Friday, 27 January 2017

டிரம்பின் அமைச்சரவையும் உலக அரசியலும்



பராக் ஒபாமா உலக மக்களிடை அமெரிக்காவின் பழுதடைந்திருந்த விம்பத்தை திருத்த முயன்றார். முக்கியமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களின் அமெரிக்கா தொடர்பான அபிப்பிராயத்தை மாற்ற முயன்றார். புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக அரங்கில் அமெரிக்காவின் விம்பத்தைப் பற்றிக் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. அவர் பெரும்பாலான அமெரிக்கர்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். ஆனால் அவர் தனது விம்பத்தையே கெடுத்துக் கொண்டிருக்கின்றார். சந்தேக நபர்களை விசாரிக்கும் போது சித்திரவதை செய்வது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றியமைத்த டிரம்ப் Water Boarding என்ற சித்திரவதையை மீள நடைமுறைப்படுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பாக தேவையேற்படின் மாற்றம் செய்ய தனது பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மத்திஸுக்கு அதிகாரமளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திஸ் Water Boarding சித்திரவதைக்கு எதிரானவர். இது டிரம்ப்பின் அமைச்சர்களுக்கும் அவருக்கும் இருக்கும் முரண்பாடுகளை டிரம்ப் எப்படிக் கையாளப் போகின்றார் என்பதற்கு உதாரணமாகக் காட்டுகின்றது. டிரம்ப் அரச விவகாரங்களில் தனது அனுபவமின்மையை நன்கு அறிந்துள்ளார். 

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமெரிக்க முதலாளிகள் உலகத்தைச் சுரண்டுவது என்பதையே கரிசனையாகக் கொண்டுள்ளது எனப் பரவலாக நம்பப்படுகின்றது. பல அரசியல்வாதிகள் தமது கொள்கைகளை அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதை அடிப்படையாகக் கொண்டே வகுப்பார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் ஹரி ரூமன் புதிய பேரம் என்ற கொள்கையை முன்வைத்தார். அது நிவாரணம், மீட்சி, சீர்திருத்தம் என்பவற்றை முக்கிய பாகங்களாகக் கொண்டது. அதை உலக மக்கள் வெறுக்கவில்லை.
சுதந்திரத்தின் வெற்றிக்காக எந்த எதிரியையும் எதிர்ப்பேன் என்றார் ஜோன் F கெனடி. பொதுவுடமைவாதத்தை விரும்பாதவர்கள் மட்டுமே அதை விரும்பினர். டொனால்ட் ரீகன் வியட்னாம் போருக்குப் பின்னரான அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதை கொள்கையாகக் கொண்டார். அதற்கு உலகில் பரவலான வரவேற்பிருக்கவில்லை. அமெரிக்காவை மீண்டும் உயர்ந்ததாக ஆக்குவது தன் கொள்கை என்கின்றார் டிரம்ப். இதை உலக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதிலேயே அதன் வெற்றி தங்கியிருக்கின்றது. அதனால் உலகிற்கு என்ன நன்மை கிடைக்கப் போகின்றது?

டொனால்ட் டிரம்பின் வர்த்தக, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை போன்றவை தொடர்பான கொள்கை தற்போது உள்ள உலக நிலைப்பாட்டில் பல மாற்றங்களையும் தாக்குதல்களையும் கொண்டுவரவுள்ளது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கப் படையினர் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் உலகெங்கும் நிலைகொண்டுள்ளனர். அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் பெருமளவு வர்த்தகத்தைச் செய்கின்றது. அங்கு அமைதி நிலவது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஆண்டு தோறும் அமெரிக்கா செய்யும் வர்த்தகம் 699பில்லியன் டொலர்களாகும். ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கப் படைத்தளங்களை வைத்திருக்க அமெரிக்காவிற்கு 2.5பில்லியன் டொலர்கள் மட்டுமே. இது உலகெங்கும் அமெரிக்கா தளங்கள் வைத்திருப்பதற்கான செலவில் 34 விழுக்காடாகும்.

