Monday, 13 November 2017

கொரியத் தீபகற்பத்தின் அதிசயங்களும் டிரம்பின் தடுமாற்றங்களும்

அமெரிக்கப் படைத்துறையின் இணைத் தளபது ஜெனரல் ஜோசெப் டன்போர்ட் ஹவாயிலுள்ள அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தில் வைத்து கொரியத் தளபதி ஜியோங் கியோங் டூவையும் ஜப்பானியத் தளபதி அட்மிரல் கட்சுடொஷி கவனோவையும் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அமெரிக்கப் படைத்துறைச் செயலர் ஜேம்ஸ் மத்தீஸ் வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஜப்பானுக்கும் தென் கொரியாவிற்கும் மேற்கொண்ட பயணங்களை அடுத்து அரங்கேறியுள்ளது.  ஜப்பானும் தென் கொரியாவுக் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகின்றன.

கொலையாளியுடன் கை கோர்க்கும் அதிசயம்
கடந்த நூற்றாண்டில் கொரியர்களை இனக்கொலை செய்த ஜப்பானும் தென் கொரியாவும் அரசுறவியல் அடிப்படையில் மேலும் நெருக்கமடைகின்றமை ஒரு அரசுறவியல் அதியசமாகும். இந்த நெருக்கத்தின் பின்னணியில் இருந்து இணைப்பது ஐக்கிய அமெரிக்கா. இணைய வேண்டிய தேவையை ஏற்படுத்தியது வட கொரியா. வட கொரியாவும் தென் கொரியாவும் ஒரே இனம். ஒரே மொழி பேசுபவர்கள். ஒரே கலாச்சார்த்தையும் கொண்டவர்கள். இரண்டாம் உலகப் போரில் கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியை இரசியாவும் தென் பகுதியை அமெரிக்காவும் ஜப்பானிடமிருந்து அபகரித்துக் கொண்டன.  பொதுவுடமைவாதப் பரம்பல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஏற்பட்ட போட்டியின் விளைவாக 1950இல் கொரியப் போர் உருவானது. மூன்றாண்டுகள் நடந்த போரின் முடிவில் கொரியா இரண்டு நாடுகளாகியது. வட கொரியா பொதுவுடமைவாத நாடாகவும் தென் கொரியா சந்தைப் பொருளாதார நாடாகவும் மாற்றப்பட்டன. கொரியர்கள் ஜப்பானியர்களை அவர்கள் தம்மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களுக்காக வெறுப்பவர்கள். வட கொரியர்களும் அவ்வாறே. வட கொரியாவும் ஜப்பானும் ஏதாவது விளையாட்டுப் போட்டியில் மோதிக்கொண்டால் வட கொரியா வெற்றி பெற வேண்டும் என தென் கொரியர்கள் விரும்புவார்கள். அது போன்ற நிலைப்பாட்டையே வட கொரியர்கள் தென் கொரியாவும் ஜப்பானும் மோதிக் கொண்டால் எடுப்பார்கள். இரண்டு கொரியாக்களும் ஒன்றுடன் ஒன்று நட்பை வளர்க்க வேண்டும் சீனாவுடனான  நட்பை மேம்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடைவர். சீனா படைத்துறையிலும் மற்றும் பொருளாதாரத் துறையிலும் அபரிமிதமான வளர்ச்சியடையும் போது அமெரிக்காவால் தென் கொரியாவைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என கொரியர்கள் மத்தியில் அச்சமுண்டு. இதை அதிபர் டொனால்ட் டிரமப் வட கொரியாவின் அச்சுறுத்தலால் மாற்றியமைக்க முயல்கின்றார்.

பிரிந்தவர் கூடுதல் முறையோ
வட கொரியா தென் கொரியாவை மீளவும் தன்னுடன் இணைக்கும் முயற்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக அது தன் படைவலுவை பெருக்கிக் கொண்டே போகின்றது. அதன் விளைவாக அது அணுக் குண்டுகளையும் தொலைதூர ஏவுகணைகளையும் பரீட்சித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கரிசனை கொண்டுள்ளன. இந்த முயற்ச்சியில் வட கொரியா தனது பொருளாதார வளர்ச்சியில் கோட்டை விட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். சீனாவைப் போல் ஒரு சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி வளரும் முயற்ச்சியை அது எடுக்கவில்லை. அப்படி ஒன்று எடுத்தால் அந்நியர்களை நாட்டுக்குள் வர அனுமதிக்க வேண்டும். அது கிம் ஜொங் குடும்ப ஆட்சிக்கு ஆபத்தாகலாம் என்ற கரிசனை அதைத் தடுப்பதாகக் கொள்ளலாம்.

