Thursday, 16 April 2020

உலகப்பொருளாதாரத்தையும் தொற்றிய நோய்


நூற்றிற்கு மேற்பட்ட நாடுகள் கொவிட்-19 நோயால் தமது நாட்டுக்கில் வெளிநாட்டவர் வராமல் பயணத்தடை விதித்துள்ளன. அந்த நோயின் பரவலைத் தடுக்க அரசுகள் பிறப்பித்த மூடிப்பூட்டல் உத்தரவால உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கி உலகப் பொருளாதார உற்பத்தி கொவிட்-19 ஆல் 5% வீழ்ச்சியடையும் என்கின்றது. பன்னாட்டு நாணய நிதியம் அதை மூன்று விழுக்காடு என மதிப்பிட்டுள்ளது. பநா நிதியம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக மொத்த உற்பத்தியில் ஒன்பது ரில்லியன் டொலர் பெறுமதியான குறைப்பை கொவிட்-19 தொற்று நோய் ஏற்படுத்தும் என்கின்றது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் அரையாண்டு அறிக்கை
பன்னாட்டு நாணய நிதியத்தின் அரையாண்டு அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் 5.9 விழுக்காட்டாலும், யூரோ வலய நாடுகள் 7.5விழுக்காட்டலும், ஜப்பான் 5.2விழுக்காட்டாலும் பிரித்தானியா 6.5 விழுக்காட்டாலும் பொருளாதார தேய்வை 2020இல் சந்திக்கும். ஆண்டுக்கு குறைந்தது  எட்டு விழுக்காடு வளர வேண்டிய கட்டாயத்தில் உள்ள சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதாரங்கள் 2020இல் சொற்ப அளவே வளரும். சீனாவின் பொருளாதாரம் 1.2 விழுக்காட்டாலும் இந்தியாவின் பொருளாதாரம் 1.9 விழுக்காட்டாலும் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வுகூறியுள்ளது. 2020இல் ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இலங்கை ஆகிய நாடுகள் பெரும் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அறுபது வளர்முக நாடுகள் கடன் கேட்டு பன்னாட்டு நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. கொரொனா நச்சுக் கிருமியின் கொவிட்-19 நோயால் பாதிக்கப் பட்ட வளரு முக நாடுகளுக்கு உதவும் வகையில் பன்னாட்டு நாணயத்தின் சிறப்பு பணமெடுப்பு உரிமையை (Special Drawing Rights) ஒரு ரில்லியன் டொலர்களாள் அதிகரிக்கும் படி பல ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாட்டு தலைவர்களும் முன்னாள் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்கா அதற்கு தயக்கம் காட்டுகின்றது. 


பாரிய தாக்கம்
பன்னாட்டு தொழில் அமைப்பின் தகவலின் படி கொவிட்-19 தொற்றுநோய் 3.3 பில்லியன் உலக உழைப்பாளர்களில் 40 விழுக்காட்டினரை வேலை செய்யாமல் பண்ணியுள்ளது. 1.25பில்லியன் மனிதர்களின் உழைப்பு இழப்பு உலகப் பொருளாதாரத்தை உலுப்பியதுடன் பல ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. பல முன்னணிப் பொருளாதார நாடுகளில் தொற்றுநோய் பரவும் வேகம் குறையாத படியால் உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இறுதியில் 25 மில்லியன் உழைப்பாளர்கள் நிரந்தரமாக வேலையிழக்கும் நிலை வரலாம். இது 2008-ம் ஆண்டு உருவான உலக நிதி நெருக்கடியின் போது ஏற்பட்ட பாதிப்புலும் அதிகமானது. அதனால் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் பல அரசுகள் முன்வைத்துள்ள கடன் நிவாரணத் திட்டம் போதுமானதாக இருக்காது எனச் சொல்லியுள்ளன.
கோவிட்-19 நோய் பரவலைத் தடுக்க ஹங்கேரி மக்களாட்சியில் இருந்து தனியொருவர் ஆட்சிக்கு மாறிவிட்டது எனச் சொல்லக் கூடிய அளவிற்கு அதன் பாராளமன்றம் தலைமை அமைச்சர் விக்டர் ஓபனுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.

அதிகரிக்கும் அமெரிக்க சீன விரோதம்.                
அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளும் சீனாவிற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளன. டிரம்ப் கொரோனாவை சீன நச்சுக் கிருமி என அழைத்தமையை மக்களாட்சிக் கட்சியினர் விரும்பாத போதிலும் அந்தக் கிருமி பரவுவதற்கு சீனாவே காரணம் என்கின்றனர். கொவிட்-19 தாக்கதிற்கு பின்னர் சீன அமெரிக்க உறவு முன்பை விட மோசமாகும் என்பதில் ஐயமில்லை. 90% குடியரசுக் கட்சியினரும் 67% மக்களாட்சிக் கட்சியினரும் சீனாவே கொரோனா நச்சுக் கிருமியின் பரவலுக்கு பொறுப்பு என நம்புகின்றனர். மற்ற நாடுகளின் இழப்பீட்டிற்கு சீனா ஈடு செய்ய வேண்டும் என்ற கருத்தும் அமெரிக்காவில் வலுப்பெறுகின்றது. இந்தக் கருத்தை அமெரிக்க ஊடகங்கள் உலகெங்கும் பரவச் செய்தால் சீனாவிற்கு உலக அரங்கில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பல நாடுகளில் சீனர்கள் மீது தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது.

சீனா சிதறுமா சீறுமா
2020 ஜனவரி பெப்ரவரி மாதங்களில் சீனாவின் ஏற்றுமதி 17.5% வீழ்ச்சியடைந்தது. 2020 ஜனவரியில் 50% ஆக இருந்த சீனாவின் தொழிற்றுறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டி 2020 பெப்ரவரியில் 37.5% ஆக வீழ்ச்சியடைந்தது. பின்பு மார்ச் மாதம் அது 52% ஆக உயர்ந்தது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தி துரிதமாக சீரடைந்தமை ஒரு நல்ல செய்தி. ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும் தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தொற்றுநோய் நெருக்கடியை சீனா சிறந்த முறையில் கையாண்டுள்ளது. சீனாவின் உற்பத்தித் துறை வழமைக்குத் திரும்பியுள்ளமையும் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தமையும் சீனாவின் பொருளாதாரத்திற்கு எந்த அளவில் உதவப் போகின்றது? சீனப் பொருளாதாரம் பெருமளவு ஏற்றுமதியில் தங்கியுள்ளது. அது ஏற்றுமதி செய்யும் நாடுகள் பல கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீள இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் எடுக்கும். அதனால் சீனாவின் பொருளாதாரம் அடுத்த 6 மாதங்களுக்கு பல சவால்களை எதிர் நோக்கும். கொவிட்-19 தாக்குதலுக்கு முன்னரே சீனாவின் தொழில்நுட்பத்துறையில் செய்யப்படும் முதலீடு பாதிப்படையத் தொடங்கியது. 2020 முதலாம் காலாண்டில் அது 31% வீழ்ச்சியடைந்தது. 2020 முதலாம் காலாண்டில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடு செய்ய அதிக உற்பத்தியை இரண்டாம் காலாண்டில் சீனா செய்யும் போது இரண்டாம் காலாண்டில் அதிக உற்பத்தியை செய்யலாம். ஆனால் சீனாவில் உற்பத்தி செய்யும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தியை தமது நாட்டுக்கு நகர்த்த முயன்றால் அது சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். பறகலங்களின் (Drones) உலக விற்பனையில் 70% சீன நிறுவனமான DJIஇற்கு உரியது. இவை பறந்து கொண்டிருக்கையில் எதிர்கொள்பனவனற்றை தாமாகவே உணர்ந்து அவற்றுடன் மோதலைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் தபால்துறை பொதி விநியோகத்துறை போன்றவற்றில் மட்டுமல்ல படைத்துறையிலும் இந்த பறகலங்கள் பெரிதும் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இது போல பல புதிய தொழில்நுட்ப உற்பத்திகள் சீனாவிற்கு கைகொடுக்கலாம்.

