Monday, 16 January 2017

கறுப்புப் பணமல்ல சாம்பல் பணமே நாட்டை சாம்பலாக்கும்



சட்ட விரோதப் பண இருப்புக்களில் பல வகைகள் உள்:

ஒருவர் தன் உழைப்பால் பெறும் வருமானத்தை அரசுக்குத் தெரிவித்து அதற்குரிய வரியைக் கட்டாமல் வைத்திருந்தால் அது கறுப்புப் பணமாகும்.

ஒருவர் திருடுவதன் மூலம் பெற்ற வருமானத்தை தன உழைப்பின் மூலம் பெற்ற வருமானமாக அரசுக்கு காட்டி வரி செலுத்தியிருந்தால் அது கறுப்புப் பணம் அல்ல. ஆனால் சட்ட விரோதமான பணமாகும்.

ஓர் அரச ஊழியர் இரண்டு ஒரு கோடிக்குச் செய்ய வேண்டிய பொது வேலையை இரண்டு கோடிக்குச் செய்ததாகக் கணக்குக் காட்டி ஒரு கோடியை தனது பணமாக்கினால் அது ஊழல் பணம். அதற்கு வருமான வரி கட்டாமல் விட்டால் அது கறுப்புப் பணம். அரசை ஏமாற்றி பெற்ற பணம் என்பதால் சட்ட விரோதப் பணமுமாகும்.

நூறு கோடி டொலர்களுக்கு வாங்க வேண்டிய பீராங்கியை நூற்றி ஐம்பது கோடி டொலர்களுக்கு வாங்குவதாகக் கணக்குக் காட்டி பீரங்கி விற்கும் நிறுவனத்திற்கு அரச நிதியில் இருந்து நூற்றி ஐம்பது டொலர்களைச் செலுத்தி மிகையான ஐம்பது மில்லியன் டொலர்களில் முப்பது மில்லியன் தலைமை அமைச்சரின் பெயரிலும் பத்து மில்லியன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெயரிலும் பத்து மில்லியன் நிதி அமைச்சர் பெயரிலும் பீரங்கி விற்கும் நிறுவனம் வைப்பிலிடுவது ஊழலாகும். இந்த ஐம்பது மில்லியன் டொலர்களும் ஊழல், சட்ட விரோத, கறுப்புப் பணமாகும்.

சாம்பல் பணம் உதாரணம் - 1
மாதவன் என்னும் பெயருடைய இந்திய நிறுவனம் ஒன்று உலகச் சந்தையில் நூறு டொலர்கள் பெறுமதியான பொருளை இறக்குமதி செய்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து அதற்கான நூறு டொலர்களை செலுத்துவது வழமையாகச் செய்ய வேண்டியது. மாதவன் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெயரில் சிங்கப்பூரில் ஒரு நிறுவனம் இருக்கும். அந்த நிறுவனத்தின் பெயரில்  பனாமாவில் ஆதவன் என்னும் பெயரில் இன்னொரு நிறுவனம் இருக்கும். பனாமாவில் இருக்கும் ஆதவன் நூறு டொலர்களுக்கு பொருளை வாங்கி அதை இந்தியாவிற்கு நூற்றி ஐம்பது டொலர்களுக்கு விற்பனை செய்யும். அந்த ஐம்பது டொலர் இலாபத்திற்கு ஆதவன் நிறுவனம் பனாமாவில் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. பனாமா ஒரு வருமானவரிப் புகலிட நாடாகும். ஆதவன் நிறுவனம் சிறு கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். நூற்று ஐம்பது டொலர்களுக்கு இறக்குமதி செய்த பொருளை இந்தியாவில் மாதவன் நிறுவனம் நூற்றி அறுபது டொலர்களுக்கு விற்பனை செய்து இலாபம் பத்து டொலர்களுக்கு மட்டுமே வருமான வரி செலுத்தும். ஆனால் மாதவனின் உரிமையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈட்டிய இலாபம் அறுபது டொலர்கள். சில சமயங்களில் இந்தியாவில் நூற்றி இருபத்தைந்து டொலர்களுக்கு அந்தப் பொருளை விற்பனை செய்து முப்பத்தைந்து டொலர்களுக்கு நட்டத்தில் வியாபாரம் நடப்பதாக கணக்குவிடப்படும். இந்த நட்டம் மாதவன் நிறுவனத்தின் வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈட்டிய இலாபத்திற்கு எதிராக கழிக்கப்பட்டு அந்த வருமானத்திற்கு கட்ட வேண்டிய வரி குறைக்கப்படும். மாதவனின் உரிமையாளர்களுக்கு ஆதவனின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் ஐம்பது டொலர்கள் சேரும்.

