Thursday, 8 June 2017

இணையவெளி தாக்குதல்களின் வரலாறும் எதிர்காலமும்

சீன எல்லைகளில் பறந்த இந்தியாவின் இரசியத் தயாரிப்பு எஸ்யூ-30 போர் விமானங்கள் சீனாவின் இணையவெளி ஊடுருவிகளால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என இந்தியப் பாதுகாப்புத்துறையினர் நம்புகின்றனர். நன்கு பராமரிக்கப்பட்டும் பரிசோதனை செய்யப்பட்டும் பறக்க விடப்பட்ட விமானங்கள் இயந்திரக் கோளாறு காரணமாக விழ வாய்ப்பில்லை என நம்பப்படுகின்றது. விமானங்களில் உள்ள கணினித் தொகுதிகள் தொடர்பாடலுக்கும் விமானச் செயற்பாட்டிற்கும் பாவிக்கப்படுகின்றன. எஸ் யூ 30 விமானச் செயற்பாட்டுக்கு உரிய கணினிகள் வெளி உலக இணையவெளியுடன் தொடர்பில்லாதபோது எப்படி நடந்தது? அவை ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் நிலையத்தில் பாவிக்கப்பட்ட stuxnet போன்ற வைரஸ்களால் பதிக்கப்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சீனா இணையவெளி ஊடுருவலில் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதா என்ற வியப்பும் தோன்றியுள்ளது.

தரைப்படை, வான்படை, கடற்படையும் கடல்சார்படையும் என்ற முப்பெரும் படைப்பிரிவுடன் நான்காம் படைப்பிரிவாக உளவுப்படையினர் செயற்படுகின்றனர். உளவுப் படை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஐந்தாம் படைப்பிரிவான இணைவெளிப்படை 1960களின் பிற்பகுதியில் இருந்துதான் செயற்படத் தொடங்கியது. உலகில் பல நாடுகளின் தேர்தலில் தலையிட்டு ஆட்சி மாற்றங்களைத் தனக்குச் சாதகமாக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் கணினித் தொகுதிகள் இணையவெளி மூலம் ஊடுருவப்பட்டதன் மூலம் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டன் பின்னர் உலகில் இணையவெளி ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பல நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன. பிரெஞ்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரோனிற்காகப் பரப்புரை செய்தவர்களின் மின்னஞ்சல்களும் இணையவெளியூடாகத் திருடப்பட்டன. இரண்டு செயல்களுக்கும் பின்னணியில் இரசிய கணினி ஊடுருவுகள் இருந்ததாகக் பரவலாகக் குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு மே மாதம் உலகெங்கும் ரன்சம்வெயர் என்னும் கணினி வைரஸ் 100இற்கும் அதிகமான நாடுகளில் பெருமளவு கணினிகளைப் பாதித்தது. இந்த நிலையில் கணினிப் பாதுகாப்புத் தொடர்பாக அதிக கரிசனை உலகெங்கும் எழுந்துள்ளது.

இணையவெளி மோசடிகளால் உலகெங்கும் ஆண்டு தோறும் ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் இழ்ப்பீடு ஏற்படுகின்றது. 2011-ம் ஆண்டு காற்று-மின்பிறப்பாக்கிகளை உருவாக்கும் நிறுவனமான AMSC இன் மென்பொருளை சீனக் காற்று-மின்பிறப்பாக்கிகளை உருவாக்கும் நிறுவனமான Sinovel திருடியது. அதைப் பாவித்ததால் சீனாவின் Sinovel நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது. AMSC இன் பங்கு ஒன்று 370 டொலர்களில் இருந்து ஐந்து டொலர்களாகக் குறைந்தது.

முதல் இணையவெளித் தாக்குதல்
1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நான்கு முன்னணிப் பலகலைக் கழங்கள் இணைந்து எதிரிகள் மரபு வழியிலான தொடர்பாடல்களை அழித்தால் அதற்கு மாற்றீடாக இலத்திரனியல் தொடர்பாடல்கள் மூலம் அமெரிக்க அரச மற்றும் படைத்துறையினர் தகவல் பரிமாற்றம் செய்யும் முறைமையை உருவாக்கியபோது கணினிகளும் போர்க்களத்தில் இறங்கின. சைபீரியாவினூடான எரிவாயுக் குழாய்களில் பாவிப்பதற்காக 1982-ம் ஆண்டு கனடாவின் மென்பொருட்களை சோவியத் ஒன்றியம் திருட முயற்ச்சிக்கின்றது என்பதை அறிந்த அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அந்த மென்பொருளில் ஆபத்தான மாற்றங்களைச் செய்தது. இதை அறியாமல் திருடிய சோவியத் ஒன்றியம் அதன் தனது எரிவாயு விநியோகக் குழாய்கள் நிர்வாகத்தில் பயன்படுத்திய போது. எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியது. மென்பொருளில் அதற்கான மாற்றத்தை தந்திரமாக சிஐஏ செய்திருந்தது. இது உலக வரலாற்றில் நடந்த முதலாவது இணையவெளித் தாக்குதலாகும்.

முதல் இணையவெளி ஊடுருவல்
அமெரிக்காவின் கலிபோர்ணியாப் பல்கலைக்கழகம் 1986-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலான பத்து மாதங்களாக அமெரிக்காவின் படைத்துறையினதும் எரிபொருள் துறையினதும் கணினிகளை ஜேர்மனியில் இருந்து ஒருவர் ஊடுருவியதைக் கண்டறிந்தது.

முதலாவது வைரஸ் தாக்குதல்
1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் கொர்ணல் பல்கலைக்கழக்த்தின் ஆராய்ச்சி மாணவன் ரொபேர்ட் மொரிஸ் முதன்முதலாக பரவவிட்ட வைரஸ் உலகின் பத்து விழுக்காடு இணையத் தளங்களை செயலிழக்கச் செய்தது. இவர் பின்னர் தண்டிக்கப்பட்டார்.

1994-ம் ஆண்டு அமெரிக்காவின் Rome Air Development Centerஇல் உள்ள கணினிகள் 150 தடவைகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஊடுருவப்பட்டன. அதன் போது பல கடவுச் சொற்கள் திருடப்பட்டன. அங்கு ரடார் தொழில்நுட்பம், செயற்கை விவேகம் தொடர்பான பல ஆய்வுகள் திருடப்பட்டன. திருடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம் அவர்கள் மேலும் பல கணினிகளை ஊருடுவினர். நாசா போன்ற பல விண்வெளி ஆய்வு மையங்களும் பாதிக்கபபட்டன.

2001-ம் ஆண்டு விண்டோவின் செயற்பொருளைப் பாதிக்கக் கூடிய Code Red என்ற கணினிக் கிருமி அமெரிக்க வெள்ளை மாளிகை உட்படப் பல இடங்களில் உள்ள கணினித் தொகுதிகளைப் பாதித்தது.

 2003-ம் ஆண்டு இணையவெளிச் செய்திக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான குழு ஒன்று உலகெங்கும் உள்ள அரச கணினித் தொகுதிகளைப் செயலிழக்கச் செய்யும் வைரசைப் பரவவிட்டது.

2007-ம் ஆண்டு எஸ்தோனிய அரச கணினித் தொகுதிகள் 22 நாட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. எஸ்த்தோனியா 2003-ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் 2004-ம் ஆண்டு நேட்டோவிலும் இணைந்த பின்னர் இரசியா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த இந்த இணையவெளித் தாக்குதல்களைச் செய்தது என மேற்கு நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டன.

