Wednesday 4 December 2013

ஹிஸ்புல்லா தலைவர் லெபனானில் கொல்லப்பட்டார்

ஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் படைத்துறைத் தலைவர்களில் ஒருவரான ஹசன் லகீஸ் கொலை செய்யப்பட்டுள்ளார். லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் இக் கொலை நடந்துள்ளது. ஹிஸ்புல்லா இந்தக் கொலையை இஸ்ரேல் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது.


ஹிஸ்புல்லா அமைப்பு ஹசன் லகீஸ் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விபரத்தை வெளிவிடவில்லை. லெபனானிய அரசு அவர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார் என்கின்றது. அவரது தலையிலும் தோளிலும் நான்கு தடவை ஒலி எழுப்பாத கைத்துப்பாக்கியால் சுடப்பட்டார்.

சிய முசுலிம் இயக்கமான ஹிஸ்புல்லா அமைப்பு சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுகின்றது. இதனால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். பெய்ரூட்டில் உள்ள ஈரானியத் தூதுவரகத்தில் இரு தற்கொடைத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் 2013 நவம்பர் மாதம் 23-ம் திகதி மேற்கொண்டிருந்தனர். அத்தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல்கள் சவுதி அரேபியாவின் தூண்டுதலால் நடந்தவை என ஹசன் லகீஸ் தெரிவித்திருந்தார். ஹசன் லகீஸைக் கொல்ல இஸ்ரேல் பலதடவை முயன்றதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டுகிறது. இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் யிகல் பல்மோர் தமது நாட்டுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளார். மேலும் அவர் இது ஹிஸ்புல்லாவின் வழமையான இயல்பான குற்றச்சாட்டு என்றார்.

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இயக்கத்தை தனது முதலாவது எதிரியாகக் கருதுகின்றது. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்க சிரியாவில் ஆறுக்கு மேற்பட்ட விமானத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடாத்தியிருந்தது.



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...