அமைச்சரவை நியமனம்
புதிய அதிபர் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை முதன்மைப் படுத்தும் வெளியுறவுக் கொள்கை (America First” foreign policy) என அவர் பல தடவைகள் சொல்லியுள்ளார். புதிய அதிபரின் கொள்கைகளை அவரது அமைச்சர்களில் இருந்து அறிந்துகொள்ளலாம். அவரது அமைச்சரவை பருந்துகளால் நிறைந்திருக்கின்றது. அமெரிக்க அரசியலில் பருந்துகள் என்போர் போரையும் அடுத்த நாடுகளில் தலையிடுவதையும் விரும்புபவர்கள். மாறாகப் புறாக்கள் எனப்படுவோர். சண்டையைத் தவிர்த்து வேறு வழிகள் மூலம் மற்ற நாடுகளை தமது வழிக்குக் கொண்டு வர முயல்வார்கள். அமெரிக்க அரசியலமைப்பு ஓர் அமைச்சருக்கான தகமைகள் எதையும் வரையறுக்கவில்லை. அமெரிக்காவில் அமைச்சரை செயலர் எனவே அழைப்பர். அதிபர் தான் விரும்பியவரை பாராளமன்றத்தின் மூதவையின் ஆலோசனையுடனும் அங்கீகாரத்துடனும் அமைச்சராக நியமிக்கலாம். ஆனால் தனது உறவினரை நியமிக்க முடியாது. நியமிக்கப் படுபவரை மூதவை உறுப்பினர்கள் தமது கேள்விகளால் துளைத்தெடுப்பர். டொனால்ட் டிரம்ப்பின் செய்கைகள் எல்லாம் வழமைக்கு மாறானதாகவும் சர்ச்சைக்கு உரியனவாகவே இருப்பது வழக்கம். அவரது அமைச்சரவை நியமனங்களும் அப்படியே இருக்கின்றன. என்றுமில்லாத அளவு அதிக படைத்துறையைச் சேர்ந்தவர்களை டிரம்ப் தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை பெண்டகன் எனப்படும் பாதுகாப்புத்துறை சிஐஏ எனப்படும் முதன்மை உளவுத்துறை ஆகிய மூன்றும் அமெரிக்காவின் முக்கிய அதிகார மையங்களாகும். இந்த மூன்றும் வெள்ளை மாளிகை எனப்படும் அமெரிக்க அதிபரின் பணிமனையை இயக்குபவர்களாக இருப்பார்கள். அந்த மூன்று அதிகார மையங்களும் முக்கிய ஊழியர்கள் பெரும்பாலும் புதிய-பழமைவாதிகளாக (neoconservative) இருக்கின்றனர்.

பாதுகாப்புத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்திஸ்
டொனால்ட் டிரம்ப் தனது பாதுகாப்புத் துறைச் செயலராக முன்னாள் அமெரிக்கப் படைத்தளபதி ஜேம்ஸ் மத்திஸ்சை நியமித்திருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியது. 1950-ம் ஆண்டிற்குப் பிறகு முதற்தடவையாக முன்னாள் படைத்தளபதி பாதுகாப்புத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 1950-இல் இருந்து குடிசார் அதிகாரிகளே பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்தனர். 1950-ம் ஆண்டு கொரியப் போர் நடந்த படியால் ஜெனரல் ஜோர்ஜ் ஜீ மார்ஷல் பாதுகாப்புத் துறைக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் இப்போது அரசை நடத்துவது தொடர்பாக எந்த அனுபவமும் இல்லாத டிரம்ப்பிற்கு ஒரு படைத்துறையைச் சேர்ந்தவரின் ஆலோசனை வழங்க படைத்துறை நிபுணத்துவம் மிக்க ஜேம்ஸ் மத்திஸ் அவசியமான ஒருவராகும். நேட்டோ படைத்துறக் கூட்டமைப்பிலும் மத்திஸ் அனுபவம் கொண்டவர். இவரது தலைமையிலேயே அமெரிக்கப் படைகள் அதிரடியாக ஈராகியத் தலைநகர் பாக்தாத்தைக் கைப்பற்றின. பேட்டியொன்றில் எதிரிகளைக் கொல்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் எனத் தெரிவித்தமைக்காக இவரை விசர் நாய் என்கின்ற பட்டப்பெயரால் அழைப்பர். மேற்காசியாவின் அமைதிக்கு ஈரான் மிகவும் ஆபத்தானது என்ற கொள்கையுடையவர் மத்திஸ். எழுத்தாளரும் பேச்சாளரும் கட்டைப் பிரமச்சாரியுமான மத்திஸ் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பிற்கும் ஈரானிற்கும் தொடர்பு உண்டு என உரையாற்றியிருந்தார். மத்திஸ் ஈரானின் கழுகு என விபரிக்கப்படுபவர். ஈரானுடன் பராக் ஒபாமா செய்த யூரேனியம் பதப்படுத்துவது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை டிரம்ப் கடுமையாக எதிர்த்தவர். டிரம்பின் வெளியுறவுக் கொள்கையால் பல சிக்கல்களைச் சந்திக்கவிருக்கும் நாடாக ஈரான் இருக்கப் போகின்றது.  ஈரானைத் தனிமைப்படுத்தி அடக்கி  தண்டிக்க வேண்டும் என்ற கொள்கை எந்த அளவு நிறைவேற்றப்படும்? இரசியாவின் இரசிகர் அல்லர். புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரசியாவின் நண்பராகவும் பாதுகாப்புத் துறைச் செயலர் இரசியாவை விரும்பாதவராகவும் டிரம்ப் நியமித்துள்ளார். ஜேம்ஸ் மத்திஸ் விளடிமீர் புட்டீன் நேட்டோவைச் சிதைக்க முயற்ச்சிக்கின்றார் என தனது நியமனம் தொடர்பாக அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை உறுப்பினருடனான நேர்முக உரையாடலின் போது தெரிவித்திருந்தார். உலகின் பல முனைகளில் இரசியா அமெரிக்காவிற்குப் போட்டியாகவும் எதிரியாகவும் செயற்படுகின்றது எனவும் மத்திஸ் தெரிவித்திருந்தார். லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய போல்ரிக் நாடுகளின் அமெரிக்க படைகள் இருக்க வேண்டும் என்பதில் மத்திஸ் தீவிரமாக இருக்கின்றார்.