மீண்டும் தன்னிறைவுக் கொள்கை
கொவிட்-19 தாக்கத்தின் பின்னர் பல நாடுகள் தமக்குத் தேவையானவற்றை தமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தன்னிறைவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் பல நாடுகள் எடுக்கலாம். உலகெங்கும் பல கிராமங்கள் அக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவை அவற்றின் மக்கள் எடுத்துள்ளனர். இது பல் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியைப் பாதிக்கலாம்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள்
எந்த ஒரு மோசமான பொருளாதா நெருக்கடியும் சில நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். கொவிட்-19 நோய்த்தாக்கம் பேஸ்புக், கூகிள், அமேசன், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது. இந்த நோய்த்தாக்கம் பலரை தமது வீடுகளில் இருந்து கணினிகள் மூலம் இணையவெளித் தொடர்புகளைப் பயன் படுத்தி பணிபுரியும் தேவையை அதிகரித்துள்ளது. அதற்குரிய மென்பொருளை உருவாக்கும் நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. இத்துறைக்கு புதிதாக வந்துள்ள Slack & Zoom நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது. நோயாளர்களின் தகவல்களைத் திரட்டி செயற்கை விவேகத்தின் மூலம் மிகத் துரிதமாக நிரைப்படுத்தலுக்கான தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. 2020 ஜவரியில் இருந்து உலகெங்கும் பங்குச் சுட்டிகள் வீழ்ச்சியடைந்த நிலையில் கூகிள், அமேசன், அப்பிள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இந்திய வங்கித்துறையும் பொருளாதாரமும்
இந்திய வங்கித்துறைக்கான பங்குகளின் சுட்டி 2020 மார்ச் மாதத்தில் 41 விழுக்காடு வீச்சியடைந்தது. கொவிட்-19இன் தாக்கத்திற்கு முன்னரே இந்திய வங்கித்துறை அறவிட முடியாக்கடன் (வாராக்கடன்) பிரச்சனையில் மூழ்கியிருந்தது. கொவிட்-19 பரவுவதைத் தடுக்க நான்கு மணித்தியால அவகாசம் மட்டும் கொடுத்து மூன்று வார ஊரடங்கு உத்தரவை நரேந்திர மோடி பிறப்பித்தார். Fitch Ratings என்ற தரப்படுத்தும் நிறுவனத்தின் கணிப்பின் படி இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை இரண்டு விழுக்காடாக மட்டுமே இருக்கும். இது சுதந்திர இந்தியாவின் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும். ஆண்டு தோறும் படித்து முடித்து வேலை தேடி வரும் இந்திய இளைஞர்களுக்கு வேலை கொடுக்க இந்தியா ஆகக் குறைந்தது எட்டு விழுக்காடு வளர்ச்சியடைய வேண்டும். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் தமது மொத்த தேசிய உற்பத்தியின் பத்து விழுக்காட்டை தங்களுடைய பொருளாதார நிலைத் தரம் தாழ்த்தப் படாமல் மக்கள் நலனுக்காக செலவிட முடியும். இந்தியா பெருமளவு தொகையை மக்கள் நலனுக்காக செலவளித்தால் அதன் பொருளாதாரத் தரம் குறைக்கப்படும். அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவடையும். வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது கடினமாகும். பணவீக்கம் அதிகரிக்கும், இந்திய நிதித் துறை முன்னாள் செயலாளரான சுபாஷ் சந்திர கார்க்கின் கருத்துப்படி இந்தியாவின் மூன்று வார பூட்டி மூடல் இந்தியப் பொருளாதாரத்திற்கு எட்டு இலடசம் கோடி இழப்பு ஏற்படும். அதை ஈடு செய்ய இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 2.5 சதவிகிதம் பெறுமதியான கடன் வாங்க வேண்டும் அதாவது 4 முதல் 5 லட்சம் கோடி ரூபா வரை கடன் வாங்க வேண்டும்.

அமெரிக்காவில் இரண்டு ரில்லியன் திட்டம்
கொவிட்-19 ஆல் பாதிக்கப் பட்ட பொருளாதாரத்தை மீட்க இரண்டு ரில்லியன் டொலர்களை பொருளாதாரத்தினுள் செலுத்தும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக $99000இலும் குறைந்த வருமானமுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட அமெரிக்கர்களுக்கும் 1200 டொலர்களையும் தம்பதிகளுக்கு 2400 டொலர்களையும் பிள்ளைகளுக்கு 500 டொலர்களையும் அமெரிக்க அரசு வழங்குகின்றது. அமெரிக்கர்களின் கொள்வனவு குறைந்தால் அமெரிக்க முதலாளிகளின் வருமானம் குறையும் என்பதால் நாட்டில் கொள்வனவை அதிகரிக்க அமெரிக்கா இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் 810பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து-வாங்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதனால் வங்கிகளிற்கு குறைந்த வட்டியில அதிக நிதி கிடைக்கும். அதை அவ்வங்கிகள் பொருளாதார மேம்பாட்டிற்கான கடனாக நிறுவனங்களிற்கும் பொதுமக்களுக்கும் வழங்கலாம். 2020 ஏப்ரல் 7-8 திகதிகளில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒருமித்த முடிவை எடுக்கவில்லை. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படலாம்.

எரியும் எரிபொருள் உற்பத்திக்குள் நெய் ஊறிய கொரோனா
சவுதி அரேபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உருவான போட்டியால் மசகு எண்ணெயின் விலை முப்பது டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்த நிலையில் உலக உற்பத்தியும் போக்கு வரத்தும் கொரோனா நச்சுக் கிருமியால் பாதிப்படைந்தது. இந்திய சீனா போன்ற நாடுகள் மலிந்த விலையில் தமது எரிபொருள் கையிருப்பை பெருமளவு அதிகரித்தன. பின்னர் மசகு எண்ணெய் விலை 20டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலையீட்டினாலும் அமெரிக்கா சவுதி அரேபியா மீது கடுமையான மிரட்டல்களைப் பிரயோகித்ததாலும் இரசியாவும் சவுதியும் எரிபொருள் உற்பத்திக் குறைப்பிற்கு ஒத்துக் கொண்டன. ஆனாலும் பன்னாட்டு எரிபொருள் முகவரகம் எரிபொருள் கொள்வனவு கொவிட்-19 நோய் தாக்கத்தால் இந்த ஆண்டு பெரிதும் குறையும் என எதிர்வு கூறியத அடுத்து 2020 ஏப்ரல் 15-ம் திகதி மசகு எண்ணெய் விலை இருபது டொலரிலும் குறைந்துள்ளது. இதனால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் போது அந்த நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் வருமானத்தை இழப்பதுடன் அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியும் குறையும். இந்திய இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை ஆகியவற்றுடன் பல கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வேலை வாய்ப்பு குறையும்
அமெரிக்க கோர்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகருமான  கலாநிதி கௌசிக் பாசு செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளிய கொவிட்-19இன் தாக்கம் அதிகரிக்கும் என்கின்றார்.  கொவிட்-19இன் பின்னர் பெரிய உற்பத்தி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பாவித்து தமது உற்பத்திகளை மேலும் கணினி மயமாக்கும். அதனால் வேலை வாய்ப்புக்கள் குறையும். மேலும் அவர் வீட்டில் இருந்து வேலை செய்வது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்கின்றார்.

1930களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் பார்க்க 2007இல் உருவான உலக நிதி நெருக்கடியிலும் பார்க்க கொவிட்-16இன் தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் பெரிய பாதிப்பைச் சந்திக்கவிருக்கின்றது. இன்னும் தொற்று நோய் பரவிக் கொண்டிருப்பதாலும் எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என சொல்ல முடியாத நிலை இருப்பதாலும் உலகப் பொருளாதாரம் எந்த அளவு பாதிக்கப்படும் என இப்போது அளவிட முடியாது.

Monday, 6 April 2020

கொவிட்-19: இறங்காத ஈரானும் இரங்காத அமெரிக்காவும்


கொரோனாநச்சுக்கிருமியால் உருவான கொவிட்-19 தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. பல செல்வந்த நாடுகளே கொவிட்-19இன் தாக்குதலால் திணறும் போது ஏற்கனவே அமெரிகாவின் இறுக்கமான பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் பன்னாட்டு நாணய நிதியத்திடம் ஐம்பது பில்லியன் டொலர் கடனாக கேட்டிருந்தது. மத்திய கிழக்கைச் சேர்ந்த அவதானிகள் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் பார்க்க ஈரான் கொவிட்-19 தொற்று நோயை சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவிக்கின்றனர். ஈரானில் 2020 மார்ச் வரை கொவிட்-19 நோயால் 48,000 பேர் பாதிக்கப்பட்டதுடன் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

மார்தட்டிய ஈரான்
ஈரானில் கொரொனாநச்சுக்கிருமி பரவத்தொடங்கியவுடன் போக்குவரத்துத் தடை, தனிமைப்படுத்தல், மக்கள் வழிபாட்டிற்காக கூடுதலைத் தடுத்தல் போன்றவற்றைச் செய்யவில்லை. 2020 மார்ச் 20-ம் திகதி ஈரானில் புத்தாண்டு நாளானதால் பலர் உள்ளூர்பயணங்களை மேற்கொண்டனர். தங்களால் கோவிட்-19 தொற்றுநோய் பரவுதலை இலகுவாகத் தடை செய்ய முடியும் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். ஈரானில் தொற்றுநோய்த் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஆட்சியாளர்கள் மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டது.

பொருளாதாரத்தடையால் விழுந்த ஈரானை கொரோனா ஏறி மிதித்து
தகொவிட்-19 தொற்றுநோய் ஈரானில் தீவிரமடைடந்ததைத் தொடர்ந்து ஈராக், துருக்கி, பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஈரானுடனான தமது எல்லையை மூடிவிட்டன. கட்டார் விமானச் சேவை மட்டும் ஈரானுக்கான பறப்புக்களை மேற்கொள்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்தடை இரண்டு ஆண்டுகளாக ஈரானுக்கு ஏற்படுத்திய பாதிப்பிலும் பார்க்க அதிக பாதிப்பை கொவிட்-19 தொற்று நோய் ஒரு சில வாரங்களில் ஏற்படுத்தியுள்ளது என ஓர் ஈரானிய பொருளியலாளர் தெரிவித்துள்ளார். பன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பின் படி 2019இல் ஈரானியப் பொருளாதாரம் 9.5% சுருங்கியிருந்தது. அத்துடன் பணவீக்கம் 40%ஆகவும் உயர்ந்தது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானில் இருந்து வெளியேறியுள்ளன. 2018 மே மாதம் டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத் தடை விதித்த பின்னர் ஈரான் தனது எரிபொருள் தவிர்ந்த மற்றப் பொருள்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியது. அதிக உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருந்தது. 2019 செப்டபர் முதல் டிசம்பர் வரையில் ஈரானின் விவசாய உற்பத்தி 7.8% ஆலும் தொழிற்றுறை உற்பத்தி 7% ஆலும் சுரங்கமிடல் 1.2%ஆலும் வளர்ச்சியடைந்தது. வெளிநாட்டு நிறுவன்ங்கள் வெளியேறியதால் அவற்றின் உற்பத்தியை ஈரானிய அரசுசார் நிறுவன்ங்கள் செய்யத் தொடங்கின. பிரெஞ்சு மகிழுந்து உற்பத்தி நிறிவனங்கள் வெளியேறிய போது அவற்றின் உற்பத்தியை ஈரானிய் நிறுவனம் ஈடு செய்தது. ஈரானுக்கு பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்கும் 40 ஆண்டு கால அனுபவம் உண்டு.

