்னி விலங்கிற்குப் பரவி அதில் உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்குப் பரவி கொவிட்-19 நோயை உலகெங்கும் பரப்பியுள்ளது. சார்ஃச் நோயும் கொவிட்-19 நோயும் உலகெங்கும் சீனாவில் இருந்தே பரவியது. சீனர்களின் உணவுப் பழக்கம் இந்த நோய்களின் பரம்பலுக்கு காரணமாய் இருந்தன என்ற குற்றச் சாட்டுக்கு சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும். முதன் முதலில் ஓர் இனம் தெரியாத நச்சுக்கிருமி பரவ தொடங்கியுள்ளது என்ற இளம் சீன மருத்துவரை சீன அரசு கண்டித்தது மிகப்பெரிய குற்றம்.

1960இல் இருந்து கொரோனா உள்ளது.
கொரோனா நச்சுக்கிருமியை 1960களில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது இருந்த நுண்காணிகள் மூலம் பார்க்கும் போது அது அரசரின் முடி போல இருந்ததால் அதற்கு கொரோனா (Corona in Greek. In English: Crown) என்ற பெயர் சூட்டப்பட்டது. தற்போதுள்ள நுண்காணிகள் மூலம் பார்க்கும் போது அது ஒரு கடற்கண்ணி வெடி போல தோற்றமளிக்கின்றது. கொரோனா நச்சுக் கிருமிக் குடும்பத்தில் 40இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதாவது 40 வகையான கிருமிகள் உள்ளன. இவை வௌவால், பூனை, காகம் ஆகியவற்றில் கொரோனா உள்ளன. 

உயிரியல் படைக்கலனா?
New Scientist சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை இந்த நச்சுக்கிருமி உயிரியல் படைக்கலன் அல்ல (No, this virus isn’t a bioweapon) என ஆரம்பிக்கின்றது. அக்கட்டுரையின் சில பகுதி:
New diseases have emerged throughout human history, and we have seen two major coronavirus outbreaks in the last two decades: SARS and MERS. So we shouldn’t be surprised by the arrival of the covid-19 virus.
However, rumours on social media suggest that the outbreak was human-made. Some say the virus leaked from a Chinese lab studying coronaviruses. Others suggest the virus was engineered to spread among humans.
Even the most secure laboratories do sometimes have accidents, and a human-engineered pandemic has been identified as a possible risk to our civilisation, but there is no good evidence that either has happened.
Many similar viruses are found in wild bats, and it seems likely that is the origin of this one, probably via an intermediate host. Similarly, we know that both SARS and MERS came from bats, so there is no reason to invoke a laboratory accident.

உண்மைகளை உரிய முறையில் அறிந்து பதிவுகளை இடுவோம். 

Monday, 30 March 2020

உலகமயமாதலும் இணைபிரித்தலும் (Decoupling)



மகாநதி திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகனும் வில்லனும் உயர் மாடி ஒன்றில்மோதிய போது இருவரின் கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். வில்லன் சண்டையில் வில்லன் மொட்டை மாடியில் இருந்து சறுக்கி விழுந்து அந்தச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருப்பான். அந்த இடத்திற்கு காவற்துறையினர் வந்து கொண்டிருப்பர். அவர்கள் வந்து வில்லைனைக் காப்பாற்ற முன்னர் அவனைக் கொல்ல கதாநாயகன் தன் கையை வெட்டி வில்லனை உயரத்தில் இருந்து விழச் செய்து கொல்வார். உலகமயமாதல் அதிகரித்த போது வல்லரசு நாடுகள்கூட ஒன்றின் மீது ஒன்று அளவிற்கு அதிகமாகத் தங்கியிருப்பது வேண்டத் தகாத ஒன்றாகி விட்டது. இதன் ஆபத்து கொரோனாநச்சுக்கிருமி உலகப் போக்குவரத்தை துண்டித்த போது ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் உணரப்பட்டுள்ளது.


உலகமயாக்கல்
உலகமயமாக்கல் என்பது நாடுகளின் பொருளாதாரங்களையும் கலாச்சாரங்களையும் அதிகம் ஒன்றிணைத்து உலக வர்த்தகத்தையும் மூலதனப் பரம்பலையும் தொழில்நுட்பப்பகிர்வையும் அதிகரிப்பதாகும். உலகமயமாக்கல் உலகச்சந்தையை திறந்து விட்டது; உலக விநியோக வலையமைப்பை உருவாக்கியது; அடம் சிமித் என்னும் பழம் பெரும் பொருளியலாளரின் உழைப்புப்பகிர்வு, தனித்திறனுருவாக்கல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. உலக நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி 1960-ம் ஆண்டு 12விழுக்காடாக இருந்தது. உலகமயமாக்கலின் பின்னர் அது 30விழுக்காடாக உயர்ந்தது. ஒரு உற்பத்திப் பொருளின் பாகங்கள் பல நாடுகளில் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால் ஒரு பொருளின் உற்பத்தி பல நாடுகளில் தங்கியிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனை உற்பத்தியைப் பாதிக்கச் செய்கின்றது. கோவிட்-19 தொற்று நோயால் ஒரு நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது பல நாடுகளின் உற்பத்திகள் பாதிப்புக்கு உள்ளாகின. பல நாடுகள் மூச்சுக்கவசங்களின் ஏற்றுமதியைத் தடை செய்தமை உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிரானவையாக குற்றம் சாட்டப்பட்டன. ஜேர்மனி உருவாக்கவிருக்கும் கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு மருந்து முழுவதையும் அமெரிக்கா வாங்க முற்பட்ட போது ஜேர்மன் அரசு தலையிட்டு அதைத் தடுத்ததும் உலமயமாக்கல் கொள்கைக்கு எதிரானதே.

சீனாவும் உலகமயமாதலும்
சீனா தனது பொருளாதாரத்தைச் சூழும் ஆபத்தை 1979இல் உணர்ந்து கொண்டு செயற்படத் தொடங்கினாலும் கணிசமான பொருளாதாரச் சீர்திருத்தத்தை 1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னரே செய்யத் தொடங்கியது. சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டது. உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்கிற்கு மேல் வளர்ந்துள்ளது. சீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும். சீனாவிற்கான உலக வர்த்தகத்தை மேற்கு நாடுகள் இலகுவாக்கின. அதனால் சீனாவை உலக உற்பத்தி நிறுவனங்கள் தமது பொருத்து நிலையமாக (assembly plant of the world) மாற்றின. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதைப் பாவித்து சீனாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், படைத்துறை ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்ந்தன. 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியா உலகத்தின் தொழிற்சாலை என அழைக்கப்பட்டது போல் தற்போது சீனா அழைக்கப்படுகின்றது. சீனாவின் உவாவே நிறுவனத்தின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி மேற்கு நாடுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உணரவைத்தது.


தொழில்நுட்ப ஆபத்து நாடுகளைத் துண்டிக்கின்றது.