2008-ம் ஆண்டு ஜோர்ஜியா நேட்டோவில் இணைவதைத் தடுக்க அதன் மீது இரசியா போர் தொடுத்தது. போருக்கு முன்னர் ஜோர்ஜியாவின் அதிபர் பணிமனை, போக்குவரத்துத் துறை, ஊடகத் துறை ஆகியவற்றின் கணினிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இரசியாவே இதைச் செய்ததாக ஜோர்ஜியா குற்றம் சாட்டியது. 2008-ம் ஆண்டு ஜூனில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினதும் செப்டெம்பரில் பிரித்தானிய வெளியுறவுத் துறையினதும் கணினிகளை சீன மக்கள் விடுதலைப் படையினர் ஊடுருவியதாகச் செய்திகள் வெளிவந்தன.

2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பலஸ்த்தீனத்தின் காசா நிலப்பரப்பில் இருக்கும் கமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சண்டை நடந்த போது இஸ்ரேலிய அரச கணிகளுக்கு ஒரு நொடிக்கு 15மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

2009-ம் ஆண்டு மார்ச் மாதம் கனடாவின் Munk Center for International Studies என்னும் ஆய்வகம் சீனாவில் இருந்து 103 நாடுகளினதும் தலாய் லாமாவினதும் 1300 கணினிகள் ஊடுருவப்பட்டு தகவல்கள் திருடப்பட்டதாக அறிவித்தது. 2010-ம் ஆண்டும் சீனாவில் இருந்து கனடியப் பாதுகாப்புத் துறையின் கணினிகள் ஊடுருவப்பட்டதாக கனடியப் பல்கலைக்கழம் ஒன்று தெரிவித்தது.

2010இல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் இணைய வழி ஊடுருவி Stuxnet என்னும் வைரஸ் மூலம் சேதப் படுத்தியது அதன் பின்னர் ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதுஇது இஸ்ரேலின் Dugu கணனி வைரஸின் வேலை என்று சந்தேகிக்கப்பட்டது. ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களில் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் பல இணைய வெளித்தாக்குதல்களை நடாத்தின என்று நம்பப்படுகிறது. ஈரானிய அணு ஆராய்ச்சி மையத்தின் கணினிகள் எல்லாம் வெளியுலகத் தொடர்பற்றிருந்தது. அங்கு ஓர் உளவாளி USB Drive மூலம் வைரஸ்களை கணினி ஒன்றில் செலுத்தினார். அதிலிருந்து  BLUETOOTH மூலம் அங்குள்ள மற்றக் கணினிகளுக்குப் பரப்பப்பட்டன. BLUETOOTH மூலம் கணினி வைரஸ்கள் பரப்பப்பட்டது அது வரலாற்றில் முதல் தடவையாகும். இப்படிப் பரம்பிய Stuxnet என்னும் வைரஸ் பின்னர் கட்டுக்கடங்காமல் உலகின் பல கணினிகளைத் தாக்கியது. பின்னர் ஐக்கிய நாடுகள் சபையும் இரசிய கணினி வைரஸ் எதிர்ப்பு நிறுவனமும் இணைந்து Stuxnet என்னும் அந்த வைரஸைக் கட்டுப்படுத்தின.

2011-ம் ஆண்டு டிசம்பரில் இஸ்லாமிய இறைதூதரின் பெயரைக் கொண்ட ஒரு வைரஸ் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டு ஈரான், இஸ்ரேல், ஆப்கானிஸ்த்தான் ஐக்கிய அமீரகம், போன்ற நாடுகளின் அரசதுறைகளினதும் தூதுவரகங்களினதும் கணினித் தொகுதிகளை இலக்கு வைத்து அனுப்பப்பட்டன. 2011-ம் ஆண்டு ஜூனில் பன்னாட்டு நாணய நிதியத்தின் கணினிகள் சீனாவில் இருந்து ஊடுருவப் பட்டதாக அமெரிக்காவின் உள்நாட்டுக் பாதுகாப்பு உளவுத் துறையான FBI தகவல் வெளியிட்டது.

2012-ம் ஆண்டு மே மாதம் ஹங்கேரியின் பியூடாபெஸ்ற் பல்கலைக்கழகத்தினர் FLAME என்னும் பெயர் கொண்ட கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிக்கலான வைரஸ் ஒன்று பரவுவதைக் கண்டறிந்தனர். இது ஸ்கைப் மூலமான உரையாடல்களை இரகசியமாகப் பதிவு செய்வது, கணினித் திரையில் உள்ள படங்களைப் பதிவு செய்வது, தட்டச்சின் இயக்கங்களைப் பதிவு செய்வது போன்ற பல இரகசிய வேலைகளைச் செய்தது. இதுவும் USB stick மூலமாகப் பரப்பப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள்.

2012-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சவுதி அரேபிய எரிபொருள் நிறுவனத்தின் முப்பதினாயிரம் கணினிகளின் வன் தட்டில் உள்ள எல்லாத் தகவல்களையும் அழித்து விட்டு எரியும் அமெரிக்கத் தேசியக் கொடியின் படங்களை மட்டும் அங்கு பதிவு செய்துவிட்டனர். நீதியின் வாள் என்ற பெயர் கொண்ட இந்த வைரஸுக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாக நம்பப்பட்டது. 2012 செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ஒன்பது முன்னணி வங்கிகளின் கணினிகள் ஊடுருவப்பட்டன.

2012-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை அமெரிக்கத் தினசரியான நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை பல தடவைகள் சீனாவில் இருந்து ஊடுருவிச் செயலிழக்கச் செய்யபப்ட்டன. சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சர் Wen Jiabao பதிவியில் இருக்கும்ப் போது அவரது உறவினர்கள் பெரும் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டது. அதற்குப் பழிவாங்கவே சீனாவில் இருந்து ஊடுருவப்பட்டதாக நியூயோர் ரைம்ஸ் தெரிவித்தது. 


2015-ம் ஆண்டு வட கொரியாவின் இணையவெளி ஊடுருவிகள் தென் கொரியாவின் அணுவலு மின் பிறப்பாக்கிகள் பலவற்றை செயலிழக்கச் செய்தனர். 2014-ம் ஆண்டு சோனி நிறுவனத்தை ஊடுருவினர். வட கொரிய ஊடுருவிகள் Federal Reserve Bank of New York இல் பங்களாதேசத்திற்குச் சொந்தமான 81மில்லியன் டொலர்களைத் திருடினார்கள் என்பதை இரசியாவின் கணனிப் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான Kaspersky உறுதி செய்தது. இது போல உலகெங்கும் பல அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின்  கணினிகள் வட கொரியாவில் இருந்து ஊடுருவப்பட்டுள்ளன. வட கொரிய உடுருவிகள் சீனாவையும் விட்டு வைப்பதில்லை.

சீனா அமெரிக்கப் போர்விமான உற்பத்தி நிறுவனங்களின்  தொழில்நுட்பங்களைத் திருடியே தனது J-20 போர் விமானங்களை உருவாக்கியது.

இணையவெளிக் கப்பம்
பல்வேறுபட்ட நிறுவங்களின் கணினித் தொகுதிகளை ஊடுருவி அங்குள்ள தகவல்களை முடக்கி வைத்துக் கொண்டு பணம் தரும்படி மிரட்டுவது 2015-ம் ஆண்டில் இருந்து பரவலாக நடைபெறுகின்றது. பணம் கொடுக்காவிடில் அந்த தகவல்கள் அழிக்கப்படும்.