மருந்தும் மருத்துவ உபகரணங்களும்
ஈரானுக்கு மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை இல்லை. ஆனால் கொவிட்-19இன் தாக்குதலைச் சமாளிக்கத் தேவையான மருந்துகளையும் உபகரணங்களையும் வாங்குவதற்கான அந்நியச் செலவாணிக் கையிருப்பு ஈரானிடம் இல்லை. அமெரிக்காவின் மருத்துவ உதவிகளை ஏற்க ஈரான் மறுத்திருந்தது. அமெரிக்கா அனுப்பும் மருந்திலும் நோய்பரப்பும் நச்சுக்கிருமிகள் இருக்கும் என்றது ஈரான். அமெரிக்காவே ஈரானில் கொவிட்-19 நோயைப் பரப்பியது என ஈரானிய ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்வதுடன் அதை மக்கள் மத்தியில் பரப்புரை செய்கின்றனர். அமெரிக்க ஊடகங்கள் ஈரான் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதிலும் பார்க்க அமெரிக்கா மீது குற்றம் சுமத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றது எனக் குற்றம் சாட்டுகின்றன. பராக் ஒபாமா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் ஈரானுக்கு கிடைத்த வருமானத்தை ஈரான் சிரியா, ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கவே பெரிதும் பயன்படுத்தியது. தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்பயன்படுத்தவில்லை என வாஷிங்டனில் உள்ள ஈரானிய எதிர்ப்பாளர்களும் இஸ்ரேலிய ஆதரவாளரக்ளும் கருதுகின்றனர். மேலும் அவர்கள் ஈரானிய மதவாத தன்னதிகார ஆட்சியாளர்கள் மக்கள் நலனிலும் பார்க்க ஆட்சிமீதான தமது பிடியின் மீதே அதிக கரிசனை கொண்டுள்ளனர் எனவும் கூறுகின்றனர். ஈரானுக்கு மருத்துவ உதவிக்கு வழங்கப்பட்ட நிதி சிரியா இரசியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு திசை திருப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டும் 2019இல் முன்வைக்கப்பட்டது. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடைகளில் உள்ள நெழிவு சுழிவுகளைப் பாவித்து ஈரானுக்கு மருந்துகளையும் உபகரணங்களையும் அனுப்பின. உலகெங்கும் பரவும் தொற்றுநோய்க்கு உலகின் எல்லா முலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம் என்பதால் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை இடை நிறுத்தும் படி அந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவிற்கு வேண்டுகோளும் விடுத்திருந்தன. ஜெனிவாவில் செயற்படும் ஐநா மனித உரிமைக்கழகமும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. அதே வேளை ஈரானின் புரட்சிப் பாதுகவல் படையின் இளைஞரணியினர் அமெரிக்காவில் சுவாசக்கவச முகமூடிகளின்றித் தவிக்கும் மக்களுக்கு தாம் அவற்றை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் ஈரானில் உள்ள தீவிரப் போக்கு உடையவர்கள் ஈரானுக்கு அதிக மருத்துவ உபகரணங்கள் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். இது அங்கு ஒரு உள்ளக முரண்பாட்ட்டை உருவாக்கியுள்ளது.

தொடரும் குற்றச் சாட்டுக்கள்
2019இன் இலையுதிர்காலத்தில் அமைதியான ஆர்ப்பாட்டம் செய்த 1500 பொதுமக்களை ஈரானிய ஆட்சியாளர்கள் கொன்றதாகவும் வாஷிங்டனில் இருந்து குற்றம் சுமத்தப்படுகின்றது. பல மேற்கு நாட்டவர்களை உளவாளிகள் எனக் குற்றம் சாட்டி ஈரான் சிறையில் அடைத்து வைத்துள்ளமையையும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Transparency International என்ற வெளிப்படைக்கான அமைப்பு ஈரான் ஊழலுக்கான உலக நாடுகளின் பட்டியலில் ஈரான் 146வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. அந்த நிறுவனம் ஈரானுக்கு பராபட்சமாக நடக்கும் என்பதை மறுக்க முடியாத போதிலும் ஈரானில் நடக்கும் ஊழல்களையும் மறைக்க முடியாது. ராயட்டர் செய்தி நிறுவனம் தாம் ஆறுமாதங்களாகத் திரட்டிய தகவல்களை அடிப்படையாக வைத்து ஈரானிய உச்சத்தலைவர் கொமெய்னிக்கும் அவரது மகனுக்கும் 95பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை வைத்திருக்கின்றார்கள் என்ற செய்தியை வெளியிட்டது. பிரித்தானிய ஊடகம் ஒன்று ஈரானிய அரசு அறிவிப்பதிலும் பார்க்க ஐந்து மடங்கு பேர் கொவிட்-19 நோயால் இறந்துள்ளார்கள். மேலும் அந்த ஊடகம் ஈரானில் காலாவதியான மருந்துகள் கொடுக்கப்பட்டு நோயாளிகள் இறக்கின்றனர் என்றது. பினான்:சியல் ரைம்ஸ் பத்திரிகை ஈரானில் கொவிட்-19 தொற்றுநோய் அதிகம் பரவினால் அங்கிருந்து அதன் அயல்நாடுகளுக்குப் பரவலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப் படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அந்த தொண்ணூறு நாட்கள்
அமெரிக்க பாராளமன்றத்தின் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த பலர் ஈரானுக்கான தடைவிலக்கல் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆகக் குறைந்தது 90 நாட்களாவது பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தினர் ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தல், ஏவுகணைத் திட்டம், யுரேனியப் பதப்படுத்தல் போன்றவற்றை நிறுத்தினால் மட்டுமே பொருளாதாரத் தடை விலக்கப் படும் என்கின்றனர். இரசியா, சீனா போன்றவற்றுடன் ஈரான் செய்யும் சில வர்த்தகங்களுக்கு அமெரிக்கா விதிவிலக்கு அளித்திருந்தது. அந்த விதிவிலக்கை மேலும் மூன்று மாதங்கள் நீடிக்க டொனால்ட் டிரம்ப் ஒத்துக் கொண்டமை ஈரானுக்கு எதிரானவர்களை ஆத்திரப்படுத்தியது. ஈரான் தொற்றுநோய் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு ஏதுவாக ஈரானுக்கு மென்பொருட்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதித்துள்ளது.

மற்ற இஸ்லாமியர்களை ஆத்திரப்படுத்தும்
தற்போது எரிபொருள் மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பது அமெரிக்க எரிபொருள் உற்பத்தித் துறையைப் பாதித்துள்ளது. இந்த நிலையில் ஈரானை சுதந்திரமாக எரிபொருள் விற்பனை செய்ய அனுமதித்தால் எரிபொருள் விலை மேலும் குறையலாம் என்பதையும் அமெரிக்கா கருத்தில் கொள்ளும். ஈரானியர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இரக்கமற்ற நிலைப்பாடு ஈராக்கில் உள்ள சியா இஸ்லாமியர்களை அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ந்து எழச் செய்யும். ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் மத்தியிலும் கொவிட்-19 தொற்றுநோய் பரவியுள்ளது. அவரகள் தற்போது படை நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். அது மட்டுமல்ல ஈரானியர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டால் பல சுனி இஸ்லாமியர்களும் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பலாம்.

தாக்குதல் நடக்குமா?
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் கொவிட்-19 நோய் பரவலை இட்டு கரிசனை கொண்டுள்ளனர். அந்த நிலையை தமக்குச் சாதகமாக பயனடுத்தி அமெரிக்கப் படைகள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போன்ற போராளி அமைப்புக்கள் தாக்குதல் நடத்தலாம். அப்படி ஒரு தாக்குதலை ஈரான் தூண்டினால் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் நேரடியாகத் தாக்குதல் நடத்தும் என ஏப்ரல் முதலாம் திகதி டொனால்ட் டிரம் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்சனையையும் தொற்றுநோய்ப் பிரச்சனையையும் எதிர் கொள்ளும் ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை. இஸ்ரேல் அழியட்டும் அமெரிக்கா ஒழியட்டும் என்ற அவர்களது நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை. ஈரானியர்கள் விரக்தியடையும் போது ஹோமஸ் நீரிணையூடாகச் செல்லும் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம். அதனால் எரிபொருள் விலை அதிகரிக்கும் என்பதால் அது இரசியாவிற்கு தேவையான ஒன்றாகவும் உள்ளது.