2019 டிசம்பரில் அமெரிக்காவின் வர்த்தகத்துறைச் செயலர் வில்பர் ரொஸ் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றார். இது சீனாவின் உவாவே கைப்பேசி நிறுவனத்தை மட்டும் இலக்காக வைத்துச் சொல்லப்பட்டதல்ல. அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ள ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்புறவு நாடுகளின் மென்பொருள்வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தரவு செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணையவெளியில் அதிகம் தங்கியிருப்பதும் அவற்றின் மென்பொருட்களிலோ அல்லது வன் பொருட்களிலோ உளவறியும் நச்சுநிரல்கள் (computer virus) இணைக்கப்பட்டிருக்கலாம் எனற அச்சமும் அமெரிக்காவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளுடனான தொழில்நுட்ப உறவுகள் இணையவெளித் தொடர்புகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. சுருங்கச் சொல்வதாயின் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதையும் அமெரிக்கப் படைத்துறையை சீனா உளவு பார்ப்பதையும் தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களூடான உலகத் தொடர்பை அமெரிக்கா துண்டிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. உலகத்தை ஒரு சந்தையாக்கும் உலகமயமாக்குதலின் நோக்கம் இங்கு பெருமளவு பாதிக்கப்படுகின்றது. உலகமயமாதலின் ஒரு அம்சமாக தொழில்நுட்பப் பரம்பல் இருக்கின்றது. நாடுகள் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளல் மூலம் சீனாவும் இரசியாவும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கின்றது. 


உயர்ந்த சீனாவை விழுத்தும் முயற்ச்சி
2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி உச்சமடைந்தது. அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல் சீனாவிற்கு சாதகமாகவும் மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பது உணரப்பட்டது. ஆனாலும் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை சீனாவால் மாற்றுவது சிரமமாக இருந்தது. மேற்கு நாடுகள் உலகமயமாக்கலை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலகமயமற்றதாக்கல் (Deglobalisation) 2016-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகின்றது. சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டது. உலகப் பொருளாதாரம் சரியும் போது சீனப் பொருளாதாரம் சரிவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. சீனாவால் உலகமயமாக்குதலில் இருந்து விலக முடியாமல் இருக்க மேற்கு நாடுகள் அதிலிருந்து விலக முடிவெடுத்தன. 2019 ஜூனில் நடந்த ஜீ20 மாநாட்டில் மேற்கு நாடுகள் காப்பியல் (protectionism) கொள்கையைக் கடைப்பிடித்து உலக வர்த்தக் ஒழுங்கை சிதைக்க முயல்வதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் குற்றம் சாட்டினார்.

தன்னிறைவு, உலகமயமாதல், அந்நிய முதலீடு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் வர்த்தகப் போர் இரு நாடுகளையும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதை எப்படித் தவிர்ப்பது என்பதை நோக்கமாகக் கொண்டதே. உலகமயமாதல் முதலீட்டாளர்களையும் அவர்களுக்காக பணி புரிவோரையும் உலகெங்கும் பயணிப்பதை அதிகரிக்கச் செய்தது. அதனாலேயே கொரோனாநச்சுக்கிருமி மிக வேகமாக உலகெங்கும் பரவியது. 1970களில் அப்போது மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்ட வளர்முக நாடுகளில் பொருளாதாரத் தன்னிறைவு என்ற பதம் அதிகம் விரும்பப்பட்டதாக இருந்தது. உலகமயமாக்குதல் அதை இல்லாமல் செய்து “அந்நிய நேரடி முதலீடு” என்ற சொற்றொடர் பலராலும் விரும்பப்பட்டதாக உருவெடுத்தது.

சீன அமெரிக்க இணைப்புச் சங்கிலி
அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சீனா அதிக ஏற்றுமதியைச் செய்வதால் சீனாவிடம் அதிக வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு உள்ளது. அதை கையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. எங்காவது முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்கர்கள் சீன உற்பத்தியை மிக மலிவான விலையில் வாங்குகின்றார்கள். உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் அமெரிக்க அரசின் வரிச் சேகரிப்பு குறைந்தது அமெரிக்க அரசின் வருமானம் குறைகின்றது. அதனால் அமெரிக்க அரசு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெரிக்காவிற்கு சீனா தன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பை கடனாகக் கொடுக்கத் தொடங்கியது. அப்படி சீனா கொடுக்காவிட்டால் அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும். குறைந்தால் சீன ஏற்றுமதி குறையும். அமெரிக்காவிற்கு சீனாவின் ஏற்றுமதியும் அமெரிக்காவிற்கு சீனா கொடுக்கும் கடனும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சங்கிலி. இது போலப் பலவகைகளில் உலகமயமாதல் பிரிப்பதற்கு கடினமான சங்கிலிகளால் நாடுகளைப் பிணைத்துள்ளது. இந்த பிணைப்பைப் பற்றியோ அதை துண்டிப்பதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றியோ உணரக் கூடிய அறிவுடையவர்களாக எந்த ஒரு முன்னணி நாட்டினதும் ஆட்சியாளர்கள் இல்லை.

உலகமயமாதலை தீவிரமாக முன்னெடுத்த தாராண்மைவாதக் கட்சிகள் பல உலகெங்கும் தோற்கடிக்கப்பட்டு தேசியவாதத் தலைவர்கள் பல முன்னணி நாடுகளில் ஆட்சியில் அமர்ந்துள்ளமையும் உலகமயமாக்குதலைப் பின்தள்ளியுள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து “உலகமயமாதலை இணைபிரித்தல்” (Decoupling Globalization) என்ற சொற்றொடர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களால் அதிகம் பாவிக்கப்படுகின்றது. உலகமயமாக்குதல் உருவாக்கியுள்ள நாடுகளிடையேயான சங்கிலிப் பிணைப்பை துண்டிக்க மகாநதி திரைப்படத்தின் கதாநாயகன் போல தன் கையையே தான் துண்டிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய தேசியவாத அரசுத் தலைவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைத் தாங்கக் கூடிய நிலையிலும் இல்லை. உலகத் தலைவர்களிடையே சரியான புரிதலும் தேவையான சகிப்புத் தன்மையும் இல்லை.



Monday, 24 February 2020

உலக ஆதிக்கமும் 5G அலைக்கற்றையும்


சீனாவின் 5ஜீ அலைக்கற்றை உலகெங்கும் பாவிக்கப் பட்டால் உலக ஒழுங்கு குலைக்கப்படும், சீனா உலகெங்கும் உளவு பார்க்கும், சீனா உலகெங்கும் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப தகவல்களையும் தொழிற்றுறை இரகசியங்களையும் திருடும், சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளாலும் அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆண்டு தோறும் அரை ரில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பத் தகவல் திருட்டுக்களை அமெரிக்காவில் இருந்து சீனா செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அலைக்கற்றைச் செயற்பாட்டின் மூலம் 4.7மில்லியன் வேலைவாய்ப்பும் 47பில்லியன் வருமானமும் அமெரிக்காவிற்கு கிடைக்கின்றது. சீனாவின் ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் தமது தொழில்நுட்பங்களைத் திருடியதாக அமெரிக்காவின் கூகிள், கோல்கொம் ஆகிய நிறுவனங்கள் பகிரங்கக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தன.

