Tuesday, 25 July 2017

தனியர் படை நிறுவனங்கள் எனும் முகமூடியுடன் கூலிப்படைகள்

அமெரிக்கா பல நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்கா பெருமளவில் தனியார் படைகளைகளைப் பாவிப்பது பலருக்கும் தெரியாது. தனியார் படையினரின் துணை இன்றி அமெரிக்கா எந்த நாட்டுக்கும் தனது படைகளை அனுப்ப முடியாது என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவின் படை மற்றும் சிறப்புப் படையணிகளில் பணிபுரிந்தவர்கள் இந்தத் தனியார் படையில் செயற்படுகின்றனர். இவர்கள் அதிகாரிகள் மட்டத்தில் செயற்பட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் இந்த தனியார் படையில் இணைந்துள்ளனர். தீவிரவாத இயக்கக்ங்களில் முன்பு பணிபுரிந்தவர்கள் முன்னாள் போர்ப்பிரபுக்களும் அவர்களின் படையினரும் கூட அமெரிக்காவின் தனியார் படையில் இணைக்கப்படுகின்றனர். இந்த தனியார் படையின் சொந்தக்காரர்கள் பெருமளவு பணத்தை இலாபமாகப் பெறுகின்றனர்.

கூலிப்படையினரின் செயற்பாடுகள்
படையினருக்கான பின்புல வழங்கல் ஆதரவு, படையினருக்கன ஆபத்துப் பகுப்பாய்வு செய்தல், உளவுபார்த்தல் போன்றவற்றில் தனியார் துறையினரி ஈடுபடுத்தல் ஆட்சேபனைக்கு உரியதல்ல. இரண்டாம் ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போதே அமெரிக்கா படைத்துறையில் தனியார் துறையினரைப் பெருமளவில் அனுமதித்தது. ஆனால் 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்கா தனது படைத்துறைச் செலவைக் குறைப்பதற்காக படைத்துறையில் தனியாரையும் அதிக அளவில் ஈடுபடுத்தத் தொடங்கியது. தனியார் படைத்துறையை ஆரம்பித்து வைத்தவர் ஜெரால்ட் போர்ட்டின் பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்த டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகும். மனித உரிமைகளை மீறும் அமெரிக்காவின் நட்பு நாடுகளிற்கு அமெரிக்கா தனது படைகளைப் பகிரங்கமாக அனுப்பி அந்த ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதில்லை. அந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் படை நிறுவனங்கள் “சேவை” செய்ய இரகசியமாக அனுமதியும் உதவியும் செய்கின்றது. பனிபோரின் பின்னர் இது பெருமளவில் அதிகரித்தது. உலகெங்கும் உள்ள தனியார் படை நிறுவனங்களில் 70 விழுக்காடு அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள்ன.

பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள்
ஒஸ்ரேலியாவில் இரண்டு தனியார் படை நிறுவனங்களும், கிப்ரால்டரில் ஒன்றும், பெருவில் ஒன்றும், தென் ஆபிரிக்காவில் ஒன்றும், பிரித்தானியாவில் ஆறும், ஐக்கிய அமெரிக்காவில் பதின்நான்கும் இருக்கின்றன. இவை மட்டுமல்ல சீனா உட்படப் பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள் உண்டு. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியப் பத்திரிகையான கார்டியன் உலக கூலிப்படைத் தொழிலில் பிரித்தானியா நடுநாயகமாக இருக்கின்றது என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையையும் வெளிவிட்டது. G4S என்பது உலகிலேயே மிகப்பெரிய தனியார் படை நிறுவனமாகும். பிரித்தானியாவில் பல தனியார் படை நிறுவங்னகளும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இயங்குகின்றன. கடாபி லிபியாவில் கொல்லப்பட்ட பின்னர் அங்கு உள்ள எரிபொருள் நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் G4S இன் பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்
தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தனியார் படை நிறுவனங்களில் இருந்து சற்று வேறுபட்டவையாகும். பாதுகாப்பு நிறுவனங்கள் வலிந்த தாக்குதலில் ஈடுபடுவதில்லை. அவை தமது ஒப்பந்தக்காரர்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக செயற்படும் ஒரு தேர்ச்சி பெற்ற படையணியாகும். பிரித்தானியாவில் இரு வகை நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 46 என்கின்றது கார்டியன். ஈராக்கில் சதாமிற்கு எதிரான போரின் போது பிரித்தானியாவின் 80 தனியார் படைக் கம்பனிகள் இயங்கியதாகவும் கார்டியன்  அம்பலப்படுத்தியது. இதுபோல உலங்கெங்கும் பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தனியார் படை நிறுவனங்களும் பாதுகாப்பு நிறுவனங்களும் செயற்படுகின்றன.