Friday, 3 April 2020

கொரோனாவும் அரசுகளும் சதிக்கோட்பாடுகளும்

கொரோனா நச்சுக்கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கின்றது. மனித வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல தொற்று நோய்கள் வந்திருந்தாலும் கொவிட்-19உலக நாடுகளுக்கு இடையிலான உறவிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா நச்சுக்கிருமியின் தோற்றம் பற்றி பல கற்பனைக் கதைகள் பரவுகின்றன.

சுகாதாரப் பிரச்சனையில் இருந்து பொருளாதாரப் பிரச்சனைவரை
சீனாவின் ஆரம்பித்ததாகக் கருதப்படும் கொவிட்-19முதலில் சுகாதாரப் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. அதற்குரிய மருந்தையும் சிகிச்சை வசதிகளையும் தேடும் போது அது ஒரு மருத்துவப் பிரச்சனையானது. அந்த இரண்டு பிரச்சனையையும் ஆரம்பத்தில் சீன அரசு கையாண்ட போது எழுந்த விமர்சனங்களால் அது அரசியல் பிரச்சனையாக மாறியது. சீனாவின் முக்கிய நகரமான உஃகான் தனிமைப் படுத்தப் பட்ட போதும் அதைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட போதும் பெரும் பொருளாதாரப் பிரச்சனை எழுந்தது. சீனாவின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப் பட்டு 2020இன் முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் தொழிற்றுறை உற்பத்தி 13.5% வீழ்ச்சியடைந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. 1979இன் பின்னர் முதற்றடவையாக சீனாவின் பொருளாதாரம் குன்றப் போகின்றது எனக் கருதப்படுகின்றது. சீனாவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாலும் உலகெங்கும் பல நாடுகளில் பரவியுள்ள கொவிட்-19அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் கௌரவப் பிரச்சனை
சீனாவில் இருந்துதான் கொரோனா உருவானது என்பதும் சீனா ஆரம்பத்தில் அந்த கிருமிகள் தொடர்பாக உண்மையான செய்திகளை வெளிவிடவில்லை என்ற குற்றச் சாட்டும் சீனாவிற்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக இருக்கின்றது. தான் கொரோனா கிருமிப்பரவலை மற்ற நாடுகளிலும் பார்க்க சிறப்பாகக் கையாண்டது என சீனா மார்தட்டுகின்றது. சீனா அரசு மேற்கொண்ட இறுக்கமான நடவடிக்கைகளால் 7.5மில்லியன் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன என்ற ஒரு பிரித்தானியப் பல்கலைக் கழகம் சீனா தனது நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்கு முன்னர் எடுத்திருந்தால் 95% உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என்ற குற்றச் சாட்டையும் முன் வைத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் சீனாவை வாயாரப் புகழ்ந்துள்ளது. ஆனால் பல மேற்கு நாட்டு ஊடகங்கள் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பொம்மை என்கின்றது. சீனாவிற்கு முன்னர் தைவான் உலக சுகாதார நிறுவனத்திற்கு கொரொனா நச்சுக் கிருமிகள் மனிதர்களில் இருந்து மனிதருக்கு பரவக் கூடியது என அறிவுறுத்தியிருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளின் தலைவர்கள் உலக சுகாதார நிறுவன அதிபர் மீது குற்றம் சாட்டினர். அவர் பதவி விலக வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. 


நாட்டுக்கு நாடு வித்தியாசமாக கையாளப்பட்ட கொவிட்-19
சிறியா நாடென்பதாலும் சிறப்பாக முகாமைப் படுத்தப்படுவதாலும் சிறந்த மருத்துவத் துறையைக் கொண்டிருந்த படியாலும் சிங்கப்பூர் கொவிட்-19நச்சுக்கிருமிப் பரவலை சிறப்பாகக் கையாண்டது. சிறப்பான ஒற்றையாட்சியைக் கொண்ட தென் கொரியாவாலும் சிறந்த முகாமையைக் கொண்ட ஜப்பானாலும் கோவிட்-19இன் பரவலை தடுக்க முடிந்தது. தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான இத்தாலி பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை மற்ற ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன. துருக்கிய ஆட்சியாளர்கள் முதலில் தமது நாட்டில் கொவிட்19 நச்சுக்கிருமி பரவவில்லை என்றது. இஸ்ரேல் தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை கொவிட்-19இற்கு எதிராக எடுத்தது. இலங்கை அரசு கொவிட்-19இல் அதிக கவனம் எடுத்தது. விரைவில் பாராளமன்றத் தேர்தலி நடத்தி அதன் அரசமைப்பு யாப்பின் 19வது திருத்தத்தை ஒழிப்பதில் அதிபர் அக்கறையாக உள்ளார்.
பண்டங்கள் அல்ல மனிதப் போக்கு வரத்தே பிரச்சனைக்குரியது.
சீனாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் இந்தியாவிலும் பாக்கிஸ்த்தானிலும் கோவிட்-19இன் பாதிப்பு பல ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க குறைந்த அளவில் இருக்கின்றது. கொவிட்-19 நச்சுக்கிருமியின் ஆரம்ப இடமான உஃகான் நகரில் இருந்து நேரடி விமானச் சேவையைக் கொண்ட தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொற்று நோய்ப்பரவல் துரிதமாகவும் அதிக அளைவிலும் இருந்தது. கொவிட்-19 நச்சுக் கிருமி மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுவதே அதிகம். அது உணவுப் பொருட்களிலோ மற்ற வர்த்தகப் பொருட்களிலோ அதிக மணித்தியாலங்கள் உயிருடன் இருக்காது.

பல விதமான சதிக் கோட்பாடுகள்
ஒவ்வொரு தடவையும் புது வகையான தொற்று நோய்க்கிருமிகள் உலகெங்கும் பரவும் போது மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்காக அக்கிருமிகளை உருவாக்கின என்பது முதலில் வைக்கப்படும் குற்றச் சாட்டாகும். இரண்டாவது குற்றச் சாட்டு உயிரியல் படைக்கலன்களுக்கு உற்பத்தி செய்த கிருமிகள் தப்பி விட்டன என்பது. மூன்றாவது ஒரு நாட்டில் அழிவை விளைவிக்க மற்ற நாடு பரவ விட்டது. ஐந்தாவது இது இலுமினாட்டிகள் உலகை அழிக்க செய்யும் வேலை. இவை மட்டுமல்ல இன்னும் பல நம்பமுடியாத ஆதாரமற்ற சதிக்கோட்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

காசா முதல் டில்லிவரை
காசா நிலப்பரப்பில் ஓர் இஸ்லாமிய போதகர் கொரோனாவை அல்லா இஸ்லாமியர்களின் எதிரிகளை அழிக்க உருவாக்கினார் என்றார். மேற்குக் கரையில் உள்ள சிலர் இஸ்ரேல் இஸ்லாமியர்களை அழிக்க கொரோனா வைரஸை உருவாக்கிப் பரவவிட்டனர் என்கின்றனர். இந்தியாவில் சில மதவாதிகள் கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புகின்றார்கள் எனக் குற்றம் சாட்டி அதற்கு “ஜிகாடிஸ்ற் வைரஸ்” எனப் பெயரிட்டனர். சீனாவில் உஃகான் நகரில் இருந்து சீனத் தலைநகர் பீஃயிங்கிற்கும் பொருளாதாரத் தலைநகர் ஃசங்காயிற்கும் பரவியதிலும் பார்க்க அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு அதிகம் பரவியது ஏன் என சிலர் கேள்வி எழுப்பியதுடன் ஒரு வீட்டின் சமையலறையில் பிடித்த தீ அதன் இருப்பறைக்குப் பரவாமல் அடுத்த வீட்டுக்கு பரவியது எப்படி எனவும் கேள்வி எழுப்புகின்றனர். முதலாவது உண்மை கொரொனா மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும். சமையலறையில் தீப்பிடித்தவுடன் சமையல் அறையில் இருந்த பக்கத்து வீட்டுக்கார் தன் மீது பிடித்த தீயுடன் பக்கத்து வீட்டு இருப்பறைக்கு ஓடினால் பக்கத்து வீட்டில் தீப்பிடிக்கும். சமையலறையில் தீப்பிடித்தவுடன் அந்த வீட்டின் படுக்கையறையில் இருந்தவர் திடீரென எழுந்து வந்து துரிதமாகச் செயற்பட்டால் சமையலறைக்குள்ளேயே தீ அடக்கப்பட்டுவிடும். உஃகான் நகரில் இருந்து நியூயோர்க் நகருக்கு நேரடி விமானச் சேவை உண்டு. உஃகான் நகரில் அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் துணைத்தூதுவரகங்கள் இருக்கின்றன. மாதம் 900பேர் உஃகான் நகரில் இருந்து நியூயோர்க்கிற்கு பறப்புக்களை மேற்கொள்கின்றனர். மேற்கு நாடுகள் முதலில் கொவிட்-19 நோயை பரவவிட்டு மக்களின் நோய் எதிர்ப்பு வலுவால் அடக்கி மக்களின் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கும் திட்டத்துடன் இருந்தன. சுவாசக் கவசத்தை முகத்தில் அணிவது பயனில்லை என மேற்கு நாட்டு நிபுணர்களும் அரசியல்வாதிகளும் பரப்புரை செய்தனர். ஆனால் சுவாசக் கவசம் அனிந்த ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கிருமி பரவாது என்பது முற்றிலும் உண்மை. சீனாவின் பெரு நகரவாசிகள் எல்லோரும் கொவிட்-19 தொற்று நோய் பரவ முன்னரே சீனாவின் வளிமண்டலம் மாசு பட்டிருப்பதால் சுவாசக் கவசத்தை அணிந்த படியேதான் அவர்கள் வெளியே செல்வார்கள். அதனால் யாராவது கொவிட்-19 நோயால் பிடிக்கப்பட்டால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவது பெருமளவில் குறைக்கப்பட்டது. சீனா மக்களை வெளியில் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டால் அந்த உத்தரவிற்கு மக்கள் பணிந்தே ஆக வேண்டும். சீனாவெங்கும் 200மில்லியன் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் முகங்களை வைத்து ஆட்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தில் சீனா உலகில் முதன்மையாகத் திகழ்கின்றது. அதனால் வீட்டுக்குள் இருக்கும் உத்தரவிற்கு மக்கள் பணிந்தனர். சீனாவில் நோயாளிகளுக்கான சுவாசப் பெட்டிகளுக்கு தட்டுப்பாடு இத்தாலியில் இருந்தது போல் இருக்கவில்லை. இவற்றால் சீனாவால் நோய் பரம்பலையும் இறப்பையும் மட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உரிய நேரத்தில் உலக சுகாதார நிறுவனத்திற்கு கொவிட்-19 நோய் பற்றி எச்சரிக்க சீனா தவறியது மாநிடத்திற்கு எதிரான குற்றமாகும்.