5ஜீ சீனாவை பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நாடாக்கும்
தற்போது பல நாடுகளிலும் பாவிக்கப்படும் 4ஜீ (நான்காம் தலைமுறை) என்பது Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 4G அலைக்கற்றையில் பாவிக்கப்படும் LTE தொழில்நுடம் ஒரு செக்கண்டிற்கு 100MB தகவலைப்பரிமாறும். Wi-Fi மூலம் 11MB தகவலை மட்டும் பரிமாறும். இந்த தொழில்நுட்பத்தில் அடுத்த நிலை வளர்ச்சிதான் 5ஜீ தொழில்நுட்பம். 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள் மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்ல தானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும் 5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப் பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றும். போக்குவரத்து, தொழிற்றுறை உற்பத்தி, வர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும் துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும். உதாரணத்திற்கு ஆளே இல்லாத கடையில் ஒருவர் போய் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வீடு வரலாம். அதற்குரிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அந்தக் கடைக்கு உரியவர் எடுத்துக் கொள்வார். உங்கள் முகத்தை வைத்தும் நீங்கள் வாங்கும் பொருளில் உள்ள இலத்திரனியல் குறியீடுகளை வைத்தும் இவை செய்யப்படும். 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னோடியாகச் செயற்படும் நாடு உலகப் பொருளாதாரத்தில் முன்னோடியாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது.


5ஜீ தொழில்நுட்பத்தில் சீனா முன்னணி.
5ஜீ தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் சீனா ஆகிய நாடுகளின் பல நிறுவனங்கள் போட்டி போட்டன. நாடுகளின்  ஆனால் சீனாவின் ஹுவாவே நிறுவனம் முந்திக் கொண்டு விட்டது. 2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா 5ஜீ செலவு செய்த தொகையிலும் பார்க்க சீனா 24மில்லியன் டொலர்கள் அதிகமாகச் செலவு செய்தது. 5ஜீ அலைக்கற்றைகளுக்கான 350,000 தொடர்புக் கோபுரங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 30,000மட்டுமே உள்ளன. உலகிலேயே அதிக அளவு கைப்பேசியூடான கொடுப்பனவுகள் சீனாவில் நடக்கின்றன. சீனாவின் WeChat Pay, Alipay ஆகியவை சீனாவின் கொடுப்பனவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கு Paypal, Apple Pay போன்றவை பயனில் இருந்தாலும் குறைந்த அளவே பாவிக்கப்படுகின்றன. சீனாவில் கடன் அட்டைகள் பாவனை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. அமெரிக்காவிலும் பார்க்க நான்கில் ஒரு பங்கு கடன் அட்டைகள் சீனாவில் பாவிக்கப்படுகின்றன. இப்போது கைப்பேசியூடான கொடுப்பனவுகளுக்குப் பதிலாக முகத்தை இனங்காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

5ஜீ பாவனை
2019-ம் ஆண்டு அப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ-ஃபோன்-11இல் 5ஜீ அலைக்கற்றைகள் பாவிக்கும் வசதிகள் இல்லை ஆனால் 1) Samsung Galaxy S10, 2)OnePlus 7 Pro, 3)Huawei Mate X, 4)Huawei Mate 30 Pro 5) Oppo Reno, LG V50 ThinQ, 6) Xiaomi Mi Mix 3 ஆகிய கைப்பேசிகளில் 5ஜீ அலைக்கற்றை பாவிக்கக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 2020இன் பிற்பகுதியில் வெளிவரவிருக்கும் ஐ-ஃபோன்களில் 5ஜீ தொழில் நுட்பம் இருக்கும். 2019இல் 5ஜீ பரவலான பாவனையில் இருக்காது என்ற உறுதியான நம்பிக்கையிலேயே அப்பிள் நிறுவனம் 5ஜீ தொழில்நுட்பத்தைப்பற்றி கரிசனை கொள்ளவில்லை. தற்போது வளர்நிலையில் உள்ள செயற்கை நுண்ணறிவு(AI), பகவக்கணினியம் (quantum computing), குறியீட்டுவரைபு (cryptography), முகமினங்காணல் (facial recognition) போன்ற தொழில்நுட்பங்களை கைப்பேசிகளில் சிறப்பாகச் பிரயோகிக்க 5ஜீ தொழில்நுட்பம் அவசியம்.

பட்டுப்பாதையைப் பளபளக்கவைக்கும் 5ஜீ
சீனாவின் ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான புதியபட்டுப்பாதை  (belt-and-road initiative-BRI) திட்டத்திற்கு 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கவர்ச்சிகரமான அம்சமாக அமையும். BRIயும் 5ஜீயும் 2049-ம் ஆண்டு பொதுவுடமை அரசின் நூற்றாண்டு நிறவு நாள் வரும் போது சீனாவை உலகின் முதற்தர நாடாக்கும் திட்டத்திற்கு சிறந்த பங்களிப்பைச் செய்யும். பட்டுப்பாதையில் எண்மியப்பாதை (Digital Road) என்பதும் ஒரு முக்கிய அம்சமாகும்.  செய்மதிகள் மூலம் செயற்படும் போக்குவரத்து வழிகாட்டித் தொழில்நுட்பமான Global Positioning System (GPS)ஐ இந்தியா உருவாக்கிய பின்னரே சீனா உருவாக்கியது.  ஆனால் 5ஜீ தொழில்நுட்பத்தால் சீனாவின் GPS உலகின் முதற்றரமானதாக மாறும்.

சீனாவின் சட்டத்தை வைத்து அமெரிக்கா போடும் கட்டம்
சீனாவை 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னணிக்கு கொண்டு வந்த ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் 1987-ம் ஆண்டு சீன படையில் பொறியியலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ரென் ஜென்ஃபே என்பவரால் 1987-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 140,000 பணியாட்களைக் கொண்ட அந்த நிறுவனத்தில் 46% பேர் ஆய்வு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அதன் ஆய்வு கூடங்கள் கனடா, துருக்கி, அயர்லாந்து, சுவீடன், இரசியா எனப் பலநாடுகளில் வியாபித்துள்ளது. உலகின் 140 நாடுகளில் ஹுவாவேயின் உற்பத்திப் பொருட்கள் பாவனையில் உள்ளன. சீன நிறுவனங்கள் தம்மிடம் உள்ள தகவல்களை சீன உளவுத்துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் சீனாவில் உள்ளது. அதை அடிப்படையாக வைத்தே அமெரிக்கா ஹுவாவே உருவாக்கிய 5ஜீ தொழில்நுட்பத்திற்கு எதிரான பரப்புரையைச் செய்கின்றது. அமெரிக்காவில் ஹுவாவேயைத் தடைசெய்யும் அரச ஆணையை அதிபர் டிரம்ப் பிறப்பித்தார். ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் சீனா ஒத்துழைக்காமைக்குப் பழிவாங்கவே ஹுவாவேயிற்கு எதிராக டிரம்ப் செயற்படுகின்றார் எனவும் குற்றச்சாட்டப்படுகின்றது. Facebook, Apple, Amazon, Netflix, Google ஆகிய இலத்திரனியல் துறை நிறுவனங்களின் உலக ஆதிக்கத்தை சீனாவின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்திலேயே ஹுவாவேயிற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கின்றது என்ற குற்றச் சாட்டும் உண்டு. ஹுவாவேயுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் எனவும் மிரட்டப்படுகின்றது.