ஆப்கானிஸ்த்தானுக்கு அனுப்ப யோசனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வர முன்னரே ஆப்கானிஸ்த்தானுக்கு அதிக படையினரை அனுப்பப்போவதாக முழங்கியிருந்தார். எல்லாவற்றையும் மாற்றி யோசிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதினாறு ஆண்டு காலமாக நடக்கும் ஆப்கானிஸ்த்தான் போரையும் வித்தியாசமாக அணுகவிருக்கின்றார்.  ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் இரு பெரும் தனியார் படைகளைக் கொண்ட நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதே அதிபர் டிரம்பின் புதிய அணுகு முறையாகும். எரிக் டி பிரின்ஸ் என்னும் பெரும் செல்வந்தரின் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட்(Blackwater Worldwide) என்னும் படைகளையும் ஸ்றீவன் ஃபெயின்பேர்க் என்னும் செல்வந்தரின் டைய்ன் கோர்ப் இண்டர்நசனல்(DynCorp International) என்னும் படைகளையும் பாவிக்கும் திட்டத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையின் கேந்திரோபாய வகுப்பாளர் எஸ் கே பனன் முன்வைத்துள்ளார். தனியார் துறைப் படை என்பது கூலிப் படையினருக்கு வைத்த கௌரவப் பெயராகும்.

அமெரிக்காவின் இரு பெரும் கூலிப்படை நிறுவனங்கள்
வெள்ளை மாளிகையின் 2017 ஜூலை ஆரம்பத்தில் நடந்த ஆப்கானிஸ்த்தான் தொடர்பான கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் மற்றும் டைய்ன் கோர்ப் ஆகிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள டிரம்ப்பின் தலைமைக் கேந்திரோபாய வகுப்பாளரான எஸ் கே பனன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் டிரம்பின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் ஆப்கான் தொடர்பான கொள்கை மீளாய்வில் வெளியார் கலந்து கொள்வதைத் தான் விரும்பவில்லை எனச் சொல்லி வெளியேறிவிட்டார். டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் ஜெனரல் எச் ஆர் மக்மஸ்டரும் அதே கருத்தைக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வு வெள்ளை மாளிகையில் டிரம்ம்பின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய ஆலோசகர்கள் மத்தியில் ஒற்றுமை இன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரண்டு தனியார் படை நிறுவனங்களில் அமெரிக்காவிற்காகப் போர் புரிந்து பெரும் தொகைப்பணத்தை இலாபமாக ஈட்டிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ஜோர்ஜ்ரவுண் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோன் மக்பேட் அதிகரித்துவரும் தனியார் படைகளின் செயற்பாடுகள் குறிந்து ஆய்வு செய்து “புதிய கூலிப்படைகள்” என்னும் நூலை எழுதியுள்ளார். அதில் அவர் இந்தக் தனியார் படைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களல்லர் என்பதையும் அம்பலப்படுத்தியதுடன் அதில் உள்ள தார்மீகப் பிரச்சனைகள் பற்றியும் விளக்கியுள்ளார். அந்நூலில் அவர் 21-ம் நூற்றாண்டில் உலகம் 20-ம் நூற்றாண்டைப் போல் இல்லாமல் 12-ம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளப்படுகின்றது எனச் சொல்லுகின்றார். 12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த பல போர்களில் பெரும்பாலும் கூலிப்படையினரே ஈடுபடுத்தப்பட்டனர். 21-ம் நூற்றண்டில் அதிகரிக்கும் தனியார் படையணிகளும் அவற்றினது போர் நடவடிக்கைகளும் பெரும் பணம் படைத்தவர்களும் கூட்டாண்மைகளும்தான் இனி உலகப் பெருவல்லரசுகளாகுமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது என்கின்றார் பேராசிரியர் சோன் மக்பேட். தனியார் படை ஒன்றில் இருந்து வெளியேறிய ஒரு முன்னாள் கடல்சார் படைவீரர் தனியார் படையில் போதைப் பொருள் பாவனை அதிகம் என்றும் சிறுவர்களை பாலியல் தொழிலாளர்களாகப் பாவிப்பதும் உண்டு என அம்பலப்படுத்தினார். பன்னாட்டு அரசுறவியலாளர்களைப் போல் ஈராக்கில் செயற்படும் அமெரிக்கத் தனியார் படையினர் மீது ஈராக்கிய சட்டங்களில் இருந்து பாதுகாப்பு முன்பு இருந்தது. ஈராக்கியப் பொது மக்களால் இந்தத் தனியார் படையினர் கடுமையாக வெறுக்கப்பட்டனர். அமெரிக்க அரசு வேண்டுமென்றே தனியார் படைகளை அழுக்கான வகையில் செயற்பட அனுமதிக்கின்றது என ஈராக்கிய மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக அமெரிக்காவின் உயர் நிலைப் படை அதிகாரிகள் ஈராக்கில் பயணங்கள் மேற்கொள்ளும் போது அவர்களின் பாதுகாப்பிற்காக தனியார் படையினர் ஈராக்கிய மக்களை மிகவும் கேவலமாக நடத்துவதை வழமையாகக் கொண்டிருந்தனர்.