அமெரிக்கப்படையினர் பரப்பினர் என்கின்றது சீனா
சீனாவின் உஃகான் நகரில் நடந்த பல நாடுகளின் படையினர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற வந்த அமெரிக்க படையினர் அங்கு கொவிட்-19 நச்சுக் கிருமியைப் பரப்பினர் என சீனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீன வெளியுறவுத் துறையின் பேச்சாளரான Zhao Lijian திட்டமிட்டு இப்படி ஒரு கதையைப் புனைந்து சீன சமுகவலைத்தளங்களில் பரவ விட்டார் என அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொற்று நோய் பரவ ஆரம்பித்த காலங்களில் சீனா எடுத்த பிழையான நடவடிக்கைகளை மறைக்கவே இப்படி ஒரு கதையை சீனா கட்டிவிட்டுள்ளது என்கின்றனர் அமெரிக்கர்கள். அமெரிக்க அதிபர் கொரொனாவிற்கு சீனநச்சுக்கிருமி எனப் பெயரும் சூட்டினார்.

போர் அனுபவமில்லா சீனாவின் போர்க்கால நடவடிக்கை
சீனாவின் படைத்துறையைப் பற்றி விமர்சிக்கும் மேற்கு நாட்டவர்கள் சீனர்களுக்கு போர் அனுபவம் இல்லை என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டுவார்கள். ஆனல் கொவிட்-19நச்சுக் கிருமியை ஒழிப்பதில் எடுத்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஒரு போர் நடந்தால் அதை சீனா எப்படிக் கையாளும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதிலும் சிகிச்சை அழிப்பதிலும் சீனா மனித இயந்திரங்களைப் பயன்படுத்தியது. நோயால் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு மருந்துகளையும் உணவையும் ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பியது. செயற்கை நுண்ணறிவில் சீனா எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதையும் சீனாவின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.

ஈரான் வழி தனி வழி
ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவால் தமது நாட்டில் கொரொனா நச்சுக் கிருமி பரப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்கா ஈரானுக்கு வழங்க முன்வந்த மருந்துப் பொருட்களையும் ஈரான் வாங்க மறுத்தது. அந்த மருந்திலும் ஈரானியர்களைக் கொல்லும் நச்சுக் கிருமிகளை உள்ளடக்கி அமெரிக்கா அனுபும் என்றன ஈரானிய ஆட்சியாளர்கள்.

டிரம்பின் ஆதரவாளர்கள் வேறு வழி
டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் டிரம்பின் தேர்தல வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்ய அவரின் எதிரிகள் கொவிட்-19 நோயின் தாக்கம் பற்றி வேண்டுமென்றே மிகைப்படுத்திக் கூறுகின்றார்கள் என்கின்றனர். நியூயோர்க் மாநில மருத்துவ மனைகளில் இருந்து திட்டமிட்டு அவலங்கள் பற்றிய செய்திகள் பரப்பப்படுகின்றன என டிரம்ப் ஆதரவாளர்கள் ஆத்திரப்படுகின்றனர். 5ஜீ தொழில்நுட்பத்தை

பில் கேட்ஸ் முன்கூட்டி திட்டமிட்டாரா?
2015-ம் ஆண்டு ஆற்றிய ஓர் உரையில் வரும் காலத்தில் 10மில்லியன் மக்கள் இறக்கலாம் என எதிர்வு கூறியிருந்தார். மென்பொருள் உற்பத்தி வர்த்தகரான அவர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப மென் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அவரது நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, கணனிகள் தாமாகவே கற்றுக் கொள்ளல் ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நடக்கவிருப்பவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத் தரவுகளை மிகப்பெருமளவில் திரட்டி அவற்றில் இருந்தும் தற்போது நடக்கும் மாற்றங்களில் இருந்தும் எதிர்காலத்தை அவர்கள் கணிக்கின்றார்கள். அதில் அவர் கண்டதைப் பகிர்ந்து கொண்டார். இந்த கொவிட்-19 நோய்ப்பரமலால் அவருக்கு ஏதாவது நன்மை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதாவது கிடைத்தால் அவர் மீது குற்றம் சாட்டுவது நியாயமானது. டீன் கூன்ஸ் என்ன்னும் நாவலாசிரியர் 1981-ம் ஆண்டு எழுதிய The Eyes of Darkness நாவலில் 2020 ஆண்டளவில் நிமோனியா போன்ற ஒரு கடுமையான நோய் உலகெங்கும் பரவும். அது சுவாசப்பை சுவாசக் குழாய் போன்றவற்றைத் தாக்கும். எந்த ஒரு மருந்தாலும் அதை தடுக்க முடியாது என எழுதினார். அந்த நோய்க்கு அவர் ஃஉகான்-400 எனப்பெயரிட்டிருந்தார். பில் கேட்ஸிலும் பார்க்க அவரது எழுத்து மிகவும் துல்லியமாக இருக்கின்றது.

எகிப்த்தியரின் எகத்தாளம்
எகிப்திய நடிகர் ஒருவர் எகிப்தியரை கொரோனா ஒன்றும் செய்ய முடியாது என்றார். உப்புப் போட்ட மீனும் வெங்காயமும் உண்ணும் எம்மிடம் கொரோனா கிருமி வந்தால் அதுதான் அழியும் என்றார். எம்மை ஒன்று கூட வேண்டாம் என்கின்றார்கள் ஆனால் நாம் கூடுவோம்; எம்மை முத்தமிட வேண்டாம் என்கின்றார்கள் ஆனால் நாம் முத்தமிடுவோம் என்றார் அந்த நகைச்சுவை நடிகர். ஆனால் இப்போது எகிப்து நோயாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றது. பல எகிப்தியப் பத்திரிகைகள் Egypt is "untouchable" and that Egyptians "are immune" to coronavirus எனச் செய்திகளையும் வெளியிட்டிருந்தன. எகிப்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் எகிப்தியர்கள் கடவுளால் பாதுகாக்கப்படுபவர்கள் என்றனர். எகிப்திய மத போதகர்கள் இஸ்லாமியர்களை எந்தக் கிருமியும் தாக்காது என்றனர்.

வித்தியாசமாகக் கையாள முயன்ற பிரித்தானியா
இரண்டு உலகப் போரிலும் பிரித்தானியா தனது மக்களின் உயிர்களின் பாதுகாப்பிலும் பார்க்க எதிரியை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்தியது. தனது மக்களின் அதிக உயிரிழப்புக்கள் அவர்களை தீவிரமாகப் போரில் ஈடுபடத் தூண்டும் என பிரித்தானிய ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அது போலவே கொவிட்-19கிருமிகளைப் பரவ விட்டு அதை அழிக்க முயன்றனர் என்ற குற்றச் சாட்டு சீனாவில் இருந்து வைக்கப்பட்டது. பிரித்தானியா ஆரம்பத்தில் பாடசாலைகளைக் கூட மூடாமல் இருந்தது ஆனால் பிரித்தானியப் பல்கலைக்கழகம் ஒன்று அதனால் ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என எச்சரித்தைத் தொடர்ந்து அந்த முயற்ச்சி கைவிடப்பட்டது. பின்னர் புதிய சட்டத்தின் மூலம் கோவிட்-19ஐ எதிர்வு கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா
இணைப்பாட்சி ஆட்சி முறைமையைக் கொண்ட அமெரிக்காவில் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான வகையில் கையாளும் நிலையைத் தவிர்க்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அவர் எடுக்கும் முயற்ச்சிக்கு கொவிட்-19கிருமிகளையும் பாவிக்க முயன்றார். அதனால் முதலாவதாக சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிகள் வருவதைத் தடை செய்தார். அதே போல் ஐரோப்பிய நாடுகள் செய்யாத படியால் ஐரோப்பாவில் இருந்தும் மக்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதைத் தடை செய்தார்.