அச்சப்பட வேண்டிய இந்தியா அச்சப்படவில்லை.
சீனாவின் ஹுவாவே நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையை 2020-ம் ஆண்டின் ஆரம்ப நிலைப்படி ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தைவான், ஐக்கிய அமெரிக்கா ஆகியவை தமது நாட்டில் உள்ள கைப்பேசி நிறுவனங்கள் சீனாவின் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை பாவிக்கப்படுவதை தடைசெய்திருந்தன. அமெரிக்காவின் பல நிர்ப்பந்தங்களுக்கு இடையிலும் பிரித்தானியா சீனாவின் 5ஜீ அலைக்கற்றையை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தமது நாட்டில் பாவிப்பதற்கு அனுமதி செய்வதாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் பிரித்தானியத் தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சனுக்கும் இடையில் நடந்த உரையாடல் சூடான விவாதமாக மாறி டிரம்ப் சினத்துடன் தொலைபேசியைத் துண்டித்ததாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. பிரித்தானிய நிபுணர்கள் செய்த ஆய்வின் படி சீனாவின் 5ஜீ அலைக்கற்றையைப் பாவிப்பதால் ஏற்படும் ஆபத்து சமாளிக்கக் கூடியது. சீனாவின் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவை, பரிட்சார்த்த முறையில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 2019-ம் ஆண்டின் இறுதியில் தெரிவித்தார்.

ஹைப்பர்சோனிக் படைக்கலன்களும் 5ஜீயும்
ஒலியின் வேகத்திலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய படைக்கலன்கள் ஹைப்பர்சோனிக் படைக்கலன்கள் எனப்படும். இரசியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. இரசியாவிடம் ஒலியிலும் பார்க்க 20 மடங்கு வேகத்தில் பறக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவற்றை உரிய பாதையில் செலுத்துவதற்கு மிகத்துரிதமான தகவல் பரிமாற்றம் அவசியம். அசையும் இலக்குகளை நோக்கிச் செலுத்தப்படும். ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நிமிடத்திலும் குறைவான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அதற்கு 5ஜீ தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் இணைக்கப்பட வேண்டும். அப்போதே தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க முடியும். ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவுபவர்க்கும் ஏவப்படுபவர்க்கும் 5ஜீ அவசியம்.

இரசிய இரகசியங்கள்
2018-ம் ஆண்டு இரசியாவில் நடந்த உலகக் காற்பந்தாட்டப் போட்டியில் சீனாவின் 5ஜீ தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டது. இரசியாவில் சீனாவின் ஹுவாவே நிறுவனம் தனது 5ஜீ அலைக்கற்றையின் பரீட்சார்த்த சேவையை 2019 செப்டம்பரில் ஆரம்பித்துள்ளது. இரசியாவின் குடிமக்கள் கணக்கெடுப்பைச் செய்வதற்கு 360,000 பட்டிகைக் கணினிகளில் (Tablets) சீன 5ஜீ இணைக்கப்பட்டது. இரசிய இரகசியங்களை சீனா திருடமாட்டாதா என இரசிய நிபுணர்களிடம் அமெரிக்க ஊடகர்கள் கேள்வி எழுப்பினர். 2018-ம் ஆண்டில் 27,000 இணையவெளி ஊடுருவல்கள் இரசியாமீது செய்யப்பட்ட பின்னர் இரசியா தன்னை முழுமையாக பாதுகாத்துக் கொண்டுள்ளது; அதன் இரகசியங்களை இனியாரும் திருட முடியாது என்பது அவர்களின் பதில்.

அமெரிக்கா அகற்றப்பட வேண்டிய தலைவன் என்பதும் சீனா நம்பமுடியாத தோழன் என்பதும் உண்மையே. இந்த இரு பெரிய அண்ணன்களுக்கு இடையிலான போட்டியில் தம்பிகளின் தலைக்கு ஆபத்து.

Monday, 17 February 2020

சீனாவின் தொற்று நோயும் புவிசார் அரசியலும்


சீனாவில் உருவாகி உலகின் பல பாகங்களுக்கும் பரவிவரும் கொரோனா நச்சுக்கிருமி உலக அரசியலுடன் பிணைந்துள்ளது. அந்த நச்சுக் கிருமி தொடர்பான சரியான விஞ்ஞானப் புரிதல் இரண்டு மாதங்களாக கிடைப்பதற்கு அரிதாக இருக்கின்றது. அதன் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பான உண்மையான செய்திகளை அறிவது அதிலும் அரிதாக இருக்கின்றது.

தொற்று நோயும் அரசுறவுகளும்
நாடுகளுக்கு இடையிலான உறவுகள், உலகப் பொருளாதாரம், உலகப் போக்கு வரத்து போன்றவற்றில் இந்த தொற்று நோயின் தாக்கங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பதக்கப் பட்டியல் நாள்தோறும் வெளிவிடப்படுவது போல் ஒவ்வொரு நாட்டிலும் பாதிக்கப்பட்டவரக்ளினதும் கொல்லப் பட்டவர்களினதும் பட்டியல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சீனாவின் தொற்று நோயின் மையப்புள்ளியான வுஹான் நகரில் இருந்து பல அரசுறவியலாளர்களும் மாணவர்களும் வெளியேறியுள்ளனர். கிழக்கு ஐரோப்பாவின் போல்ரிக் பிராந்தியத்தில் உள்ள செய்தி வலைத்தளங்கள் ஐந்து இணையவெளித் திருடர்களால் ஊடுருவப்பட்டு லித்துவெனியாவில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு கொரோனா தொற்று நோய் பிடித்துள்ளதாக பொய்யான தகவல்கள் பதியப்பட்டன.


ஆட்சிமுறைமைத் தத்துவம்
கடந்த பத்து ஆண்டுகளாக சீனா தனது பொருளாதார வெற்றிக்கு அதன் ஆட்சிமுறைமை காரணம் எனப் பறைசாற்றி வருகின்றது. மற்ற நாடுகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுதந்திரத்தைப் பேணவும் சீனாவின் ஆட்சிமுறைமை உகந்தது என 2017இல் சீன அதிபர் அறிவித்திருந்தார். தொற்று நோய் பற்றிய அறிவும் செய்திகளும் மக்களிடையே பரப்பப்பட்டால்தான் அவர்கள் அது தொடர்பாக கவனமாக இருக்க முடியும். வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயற்படும் போது மட்டுமே அது சாத்தியம். ஆனால் சீன ஆட்சி முறைமை அதை அனுமதிப்பதில்லை என மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஐநா அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அதிபர் சீன அரசு காத்திரமாகவும் துரிதமாகவும் எடுத்த நடவடிக்கைகளால் தொற்று நோய் பரவும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.