ஜப்பான் பக்குவம்
தென் கொரியா அமெரிக்காவிடமிருந்து மேலும் வலிமை மிக்க ஏவுகணைகளை வாங்குவதுடன் தானும் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் ஐக்கிய அமெரிக்கா தென் கொரியாவிற்கு ஏவுகணைத் தொழில் நுட்பத்தை வழங்கும் போது தென் கொரியா தாயாரிக்கும் ஏவுகணைகள் 110 மைல்களுக்கு மேல் பாயக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனை ஜப்பானுக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் விரோதத்தை மனதில் கொண்டு விதிக்கப்பட்டிருக்கலாம். ஜப்பானைன் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்த அடிப்படையிலான கடப்பாடு ஐக்கிய அமெரிக்காவிற்கு உண்டு. 2001-ம் ஆண்டு தென் கொரியாவின் ஏவுகணைகளின் பாய்யச்சல் தூரம் வட கொரியாவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு 185 மைல்களாக அதிகரிக்கப்பட்டது. ஏவுகணைகள் எடுத்துச் செல்லும் குண்டுகளின் எடை 1100இறாத்தலாக மட்டுப் படுத்தப்பட்டது. பின்னர் 500மைல்களாக அதிகரிக்கப்பட்டது. அதனால் வட கொரியாவின் எந்தப் பகுதியையும் தாக்கக் கூடியது. தற்போது தென் கொரிய ஏவுகணைகள் 2200இறாத்தல் எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் அனுமதியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. டிரம்ப் 2017 நவம்பர் இரண்டாம் வாரத்தில் தென் கொரியாவிற்குச் செய்யும் பயணத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என உறுதியாக நம்பப்படுகின்றது. தென் கொரியா அமெரிக்காவின் உதவியின்றி வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னையும் அவரது துணைவர்களையும் அழிக்கக் கூடிய வகையில் ஏவுகணைகளை உருவாக்க முனைகின்றது. அப்படிப் பட்ட ஏவுகணைகள் கொலைச் சங்கிலிக் கோட்பாட்டிற்கு ஏற்ப இயங்கக் கூடியவையாக இருக்கும்.

வலிமையடையும் தென் கொரியா
அமெரிக்கா தென் கொரியாவில்  28000 படையினரை வைத்துள்ளது. அத்துடன் தென் கொரியாவை நோக்கி தனது மொத்த பதினொரு விமானந்தாங்கிக் கப்பலில் மூன்றை அனுப்பியுள்ளது. இன்னும் நான்கு விமானம் தாங்கிக் கப்பல்கள் கொரியத் தீபகற்பம் நோக்கிச் செல்லவுள்ளன.  மேலும் பல அணுப் படைக்கலன்கள் தென் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு வல்லரசு நாட்டிற்கு அண்மையாக இன்னொரு வல்லரசு பெரும் படைக்கலன்களை நகர்த்துவது அரசுறவியலில் வியக்கத்தக்க ஒன்றாகும்