இடத்தையும் பெயரையும் மாற்றிய பிளக்வோட்டர் நிறுவனம்
அமெரிக்கத் தனியார் படை நிறுவனமான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் அமெரிக்காவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பிடியில் இருந்து தப்புவதற்காக தனது பெயரை Frontier Services Group (FSG) என மாற்றி வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்வது போல் பதிவும் செய்துள்ளது. அது இப்போது அபுதாபியில் பதிவு செய்யப்பட்டு எரிக் பிரின்ஸ் என்பவருக்குச் சொந்தமானதாகியுள்ளது. எரிக் பிரின்ஸ் அமெரிக்காவின் கடல்சார் படையின் சிறப்புப் படையணியான சீல் குழுவில் பணிபுரிந்தவராவர். சீல் பிரிவினருக்கு உலகிலேயே தொழில்நுட்ப ரீதியிலும் தாக்குதிறன் ரீதியிலும் சிறந்த பயிற்ச்சி வழங்க்கப்படுவது எல்லோரும் அறிந்த உண்மை.
ஈராக்கில் கூலிப்படையினரின் அட்டூழியம்
ஈராக்கில் அமெரிக்காவின் தனியார் படைப்பிரிவான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் திகதி அவர்களது வாகனத் தொடரணி ஒரு நாள் வாகன நெருக்கடியில் சிக்குப் பட்டிருந்தது. தீவிரவாதிகள் தம்மைத் தாக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் பத்து நிமிடம் வரை தெருவில் நின்ற வாகனங்கள் மீது கண்டபடி சுட்டுத்தள்ளி வகன நெருக்கடியை இல்லாமல் செய்தனர். இதனால் பல அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். தம்மீது தீவிரவாதிகள் தாக்க்குதல் செய்த படியால் தாம் தாக்குதல் செய்ததாக “வழமையான கதையை” அவர்கள் அவிழ்த்து விட்டனர். ஆனால் சம்பவத்தை ஒரு ஈராக்கிய அரச அதிகாரி நேரில் கண்டபடியால் இப்போது அவர்கள் மீது ஈராக்கில் வழக்கு நடக்கின்றது. ஈராக்கியப் படையினரின் சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனைக்காக நிறுத்தியதால்தான் வாகன நெருக்கடி தோன்றியிருந்தது.