நாடுகளிடையேயான உறவும் சமூகப் பிரச்சனையும்
சீனாவில் இருந்த தமது மாணவர்களை இந்தியா, பங்களாதேசம், இலங்கை போன்ற நாடுகள் அரச செலவில் தமது நாடுகளுக்கு திருப்பியழைத்தன. அதை சீனா தன்னை அவமானப் படுத்தும் செயலாகப் பார்த்தது. அதனால் சீனாவுடன் சிறந்த உறவைப் பேணும் பாக்கிஸ்த்தானும் கம்போடியாவும் தமது நாட்டு மாணவர்களை சீனாவிலே இருக்கும் படி பணித்தன. தம்மை பாக்கிஸ்த்தான் அரசு கைவிட்டதாக சீனாவில் உள்ள அதன மாணவர்கள் ஆத்திரப்பட்டனர். தமது அரசின் நடவடிக்கைகளை இந்தியாவுடன் எதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பாக்கிஸ்த்தானியர்கள் வழக்கமாகக் கொண்டவர்கள். பாக்கிஸ்த்தான் மாணவர்கள் தமது அரசு தம்மைக் கைவிட்டதாக குற்றம் சாட்டியும் இந்தியாவின் செயலுடன் ஒப்பிட்டும் காணிலிகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனார்.

இறைமைக்கு உட்பட்ட ஹொங் கொங் தீவு
சீனாவின் இறைமைக்கு உட்பட்ட ஹொங் கொங் தீவில் உள்ள ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. இரு ஆட்சி முறைமைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைக்க சீன பொதுவுடமைக்கட்சியினர் முயல்கின்றனர். அதற்கு ஹொங் கொங்கில் கடும் எதிர்ப்பு நிலவுகின்றது. சீனாவின் பிடியை தளர்த்த ஹொங் கொங்கில் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் வேளையில் சீனாவில் கொரோனா நச்சுக்கிருமிப் பிரச்சனை உருவானது. மற்ற நாடுகளைப்போல் சீனவிற்கும் ஹொங் கொங்கிற்கும் இடையில் மக்கள் போக்குவரத்து தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. ஆனால் சீனாவின் கைப்பாவையாக இருக்கும் ஹொங் கொங் முதல்வர் சீனாவுடனான எல்லையை மூட மறுத்து வருகின்றார்.

இறைமைக்கு அப்பாற்பட்ட தைவான் தீவு
தனக்கு என ஒரு தனியான ஆட்சிமுறைமையைக் கொண்ட தாய்வான் தீவை சீனா தன்னுடைய நாட்டின் ஒரு மாகாணம் என அடம்பிடிக்கின்றது. சீனாவுடன் மற்ற நாடுகள் அரசுறவுகளைப் பேணுவதை கடுமையாக எதிர்க்கின்றது. எந்த ஓர் உலக அமைப்பிலும் தைவான் உறுப்புரிமை பெறாமல் தடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரோனா நச்சுக் கிருமி தொடர்பாக நடத்திய கூட்டத்தில் தைவானும் பங்கு பெற முயன்றது. ஆனால் அதை சீனா தடுத்துவிட்டது. தைவானின் கோரிக்கையை ஆட்சேபிக்கும் செயலாக பல போர் விமானங்களை சீனா தைவான் வான்பரப்பினுள் பறக்க விட்டது.

உயர்தரத் தலைவராக தன்னை நினைப்பவர்
சீன அதிபர் ஜீ ஜின்பிங் தன்னை ஒரு மிகவும் உயர்தரமான (ultra-competent) தலைவராக சீனாவில் நிலை நிறுத்தியுள்ளார். தனது அதிகாரத்தையும் அவருக்கு முன்பு உள்ள தலைவர்களிலும் பார்க்க மிக அதிகரித்துள்ளார். சீனாவிற்கு உள்ளும் வெளியும் அவர் தொற்று நோய்ப் பிரச்சனையை சரியாகக் கையாளவில்லை என்றவகையில் செய்திகள் பரப்பப்படுகின்றன. மேற்கு நாட்டு ஊடகங்களில் நாளொரு ஆய்வுக் கட்டுரையும் பொழுதொரு செய்தியுமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெப்ரவரி 4-ம் திகதி கலிபோர்ணியாவின் சந்தியாகோவில் அமெரிக்காவிற்கான சீனத்தூதுவர் அங்கு வாழும் சீனர்களைச் சந்தித்த போது ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என ஒரு மாணவர் குரல் எழுப்பினார். இது போன்ற குரல்கள் சீனாவில் பல இணையத் தளங்களிலும் எழுந்துள்ளன. ஜீ ஜின்பிங்கின் ஆட்சியில் மிக மோசமான சுகாதார நெருக்கடியாகவும் பொருளாதாரச் சவாலாகவும் கொரோனா நச்சுக்கிருமிப் பிரச்சனை இருக்கின்றது.

பேச்சுரிமையின்மையால் பரவிய தொற்று நோய்
கொரோணாநச்சுக்கிருமியால் கொடிய நோய் உருவாகியுள்ளதாக வுஹான் நகர முதல்வர் சீன நடுவண் அரசின் அதிகாரிகளுக்கு அறிவித்த போது அவர் தனது நகர மக்களை தொற்று நோய் தொடர்பாக எச்சரிக்கை விடுக்காமல் தடுக்கப்பட்டமையால் தொற்று நோய் பரவுவது தடுக்க முடியாமல் போனது. தொற்று நோயை முதலில் அறிந்த மருத்துவர் அது தொடர்பான செய்தியை தனது மருத்துவ நணர்களுடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதால் அவர் காவற்றுறையினரால் விசாரிக்கப்பட்டார். அத்துடன் தனிமைப் படுத்தப்பட்டார். இறுதியில் அவரே அந்த நோய்க்குப்பலியானார்.

அரசின் இரும்புபிடி
சீனாவின் அரசு அதிகாரமிக்கது. பொதுவுடமை கட்சிய்க்கு மட்டுமே பொறுப்புக் கூறும் நிலைமை அங்கு உள்ளது. தொற்று நோயால் பீடிக்கப் பட்டிருக்கலாம் என யார் மீதாவது ஐயம் இருந்தால் அவர் உடனடியாக சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றார். தொற்று நோய் இல்லாமல் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தொற்று நோயால் பலர் பீடிக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. சீன அரசு தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி உல்லாச விடுதிகளை தொற்று நோய்க்கான மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது.

ஐம்பதாயிரம் பேர் கொழுத்தப்பட்டனராம்
சீனாவில் இருந்து வெளியேறி மேற்கு நாடுகளில் வசித்து வரும் சீனாவைச் சேர்ந்த பல பில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட குவோ வென்குய் சீனாவில் பதைனைந்து இலட்சம் பேருக்கு மேற்பட்டவர்களை கொரோனா தொற்று நோய் பிடித்துள்ளதாகவும் அந்த நோயால் இறந்த ஐம்பதினாயிரம் பேரை சீனா கொழுத்தி எரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐயங்கள் அதிகமானால் ஊகங்கள் நிறையும்
கொரோனாநச்சுக் கிருமியின் உருவாக்க தொடர்பாக பல ஐயங்கள் நிலவும் போது பல ஊகங்களும் நிலவுகின்றன. முதலில் அது கடலுணவில் இருந்து பரவியது எனச் சொல்லப்பட்டது. பின்னர் அது பொகோலின் என்னும் ஒரு விலங்கின் இறைச்சியை உண்டதால் வந்தது எனச் சொல்லப்படுகின்றது. இவை ஐயங்கள் மட்டுமே எந்த ஒரு உலக உயர்தரப் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் கூட இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால் சீனா உயிரியல் படைக்கலன்களாக உருவாக்கிய தொற்று நோய்க்கிருமியாகிய கொரோனா தவறுதலாக நடந்த குழாய் வெடிப்பால் பரவத் தொடங்கி விட்டது எனவும் செய்திகள் வெளிவருகின்றன.