டிரம்பின் மன மாற்றங்கள்
தென் கொரியாவின் பாராளமன்றமான தேசிய சபையில் உரையாற்றிய டிரம்ப் எங்களை வட கொரியா குறைத்து எடை போடவும் கூடாது எம்மைச் சீண்டிப் பார்க்கவும் கூடாது என்றார். மேலும் டிரம்ப் தனது உரையில் தெரிவித்தது: வட கொரிய ஆட்சியாளர்கள் இருண்ட கனவில் வாழ்கின்றார்கள்; அவர்கள் உருவாக்கும் படைக்கலன்கள் அவர்களைப் பாதுகாப்பதற்கு மாறாக அவர்களை பாரிய ஆபத்துக்கு உள்ளாக்குகின்றது; உலகம் வட கொரியாவைத் தனிமைப் படுத்த வேண்டும்; அமெரிக்க நகரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை நாம் அனுமதிக்கப் போவதில்லை; ஓரு அயோக்கிய அரசு உலகை அச்சுறுத்துவதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; மோதல்களை அமெரிக்கா தேடிப்போவதில்லை ஆனால் வந்த மோதல்களை அது விட்டு வைப்பதுமில்லை;
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சும்மாவே சீறிப்பாய்பவர். அவர் தென் கொரியப் பாரளமன்றத்தில் வீரம் தெறிக்கும் உரையை ஆற்றினாலும் அது போருக்கான அறைகூவல் போல் இருக்கவில்லை. மாறாக 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடந்த கொரியப் போரை நினைவு கூர்ந்து மீண்டும் ஒரு இரத்தக் களரி இந்த மண்ணில் நடக்கக் கூடாது என்றார். தென் கொரியத் தலைநகர் சியோலில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்த கொரியர்கள் டிரம்ப் இங்கு வராதே! நீ வாய் திறக்கும் போதெல்லாம் போர் என்கின்றாய் என்ற பெரிய பதாகைகளுடன் நின்றார்கள். அதேவேளை தென் கொரியப் பழமைவாதிகள் அமெரிக்காவினதும் தென் கொரியாவினதும் தேசியக் கொடிகளைத் தாங்கியவண்ணம் வரவேற்கவும் செய்தார்கள். அவர்களின் கைகளில் இருந்த பதாகைகளில் நாம் டிரம்பை நம்புகின்றோம் என்ற வாசகம் காணப்பட்டது.

மலைக் கோவில் வாசலில்
தென் கொரியாவின் வலு அதன் பொருளாதாரம். ஆசியாவில் வளர்ச்சியடைந்த இரு பொருளாதரங்கள் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டுமே. தென் கொரியாவின் பொருளாதாரம் நிலை கொண்டிருப்பது அதன் தலைநகர் சியோலில். அந்தத் தலைநகரம் வட கொரியாவின் ஆட்டிலெறி வீச்சுக்குள் உள்ளமைதான் ஒரு போரை தென் கொரியர்களை விரும்பாமல் வைத்திருக்கின்றது. வட கொரியாவின் வலு அதன் படத்துறை. உலகின் ஐந்தாவது பெரிய படைத்துறையை அது கொண்டிருக்கின்றது. அதன் அடுத்த வலு வட கொரியாவில் உள்ள மலைத் தொடர்கள். கொரியர்கள் தெய்வங்களாக மதிக்கும் மலைத் தொடர்களுக்கு அடியில் வட கொரியாவின் படைவலு மறைத்து வைக்கப் பட்டுள்ளது. படைக்கல உற்பத்தி நிலையங்கள், படையணிகள், விமான ஓடுபாதைகள், படைக்கலக் களஞ்சியங்கள் பல மலைத்தொடர்களுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் இருப்பிடங்களை இனம் காண்டு சிரமம். அவற்றை அழிப்பது அதிலும் சிரமம்அதனால்தான் வட கொரிய அதிபர் துணிச்சலுடன் செயற்படுகின்றார்.

வாலாட்ட முடியாத சிஐஏ
வட கொரியாவின் மூன்று தலைமுறை ஆட்சியாளர்கள் தமது நாட்டுக்குள் அமெரிக்க உளவுத்துறை வாலாட்டாமல் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். இதனால் பல பொருளாதாரப் பிரச்சனைகள் இருந்த போதிலும் மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாத நிலை இருக்கின்றது. இது வட கொரிய அதிபர் கிம் உங் ஜொன்னை அசைக்க முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வேறு ஆட்சி வேறு
முதலில் தென் கொரியா தனது பாதுகாப்பைத் தானே உறுதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த டிரம்ப் தென் கொரியா அமெரிக்கப் படைக்கலன்களை தனது நாட்டுக்குள் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகின்றார். டொனால்ட் டிரம்ப் இப்போது தனது நட்பு நாடுகளை சர்வாதிகாரியிடமிருந்து பாதுகாப்பேன் என முழங்குவதும் ஒரு அரசுறவியல் வியப்பாகும்

சீனாவும் தென் கொரியாவும்
தென் கொரியாவின் உயர் மலைகளில் அமெரிக்காவின் தாட் என்னும் ஏவுகணை என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்துவதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. சீனாவின் பெரும் நிலப்பரப்பில் நடப்பவற்றை தாட் முறைமையில் உள்ள கதுவிகள் உணர்ந்து கொள்ளும். தென் கொரியா மீது பொருளாதாரத் தடைகளையும் தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு எதிராக கொண்டு வந்தது. பின்னர் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை செய்து பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன. தாட் சீனாவிற்குப் பாதகமில்லாத வகையில் நிறுத்தும் உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