சீனாவிற்குப் பணி புரியும் அமெரிக்கத் தனியார் படை
சீனாவின் One Belt, One Road (OBOR) என அழைக்கப்படும் புதிய பட்டுப்பதைத் திட்டம் ஆபத்து நிறைந்த பல பிரதேசங்களை உள்ளடக்கியது. அதற்கான பாதுகாப்புக்கு சீனா அபுதாபியில் உள்ள எரிக் பிரின்ஸுக்கு சொந்தமான தனியார் படை நிறுவனத்தின் சேவையைப் பெறுகின்றதுஎரிக் பிரின்ஸ் அமெரிக்க சீல் பிரிவில் பணி புரிந்தவர் என்பதால் அமெரிக்கா மிக இரகசியமாக வைத்திருக்கும் சீல் பிரிவின் பயிற்ச்சி நுட்பங்களை சீனா பெற்றுக் கொள்ள முயற்ச்சி செய்யலாம். ஈராக்கில் பிளக்வோட்டர் பணி செய்ய இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை ஏற்பட்டு செய்தவரே தற்போது Frontier Services Group (FSG) இற்கு புதியபட்டுப்பாதைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்துள்ளார். எரிக் பிரின்ஸ் தனது நிறுவனம் சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுக்கவில்லை அதன் வர்த்தகத்திற்கான பாதுகாப்பை மட்டுமே செய்கின்றோம் என இலண்டனில் இருந்து வெளிவரும் பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஆனால் அமெரிக்கரான பிரின்ஸ் அமெரிக்காவின் போட்டி நாடான சீனாவிற்கு பணி செய்வதன் மூலம் ஒரு தேசத் துரோகியாவும் உண்மையான கூலிப்படையாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல எரிக் பிரிஸ் இரசியர்களுடனும் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்கின்றார் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

சீனா மட்டும் விட்டு வைக்குமா
உலகின் பல்வேறு நாடுகளில் சீனா கட்டுமானங்களில் முதலீடு செய்கின்றது. அந்த கட்டுமானப் பணிகளில் சீனர்களே பெருமளவு வேலை செய்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க சீனா பல தனியார் பாதுகாப்பு நிறுவங்களை உருவாக்கியுள்ளது. இவை அரசின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு செயற்படுகின்றன. உலகெங்கு வியாபிக்கும் சீனாவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க சீனாவின் படையினரை அனுப்பவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் தனியார் பாதுகப்புப் படை அவசியமான ஒன்றாகிவிட்டது.

செயற்கை விவேகமும் தனியார் படையும்
செயற்கை விவேகம் (artificial intelligence) என்பது ஒரு தனித்துவமான துறையாக உருவெடுத்து மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வில் கணினிகள் செலுத்தும் ஆதிக்கத்திலும் அதிகமாக இனி வரும் காலங்களில் செயற்கை விவேகம் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது. படைத்துறையிலும் செயற்கை விவேகம் பரவலாகப் பாவிக்கப் படப் போகின்றது. ரொபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களும் செயற்கை விவேகமும் போர் முனைகளில் பெரும் ஆபத்தாகக் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. இது தனியார் படை நிறுவனங்கள் பெருவளர்ச்சியடைவதற்கு வாய்ப்பாக அமையவிருக்கின்றது.


ஒரு காலத்தில் மருத்துவமனைகள் என்பது அரச நிறுவனமாக மட்டும் இருக்க முடியும் என பல நாடுகளில் கருதப்பட்டது. தற்போது உலகெங்கும் தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அது போலவே தனியார் படைகளும் விரைவில் தவிர்க்க முடியாதவையாகிவிடும்