சாம்பல் பணம் உதாரணம் – 2
பாலன் என்னும் பெயருடைய நிறுவனம் இந்தியாவில் இருந்து நூறு டொலர்களுக்கு உற்பத்தி செய்யும் தனது பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.  நூற்றி ஐம்பது டொலர்களுக்கு உலகச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய அந்தப் பொருளை பனாமாவில் இருக்கும் பாலன் நிறுவனத்தின் உரிமையாளர்களிற்கு சொந்தமான மாலன் நிறுவனத்திற்கு நூற்றி ஐந்து டொலர்களுக்கு ஏற்றுமதி செய்வதாக பத்திரங்கள் தயாரிக்கப்படும். ஏற்றுமதி செய்யும் பொருள் பின்னர் பனாமாவில் இருக்கும் மாலன் நிறுவனத்தில் இருந்து வேறு நாடுகளுக்கு நூற்றி ஐம்பது டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும். இதனால் இந்தியப் பாலனுக்கு ஐந்து டொலர்கள் இலாபமும் பனாமா மாலனுக்கு நாற்பத்தி ஐந்து டொலர்களும் இலாபமாகக் கிடைக்கும். மாலன் தனது இலாபத்திற்கு வரி வரி செலுத்தாது. பாலன் இந்தியாவில் ஐந்து டொலர்களுக்கு மட்டுமே வரி செலுத்தும். ஆனால் பாலன் மற்றும் மாலன் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கிடைந்த மொத்த இலாபம் ஐம்பது டொலர்கள். அதில் ஐந்து டொலர்களுக்கு மட்டுமே அவர்கள் வரி செலுத்துகின்றார்கள். பனாமாவில் அவர்களுக்கு நாற்பத்தைந்து டொலர்கள் வங்கியில் சேரும். பனாமா போன்ற வருமான வரிப் புகலிட நாடுகளினூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதாக பத்திரங்கள் தயார் செய்வதால் பல மில்லியன் டொலர்கள் வருமான வரி ஏமாற்றம் செய்யப் படுகின்றது. இந்த வர்த்தகத்தால் இந்தியாவின் சட்டம் ஏதும் மீறப்படவில்லை. இதனால் அரசுக்கு உரிய வகையில் கணக்குகள் காட்டப்படுகின்றன.
 


இருட்டுப் பணம் (Dark Money)
இருண்ட பணம் என்பது செல்வந்தரகள் இலாபத்தை நோக்கமாகக் கொண்டிராத நிறுவனங்களுக்கு கொடுக்கும் பணமாகும். இந்த "இலாப நோக்கற்ற" நிறுவனங்கள் மூலம் செல்வந்தர்கள் தமது வர்த்தக் நோக்கங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல தேர்தல் முடிவுகளையும் கூட தமக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். அமெரிக்காவில் இந்த இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தமக்கு கிடைக்கும் "நன்கொடைகள்" எங்கிருந்து கிடைத்தன என்பதைப் பகிரங்கப்படுத்த மாட்டார்கள்.

ஆட்சியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்
மேலுள்ள உதாரணங்களில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி மூலமாக பல மில்லியன் இந்தியப் பணங்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் திரள்கின்றன. அவை மூலம் அவர்கள் வேறு நாடுகளில் அந்தப் பணங்களை முதலீடு செய்கின்றனர். அது மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு  முதலீடு தேவை என்னும் செய்தி பரப்பப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிவிலக்கு வழங்கப்படுகின்றது. இதனால் ஆதவன் மற்றும் பாலன் நிறுவனங்களின் உரிமையாளர்களின் பணம் இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு என்னும் பெயரில் வருகின்றது. அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு அவர்கள் வருமான வரி கட்ட மாட்டார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆதவன் பாலன் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்களின் கைப்பாவையாக அவர்கள் மாறிவிடுவார்கள். அவர்களின் நிறுவனங்கள் கொடுத்த நிதியைப் பாவித்தே கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறும். இதனால் வெளிநாட்டு முதலீட்டுக்கு வரிவிலக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வழங்கப்படும்.

நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கல்
இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கல் செய்யப்பட்டது. கறுப்புப் பணத்திற்கு எதிராக மோடி செய்த துல்லியத் தாக்குதல் இது என விபரிக்கப்பட்டது. ஆனால் பெருந்தொகைக் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் அதை நாணயத் தாள்களாக வைக்க மாட்டார்கள். தமது கறுப்புப் பணங்களுக்கு காணிகளும் கட்டிடங்களும் வாங்கிவிட்டனர். பலர் தமது பிள்ளைகளின் பெயரில் உல்லாச விடுதிகளும் கடைத் தொகுதிகளும் வாங்கி விட்டனர். ரியல் எஸ்டேட் எனப்படும் காணி மற்றும் கட்டிடங்கள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களின் சிறந்த புகலிடமாகும். கோடிக் கணக்கான காணி மற்றும் கட்டிடங்களை இலட்சக் கணக்குக்கு வாங்குவதாக கணக்குக் காட்டி விடுவார்கள். இதனால் கறுப்புப் பணம் விற்பனையாளர்களிடம் போய்ச் சேர்ந்துவிடும்.

சாதியின்றி ஏதுமில்லை.
இந்திய அரசியலை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் பற்றி ஆராய்வதானால் அங்குள்ள சாதிப்பிரச்சனையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தில் மிகச்சிறிய வியாபாரிகளான தெருவோர வியாபாரிகளும் வீடுவீடாகச் சென்று விற்பனை செய்வோரும் சிறிய காணிகளில் பயிர் செய்வோரும் கணிசமான பங்கு வகிக்கின்றனர். இவர்கள் சுப்பிரமணியன் சுவாமி போல் பூனூல் தரித்தவர்கள் அல்லர். இவர்களில் நிலை பற்றி சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் கவலைப் பட மாட்டார்கள். நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கியதால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே. காசில்லாத சமுதாயம் என்ற கூக்குரல் மிகச் சிறிய தொழில் புரிவோரை ஒழித்துக் கட்டும் சாதிய வெறியை நோக்கமாகக் கொண்டதா? காசிலாச் சமுதாயம் உருவாக்கப்பட்டால் இவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழப்பர். இவர்களது வியாபாரம் பெரு முதலாளிகளுக்குப் போய்ச் சேரச் செய்வதே சுவாமியில் நோக்கமா?

மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை
நாணயத் தாள் செல்லுபடியற்றதாக்கியதால் மொத்தக் கறுப்புப் பணத்தில் 12 விழுக்காடு மட்டுமே ஒழிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.  2008-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் உலகில் பல நாடுகளும் மக்கள் கைகளில் பணப்புழக்கத்தை எப்படி அதிகரிப்பதற்கு பல வழிகளில் முயல்கின்றன. Quantitative Easing என்ற அளவு சார் என்ற அளவுசார் தளர்ச்சி மூலம் வங்கிகளுக்கு அதிக நிதியை வழங்கி அதன் மூலம் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை தூண்ட முயன்று கொண்டிருக்கையில் இந்தியா நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தை குறைத்துள்ளது. இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையவிருக்கின்றது. All India Manufacturers’ Organisationஇன் அறிக்கையின் படி 2016 டிசம்பர் மாதம் சிறு சேவை நிறுவனங்கள்  வேலையாட்களை முன்றில் ஒன்றால் குறைத்துள்ளன்ன, அவர்களது வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது.

mall services companies in India cut a third of jobs and saw their revenues cut in half in the mont

உலகெங்கும் இந்தியச் சாம்பல் பணமும் கறுப்புப் பணமும்
உலகெங்கும் உள்ள வருமானவரிப் புகலிட நாடுகளில் அல்லது பிரதேசங்களில் இந்தியாவின் பணம் 151 முதல் 181 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பத்தரை இலட்சம் கோடி இந்திய ரூபாக்கள். சில மதிப்பீடுகள் இது எழுபது இலட்சம் கோடி எனத் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 2016-ம் ஆண்டு 135.7 இலட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் ஏதோ ஒருவகையில் நாணயச் சுழற்ச்சியில் கலந்து பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும். சீதனங்களாக, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் அன்பளிப்புக்களாக அது நாணயச் சுழற்ச்சியில் கலக்கின்றது. இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 23.7 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பங்களிப்பாகும் என 2007-ம் ஆண்டு உலக வங்கி மதிப்பிட்டிருந்தது. தற்போது அது இன்னும் அதிகமாக இருக்கும். நாணயத் தாள்களைச் செல்லுபடியற்றதாக்கியவர்கள் இதை நன்கு அறிவர். அவர்களது முழு நோக்கமும் தாழ்த்தப் பட்ட சமூகத்தினர் செய்யும் சிறு தொழிலகளை ஒழித்துக் கட்டுவதே.