பொருளாதாரப் பாதிப்பு
சீனப் புத்தாண்டுக்காக பல உற்பத்தி நிறுவனங்கள் இரண்டு வாரங்கள் மூடப்படுவது வழக்கம். தொற்று நோயால் இந்த ஆண்டு அது நான்கு வாரங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உள்நாட்டுப் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. உலகெங்கும் நடக்கவிருந்த பல பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான உலக மாநாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்கு வரத்து குறைந்துள்ளதாலும் சீனாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிகள் பாதிக்கப் பட்டுள்ளதாலும் சீனாவில் உற்பத்தி குறைந்துள்ளது. இவற்றால் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. அதன் விளைவாக எரிபொருள் விலை குறைந்துள்ளது. இரசியாவின் டாஸ் செய்தி நிறுவனம் இரசியப் பொருளாதாரத்தில் சிறிய பாதிப்பு சீனத் தொற்று நோயால் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. வமையாக ஐயாயிரம் டொலர் போகும் உல்லாச விடுதி அறை வாடகை இப்போது ஆயிரம் டொலர்களாக உள்ளது. சீனத் தொற்று நோயால் உலக விநியோக வலைப்பின்னலில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சீனத் தொற்று நோயால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அளவீடு செய்ய முடியாமல் பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும் திண்றுகின்றனர். சீனாவின் பொருளாதாரம் 2020இல் ஆறு விழுக்காடு வளரும் என பன்னாட்டு நாணய நிதியம் முன்பு எதிர்வு கூறியிருந்தது. ஆனால் S&P என்ற பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தொற்று நோயால் அது ஐந்து விழுக்காடாக குறையும் எனச் சொல்கின்றது. 2003-ம் ஆண்டு சார்ஸ் நச்சுக்கிருமி சீனாவைத் தாக்கிய போது உலகப் பொருளாதார உற்பத்தில் சீனாவின் பங்கு 4% மட்டுமே ஆனால் தற்போது அது 17%ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் அப்படிப் பாதிக்கப்படும் போது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 0.4% முதல் 0.5% வரை குறைக்கப்படும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக உலக உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் சீனப் பொருளாதார நிபுணர்களின் கருத்து வேறு விதமாக உள்ளது. சீனாவின் Chinese Academy of Social Sciences (CASS)இன் பொருளாதார நிபுணர்கள் சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த இலக்கை 2020இல் எட்டும் என எதிர்வு கூறியுள்ளனர்.

கொரோணா தொற்று நோய் பரவும் வேகம் தணிந்துள்ளது என்பது மட்டுமே ஆறுதலான செய்தியாக இருக்கின்றது.




Monday, 10 February 2020

விமானம் தாங்கிக்கப்பல்களும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும்

அமெரிக்கா 10 விமானம் தாங்கிக் கப்பல்களையும் சீனாவும் இந்தியாவும் பிரித்தானியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில், இரசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன. சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. 2030-ம் ஆண்டு சீனா ஐந்து அல்லது ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவிடம் நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் பத்து உள்ளன. அவற்றுடன் அடுத்த தலைமுறை  ஃபோர்ட் வகை பெருவிமானந்தாங்கிகளின் (Ford Class super carriers) முதல் உற்பத்தியான USS Gerald R Ford(CVN 79)ஐ 2017இல் 13பில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணித்து முடித்து தொடர்ந்து பரிசோதித்து வருகின்றது. இரண்டாவது உற்பத்தியான USS John F Kennedy (CVN 79) 2019 டிசம்பரில் நிர்மானித்து முடிக்கப்பட்டது. 2058-ம் ஆண்டு அமெரிக்கா பத்து ஃபோர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா கொண்டிருக்கும்.

விமானம் தாங்கிகளில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம்
ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை விமானந்தாங்கிக் கப்பல்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் மட்டுமே பாவிக்கின்றன. அமெரிக்காவின் படைத்துறை வலிமையிலும் அதன் உலக ஆதிக்கத்திலும் அதன் விமானம் தாங்கிக் கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் பாவிக்கும்  F-35B Lightning II என அழைக்கப்படும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் எதிரியின் எதிர்கால அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை.  அமெரிக்காவின் கடலாதிக்கத்தைத் தொடர்ந்து பேணுவதற்காக அவை உருவாக்கப்பட்டன. எதிரியின் எந்த வான் பாதுகாப்பையும் ஊடறுத்துக் கொண்டு சென்று தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாகத் திரும்பக் கூடிய வகையில் அவை உருவாக்கப்பட்டன. அவை மிகக் குறுகிய தூரம் மட்டும் ஓடி கப்பலில் இருந்து பறந்து செல்லும். தரையிறங்கும் போது உலங்கு வானூர்தி போல் ஓடு பாதை தேவையில்லாமல் இறங்கும். எதிரியின் ரடார்களுக்கு இலகுவில் புலப்படாதவை F-35B.


ஒலியிலும் ஐந்து மடங்கிற்கும் அதிக வேகம்
அமெரிக்காவின் பெருவிமானம் தாங்கிக் கப்பல்களையும் அவற்றில் உள்ள ரடார்களால் இனம் காணக் கடினமான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் சீனாவினதும் இரசியாவினதும் படைத்துறையினர் கருத்தில் கொண்டனர். இரசியா 2020இலும் சீனா 2030இலும் தமது படைத்துறையை உலகின் முதற்றரமானதாக்கும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டிச் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்க விமானம் தாங்கிகளை அவற்றின் பரிவாரங்களாக வரும் நாசகாரிகளையும் அவற்றில் உள்ளவிமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் தாண்டிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கின. சீனா தனது முதலாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2017இல் பரிசோதித்தது. அதனால் 2018-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை ஹைப்ப்ர் சோனிக் ஏவுகணைகள் செல்லுபடியற்றதாக்கி விட்டன என படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறப்பவற்றை சுப்பர்சோனிக் என்றும் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவற்றை ஹைப்பர்சோனிக் என்றும் அழைப்பர். 2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி இரசியாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் துறையில் அமெரிக்காவை மிஞ்சிய நிலையில் இருந்தன. அமெரிக்காவின் தாட் மற்றும் பேற்றீயோற்றிக் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் சீனாவினதும் இரசியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க முடியாத நிலை இருக்கின்றன. சீனா உருவாக்கியுள்ள  hypersonic glide vehicle (HGV) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையினது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் அதை ஏவப்பட்டவரால் அதன் திசையை மாற்ற முடியும். அதனால் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்ற அசையும் இலக்குகளை அவற்றால் துல்லியமாகத் தாக்க முடியும். அமெரிக்கா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இயக்க செயற்கை நுண்ணறிவைப் (artificial intelligence) பாவிக்கவுள்ளது.  ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றால் மட்டுமே துரிதமாக இயக்கி துல்லியமாக இலக்கைத் தாக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  

