Wednesday, 23 March 2016

பிரஸல்ஸ் குண்டு வெடிப்பின் பின்னணி

பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்களுக்கு உரிமை கோரிய ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் "தாக்குதலின் துல்லியத்திற்கும் வெற்றிக்கும் அல்லாவிற்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் உடன் பிறப்புக்களை மாவீரர்களாக ஏற்றுக் கொள்ளும்படி அல்லாவை வேண்டுகின்றோம். அல்லா தயை கூர்ந்தால் இனி வருபவை மோசமானவையாகவும் கடுமையானவையாகவும் இருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • "What is coming is worse and more bitter, Allah permitting. "Thanks be to Allah for his accuracy and success, and we ask Allah to accept our brothers among the martyrs."
 லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு பிரஸல்ஸ் நகரக் குண்டுத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதனது அறிக்கையில் "No place in the world is safe from its evil and crimes, crimes that are derived from its black venom towards humanity,"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி குண்டு வெடிப்புக்களின் சூத்திரதாரி ஒருவரை பெல்ஜியக் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 24 வயதான நஜீம் லாஷ்ரௌனி என்பவரே கைது செய்யப்பட்டவராவார். ஆனால் கைது செய்யப்பட்டவரின் பெயர் தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வருகின்றன. 

The Anti-Mediaவின் இணயத் தளத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை அறியப்படு முன்னரே இஸ்லாமியத் தீவிரவாதிகள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. குண்டு வெடிப்புக்களுக்கான பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவே ஏற்கவேண்டும் என Claire Bernish  என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தீவிரவாதத்தின் உற்பத்திக்கு ஏகாதிபத்தியமே காரணம் என அடித்துச் சொல்கின்றார்:-
  • Indeed, blaming an entire religion for the actions of a few falsely claiming they follow its teachings might be precisely what the ignominious war machine of U.S. imperialism needs. In fact, modern-day terrorism exists because of the actions of a specific religion — and it isn’t Islam. Imperialism, and its roots planted firmly in statism, inarguably create, foster, and perpetuate terrorism at an alarming rate. An active military campaign and overarching surveillance program ostensibly embarked upon to demolish terrorism — anywhere on the planet — instead manufacture terrorism at an increasingly rapid rate.

சல்லடை போடப்பட்ட பிரஸல்ஸ்
பிரஸல்ஸ் நகரிலேயே நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பின தலைமையமும் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பெல்ஜியத்தினதும் தலைநகர் பிரஸல்ஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் அதிர்ந்தது. பெல்ஜியத்தின் உளவுத்துறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 2015-ம் ஆண்டு பாரிஸ் நகரில் பல இடங்களில் செய்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களுக்கான திட்டம் பிரஸல்ஸில் வைத்தே தீட்டப்பட்டது. பிரஸல்ஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கும் தளமாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப் பட்டுள்ளது. ஒரு கோடியே ஒரு இலட்சம் மக்கள் வாழும் பெல்ஜியத்தில் பத்து இலட்சம் மக்கள் பிரஸல்ஸில் வாழ்கின்றனர். பாரிஸ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பிரஸல்ஸ் நகர் மூடப்பட்டு சல்லடை போட்டு தீவிரவாதிகள் தேடிக் கைது செய்யப்ட்டனர்.

தற்கொடைத் தாக்குதல்
பிரஸல்ஸ் பன்னாட்டு விமான நிலையமான ஜாவுன்டெம் (Zaventem) விமான நிலையத்தி புறப்பாடு முனையத்தில் நடைபெற்றத் தாக்குதலில் 11 பேரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகத்திற்கு அண்மையில் உள்ள பிரஸல்ஸ் நிலக்கீழ் சுரங்க தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றத் தாக்குதலில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கண்காணிப்பு ஓளிப்பதிவுகள் மூலம் ஒரு தாக்குதலாளி இனம் காணப்பட்டு அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மூவர் அப்பதிவில் உள்ளனர் அவர்களில் இருவர்  தற்கொடையாளிகள் என்றும் ஒருவர் தப்பி விட்டார் என்றும்  சொல்லப்படுகின்றது. இருவர் Khalid El Bakraoui, Brahim El Bakraoui என்னும் உடன் பிறப்புக்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு குண்டு வெடிக்காத நிலையில் வீடு ஒன்றில் இருந்து வேதியியல் பதார்த்தங்கள் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசின் கொடி ஆகியவற்றுடன் கண்டெடுக்கப் பட்டுள்ளது. புறப்பாடு முனையத்தில் காலை எட்டு மணியளவிலும் தொடருந்து நிலையத்தில் காலை 9.11 மணியளவிலும் குண்டுகள் வெடித்தன.

பாரிஸ் தாக்குதலின் பின்னர் உயிருடன் பிரஸல்ஸிற்குத் தப்பிச் சென்ற சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) கைது செய்யப் பட்டு நான்கு நாட்களின் பின்னர் பிரஸல்ஸ் தாக்குதல் நடந்துள்ளது.  பாரிஸ் நகரத்தில் 2015 நவம்பர் மாதம் 13-ம் திகதி நடந்த தொடர் குண்டுத் தாக்குதல்களில் காற்பந்தாட்ட மைதானத்திற்குள் குண்டு வெடிக்க வைக்கச் சென்ற சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) வாசலில் இருந்த கடுமையான   சோதனை காரணமாக உட்செல்ல முடியாமல் குண்டை வெடிக்க வைக்காமல் பிரஸல்ஸிற்குத் தப்பிச் சென்றார். பிரஸல்ஸ் குண்டு வெடிப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் தனது தாயாரின் வீட்டிற்கு சில மீட்டர் தூரத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கைது செய்யப் பட்டார். இவர் கைது செய்யப்பட்ட மொலன்பீக் பகுதி அதிக அளவான இஸ்லாமியர்கள் வாழும் பிரஸல்ஸ் நகரின் ஓர் ஏழ்மையான பகுதியாகும். சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) தான் முன்பு பாவித்த கைப்பேசியை  மீளவும் செயற்படுத்திப் பாவிக்கத் தொடங்கியமையால் அவரின் நடமாட்டங்களை அவதானிக்கக் கூடிய நிலை உருவானது. பெல்ஜிய சட்டப்படி இரவு நேரத்தில் கண்டபடி வீடு புகுந்து சோதனை செய்ய முடியாது. இதனால் அவரைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் அவர் கண்காணிக்கப் பட்டார். 

பிரஸல்ஸ் நகரின் மொலன்பீக் பகுதியில் கைது செய்யப் பட்ட 26 வயதான சல்லா அப்டெஸ்லாம் ஒரு வழங்கல் ஏற்பாடு நிபுணராவர் (logistics specialist). ஒரு தாக்குதலுக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்வதில் அவர் வல்லவர். பாரிஸ் நகரத் தாக்குதலுக்குத் தேவையான பொருட்கள் போக்குவரத்து, தங்குமிடம்,  இவரே ஏற்பாடு செய்திருந்தார். பாரிஸ் தாக்குதல் மேற்கு நாடுகள் எதிர்பார்த்திருந்ததிலும் பார்க்க தீவிரவாதிகள் தொழில்நுட்ப ரீதியில் நவீனமடைந்திருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தது.

மற்ற நாடுகளிலும் பார்க்க அதிகமான போராளிகள் பெல்ஜியத்தில் இருந்து சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்து மேற்காசியாவில் போர் செய்கின்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பெல்ஜியம் திரும்பியுள்ளனர்.

TATP வகைக் குண்டுகள்
2004-ம் ஆண்டு ஸ்பானிய நகர் மட்ரீட்டில் தொடருந்தில் செய்யப்பட்ட குண்டுத் தாக்குதலில் 191 பேர் கொல்லப்பட்டனர். இலண்டனில் 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் திகதி 52 பேர் கொல்லப்பட்டனர். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் திகதி பாரிஸில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் 130பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் வெடித்த குண்டுகளில் triacetone triperoxide, or TATP பாவிக்கப்பட்டது. இக்குண்டுகளை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு உருவாக்கலாம். கடந்த பத்து ஆண்டுகளாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களில் வெடித்த குண்டுகள் TATPஐக் கொண்டு உருவாக்கப் பட்டவையே. இவை இலகுவாக உருவாக்கக் கூடியவை என்றாலும் இலகுவில் வெடிக்கக் கூடியவை என்பதால் இவற்றைக் கையாள சிறந்த பயிற்ச்சி தேவை. 2009-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் அல் கெய்தாவின் ஜிஜி என்பவர் முதன்முறையாக தலை முடிக்கு மை பூசப்பாவிக்கப் படும் வெள்ளையாக்கிகளில் (hair bleach) இருந்து TATP குண்டுகளை உருவாக்கினார்.

நெருக்கடியில் இருக்கும் ஐ எஸ்
உலகெங்கும் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிலும் சிரியாவிலும் தமது நிலப்பரப்பில் 20 விழுக்காட்டை இழந்துள்ளனர். அவர்கள் தமது இக்கட்டான நிலையில் இருந்து கொண்டு செய்யவிருக்கும் தாக்குதல்களுக்கு பிரஸல்ஸ் தாக்குதல்கள் முன்னோடியாக அமையலாம்.  இதனால்தான் பிரஸல்ஸ் குண்டு வெடிப்பின் வெளியிட்ட அறிக்கையில் அல்லா தயை கூர்ந்தால் இனி வருபவை மோசமானவையாகவும் கடுமையானவையாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். சல்லா அப்டெஸ்லாமின் கைதுக்கான பழிவாங்கல் தான் பிரஸல்ஸ் குண்டு வெடிப்பு என்ற கருத்து பரவலாக முன்வைக்கப் பட்டபோதிலும் 4 நாட்களுக்குள் இப்படி ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது.ஒரு தீவிரவாத அமைப்புக்கு அது செய்யும் தாக்குதல்களின் வெற்றிகளே அதன் இருப்பை உறுதி செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்க்கும்.