Wednesday, 19 July 2017

கடற்படைகளின் ஆதார (logistic) அல்லது இருப்பியக கப்பல்கள்



கடற்படைகளில் பெரிய கப்பல்களாக இருப்பவை ஆதாரக் (இருப்பியக்கக்) கப்பல்களே. கடற்படைக்குத் தேவையானவற்றை வழங்குவதும் அவை ஆபத்தில் சிக்கியிருக்கும்போது மீட்பு நடவடிக்கைகளில் முன்னிற்பதும் ஆதாரக் கப்பல்களின் முக்கிய பணிகளாகும். இது கடலில் மிதக்கும் களஞ்சியசாலை போன்றது. மனிதன் செய்த கட்டுமானங்களில் கப்பல்களே பெரியவை. அவற்றில் பெரியவை ஆதாரக்கப்பல்களாகும். உலகின் எந்தப் பகுதிக்கும் அவை செல்லக்கூடியவை. அவற்றை இயக்குவதற்கான செலவு இயலக் கூடிய அளவிற்கு குறைக்கப்படும். பல நாடுகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போது ஆதாரக் கப்பல்கள் உதவிகளும் மீட்புப் பணிகளும் அவசர உணவு விநியோகங்களும் செய்வதுண்டு. குண்டூசியில் இருந்து விமான உதிரிப்பாகங்கள் வரை ஆதாரக் கப்பல்கள் விநியோகம் செய்ய வேண்டும். போருக்கும் படையினருக்கு தேவையானவற்றின் இருப்பு (Stock) தொடர்ச்சியாக மீள்நிரப்பு செய்யும் இயக்கம் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தமிழில் logistics ஐ தமிழில் இருப்பியக்கம் என அழைப்போமாக.

ஆதார (இருப்பியக்க) அதிகாரி (logistics officer)
ஆதார அதிகாரி என்பது கடற்படையில் முக்கிய பதவியாகும். ஆதாரக் கப்பல்களின் செயற்பாடுதிறனுக்கு இவர் பொறுப்பாவார். இந்த அதிகாரி நன்கு திட்டமிடக் கூடியவராக இருப்பர். களஞ்சிய முகாமைத்துவம், பாதீட்டுக்கு ஏற்பச் செயற்படுதல், எதிர்பாராத சூழல்களைச் சமாளித்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயற்படக்கூடியவராக இருக்க வேண்டும்.

சட்டம் முக்கியம்
ஒரு நாட்டின் கடலாதிக்கம் அதன் கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரைக்குமே செல்லுபடியாகும். அதைத் தாண்டிப் போகும் கப்பல்களை நெறிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் கடல் மரபொழுங்குச் சட்டம் (UN Convention on the Law of the Sea) இருக்கின்றது. அவற்றுக்கு ஏற்பவே கடற்படைகளின் ஆதாரக் கப்பல்களும் செயற்பட வேண்டும். அதன் படி எல்லா கப்பல்களுக்கும் ஏதாவது ஒரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். அந்த நாட்டின் தேசியக் கொடி அதில் பறக்கவிடப்பட வேண்டும்.

கடற்படை மற்றும் கடல்சார் படைக் கப்பல்களின் வகைகள்
Frigates என்னும் கப்பல்கள் மூவாயிரம் தொன் வரையிலான எடையுடையவை அவை எதிரியின் கலன்களில் இருந்து அதில் முக்கியமாக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து கடற்படைக் கூட்டத்தை பாதுகாப்பதை பணியாகக் கொண்டவை. corvette கப்பல்கள் சிறியவையும் இலகுவானவையுமாகும். இலகுவில் செலுத்தக் கூடிய இந்த வகைக் கப்பல்கள் ஆழம் குறைந்த கடல்களில் சிறப்பாகச் செயற்படக் கூடியவை. பரவலாகப் பாவிக்கப்படுபவையும் பல பணிகளைச் செய்யக் கூடியவையும் Destroyers எனப்படும் நாசகாரிக் கப்பல்களே இவை தாக்குதலுக்கும் மற்றக் கடற்படைக் கலன்களைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. Cruisers எனப்படும் கப்பல்கள் அபரிமிதமான சுடுவலுக் கொண்டவை. அதிக அளவிலான ஏவுகணைகளை இவை தாங்கிச் செல்லும். Amphibious Assault Ships
என்னும் ஈரூடகக் கப்பல்கள் பெயருக்கு ஏற்ப நீரிலும் நிலத்திலும் செயற்படக் கூடியவை. எல்லாவற்றிலும் சிறிய வகைக் கப்பல்கள் Littoral combat ship எனப்படும் கரையோரத் தாக்குதல் கப்பல்கள். இவை ஆழம் குறைந்த கடற்கரையோரத்தில் செயற்படும் தாக்குதல் கப்பல்கள். கடைசியாக விமானம் தாங்கிக் கப்பல்கள் நடமாடும் விமானத் தளங்களாகும். தற்போது அமெரிக்கா பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லாமல் இயங்கக் கூடிய படகுகளை உருவாக்கி வருகின்றது. இவை பெரும்பாலும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படும். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இயக்கக் கூடிய இந்தப் படகுகள் அமெரிக்காவின் கடலாதிக்கத்தை நிலை நிறுத்தும் என நம்பப்படுகின்றது. இந்த எல்லா வகைக் கப்பல்களுக்கும் தேவையானவற்றை வழங்குவதே ஆதாரக் கப்பல்களாகும்.