வெளியுறவுத் துறைச் செயலர்
டிரம்ப் தனது வெளியுறவுத் துறைச் செயலராக நியமித்திருப்பது எக்ஸன்மொபில் என்னும் பன்னாட்டு எரிபொருள் நிறுவனத்தின் அதிபர் ரெக்ஸ் ரில்லர்சனை. இவருக்கு இரசியாவின் நண்பர் என்ற விருது இரசிய அதிபரால் வழங்கப்பட்டது. இவர் ஓர் எரிபொருள் வியாபாரியாகப் பல உலக நாட்டுத் தலைவர்களுடன் பழகியிருக்கின்றார். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பதை நன்கு அறிந்தவர். விளடிமீர் புட்டீனுக்கு நெருக்கமானவரை நியமித்தமைக்கு பலத்ஹ்ட எதிர்ப்புக் கிளம்பியது. இவரை மூதவை உறுப்பினர்கள் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்க வெளியே பலர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு கட்சியிலும் கணிசமான அளவினர் இவரது நியமனத்தை இட்டு அதிருப்தியடைந்துள்ளனர். விளடிமீர் புட்டீன் சிரியாவில் போர்க்குற்றம் இழைத்தார் என்பதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இரசியாவின் நண்பராகக் கருதப்படும் இவர் சீனாவின் விரோதியாகக் கருதப் படுகின்றார். வியட்னாமின் தென்சீனக் கடல் எல்லையில் சீனாவின் மிரட்டலால் எல்லா நிறுவனங்களும் எரிபொருள் அகழ்வு செய்ய மறுத்தபோது அந்த மிரட்டலைப் பொருட்படுத்தாமல் இவரது நிறுவனமான எக்ஸன்மொபில் துணிந்து செய்தது. சீனா தென் சீனக் கடலில் செய்யும் விரிவாக்கங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக உள்ளார். இரசியா உக்ரேனில் செய்த ஆக்கிரமிப்பைப் போன்றதே சீனா தென்சீனக் கடலில்ச் செய்வது என்பது இவரது கருத்தாகும். சீனா செய்யும் தீவு நிர்மாணங்கள் நிறுத்தப்படவேண்டும் அந்தத் தீவுகளுக்கான சீனாவின் பயன்கள் தடுக்கப் படவேண்டும் என ரில்லர்சன் கருத்து வெளியிட்டது சீன ஊடகங்களின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