அந்நிய நாடுகளின் கள்ள நணயத்தாள்கள்
இந்தியாவில் அதன் எதிரி நாடுகள் கள்ள நாணயத் தாள்களை புழக்கத்தில் விட்டுள்ளன. அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பாவிக்கப் படுகின்றன என்பது உண்மையே. அதே போன்ற குற்றச் சாட்டை இந்தியாவின் எதிரி நாடுகள் இந்தியா மீது சுமத்துவதையும் மறுக்க முடியாது. நாணயத் தாள் செல்லு படியற்றதாக்கல் இந்த கள்ள நாணய நோட்டுக்களை ஒழித்துக் கட்டியதும் உண்மை. 

வருமான பங்கீட்டில் சமத்துவமின்மை
இந்தியாவின் மொத்தச் செல்வத்தின் அரைவாசியை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் ஒரு விழுக்காட்டினர் தம் வசம் வைத்துள்ளனர். இந்தியாவின் மொத்தச் செல்வத்தின் முக்கால் பங்கை இந்திய மொத்த மக்கள் தொகையின் பத்தில் ஒரு பங்கினர் வைத்துள்ளனர். கறுப்புப் பணத்திலும் பார்க்க பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த வருமானப் பங்கீட்டில் சமத்துவமின்மையே. இது பெரும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனையைக் கொண்டு வரக் கூடியது. ஆனால் இந்த வருமான சமத்துவமின்மையை சாதி வெறியர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள்.

கறுப்பு இந்தியாவில் வேலை செய்யும் சாம்பல் உலகில் வேலை செய்யும்
கறுப்புப் பணம் பல சிறு முதலாளிகளின் பணம். அது பொருளாதாரப் பங்களிப்புச் செய்கின்றது ஆனால் வெளிநாடுகளில் மறைக்கப்பட்டுள்ள சாம்பல் பணம் ஒரு சில பெரு முதலாளிகளுக்குச் சொந்தமானது. அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை. அந்த ஒரு சில முதலாளிகளின் கைகளில்தான் இந்தியாவின் ஆட்சியாளர்கள் தங்கியிருக்கின்றார்கள்.






Monday, 9 January 2017

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா?


அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பேன் எனக் கருத்து வெளியிட்டது பலஸ்த்தீனியப் பிரச்சனைக்கு ஈர் அரசுத் தீர்வு என்ற அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றுவேன் எனத் தன்னைச் சந்தித்த இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவிடம் தெரிவித்திருந்தார்.

மருமகன் Jared Kushner
டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஒரு யூதராவார். யூத மதத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்கும் Jared Kushnerஐக் கைப்பிடிப்பதற்காக மகள் இவங்கா யூத மதத்திற்கு மாறினார். மருமகன் Jared Kushner டிரம்பிற்கு தேர்தல் பரப்புரையின் போது பேருதவியாக இருந்து ஆலோசனைகள் வழங்கியவர். அவர் டிரம்ப்பின் ஆட்சியிலும் முக்கிய பங்கு வகிப்பார். அவர் வெள்ளை மாளிகையில் பணி புரிவதை பெரிதும் விரும்புகின்றார்.

அன்று நடக்காதது இன்று நடக்குமா?
ஜோர்ஜ் புஷ்பில் கிளிண்டன் ஆகிய முன்னை அமெரிக்க அதிபர்களும் தமது தேர்தல் பரப்புரையின் போது ஜெருசலேத்திற்கு அமெரிக்க தூதுவரகத்தை மாற்றப் போவதாகச் சொல்லியிருந்தனர். ஆனால் தேர்தலில் வென்ற பின்னர் அப்படிச் செய்யவில்லை. ஆனால் டிரம்ப் வித்தியாசமானவர். அத்துடன் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில மூதவை உறுப்பினர்கள் ஜெருசலேத்தை இஸ்ரேலியத் தலைநகராக ஏற்றுக் கொள்ளும் சட்ட மூலத்தை அமெரிக்கப் பாராளமன்றதின் மூதவையில் 2017-01-03-ம் திகதி சமர்ப்பித்துள்ளனர்.  பலஸ்த்தீனியர்கள் தமது அரசின் தலைநகர் கிழக்கு ஜெருசலேம் என நம்புகின்றனர். ஜெருசலேத்தின் கிழக்கையும் மேற்கையும் இணைத்து அதை இஸ்ரேலின் தலைநகராக்கினால் மேற்குக் கரையில் அமைதி குலையும் என பலஸ்த்தீனியர்கள் எச்சரிக்கின்றனர்.

அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகத்திரும்புமா?
புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஜெருசலேத்திற்கு அமெரிக்கத் தூதுவரகத்தை நகர்த்தும் எண்ணம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஜோர்தானியத் தகவற்துறை அமைச்சர் அதனால் அமெரிக்காவுடன் நட்பைப் பேணும் அரபு நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும் என்றார். ஜோர்தானைப் பொறுத்தவரை தூதுவரகத்தை நகர்த்துவது செங்கோட்டைத் தாண்டியது போலாகும் என்றார் மேலும் அவர். மேலும் இந்த நகர்வு அரபுத் தீவிரவாதிகளுக்கு ஒரு கொடையாக அமைந்து அரபு நாட்டு வீதிகளெங்கும் கலவரம் உண்டாகும் என்றார். அரபு நாடுகளிலேயே அமெரிக்காவுடன் அதிக நெருக்கமான உறவைப் பேணும் நாடு ஜோர்தான் ஆகும். ஜோர்தான் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து மற்ற அரபுநாடுகளும் இதே போன்ற ஆட்சேபனையைத் தெரிவிக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. 1967-ம் ஆண்டுப் போரின் போது ஜோர்தானிடமிருந்தே இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேத்தைக் கைப்பற்றியது.

ஐநா தீர்மானம் – 181
ஐக்கிய நாடுகள் சபை ஜெருசலம் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லை அது ஒரு பன்னாட்டு நகரம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. 1947-ம் ஆண்டு ஜெருசலேம் நகர் தொடர்பாக ஐநா சபையில் தீர்மானம் -181 நிறைவேற்றப்பட்டது. அதன்படி அது ஐநாவால் நிர்வகிக்கப்படும் தனி நிலப்பரப்பாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. அதை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரபுக்கள் எதிர்த்தனர். பல பன்னாட்டு அமைப்புக்கள் ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கவிருக்கும் டேவிட் ஃபிரீட்மன் தான் ஜெருசலேத்தில் கடமையாற்றக் காத்திருப்பதாகச் சொல்லியுள்ளார். 

அவலத்தில் புனித நகரம்
1089-ம் ஆண்டு ஜெருசலேம் நகரை சிலுவைப் போரில் கைப்பற்றிய மேற்கு நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களை விரட்டினர். 1187இல் ஜெருசலேமை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர்கள் யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர். ஜெருசலேமின் பழைய நகரத்தின் வட கிழக்குப் பகுதி முஸ்லிம் பகுதி எனவும் அதற்கு வட மேற்குப் பகுதி கிறிஸ்த்தவப் பகுதி என்றும், ஆர்மீனியன் பகுதி என்றும் யூதப் பகுதி எனவும் வகுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்க் இடையிலான மோதல்களைத் தவிர்க்க உதுமானியப் பேரரசின் ஆட்சியின் போது அங்கு பல சுவர்களும் கதவுகளும் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் 1967-ம் ஆண்டு பழைய நகரத்தில் யூதர்கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டிருக்கலாம். 1967-ம் ஆண்டின் பின்னர் பல யூதர்கள் அங்கு குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். 1517-ம் ஆண்டில் இருந்து உதுமானியப் பேரரசின் பிடியில் இருந்த ஜெருசலேம் நகரை 1917-ம்  ஆண்டு பிரித்தானியத் தளபதி general Edmund Allenby  கைப்பற்றிய பின்னர் அதன் புனித தன்மையை மதிப்பதற்காக தனது குதிரையில் இருந்து இறங்கி நடந்து சென்றார். ஆனால் குடியேற்றவாதம், சியோனிசம், அரபுத் தேசியவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், யூத எதிர்ப்புவாதம் (anti-Semitism) ஆகியவற்றின் நடுவில் அந்த புனித நகரம் அல்லல் படுகின்றது. கடவுள் உலகைப் படைக்கும் போது ஒன்பது பங்கு அழகை ஜெருசலேம் நகருக்கும் ஒரு பங்கு அழகை எனைய உலகிற்கும் கொடுத்தாராம். ஆனால் இன்று உலக அவலக்களின் பத்தில் ஒன்பது பங்கு ஜெருசலேமில் இருக்கின்றது. 

இரு போர்கள்
1948இல் நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு செய்யப்பட்ட ஆர்மிஸ்றிஸ் உடன்படிக்கைகளின் படி வரையபட்ட ஆர்மிஸ்றிஸ் கோடுகளின்படி மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலினுடைய பகுதியாக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் போது கிழக்கு ஜெருசலேம்ம்மேற்குக் கரைகாசா நிலப்பரப்புசினாய் பாலைவனக் கோலான் குன்றுகள் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.