இரசிய ஆதார (இருப்பியக்க) கப்பல்
இரசியா தனது கடற்படைக்கு வலுச் சேர்க்கும் வகையில் புதிய மூன்று ஆதாரக் (logistic) கப்பல்களை களத்தில் இறக்கவுள்ளது. இவை பனிப்பிரதேசத்திலும் செயற்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரசியாவின் JSC Spetssudoproekt Design Bureau of St Petersburg நிறுவனம் இப்புதிய கப்பல்களை வடிவமைக்க இரசியாவின் Severnaya Verf Shipyard என்னும் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனம் அவற்றை உருவாக்கியுள்ளது. இரசியாவில் இருந்து மிகத் தொலை தூரம் சென்று செயற்படக்கூடியவையாக அவை இருக்கும். இந்தக் புதிய ஆதரக்கப்பல்களை இரசியா The Elbrus-class கப்பல்கள் என வகைப்படுத்தியுள்ளது. ஆழ்கடல்களிலும் தொலைவில் உள்ள துறை முகங்களிலும் உள்ள இரசியக் கடற் படையினருக்குத் தேவையான படைக்கலன்கள், குடிநீர், போன்றவற்றை எடுத்துச் செல்லவும் அவற்றைக் கொண்ட பெரும் களஞ்சியம் போல் கடலில் செயற்படவும் இரசியாவின் புதிய ஆதாரக் கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் வழங்கவும் ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்கலன்களையும் படையினரையும் மீட்கும் பணியிலும் இந்த ஆதாரக் கப்பல்கள் சிறப்பாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது.

