Sunday 11 October 2009

இந்தியா ஆடும் நாடகம்: இலங்கைக்கு நிதி வழங்க.


இலங்கைக்கு வன்னி முகாம்களை பராமரிக்க நிதி உதவி செய்து வந்த பிரித்தானியா தனது நிதி உதவியை நிறுத்திவிட்டது. சட்ட விரோதமாக நாடாத்தும் முகாம்களுக்கு யாரும் உதவி செய்ய மாட்டாரகள். வன்னி முகாம்களுக்கு சென்று பார்வையிட்ட பிரித்தானியக் குழு அவை இடைத்தங்கல் முகாம்கள் அல்ல மக்களை பாரிய அளவில் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்கும் முகாம்கள் என்று உணர்ந்து கொண்டது. ஏற்கனவே நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கும் இலங்கை இதனால் மேலும் நிதிச் சிக்கல்களை எதிர் கொள்ளவிருக்கிறது. அமெரிக்காவுடனான இலங்கையின் உறவோ மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.

கற்பழிப்புக்கும் கள்ளக் காதலுக்கும்
வித்தியாசம் தெரியாத இலங்கைப் பிரதமர்.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறையும் ஒரு போர் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது என்ற அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டன் அறிக்கை இலங்கையை ஆத்திரமடையச் செய்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம் நாயக்க ஹிலரியின் தனது வீட்டைச் முதலில் சுத்தப் படுத்த வேண்டும் என்றும் மொனிக்கா லுவின்ஸ்கிக்கு நடந்ததையும் சம்பந்தப் படுத்திப் பேசினார். இது அமெரிக்காவை ஆத்திரப் படுத்தியது. அமெரிக்கா இலங்கைத் தூதுவரை அழைத்து இலங்கைப் பிரதமரின் கருத்துத் தொடர்பாக தனது கடுமையான விசனத்தை தெரிவித்தது.

மேற்கு நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்த நிலையில் இலங்கை தனது நிதித்தேவையைப் பூர்த்தி செய்ய கிழக்குப் பக்கமாகத் திரும்ப வேண்டும். ஜப்பானும் பிரித்தானியப் பாணியில் தனது நிதி உதவியை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்போது இலங்கைக்கு உள்ள அடுத்த தெரிவு சீனாவும் இந்தியாவும். இதில் சீனாவிற்கு போட்டியாக இலங்கையை "தாஜா" செய்ய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. இலங்கையின் நிதி நெருக்கடியைத் தீர்க்க சீனாவிற்குப் போட்டியாக இந்தியா இலங்கைக்கு உதவி செய்தே தீர வேண்டிய பரிதாபகரமான நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவின் தமிழ்த் தேசிய ஒழிப்புத் திட்டத்திற்கு வன்னித் தடைமுகாம் மிக முக்கியம். அங்கு மீதமுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை இனம் கண்டு அழித்தொழிக்க வேண்டும் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கியமாகும். இதனால் தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் முகாம்களில் உள்ளவர்களை உடன் வெளியிடுவது சாத்தியமற்றது என்றும் காலம் எடுக்கும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு கண்ணிவெடிகளைக் காரணமாகவும் காட்டியிருந்தார். முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியேற்றுவதற்கு கண்ணிவெடிகளைக் காரணம் காட்டுதன் சிறு பிள்ளைத்தனமானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் சாட்சியமளித்த நெருக்கடிகளுக்கான சர்வதேசக் குழு தெரிவித்திருந்தது. உறவினர்களுடன் சென்று வசிக்கும் வசதி உள்ளவர்களைக்கூட இலங்கை அரசு வெளியேற அனுமதிக்கவில்லை.

நிதிநெருக்கடிக்குள்ளான இலங்கை அரசு தனது இடைத்தங்கல் முகாம்கள் எனப் படும் வதை முகாம்களை பராமரிக்க நிதி உதவிசெய்யும் படி இலங்கை அரசு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அவ் வேண்டு கோளில் நிதிமட்டும் வழங்கவும் பொருட்கள் வேண்டாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது இலங்கை அரசின் நிதி நெருக்கடி எந்த அளவு மோசமாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

ஆக மொத்தத்தில் இலங்கைக்கு வன்னி முகாம்களை பராமரிக்க என்ற போர்வையில் இந்தியா இலங்கைக்கு பாரிய நிதி உதவி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு நாடகமாகவே இந்திய ஆளும் கட்சிகளான காங்கிரஸ் திமுக விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றைச் சார்ந்த சிலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் வன்னி சென்று பார்வையிட்டுவிட்டு தாம் தமிழர்களின் நிலை கண்டு கண்ணீர் வடித்து அவர்களுக்கு உதவி செய்யும்படி ஒரு அறிக்கையை விடுவர். அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு பெரும் நிதி உதவியை இலங்கைக்கு செய்யும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...