இணையவெளிப் போரின் எதிர்காலம்

அமெரிக்காவின் வழிகாட்டல் ஏவுகணைகள் GPS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Global positioning sytemமில் பெருமளவு தங்கியிருக்கின்றன. இரசியா அமெரிக்காவின் Global positioning sytem கொடுக்கும் சமிக்ஞைகள் போல் வேறு சமிக்ஞைகளை வழங்கி அமெரிக்காவின் ஏவுகணைகளைத் திசை திருப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை சிரியாவில் பரிசோதித்துள்ளதாக நம்பப்படுகின்றது. இதனால் அமெரிக்கா அவசரமாக் தனது வழிகாட்டல் ஏவுகணைகளின் மென்பொருளை மாற்றியுள்ளது. அதனால் எதிரி நாட்டு சமிக்ஞைகளை அவை இனம் கண்டு கொண்டு உதாசீனம் செய்யும். அரசுகள் அல்லாத தீவிரவாத அமைப்புக்கள் தற்போது பெருமளவில் இணையவெளி ஊடுருவல்களையும் தாக்குதல்களையும் செய்யும் திறனைப் பெற்றிருக்கின்றன. தற்போது எல்லா நடுகளும் தமக்கென இணைய வெளிப்படைப்பிரிவை வத்திருக்கின்றன. இணையவெளி ஊடுருவல்கள் மூலம் ஒரு நாட்டின் தேர்தலின் முடிவை மாற்றியமைக்க முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இது புவிசார் அரசியல் போட்டியில் பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றது.                                                                                                                                                                                                                                                              

Tuesday, 6 June 2017

கட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்?

சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி துண்டித்தமை மேற்காசியாவில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் அரசு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டாருக்கான உணவு விநியோகத்தில் பெருமளவு சவுதி அரேபியாவினூடாக நடைபெறுகின்றது. அந்த விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான கடல், வான் மற்றும் தரைப் போக்கு வரத்துக்களையும் துண்டித்துள்ளன.

ஈரானா இஸ்ரேலா?
வளைகுடாக் கூட்டுறவுச் சபையில் (The Gulf Cooperation Council -GCC) உள்ள பாஹ்ரேன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய ஆறு நாடுகள் இருக்கின்றன. இவையாவும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணும் மன்னர்களால் ஆளப்படுபவை. இவற்றில் ஓமானும் குவைத்தும் கட்டாருடன் தமது அரசுறவைத் துண்டிக்கவில்லை. குவைத் மன்னர் நிலைமையை மோசமாக்க வேண்டாம் என கட்டார் மன்னரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இந்த நாடுகளிற் பல இஸ்ரேலுடன் இரகசிய உறவை வைத்துள்ளன. இந்த மன்னர்களுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான பல உளவுத்தகவல்களை இஸ்ரேல் அவர்களுக்கு வழகிக் கொண்டிருக்கின்றது. ஈரானிய ஆட்சியாளர்கள் போல் இந்த மன்னர்கள் இஸ்ரேலை ஒழித்துக் கட்ட வேண்டும் என செயற்படுவது கிடையாது. பலஸ்த்தீனிய விடுதலைப் போருக்கு இந்த மன்னர்களின் ஆதரவு குறைந்து கொண்டே போகின்றது. இந்த மன்னர்கள் எதிரியாகப் பார்ப்பது ஈரானை மட்டுமே. அங்கு உள்ள மதவாத ஆட்சி தமது நாட்டிலும் ஒரு புரட்சி மூலம் பரவலாம் என்பதே இவர்களது பெரும் அச்சம். அதற்காக ஈரானை அடக்குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றார்கள். இஸ்ரேலுடன் இரகசியமாக இணைந்து இவர்கள் ஈரானுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.

செல்வந்த நாடு
பாரசீகக் கடலில் உள்ள சிறு குடாநாடு கட்டார். அதன் தென்புறம் சவுதி அரேபியாவுடன் நிலத் தொடர்புடையது. 11,400 சதுர கிலோ மீட்டரில் 27 இலட்சம் மக்களைக் கொண்ட கட்டார் நாடு அங்கு எரிபொருள் வாயு இருப்பு 1939இல் கண்டறியப்படும் வரை ஒரு மீன் பிடிக் கிராமம் போல் இருந்தது. மீன் பிடித்தலும் முத்துக் குளித்தலும் அங்கு நடைபெற்றன. உலகிலேயே அதிக அளவு எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு கட்டார். தற்போது அது உலகிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. அதன் தனிநபர் வருமானம் $140,649. கட்டாரிய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்படுகின்றார்கள் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. 2003-ம் ஆண்டு 98 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியலமைப்பு கட்டாரை ஓர் அரசமைப்பு மன்னராட்சி நாடாக்கியது.

நோர்வே பாதி சுவிஸ் பாதி
கட்டார் தனது வெளியுறவுக் கொள்கையை நோர்வே போலவும் சுவிஸ் போலவும் மாற்றுவதாக நினைத்துக் கொண்டு செயற்படுகின்றது. ஆனால் கட்டாரில் அமெரிக்கப் படைத்தளம் உள்ளது சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா நடத்தும் வான் தாக்குதல்களில் பெருமளவு கட்டாரில் இருந்தே நடத்தப்படுகின்றது. கட்டார் பல அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணை வழங்குகின்றது. அதன் மூலம் உலக அரங்கில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயல்கின்றது. உலகில் தனது செல்வாக்கை நிலைநாட்டவே கட்டார் அல் ஜசீரா தொலைக்காட்சியை ஆரம்பித்தது.  சிரியாவில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் கட்டார் அதிபர் பஷார் அல் அசாத்துடன் உறவைக் கொண்டுள்ளது. அவருக்கு ஒரு தனிப்பட்ட விமானத்தையும் அது வழங்கியிருந்தது. ஆனால் கட்டார் ஈரானுடனும் உறவை வளர்ப்பதுதான் அதன் ஆபத்துகளில் முக்கியமானவை. டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவிற்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டதும் அங்கு மன்னர்களுடன் ஆடிப்பாடினதும் சவுதி அரேபியாதான் அந்தப் பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புவதைச் சுட்டிக்காட்டியது. இது அங்கு ஒரு தலைமைத்துவப் போட்டியையும் உருவாக்கியுள்ளது. எகிப்தில் நடந்த அரபு வசந்த எழுச்சியின் பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு கட்டார் ஆதரவு வழங்கியமை எகிப்தையும் சவுதியையும் ஆத்திரபப்டுத்தியது உண்மை. . 2022-ம் ஆண்டு உலகக் காற்பந்தாட்டப் போட்டி கட்டாரில் நடக்கவிருக்கின்றது. அது இந்த அரசுறவுத் துண்டிப்பால பாதிக்கப்படலாம். 


மற்ற அரபு மன்னர்கள் எல்லோரும் வயது போன பின்னரும் ஆட்சி பீடத்தில் தொடர்ந்து கொண்டிருக்கையில் கட்டார் மன்னர் மட்டும் தனது பதவியை 61 வயதில் துறந்து தனது 33 வயது மகனை மன்னராக்கினார். இது மற்ற வயோதிப மன்னர்களை ஆத்திரப்படுத்தியது. ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையில் பாரசீகக் கடலின் கீழ் உள்ள பாரிய எரிவாயு இருப்பை ஈரானுடன் சுமூகமாகப் பகிர்ந்து கொள்ள கட்டார் விரும்புகின்றது. அதனால் ஈரானுடன் ஒரு நல்ல உறவு அதற்கு அவசியம். ஆனால் சியா இஸ்லாமிய மதவாத அரசான ஈரானுடனான அந்த உறவை வளைகுடாவில் உள்ள மற்ற சுனி ஆட்சியாளர்கள் ஐயத்துடன் பார்க்கின்றார்கள்.