சீனாவில் டிரம்ப்
ஜப்பானுக்கும் தென் கொரியாவிற்கும் பயணம் செய்த டொனால்ட் டிரம்ப் அடுத்ததாக சீனாவிற்குச் சென்றார்.  அமெரிக்கா வட கொரியா தொடர்பாக சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பவை:
1. சீனா வட கொரியாவிற்கு 18மைல் நீளக் குழாயினூடாகச் செய்யும் எரிபொருள் ஏற்றுமதியைத் தற்காலிகமாகவேனும் நிறுத்த வேண்டும்
2. சீனாவில் உள்ள வட கொரிய வங்கிக் கணக்குகளை மூட வேண்டும்.
3. சீனாவில் வேலையும் வட கொரியர்களை சீனாவில் இருந்து வெளியேற்ற வேண்டும்
கிம் ஜொங் உன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான உறவு சரிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. வட கொரியாவிற்கு பொருளாதார நெருக்கடிகள் கொடுக்கும் நடவடிக்கைகளை சீனா எடுக்க விரும்பவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வட கொரியாவில் இருந்து புகலிடத் தஞ்சம் கோரி பெருமளவில் மக்கள் வருவதைச் சீனா விரும்பவில்லை. மற்றது வட கொரியா தென் கொரியாவில் ஆட்சி கவிழ்ந்து அங்கு தனக்கு எதிரானவர்கள் ஆட்சியில் அமருவதை சீனா விரும்பவில்லை.

சீனர்களும் கொரியர்களும் ஜப்பானியர்களும் தமக்கிடையே இருக்கும் வரலாற்று அடிப்படையிலான பகைமை நீக்கி ஒற்றுமையாகை அவர்களது பிராந்தியத்தை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த பகைமை தொடரும் வரை அங்கு அமெரிக்கா இலகுவாக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும். வட கொரியாவைப் பூச்சாண்டியாக்கி சீனவிற்கு அண்மையாக அமெரிக்கா படைக்கலன்களை குவிக்கின்றது.


Monday, 6 November 2017

கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும்

2014-ம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்வதா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடந்த பின்னர் உலகில் பல நாடுகளில் கருத்துக் கணிப்பு ஒரு தொற்று நோய் போலப் பல நாடுகளிற்குப் பரவியுள்ளது. குர்திஷ்த்தான், கட்டலோனியா அடுத்தது தமிழ் ஈழம் என்ற கூச்சலும் எழுந்துள்ளது. தமிழ் ஈழத்தில் ஒரு பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடத்துவதற்கான வாய்ப்புக்களே இல்லை என்பது உணரப்பட வில்லை. பங்களாதேச விடுதலையில் இருந்து தொடங்கிய அடுத்தது ஈழம் என்ற கூச்சல் இன்றும் தொடர்கின்றது. 2009இல் மெர்சல் ஆகியவர்கள் இப்போதுமெண்டல்” ஆகி தமிழர்களின் பேரம் பேசும் வலு தற்போது அதிகரித்துள்ளது என பிதற்றுகின்றனர். மாறிவரும் உலக சூழ்நிலை ஒரு நாளில் தமிழர்களுக்கு என ஒரு தனிநாட்டை உருவாக்கும் என அமெரிக்க வால் பிடியான பேராசிரியர் வில்சன் சொன்னது ஒரு நாள் நடக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலை அடுத்த ஐந்து ஆண்டுகளின் உருவாக வாய்ப்பே இல்லை.

