Sunday 28 October 2012

இந்திய அமைச்சரவை மாற்றியமைப்பு - ஒரு பார்வை

பெரிசுகளை கட்சிப்பணிக்கு அனுப்பிவிட்டு இளசுகளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாகச் சொல்லி இந்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஊழலைத் தொடர்ந்து அ. இராசாவும் தயாநிதி மாறனும் தமது அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேறி இருந்தனர். பின்னர் திரினாமூம் காங்கிரசுக் கட்சி ஆளும் கூட்டணியில் இருந்து விலகியதால் அதன் ஆறு அமைச்சர்கள் பதவி விலகி இருந்தனர். குடியரசுத் தலைவராகிய பிரணாப் முஹர்ஜீயும் அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

ராகுல் காந்திக்கு ஏற்ற அமைச்சரவை
புதிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது இந்தியாவின் முடிக்குரிய மொக்கை இளவரசர்  ராகுல் காந்திக்கு வால் பிடிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு முக்கிய பதவி அமைச்சரவையில் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆனால் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கவில்லை. ஆனால் இந்தியாவின் முக்கிய அதிகார மையமான சோனியா காந்தியின் அதிகாரங்கள் ராகுல் காந்தியிடம் மாற்றப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை அமைச்சராக்கினால் அவரது மொக்கைத் தனம் அம்பலமாகிவிடும் என்பதில் சோனியா குடும்பம் மிகக் கவனமாக இருக்கிறது. ராகுல் பத்திரிகைக்களுக்குக் கொடுப்பதுமில்லை.ராகுல் காந்திக்கும் அரசியலில் பெரிதாக அக்கறையும் இல்லை. ஆனாலும் காங்கிரசுக் கட்சியிலும் ராகுலுக்கு ஏற்றபடி அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்படும். கட்சியின் செயற்படு தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படவுள்ளார். சோனியா காந்திக்கு பிடித்தவரான முக்கிய தகவல் துறை அமச்சராக இருந்த அம்பிகா சோனி அமைச்சரவையில் இருந்து எடுக்கப்பட்டு கட்சி நிர்வாகத்தில் பங்காற்ற வைக்கப்படவுள்ளார்.

தமிழர்கள் எவரும் இல்லை
இரு தமிழர்கள் அமைச்சரவையில் இருந்து விலகிய போதிலும் புதிதாக இணைக்கப்பட்ட அமைச்சர்களில் தமிழர்கள் எவருமில்லை. பிரணாப் முஹர்ஜீன் நிதித் துறையைப் பெற்ற ப சிதம்பரம் தனக்கு மேலும் வணிகத்துறை பெற விரும்பினார். அந்நிய முதலீடுகள் வணிகத்துறையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது மிகவும் "வசதியான" துறை. பாவம் சிதம்பரம். யாழ்ப்பாணம் சென்று சனீஸ்வரன் எனப் பெயர் பெற்றிருந்த டி. ஆர் பாலு தனக்கு ஒரு அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக ஸ்டாலினின் பின்னால் அண்மைக்காலமாக அலைந்து ஏமாறியுள்ளார்.

ஆனந்தமடையாத சர்மா
 அமைச்சரவையின் முக்கிய பதவியில் ஒன்றான வெளியுறவுத் துறையில் இருந்து எஸ் எம் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டுள்ளார். கர்நாடகாவிற்குப் போய் கட்சி அலுவலைப் பார் என அவர் அனுப்பப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு சட்டத் துறையைத் தன்னிடம் வைத்திருந்த சல்மன் குர்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சராக ஆனந்த சர்மா வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

முக்கிய துறைகள்
ஏற்கனவே இரு முக்கிய துறைகளைத் தம்மிடம் வைத்திருந்த வீரப்ப மொய்லி தற்போது முக்கியத்துவம் வாய்ந்த பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.கே ரஹ்மான் கான் சிறுபான்மை விவகாரத்துறைக்கும், டின்ஷா பட்டேல் சுரங்கத் துறைக்கும், அஜய் மக்கேன் வீடமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கும், பல்லம் ராஜு மனித வளத்துறைக்கும், அஷ்வானி குமார் நீதி மற்றும் சட்டத்துறைக்கும் ஹரிஷ் ரவாத் நீர் வளத்துறைக்கும், சந்திரேஷ் குமாரி கட்டோக் கலாச்சாரத் துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரஞ்சீவி
உல்லாசப் பயணத் துறைக்கு சுதந்திரமான பொறுப்புடைய இணை அமைச்சராக (minister of state - independent charge) நடிகர் சிரஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆந்திராவில் காங்கிரசு கட்சி கவிழாமல் தனது 18 சட்ட சபை உறுப்பினர்களைக் கொண்டு காப்பாற்றியமைக்காக இந்த பரிசளிப்பு.

கையொப்பம் போட மறந்த அமைச்சர்
பதவி கிடைத்த பெரு மகிழ்ச்சியில் தன்னை மறந்த அமைச்சர் பொரிக்க நாயக பால்ராம் பதவி ஏற்ற பின்னர் கையிப்பம் இடாமல் சென்று விட்டார்.

தொடரும் குடும்ப ஆதிக்கம்
பல புதிய அமைச்சர்கள் தங்கள் குடும்பச் செல்வாக்கை வைத்து  வந்தவர்களே. முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் அலாம் கானின் மகன் இப்போது புதிய வெளியுறவுத் துறை அமைச்சர்.  சல்மன் குர்ஷிட் முன்பு சட்ட அமைச்சராகவும் சிறுபானமைத் துறை அமைச்சராகவும் இருந்தவர். அப்போது பல அரசு சார்பற்ற நிறுவங்கள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உண்டு. தந்தை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டமைக்காக மகள் அகதா சங்மாவின் பதவி பறிக்கப்பட்டது.







2 comments:

Anonymous said...

innum ethanai kaalam...intha pathavi

Anonymous said...

அப்பாவும் மொக்கை பிள்ளையுமா? பாவம் இந்தியா. என்ன பாடு படப் போகிறதோ?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...