மோசமான நிலையில் மேற்கு நாடுகளின் மருத்துவத் துறை
கொரோனா நச்சுக் கிருமி பல நாடுகளின் மருத்துவத் துறையின் கேவலமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. ரொனால்ட் ரீகன் -மார்கரெட் தட்சர் காலத்தில் இருந்தே முதலாளித்துவ நாடுகள் முதலாளிகளுக்கு விதிக்கப்படும் வருமான வரியைக் குறைப்பதற்கு அரச செலவுகளைக் குறைக்கத் தொடங்கினர். அவரகள் முதலில் கை வைத்தது மருத்துச்வத் துறை. அன்றிலிருந்து மேற்கு நாடுகளின் மருத்துவத் துறை வலுவற்றதாக இருக்கின்றது. சமூகவுடமைக் கொள்கையைக் கொண்ட ஸ்கண்டினேவிய நாடுகள் மட்டும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றன.

நோயிலும் இலாப நட்டக் கணக்கு
கொரோனா நோய் பரவலைத் தடுக்க மக்கள் நடமாட்டைத்தை இறுக்கமாகக் கட்டுப்படுத்தினால் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் தான் மேற்கு நாட்டு ஆட்சியாளர்களை ஆட்டிப்படைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் நோயால் வரும் இழப்பிலும் பார்க்க அதிக இழப்பை பொருளாதார அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டி வரும் என பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அச்சம்தான் அவரை துரித நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது. தமது மருத்துவத் துறையின் பலவீனத்தையும் தமது பொருளாதாரக் கரிசனையையும் மறைக்கவே பல சதிக் கோட்பாடுகளை அவர்கள் பரப்புகின்றார்கள்.

ஆய்வு கூடத்தில் உருவாக்கப் பட்டதா?
மரபணு மாற்றத்தின் மூலம் கொரோனா நச்சுக்கிருமி உருவாக்கப் படவில்லை என சில பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதன் தோன்றியதில் இருந்தே பல புதிய நச்சுக்கிருமிகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டு வௌவால்களில் கொரொனா நச்சுக் கிருமிகள் இருந்து வருகின்றன. 2002-ம் ஆண்டு வௌவால்களில் உள்ள கொரோனா நச்சுக்கிருமிகள் காட்டுப்பூனை போன்ற ஒரு மிருகதிற்குப் பரவி அங்கு உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்குப் பரவி சார்ஃச் என்னும் நோயைப் பரப்பியது, 2012இல் வௌவால்களில் இருந்த கொரோனா கிருமி பூனை போன்ற ஒரு காட்டு விலங்கிற்கு பரவி அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவி மெர்ஃச் என்ற நோயைப் பரப்பியது. 2019இல் வௌவால்களில் இருந்து எறும்பு தின்னி விலங்கிற்குப் பரவி அதில் உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்குப் பரவி கொவிட்-19 நோயை உலகெங்கும் பரப்பியுள்ளது. சார்ஃச் நோயும் கொவிட்-19 நோயும் உலகெங்கும் சீனாவில் இருந்தே பரவியது. சீனர்களின் உணவுப் பழக்கம் இந்த நோய்களின் பரம்பலுக்கு காரணமாய் இருந்தன என்ற குற்றச் சாட்டுக்கு சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும். முதன் முதலில் ஓர் இனம் தெரியாத நச்சுக்கிருமி பரவ தொடங்கியுள்ளது என்ற இளம் சீன மருத்துவரை சீன அரசு கண்டித்தது மிகப்பெரிய குற்றம்.

1960இல் இருந்து கொரோனா உள்ளது.
கொரோனா நச்சுக்கிருமியை 1960களில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது இருந்த நுண்காணிகள் மூலம் பார்க்கும் போது அது அரசரின் முடி போல இருந்ததால் அதற்கு கொரோனா (Corona in Greek. In English: Crown) என்ற பெயர் சூட்டப்பட்டது. தற்போதுள்ள நுண்காணிகள் மூலம் பார்க்கும் போது அது ஒரு கடற்கண்ணி வெடி போல தோற்றமளிக்கின்றது. கொரோனா நச்சுக் கிருமிக் குடும்பத்தில் 40இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதாவது 40 வகையான கிருமிகள் உள்ளன. இவை வௌவால், பூனை, காகம் ஆகியவற்றில் கொரோனா உள்ளன. 

உயிரியல் படைக்கலனா?
New Scientist சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை இந்த நச்சுக்கிருமி உயிரியல் படைக்கலன் அல்ல (No, this virus isn’t a bioweapon) என ஆரம்பிக்கின்றது. அக்கட்டுரையின் சில பகுதி:
New diseases have emerged throughout human history, and we have seen two major coronavirus outbreaks in the last two decades: SARS and MERS. So we shouldn’t be surprised by the arrival of the covid-19 virus.
However, rumours on social media suggest that the outbreak was human-made. Some say the virus leaked from a Chinese lab studying coronaviruses. Others suggest the virus was engineered to spread among humans.
Even the most secure laboratories do sometimes have accidents, and a human-engineered pandemic has been identified as a possible risk to our civilisation, but there is no good evidence that either has happened.
Many similar viruses are found in wild bats, and it seems likely that is the origin of this one, probably via an intermediate host. Similarly, we know that both SARS and MERS came from bats, so there is no reason to invoke a laboratory accident.

உண்மைகளை உரிய முறையில் அறிந்து பதிவுகளை இடுவோம். 

Monday, 30 March 2020

உலகமயமாதலும் இணைபிரித்தலும் (Decoupling)



மகாநதி திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகனும் வில்லனும் உயர் மாடி ஒன்றில்மோதிய போது இருவரின் கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். வில்லன் சண்டையில் வில்லன் மொட்டை மாடியில் இருந்து சறுக்கி விழுந்து அந்தச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருப்பான். அந்த இடத்திற்கு காவற்துறையினர் வந்து கொண்டிருப்பர். அவர்கள் வந்து வில்லைனைக் காப்பாற்ற முன்னர் அவனைக் கொல்ல கதாநாயகன் தன் கையை வெட்டி வில்லனை உயரத்தில் இருந்து விழச் செய்து கொல்வார். உலகமயமாதல் அதிகரித்த போது வல்லரசு நாடுகள்கூட ஒன்றின் மீது ஒன்று அளவிற்கு அதிகமாகத் தங்கியிருப்பது வேண்டத் தகாத ஒன்றாகி விட்டது. இதன் ஆபத்து கொரோனாநச்சுக்கிருமி உலகப் போக்குவரத்தை துண்டித்த போது ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் உணரப்பட்டுள்ளது.


உலகமயாக்கல்
உலகமயமாக்கல் என்பது நாடுகளின் பொருளாதாரங்களையும் கலாச்சாரங்களையும் அதிகம் ஒன்றிணைத்து உலக வர்த்தகத்தையும் மூலதனப் பரம்பலையும் தொழில்நுட்பப்பகிர்வையும் அதிகரிப்பதாகும். உலகமயமாக்கல் உலகச்சந்தையை திறந்து விட்டது; உலக விநியோக வலையமைப்பை உருவாக்கியது; அடம் சிமித் என்னும் பழம் பெரும் பொருளியலாளரின் உழைப்புப்பகிர்வு, தனித்திறனுருவாக்கல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. உலக நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி 1960-ம் ஆண்டு 12விழுக்காடாக இருந்தது. உலகமயமாக்கலின் பின்னர் அது 30விழுக்காடாக உயர்ந்தது. ஒரு உற்பத்திப் பொருளின் பாகங்கள் பல நாடுகளில் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால் ஒரு பொருளின் உற்பத்தி பல நாடுகளில் தங்கியிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனை உற்பத்தியைப் பாதிக்கச் செய்கின்றது. கோவிட்-19 தொற்று நோயால் ஒரு நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது பல நாடுகளின் உற்பத்திகள் பாதிப்புக்கு உள்ளாகின. பல நாடுகள் மூச்சுக்கவசங்களின் ஏற்றுமதியைத் தடை செய்தமை உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிரானவையாக குற்றம் சாட்டப்பட்டன. ஜேர்மனி உருவாக்கவிருக்கும் கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு மருந்து முழுவதையும் அமெரிக்கா வாங்க முற்பட்ட போது ஜேர்மன் அரசு தலையிட்டு அதைத் தடுத்ததும் உலமயமாக்கல் கொள்கைக்கு எதிரானதே.

சீனாவும் உலகமயமாதலும்
சீனா தனது பொருளாதாரத்தைச் சூழும் ஆபத்தை 1979இல் உணர்ந்து கொண்டு செயற்படத் தொடங்கினாலும் கணிசமான பொருளாதாரச் சீர்திருத்தத்தை 1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னரே செய்யத் தொடங்கியது. சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டது. உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்கிற்கு மேல் வளர்ந்துள்ளது. சீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும். சீனாவிற்கான உலக வர்த்தகத்தை மேற்கு நாடுகள் இலகுவாக்கின. அதனால் சீனாவை உலக உற்பத்தி நிறுவனங்கள் தமது பொருத்து நிலையமாக (assembly plant of the world) மாற்றின. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதைப் பாவித்து சீனாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், படைத்துறை ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்ந்தன. 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியா உலகத்தின் தொழிற்சாலை என அழைக்கப்பட்டது போல் தற்போது சீனா அழைக்கப்படுகின்றது. சீனாவின் உவாவே நிறுவனத்தின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி மேற்கு நாடுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உணரவைத்தது.