தாலிகழற்றாத இத்தாலி
2017ஒக்டோபர் மாதம் இத்தாலியில் மட்டும் இரண்டு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் நடந்தன. ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் கருத்துக் கணிப்புக்கள் வெவ்வேறு விதமாக நடக்கின்றன. ஸ்கொட்லாந்தில் நடுவண் அரசின் அனுமதியுடனும் ஸ்கொட்லாந்துப் பிராந்தியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பிரிவினைக்கான ஆதரவு கிடைக்கவில்லை. பிரிவினைக்கான ஆதரவு கிடைத்திருந்தாலும் உடனடியாக நாடு பிளவு பட்டிருக்காது. நாட்டைப் பிரிப்பதற்கான சட்டம் இலண்டனில் உள்ள ஐக்கிய இராச்சியத்தின் பாராளமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு ஐக்கிய இராச்சிய அரசுத் தலைவரான எலிசபெத் ராணியில் கையொப்பத்தின் பின்னரே ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிந்திருக்கும். ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரிவினைக்கான கருத்துக் கணிப்புச் சட்டத்தின் படி ஸ்கொட்லாந்தில் நிரந்தரமாக வாழ்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஸ்கொட்லாந்திற்கு வெளியே வாழும் ஸ்கொட்லாந்தியர்கள் வாக்களிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து ஸ்கொட்லாந்தில் புகலிடத் தஞ்சம் கோரி வாழ்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐக்கிய இராச்சியம் உதட்டில் வேறு உள்ளத்தில் வேறு
ஸ்கொட்லாந்து கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஆங்கிலேயர்கள் தமக்கே உரிய பாணியில் நயவஞ்சக முகத்திற்கு கனவான் முகமூடிதரித்துக் கையாண்டனர். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஏற்றுக் கொள்வது என்ற முடிவை அவர்கள் எடுத்தனர். இதற்காக அப்போதைய ஐக்கிய இராச்சியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் அப்போதைய ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சமண்டுடன் ஒப்பந்தம் செய்து பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் ஸ்கொட்லாந்திற்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிரிவினைக்கு எதிரான நல்ல, கெட்ட, வஞ்சக பரப்புரைகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதனால் பிரிவினைக் கோரிக்கைமக்களாட்சி முறைமைப்படிதோற்கடிக்கப் பட்டது.
அரபுக்கள், துருக்கியர்கள், ஈரானியர்கள் ஆகிய முப்பெரும் இனங்களால் சூழப்பட்ட குர்திஷ் மக்கள் பல நூற்றாண்டு காலமாக அரசுரிமை இன்றி அடக்கப்படும் இனமாக வாழ்ந்து வருகின்றனர். 1914-ம் ஆண்டில் இருந்து 1918-ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரின் பின்னர் 1920-ம் ஆண்டு செய்யப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கையில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு தேசம் வழங்கப்பட்டது. பின்னர் 1922-ம் ஆண்டு செய்த லௌசானா உடன்பாட்டின் போது துருக்கி குர்திஷ் மக்களின் தேசத்தை அபகரித்துக் கொண்டது. முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் துருக்கியரின் உதுமானியப் பேரரசைத் தோற்கடித்த பின்னர். மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் நாடுகளின் எல்லைகளை வரையும் போதும் தமது குடியேற்ற ஆட்சிகளை உறுதிப் படுத்தும் போதும் பிரித்தாளும் கொள்கைகளை நேர்த்தியாகக் கையாண்டனர். இனி ஒரு இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது; அடிக்கடி அந்த நாடுகள் தமக்குள் மோதிக்கொள்ள வேண்டும்; தேவை ஏற்படும் போது குர்திஷ் மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி துருக்கியர்களையும், ஈரானியர்களையும் அரபுக்களையும் அடக்க வேண்டும் என்பவை அவர்களது உபாயமாக இருந்தது. அதற்காக சைக்ஸ்பைக்கோ உடன்படிக்கை (Sykes–Picot Agreement) இரகசியமாகக் கைச்சாத்திடப்பட்டது. இது குர்திஷ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு வழிவகுத்தது. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் மூன்று கோடி குர்திஷ் மக்கள் எந்தவித உரிமையும் இன்றி வாழும் நிலையை உருவாக்கியது.