அமெரிக்காவிற்கு சிக்கலா
ஐக்கிய அமெரிக்கா வளைகுடா கூட்டுறவு நாடுகளின் உதவியுடன் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிரான தனது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் மேற்காசியக் கொள்கையில் முக்கிய இடம் வகிப்பவை:
1. இஸ்ரேலின் இருப்பையும் கிறிஸ்த்தவ புனித நிலையங்களையும் பாதுகாத்தல்.
2. எரிபொரு விநியோகம் தடையின்றி நடத்தல்.
3. மத்திய தரைக்கடலினூடான போக்குவரத்து சீராக இருத்தல்
கட்டார் ஈரானுடன் உறவை வளர்ப்பது இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகும். அதை அமெரிக்கா விரும்பவில்லை.
ஐந்து நாடுகளும் அரசுறவைத் துண்டித்தவுடன் கட்டார் அரசு தனது நாட்டுக்கு எதிராக இணையவெளிக்குற்றம் இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் கட்டார் அரசின் கணினிகளை ஊடுருவி தகவல்களைத் திருடி இந்த ஐந்து நாடுகளுக்கும் வழங்கியதா என்ற ஐயம் எழுகின்றது.

கட்டார் அரசு ஈரானுடன் உறவை வளர்க்கின்றது, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு உதவுகின்றது, கமாஸ் அமைப்பிற்கு உதவுகின்றது ஆகியவை தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைத்த படியால் இந்த ஐந்து நாடுகளும் ஆத்திரம் அடைந்துள்ளன. மேலும் கட்டார் மன்னர் டொனால்ட் டிரம்ப் இன்னும் சில காலம்தான் பதவியில் இருப்பார். அதனால் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு நீடிக்காது எனக் கூறினார் என்ற இரகசியமும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. லிபியாவில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு கட்டார் ஆதரவு வழங்குவதை எகிப்தும் துருக்கியும் கடுமையாக எதிர்க்கின்றன. 2013-ம் ஆண்டு தலிபானின் தூதுவரகம் கட்டார் தலைநகர் டொஹாவில் திறக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் ஒரு நிழல் நாடாக கட்டார் இருக்க வேண்டும் எனது சவுதி மன்னர்களின் நீண்ட நாள் விருப்பம். ஆனால் கட்டார் தனது செல்வத்தை வைத்து தனித்துவமாக இயங்க முடிவு செய்தது. 

அல் கெய்தாவிற்கு கப்பம் செலுத்திய கட்டார்
2017 ஏப்ரல் மாதம் அல் கெய்தா அமைப்பின் இணைக்குழுவான Tahrir al-Sham  ஈராக்கில் வேட்டைக்குச் சென்றிருந்த கட்டார் மன்னர் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் அவரது பரிவாரத்தினரையும் கைது செய்து வைத்திருந்தது. அவர்களை மீட்க கட்டார் அரசு அந்தக் குழுவினருக்கு ஒரு பில்லியன் டொலர்களை கப்பப் பணமாகச் செலுத்தியது என இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபினான்சியல் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பணயக் கைதிகளாகைப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக படைநடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும் பணம் கொடுத்து மீட்கக் கூடாது என்பதில் மேற்கு நாடுகள் உறுதியாக இருக்கின்றன. அதனால் கட்டார் மீது மேற்கு நாடுகள் கடும் ஆத்திரம் கொண்டுள்ளன. ஏற்கனவே அல் ஜசீரா ஊடகத்தால் மேற்கு நாடுகள் கடும் பொறாமையும் விசனமும் அடைந்துள்ளன.



கட்டாருக்கு இப்போது இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் முரண்டு பிடித்து ஈரானுடன் இணைதல். ஈரானில் இருந்து தனக்குத் தேவையான பொருட்களை கடல் வழியாக இறக்குமதி செய்தல். இது கட்டாரை ஈரானில் தங்கி இருக்கும் ஒரு நாடாக மாற்றிவிடும். இரண்டாவது தெரிவு நடந்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டு மீண்டும் மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் உறவை வளர்த்தல். 

2017-06-06 பிரித்தானிய நேரம் காலை 11 மணிக்கு வெளிவந்த செய்திகளின் படி கட்டாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிலைமையைச் சீராக்கும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்படி குவைத் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பிந்திக் கிடைத்த செய்திகள்:

5-ம் திகதி திங்கட் கிழமை அரசுறவுத் துண்டித்தவுடன் கட்டாரின் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் குவைத்தை சமரச முயற்ச்சி செய்யும் படி கட்டார் வேண்டுகோள் விடுத்த பின்னர் மீண்டும் உயர்கின்றது. சமரச முயற்ச்சிக்கு ஐக்கிய அமீரகம் நிபந்தனை விதித்துள்ளது. "We need a guaranteed roadmap to rebuild confidence after our covenants were broken," உடைந்து போன எமது நம்பிக்கையை மீள வரச் செய்ய உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதைவரைபை கட்டார் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

துருக்கி கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைக் கண்டித்துள்ளது. 
கட்டாரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு தடையின்றி நடக்கின்றது. 

ஐக்கிய அமீரகத்தில் கட்டார் நாட்டுக்கு ஆதரவாகக் கருத்து வெளிவிட்டால் 15 ஆண்டுகள் சிறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Monday, 29 May 2017

அமெரிக்க முதலாளித்துவம் டிரம்பை பதவியில் இருந்து அகற்றுமா?