அமெரிக்காவில் வேறு
அமெரிக்காவில் குடியேறுபவர்கள் உடனடியாக வேலை செய்ய அனுமதிக்கப் படுகின்றார்கள். அதனால் அவர்கள் இலகுவாக மற்ற சமூகத்தினருடன் இணைந்து கொள்கின்றார்கள். அமெரிக்காவில் பல இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் இஸ்லாமியர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு முறியடிக்கபடுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறுபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப் படுவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது. அவர்களுக்கான சமூகநலக் கொடுப்பனவுகள் குறைக்கப் பட்டுக் கொண்டே போகின்றன. குடியேறுபவர்களை மக்களும் காவற்துறையினரும் தீவீரவாதிகளாகப் பார்ப்பது அதிகரித்துக் கொண்டே போகின்றது. பெல்ஜியத்தில் இருந்து சிரியா சென்று ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து போராடியவர்களில் நூறு பேர் இப்போது மீண்டும் பெல்ஜியம் திரும்பியுள்ளனர். இவர்களால் ஐரோப்பாவின் பல நகரங்களில் தாக்குதல்கள் நடத்த முடியும். அமெரிக்கா பல ஐரோப்பாவின் உளவுத் துறையினர் ஐரோப்பிய நாடுகளின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றன என எட்வேர்ட் ஸ்நோடன் அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க உளவுத் துறையினர் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியது அல்லது நிறுத்தியது திவிரவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது என சில அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 எல்லையில்லாத் தொல்லை தரும் Sykes-Picot எல்லைகள்
 பெல்ஜியத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் பலவிதத்திலும் ஓரம் கட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். வேலைவாய்ப்பு, சமூகநலக் கொடுப்பனவுகள் போன்றவற்றில் அவர்கள் வஞ்சிக்கப் படுகின்றார்கள். இது பலரை விரக்தியடையச் செய்து தீவிரவாதிகளாக மாற்றுகின்றது.பிரஸல்ஸ் நகரத்தின் செல்வர்கள்  வாழும் பகுதியையும் ஏழைகள் வாழும் பகுதியையும் ஒரு கால்வாய் பிரிக்கின்றது. ஏழைகள் வாழும் பகுதியில் மொலன்பீக்கும் அடக்கம். அங்கு பல குற்றச் செயல்கள் நடக்கின்றன. விமான நிலையக் குண்டு வெடிப்பில் பங்கு பற்றியதாகக்  கருதப்படும் Khalid El Bakraoui, Brahim El Bakraouiஆகிய  உடன் பிறப்புக்கள் இதுவரை குற்றச் செயல்கள் புரிந்தமைக்காகவே தேடப்பட்டு வந்தார்கள். அவர்கள் பயங்கரவாதிகளாக பெல்ஜியக் காவற்துறையினாரால் கருதப்படவில்லை. இது போன்ற காரணங்களுக்காக பெல்ஜிய உளவுத்   துறை திறமையற்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகின்றது. குண்டு வெடிப்புக்களின் காரணங்கள் என்று தேடிப் போனால் முதலாவாது   காரணம் ஓரம் கட்டப்பட்ட இஸ்லமியர்கள். இரண்டாவது காரணம் பலஸ்த்தீனம், ஆப்கானிஸ்த்தான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமையின்மை. மூன்றாவது காரணம் மேற்காசியாவில் பல்வேற்பட்ட இனக் குழுமங்களை தமது ஆட்சியின் கீழ் அடக்கி வைத்திருந்த சதாம் ஹுசேய்ன், மும்மர் கடாஃப் போன்றோர் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டமையும் அவர்களுக்குப் பதிலாக நீதியான ஆட்சி நிலைநாட்டப்படாமையும். மூல காரணம் என்று பார்த்தோமானால் முதலாம் உலகப் போரின் பின்னர் ஒரு இஸ்லாமிய வல்லரசு உருவாகக் கூடாது என்ற கபட நோக்கத்துடன் லெபனான், சிரியா, ஈராக், லிபியா, அல்ஜீரியா, மாலி போன்ற நாடுகளின் எல்லைகள் Sykes-Picot எல்லைகள் என்னும் பெயரில் வரையப்பட்டன. இனங்களின் பரம்பல்களைச் சரியாகக் கருத்தில் கொண்டு இந்த எல்லைகள் மீள் வரையப்படாவிட்டால் இஸ்லாமியத் தீவிரவாதம் தொடரும்.

Tuesday, 22 March 2016

சிரியக் குர்திஷ் போராளிகள் ஏன் தனிநாட்டுப் பிரகடனம் செய்யவில்லை?

அரபுக்கள், துருக்கியர், ஈரானியர் ஆகியோரின் மோசமான எதிர்ப்புக்களுக்கும் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான கால் வாரல்கள் மத்தியிலும் தம் சுதந்திரத்திற்காகப் போராடி வருகின்றனர் குர்திஷ் மக்கள். ஈராக்கிலும் சிரியாவிலும் தமக்கு என பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன குர்திஷ் போராளிகள். கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் தீரத்துடன் போராடி வரும் சிரியாவில் உள்ள  (People’s Democratic Union -PYD) கட்சியின் போராளிகளின் உறுப்பினர்கள் 200 பேர் Rmeilan நகரிமக்கள் குடியாட்சி ஒன்றியம்ல் ஒன்று கூடி சிரியாவின் வட கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ள ரொஜாவா பிராந்தியத்தை ஒரு இணைப்பாட்சி அரசாகப் (Federal State) பிரகடனப் படுத்தியுள்ளனர். ஏன் அவர்கள் தனி நாட்டுப் பிரகடனம் செய்யவில்லை?

இரசியாவின் இரு முனைத் தாக்குதல்
ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் சுயநிர்ணயப் பிரகடனம் செய்வதைத் தாம் ஆதரிப்பதாக ஈராக்கில் உள்ள இரசியத் தூதுவராலயம் கருத்து வெளியிட்டுள்ளது. இது இரசியாவின் இரு முனைத் தாக்குதலாகும். ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் அமெரிக்காவுடன் நெருங்கமாக உள்ளனர். ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் அப்படி ஒரு பிரகடனம் செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்கப் போவதில்லை. அமெரிக்க-குர்திஷ் உறவுக்கு இரசியா கொடுக்கும் ஓர் அடி இந்த ஆதரவாகும். மற்ற அடி குர்திஷ் மக்கள் எங்கும் சுதந்திரம் பெற்றுவிடக் கூடாது என இருக்கும் துருக்கிக்காகும். இரசியாவின் கருத்து: “Everyone should know that the price of Kurds' sacrifices is much bigger than independence, and the entire world is responsible for these [tragedies],” சிரியாவில் குர்திஷ் போராளிகள் செய்த இணைப்பாட்சிப் பிரகடனம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இரசியா மற்றத் தரப்பினரும் இதை ஏற்றுக் கொண்டால் இது ஒரு சாத்தியமான தெரிவு என்றது. இரசியாவும் சிரிய ஆட்சியாளரகளின் அதிருப்தியைச் சம்பாதிக்க விரும்பவில்லை.

அமெரிக்காவின் கபடம்
குர்திஷ் போராளிகள் இணைப்பாட்டி அரசைப் பிராகடனம் செய்ததை அவர்களின் கூட்டாளியான ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் மக்களுடன் தேவை ஏற்படும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு பின்னர் அவர்களின் கால்களை வாரிவிடும்.    குர்திஷ் போராளிகள் இணைப்பாட்டி அரசைப் பிராகடனம் செய்ததை அவர்களின் கூட்டாளியான ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் மக்களுடன் தேவை ஏற்படும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு பின்னர் அவர்களின் கால்களை வாரிவிடும்  இரசியா மற்றத் தரப்பினரும் இதை ஏற்றுக் கொண்டால் இது ஒரு சாத்தியமான தெரிவு என்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரை குர்திஷ் மக்களுடன் அது வைத்திருக்கும் உறவிலும் பார்க்க துருக்கியர்களுடன் வைத்திருக்கும் உறவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திஷ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றை அறிய கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்(click):
பகடைக் காய்களாக இருக்கும் குர்திஷ் மக்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள் 
அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின்  படைத்துறைச் சேவைக்கான குழுவின் முன் உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் துருக்கியுடன் இணைந்து அமெரிக்காவும் சிரியாவில் குர்திஷ் மக்களின் இணைப்பாட்சி அரசுப் பிரகடனத்தை எதிர்க்கின்றது என்றார்.

தீரமிக்க குர்திஷ் போராளிகள்
வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும்  சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும்  YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. உலகிலேயே மிகத் திறமையாகப் போராடக் கூடிய பெண் போராளிகளாக தற்போது சிரியாவிலுள்ள குர்திஷ் பெண்களே இருக்கின்றார்கள். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போர் புரிவதில் குர்திஷ் போராளிகளே முன்னணியில் திகழ்கின்றார்கள்.

வேடிக்கையான பிரகடனம்.
ஒரு இனம் இணைப்பாட்டி அரசைப் பிராகடனம் செய்வது இதற்கு முன்பு நடந்ததாகவும் தெரிவில்லை அரசியலமைப்பு நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் தெரியவில்லை. சிரியாவின் ஆட்சியாளர்கள் ஏற்காதவரை இந்த இணைப்பாட்சிப் பிகடனம் செல்லாக் காசே. இப்படி இருக்கையில் குர்திஷ் போராளிகளின் இந்தப் பிரகடனம் சற்று வேடிக்கையானதே. நான் தனியாக ஒரு வியாபாரம் தொடங்குவதற்கு அடுத்தவன் அனுமதி தேவையில்லை ஆனால் அடுத்தவன் ஒருவனுடன் பங்காக இணைந்த்து வியாபாரம் தொடங்குவதாயின் அந்த அடுத்தவனின் சம்மதம் அவசியம்.

ஆதரவு தெரிவிக்கும் மற்றப் போராளி அமைப்புக்கள்.
Rmeilan நகரில் குர்திஷ் போராளிக ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிரியாவில் உள்ள அரபுக்கள், துருக்கியர், கிறிஸ்த்தவர்கள் ஆகியவர்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் இணைப்பாட்சிப் பிரகடனத்திற்கு தமது ஆதரவையும் தெரிவித்தனர். சிரியாவின் வெவேறு பிரதேசங்கள் வெவ்வேறு படைக்கலன்கள் ஏந்திய குழுக்களின் கட்டுப்பாடுகளின் கீழ் இருக்கும் நிலையில் ஓர் இணைப்பாட்சி அரசு அமைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. குர்திஷ் போராளி அமைப்பினர் பெரும் நிதி நெருக்கடியின் கீழ் இருக்கின்ற நிலையில் ஒரு தனிநாட்டுப் பிரகடனம் நிலைமை யை மோசமாக்கும் எனவும் கருதப்படுகின்றது.