சிரியாவில் வேறுவிதமான பிரகடனம்.
சிரியாவில் குர்திஷ்களுக்கு குடியுரிமை இல்லை. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உரிமை இல்லை. அரபு வசந்தப் புரட்சிக்குப் பின்னர் சிரியாவில் உருவான உள்நாட்டுப் போரில் குர்திஷ் மக்கள் தியாகம் மிகு போராட்டத்தை நடத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தைக் கைப்பற்றினர். எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் குர்திஷ் மக்கள் பல தரப்பினராலும் விரும்பப் பட்டவர்களாக இருந்தனர். துருக்கி மட்டும் அவர்களது போராட்டத்தை ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. எஸ் அமைப்புக்கு எதிரான போரில் அவர்களுக்கு உதவியும் செய்தது. குர்திஷ் மக்களின் கடின உழைப்பு சிரியாவின் வடபகுதியில் உள்ள Afrin Canton, Jazira Canton and Kobanî Canton ஆகிய பிராந்தியங்களை அவர்கள் வசமாக்கியது. சிரிய குர்திஷ் மக்களாட்சி ஒன்றியக் கட்சியினர் பல்வேறு குர்திஷ் அமைப்புக்களுடன் இணைந்து 2016 மார்ச் மாதம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தினர். அது தனி நாட்டுக்கான வாக்கெடுப்பல்ல. அது ஓர் இணைப்பாட்சி (Federal) அரசை அமைக்கும் வாக்கெடுப்பு. அந்த வாக்கெடுப்பில் அவர்கள் வெற்றியடைந்து Democratic Federation of Northern Syria என்ற இணைப்பாட்சி அரசை உருவாக்கினர். அவர்களது பிரதேசத்தை ரொஜாவா என அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். இணைப்பாட்சி அரசு என்பது சிரிய நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்போது அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடிய நிலையில் சிரிய அரசும் இல்லை. ஆனால் அதைத் தொடர்ந்து சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் துருக்கியின் ஆட்சேபனையைக் கருத்தில் கொண்டு சிரியக் குர்திஷ் மக்கள் சார்பாக யாரும் அழைக்கப்படவில்லை. தாம் போரில் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டதாக குர்திஷ் மக்கள் உணர்ந்து கொண்டனர். சிரியாவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பஷார் அல் அசாத் உறுதியான ஆட்சி அமைக்கும் போது ரொஜாவா இணைப்பாட்சி அரசு இல்லாமல் செய்யப்படலாம். முன்பு சிரியாவில் உள்ள குர்திஷ் மக்களைப் பாதுகாக்கும் உறுதி மொழியை இரசியா வழங்கியிருந்தது. அப்போது துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது. தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக நெருக்கமடைந்து வரும் நிலையில் அந்த உறுதிமொழிப்படி இரசியா நடக்குமா? நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் படைவலு மட்டும் சுதந்திரம் கொண்டு வராது.


இத்தாலியில் தன்னாட்சி கோரும் வடக்கு
இத்தாலியில் வடக்குப் பிராந்தியம் செல்வம் மிக்கதாகவும் தெற்குப் பிராந்தியம் செல்வமற்றதாகவும் இருக்கின்றது. அதனால் வடக்குப் பிராந்தியத்தில் அறவிடப்படும் வரி தெற்குப் பிராந்தியத்தில் செலவிடப்படுகின்றது. இந்த முறைமையை மாற்றினால் இத்தாலியின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ளவர்கள் செலுத்தும் வரி குறைக்கப்படலாம். வடக்குப் பிராந்திய நகரங்களான லொம்பார்டி மற்றும் வெனிற்றா ஆகிய நகரங்கள் தமக்கு சுயாட்சி வேண்டி கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களைத் தனித்தனியே 2017 ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி நடத்தின. இவையும் நடுவண் அரசின் அனுமதியுடனேயே நடந்தது. வடக்குச் செல்வந்தர்கள் தெற்கில் உள்ள பிராந்திய அரசுகள் ஊழல் மிகுந்தனவும் திறனற்றவையும் என ஆத்திரமடைந்ததன் விளைவாகவே இத்தாலியில் இரண்டு அதிக அதிகாரம் கோரும் கடப்பாடற்ற (non-binding)கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. ரோமில் உள்ள இத்தாலிய நடுவண் அரசு அசையவில்லை. பொருளாதார சுதந்திரம் மட்டும் அரசியல் சுதந்திரத்தைக் கொண்டு வராது.