சிஐஏயின் அதிபர் மைக் பொம்பியோ
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் முக்கிய உளவுத் துறையான சிஐஏயின் அதிபராக நியமித்த மைக் பொம்பியோ இரசியா தொடர்பாக கடுமையான நிலைப்பாடு கொண்டவர். இரசியா தனது உலக ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாக பொம்பியோ முதவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார். டிரம்ப் அமெரிக்க உளவுத் துறையை கடுமையாக விமர்சித்த போதிலும் மைக் பொம்பியோ தனக்கு உளவுத் துறையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது என்றார்.  இணையவெளி ஊடுருவல் அமெரிக்காவிற்குப் பெரும் பிரச்சனையாக நீண்டகாலமாக இருக்கின்றது. அது இப்போது அமெரிக்காவின் கட்சிப் பிரச்சனையாக மாறிவிட்டது. அமெரிக்கத் தேர்தல் இரசிய ஊடுருவிகளால் திசை திருப்பப்பட்டது என்பது கடும் வாதங்களைக் கிளப்பி விட்ட நிலையில் சிஐஏஇற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட மைக் பொம்பியோ இரசியாவும் சீனாவும் இணையவெளி ஊடுருவலைப் பொறுத்தவரை அமெரிக்காவின் மிக மோசமான எதிரிகள் என்றார். இரசியா ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் உதவவில்லை எனவும் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது எனவும் மூதவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.

நிதித்துறைக்குப் பொறுப்பான திறைசேரிச் செயலர்-Steven Mnuchin
அமெரிக்க டொலர் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும் என்பது டொனால்ட் டிரம்ப்பின் கொள்கை. அமெரிக்கத் திறைசேரிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட செயலர் Steven Mnuchinனும் டொலரின் பெறுமதி வலிமை மிக்கதாக இருப்பதையே விரும்புகின்றார். இதுவரைகாலமும் அமெரிக்கத் திறைசேரியின் கொள்கை டொலரின் பெறுமதி குறைந்திருந்தால்தால் அமெரிக்கப் பொருடக்ள் உலகச் சந்தையில் குறைந்த விலையில் விற்க முடியும் என்பதாக இருந்தது. அதிலும் முக்கியமாக சீனப் பொருட்களுடன் போட்டி போட்டு விற்பனை செய்ய முடியும் என்ற விவாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது.

நேட்டோ
நேட்டோ காலாவதியாகிப் போன ஒன்று என்பது டிரம்பின் கொள்கை. ஆனால் துறை அதிபர் மைக் பென்ஸ் எழுபது ஆண்டு கால வரலாறு கொண்டா நேட்டோ என்பது தொடரும் எனத்தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் கொள்கையால் குழப்பமடைந்த நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் தமது படைவலுவையும் படைத்துறை ஒத்துழைப்பையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். டிரம்ப்பின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்திஸ் ஐக்கிய அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான உறவு அசைக்க முடியாதது என்றார். நேட்டோவில் அதிக ஆர்வமுள்ளவரான மத்திஸ் கனடியப் பாதுகாப்புத் துறையுடன் லத்வியாவில் கனடியப் படைகளை அதிகரிப்பது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். ஜேர்மனியில் உள்ள இடதுசாரிகள் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு இரசியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் எனத்தெரிவிக்கின்றனர். நேட்டோவிற்கு எதிரான டிரம்ப்பின் முக்கிய குற்றச் சாட்டு பல நேட்டோ உறுப்பு நாடுகள் தமது மொத்தத் தேசிய உற்பத்தியின் குறைந்த அளவான இரண்டு விழுக்காட்டைக் கூட பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்குவதில்லை என்பதாகும். மொத்தம் 23 நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த இரண்டு விழுக்காடு நிபந்தனைக்கு ஏற்ப செலவு செய்வதில்லை. டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க முன்வந்துள்ளன.


அயல் நாடுகளும்  குடிவரவும்
டிரம்பின் வெளியுறவுக் கொளையால் பெரிதும் பாதிக்கப் படப் போவது மெக்சிக்கோ நாடாகும். மெக்சிக்கோ தனது தேசிய வருமானத்தின் மூன்றில் இரு பங்கை ஐக்கிய அமெரிக்காவில் இருந்தே பெறுகின்றது. பல இலட்சக் கணக்கான மெக்சிக்கர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டு தமது நாட்டுக்கு பல பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர். கடந்த நூறு ஆண்டுகளாக அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மற்ற நாடுகள் மீது வெளிநாடுகளின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பது அமெரிக்காவின் கொள்கையாகும். மன்றோ கோட்பாடு என இந்தக் கொளைக அழைக்கப் படும். பல தென் அமெரிக்க நாடுகள் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருக்கும் போது சீனா தனது கடனுதவி மூலம் தென் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க முயல்கையில் டொனால்ட் டிரம்ப் அந்த நாடுகளுடன் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு பெரும் சவாலாக அமையும்.

பிரித்தானியா
டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்தவர். பிரித்தானியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகத்தை தான் அதிகரிக்கவிருப்பதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் இரண்டு நாடுகளும் இஸ்ரேல் தொடர்பாக முரண்பட்டுள்ளன. பிரித்தானியா தனது இஸ்ரேல் தொடர்பான கொள்கையில் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புண்டு.

ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியம் பிளவு படுவதை டொனால்ட் டிரம்ப் இரகசியமாக விரும்புகின்றார். அவரது நேட்டோ தொடர்பான கொள்கையும் கடுமையானதே. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் நிர்ப்பந்திப்பார். ஆனால் நேட்டோப் படைகத் துறைக் கூட்டமைப்பை டிரம்ப் சிதைக்க மாட்டார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளை டிரம்ப் விலக்க மாட்டார். இரசியாவுடனான முரண்பாடு மோசமாகுவதை டிரம்ப் தடுப்பார். இரசியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் கைவிட முடியாது. இரசியாவுடன் அமெரிக்கா டிரம்ப் தலைமையில் ஏற்ப்படுத்தவிருக்கும் உறவு போல்ரிக் நாடுகள் தடையாக இருக்கும்.

மேற்காசியா
அமெரிக்கா எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நிலையில் மேற்காசியாவின் எரிபொருள் விநியோகத்தில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா தனது கடப்பாடுகளைக் குறைத்துக் கொள்ளும். ஆனால் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளார். இரசியாவுடன் அமெரிக்கா நல்லுறவை ஏற்படுத்தினால் மட்டுமே ஈரானை அடக்கும் டிரம்ப்பின் கொள்கை வெற்றியளிக்கும்.

உலக வர்த்தகம்
அமெரிக்காவின் உலக வர்த்தகக் கொள்கையில் டிரம்ப் பல மாற்றங்களைச் செய்யவிருக்கின்றார். அது ஏற்கனவே உள்ளகக் கடனால் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் சீனாவை பெரிதும் பாதிக்கும். சீனாவில் இருந்து இறக்குமதிக்கு வரியை அதிகரிப்பேன் என டிரம்ப் சூழுரைத்திருந்தார். இது சீனா செய்து கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் தடையாக அமையும். ஆனால் சீனா டிரம்ப்பின் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தகப் போருக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது.

2008இல் குழம்பிப் போன உலகம் தெளிவு பெற முன்னர் டிரம்ப் மேலும் குழப்பப் போகின்றார்.

Monday, 16 January 2017

கறுப்புப் பணமல்ல சாம்பல் பணமே நாட்டை சாம்பலாக்கும்



சட்ட விரோதப் பண இருப்புக்களில் பல வகைகள் உள்:

ஒருவர் தன் உழைப்பால் பெறும் வருமானத்தை அரசுக்குத் தெரிவித்து அதற்குரிய வரியைக் கட்டாமல் வைத்திருந்தால் அது கறுப்புப் பணமாகும்.

ஒருவர் திருடுவதன் மூலம் பெற்ற வருமானத்தை தன உழைப்பின் மூலம் பெற்ற வருமானமாக அரசுக்கு காட்டி வரி செலுத்தியிருந்தால் அது கறுப்புப் பணம் அல்ல. ஆனால் சட்ட விரோதமான பணமாகும்.

ஓர் அரச ஊழியர் இரண்டு ஒரு கோடிக்குச் செய்ய வேண்டிய பொது வேலையை இரண்டு கோடிக்குச் செய்ததாகக் கணக்குக் காட்டி ஒரு கோடியை தனது பணமாக்கினால் அது ஊழல் பணம். அதற்கு வருமான வரி கட்டாமல் விட்டால் அது கறுப்புப் பணம். அரசை ஏமாற்றி பெற்ற பணம் என்பதால் சட்ட விரோதப் பணமுமாகும்.

நூறு கோடி டொலர்களுக்கு வாங்க வேண்டிய பீராங்கியை நூற்றி ஐம்பது கோடி டொலர்களுக்கு வாங்குவதாகக் கணக்குக் காட்டி பீரங்கி விற்கும் நிறுவனத்திற்கு அரச நிதியில் இருந்து நூற்றி ஐம்பது டொலர்களைச் செலுத்தி மிகையான ஐம்பது மில்லியன் டொலர்களில் முப்பது மில்லியன் தலைமை அமைச்சரின் பெயரிலும் பத்து மில்லியன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெயரிலும் பத்து மில்லியன் நிதி அமைச்சர் பெயரிலும் பீரங்கி விற்கும் நிறுவனம் வைப்பிலிடுவது ஊழலாகும். இந்த ஐம்பது மில்லியன் டொலர்களும் ஊழல், சட்ட விரோத, கறுப்புப் பணமாகும்.