தொழில்நுட்ப ஆபத்து நாடுகளைத் துண்டிக்கின்றது.


2019 டிசம்பரில் அமெரிக்காவின் வர்த்தகத்துறைச் செயலர் வில்பர் ரொஸ் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றார். இது சீனாவின் உவாவே கைப்பேசி நிறுவனத்தை மட்டும் இலக்காக வைத்துச் சொல்லப்பட்டதல்ல. அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ள ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்புறவு நாடுகளின் மென்பொருள்வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தரவு செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணையவெளியில் அதிகம் தங்கியிருப்பதும் அவற்றின் மென்பொருட்களிலோ அல்லது வன் பொருட்களிலோ உளவறியும் நச்சுநிரல்கள் (computer virus) இணைக்கப்பட்டிருக்கலாம் எனற அச்சமும் அமெரிக்காவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளுடனான தொழில்நுட்ப உறவுகள் இணையவெளித் தொடர்புகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. சுருங்கச் சொல்வதாயின் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதையும் அமெரிக்கப் படைத்துறையை சீனா உளவு பார்ப்பதையும் தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களூடான உலகத் தொடர்பை அமெரிக்கா துண்டிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. உலகத்தை ஒரு சந்தையாக்கும் உலகமயமாக்குதலின் நோக்கம் இங்கு பெருமளவு பாதிக்கப்படுகின்றது. உலகமயமாதலின் ஒரு அம்சமாக தொழில்நுட்பப் பரம்பல் இருக்கின்றது. நாடுகள் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளல் மூலம் சீனாவும் இரசியாவும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கின்றது. 


உயர்ந்த சீனாவை விழுத்தும் முயற்ச்சி
2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி உச்சமடைந்தது. அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல் சீனாவிற்கு சாதகமாகவும் மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பது உணரப்பட்டது. ஆனாலும் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை சீனாவால் மாற்றுவது சிரமமாக இருந்தது. மேற்கு நாடுகள் உலகமயமாக்கலை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலகமயமற்றதாக்கல் (Deglobalisation) 2016-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகின்றது. சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டது. உலகப் பொருளாதாரம் சரியும் போது சீனப் பொருளாதாரம் சரிவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. சீனாவால் உலகமயமாக்குதலில் இருந்து விலக முடியாமல் இருக்க மேற்கு நாடுகள் அதிலிருந்து விலக முடிவெடுத்தன. 2019 ஜூனில் நடந்த ஜீ20 மாநாட்டில் மேற்கு நாடுகள் காப்பியல் (protectionism) கொள்கையைக் கடைப்பிடித்து உலக வர்த்தக் ஒழுங்கை சிதைக்க முயல்வதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் குற்றம் சாட்டினார்.

தன்னிறைவு, உலகமயமாதல், அந்நிய முதலீடு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் வர்த்தகப் போர் இரு நாடுகளையும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதை எப்படித் தவிர்ப்பது என்பதை நோக்கமாகக் கொண்டதே. உலகமயமாதல் முதலீட்டாளர்களையும் அவர்களுக்காக பணி புரிவோரையும் உலகெங்கும் பயணிப்பதை அதிகரிக்கச் செய்தது. அதனாலேயே கொரோனாநச்சுக்கிருமி மிக வேகமாக உலகெங்கும் பரவியது. 1970களில் அப்போது மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்ட வளர்முக நாடுகளில் பொருளாதாரத் தன்னிறைவு என்ற பதம் அதிகம் விரும்பப்பட்டதாக இருந்தது. உலகமயமாக்குதல் அதை இல்லாமல் செய்து “அந்நிய நேரடி முதலீடு” என்ற சொற்றொடர் பலராலும் விரும்பப்பட்டதாக உருவெடுத்தது.

சீன அமெரிக்க இணைப்புச் சங்கிலி
அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சீனா அதிக ஏற்றுமதியைச் செய்வதால் சீனாவிடம் அதிக வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு உள்ளது. அதை கையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. எங்காவது முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்கர்கள் சீன உற்பத்தியை மிக மலிவான விலையில் வாங்குகின்றார்கள். உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் அமெரிக்க அரசின் வரிச் சேகரிப்பு குறைந்தது அமெரிக்க அரசின் வருமானம் குறைகின்றது. அதனால் அமெரிக்க அரசு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெரிக்காவிற்கு சீனா தன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பை கடனாகக் கொடுக்கத் தொடங்கியது. அப்படி சீனா கொடுக்காவிட்டால் அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும். குறைந்தால் சீன ஏற்றுமதி குறையும். அமெரிக்காவிற்கு சீனாவின் ஏற்றுமதியும் அமெரிக்காவிற்கு சீனா கொடுக்கும் கடனும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சங்கிலி. இது போலப் பலவகைகளில் உலகமயமாதல் பிரிப்பதற்கு கடினமான சங்கிலிகளால் நாடுகளைப் பிணைத்துள்ளது. இந்த பிணைப்பைப் பற்றியோ அதை துண்டிப்பதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றியோ உணரக் கூடிய அறிவுடையவர்களாக எந்த ஒரு முன்னணி நாட்டினதும் ஆட்சியாளர்கள் இல்லை.

உலகமயமாதலை தீவிரமாக முன்னெடுத்த தாராண்மைவாதக் கட்சிகள் பல உலகெங்கும் தோற்கடிக்கப்பட்டு தேசியவாதத் தலைவர்கள் பல முன்னணி நாடுகளில் ஆட்சியில் அமர்ந்துள்ளமையும் உலகமயமாக்குதலைப் பின்தள்ளியுள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து “உலகமயமாதலை இணைபிரித்தல்” (Decoupling Globalization) என்ற சொற்றொடர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களால் அதிகம் பாவிக்கப்படுகின்றது. உலகமயமாக்குதல் உருவாக்கியுள்ள நாடுகளிடையேயான சங்கிலிப் பிணைப்பை துண்டிக்க மகாநதி திரைப்படத்தின் கதாநாயகன் போல தன் கையையே தான் துண்டிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய தேசியவாத அரசுத் தலைவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைத் தாங்கக் கூடிய நிலையிலும் இல்லை. உலகத் தலைவர்களிடையே சரியான புரிதலும் தேவையான சகிப்புத் தன்மையும் இல்லை.



Monday, 24 February 2020

உலக ஆதிக்கமும் 5G அலைக்கற்றையும்


சீனாவின் 5ஜீ அலைக்கற்றை உலகெங்கும் பாவிக்கப் பட்டால் உலக ஒழுங்கு குலைக்கப்படும், சீனா உலகெங்கும் உளவு பார்க்கும், சீனா உலகெங்கும் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப தகவல்களையும் தொழிற்றுறை இரகசியங்களையும் திருடும், சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளாலும் அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆண்டு தோறும் அரை ரில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பத் தகவல் திருட்டுக்களை அமெரிக்காவில் இருந்து சீனா செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அலைக்கற்றைச் செயற்பாட்டின் மூலம் 4.7மில்லியன் வேலைவாய்ப்பும் 47பில்லியன் வருமானமும் அமெரிக்காவிற்கு கிடைக்கின்றது. சீனாவின் ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் தமது தொழில்நுட்பங்களைத் திருடியதாக அமெரிக்காவின் கூகிள், கோல்கொம் ஆகிய நிறுவனங்கள் பகிரங்கக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தன.

5ஜீ சீனாவை பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நாடாக்கும்
தற்போது பல நாடுகளிலும் பாவிக்கப்படும் 4ஜீ (நான்காம் தலைமுறை) என்பது Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 4G அலைக்கற்றையில் பாவிக்கப்படும் LTE தொழில்நுடம் ஒரு செக்கண்டிற்கு 100MB தகவலைப்பரிமாறும். Wi-Fi மூலம் 11MB தகவலை மட்டும் பரிமாறும். இந்த தொழில்நுட்பத்தில் அடுத்த நிலை வளர்ச்சிதான் 5ஜீ தொழில்நுட்பம். 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள் மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்ல தானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும் 5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப் பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றும். போக்குவரத்து, தொழிற்றுறை உற்பத்தி, வர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும் துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும். உதாரணத்திற்கு ஆளே இல்லாத கடையில் ஒருவர் போய் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வீடு வரலாம். அதற்குரிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அந்தக் கடைக்கு உரியவர் எடுத்துக் கொள்வார். உங்கள் முகத்தை வைத்தும் நீங்கள் வாங்கும் பொருளில் உள்ள இலத்திரனியல் குறியீடுகளை வைத்தும் இவை செய்யப்படும். 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னோடியாகச் செயற்படும் நாடு உலகப் பொருளாதாரத்தில் முன்னோடியாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது.