ஈராக்கிலும் பிரகடனம் செய்யப் படுமா?
சிரியாவில் உள்ள வைபிஜி/வைபிஜே குர்திஷ் போராளிகளிலும் பார்க்க உறுதியான ஒரு நிழல் அரசை ஈராக்கில் உள்ள பெஷ்மேர்கா என்னும் குர்திஷ் போராளி அமைப்பு நிறுவியுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே ஈராக்கிய அரசியலமைப்பில் அரை இணைப்பாட்சி (semi-federal) அலகு வழங்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கின் பெரும் பகுதியைக் கைப்பற்றிய போது குர்திஷ் போராளிகள் தாம் வாழும் பிரதேசத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். ஏர்பில் நகரை தலைநகராகக் கொண்டு அவர்கள் உலக வர்த்தகத்திலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் தமது ஆளுமையை நாளுக்கு அதிகரித்து வருகின்றனர். அவர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்வார்களா என்ற கேள்வி போய் எப்போது செய்வார்கள் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஈராக்கில் குர்திஷ் மக்கள் சுதந்திரப் பிரகடனம் செய்வதை ஈராக்கும் துருக்கியும் மட்டும் எதிர்க்காது. சவுதி அரேபியா போன்ற சுனி முஸ்லிம் நாடுகளும் கடுமையாக எதிர்ப்புக்காட்டலாம். ஈராக்கில் இருந்து குர்திஷ் மக்கள் பி்ரிந்து சென்றால் அது ஈராக்கில் மக்கள் தொகைக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அங்கு சிறுபான்மையினராக வாழும் சுனி முஸ்லிம்களின் நிலைமை மேலும் வலுவிழக்கச் செய்யப்படும். ஈராக்கில் தனிநாட்டுப் பிரகடனம் செய்வது மட்டும் குர்திஷ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காது. அவர்களிடையே உள்ள இரு பிரிவினர் 1990களில் கடுமையாக மோதிக் கொண்டனர். தற்போது ஒற்றுமையாக உள்ளனர். மீண்டும் அவர்களிடையே உள் மோதல் வெடிக்கலாம். வெளி  வலுக்கள் அதற்குத் தூபம் போடலாம்.

துருக்கியும் இந்தியா போலே
துருக்கி சிரியாவின் தேசிய ஒற்றுமையும் பிராந்திய ஒருமைப்பாடும் பேணப்படவேண்டும் எனச் சொன்னது. இதைத்தான் இலங்கை தொடர்பாக இந்தியா அடிக்கடி கூறுவதாகும். ஜெனிவாவில் சிரியப் பிரச்சனை தொடர்பாக நடக்கும் பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஆட்சேபனை தெரிவித்ததால் குர்திஷ் மக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.குர்திஷ் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என இரசியா வலியுறுத்தி இருந்தது. அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்கள் குடியாட்சி ஒன்றியத்தின் போராளிகளுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. அந்த ஏமாற்றத்தின் விளைவாகவும் இணைப்பாட்சிப் பிரகடனம் கருதப் படுகின்றது. குர்திஷ் போராளிகள் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருந்த்தால் பிரடனம் செய சில மணித்தியாளங்களுக்குள் துருக்கியப் படையினர் குர்தீஷ் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. புவிசார் நிலைமைகள் துருக்கிக்குச் சாதாகமாக இருக்கின்றன. இதனால் சிரியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்துக்குள் ஓர் இணைப்பாட்சி அரசாக இருப்பது அவர்களுக்கு துருக்கிக்கு எதிரான அரசுறவியல் (இராசதந்திர) கவசத்தை வழங்குகின்றது. குர்திஷ் தலைவர்களின் கருத்து இப்ப்படி இருந்தது:
  • Syrian Kurds are willing to stay within the country's borders after announcing plans to create a federal region in northern Syria, co-chair of the Syrian Kurdish Democratic Union Party (PYD) Saleh Muslim told Sputnik on Thursday.
குர்திஷ் போராளிகளின் இணைத்தலைவரான சலேஹ் முஸ்லிம் சிரியக் குர்திஷ் மக்கள் இணைப்பாட்சிப் பிரகடனத்தின் பின்னரும்  சிரிய நாட்டின் எல்லைக்குள் இருக்க விரும்புகின்றார்கள்  என்றார்.

ஐக்கிய அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையில் உள்ள உறவு இன்னும் பல ஆண்டுகள் ஒரு வளர்ச்சி நிலையில் இயங்குவதற்கான சூழ் நிலைதான் காணப்படுகின்றது. குர்திஷ் மக்களின் மோசமான எதிரிகளான துருக்கியர்களுடன் நட்பாக இருக்கும் அமெரிக்காவுடன் குர்திஷ் மக்களின் உறவு எந்த நன்மையையும் இனியும் தரப்போவதில்லை.  ஏற்கனவே ஏமாற்றப்பட்டது போல் இனியும் ஏமாற்றப் படுவார்கள்.

Monday, 21 March 2016

துடித்த ஈரானிய மக்களும் வெடித்த ஏவுகணைகளும் -

1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட மதவாதப் புரட்சியின் பின்னர் ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக்கப் பட்டது. அங்கு மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த ஒரு ஆட்சி முறைமை நிலவுகின்றது. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி ஈரானில் நடந்த இரண்டு தேர்தல்கள் கடந்த 37 ஆண்டுகளில் நடந்த மற்றப் பல தேர்தல்களிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் மக்கள் அதிக அக்கறை காட்டுவனவாகவும் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்ட தேர்தால்களாகவும் அமைந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளமன்றத் தேர்தலும் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபைக்கான தேர்தலுமே நடைபெற்றன.
ஈரானின் பல அதிகார மையங்கள் உள்ளன:
1. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்
2. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம். ஈரானியப் பாராளமன்றம் Islamic Consultative Assembly என அழைக்கப்படும்.
3. மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை  88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபை.
4. அறிஞர் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சத் தலைவர்
5. உச்சத் தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்புப் பாதுகாவலர் சபை (The Guardian Council of the Constitution)
6. ஈரானியப் படைத்துறை

உச்சத் தலவரே உச்சமானவர்
தற்போது உச்சத் தலைவராக இருப்பவர் அலி கமெய்னி. ஆரம்பத்தில் இருந்தவர் அயத்துல்லா கொமெய்னி.தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் 12 உறுப்பினர்களைக் கொண்ட Guardian Council எனப்படும் காப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். காப்பாளர் சபையில் உள்ள பன்னிரண்டு உறுப்பினர்களில் அறுவர் இஸ்லாமியச் சட்டத்தில் வல்லவர்களாக இருக்க வேண்டும். எஞ்சிய ஆறு பேரும் பல்வேறு சட்டத் துறைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும்.   இவர்கள் பன்னிருவரையும் உச்சத் தலைவர் நியமிப்பார். அதிகாரம் மிக்க இச்சபையை நியமிக்கும் உச்சத்தலைவரே ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force ஈரானில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையமாகும். காப்பாளர் சபை உறுப்பினரை நியமிக்கும் உச்சத் தலைவர் ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் படைத்தளபதியும் உச்சத் தலைவர் ஆவார். அவரே நீதித் துறையில் உயர் பதவிகளில் இருப்போரையும் அரச ஊடகத் துறைக்குப் பொறுப்பானவரையும் நியமிக்கின்றார். உச்சத் தலைவர் பாராளமன்றம் இயற்ற முயலும் சட்டங்களையும் நிறுத்த முடியும்.

அனுமதி பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே
தேர்தலில் போட்டியிட வந்த சீர்திருத்தவாதிகளில்பலரை அரசமைப்புப் பாதுகாவலர் சபை (The Guardian Council of the Constitution) நிராகரித்திருந்தது. இது வாக்காளர்களை விரக்தியடைய வைத்து பலர் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஈரான் ஒரு மக்களாட்சி முறைமையிலான குடியரசு அல்ல என விமர்சிக்கப் படுவது இந்த பாதுகாவலர் சபைக்கு இருக்கும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையினாலாகும். நாட்டின் மொத்த அறிஞர் சபை உறுப்ப்புரிமையான 88இல் 16 தலைநகர் ஈரானுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிட முன்வந்த எல்லாப் பெண்களையும் பாதுகாவலர் சபை நிராகரித்திருந்தது. ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த 50பேர் மீண்டும்போட்டியிட அனுமதிக்கப் படவில்லை.

மக்கள் அக்கறை காட்டினர்
55 மில்லியன் வாக்காளர்களில் 34மில்லியன் பேர் வாக்களிப்பில் பங்குபற்றினர். இம்முறை தேர்தல் சீர்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான கடும் போட்டியாகக் கருதப்படுகின்றது. மூன்றாம் தரப்பினரான மிதவாதிகள் பழமைவாதிகளுடன் இணைந்து கொண்டனர். எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக அளவு வாக்காளர்கள்கள் வாக்களித்த ஈரானியத் தேர்தலில் இளையோர் அதிக அக்கறை காட்டியுள்ளனர். ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகள் நீக்கப் பட்ட பின்னர் நடந்த தேர்தல் என்றபடியால் இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஈரானில் முதலீடு செய்யத் துடிக்கும் மேற்கு நாடுகள் ஈரானியத் தேர்தலை அக்கறையுடன் அவதானித்தன. இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு, இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஈரான் கொடுக்கும் ஆதரவு ஆகியவை ஈரான் மீது மேற்கு நாடுகள் வைக்கும் குற்றச் சாட்டுகளில் முக்கியமானவை. தற்போதைய உச்சத் தலைவர் அயத்துல்லா அல கொமெனி உடல் நலம் குன்றியிருப்பதால் அவரது இடத்திற்குப் புதியவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபைக்கான தேர்தலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.  ஈரானிய நகரவாசிகள் ஈரானில் ஒரு சீர்திருத்தம் அவசியம் எனக் கருதுகின்றனர். சிலர் ஈரான் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டனர்.