சாம்பல் பணம் உதாரணம் - 1
மாதவன் என்னும் பெயருடைய இந்திய நிறுவனம் ஒன்று உலகச் சந்தையில் நூறு டொலர்கள் பெறுமதியான பொருளை இறக்குமதி செய்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து அதற்கான நூறு டொலர்களை செலுத்துவது வழமையாகச் செய்ய வேண்டியது. மாதவன் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெயரில் சிங்கப்பூரில் ஒரு நிறுவனம் இருக்கும். அந்த நிறுவனத்தின் பெயரில்  பனாமாவில் ஆதவன் என்னும் பெயரில் இன்னொரு நிறுவனம் இருக்கும். பனாமாவில் இருக்கும் ஆதவன் நூறு டொலர்களுக்கு பொருளை வாங்கி அதை இந்தியாவிற்கு நூற்றி ஐம்பது டொலர்களுக்கு விற்பனை செய்யும். அந்த ஐம்பது டொலர் இலாபத்திற்கு ஆதவன் நிறுவனம் பனாமாவில் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. பனாமா ஒரு வருமானவரிப் புகலிட நாடாகும். ஆதவன் நிறுவனம் சிறு கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். நூற்று ஐம்பது டொலர்களுக்கு இறக்குமதி செய்த பொருளை இந்தியாவில் மாதவன் நிறுவனம் நூற்றி அறுபது டொலர்களுக்கு விற்பனை செய்து இலாபம் பத்து டொலர்களுக்கு மட்டுமே வருமான வரி செலுத்தும். ஆனால் மாதவனின் உரிமையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈட்டிய இலாபம் அறுபது டொலர்கள். சில சமயங்களில் இந்தியாவில் நூற்றி இருபத்தைந்து டொலர்களுக்கு அந்தப் பொருளை விற்பனை செய்து முப்பத்தைந்து டொலர்களுக்கு நட்டத்தில் வியாபாரம் நடப்பதாக கணக்குவிடப்படும். இந்த நட்டம் மாதவன் நிறுவனத்தின் வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈட்டிய இலாபத்திற்கு எதிராக கழிக்கப்பட்டு அந்த வருமானத்திற்கு கட்ட வேண்டிய வரி குறைக்கப்படும். மாதவனின் உரிமையாளர்களுக்கு ஆதவனின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் ஐம்பது டொலர்கள் சேரும்.

சாம்பல் பணம் உதாரணம் – 2
பாலன் என்னும் பெயருடைய நிறுவனம் இந்தியாவில் இருந்து நூறு டொலர்களுக்கு உற்பத்தி செய்யும் தனது பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.  நூற்றி ஐம்பது டொலர்களுக்கு உலகச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய அந்தப் பொருளை பனாமாவில் இருக்கும் பாலன் நிறுவனத்தின் உரிமையாளர்களிற்கு சொந்தமான மாலன் நிறுவனத்திற்கு நூற்றி ஐந்து டொலர்களுக்கு ஏற்றுமதி செய்வதாக பத்திரங்கள் தயாரிக்கப்படும். ஏற்றுமதி செய்யும் பொருள் பின்னர் பனாமாவில் இருக்கும் மாலன் நிறுவனத்தில் இருந்து வேறு நாடுகளுக்கு நூற்றி ஐம்பது டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும். இதனால் இந்தியப் பாலனுக்கு ஐந்து டொலர்கள் இலாபமும் பனாமா மாலனுக்கு நாற்பத்தி ஐந்து டொலர்களும் இலாபமாகக் கிடைக்கும். மாலன் தனது இலாபத்திற்கு வரி வரி செலுத்தாது. பாலன் இந்தியாவில் ஐந்து டொலர்களுக்கு மட்டுமே வரி செலுத்தும். ஆனால் பாலன் மற்றும் மாலன் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கிடைந்த மொத்த இலாபம் ஐம்பது டொலர்கள். அதில் ஐந்து டொலர்களுக்கு மட்டுமே அவர்கள் வரி செலுத்துகின்றார்கள். பனாமாவில் அவர்களுக்கு நாற்பத்தைந்து டொலர்கள் வங்கியில் சேரும். பனாமா போன்ற வருமான வரிப் புகலிட நாடுகளினூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதாக பத்திரங்கள் தயார் செய்வதால் பல மில்லியன் டொலர்கள் வருமான வரி ஏமாற்றம் செய்யப் படுகின்றது. இந்த வர்த்தகத்தால் இந்தியாவின் சட்டம் ஏதும் மீறப்படவில்லை. இதனால் அரசுக்கு உரிய வகையில் கணக்குகள் காட்டப்படுகின்றன.
 