ஒலியின் வேகமும் ஒளியின் வேகமும்
ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து தப்புவதற்கு ஒளியின் வேகத்தில் லேசர் படைக்கலன்கள் மட்டுமே பயன்படும். லேசர் கதிர்கள் அது வீசப்படும் இலக்கை ஒளியின் வேகத்தில்  பாய்ந்து தாக்கி அழிக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் ஒளியிலும் பார்க்க வேகமாக இயங்கக் கூடியது ஒன்றுமில்லை. லேசர் கதிர்களை உருவாக்கி வீசுவதற்கு மிக அதிக மின்சாரம் தேவை. கடுமையான தூசு, மூடுபனி போன்றவை லேசர் கதிர்களின் செயற்பாட்டிற்கு இடையூறாகும். இவற்றைத் தவிர்க்க அமெரிக்கா விண்வெளிப்படையை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் உள்ள செய்மதிகளால் எதிரியின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இனம் காண முடியும். செய்மதியில் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து லேசர் படைக்கலன்கள் செயற்படும்.

லேசர் கதிர் உற்பத்திப் பிரச்சனை
லேசர் கதிர்களை உற்பத்தி செய்வதற்கு அதிக அளவிலான மின்சாரம் தேவை. சாதாரண விமானம் தாங்கிக் கப்பல்களில் இடப்பிரச்சனை பெரும் பிரச்சனையாகும் ஆனால் ஃபோர்ட் வகை பெருவிமானந்தாங்கிகளால் (Ford Class super carriers) அப்பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும். விமானம் தாங்கியில் லேசர் கதிர்களை உருவாக்கத் தேவையான மின்சாரத்தை பெருமளவில் உற்பத்தி செய்துமின்தேக்கிகளில் (capacitor) சேமித்து வைக்க வேண்டும். தொடர்ச்சியாக அல்லது சமாந்தரமாக இணைக்கப்பட்ட பல மின்தேக்கிகள் அதற்கு தேவைப்படும். அவற்றிற்கு பெருமளவு இடம் தேவைப்படும்.  ஃபோர்ட் வகை விமானம் தாங்கிகளில் அணுவலு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இரட்டை இயந்திரங்கள் உள்ளன. அவை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக விமானம் தாங்கிகளை கடலில் செயற்பட வைக்கும் எண்ணத்துடம் உருவாக்கப்பட்டவை.  அதனால் ஃபோர்ட் வகை விமானம் தாங்கிகள் லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அழிக்க முடியும்.

இந்தியாவின் காளி
இந்தியாவிடம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. மேலும் ஒரு கப்பலை உருவாக்கும் திட்டமும் இந்தியாவிடம் உள்ளது. தீபகற்பமான இந்தியாவின் 3214 கிலோ மீட்டர் நீளமான மேற்குக் கரையை பாக்கிஸ்த்தானிடமிருந்தும் 1822கிலோ மீட்டர் நீளமான கிழக்குக் கரையை சீனாவிடமிருந்தும் பாதுகாப்பதற்கு இந்தியாவிற்கு ஐந்து விமானம் தாங்கிக் கப்பல்கள் தேவை என சில படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். அவற்றை இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO)யும் Bhabha Atomic Research Centre (BARC)உம் இணைந்து இலத்திரன் அதிர்வுகளை வீசும் கருவிகளை உருவாக்கியுள்ளன. அதற்குப் பொருத்தமாக காளி எனப் பெயரும் சூட்டியுள்ளனர். Kilo Ampere Linear Injector என்பதன் முதலெழுத்துக்களே காளி என அழைக்கப்படுகின்றது. அது எதிரியின் ஏவுகணைகளை நோக்கி pulses of Relativistic electron beam இலத்திரன் அதிர்வுகளைக் கொண்ட கதிர்களை வீசும். லேசர் கதிர்கள் எதிரியின் இலக்கில் துளையிடும். ஆனால் இந்தியாவின் காளியின் கதிர்கள் எதிரியின் இலக்கில் படும் போது அவற்றின் இலத்திரனியல் செயற்பாட்டை முற்றாக அழிக்கும். அதனால் ஏவுகணை செயலிழந்து போகும். எதிரியின் விமானங்கள் மற்றும் பல எண்ணிக்கையில் வரும் ஆளில்லா விமானங்களையும் காளி இடைமறித்து அழிக்கக் கூடியது. KALI 80, KALI 200, KALI 1000, KALI 5000 and KALI 10000 என இந்திய தொடர்ச்சியாக காளியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருந்தால் இந்தியாவால் நுண்ணலைக் கதிர்களை (Microwave) உற்பத்தி செய்யும் படைக்கலன்களை விரைவில் உருவாக்க முடியும். ஒளியின் வேகத்தில் பாயும் நுண்ணலைக் கதிர்கள் மூலம் எதிரியின் ஏவுகணைகளையும் விமானங்களையும் இடையில் வைத்தே கருக்கி அழிக்க முடியும்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளிற்கும் அவற்றை எதிர்க்கும் ஒளியின் வேகக் கதிர்களை உருவாக்கிகளிற்கும் இடையில் படைத்துறைப் போட்டி தொடரும்

Monday, 3 February 2020

ஐரோப்பிய நாடுகளின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்


பிரித்தானியாவும் ஜேர்மனியும் அமெரிக்காவிடமிருந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ வாங்கியுள்ளன. அதிலும் சிறந்த F22 போர்விமானங்களை அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விற்பச்னை செய்வதில்லை. பிரான்ஸ் தனது படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையது. இரசியா எஸ்யூ-35, எஸ்யூ-57 ஆகிய ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்கின்றது. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவீடன் ஆகிய சிறந்த போர்விமானங்களை உற்பத்தி செய்யக் கூடிய நாடுகள் தமது ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களைத் தாமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளன.