சீர் திருத்தத் துடிக்கும் ரௌஹானி

2013-ம் ஆண்டு நடந்த ஈரானின் அதிபர் தேர்தலில் ஈரானில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கொள்கையுடைய ஹசன் ரௌஹானி எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். அவர் தனது சீர்திருத்தத்தை முன்னெடுக்க முடியாதவகையில் பாராளமன்றத்தில் பழமைவாதிகள் பலர் இடம்பிடித்திருந்தனர். 2016-02-29-ம் திகதி நடந்த ஈரானியப் பாராளமன்றத் தேர்தலில் பல பழமைவாதிகள் தோல்வியடைந்துள்ளனர். ஈரானில் அரசியல் கட்சிகள் இல்லை. பொதுக் கொள்கையுடைய வேட்பாளார்கள் ஒருமித்து தேர்தல் பரப்புரை செய்வர். கட்சிகள் இல்லாதபடியால் இந்தக் கொள்கையுடைய இத்தனைபேர் வெற்றி பெற்றார்கள் எனச் சொல்ல முடியாது. ஈரானியத் தேர்தலில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றார்கள் என மேற்குலக ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால் ஈரானிய பழமைவாதிகளின் ஊடகங்கள் அதைப் பச்சைப் பொய் என்கின்றன. தெஹ்ரான் நகரில் மட்டும் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றனர் என்பதை பழமைவாதிகள் ஒத்துக் கொள்கின்றனர். அது வெளிநாட்டுத் தீய வலுக்களுடன் இணைந்து பெற்ற வெற்றி எனவும் அவர்கள் விமர்சிக்கின்றனர். நாடாளவிய முடிவுகளில் தாமே வெற்றி பெற்றதாகவும் பழமைவாதிகள் சொல்கின்றனர். நிபுணர்கள் சபையிலும் தாமே பெரும்பான்மை வலுவுடன் இருப்பதாகவும் அவர்கள் முழங்குகின்றனர். சீர்திருத்தவாதிகளிடையே உள்ள மிதவாதிகள் பெரும் சீர்திருத்தவாதிகள் அல்லர். அத்துடன் தீவிர சீர்திருத்தவாதிகளைத் தேர்தலில் போட்டியிட பாதுகாவலர் சபை அனுமதிக்கவுமில்லை. 290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் பழமைவாதிகள் 112 இடங்களிலும் சீர்திருத்தவாதிகளும் மையசாரிகளும் 90 இடங்களிலும் ஏனையவர்கள் 29 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளதாக சில மதிப்பீடுகள் சொல்கின்றன. பாராளமன்றத்தில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றாலும் பாராளமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்தச் சட்டமும் பாதுகாவலர் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உச்சத்தலைவர் உடன்படார்
உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி சீர்திருத்தவாதிகளிடம் நாட்டை ஓப்படைத்தால் அது தனக்கு தானே வேட்டு வைத்ததாக அமையும் என்பதையும் நன்கறிவர். அதே வேளை அதிபர் ஹசன் ரௌஹானி மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப் பட வேண்டும் என்பதையும் அறிவார். மேற்கு நாடுகளின் முதலீடுகளிலும் பார்க்க சீனாவிடமிருந்து பெரு முதலீட்டை ஈரானல் பெற முடியும்.

ஐக்கிய அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கியமைக்கு சீர்திருத்தவாதி ஹசன் ரௌஹானியின் கைகளை வலுப்படுத்துவதும் ஒரு காரணமாகும். அதனால் ரௌஹானி தொடர்பாகவும் அவரது சீர்திருத்தம் தொடர்பாகவும் உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி மிகவும் கவனமாகவே இருப்பார். ஈரான் அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாகச் செய்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்த பலர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்கள். கடந்த பாராளமன்றத்தின் அவைத்தலைவராக இருந்தவரும் அவர்களில் ஒருவராகும். ரௌஹானியின் நண்பரும் முன்னாள் அதிபருமான Akbar Hashemi Rafsanjani தேர்தலில் பெருவெற்றியடைந்துள்ளார்.

வோட்டு உனக்கு வேட்டு என்னிடம்
பாராளமன்றத் தேர்தலில் ஈரானிய மதவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து. அதிபர் ரௌஹானிக்கு உலக அரங்கில் தலையிடி கொடுக்கும் வகையில் ஈரானியப் படைத் துறையினர் எறியியல் ஏவுகணைகளை (ballistic missile) வீசிப் பரிசோதனை செய்தனர். ஈரானுடன் ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும் 2015-ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டின்படி இப்படி ஒரு பரிசோதனை செய்யக் கூடாது என அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆட்சேபனை தெரிவித்தன. அவை மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை கொண்டு வருவோம் என்கின்றன. பொருளாதாரத் தடை நீக்கத்தால் மக்கள் மத்தியி புகழ் பெற்ற அதிபர் ரௌஹானிக்கும் அதற்காக அவரை ஆதரிக்கும் மக்களுக்கும் ஈரானிய மதவாதிகளும் படைத் துறையினரும் தம்மிடம் தான் படைவலு இருக்கின்றது என்ற செய்தியை ஏவுகணைப் பரிசோதனை மூலம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் வெளியுறவுக் கொள்கைகான குழுவின் தலைவர்

மற்ற அதிகார மையங்கள் அனுமதிக்காது.
பெரும் எரிபொருள் இருப்பும் பலதரப்பட்ட உற்பத்தித் துறையும் நன்கு கல்வியறிவு பெற்ற மக்களும் ஈரானை ஒரு சிறந்த முதலீட்டுக் களமாகச் சுட்டி நிற்கின்றன. ஈரானின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் 30 வயதிலும் குறைந்தோரே. தற்போது உள்ள உலக வயோதிபர் பிரச்சனையில் இது ஈரானுக்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். அதிபர் ரௌஹானியால் ஈரானைப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்க சில சீர்திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் சமூகச் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு மற்ற அதிகார மையங்கள் அனுமதிக்காது.

Tuesday, 15 March 2016

சிரியாவில் இருந்து வெளியேறும் இரசியப் படைகள்

சிரியாவில் இருக்கும் பிரதான இரசியப்படையினரை அங்கிருந்து வெளியேறும்படி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உத்தரவுட்டுள்ளார்.  2011-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டிருக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் 2015 செப்டம்பர் மாத இறுதியில் இரசியப் படையினர் சிரியாவில் போய் இறங்கியதால் நிலைமை தலைகீழாக மாறியது. சிரியாவில் ஐ எஸ் அமைப்பின் இஸ்லாமியத் தீவிரவாதத்தை அழிக்க எனச் சென்ற இரசியப் போர் விமானங்கள் அமெரிக்க ஆதரவுப் படைக்குழுக்கள் மீதே அதிக தாக்குதகளைச் செய்தனர் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப் பட்டது. இரசியா துரிதமாக செய்த படை நகர்வுகளும் படையினருக்குச் செய்த ஆதரவு வழங்குதல்களும் பல படைத்துறை நிபுணர்களை வியப்படைய வைத்தன. 

படைத்தளங்கள் தொடரும்
பனிப்போர்க் காலத்தில் இருந்தே சோவியத் ஒன்றியத்துடன் சிரியா சிறந்த உறவைப் பேணி வந்தது. இரசியாவிற்கு வெளியே இருக்கும் அதன் ஒரே ஒரு கடற்படைத் தளம் சிரியாவிலேயே இருக்கின்றது. 2015-ம் ஆண்டு இரசியா சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான லதக்கியாவில் ஒரு விமானப் படைத் தளத்தையும் நிறுவியது. இந்த விமானப் படைத் தளம் மூடப்படமாட்டாது எனவும் தெரிய வந்துள்ளது. இரசியப் படையினரின் ஒரு பகுதி மட்டும் வெளியேறுவதால் எந்த நேரமும் இரசியப் படைகள் திரும்பி வர வாய்ப்புண்டு. படை வெளியேற்றத்திற்கான கால அட்டவணை ஏதும் வெளிவிடப்படவில்லை. இரசியாவின் பல்வேறுதரப்பட்ட 70 போர் விமானங்களும் நான்காயிரம் படையினரும் நிலை கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிக் குழுவான Harakat Nour al-Din al-Zenki இரசியப் படையினரின் வெளியேற்றம் தொடர்பாக தனது ஐயத்தை வெளிவிட்டுள்ளது. ஐ எஸ் போராளிகள் தொடர்ந்தும் வலுவான நிலையில் இருப்பதால் இரசியப் படையினர் சிரியா சென்றதன் முதன்மை நோக்கம் ஐ எஸ்ஸை ஒழிப்பதல்ல எனச் சொல்லலாம். சிரியாவில் ஒத்துக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை இரசியப் படையினர் பலதடவை மீறினார்கள் என்ற குற்றச் சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

சிரியாவை விட்டுக் கொடுக்கச் செய்யவா?
இரசிய அதிபர் புட்டீன் படை விலக்கல் தொடர்பான தனது முடிவை சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திடம் தெரிவித்தார். அதற்கு அசாத்தின் பதில் எப்படி இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இரசியப் படைகளின் பங்களிப்பிற்கு அசாத் நன்றி தெரிவித்தார் என்பது மட்டுமே வெளிவந்துள்ளது. இரசியப் படைகளின் வெளியேற்ற அறிவிப்பு ஜெனிவாவில் சிரியா தொடர்பான பேச்சு வார்த்தையின் மீள் ஆரம்பமாகும் நாளில்  வெளிவந்தது. இவ்   வெளியேற்றம் சிரியப் படைகள் தம்மால் நிலமையைக் கட்டுப்படுத்தக் கூடிய நம்பிக்கையை பெற்று விட்ட நிலையில் நடக்கவில்லை. மாறாக ஜெனிவாப் பேச்சு வார்த்தையில் சிரிய அரசதரப்பினரை விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குடன் ஈடுபடுத்தச் செய்யும் நோக்கத்துடன் இரசியப் படையினரின் வெளியேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது சரியானதாக இருந்தால் புட்டீனின் படை விலக்கல் முடிவு ஒரு அரசுறவியல் திறன்மிகு நகர்வு (diplomatic master stroke) என்றுதான் சொல்ல வேண்டும்.

