Monday 18 November 2013

அமெரிக்க இஸ்ரேல் உறவில் பெரும் விரிசல்.

நவம்பர் மாத முற்பகுதியில் இஸ்ரேலுக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசுத் துறைச் செயலர் மீண்டும் ஒரு முறை விரைவில் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பல முனைகளில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான உறவில் என்றும் இல்லாத அளவு விரிசல் ஏற்படக் காரணமாக அமைந்தவை:

ஈரான் விவகாரம்
ஈரானின் யூரேனியம் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடையை அமெரிக்கா மேலும் மேலும் இறுக்கியதால் மகிழ்ச்சியடைந்திருந்த இஸ்ரேல் அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தையில் P5+1 எனப்படும் குழுவாக ஈடுபடுவது அதிருப்தியடைந்துள்ளது. அமெரிக்கா தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் ஈரானுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது இஸ்ரேலின் முதல் அதிருப்தியாகும். அடுத்து ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை முழுமையாக நிறுத்தினால் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த ஒத்துக் கொண்டது இஸ்ரேலை ஆத்திரப்படுத்தியது. ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை முற்றாக நிறுத்துவது மட்டுமல்ல தனது பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தை அழிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் எதிர்பார்க்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் ஒன்று ஈரான் எல்லா யூரேனியப் பதப்படுத்தல்களையும் நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றது. இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பென்ஞமின் நெத்தன்யாஹூ அமெரிக்காவில் உள்ள யூதர்கள் அமெரிக்க-ஈரான் உடன்பாடுகளுக்கு எதிராகச் செயற்படும்படி அறைகூவல் விடுத்துள்ளார். ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளைக் கொண்ட P5+1 குழு ஜெனிவாவில் ஈரானுடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது ஈரானுக்கு சமாதான நோக்கத்திற்காக யூரேனியம் பதப்படுத்தும் உரிமை இருப்பதை ஏற்றுக் கொண்டன.

எகிப்தில் படைத்துறையினருக்கு அமெரிக்கா உதவிகளை நிறுத்தியமை.
2011இல் எகிப்தில் நடந்த அரபு வசந்ததில் படைத்துறையினரின் ஆட்சி கலைக்க்ப்பட்டது.  இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியும் சிறப்பாக அமையாததாலும் அவர் படைத்துறையினரை ஓரம் கட்ட முயன்றதாலும் எகிப்தில் மீண்டும் படைத்துறையினர் ஆட்சிக்கு வந்தனர். இது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என்றபடியால் அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையினருக்கு வழங்கி வந்த நிதி உதவியான இரண்டு பில்லியன்களில் 1.5 பில்லியனகள் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தின் படைத்துறை ஆட்சியினருக்கு அமெரிக்காமீது அதிருப்தி ஏற்பட்டது. 2013 ஒக்டோபர் 16-ம் திகதி எகிப்திய வெளிநாட்டமைச்சர் பத்ர் அப்துல் அர்ரி அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையிலான உறவு மோசமடைந்து விட்டது என்றார். 2013 நவம்பர் மாத முற்பகுதியில் எகிப்திற்கு அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்தார்.  அப்பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவைச் சீர் செய்ய வில்லை. எகிப்திற்கு அமெரிக்கா செய்து வந்த நிதி உதவியை நிறுத்தியதை இஸ்ரேலும் விரும்பவில்லை. அமெரிக்கா பெரும் கேந்திரோபாயத் தவறைச் செய்வதாக ஒபாமா நிர்வாகத்திடம் இஸ்ரேல் எடுத்துச் சொல்லியது. எகிப்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைந்தால் அது எகிப்தும் இஸ்ரேலும் செய்த காம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கையை ஆபத்திற்கு உள்ளாக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது.

பாலஸ்த்தீனம்
இஸ்ரேலுக்கும் பாலஸ்த்தீனத்திற்கும் இடையில் ஒரு உடன்பாட்டை எட்ட அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகின்றது இதன் ஒரு அம்சமாக இஸ்ரேலியச் சிறையில் இருந்து பாலஸ்த்தீனப் போராளிகள் இருபத்தாறுபேரை இஸ்ரேல் விடுவித்தது. இதைப் பெரும் வெற்றியாக பாலஸ்தீனியர்கள் கொண்டாடினர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேலில் உள்ள தீவிரப் போக்குடையவர்களைத் திருப்திப்படுத்த இஸ்ரேல் தான் ஆக்கிரமித்த பாலஸ்த்தீனப் பிரதேசத்தில் 1900 தொடர் வீடுகளை அமைக்கப் போவதாக அறிவித்தது அமெரிக்காவை அதிருப்திக்குள்ளாக்கியது. அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு இஸ்ரேல் காட்டும் அக்கறை ஐயத்திற்கு இடமாக இருக்கிறது என பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தது இஸ்ரேலை ஆத்திரப்படுத்தியது. இஸ்ரேல் பாலஸ்த்தீனத்துடன் ஒரு சுமூகமான தீர்வுக்கு உடன்படாவிடில் இஸ்ரேல் தனிமைப் படுத்தப்படலாம் என்றும் ஜோன் கெரி எச்சரித்திருந்தார்.

ஒபாமாவின் புதிய மத்திய கிழக்குக் கொள்கை
எரிபொருளில் விரைவில் அமெரிக்கா தன்னிறைவு காணவிருப்பதாலும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது வர்த்தக பொருளாதார உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருப்பதாலும் அமெரிக்கா மத்திய கிழக்கிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைக்க இருக்கிறது. இது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தமக்கு இடையில் இருக்கும் நட்பு உறுதியானது என்றும் தற்போது ஏற்பட்ட பிணக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று அடித்துச் சொல்கின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...