பல தலைமுறைகள் கண்ட விமான உற்பத்தி
ஒலியிலும் குறைந்த வேகத்தில் பறந்த போர் விமானங்கள் முதலாம் தலைமுறைப் போர்விமானங்களாக 1940 – 1950 வரை இருந்தன. இவற்றில் கதுவிகள் (ரடார்கள்) இருந்திருக்கவில்லை. அவற்றுக்கு என தற்பாதுகாப்பு முறைமையும் இருந்திருக்கவில்லை. அதையடுத்து ஒலியின் வேகத்தில் பறக்கக் கூடிய இரண்டாம் தலைமுறைப் போர் விமானங்கள் 1960கள் வரை இருந்தன. அவற்றில் வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை உணரக்கூடிய கதுவிகள் உள்ளடக்கப்பட்டன. சிறந்த வளியியக்கவசைவியல் (aerodynamics) அவற்றின் முக்கிய அமசமாகும். அதனால் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடியவையாக அமைந்தன. மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்கள் 1960களில் உருவாக்கப்பட்டன. சிறந்த பறப்புத் திறனும் திருப்பு திறனும் கொண்டவையாக அவை இருந்தன. அமெரிக்காவின் F-4 இரசியாவின் மிக்-23 ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நான்காம் தலைமுறைப்போர் விமானங்கள் ஒலியிலும் அதிக வேகமாகப் பறக்கக் கூடியவையாகவும் வானில் இருந்து வானிற்கும் வானிலிருந்து தரைக்கும் குண்டுகளைப் பொழியக் கூடியவையாக அமைந்தன. MiG-29, Su-27, F/A-18, F-15, F-16, மிராஜ்-2000 ஆகிய நான்காம் தலைமுறைப் போர் விமானங்கள் 1970களில் இருந்து பாவனைக்கு வந்தன அவற்றின் மேம்படுத்தப் பட்ட வடிவங்கள் இன்றும் பாவனையில் இருந்து போர் முனையில் சாகசங்கள் செய்கின்றன. நான்காம் தலைமுறைப் போர்விமானங்கல் தொடர்ந்து மேம்படுத்தப் பட்டுக்கொண்டிருந்ததால் நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்கள் என அவை பெயரிடப்பட்டன. அவற்றில் ரடாருக்குப் புலப்படாத தன்மை உள்ளடக்கப்பட்டன. அதிக அளவு படைக்கலன்களை அவை தாங்கிச் செல்லக் கூடியவையாகவும் அமைந்துள்ளன. அமெரிக்காவின் F/A-18E/F Super Hornet ஐரோப்பாவின் Eurofighter Typhoon, சுவீடனின் Saab JAS 39 Gripen பிரான்ஸின் Dassault Rafale ஆகியவை முன்னணி நான்கரையாம் தலைமுறைப் போர் விமானங்களாகும்.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்
ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளையும் மிகப் புதிய ரகக் கணனிகளையும் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக் கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை. இலத்திரனியலில் இவை உச்சத்தைத் தொட்டுள்ளன. இணையவெளிப் போர் கூட இவற்றால் செய்ய முடியும். இதில் உள்ள கணினிகள் எதிரியின் கணினித் தொகுதிகளைச் செயலிழக்கச் செய்யும். அமெரிக்கா 2007-ம் ஆண்டு தனது F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை சேவையில் ஈடுபடுத்தியது. அதன் தொழில்நுட்பங்களை சீனா இணையவெளியூடாக திருடியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. அதன் மூலம் சீனா தனது J-20 போர்விமானங்களை உருவாக்கியது. விமான எந்திர உற்பத்தியில் பின்தங்கியுள்ள சீனாவால் அமெரிக்காவின் எந்திரங்களைப் பிரதி பண்ண முடியவில்லை. J-20 விமானங்களின் எந்திரங்களின் இரைச்சல் அவற்றைப் புலப்படா விமானம் இல்லை என விவாதிக்க வைக்கின்றது. இரசியாவின் SU-37 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அமெரிக்காவின் F-22 மட்டுமே பரவலாக போர்முனையில் வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அமெரிக்காவின் F-35 இலத்திரனியலில் மிகவும் மேம்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். வான்படை, கடற்படை, கடல்சார் படை ஆகிய முப்படைகளிலும் பாவிக்கக் கூடிய மூன்று வகையான F-35 போர்விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விமானம்தாங்கிக் கப்பலில் பாவிக்கப்படும் F-35 மிகக்குறுகிய தூரம் ஓடி வானில் எழும்பவும் உலங்குவானூர்தி போல் செங்குத்தாக தரையிறங்கவும் வல்லன.

பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறை விமானம்
2018-ம் ஆண்டு பிரித்தானியா தனது Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் மாதிரி அமைப்பைக் காட்சிப்படுத்தியது. 2020-ம் ஆண்டு இதற்கான முழுத் திட்ட வரைபும் செய்து முடிப்பதற்கென்று இருபது பில்லியன் பவுணை பிரித்தானிய அரசு ஒதுக்கியுள்ளது. மொத்த உற்பத்திச் செலவு மிக மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இத்தாலியையும் சுவீடனையும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சுவீடனின் விமான உற்பத்தித் துறை சிறந்த இலத்திரனியல் போர்முறைமைகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளதால் அதன் அனுபவம் சிறந்த பங்களிப்பைச் செய்யக் கூடும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35இன் உற்பத்தியில் கணினி முறைமைகளின் குறியீடுகளில் பெரும்பாலானவற்றை பிரித்தானியர்களே எழுதினர். அந்த அனுபவம் மேலும் விருத்திச் செய்யப்பட்டு ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தில் பாவிக்கப்படும். Tempest(சூறாவளி) என்ற ஆறம்தலைமுறைப் போர் விமானத்தின் எந்திரத்தை பிரித்தானியாவின் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டது. Tempest(சூறாவளி) போர் விமானம் 20300-ம் ஆண்டுதான் முழுமையான பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்
முழுமையாக எதிரியால் புலப்படாத தன்மை, ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பறக்கும் திறன, துல்லியமாகத் தாக்குதல், செயற்கை விவேகத்தின் மூலம் மிகத்துரிதமான செயற்பாடு, விமானியில்லாமலும் விமானியாலும் இயங்கும் திறன், லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களைக் கொண்டிருத்தல், எதிரியின் எந்த வான் பாதுகாப்பையும் ஊடறுத்தல் ஆகியவை ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின் முக்கிய அம்சங்களாகும். ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் தமது உடன் பறப்பு விமானங்களாக பல ஆளில்லா போர் விமானங்களை தாமாகவே இயக்கிக் கொண்டு பறப்பவையாக இருக்கும்.

பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின்
பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்ய முயல்கின்றன. பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பல்களும் பாவிக்கக் கூடிய போர் விமானங்களையும் இணைத்து உற்பத்தி செய்ய விரும்புகின்றன. ஆனால் ஜேர்மனிக்கு அது தேவையற்ற ஒன்றாகும். மிராஜ், டச்டோல்ஃப் ஆகிய விமானங்களை உற்பத்தி செய்த Dassault Aviation நிறுவனமும் ஜேர்மனியின் Airbus நிறுவனமும் இந்த உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்க விருக்கின்றன. ஜேர்மனியின் Airbus இயந்திரத்தை உற்பத்தி செய்யும்.

ஒன்றுபடுதல் அவசியம்
இரசியாவின் படைத் தொழில் நுட்ப வளர்சியையும் இரசியாவின் விரிவாக்க நோக்கத்தையும் கருத்தில் கொண்டால் மேற்கு ஐரோபிய நாடுகளுக்கு ஆறாம் தலைமுறைப் போர்விமானம் அவசியமானதாகும். பிரித்தானியாவும் பினான்ஸும் தமது வல்லரசு நிலையைப் பேணுவதும் அவசியம். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரச்சூழல் அவை தனித்தனியே உற்பத்தி செய்வதிலும் பார்க்க ஒன்று அட்டு உற்பத்தி செய்தல் நன்று.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...