சிரியாவால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?
சிரியப் படையினர் பல கிளர்ச்சிக் குழுக்களுக்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஈரானியப் படைத்துறை நிபுணர்களும் ஹிஸ்புல்லாப் போராளிகளுமே உதவி செய்து கொண்டிருக்கின்றனர். சிரியப் படையினர் பின்னடைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே இரசியா தனது விமானப் படையை அங்கு அனுப்பியது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தமும் முறிவடைந்தால் போர் மூர்க்கத்தனமாக மீண்டும் நடக்கும் போது சிரியப் படைகள் பின்னடைவைச் சந்தித்தால் மீண்டும் இரசிய விமானப் படைகள் சிரியா சென்று தாக்குதல் நடத்தக் கூடிய வகையிலேயே இரசியா ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

புட்டீனின் எண்ணம் நிறைவேறியதா?
புட்டீன் சிரியாவிற்கு இரசியப் படையினரை அனுப்பியதன் முதல் நோக்கம் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவதே.  இரசிய விமானப் படையினதும் ஈரானியப் படை நிபுணர்களினதும் ஹிஸ்புல்லாப் போராளிகளினதும் ஆதரவுடன் சிரியப் படைகள் 2015 செப்டம்பர் மாதத்தில் இருந்து சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றினர். உயரமான நிலப்பரப்புகளைச் சிரியப் படைகள் கைப்பற்றியதால் பஷார் அல் அசாத்தின் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கார்கள் தாழ் நிலத்தில் இருந்து தாக்குதல் நடாத்தி அவற்றைக் கைப்பற்றுவது சிரமம். இரசியாவின் ஆதரவுடன் லதக்கியா, அலெப்பே ஆகிய மாகாணங்களில் சில பிரதேசங்கள் அரச படையினரால் கைப்பற்றப்பட்டன. தலைநகர் டமஸ்கஸைச் சூழ உள்ள பிரதேசங்களில் இருந்த பல ஐ எஸ் போராளிகளின் நிலைகள் அழிக்கப்பட்டன. இரசியா அறிவித்த இலக்கு ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதே. இரசியப் படையினர் அப்பாவிகள் வாழும் பகுதிகளில் குண்டுகள் வீசினர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன் வைக்கப் பட்டன. சிரியாவில் போரைத் தீவிரமாக்கி அங்கிருந்து அதிக அளவு மக்களை மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்க்கு தஞ்சக் கோரிக்கைக்கு அனுப்புவது புட்டீனின் கபட நோக்கம் என்றும் கருதப்பட்டது.

விமானத்தை இழந்த இரசியா
ஒரு நாட்டில் விமானத் தாக்குதல்கள் செய்யப்படும் போது ஒலியிலும் வேகமாகச் செல்லக் கூடிய விமானங்கள் எல்லைகளைத் தாண்டி அயல்நாட்டு வான் பிரதேசத்துக்குள் செல்வது நடக்கக் கூடிய ஒன்றே. ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போர் புரியும் போது ஈரான் வான்பரப்புக்குள் அவ்வப் போது அமெரிக்க விமானங்கள் செல்வதற்கான   அனுமதியை ஈரானிடமிருந்து இரகசியமாக அமெரிக்கா பெற்றிருந்தது. சிரியாவில் படை நடவடிக்கையில் ஈடுபட்ட இரசிய விமானங்கள் இஸ்ரேல் வான்பரப்பினுள்ளும் துருக்கி வான் பரப்பினுள்ளும் பறந்தன. இஸ்ரேலியப்  படையினர் இரசிய விமானத்துடன் தொடர்புகொண்டு எல்லை தாண்டியதை அறிவிக்க இரசிய விமானம் விலகிச் செல்லும். இது ஓர் எழுதாத உடன்பாடாகியது. ஆனால் துருக்கி இரசிய விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியது.

பொருளாதாரப் பிரச்சனை காரணமா?
இரசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனை அதன் படைகள் வெளிநாடு ஒன்றில் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இல்ல்லை. சிரியாவிற்குப் பெருமவவு இரசியப் படையினரை அனுப்பி அங்கு எல்லாக் கிளர்ச்சிக்காரர்களையும் அழித்து அசாத்தின் ஆட்சியை  நாடு முழுக்க நிறும் நிலையில் இரசியா இல்லை என்பதை சிரியாவில் இரசியாவின் படை நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

புட்டீனுக்கு இரண்டு வெற்றிகள்
சிரியாவிற்குப் படை அனுப்பியதன் மூலம் இரசியா இன்னும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் இருக்கின்றது என்ற செய்தி தெரிவிக்கப் பட்டுள்ளது. சிரியாவில் வேதியியல்(இரசாயன) படைக்கலன்கள் பாவிக்கப்பட்டால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும்; உடனே அமெரிக்கா படை நடவடிக்கைகளில் இறங்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைத்திருந்தார். அப்படி ஒரு படை நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளாமல் புட்டீன் தடுத்து விட்டார். இதுவரை காலமும் சிரியாவில் ஒரு கடற்படை வசதியகத்தை மட்டும் வைத்திருந்த இரசியா தற்போது ஒரு விமானப் படைத் தளத்தையும் அங்கு அமைத்துள்ளது.அத்துடன் இரசியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை முறைமையான எஸ்-400 சிரியாவில் தொடர்ந்தும் இருக்கும்.

Monday, 14 March 2016

சீன விரிவாக்கத்தை அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையம் தடுக்குமா?

ஒரு புறம் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் இணைந்து வடகொரியாவிற்கு எதிராகக் கடும் பொருளாதாரத் தடை கொண்டு வரும் தீரமானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்ற மறுபுறம் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான ஜோன் சீ ஸ்ரென்னிஸ், இரு நாசகாரிக் கப்பல்கள், இரு ஏவுகணை தாங்கிக் கப்பல்கள் ஆகியவை உட்பட ஒரு கட்டளைக் கப்பலையும் தென் சீனக் கடலுக்கு அனுப்பியுள்ளது. இவை ஏற்கனவே தென் சீனக் கடலில் உள்ள அண்டீரம் பே, மொபைல் பே ஆகிய ஏவுகணை தாங்கிக் கப்பல்களுடனும், சுங் ஹுன், ஸ்ரொக்டேல் ஆகிய நாசகாரிக் கப்பல்களுடனும், ஏழாவது கடற்படைப்பிரிவின் மிதக்கும் தலைமையகக் கப்பலுடனும் இணைந்து கொண்டன. இதே வேளை அமெரிக்காவின் படையின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிசன் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறை உப குழுவின் முன்னர் பேசும் போது கிழக்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் அதிகரிக்க முனைகின்றது என்றார்.

கியூப ஏவுகணை நெருக்கடி போல் ஒரு நெருக்கடி
தென் சீனக் கடலில் நடக்கும் நகர்வுகளைப் பார்க்கும் போது 1962-ம் ஆண்டு இரசியாவும் அமெரிக்காவும் கியூபா ஏவுகணைகள் நெருக்கடியின் போது ஒரு அணுப்படைக்கலப் போரின் விளிம்புவரை சென்றது போல அமெரிக்காவும் சீனாவும் ஒரு போர் மூளும் ஆபத்தை உருவாக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் போல் இருக்கின்றது. சோவியத் ஒன்றியம் விட்ட தவறைத் தான் விடக்கூடாது என்பதில் சீனா இதுவரை கவனமாக இருந்தது. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் எந்த ஒரு போரும் தொடுக்காத நாடாக கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருக்கின்றது. இதனால் சீனா தனது பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றியது. ஆனால் எந்த வித களமுனை அனுபவமும் இல்லாத படையினரைக் கொண்ட ஒரு வல்லரசாக இருக்கின்றது.

21-ம் நூற்றாண்டு ஆசியாவினுடையது.
ஆசியாவில் உள்ள பல நாடுகள் 21-ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதார உற்பத்திக்குப் பெரும் பங்கு ஆற்றப் போகின்றன. அமெரிக்காவிற்கு 21-ம் நூற்றாண்டில்  ஆசியா ஒரு பொருளாதார வாய்ப்பு மிகுந்ததும்  அதே வேளை படைத்துறைச் சவால் மிக்க ஒரு பிராந்தியமாகவும் இருக்கப் போகின்றது.  இதற்கு முக்கிய காரணம் சீனாவின் வளர்ச்சியில் ஐக்கிய அமெரிக்கா தனது வர்த்தக மேம்பாட்டையும் பிராந்திய ஆதிக்கச் சவால்களையும் படைத்துறை அச்சுறுத்தல்களையும் காண்கின்றது. சீனாவுடனான வர்த்தகப் பங்காண்மையை அமெரிக்கா எப்போதும் விரும்புகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் படைவலுப் பெருக்கமும் ஆசியப்பிராந்தியத்தில் அமெரிக்காவை ஓரம் கட்டிவிடும் என்ற அச்சத்தில் அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது.  2000-ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வரைந்த இணை நோக்கு-2020 என்னும் திட்டத்தில் சீனாவின் எழுச்சியும் அதன் மூலம் உருவாகவிருக்கும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் விபரிக்கப் பட்டிருந்தது. முக்கியமாக அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தைத் தக்க வைக்க அமெரிக்கப் படையினரின் முழுக்கவனமும் ஐரோப்பாவில் இருந்து ஆசியாவை நோக்கி நகர்த்தப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2008-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசியாவின் முக்கியத்துவத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அவரது  முதலாம பதவிக்காலத்தில் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ஹிலரி அதிகப் பயணங்களை ஆசிய நாடுகளுக்கே மேற்கொண்டிருந்தார்.  ஆசியான் நாடுகளும் அமெரிக்காவும் 2016 பெப்ரவரி மாதம் கலிபோர்ணியோவில் ஒழுங்கு செய்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அமெரிக்காவின் மகுடம்
2011-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 21-ம் நூற்றாண்டிற்கான ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டத்தை அறிவித்த போது அது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மகுடமாகத் திகழ்கின்ற போது எனக் கருதப்பட்டது. பின்னர் ஒஸ்ரேலியப் பாராளமன்றத்தில் உரையாற்றும் போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசியச் சுழற்ச்சி மையத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் ஒரு வல்லரசாகத் தொடர்ந்து இருக்கும் எனச் சூழுரைத்தும் இருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஒஸ்ரேலியாவில் தளம் அமைத்தன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படையினரை வலுவுடன் நிலை கொள்ளச் செய்வது தனது உச்சத் தெரிவு எனவும் அமெரிக்கா கருத்து வெளிவிட்டது.