5ஜீ தொழில்நுட்பத்தில் சீனா முன்னணி.
5ஜீ தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் சீனா ஆகிய நாடுகளின் பல நிறுவனங்கள் போட்டி போட்டன. நாடுகளின்  ஆனால் சீனாவின் ஹுவாவே நிறுவனம் முந்திக் கொண்டு விட்டது. 2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா 5ஜீ செலவு செய்த தொகையிலும் பார்க்க சீனா 24மில்லியன் டொலர்கள் அதிகமாகச் செலவு செய்தது. 5ஜீ அலைக்கற்றைகளுக்கான 350,000 தொடர்புக் கோபுரங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 30,000மட்டுமே உள்ளன. உலகிலேயே அதிக அளவு கைப்பேசியூடான கொடுப்பனவுகள் சீனாவில் நடக்கின்றன. சீனாவின் WeChat Pay, Alipay ஆகியவை சீனாவின் கொடுப்பனவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கு Paypal, Apple Pay போன்றவை பயனில் இருந்தாலும் குறைந்த அளவே பாவிக்கப்படுகின்றன. சீனாவில் கடன் அட்டைகள் பாவனை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. அமெரிக்காவிலும் பார்க்க நான்கில் ஒரு பங்கு கடன் அட்டைகள் சீனாவில் பாவிக்கப்படுகின்றன. இப்போது கைப்பேசியூடான கொடுப்பனவுகளுக்குப் பதிலாக முகத்தை இனங்காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

5ஜீ பாவனை
2019-ம் ஆண்டு அப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ-ஃபோன்-11இல் 5ஜீ அலைக்கற்றைகள் பாவிக்கும் வசதிகள் இல்லை ஆனால் 1) Samsung Galaxy S10, 2)OnePlus 7 Pro, 3)Huawei Mate X, 4)Huawei Mate 30 Pro 5) Oppo Reno, LG V50 ThinQ, 6) Xiaomi Mi Mix 3 ஆகிய கைப்பேசிகளில் 5ஜீ அலைக்கற்றை பாவிக்கக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 2020இன் பிற்பகுதியில் வெளிவரவிருக்கும் ஐ-ஃபோன்களில் 5ஜீ தொழில் நுட்பம் இருக்கும். 2019இல் 5ஜீ பரவலான பாவனையில் இருக்காது என்ற உறுதியான நம்பிக்கையிலேயே அப்பிள் நிறுவனம் 5ஜீ தொழில்நுட்பத்தைப்பற்றி கரிசனை கொள்ளவில்லை. தற்போது வளர்நிலையில் உள்ள செயற்கை நுண்ணறிவு(AI), பகவக்கணினியம் (quantum computing), குறியீட்டுவரைபு (cryptography), முகமினங்காணல் (facial recognition) போன்ற தொழில்நுட்பங்களை கைப்பேசிகளில் சிறப்பாகச் பிரயோகிக்க 5ஜீ தொழில்நுட்பம் அவசியம்.

பட்டுப்பாதையைப் பளபளக்கவைக்கும் 5ஜீ
சீனாவின் ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான புதியபட்டுப்பாதை  (belt-and-road initiative-BRI) திட்டத்திற்கு 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கவர்ச்சிகரமான அம்சமாக அமையும். BRIயும் 5ஜீயும் 2049-ம் ஆண்டு பொதுவுடமை அரசின் நூற்றாண்டு நிறவு நாள் வரும் போது சீனாவை உலகின் முதற்தர நாடாக்கும் திட்டத்திற்கு சிறந்த பங்களிப்பைச் செய்யும். பட்டுப்பாதையில் எண்மியப்பாதை (Digital Road) என்பதும் ஒரு முக்கிய அம்சமாகும்.  செய்மதிகள் மூலம் செயற்படும் போக்குவரத்து வழிகாட்டித் தொழில்நுட்பமான Global Positioning System (GPS)ஐ இந்தியா உருவாக்கிய பின்னரே சீனா உருவாக்கியது.  ஆனால் 5ஜீ தொழில்நுட்பத்தால் சீனாவின் GPS உலகின் முதற்றரமானதாக மாறும்.

சீனாவின் சட்டத்தை வைத்து அமெரிக்கா போடும் கட்டம்
சீனாவை 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னணிக்கு கொண்டு வந்த ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் 1987-ம் ஆண்டு சீன படையில் பொறியியலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ரென் ஜென்ஃபே என்பவரால் 1987-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 140,000 பணியாட்களைக் கொண்ட அந்த நிறுவனத்தில் 46% பேர் ஆய்வு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அதன் ஆய்வு கூடங்கள் கனடா, துருக்கி, அயர்லாந்து, சுவீடன், இரசியா எனப் பலநாடுகளில் வியாபித்துள்ளது. உலகின் 140 நாடுகளில் ஹுவாவேயின் உற்பத்திப் பொருட்கள் பாவனையில் உள்ளன. சீன நிறுவனங்கள் தம்மிடம் உள்ள தகவல்களை சீன உளவுத்துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் சீனாவில் உள்ளது. அதை அடிப்படையாக வைத்தே அமெரிக்கா ஹுவாவே உருவாக்கிய 5ஜீ தொழில்நுட்பத்திற்கு எதிரான பரப்புரையைச் செய்கின்றது. அமெரிக்காவில் ஹுவாவேயைத் தடைசெய்யும் அரச ஆணையை அதிபர் டிரம்ப் பிறப்பித்தார். ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் சீனா ஒத்துழைக்காமைக்குப் பழிவாங்கவே ஹுவாவேயிற்கு எதிராக டிரம்ப் செயற்படுகின்றார் எனவும் குற்றச்சாட்டப்படுகின்றது. Facebook, Apple, Amazon, Netflix, Google ஆகிய இலத்திரனியல் துறை நிறுவனங்களின் உலக ஆதிக்கத்தை சீனாவின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்திலேயே ஹுவாவேயிற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கின்றது என்ற குற்றச் சாட்டும் உண்டு. ஹுவாவேயுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் எனவும் மிரட்டப்படுகின்றது.

அச்சப்பட வேண்டிய இந்தியா அச்சப்படவில்லை.
சீனாவின் ஹுவாவே நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையை 2020-ம் ஆண்டின் ஆரம்ப நிலைப்படி ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தைவான், ஐக்கிய அமெரிக்கா ஆகியவை தமது நாட்டில் உள்ள கைப்பேசி நிறுவனங்கள் சீனாவின் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை பாவிக்கப்படுவதை தடைசெய்திருந்தன. அமெரிக்காவின் பல நிர்ப்பந்தங்களுக்கு இடையிலும் பிரித்தானியா சீனாவின் 5ஜீ அலைக்கற்றையை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தமது நாட்டில் பாவிப்பதற்கு அனுமதி செய்வதாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் பிரித்தானியத் தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சனுக்கும் இடையில் நடந்த உரையாடல் சூடான விவாதமாக மாறி டிரம்ப் சினத்துடன் தொலைபேசியைத் துண்டித்ததாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. பிரித்தானிய நிபுணர்கள் செய்த ஆய்வின் படி சீனாவின் 5ஜீ அலைக்கற்றையைப் பாவிப்பதால் ஏற்படும் ஆபத்து சமாளிக்கக் கூடியது. சீனாவின் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவை, பரிட்சார்த்த முறையில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 2019-ம் ஆண்டின் இறுதியில் தெரிவித்தார்.

ஹைப்பர்சோனிக் படைக்கலன்களும் 5ஜீயும்
ஒலியின் வேகத்திலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய படைக்கலன்கள் ஹைப்பர்சோனிக் படைக்கலன்கள் எனப்படும். இரசியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. இரசியாவிடம் ஒலியிலும் பார்க்க 20 மடங்கு வேகத்தில் பறக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவற்றை உரிய பாதையில் செலுத்துவதற்கு மிகத்துரிதமான தகவல் பரிமாற்றம் அவசியம். அசையும் இலக்குகளை நோக்கிச் செலுத்தப்படும். ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நிமிடத்திலும் குறைவான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அதற்கு 5ஜீ தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் இணைக்கப்பட வேண்டும். அப்போதே தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க முடியும். ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவுபவர்க்கும் ஏவப்படுபவர்க்கும் 5ஜீ அவசியம்.

இரசிய இரகசியங்கள்
2018-ம் ஆண்டு இரசியாவில் நடந்த உலகக் காற்பந்தாட்டப் போட்டியில் சீனாவின் 5ஜீ தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டது. இரசியாவில் சீனாவின் ஹுவாவே நிறுவனம் தனது 5ஜீ அலைக்கற்றையின் பரீட்சார்த்த சேவையை 2019 செப்டம்பரில் ஆரம்பித்துள்ளது. இரசியாவின் குடிமக்கள் கணக்கெடுப்பைச் செய்வதற்கு 360,000 பட்டிகைக் கணினிகளில் (Tablets) சீன 5ஜீ இணைக்கப்பட்டது. இரசிய இரகசியங்களை சீனா திருடமாட்டாதா என இரசிய நிபுணர்களிடம் அமெரிக்க ஊடகர்கள் கேள்வி எழுப்பினர். 2018-ம் ஆண்டில் 27,000 இணையவெளி ஊடுருவல்கள் இரசியாமீது செய்யப்பட்ட பின்னர் இரசியா தன்னை முழுமையாக பாதுகாத்துக் கொண்டுள்ளது; அதன் இரகசியங்களை இனியாரும் திருட முடியாது என்பது அவர்களின் பதில்.

அமெரிக்கா அகற்றப்பட வேண்டிய தலைவன் என்பதும் சீனா நம்பமுடியாத தோழன் என்பதும் உண்மையே. இந்த இரு பெரிய அண்ணன்களுக்கு இடையிலான போட்டியில் தம்பிகளின் தலைக்கு ஆபத்து.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...