அமெரிக்க அரசு என்பது நிர்வாகத் துறையான வெள்ளை மாளிகையும், சட்டவாக்கற்துறையான மக்களவையையும் மூதவையையும் கொண்ட பாராளமன்றமும், நீதித்துறையும் என வெளியில் காட்டிக் கொள்ளப் படுகின்றது. அமெரிக்க அரசு என்பது அதன் அதிபரும் பராளமன்றமும் மட்டுமல்ல. அதன் படைத்துறை, பல்வேறு உளவுத் துறைகள் மட்டுமல்ல. அமெரிக்க அரசைப் பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் முதளாளித்துவக் கட்டமைப்பு அமெரிக்க அரசில் உச்ச வலிமை மிக்க ஒன்றாகும். அமெரிக்க முதலாளித்துவக் கட்டமைப்பைப் பாதுகாப்பதும், முதலாளிகளுக்கிடையிலான போட்டிகளில் நடு நிலை வகிப்பதும் போட்டி சீராக நடப்பதை உறுதி செய்வதும் அமெரிக்க அதிபர், பாராளமன்றம், படைத்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் முதன்மைக் கடமைகளாகும்.
வலிமை மிக்க அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அரசு
அமெரிக்க அதிபர், பாராளமன்றம், நீதித் துறை ஆகிய மூன்றும் அமெரிக்க அரசமைப்புக் கட்டுபட்டு இயங்குகின்றது. வை மூன்றும் Checks and balances என்கின்ற சரிபார்த்தலும் சமப்படுத்தலும் என்ற முறைமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்காவது பிரிவான அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அரசு (The U.S. National Security State) அரசமைப்புக்கு அப்பால் நின்று செயற்படுகின்றது. 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடந்த கொரியப் போருக்குப் பின்னர் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அரசு வலுப்பெற்றது. இது படைத்துறையையும் பல்வேறு அமெரிக்க உளவுத் துறைகளையும் கொண்டது. அமெரிக்க வெளியுறவுத் துறை படைத்துறை மயமாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
அகற்றப்பட்ட ஜோன் எஃப் கெனடி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோன் எஃப் கென்னடி அமெரிக்க முதலாளித்துவக் கட்டமைப்பின் சொல்லுக்குக் கட்டுபடாத வகையில் அமெரிக்க மக்கள் மத்தியிலும் பெருமளவு உலக மக்கள் மத்தியிலும் அவர் செல்வாக்குப் பெற்றிருந்தார். கியூபாவில் இரசியா நிறுத்தியுள்ள அணுக்குண்டு தாங்கிய ஏவுகணைகளைச் சாக்காக வைத்துக் கொண்டு இரசியா மீது முன்கூட்டியே அணுக்குண்டுகளை வீசிப் போர் தொடுக்கும் படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்ட போது அவர் அதற்கு மறுத்துவிட்டான் என சில சதிக்கோட்பாடுகள் சொல்கின்றன. இரசியாவை அழிப்பதன் மூலம் உலகில் பொதுவூடமைவாதம் பரவுவதை ஒழித்துக் கட்டுவதே அப்போது உலக முதலாளிகளின் நோக்கமாக இருந்தது. கியூப ஏவுகணை நெருக்கடியை ஜோன் எஃப் கென்னடி படை நகர்வுகள் மூலமும் அரசுறவியல் பேச்சு வார்த்தை மூலமும் சில விட்டுக் கொடுப்புக்கள் மூலமும் தீர்த்தார். உலகில் பொதுவுடமையை அவர் ஒழித்துக் கட்டாமல் போனது அவரின் உயிருக்கு உலை வைத்ததா?
விரட்டப்பட்ட ரிச்சர்ட் நிக்சன்
அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர் நிகசன் இரசியாவுடன் பல அரசுறவியல் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தொடர்பாக பல இரசியாவுடன் உடனபடிக்கை செய்து கொண்டார். SALT 1 என சுருக்கமாக அழைக்கப்படும் கேந்திரோபாய படைக்கலன்களை மட்டுப்படுத்தும் உடன்படிக்கையைச் செய்து கொண்டார். சீனாவுடன் ஒருவரை ஒருவர் பாதுகாக்கும் உடன்படிக்கையைச் செய்து கொண்டார். உலகில் பொதுவுடமைவாதத்தை ஒழிக்க வேண்டிய பதவியில் உள்ளவர் பொதுவுடமை நாடுகளுடன் உடன்படிக்கை செய்து கொள்வதை உலக முதலாளிகள் வெறுத்தனர். அதனால் அவரது பழைய முறைகேடுகள் தோண்டி எடுக்கப்பட்டு அவர் பதவியில் இருந்து விரட்டப்படார். அவர் பதவியில் இருந்து விலக்கப்படக் காரணமாக இருந்த எதிர்கட்சியின் பணிமனையில் செய்த திருட்டு தொடர்பான தகவல்களை வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகை வேண்டுமென்றே திரித்துக் கூறியிருந்தது என சதிக்கோட்பாடுகள் பின்னர் தெரிவித்தன. வியட்னாம் போரை விரும்பாத நிக்ஸன் இரண்டாம் தடவையும் அமெரிக்க அதிபராக வருவதை முதலாளித்துவக் கட்டமைப்பு விரும்பியிருக்கவில்லை. வியட்னாம் போரை கொடூரமாக நடத்தினார் என்ற பழி அவர் மீது இலகுவாகச் சுமத்தப்பட்டது. 
களத்தில் இறங்கிய பெருமுதலாளி டிரம்ப்
2012-ம் ஆண்டு பராக் ஒபாமா இரண்டாவது தடவை அமெரிக்க அதிபராக மக்களாட்சிக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற போது இனி குடியரசுக் கட்சி அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என பல அரசறிவியலாளர்கள் கருத்து வெளியிட்டனர். குடியரசுக் கட்சி வரிக் குறைப்பும் சமுகநலன் செலவுக் குறைப்பும் தனது கொள்கைகளில் முக்கியமாகக் கொண்டது. மக்களாட்சிக் கட்சி செல்வந்தர்களிடம் வரி அறவிட்டு மக்கள் நலனுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையது. இரண்டும் முதலாளித்துவக் கட்டமைப்பை வேறு வேறு விதத்தில் பாதுகாக்கும் கொள்கைகள் கொண்டவை. தொழிலாளர்கள் மீது கரிசனை காட்டிக் கொண்டே முதலாளித்துவக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பது மக்களாட்சிக் கட்சியின் கொள்கையாகும். இதற்கு அவர்கள் தாராண்மைவாதம் என்ற பெயர் சூட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியினர் முதலாளித்துவ சூழலில் போட்டியில் வெல்லுபவன் வெல்லட்டும் மற்றவர்களின் உழைப்பு சுரண்டப்படட்டும் என்ற கொள்கையுடையவர்கள். ஆனால் 2016 நவம்பரில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற டொனால்ட் டிரம்ப் குடிவரவுக் கொள்கைக்கு எதிரான கொள்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார். மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தொழிலாளர்கள் குடியேறுகையில் அமெரிக்க முதலாளிகள் அவர்களை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி தமது இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். பாதிக்கப்படுவது அமெரிக்கத் தொழிலாளர்களே. டிரம்பின் குடிவரவுக்கு எதிரான கொள்கை முதலாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. டிரம்ப் நேட்டோ காலாவதியாகப் போய்விட்ட ஒன்று என்றார். இரசியாவுடன் ஒத்துழைக்கலாம். விளடிமீர் புட்டீன் நல்ல மனிசன் என்றார். இது அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை இரசியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளுமா என்ற அச்சத்தை உருவாக்கியது. அத்துடன் இரசியாவுடன் செய்யப்படும் சமரசம் அமெரிக்காவிற்கும் மற்ற நேட்டோ நாடுகளுக்கும் அமெரிக்கப் படைக்கல உற்பத்தியாளர்கள் செய்யும் விற்பனையை பெருமளவு பாதிக்கும் என்ற அச்சத்தை மேலோங்கச் செய்தது. வழமையாக அமெரிக்கப் பெரு முதலாளிகளின் சார்பில் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவர். ஆனால் பெரு முதலாளிகளில் ஒருவரான டிரம்ப் தானே தேர்தல் களத்தில் இறங்கிப் போட்டியிட்டு வென்றார். இவர் மற்ற முதலாளிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளார். இதனால் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒருவராகியுள்ளார்.

டிரம்ப்பின் பிரச்சனைகளின் பின்னணி
2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த பலர் இரசிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முன்னரே முன் வைக்கப்பட்டது. டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற போது சட்டமா அதிபராக இருந்த சலி கேற் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்த மைக்கேல் ஃபிளைனை அமெரிக்கப் படைத் தளபதியாக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். மைக்கேல் ஃபிளைன் இரசிய உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த படியால் இரசியா அவரை பயமுறுத்தி அமெரிக்கப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது சலி கேற்றின் கருத்து. பின்னர் சலி கேற்றை தனது குடிவரவுக் கொள்கைக்கு நீதிமன்றத்தில் ஆதரவு வழங்க மறுத்ததால் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். அதிபர் பதவிக் கையளிப்பின் போது மைக்கேல் ஃபிளைன் இரசியாவுடன் தொடர்பு வைத்திருந்தது மட்டுமல்ல துருக்கியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு துருக்கிக்காக அமெரிக்க பாராளமன்றத்தில் பரப்புரையாளராகச் செயற்பட்டார் என்பதையும் ஒபாமா டிரம்ப்பிடம் தெரிவித்திருதார்.