உலகெங்கும் அமெரிக்கப் படையினர்

உலகெங்கும் 150 நாடுகளில் ஐக்கிய அமெரிக்கப் படையினர் 150,0000 பேர் தளங்கள் அமைத்துத் தங்கியுள்ளனர். ஜப்பானில் 52,000படையினரும், தென் கொரியாவில் 25,000படையினரும் உட்பட கிழக்கு ஆசியாவில் 78,000 அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளனர்.  இத்துடன் அமெரிக்கா வியட்னாமுடனும் பிலிப்பைன்ஸுடனும் தனது படைத்துறை ஒத்துழைப்பை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. உலகிலேயே அமெரிக்காவை அதிக அளவு நம்பும் மக்களாக தென் கொரியர்களும், பிலிப்பைன்ஸியரும் வியட்னாமியரும் இருக்கின்றார்கள்

படைவலுவை அதிகரிக்கும் ஒஸ்ரேலியா
சீனாவுடன் தன் வர்த்தகத்தில் பெரும்பகுதியைச் செய்யும் ஒஸ்ரேலீயா சீனா விரிவாக்கம் தனக்கு அச்சுறுத்தல் எனக் கருதி  தனது படைவலுவை அதிகரிக்கவிருக்கின்றது. 2016 பெப்ரவரி மாத இறுதியில் ஒஸ்ரேலிய அரசு தயாரித்த பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் தனது பாதுகாப்புச் செலவை அடுத்த பத்து ஆண்டுகளில் 42பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு ஒஸ்ரேலியப் பாதுகப்புச் செலவு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் இரண்டு விழுக்காடாக அதிகர்ப்பதாகவும் அவ்வறிக்கை ட்தெரிவிக்கின்றது. புதிய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கவசவாகனங்கள் போன்றவற்றையும் ஒஸ்ரேலியா வாங்கவிருக்கின்றது. சீன விரிவாக்க அச்சுறுத்தல் ஒரு படைக்கலப் போட்டியை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உருவாக்கியுள்ளது. அதில் இலாபமடையப் போகின்றவர்கள் அமெரிக்காவின் படைக்கல விற்பனையாளர்களே.

சீனாவின் அயலுறவுகள்
வட கொரியா, இரசியா, மொங்கோலிய, கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இந்தியா, நேப்பாளம், பூட்டான். மியன்மார், லாவோஸ், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் சீனா எல்லைகளைக் கொண்டுள்ளது. சீனாவுடன் இந்தியா நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனையைக் கொண்டுள்ளது.  இதனால் 1962-ம் ஆண்டு இரு நாடுகளும் போர் புரிந்து கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று துண்டுகளாக 4057கிலோ மீட்டர் நீளமான எல்லை உண்டு. முதலாவது துண்டு இந்தியாவின் ஜம்மு கஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒட்டி உள்ளது. இரண்டாவட்து துண்டு சீக்கிம் மாநிலத்தை ஒட்டி உள்ளது. மூன்றாவது துண்டு அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி உள்ளது. சீனாவிற்கும் ஜப்பானிற்கும் நேரடி எல்லைகள் இல்லாத போதும் சீனாவும் ஜப்பானும் கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகளின் உடைமை தொடர்பாக கடுமையான முரண்பாடுகின்றன. இதனால் ஜப்பான் அமெரிக்காவுடனான தனது படைத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

சீனாவும் இரசியாவும்
போல்ரிக் கடலின் கிழக்குக் கரை ஓரத்தில் ஒரு சிறிய ஐரோப்பிய நாடாக இருந்த இரசியா 1581-ம் ஆண்டில் இருந்து கிழக்கு நோக்கிய தவது விரிவாக்கத்தை ஆரம்பித்தது. சைபிரியாவைக் கைப்பற்றிய இரசியா 1894-ம் ஆண்டும் 1895- ஆண்டும் நடந்த சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான போரைப் பயன்படுத்தி மத்திய ஆசியாவைத் தனதாக்கிக் கொண்டது. பிரித்தானியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த அபின் போரின் போது இரசியா சீனாவுடன் செய்த ஐகன் உடன்படிக்கியின் படி ஸ்ரனொவோய் மலைகளுக்கும் அமூர் நதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை சீனா இரசியாவிற்கு விட்டுக் கொடுக்க்க வேண்டியதாயிற்கு. தற்போது இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 4,380 கிலோ மீட்டர் நீள எல்லை உண்டு. மத்திய ஆசியாவில் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஆதிக்கப் போட்டியுண்டு. சீனாவின் தரைவழிப்பட்டுப் பாதைக்கு மத்திய ஆசியா முக்கியமானதாகும். சீனாவின் எல்லைப் புறம் வரை இரசியா தனது விரிவாக்கத்தைத் தொடர்ந்தது. அமெரிக்காவிற்கு எதிரான ஒரு காத்திரமான படைத்துறைக் கூட்டணியை சீனாவாலும் இரசியாவாலும் இதுவரை உருவாக்க முடியவில்லை.

சீன விரிவாக்கம்
சீன பொருளாதார அபிவிருத்தி என்பதும் சீனாவின் விரிவாக்கம் என்பதும் கைக்கோர்த்துக் கொண்டு செல்ல வேண்டியன, செல்லக் கூடியன. சீனா தனது விரிவாக்கத்தை முன்னெடுக்க ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கியை ஆரம்பித்தது. இதில் அமெரிக்காவின் மரபு நண்பர்களான பிரித்தானியா போன்ற நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்தன. இந்த வங்கியின் உருவாக்கத்தை தடுக்க அமெரிக்கா முயன்று தோல்வி கண்டது. உலகிலேயே உள்ளகக் கட்டுமான மன்னர்களாக சீனர்கள் இருக்கின்றார்கள். குறைந்த செலவில் பெருந்தெருக்கள், தொடருந்துப் பாதைகள், அதிவிரைவு தொடருந்து வண்டிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் சீனர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியே தன் நாட்டின் உள்ளகக் கட்டுமானத்தை அபிவிருத்தி செய்யத் தேடிச் சென்ற இடம் சீனா. ஆசிய நாடுகள் பலவற்றில் உள்கட்டுமானத்தின் தேவை அதிகமாக இருக்கின்றது. இதில் சீனாவை அமெரிக்காவால் வெல்ல முடியாது. அமெரிக்கா அதிக அக்கறை காட்டாத பிரதேசமாக மத்திய ஆசியா இருக்கின்றது. அங்கு சீனாவிற்கு சவால் விட இரசியா இருக்கின்றது.

ஆதிக்கம்-ஆசியச்சுழற்ச்சி-TPP
அமெரிக்காவின் உலக ஆதிக்ககத்தின் ஒரு பகுதிதான் ஆசியச் சுழற்ச்சி மையம். ஆசியச்  சுழற்ச்சி மையத்தின் பொருளாதாரக் கரம்தான் பசுபிக் தாண்டிய பங்காண்மை (Trans Pacific Partnership - TPP) . உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization - WTO) சீனாவும் இந்தியாவும் பிரேசிலும் இணைந்த பின்னர் அதில் அமெரிக்க ஆதிக்கம் சுருங்கத் தொடங்கியது. அமெரிக்கா விரும்பிய படி உலக வர்த்தக உடன்படிக்கைகள் செய்ய முடியாமல் போனதால் அமெரிக்கா பிராந்திய ரீதியில் பொருளாதார  அமைப்புக்களை அமைத்து தனக்கு ஏற்றமாதிரி வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய எடுத்த முயற்ச்சிகளின் வெற்றியே பசுபிக் தாண்டிய பங்காண்மை, சேவைகளில் வர்த்தக உடன்படிக்கை (Trade in Services Agreement -TiSA) போன்ற ஒப்பந்தங்கள். இந்த இரண்டு உடன்படிக்கைகளின் மூலமும் அமெரிக்கா உலக மொத்தத் தேசிய உற்பத்தியில் 52 விழுக்காடு உற்பத்தி செய்யும் நாடுகளின் சந்தைகளை தனதாக்கிக் கொண்டது. ஆசிய நாடுகளில் சீனாவை ஓரம் கட்டி தனது  வர்த்தகத்தைப்  பெருக்கும் நோக்குடனே பசுபிக் தாண்டிய பங்காண்மை உடன்படிக்கை ஒஸ்ரேலியா, புருணே, தருசலம், கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது அரச நிலை பற்றிய அறிக்கையில் அதிபர் பராக் ஒபாமா பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றிக் குறிப்பிடும் போது ஆசியாவில் விதிகளை சீனா எழுதுவதில்லை, நாம் எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

சீனாவை அடக்குவதா வீழ்த்துவதா
மேற்கு நாடுகளுக்கு சவலாக இருந்த சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்தது அல்லது வீழ்த்தப் பட்டது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த போது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த நாடுகளுடனும் அதன் ஆதிக்க வலயத்தில் இருந்த நாடுகளுடனும் மேற்கு நாடுகள் தமது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்டன. ஆனால் சீனாவை மேற்கு நாடுகளால் விழுத்தவும் முடியாது என்பதையும்  விழுத்தவும் கூடாது என்பதையும் மேற்கு நாடுகள் நன்கறியும். சீனா வீழ்ச்சியடைந்தால் அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சீனா பொருளாதார ரீதியாக வலுவிழந்தும் படைத் துறை ரீதியாக மேலும் வலுப்பெறாமல் செய்வதே ஆசியச் சுழற்ச்சி மையத்தின் நோக்கமாகும்.  நோக்கமாகும்.

Monday, 7 March 2016

அமெரிக்காவின் B-21 போர் விமானமும் வான்படைப் போட்டியும்


ஐக்கிய அமெரிக்காவின் விமானாப் படையின் தொலை தூரத் தாக்குதல் விமானமான B-21இன் ஓவியம் முதல் முதலாக புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் 2016-02-26-ம் திகதி நடந்த Air Force Association Air Warfare Symposiumஇல் வெளியிடப் பட்டுள்ளது. B-21 போர் விமானம் அமெரிக்காவில் இருந்து கொண்டே உலகின் எந்தப் பாகத்திலும் தாக்குதல் செய்யக் கூடியது. இந்தவிமானத்தை Long Range Strike Bomber என வகைப் படுத்தப்பட்டுள்ளது. .ஐந்தாம் தலைமுறை விமானங்கள் சிறந்த ரடார்தவிர்ப்பு தொழில்நுட்பத்தையும் உன்னத கணனித் தொடர்பாடல்களையும் இயக்கத்தையும் துல்லியமாகக் குண்டுகளை வீசும் திறனும் கொண்டவை. B-2 போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமே B-21. B-2இலும் பார்க்க B-1 அதிக உயரத்தில் பறக்கக்கூடியது. B-21 எதிரி தன்னை இனங்காணுவதை முற்றாகத் தடுக்கக் கூடியது.