ஈராக்கில் தனிநாடு வேண்டிய குர்திஷ்கள்
தமக்கென ஒரு நிலப்பரப்பு, தமக்கென ஒரு படை, தமக்கு என ஓர் அர்ப்பணிப்புள்ள மக்களைக் கொண்ட ஈராக்கிய குர்திஷ்தான் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை 2017 ஒக்டோபர் 25-ம் திகதி நடத்தினர். இது ஸ்கொட்லாந்தைப் போல் நடுவண் அரசின் அனுமதி பெறவில்லை. மேலும் அந்தக் கருத்துக் கணிப்புக்கு ஈராக், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய அமெரிக்கா ஆகியவை உட்படப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்கள் வந்தன. அதனால் அவர்கள் தமது கருத்துக் கணிப்பை ஒரு கடப்பாடற்ற (non-binding) கருத்துக் கணிப்பாக நடத்தினர். அவர்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்திய போது ஈரானும் துருக்கியும் தம் படைகளை ஈராக்கின் எல்லையை நோக்கி நகர்த்தின. அதனால் தனிநாட்டுப் பிரடனம் செய்யாமல் ஈராக்கிய நடுவண் அரசுடன் தனியரசு அமைப்பதற்கான பேச்சு வார்த்தையை குர்திஷ்கள் நடத்த முயன்றனர்.

ஈராக்கிய குர்த்திஷ்தானின் பொருளாதாரத்தின் இதயபூமியாக இருந்தது கேர்க்குக் பிரதேசமாகும். அதில் உள்ள எரிபொருள் மட்டுமே குர்திஷ்தானின் ஒரே பொருளாதார மூலமாகும். அந்தப் பிரதேசம் முன்பு குர்திஷ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அதை சதாம் ஹுசேய்னின் அரபுமயமாக்கல் திட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் நிகழ்த்தி அரபுக்கள் பெரும் பான்மையாக்கப்பட்டனர். அதனால் ஈராக்கிய நடுவண் அரசு அங்கு படையினரை அனுப்பி இலகுவாக அதை ஆக்கிரமித்தனர். அதனால் பொருளாதார ரீதியில் குர்திஷ்த்தான் தனிநாடு சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. ஈராக்கிய குர்திஷ்த்தான் நாற்புறமும் எதிரிகளால் சூழப்பட்டதாகும். குர்திஷ்த்தானுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும் நட்பு நாடுகள் இன்றி அவர்களால் தனிநாடு அமைப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதே,

கட்டறுக்க முயன்ற கட்டலோனியா.
ஸ்பெயினின் வட கிழக்குப் பிராந்தியமான கட்டலோனியாவும் இத்தாலியின் வட பிராந்தியம் போல் செல்வம் மிக்க பிரதேசம். அதுவும் அதிக வரி செலுத்தும் பிரதேசமாகும்.  1714-ம் ஆண்டு கட்டலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கட்டலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கட்டலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். பொது இடங்களில் கட்டலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கட்டலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கட்டலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்களின் பெயர்கள் உட்பட எல்லாக் கட்டலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கட்டலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. இத்தனை மனித உரிமை மீறல்களுக்கு நடுவிலும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது. கட்டலோனியப் பிராந்திய அரசு தனிநாட்டுக்கான கருத்துக் கணிப்பின் போது ஸ்பானிய நடுவண் அரசின் காவற்துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். சிரியாவின் ரொஜாவாவிலும் ஈராக்கின் குர்திஷ்த்தானிலும் அப்படிச் செய்ய முடியாதபடி குர்திஷ் மக்களின் படைவலு இருந்தது.

ஆறும் வேண்டும்.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களாலும் வெறும் பிரகடனங்களாலும் ஒரு தனி அரசையோ பிராந்தியத் தன்னாட்சியுள்ள அரசையோ உருவக்க முடியாது. ஒரு நாடு உருவாகுவதாயின் முதற் தேவையானது அந்த நாட்டைப் பாதுகாக்கக் கூடிய படையே. அடுத்துத் தேவையானது அந்த நாட்டை விரும்பக் கூடிய மக்கள், அந்த நாட்டுக்கென ஒரு பொருளாதாரக் கட்டமப்பு, அந்த நாட்டுக்கு நட்பாக இருந்து அங்கீகரிக்கக் கூடிய நட்பு நாடுகள், அந்த நாட்டை வழிநடத்தக் கூடிய அறிஞர்கள், அந்த நாட்டுக்கென பாதுகாப்பான இடம் ஆகிய ஆறும் முக்கியமானவை இந்த ஆறும் குர்திஷ்த்தானுக்கோ, ஸ்கொட்லாந்துக்கோ, வெனிற்றாவிற்கோ அல்லது கட்டலோனியாவிற்கோ இல்லை. அன்று வள்ளுவர் சொன்னது இன்றும் உண்மைஈழத்திற்கு?????

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...