மருமகனே மருமகனே போ போ!
தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதும் அவரது மருமகன் Jared Kushner வாஷிங்டனுக்கான இரசியத்தூதுவரிடம் மொஸ்க்கோவிற்கும் தமக்கும் இடையில் ஒரு தனிப்பட்ட இரகசியமான தொடர்பாடல் முறைமையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தத் தகவலை அந்தத் தூதுவர் மொஸ்க்கோவில் உள்ள வெளியுறவுத்துறைக்கு தெரிவித்தார். அந்தத் தொடர்பாடல் அமெரிக்க உளவுத்துறையால் ஒற்றுக் கேட்கப்பட்டுள்ளது. மரபு வழி யூதரான Jared Kushner செய்தது ஒரு தேசத் துரோகக் குற்றமாகும். டிரம்பிற்கு தற்போது ஆலோசகர்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் பலர் தேர்தலின் போது இரசிய உளவுத்துறையுடன் இணைந்து செயற்பட்டமை இனி ஒன்றன் ஒன்றாக வெளிவரப் போகின்றது. டிரம்ப் விரைவில் தனது மருமகனையும் பதவியில் இருந்து நீக்கலாம். ஏற்கனவெ டிரம்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் ரில்லர்சன் முன்பு தொழில் ரீதியில் இரசியாவுடன் நெருங்கிச் செயற்பட்டவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்ப்பட்டுள்ளது. அவருக்கு இரசிய அரசு விருதும் வழங்கிக் கௌரவித்திருந்தது.

விசாரணையை ஆரம்பித்த FBI
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான உளவுத்துறை FBI என அழைக்கப்படும். இது அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயற்படுகின்றது. அதன் தலைமை இயக்குனரான ஜேம்ஸ் கொமி டிரம்ப் பதவி ஏற்க முன்னரே அவரது தேர்தல் பரப்புரைக்குழுவிற்கும் இரசிய உளவுத் துறைக்கும் தொடர்புகள் இருந்ததா என்பதைப் பற்றி துப்பறியத் தொடங்கினார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்கும் வைபவத்தில் FBIஇன் தலைமை இயக்குன ஜேம்ஸ் கொமியை டிரம்ப் கட்டித்தழுவ முயன்றார். அது மரபுக்கு மாறானது என ஜேம்ஸ் கொமி விலகிக் கொண்டார். உளவுத் துறையில் மட்டுமல்ல உளத்துறையிலும் வல்லவரான ஜேம்ஸ் கொமி டிரம்பின் மடியில் பாரம் இருப்பதால் தன்னை அவர் தன்பக்கம் இழுக்க முயல்கின்றான் என உணர்ந்து கொண்டார். மைக்கேல் ஃபிளைன் மீதான குற்றச்சாட்டுக்கள் பல ஊடகங்களில் அடிபட டிரம்ப் மைக்கேல் ஃபிளைனை பதவியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்ற்கு. பின்னர் டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் தொடர்பு கொண்டு மைக்கேல் ஃபிளைன் அருமையான மனிதர் அவரை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு ஜேம்ஸ் கொமி நீங்கள் நேரடியாக என்னுடன் தொடர்பு கொள்ளக் கூடாது உரிய வகையில் நீதித் துறை மூலமாக என்னை அணுக வேண்டும் என்றார். பின்னர் ஜேம்ஸ் கொமியை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு அழைத்த தான் விசாரணக்கு உட்படுத்தப்படவில்லை என பகிரங்கமாக அறிக்கை ஒன்றை விடும்படி வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் தனக்கு விசுவாசமாக நடப்பதாக ஒரு உறுதிமொழி வழங்கும் படியும் டிரம்ப் ஜேம்ஸ் கொமியைக் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜேம்ஸ் கொமி டிரம்பினதும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுக்களினதும் செயற்பாடுகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை நீதித்துறையிடம் கோரினார். இது டிரம்ப்பிற்கு தெரிய வந்தது. டிரம்ப் வழமையான செயற்பாடுகளுக்கு மாறாக ஜேம்ஸ் கொமியைப் பதவியில் இருந்து நீக்கினார்.

ஆப்பு வைக்கப் போகும் குறிப்பேடுகள்
அமெரிக்க அதிகாரிகள் அதிபருடன் செய்யும் கலந்துரையாடல்களை உடனுக்கு உடன் தங்கள் குறிப்பேட்டில் பதிந்து கொள்ள வேண்டும். அந்தக் குறிப்பேட்டில் உள்ளவைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு. அவை நீதிமன்றில் சாட்சியங்களாகச் சமர்ப்பிக்கப்படலாம். டிரம்ப் ஜேம்ஸ் கொமியை பதவி நீக்கம் செய்த பின்னர் டிரம்ப்பிற்கு எதிராகப் பல கருத்துக்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன. டிரம்ப் தான் துணைச் சட்டமா அதிபர் ரொட் ரொசென்ரைனின் பரிந்துரையின் பேரில் ஜேம்ஸ் கொமியைப் பதவி நீக்கம் செய்தேன் என்றார். ஜேம்ஸ் கொமிய ஹிலரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரத்தில் அவருக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் செயற்பட்டார் என்பதே ரொட் ரொசென்ரைன் கொகியிற்கு எதிராகச் சொன்ன குற்றச் சாட்டாகும். டிரம்ப் தன்னைப் பாதுகாக்க கொமியைப் பலியிட்டார் என கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த அழுத்தங்களாள் டிரம்பினதும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுக்களுக்கும் எதிரான குற்றச் சாட்டை விசாரிக்க ரொட் ரொசென்ரைன் ரொபேர்ட் முல்லர் என்ற முன்னாள் FBI இயக்கினரை சிறப்பு விசாரணையாளராக நியமித்துள்ளார்.

அதிகரிக்கும் நிகழ்தகவு
எதிர்க் கட்சியான மக்களாட்சிக் கட்சியினர் டிரம்பைப் பதவியில் இருந்து விலக்குவது பற்றி பரவலாகப் பேசத் தொடங்கிவிட்டனர். டிரம்பின் ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியின் புளோரிடாவிற்கான மக்களவை உறுப்பினர் Carlos Curbelo  டிரம்ப்பைப் பதவியில் இருந்து விலக்குவது பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். இவர் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஒருவர். டிரம்ப் அமெரிக்கா G-7 நாடுகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை இரத்துச் செய்தமையால் ஆத்திரமடைந்துள்ளார். டிரம்ப்பை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என முதல் களத்தில் இறங்கியுள்ள பாராளமன்ற உறுப்பினர் இவராகும். இவரை அடுத்து மிக்சிகன் தொகுதி உறுப்பினரும் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்ப்பை பதவியில் இருந்து விலக்குவது பற்றிய நிகழ்தகவை பந்தய நிபுணர்கள் உயர்த்தியும் உள்ளனர். 

பதவி விலக்கப்படுவது எப்போ?
சிறப்பு விசாரணையாளர் ரொபேர்ட் முல்லர் கண்டிப்பும் நேர்மையும் நிறைந்தவர். ஜேம்ஸ் கொமியும் இவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று செயற்பட்டவர்கள். அமெரிக்காவின் பல்வேறு அதிகாரிகள் போல் இவர்களும் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அரசைப் (The U.S. National Security State) பாதுகாக்க பெரிதும் விரும்புபவர்கள். ரொபேர்ட் முல்லர் இரசிய உளவுத் துறைக்கும் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவிற்கும் இடையில் இருந்த தொடர்பை நிரூபிப்பது கடினம். ஆனால் டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் நடந்து கொண்டவை பற்றி நிரூபிப்பது இலகு. நீதித்துறையின் ஓர் பிரிவான FBIஇன் தலைமை இயக்குனருக்கு எதிரான செயற்பாடு நீதித்துறையின் செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தாகும். இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். அதை வைத்து டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு அவசியம். அந்த ஆதரவு எவ்வளவு விரைவாகக் கிடைக்கும் என இப்போது சொல்ல முடியாமல் இருக்கின்றது.