பரம இரகசியத் திட்டம்
B-21 விமான உற்பத்தி 2015-ம் ஆண்டு Northrop Grumman நிறுவனத்திடம் ஓப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் வலுவை உலகமயப்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஐம்பது ஆண்டுக்கான கேந்திரோபாய முதலீடாகவும் B-21 நீள் தூரத் தாக்குதல் குண்டுவீச்சு விமானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர்.  B-21இன் பின்புறம் W வடிவத்திலும் இறக்கைகள் 33 பாகைகள் சரிவானதாகவும் இருக்கும். Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்தன்மை, , சிறந்தswept-wing fighter பொறிமுறை, பல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை  உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. Lockheed Martin  132000 தொழிலாளர்களுடன் ஆண்டு தோறும் $35.7 billion விற்பனையும் $2.9 billion இலாபமும் கொண்ட முதற்தர படைக்கல உற்பத்தி நிறுவனமாகும். இரண்டாம் இடத்தில் Boeing நிறுவனமும், மூன்றாம் இடத்தில் Northrop Grumann நிறுவனமும் இருக்கின்றன

உற்பத்தியில் போட்டியோ போட்டி
B-21 உற்பத்தியில் Boeing, Lockheed Martin Corp ஆகிய நிறுவனங்களும் அக்கறை காட்டின. உற்பத்தி Northrop Grumman நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்ட பின்னர் Boeing, Lockheed Martin Corp ஆகிய நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்து வழக்குத் தொடர்ந்ததால் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. அமெரிக்காவில் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் தனியார் துறையிடம் ஒப்படைக்கும் போது பல பிரச்சனைகள் எழுப்பப்பட்டு கட்சி அரசியல் போட்டிகளும் எழுவதுண்டு. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறைச் சேவைக் குழுவின் தலைவர் ஜோன்  மக்கெயின் cost-plus contract அடிப்படையில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு தனது எதிர்ப்பைக் காட்டப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

வான் படைக்கு வேறு கடற்படைக்கு வேறு

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அமெரிக்கக் கடற்படையாலும் விமானப் படையாலும் பொதுவாகப் பாவிக்கக் கூடிய விமானங்களை உருவாக்கும் திட்டம் F-35 போர் விமானங்கள் பல பின்னடைவுகளையும் செலவு அதிகரிப்பையும் எதிர் கொண்டது.  சுதந்திர பாதுகாப்பு விஞ்னானச் சபை இது தொடர்ப்பாக ஆய்வு செய்து இருதுறையினரினதும் தேவைகளும் சேவை முன்னுரிமைகளும் வித்தியாசமாக இருப்பதால் தனித்தனியாக உற்பத்தி செய்வது செலவுச் சேமிப்பைச் செய்யும் எனத் தெரிவித்தது.ஆனால் பொது வான  engine பொதுவான avionics architecture, பொதுவானா படைக்கலன்கள் weapons பொதுவான உற்பத்தித் தொடர் ஆகியவை இருப்பதை அந்தச் சபை வலியுறுத்தியுள்ளது. தற்போது விமானப் படையினருக்கு என்றும் கடற்படையினருக்கு என்றும் தனித்தனியாக விமானங்களை அமெரிக்கா உற்பத்தி செய்கின்றது. அத்துடன் பசுபிக் பெருங்கடலில் செய்ற்படக் கூடிய வகையிலும் விமானங்கள் வடிவமைக்கப் படுகின்றன. இது சீனாவால் அங்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கக் கூடிய வகையில் இருக்கும்.
80 பில்லியன் டொலர் திட்டம் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் வான் படையில் முக்கிய பங்கு வகித்த B-52 போர் விமானங்களுக்கு இனி "ஓய்வு" கொடுக்கப்படும். B-21இன் பொறியியல் மற்றும் அபிவிருத்தி செலவு 21.4மில்லியன் டொலர்களாகும். ஒரு B-21 விமானத்தின் உற்பத்திச் செலவு 550மில்லியன் டொலர்களாகும். 100 விமானங்கள் உற்பத்தி செய்யப் படலாம். மொத்தத் திட்டச் செலவு 80பில்லிய்யன் டொலர்களாகும்.

Air Force Global Strike Command (AFGSC)
ஐக்கிய அமெரிக்காவின் Air Force Global Strike Command (AFGSC) என்னும் உலகெங்கும் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை நெறிப்படுத்தும் கட்டளைப்ப் பணியகமாகும். உலகெங்கும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு தாக்குதல் செய்யக் கூடிய ஒரு விமானம் தேவையை B-21 தொலைதூரத் தாக்குதல் விமானம் நிறைவு செய்கின்றது. தேவை ஏற்படும்போது அணுக்குண்டுகளையும் B-21 தாங்கிச் செல்லும். ஒருவிமானத்தில் செய்மதி வழிகாட்டலில் இயங்கக் கூடிய 80 joint direct attack munition என்னும் ஏவுகணைகளை பொருத்த முடியும். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் உற்பத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் மிகவும் செலவு மிக்கவை. இரசியாவின் SU-35 போர் விமானங்களுக்குப் போதிய சவாலை அமெரிக்காவின் F-35 விமானங்களால் விட முடியாது. SU-35  வான் சண்டையில் ஈடுபடுவதற்கு உருவாக்கப் பட்டவை. F-35 குண்டு வீச்சுக்கும் வான் பாதுகாப்பிற்கும் என உருவாக்கப் பட்டவை. வானத்தில் விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் செய்வதை நாய்ச் சண்டை என அழைப்பர். புதிய வரிசை SU-35 போர் விமானங்கள்ள் 2015-ம் ஆண்டு பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப் பட்ட போதும் எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சனைகளால் அவை 2018-ம் ஆண்டே பாவனைக்கு வரும். இரசியாவின் முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாக PAK FA இந்தியாவுடன் இணைந்து உருவாக்கப்படவிருக்கின்றது. இந்த உற்பத்தியும் இயந்திரச் செயற்பாடு, ஸ்ரெல்த் தொழில்நுட்பம் போன்றவற்றில் பல பிரச்சனனகளை எதிர் கொள்கின்றது. இந்திய விமானப் படையில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த PAK FA இல் 144 விமானங்கள் 2022-ம் ஆண்டு இணைக்கப்படலாம். 2018-ம் ஆண்டு சீனா தனது J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களைச் சேவையில் ஈடுபடுத்தவிருக்கின்றது. அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான லொக்ஹீட் மார்டினின் கணனித் தொகுதிகளில் இருந்து பல தொழில்நுட்பத் தகவல்கள் திருடப்பட்டன. இதற்கும் சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமான உற்பத்திக்கும் தொடர்புகள் உண்டா எனற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றன.

பார படைக்கலன் தாங்கும் இரகசிய விமானம் - Heavy-payload Stealth aircraft
B-21 ஒரு Heavy-payload Stealth aircraft ஆகும். இது பாரமான குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியது. நாற்பதினாயிரம் இறாத்தல்களுக்கு அதிகமான எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் எதிரியின் கதுவிகளால்(ரடார்களால்) இனம் காணப்பட முடியாதவை. Northrop Grumman நிறுவனத்தின் புதிதாகக் கண்டுபிடித்துள்ள Stealth பூச்சை மனிதப் பொறிகள் மூலம் B-21இற்குப் பூசப்படும். இந்தப் பூச்சு   alternate high-frequency material (AHFM) என அழைக்கப் படுகின்றது.

B-21 ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாகும்
ஆறாவது தலைமுறை விமானங்களில் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் கருக்கி விழுத்தப்படும் இவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக இருக்கும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control முறைமை மிக உன்னதமானதாக இருக்கும். B-21  ஆளில்லாமலும் விமானியுடனும் பறக்கக் கூடியவையாக அமையலாம். இரசியாவின் T-50, அமெரிக்காவின் F-22, சீனாவின்  J-20 ஆகியவை உலகின் முன்னணி ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களாகும்.

The cargo-bomber airplane concept
2016-02-புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் நடந்த Air Force Association Air Warfare Symposiumஇல் இன்னும் ஒரு விமானம் பற்றிய ஓவியமும் வெள்விடப்பட்டது. The cargo-bomber airplane concept எனப்படும் இத்திட்டத்தில் பாரிய சரக்கு விமானத்தையும் குண்டு வீச்சு விமானத்தையும் இணைக்கும் எண்ணம் முன் வைக்கப் பட்டுள்ளது. அப்படி உருவாக்கும் விமானத்தில் பெருமளவு குண்டுகளைத் தாங்கிச் சென்று எதிரி இலக்குகளில் வீச முடியும். இந்த விமானம் பற்றிய மேலதிகத் தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

Monday, 22 February 2016

திருச்சபைகளும் இரண்டாம் பனிப்போரும்



1979-ம் ஆண்டு சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தன. அங்கு சோவியத் ஒன்றியப் படையினருக்கு எதிராகப் போராட ஐக்கிய அமெரிக்கா, சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான் ஆகியவை இணைந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு எதிராகப் போராட வைத்தனர். சோவியத்தின் படைத்துறைச் செலவு ஒரு புறம் அதிகரிக்க வைக்கப்பட்டது. மறுபுறம் அதன் எரிபொருள் ஏற்றுமதி வருமானத்தை வீழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியா எரிபொருள் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரித்தது. புதிதாக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்திச் செலவிலும் குறைந்த விலை உலகச் சந்தையில் எரிபொருள் விற்கப்படும் போது அந்தப் புதிய உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கும் என சவுதி அரேபியா அப்போது தெரிவித்தது. ஆனால் ஆப்கானிஸ்த்தான் போரும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் சோவியத் ஒன்றியத்தை 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைய வைத்தது.

