Monday 22 April 2013

இந்தியாவின் கற்பழிப்புகளும் வாக்கு வேட்டை அரசியலும்.

"இந்தியாவில் கற்பழிப்பு ஒரு தொற்றுநோய் போல் வேகமாகப் பரவி வருகிறது." உலகின் எல்லா மூலைகலிலும் உள்ள ஊடகங்களில் இது செய்திகளாகவும் ஆய்வுக் கட்டுரைகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 2013 ஏப்ரம் மாதத்தில் ஒரு வாரத்தில் மட்டும் மூன்று சிறுமிகள் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கற்பழிப்பைப் பற்றி எழுதுபவர்கள் அதன் கொடூரமான ஆணாதிக்கக் கலாச்சாரத்தையும் கற்பழிப்புக் குற்றம் தொடர்பாக இந்தியக் காவற்துறையினரின் உலகமகா மோசமான அணுகு முறைகளையும் தாமதித்துத் தவறு செய்யும் இந்திய நீதித்துறையையும் தவறாமால் விமர்சிப்பதுண்டு. 2003-ம் ஆண்டு சுவிஸ் இராசதந்திரியாக புது டில்லியில் வேலை செய்த பெண் ஒருத்தி அவரது வண்டியில் வைத்தே நன்கு படித்தவன் போல் சரளமாக ஆங்கிலம் பேசிய ஒரு இந்திய ஆணால் கற்பழிக்கப்பட்டான். கற்பழித்தவன் அப்பெண்ணிற்கு இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றியும் விளக்கிக் கூறினான். இந்தியக் கலாச்சாரத்தில் ஆணாதிக்கம் அப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது. பல இந்துக்களின் கலாச்சார "பைபிளாகிய" மனு தர்மசாஸ்த்திரம் ஆணாதிக்கத்தையும் குறைந்த சாதியினர் மீதான மேல் சாதியினரின் ஆதிக்கத்தியும் ஆதரிக்கிறது. “The Rise and Fall of Hindu Women” என்னும் கட்டுரையில் அம்பேத்கார் Hindu religion through its religious texts, such as the Manusmriti always degraded women. இந்து மதம் தனது மனுதர்ம சாஸ்த்திரம் போன்ற ஏடுகள் மூலம் பெண்களை தரக்குறைவாக்குகிறது என்றார். சதுர்வர்ணய என்ற இன்னொரு பழம் இந்து சாஸ்த்திரம் பெண்ணை தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் போல் நடத்த வேண்டும் என்கிறது. இந்த மாதிரியான குப்பைகக் கருத்துக்களை இப்போதும் ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த இணைப்பில் காணலாம்: http://www.echarcha.com/forum/showthread.php?t=1055

இப்போதும் மனுதர்ம சாஸ்த்திரத்தின் அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் அமைக்கப்படவேண்டும் என வாதிடுபவர்களும் இந்தியாவில் உண்டு. பல மனுதர்மவாதிகள் கற்பழிப்புகளுக்குப் பெண்களையும் அவர்கள் ஆடைகளையும் நடத்தைகளையும் பகிரங்கமாக காரணமாகக் காட்டி கற்பழிப்புகளுக்கு பெண்களைக் குற்றவாளிகளாக்குகின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியக் காமுகர்கள் கணவனுடன் சென்று கொண்டிருந்த சுவிஸ் உல்லாசப்பிரயாணி ஒருத்தியை கும்பலாகக் கற்பழித்தனர். இன்னொரு பிரித்தானிய உல்லாசப் பயணி அவர் தங்கியிருந்த விடுதி முகாமையாளர் கற்பழிக்க முற்பட்ட போது மாடியில் இருந்து குதித்தார். ஒவ்வொரு நாளும் எழுபதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றார்கள் என்கின்றன செய்திகள். உண்மையான தொகை இதிலும் அதிகமாக இருக்கலாம்.

இந்தியாவில் பெருமளவான பெண்கள் கருவிலேயே கொல்லப்படுகின்றனர். இந்தியாவில் ஆண்டொன்றிற்குப் பிறக்கும் 12 மில்லியன் குழந்தைகளில் ஒரு மில்லியன் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கின்றன. இதனால் மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் குறைந்து கொண்டே போகிறது. இந்தியக் கலாச்சாரப்படி பாவம் செய்த பெற்றோருக்குத்தான் பெண் பிள்ளைகள் பிறக்கின்றன. இந்தியாவில் அண்மைக்காலப் பொருளாதார வளர்ச்சியும் கொள்வனவாளரியலின்(consumerism) வளர்ச்சியும் மக்கள் மத்தியில் பணத்தின் தேவைகளை அதிகரித்துள்ளன. இதனால் சீதனக் கோரிக்கைகளும் அதிகரிக்கின்றன. எந்தச் செல்வக் குடும்பத்தில் பிறந்தாலும் எந்த சாதியில் பிறந்தாலும் ஒரு பெண்ணிற்குச் சீதனம் போதிய அளவு இல்லாவிடில் அவள் வாழ்க்கை இந்தியாவைப் பொறுத்தவரை நரகம்தான்.

புதுடில்லி ஜவகர்லால் பலகலைக்கழக முன்னாள் சமூகவியல் பேராசிரியர் தீபங்கர் குப்தா இந்திய ஆண்பிள்ளைகளின் வளர்க்கபடும் முறை தவறானது என்கிறார். ஆண் என்பவன் அடக்கியாள்பவன் பெண் அடங்கிப் போக வேண்டியவள் என்ற அடிப்படையில் பல இந்தியப் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்கிறார். தீபங்கர் குப்தா. இந்தியாவில் பல பாலியல் குற்றவாளிகள் இந்த ஆணாதிக்க மனோபாவத்தால் தப்ப விடப்படுகின்றனர். இதற்குக் காவற்துறையும் உடன்போகிறது. கற்பழிக்கப்பட்ட பெண்கள் மேலும் பல விதத்தில் பாதிக்கப்படுகின்றனர். உலகிலுள்ள 147 நாடுகளுக்கான ஆண் பெண் சமத்துவப் பட்டியலில் இந்தியா 129வது இடத்தில் இருக்கிறது. சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேசம் போன்றவற்றிலும் பார்க்க இந்தியப் பெண்கள் மோசமான நிலையில் இருக்கின்றனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திடீரென அதிகரித்தது ஏன்? ஒரு மாநிலத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் சிலர் ஊடுருவி காவற்துறையினருக்கு ஆத்திரமூட்டும் செயலில் இறங்குகின்றனர். பின்னர் காவற்துறை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையாக நடந்து கொள்கிறது. இதனால் மாநில அரசுக்குக் கெட்ட பெயர் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுகிறத்து. இந்த ஊடுருவிகள் மாநிலத்தின் ஆளும் கட்சிக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். அண்மைக்காலாங்களா காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருக்கும் புது டில்லியிலும் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் கட்டாயம் இருக்க வேண்டிய உத்தரப் பிரதேசத்திலும் இந்த கற்பழிப்பு-ஆர்ப்பாட்டம்-காவற்துறையினர் மீது தாக்குதல்-காவற்துறைபதிலடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விரைவில் வரவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலுக்கான வாக்கு வேட்டைக்கு கற்பழிப்பு பயன்படுத்தப்படுகிறதா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...