Friday, 26 May 2017

சீனாவின் புதிய பட்டுப்பாதையும் மென்வல்லரசாகுதலும்

29 நாடுகளின் அரசுத் தலைவர்கள், உலக வங்கி, பன்னாட்டு நாண்டிய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பல நாடுகளினதும் அமைப்புக்களினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட வலயமும் பாதையும் மாநாடு (Belt and Road Forum)  ஒன்றை சீனா 2017-ம் ஆண்டு மே 14-ம் திகதி அமர்க்களமாக நடத்தியது. டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பிடியும் தலைமையும் ஆட்டம் காணும் வேளையில் அவற்றைத் தான் பிடிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்பதை இந்த மாநாடு சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காணமைத் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் இரத்துச் செய்ததமையை சீனா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றது. கொழும்பு பன்னாட்டு நிதி நகரம், கென்யா தொடருந்து திட்டம் போன்றவை எல்லாம் புதிய பட்டுப்பாதையின் பகுதிகளே.

புதியவகைக் கூட்டுறவுத் திட்டம்
மாநாட்டில் உரையாற்றிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் பொருளாதார அபிவிருத்திக்கான் முக்கிய இயந்திரம் வர்த்தகமே என்றார். புதிய பட்டுப்பாதைத் திட்டம் சீனாவின் உலக ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை. ஒருவருக்கு ஒருவர் நன்மை செய்யக் கூடிய ஒரு புதியவகைக் கூட்டுறவுத் திட்டமே பட்டுப்பாதைத் திட்டம் என்றார். பங்கு பற்றும் எல்லோருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் சீனா நன்கு சிந்தித்து இந்தப் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாம். மேலும் சீன அதிபர் சீனா தனது பொருளாதார அபிவிருத்தி அனுபவத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றது; அடுத்த நாடுகளில் தலையிடுவது எமது நோக்கமல்ல; எமது ஆட்சிய் முறைமையையோ சமூக முறைமையையோ நாம் ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை என வலியுறுத்திக் கூறினார்.

உட்கட்டுமானங்களும் சீனாவும்
சீனா தனது நாட்டின் உட்கட்டுமானங்களை பெருமளவு அபிவிருத்தி செய்து உலகை வியக்கவைத்தது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியே இந்திய உட்கட்டுமானங்களில் சீன முதலீட்டை விரும்பும் அளவிற்கு சீனாவின் உட்கட்டுமான வளர்ச்சி அமைந்திருக்கின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதையின் Belt என்பது பொருளாதார வலயங்களைக் குறிக்கும். பாதை செல்லும் நாடுகளில் சீனா உட்கட்டுமானங்களில் ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யவுள்ளது. ஆனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ்கத்தின் Atif Ansar, Bent Flyvbjerg, Alexander Budzier, and Daniel Lunn ஆகிய நிபுணர்கள்  செய்த ஆய்வின்படி சீனாவின் கட்டுமானங்கள் பொருளாதாரத் திறன்மிக்கவை அல்ல எனத் தெரிவிக்கப் படுகின்றது. நைஜீரியா, இந்தோனேசியா, மியன்மார், இலங்கை, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சீனா செய்த உட்கட்டுமான வேலைகளை இவர்கள் ஆய்வு செய்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா நிர்மானித்த விமான நிலையம், விளையாட்டு மைதானம் போன்றவை பயனற்றுப் போனதை இலங்கையர் அனைவரும் அறிவர்.

வெறுப் பட்டுப்பாதை மட்டுமல்ல
சீனா தான் 2013-ம் ஆண்டு ஆரம்பித்த Belt and Road, One Belt One Road எனப் பல பெயர்களால் அழைத்தாலும் அதன் நோக்கம் உலக வர்த்தகத்திலும் போக்கு வரத்திலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே. பொதுவாக இதைப் புதிய பட்டுப்பாதை என பலரும் அழைக்கின்றார்கள். சீனாவின் பழைய பட்டுப்பாதை ஆசியாவில் உள்ள நாடுகளிற்கும் மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளிற்கும் சீனாவின் பட்டை விற்பனை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. அந்தப் பெரும் பாதை வலையமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய சிறந்த கடற்படையையும் சீனா கொண்டிருந்தது. சீனாவின் புதிய பட்டுப்பாதை இரு வழிகளைக் கொண்டுள்ளது. ஒன்று கடல்வழியானது மற்றது தரைவழியானது. இது ஆசியா ஐரோப்பா தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை உள்ளடக்கியது. துறைமுகங்கள், பெருந்தெருக்கள், தொடருந்துப்பாதைகள், பொருளாதார வலயங்கள், எரிபொருள் வழங்கு குழாய்கள் போன்ற பலவற்றைக் கொண்டது. சீனா 124பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு முதலீடு செய்யவுள்ளது. இதில் ஒன்பது பில்லியன் டொலர்கள் வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது விநியோகம் மற்றும் கொள்வனவிற்கான பாதைகளின் பாதுகாப்பும் சீனா வெளியில் சொல்லாத திட்டம் என பல ஐரோப்பிய அரசுறவியலாளர்கள் கருதுகின்றனர். புதியபட்டுப் பாதையில் தனது படைத்தளங்களையும் சீனா நிறுவும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பியப் பெரு நிலப்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை அதிலும் படைத்துறை ஆதிக்கத்தை ஒரு சில நாடுகள் மட்டுமே ஆதரிக்கலாம்.

சீனாவின் மென்வலு முன்னெடுப்பு
பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் மூலம் மற்ற நாடுகளைத் தனக்கு ஏற்புடையதாக்கும் நாடு மென்வல்லரசு எனப்படும். சீனா தனது முதலீடு, கடன் போன்றவை மூலம் பல நாடுகளுடனான தனது உறவை மேம்படுத்த முயல்கின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்த முயல்கின்றது. ஏற்கனவே சீனா தனது மென்வலு முன்னெடுப்பிற்காக ஆண்டொன்றிற்கு  உலகில் அதிக மக்கள் தொகையும், இரண்டாவது பெரிய பொருளாதாரத்தையும், படைத்துறைத் தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீட்டையும் கொண்ட சீனா உலகின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்கவேண்டும் என்பது தற்போதைய சீன ஆட்சியாளர்களின் கனவு. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த நிலையில் இருந்து அமெரிக்காவை அகற்றுவதும் சீனா ஆட்சியாளர்களின் இரகசியத் திட்டமாகும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனா உலக அரங்கின் தனது பிம்பத்தை சீர் செய்யப் பலவழிகளில் முயல்கின்றது.

மென்வல்லரசிற்கு அவசியமானது காலாச்சார உறவு
பரிஸ், மொல்ரா, பேர்லின், மொஸ்க்கோ, கொப்பெனஹன், பிரசல்ஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய நகரங்களில் சீனா கலாச்சார நிலையங்களை நிறுவியுள்ளது. 2013-ம் ஆண்டு சீனா தனது 16+1 முன்னெடுப்பு என்னும் திட்டத்தை வரைந்தது இதன் படி 16 நாடுகளுடன் சீனா தன்னை அரசுறவியல் ரீதியில் நெருங்கி இணைத்துக் கொள்ளப் போவதை அறிவித்தது. பல்கேரியா, குரோசியா, செக் குடியரசு, எஸ்த்தோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, போலாந்து, ருமேனியா, சுலோவேக்கியா, சுலோவேனியா, அல்பேனியா, பொஸ்னியா, ஹெர்ஜெகொவினா மொண்டினிகுரோ, சேர்பியா, மசடோனியா ஆகியவை அந்தப் பதினாறு நாடுகளாகும். இதில் பதினொரு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கொண்ட நாடுகளாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் சீனா தன் வசப்படுத்துவது இலகுவானதல்ல. 202 நாடுகளிலிருந்து நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் கல்வி பயில்கின்றனர். சீன அரசின் புலமைப்பரிசில் பயிலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் கொரியா, அமெரிக்கா, தாய்லாந்து, இந்தியா, இரசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இது சீனா உலகெங்கும் தனது கலாச்சார உறவை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கையாகும்.