கிழக்கும் மேற்கும் வேறா ஒன்றா?
பலஸ்த்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் பெரும் முள்ளாக இருப்பது ஜெருசலம் நகர். இரு தரப்பினரும் அது தமக்குச் சொந்தம் என அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மேற்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலின் இருப்பை பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் கிழக்கு ஜெருசலேத்தை ஒட்டியே பெரும் முரண்பாடு நிலவுகின்றது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறுநாட் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம்த்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அதன் பின்னர் 1980-ம் ஆண்டு இஸ்ரேல் ஜெருசலேம் சட்டம் 1980ஐ தனது பராளமன்றத்தில் நிறைவேற்றி முழு ஜெருசலேமும் தனது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம்-478 நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட சட்டம் பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது எனத் தெரிவித்தது தீர்மானம்-478. அத்துடன் ஐநா உறுப்பு நாடுகள் இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்தில் அமைக்கக் கூடாது எனவும் அந்தத் தீர்மானம்-478 சொல்கின்றது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா வாழ் யூதர்களின் முயற்ச்சியால் அமெரிக்கப் பாராளமன்றம் 1996-ம் ஆண்டு ஜெருசலேம் தூதுவரகம் சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டத்தில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என்பதுடன் அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதுவரகம் டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேம்த்திற்கு மாற்றப்பட வேண்டும் எனச் சொல்லியது. அந்தச் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டது. அதை 2016-ம் ஆண்டு வரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் செயற்படுத்தவில்லை. தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அதனை நிறைவேற்றுவேன் என்கின்றார். அதற்கு ஏற்ற வகையில் இஸ்ரேல் ஜெருசலேம் நகரில் யூதர்களைக் குடியேற்றுவதை அதிகரித்துள்ளது. 1967-ம் ஆண்டு கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதால் அங்கிருந்து வெளியேறிய இஸ்லாமியர்களை மீண்டும் அங்கு வந்து குடியேறும் படி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மேஸே தயான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பல இஸ்லாமியர்கள் மீண்டும் சென்று குடியேறினார்கள். 

அன்று கதை வேறு
இஸ்ரேல் என்ற நாடு உருவாகிய முதல் மூன்று ஆண்டுகளில் அது பல தத்துக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. சுற்றிவர எதிர்ப்புணர்வு மிக்க அரபு நாடுகளின் மத்தியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இருப்புப் பற்றி பல ஐயங்கள் நிலவின. அரபுக்களின் ஆக்கிரமிப்பு ஆபத்தின் மத்தியில் பல முயற்ச்சிக்கு மத்தியில் இஸ்ரேலை பல நாடுகள் அங்கிகரித்தன. முதலில் அமெரிக்க ஒரு சட்டபூர்வ நாடாக அங்கீகரிக்கவில்லை. ஒரு உண்மை சார் நாடாகவே அங்கீகரித்தது. இஸ்ரேலை முதலில் அங்கீகரித்த நாடுகளில் சோவியத் ஒன்றியமும் ஒன்று.

அமெரிக்க கடவுட்சீட்டுச் சட்டம்
2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம் எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது. ஆனால் இது ஐநாவின் நிலைப்பாடான ஜெருசலேம் ஒரு தனிப் பிராந்தியம் என்ற நிலைப்பாட்டிறு முரணாக இருந்தது. அத்துடன் பல அரபு நாடுகளின் ஆத்திரத்தையும் கிளறியிருந்தது. இதனால் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதில்லை என அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த எல்லா அதிபர்களும் அதையே கடைப்பிடித்தார்கள்.  அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்தது.