அப்பன் காட்டிய வழி
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊடகம் ஒன்றில் வெளி-ஆசிரியத் தலையங்கம் எழுதிய றோனால்ட் றீகனின் மகன் மைக்கேல் றீகன் தனது தந்தை எப்படி சவுதி அரேபியாவை உலகச் சந்தையில் எரிபொருளைக் கொட்டிக் குவிக்கும் படி சொன்னார் என்பதை அம்பலப் படுத்தினார். இதன் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் வருமானத்தைச் சிதைத்து அதன் நாணயமான ரூபிளை வீழ்ச்சியடையச் செய்வதுமாகும். மைக்கேல் றீகன் தனது கட்டுரையில் அப்போது சோவியத் ஒன்றியத்திடம் இருந்த உலகில் விற்கக் கூடிய ஒரே பொருள் எரிபொருள் மட்டுமே எனத் தெரிவித்ததுடன் பராக் ஒபாமா தனது தந்தையின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் மைக்கேல் அந்த ஆலோசனையைச் சொல்ல முன்னரே ஒபாமா அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்.

செயல் மீளியக்கம் - Action Replay
தற்போது1980களில் நடந்தவையின் செயல் மீளியக்கம் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எரிபொருள் விலை கண்டபடி வீழ்ச்சியடைகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியப் படைகள் இரகசியமாக நிலைகொண்டிருக்கின்றன. அது இரசியாவிற்கு ஒரு செலவு. அது போதாது என்று சிரியாவில் இரசியப் படை நிபுணர்களும் சிறுபடைப்பிரிவும் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் 20,000போர்த்தாங்கிகள், 2,450 போர் விமானங்கள், 460 உழங்கு வானூர்திகள், சகிதம் சவுதி அரேபியா தலைமையில் துருக்கி உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த 350,000 படையினர் சிரியா மீது படையெடுக்கத் தயாராகி உள்ளனர். சிரியாவில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டுமாயின் இரசியா தனது பல படைப் பிரிவுகளை சிரியாவிற்கு அனுப்ப வேண்டியிருக்கும். இரசியா கடல்வழியாக சிரியாவிற்குப் படையினரை அனுப்புவதற்கு தனது வோல்கா நதியில் ஆரம்பித்து கருங் கடலூடாகவும் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ள துருக்கி நீரிணையூடாகவும் ஏகன் கடலூடாகவும் சென்று மத்தியதரைக் கடலை அடையவேண்டும். துருக்கியால் இரசியாவை இலகுவாக துருக்கி நீரிணையில் வைத்து இரசியக் கடற்போக்கு வரத்தைத் தடுக்க இயலும். இரண்டாம் உலகப் போரின் போதும் துருக்கி அப்படிச் செய்தது.

இரசியாவின் மேற்கு கறுக்கின்றது
அமெரிக்கப் பாரளமன்றத்திற்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவுக் கோரிக்கையில் அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கான பாதுகாப்புச் செலவாக 3.4 பில்லியன் டொலராக ஒதுக்கியிருந்தார். இது 2016-ம் ஆண்டிற்கான ஒதுக்கிட்டிலும் பார்க்க நான்கு மடங்காகும். இரசியாவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அதன் எல்லையில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படைகளையும் படைக்கலன்களையும் குவிப்பது ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய தந்திரோபாயமாக இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். அந்த நாடுகளில் தேவை ஏற்படும் போது நேட்டோப்படையினர் ஒரு 48 மணித்தியால அவகாசத்தில் சென்று தரை இறங்கக் கூடிய வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்றார். இந்த நகர்வுகளும் நடவடிக்கைகளும் இரசியா உக்ரேனில் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளினால் அச்ச மடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தது. ஜூன் 16-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா நாற்பது அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்த ஆண்டு தனது படையில் சேர்த்துக் கொள்ளும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பும் அஸ்டன் கார்ட்டரின் அறிவிப்பும் ஐரோப்பாவில் ஒரு பனிப்போரை ஆரம்பித்து விடவில்லை என்றார் கார்ட்டர்.

இரண்டாம் பனிப்போர்
2016 பெப்ரவரி 12-ம் திகதி ஆரம்பமான மூன்று நாள் மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இரசியத் தலைமை அமைச்சர் டிமிட்ரி மெட்வெடேவ் தற்போது இரசியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை புதிய பனிப்போர் என விபரிக்கலாம் என்றார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைவலுவை அதிகரிப்பதன் மூலம் ஐரோப்பாவின் உறுதிப்பாட்டை அமெரிக்கா குலைக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் நேட்டோப் படையினரும் செய்யும் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பின் உச்சத் தளபதி  ஜெனரல் பிலிப் பிரீட்லவ் அப்படி ஒரு பனிப்போர் இல்லை என்றார். ஜேர்மனியில் நடந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி இரசியப் படைகள் சட்டபூர்வமான அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

கருங்கடலில் நெருங்கும் எதிரிகள்
கிறிமியாவை 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடன் இணைத்த இரசியா மிகவும் துரிதமாக அங்கு தனது போர் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் குவித்தது. அத்துடன் கருங்கடலில் தனது கடற்படை வலுவையும் பெருக்கியது. எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய நாடுகளின் வான்பரப்பை நேட்டோப் படைகள் 24 மணித்தியாலமும் கண்காணிப்பது போல் கருங்கடலையும் கண்காணிக்கும் திட்டத்தை நேட்டோப் படையினர் செயற்படுத்தலாம். இதுவரை கருங்கடலை ஒட்டி துருக்கியில் ஒரு நேட்டோ கடற்படைத் தளம் அமைப்பதை அனுமதிக்காத துருக்கி இனி ஒரு கடற்படைத்தளம் அமைக்க ஒத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நேட்டோவின் பிரச்சனை
விளடிமீர் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பையிட்டு கவலையடைந்தன. உக்ரேனில் இரசியா செய்த ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் பல ஐரோப்பிய நாடுகள் அச்சமடையவும் தொடங்கின. போதாக் குறைக்கு இரசிய அரசுறவியலாளர்கள் அடிக்கடி அணுப் படைக்கலப் போர் என்றும் மிரட்டிக் கொண்டுருக்கின்றனர். ஐரோப்பாவில் உள்ள நேட்டோவின் அணுப்படைகலன்கள் பழமையானவை. அதன் செயற்திறன்களையிட்டு ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கரிசனை கொண்டுள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பவில் உள்ள அணுப் படைக்கலன்களை மேம்படுத்துவதற்காக பல பில்லியன் டொலர்களை செலவழிக்க எண்ணியுள்ளது.

இரு திருச்சபைகளின் தலைகளின் சந்திப்பு
2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13-ம் திகதி சனிக்கிழமை கியூபாத் தலைநகர் ஹவானாவில் இரசிய மரபுவழித் திருச்சபையின் உயர் போதகர் பட்ரியாக் கிரில்லும் கத்தோலிக்கத் திருச்சபையின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களும் சந்தித்து உரையாடியதுடன் இருவரும் இணைந்து ஒரு பிரகடனத்திலும் கைச்சாத்திட்டனர். இருவரினதும் சந்திப்பில் ஐரோப்பிய ஒருமைப்பாட்டுக்கும் கிருத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அவர்கள் கைச்சாத்திட்ட பிரகடனத்தில் நாம் உடன்பிறப்புக்கள் பகைவர்கள் அல்லர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புட்டீனின் உதவியாளராகக் கடவுள்
ஐ எஸ் அமைப்பின் வளர்ச்சி வெற்றியில் முடிந்தால் வட ஆபிரிக்கா, மேற்காசியா, மத்திய ஆசியா ஆகிய பெரு நிலப்பரப்பு இஸ்லாமிய அரசாக உருவெடுக்கும். இதில் அணுப்படைக்கலனகளைக் கொண்ட பாக்கிஸ்த்தானும் அடக்கம். அதனால் ஒரு பெரு வல்லரசாக உருவெடுக்கலாம். இதையிட்டி திருச்சபைகள் கரிசனை கொண்டுள்ளன போல் தெரிகின்றது. அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் கிறிஸ்த்தவம் இணைத்து வைத்திருக்கின்றது என்பது உண்மையாகும். அதுதான் நேட்டோக் கூட்டமைப்பு. கடந்த இருபது ஆண்டுகளாக இரசியா தம்முடன் இணையும் என எதிர்பார்த்திருந்த இந்தக் கூட்டமைப்பு உக்ரேன் விவகாரத்துடன் அந்த எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. இப்போது வேறு விதமாக அணுகப்படுகின்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை, எரிபொருள் விலை திட்டமிட்டு விழச்செய்தமை, இரசியாவை சிரியாவில் ஒரு போரில் மாட்ட வைத்தமை ஆகியன புட்டீனின் செல்வாக்கை அடுத்த சில ஆண்டுகளில் தவிடு பொடியாக்கும் நோக்கதிலேயே செய்யப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தை ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்க வைக்காமல் 11 ஆண்டுகளில் சிதைத்தது போல புட்டீனின் பிடியில் இருந்து இரசியாவை மீட்டெடுக்கும் போது ஏற்படும் அதிகார இடைவெளியால் இரசியாவில் பெரும் குழப்பம் ஏற்படாமல் தடுக்க இரசிய மரபுவழித் திருச்சபையின் தலையீடு அவசியம். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவில் மரபுவழித் திருச்சபையின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஈரானிற்கு எதிரான் பொருளாதாரத் தடை கொண்டுவந்த போது அதை ஐநா பாதுகாப்புச் சபையில் இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்யாமல் இருக்க இரசியத் திருச்சபை உதவியாக இருந்தது. இரசியாவில் திருச்சபைக்கும் புட்டீனிற்கும் இடையில் நல்லுறவு இருந்தாலும் திருச்சபையை புட்டீன் தனக்கு அடங்கி நடக்கும் ஒன்றாகவே வைத்திருக்கின்றார். ஒரு அமெரிக்க ஊடகம் இஸ்லாமிய நாடுகளில் கடவுளே அரசர்; சீனாவிலும் ஜப்பானிலும் அரசரே கடவுள்; இரசியாவில் கடவுள் புட்டீனின் உதவியாளர் என நகைச்சுவையாக புட்டீனிற்கும் திருச்சபைக்கும் உள்ள தொடர்பை விபரித்தது. புட்டீனுடன் திருச்சபை ஒத்துழைத்தாலும் அவர் தம்மீது காட்டும் மேலாண்மையை திருச்சபை விரும்பும் எனச் சொல்ல முடியாது.

உலகத்தை ஒரே ஒழுங்கில் கொண்டு வருதல் என்னும் போர்வையில் அமெரிக்க ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் உலகத்தைக் கொண்டு வர திருச்சபைகளின் கியூபச் சந்திப்பு வழிவகுக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...