மெல்வல்லரசும் ஊடக ஆதிக்கமும்
பல மொழிகளில் தொலைக்காட்சிச் சேவைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீனா பற்றி உலகம் அறியாத பல தகவல்களை உலகிற்கு சீனா உணர்த்தி வருகின்றது. மேற்கு நாட்டு வல்லரசுகளின் உலக ஆதிக்கத்திற்கு ஊடகத் துறை பெரும் பங்களிப்பாற்றி வருகின்றது. போர் முனைகளில் கூட அவை பங்களிப்புச் செய்கின்றன. 1998-98-ம் ஆண்டுகளில் நடந்த கொசொவா போரின் போது நேட்டோ படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்த போதெல்லாம் அமெரிக்க சார்புத் தொலைக்காட்சிகள் அங்கு நீச்சலுடையில் கவர்ச்சிகரமான பெண்கள் பலர் நடிக்கும் பே வாச் என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் நாடகங்களின் அங்கங்களை ஒளிபரப்புச் செய்து மக்களை வீடுகளுக்குள் தங்க வைத்தன. சீனச் செய்தி நிறுவனமான சின்ஹுவா உலகெங்கும் 160 நிலையங்களை நிறுவியுள்ளது 2020-ம் ஆண்டுக்குள் மேலும் நாற்பது நிலையங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 2016-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் முன்னணித் தொலைக்காட்சி தனது CCTV என்ற பெயரை என்பதில் இருந்து China Global Television Network என மாற்றியுள்ளது. இது ஆறு அலைவரிசிகளில் ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, இரசியமொழி, ஸ்பானிய மொழி ஆகியவற்றில் ஒளிபரப்புச் செய்கின்றது. சீன வானொளி 14 நாடுகளில் முப்பது ஒலிபரப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது.

சீனாவின் வறுமை ஒழிப்பு
1978-ம் ஆண்டில் தனது பொருளாதாரச் சீர்திருத்தத்தைத் தொடங்கியதில் இருந்து சீனா 800மில்லியன் மக்களை வறுமைக் கோட்டின் கீழ் இருந்து விடுவித்துள்ளது. உலக வரலாற்றில் எந்த நாடும் காணாத வேகமான பொருளாதார வளர்ச்சியை சீனா கண்டுள்ளது. சீனாவின் புள்ளி விபரங்கள் தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் எப்போதும் உள்ளது. சீனாவில் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்கள் தொகை தொடர்பான தகவலில் உலக வங்கியும் சீன அரசும் முரண்பட்ட தகவல்களை வெளிவிடுகின்றன. உலக வங்கியின் அறிக்கையின் படி 16மில்லியன் மக்களின் நாளாந்த வருமானம் 1.9 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகப் பெறுகின்றனர். 150 மில்லியன் மக்கள் 3.10 டொலர்களுக்கு குறைவான நாளாந்த வருமானம் பெறுகின்றார்கள். சீன அரசின் புள்ளிவிபரங்களின் படி 43.4 மில்லியன் சீனர்கள் ஒரு டொலர்களுக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றார்கள். 2020-ம் ஆண்டு சீனாவில் வறுமை முற்றாக ஒழிக்கும் திட்டத்தை சீனா நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. இன்னும் 70 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றார்கள். சீனாவின் பொருளாதாரம் பெருமளவில் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. சீனாவின் உள்நாட்டு மக்களின் கொள்வனவு வலுவை அதிகரித்தால் மட்டுமே ஏற்றுமதியில் தங்கியிருப்பதைக் குறைக்க முடியும். ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் அது தனது ஏற்றுமதியை தொடர்ந்தும் தக்க வைத்திருக்கும் திட்டத்துடனேயே இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

புறக்கணித்த இந்தியா
சீனாவின் வலயமும் பாதையும் மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து செய்யும் பொருளாதாரப் பாதை திட்டம் இருக்கின்றது. இந்தப் பொருளாதரப் பாதையின் ஒரு பகுதியாக பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரும் இருக்கின்றது. முழுக் கஷ்மீரும் தனது நாட்டின் ஒரு பகுதியே என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கின்றது. அதனால் இந்தத் திட்டம் தனது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தக்கம் விளைவிக்கின்றது எனச் சொல்லி இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கின்றது. ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் முழுமையாக நிறைவேறினால் இந்தியா தனது உலக வர்த்தகச் செயற்பாட்டிற்கு சீனாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். பிலிப்பைன்ஸின் அதிபர் Rodrigo Duterte இந்த மாநாட்டுக்குச் செல்லாததும் கவனிக்கத் தக்கது. சீனாவின் மற்று மொரு அயல்நாடான ஜப்பானும் சீனாவில் நடந்த மாநாட்டைப் புறக்கணித்திருந்தது. ஆனால் மாநாட்டில் சீன அதிபர் உரையாற்றிய போது முன் வரிசையில் இரசிய அதிபரும் துருக்கிய அதிபரும் அமர்ந்திருந்து அவ்வப்போது கைதட்டியது சீனாவிற்குப் பெருமை சேர்த்தது.

சீனாவின் ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி
பட்டுப்பாதையில் செய்யும் முதலீடுகளிற்காகவே சினா ஆசிய அபிவிருத்தி வங்கியை உருவாக்கியது. அதற்கு சீனா ஐம்பது பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. மேலதிகமாக தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு 40பில்லியன் டொலர்களையும், கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு 25பில்லியன் டொலர்களையும்பிரேசில், இரசியா, இந்தியா, சீனா தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட் பிரிக்ஸ் கூட்ட்மைப்புக்கு என உருவாக்கிய புதிய அபிவிருத்தி வங்கிக்கு 41 பில்லியன் டொலர்களையும் சீனா தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது.

இரசியாவின் திட்டத்துடன் முரண்படுமா?
சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டம் மத்திய ஆசிய நாடுகளையும் உள்ளடக்கியது. அந்த நாடுகளின் சீனா பொருளாதார வலயங்களையும் பெரும் உட்கட்டுமானத் திட்டங்களையும் நிறைவேற்றவிருக்கின்றது. ஆனால் இரசியாவின் யூரோஏசியப் பொருளாதாரக் கூட்டமைப்பு மத்திய ஆசிய நாடுகளையும் உள்ளடக்கியது. இரசிய அரசுறவியலாளர்கள் இரசியா புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் முதலீடு செய்வதையும் இலாபத்தை ஈட்டுவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் இத்திட்டத்தை சீனாவின் அரசியல் மற்றும் குறியீட்டிய (symbolism) நடவடிக்கையாகப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இரசியாவின் உள்கட்டுமான அபிவிருத்தியில் சீனாவின் முதலீட்டையும் இரசியா விரும்புகின்றது. இவற்றுக்காகத்தான் புட்டீன் இந்த மாநாட்டிற்கு சென்று இடைவேளையின் போது இனிமையாம பியானோ வாசித்தார்.

செயற்கை விவேகத்தினதும் முப்பரிமாண அச்சுக்கலையினதும் வளர்ச்சி சீனாவின் மலிவான தொழிலாளர்களுக்கான தேவையை பல பன்னாடு நிறுவனங்களுக்கு இல்லாமல் செய்துவிடும். இதை அடுத்த பத்தாண்டு காலத்தில் நாம் காணலாம். இந்த நிலையில் சீனாவின் புதிய பட்டுப்பாதை இந்தியாவினதும் ஜப்பானினதும் ஒத்துழைப்பின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப் படுமா?


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...