இன்னும் ஒரு தீர்மானம்
2016 டிசம்பர் 23-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபையில் மேலும் ஒரு தீர்மானம் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. கிழக்கு ஜெருசலேத்தில் செய்யப்படும் யூதக் குடியேற்றங்களைக் கண்டித்ததுடன் அவை சட்டபூர்வமானதல்ல என்கின்றது அந்தத் தீர்மானம்-2334இந்தத் தீர்மானம் பலஸ்த்தீனியர்களாலோ அல்லது அதை முன் மொழிந்த எகிப்தியராலோ வரையப்பட்டது அல்ல ஒரு மேற்கு நாட்டு வல்லரசுதான் அதை வரைந்தது என அதன் வாசகங்களை வாசிக்கும் போது தெரிகின்றது என்றார் ஐநாவிற்கான இஸ்ரேலியப் பிரதிநிதி. அதை வரைவதில் மட்டுமல்ல அதை நிறைவேற்றுவதற்கான ஆதரவு தேடுதலிலும் பிரித்தானியா பெரும் பங்கு வகித்தது. இது இஸ்ரேல் தொடர்பாக டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் தோன்றப் போகும் முரண்பாட்டிற்கு கட்டியம் கூறுகின்றது. தீர்மானம்-2334ஐ அமெரிக்கா தனது இரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்ய வேண்டும் என புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பராக் ஒபாமாவிடம் விடுத்த வேண்டு கோளையும் புறக்கணித்து ஐநா பொதுச்சபையில் அமெரிக்க தீர்மானம்-2334 தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பல இஸ்ரேலியர்கள் ஐநா தீர்மானங்கள் தம்மை ஏதும் செய்யாது என மார் தட்டிக் கொண்டிருக்கையில் இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் இட்டு அவற்றுக்கு எதிரான தடைகளை விதிப்பதை இட்டு ஐநாவில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கிறிஸ்த்தவர்களின் வாதம்
1944-ம் ஆண்டு லெபனானில் பிறந்த மரோனைற் கிறிஸ்த்தவரான சரித்திரவியலாளர் பிலிப் ஹிற்றி என்பவர் அமெரிக்க அரசுக்குச் சாட்சியமளிக்கையில் பலஸ்த்தீனத்தில் யூதர்களுக்கு என்று ஒரு அரசு இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அவரது கருத்து ஊடகங்களில் வெளிவந்த போது விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் உட்படப் பல யூதர்கள் ஆட்சேபனை தெரிவித்து தமது தரப்பு விவாதங்களை முன்வைத்தனர்.

வரலாறு எங்கு ஆரம்பமானது – அரபு வாதம்
அரபுக்கள் பலஸ்த்தீனியத்தின் வரலாறு 1948இல் இருந்து பார்க்க விரும்புகின்றார்கள் 1948இல் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றபட்ட யூதர்களால் இஸ்ரேல் உருவானது என்கின்றார்கள் அவர்கள். இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் பல அரபு நாடுகள் இருந்தன. இன்றும் சில நாடுகள் வாயளவில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஈரான் மட்டுமே அதை ஓரளவிற்கு செயலிலும் காட்டுகின்றது. சவுதி அரேபியா உட்படப் பல நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக உறவுகளை வைத்திருக்கின்றன. மக்கா,  மதீனா ஆகிய இரு பெரும் புனித நகர்களைப் போலவே ஜெருசலேமும் இஸ்லாமியர்களின் புனித நகராகும். அங்குள்ள மலைக் கோவிலில் இருந்தே இறை தூதுவரான அல்லா சொர்க்கத்திற்கு பறந்து சென்றார் என்கின்றனர் அரபுக்கள்.

வரலாறு எப்போது ஆரம்பித்தது – யூதர்களின் வாதம்
இஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது. மற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின்வாதம்.  இற்றைக்கு 3286 ஆண்டுகளுக்கு முன்னர். மோசஸ் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை மீட்டுக் கொண்டு ஜோர்தானிய நதியைக் கடந்து அதன் மேற்குப் புறமாக ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பை இஸ்ரேலியர்களின் நாடாக்கினார். இப் பிரதேசம் இப்போது இஸ்ரேல் என்றும் மேற்குக் கரை என்றும் காஸா நிலப்பரப்பு என்றும் ஜோர்தான் நாடு என்றும் நான்கு பகுதிகளாக இருப்பதே தமது தாயகம் என்கின்றனர் யூதர்கள். அங்கிருந்து பல படையெடுப்புக்களால் தாம் விரட்டப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறினோம் என்பது யூதர்களின் கருத்து. இஸ்ரேலியர்களின் அரசு கிறிஸ்த்துவிற்கு முன்னர் 796ம் ஆண்டில் இரண்டாகப் பிளவு பட்டது. அதன் வடபகுதியை கி.மு 55-ம் ஆண்டு அசிரியப் பேரரசு கைப்பற்றியது. கி மு 422-ம் ஆண்டு பபிலோனியர்கள் இஸ்ரேலைக் கைப்பற்றி அவர்களின் புனித ஆலயத்தை அழித்தனர். இஸ்ரேலியர்கள் பலர் அவர்களது மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர். கி மூ 352-ல் மீண்டும் இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்கு வந்து மீண்டும் தமது ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். ஆனால் நாற்பது ஆண்டுகளின் பின்னர் கிரேக்கர் இஸ்ரேலைக் கைப்பற்றினர். பின்னர் கி. மு 63-ம் ஆண்டு ரோமப் பேரரசு இஸ்ரேலை ஆக்கிரமித்தது. மீண்டும் இஸ்ரேலியர்களின் புனித ஆலயம் இடிக்கப்பட்டது. கி. பி 638-ம் ஆண்டு இஸ்லாமியர்கள் கலிஃபா ஒமரின் தலைமையில் இஸ்ரேலைக் கைப்பற்றினர். 1299-ம் ஆண்டு உதுமானியப் பேரரசு இஸ்ரேலைக் கைப்பற்றியது. பலஸ்த்தீனம் என்பது ஒரு நாடல்ல அது ஒரு பிரதேசத்தின் பெயர் என்கின்றனர் யூதர்கள். பைபிளில் பல இடங்களில் Peleshet எனச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் Philistine எனத் திரிபுபட்டு பலஸ்த்தீனம் ஆனது என்கின்றனர் எனத் கிறிஸ்த்தவர்கள். 1920-ம் ஆண்டு உதுமானியப் பேரரசிடமிருந்து கைப்பற்றப் பட்ட மத்திய தரைக்கடலை ஒட்டிய ஒரு பிரதேசத்திற்கு பிரித்தானியப் பேரரசு பலஸ்த்தீன ஆணையகம் எனப் பெயரிட்டத்தில் இருந்தே பலஸ்த்தீனம் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது

மலைக்கோவில் வாசலில்
ஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது. மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம். . அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது.  புனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள் Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது.  பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர்  பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது.  சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர்.

மானிடப் பேரிடர்  
மேற்குக் கரைகிழக்கு ஜெருசலேம்காசா ஆகியவை தமது பிரதேசம் அங்கு தங்களுக்கு ஒரு சுதந்திரமான நாடு வேண்டும் என்பதே பலஸ்த்தீனியர்களின் தற்போதைய நிலைப்பாடு.  மானிடப் பேரிடர் தெடந்து நடக்கும் இடமாக பலஸ்த்தீனத்தின் மேற்குக் கரை தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக்கின்றது. இஸ்ரேலின் தொடர் நில அபகரிப்பினாலும் யூதக் குடியேற்றங்களாலும் மேற்கு கரையின் வரைபடத்தில் பலஸ்த்தீனியர்களின் பிரதேசத்தையும் யூதக் குடியேற்ற நிலப்பரப்பையும் வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கறையான் அரித்த துணி போலத் தோற்றமளிக்கின்றது. இஸ்ரேல் 1967-ம் ஆண்டு போரில் ஜோர்டானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசலம் தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்லும் இஸ்ரேல் அங்கு வாழும் பலஸ்த்தீனியர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை. அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை ஜோர்தானும் தன்னுடைய நாட்டுக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் 420,000 பலஸ்த்தீனியர்கள் நாட்டற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் ஜோர்டான் கடவுச் சீட்டு வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் ஜோர்டானில் வேலை பார்ப்பதாயின் அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும். உலகத்தின் எந்த மூலையில் பிறந்தாலும் ஒரு யூதருக்கு இஸ்ரேலில் குடியுரிமை வழங்கப்படுகின்றது. கிழக்கு ஜெருசேலத்தில் இரண்டு இலட்சம் யூதர்கள் படைத்துறையின் பாதுகாப்புடன் குடியேற்றப் பட்டுள்ளார்கள். 2011 ஒக்டோபர் யுனெஸ்க்கோவில் பலஸ்த்தீனம் உறுப்புரிமை பெற்றது அமெரிக்காவைச் சினமூட்டி அதை அந்த அமைப்பில் இருந்து வெளியேற வைத்தது. 

1993-ம் ஆண்டு பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலும் செய்த ஒஸ்லோ உடன்படிக்கையில் மேற்குக் கரையையும் காசா நிலப்பரப்பையும் பலஸ்த்தீனியர்கள் நிர்வகிக்க ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பலஸ்த்தீனியர்கள் தங்களது பிரதேசம் என உரிமை கோரும் கிழக்கு ஜெருசலேம் பற்றி முடிவு எடுப்பது பின் போடப்பட்டது. 

படைத்துறைதொழில்நுட்பம்பொருளாதாரம் ஆகியவற்றில் இஸ்ரேல் அடைந்து வரும் வளர்ச்சி அபரிமிதமானது. அதேவேளை அரபு நாடுகளிடையேயான ஒற்றுமையின்மையும் உள்நாட்டுக் குழப்பங்களும் பலஸ்த்தீனியர்களுக்கு சாதகமாக இல்லை. ஐ எஸ் அமைப்பு பலஸ்த்தீனியர்களுக்கு ஆதரவாகவோ இஸ்ரேலுக்கு எதிராகவோ செயற்பட்டதில்லை. இஸ்ரேலால் தான் நினைத்ததை நடத்தி முடிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...