இருட்டுப் பணம் (Dark Money)
இருண்ட பணம் என்பது செல்வந்தரகள் இலாபத்தை நோக்கமாகக் கொண்டிராத நிறுவனங்களுக்கு கொடுக்கும் பணமாகும். இந்த "இலாப நோக்கற்ற" நிறுவனங்கள் மூலம் செல்வந்தர்கள் தமது வர்த்தக் நோக்கங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல தேர்தல் முடிவுகளையும் கூட தமக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். அமெரிக்காவில் இந்த இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தமக்கு கிடைக்கும் "நன்கொடைகள்" எங்கிருந்து கிடைத்தன என்பதைப் பகிரங்கப்படுத்த மாட்டார்கள்.

ஆட்சியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்
மேலுள்ள உதாரணங்களில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி மூலமாக பல மில்லியன் இந்தியப் பணங்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் திரள்கின்றன. அவை மூலம் அவர்கள் வேறு நாடுகளில் அந்தப் பணங்களை முதலீடு செய்கின்றனர். அது மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு  முதலீடு தேவை என்னும் செய்தி பரப்பப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிவிலக்கு வழங்கப்படுகின்றது. இதனால் ஆதவன் மற்றும் பாலன் நிறுவனங்களின் உரிமையாளர்களின் பணம் இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு என்னும் பெயரில் வருகின்றது. அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு அவர்கள் வருமான வரி கட்ட மாட்டார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆதவன் பாலன் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்களின் கைப்பாவையாக அவர்கள் மாறிவிடுவார்கள். அவர்களின் நிறுவனங்கள் கொடுத்த நிதியைப் பாவித்தே கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறும். இதனால் வெளிநாட்டு முதலீட்டுக்கு வரிவிலக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வழங்கப்படும்.

நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கல்
இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கல் செய்யப்பட்டது. கறுப்புப் பணத்திற்கு எதிராக மோடி செய்த துல்லியத் தாக்குதல் இது என விபரிக்கப்பட்டது. ஆனால் பெருந்தொகைக் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் அதை நாணயத் தாள்களாக வைக்க மாட்டார்கள். தமது கறுப்புப் பணங்களுக்கு காணிகளும் கட்டிடங்களும் வாங்கிவிட்டனர். பலர் தமது பிள்ளைகளின் பெயரில் உல்லாச விடுதிகளும் கடைத் தொகுதிகளும் வாங்கி விட்டனர். ரியல் எஸ்டேட் எனப்படும் காணி மற்றும் கட்டிடங்கள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களின் சிறந்த புகலிடமாகும். கோடிக் கணக்கான காணி மற்றும் கட்டிடங்களை இலட்சக் கணக்குக்கு வாங்குவதாக கணக்குக் காட்டி விடுவார்கள். இதனால் கறுப்புப் பணம் விற்பனையாளர்களிடம் போய்ச் சேர்ந்துவிடும்.

சாதியின்றி ஏதுமில்லை.
இந்திய அரசியலை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் பற்றி ஆராய்வதானால் அங்குள்ள சாதிப்பிரச்சனையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தில் மிகச்சிறிய வியாபாரிகளான தெருவோர வியாபாரிகளும் வீடுவீடாகச் சென்று விற்பனை செய்வோரும் சிறிய காணிகளில் பயிர் செய்வோரும் கணிசமான பங்கு வகிக்கின்றனர். இவர்கள் சுப்பிரமணியன் சுவாமி போல் பூனூல் தரித்தவர்கள் அல்லர். இவர்களில் நிலை பற்றி சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் கவலைப் பட மாட்டார்கள். நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கியதால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே. காசில்லாத சமுதாயம் என்ற கூக்குரல் மிகச் சிறிய தொழில் புரிவோரை ஒழித்துக் கட்டும் சாதிய வெறியை நோக்கமாகக் கொண்டதா? காசிலாச் சமுதாயம் உருவாக்கப்பட்டால் இவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழப்பர். இவர்களது வியாபாரம் பெரு முதலாளிகளுக்குப் போய்ச் சேரச் செய்வதே சுவாமியில் நோக்கமா?

மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை
நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கியதால் மொத்தக் கறுப்புப் பணத்தில் 12 விழுக்காடு மட்டுமே ஒழிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.  2008-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் உலகில் பல நாடுகளும் மக்கள் கைகளில் பணப்புழக்கத்தை எப்படி அதிகரிப்பதற்கு பல வழிகளில் முயல்கின்றன. Quantitative Easing என்ற அளவு சார் என்ற அளவுசார் தளர்ச்சி மூலம் வங்கிகளுக்கு அதிக நிதியை வழங்கி அதன் மூலம் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை தூண்ட முயன்று கொண்டிருக்கையில் இந்தியா நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தை குறைத்துள்ளது. இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையவிருக்கின்றது. All India Manufacturers’ Organisationஇன் அறிக்கையின் படி 2016 டிசம்பர் மாதம் சிறு சேவை நிறுவனங்கள்  வேலையாட்களை முன்றில் ஒன்றால் குறைத்துள்ளன்ன, அவர்களது வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது.

mall services companies in India cut a third of jobs and saw their revenues cut in half in the mont

உலகெங்கும் இந்தியச் சாம்பல் பணமும் கறுப்புப் பணமும்
உலகெங்கும் உள்ள வருமானவரிப் புகலிட நாடுகளில் அல்லது பிரதேசங்களில் இந்தியாவின் பணம் 151 முதல் 181 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பத்தரை இலட்சம் கோடி இந்திய ரூபாக்கள். சில மதிப்பீடுகள் இது எழுபது இலட்சம் கோடி எனத் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 2016-ம் ஆண்டு 135.7 இலட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் ஏதோ ஒருவகையில் நாணயச் சுழற்ச்சியில் கலந்து பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும். சீதனங்களாக, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் அன்பளிப்புக்களாக அது நாணயச் சுழற்ச்சியில் கலக்கின்றது. இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 23.7 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பங்களிப்பாகும் என 2007-ம் ஆண்டு உலக வங்கி மதிப்பிட்டிருந்தது. தற்போது அது இன்னும் அதிகமாக இருக்கும். நாணயத் தாள்களைச் செல்லுபடியற்றதாக்கியவர்கள் இதை நன்கு அறிவர். அவர்களது முழு நோக்கமும் தாழ்த்தப் பட்ட சமூகத்தினர் செய்யும் சிறு தொழிலகளை ஒழித்துக் கட்டுவதே.

அந்நிய நாடுகளின் கள்ள நணயத்தாள்கள்
இந்தியாவில் அதன் எதிரி நாடுகள் கள்ள நாணயத் தாள்களை புழக்கத்தில் விட்டுள்ளன. அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பாவிக்கப் படுகின்றன என்பது உண்மையே. அதே போன்ற குற்றச் சாட்டை இந்தியாவின் எதிரி நாடுகள் இந்தியா மீது சுமத்துவதையும் மறுக்க முடியாது. நாணயத் தாள் செல்லு படியற்றதாக்கல் இந்த கள்ள நாணய நோட்டுக்களை ஒழித்துக் கட்டியதும் உண்மை. 

வருமான பங்கீட்டில் சமத்துவமின்மை
இந்தியாவின் மொத்தச் செல்வத்தின் அரைவாசியை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் ஒரு விழுக்காட்டினர் தம் வசம் வைத்துள்ளனர். இந்தியாவின் மொத்தச் செல்வத்தின் முக்கால் பங்கை இந்திய மொத்த மக்கள் தொகையின் பத்தில் ஒரு பங்கினர் வைத்துள்ளனர். கறுப்புப் பணத்திலும் பார்க்க பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த வருமானப் பங்கீட்டில் சமத்துவமின்மையே. இது பெரும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனையைக் கொண்டு வரக் கூடியது. ஆனால் இந்த வருமான சமத்துவமின்மையை சாதி வெறியர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள்.

கறுப்பு இந்தியாவில் வேலை செய்யும் சாம்பல் உலகில் வேலை செய்யும்
கறுப்புப் பணம் பல சிறு முதலாளிகளின் பணம். அது பொருளாதாரப் பங்களிப்புச் செய்கின்றது ஆனால் வெளிநாடுகளில் மறைக்கப்பட்டுள்ள சாம்பல் பணம் ஒரு சில பெரு முதலாளிகளுக்குச் சொந்தமானது. அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை. அந்த ஒரு சில முதலாளிகளின் கைகளில்தான் இந்தியாவின் ஆட்சியாளர்கள் தங்கியிருக்கின்றார்கள்.






Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...