அமெரிக்க ஆதாரக் (இருப்பியக்க) கப்பல்கள்
உலகெங்கும் பல கடற்படைத் தளங்களையும் கடல்சார் படைத் தளங்களையும் வைத்திருக்கும் அமெரிக்கா பத்து விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றது. அமெரிக்காவின் உலகெங்கும் உள்ள படையினரின் தேவைகளின் 90 விழுக்காடு ஆதாரக் கப்பல்கள் மூலமே விநியோகிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் ஆதாரக்கப்பல்கள் Logistic Support Vessels (LSVs) என அழைக்கப்படுகின்றன. அமெரிக்காவிடம் இருக்கும் ஆதாரக் கப்பல்கள் General Frank S. Besson என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு நிர்மானிக்கப்பட்டன. பனிப்போர் உச்சத்தில் இருக்கும் போது ஐக்கிய அமெரிக்கா இவற்றில் ஆறு  கப்பல்களை உருவாக்கியது. இவை 273 அடி நீளமும் 60 அடி அகலமும் உடையவை. இவை அமெரிக்கத் தரைப்படையின் எந்தப் பெரிய படைக்கலன்களையோ வாகனங்களையோ காவிச் செல்லக் கூடியவை. அவற்றைத் தூக்கவும் இறக்கும் தேவையான தூக்கிகள் அந்த ஆதாரக் கப்பல்களிலேயே இருக்கின்றன. வசதிகளற்ற இறங்கு துறைகளிலும் அவற்றால் படைகலன்களையும் வாகனங்களையும் இறக்கவும் ஏற்றவும் முடியும். இரட்டை அடுக்குகளைக் கொண்ட 20 அடி நீளமான 82 கொள்கலன்களை (containers) அவை தாங்கிச் செல்லக் கூடியவை. அத்துடன் ஒரு Boeing C-17 fuselage விமானத்தையும் தாங்கிச் செல்லும். இந்த ஆதாரக் கப்பல்களின் தளப்பரப்பு (deck area) 10,500 சதுர அடிகளாகும். 2000-ம் ஆண்டளவில் General Frank S. Besson என வகைப்படுத்தப்பட்ட ஆதாரக் கப்பல்களில் இருந்து மேம்படுத்தப்பட்ட கப்பல்களை அமெரிக்கா உருவாக்கியது. USAV SSGT Robert T. Kuroda (LSV-7), USAV Major General Robert Smalls (LSV-8) என்ற இரு கப்பல்கள் அவையாகும். General Frank S. Besson கப்பல்களிலும் பார்க்க 43 அடிகள் நீளமானவை இவையாகும். புதிய கப்பல்களின் நீரியக்கமும் (hydrodynamic) மேம்படுத்தப்பட்டன. செலுத்தும் வலுவும் இரண்டு மடங்காக்கப்பட்டது. கடுமையான கடல் சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடிக்கக் கூடியவையாகவும் புதிய ஆதாரக்கப்பல்களை அமெரிக்கா வடிவமைத்தது. அவை தொடர்ந்து 6,500 மைல்கள் பயணிக்கக் கூடியவை. ஒவ்வொன்றும் 26மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. 2014-ம் ஆண்டு தனது ஆதாரக் கப்பல்களுடன் இணைந்து செயற்படக் கூடிய பயணிக்கும் கடற்படைத் தளங்கள் (Expeditionary Mobile Base) என்னும் பெரியவகைக் கப்பல்களையும் அமெரிக்கா உருவாக்கியது. பழைய எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா பயணிக்கும் கடற்படைத் தளங்களை உருவாக்கியது.

பிரித்தானியாவின் ஆதாரப் படைப்பிரிவு
மற்ற நாடுகள் ஆதாரக் கப்பல்கள் எந்த அளவு பெரியதாக இருக்க வேண்டும் என் பதில் கவனம் செலுத்த பிரித்தானியக் கடற்படையினர் செயற் திறனில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆதரக் கப்பல்கள் போர்ச் சூழலில் துரிதமாக விநியோகங்களை மேற்கொள்வது முக்கியமானதாகும். இதற்காக பிரித்தானியக் கடற்படையில் Commando Logistics Regiment என்ற சிறப்பு ஆதாரப் படையணி இருக்கின்றது. மூன்று பிரிவுகளில் மொத்தம் 780 ஆளணியைக் கொண்ட இந்தப் படையணி பச்சை யாளி (Green Dragon) என்னும் குறியீட்டுப் பெயருடன் சிறப்புப் பயிற்ச்சிகளை மேற்கொள்ளும். கடற்படைக்குத் தேவையான வாகனங்கள், படைக்கலன்கள், சுடுகலன்கள், படையினருக்கான உணவு மருத்துவ உதவி போன்றவற்றை மிகத் துரிதமாக மேற்கொள்ளும் பணியை மிகச் சிறப்பாகச் செய்யக் கூடிய வகையில் பச்சை யாளி என்னும் பயிற்ச்சி வழங்கப்படுகின்றது. நூறு படை வாகனங்கள் இதில் ஈடுபடுத்தப்படும். சத்திர சிகிச்சை நிபுணர்கள் காயப்பட்ட படையினருக்கு அவசர சிகிச்சைகளை வழங்குவதும் இப்பயிற்ச்சியில் அடங்கும். தேவை ஏற்படின் போர் முனையின் முன்னணி நிலைகளுக்கும் சென்று தேவையானவற்றை வழங்குவதும் இப்பயிற்ச்சியில் அடங்கும். பிரித்தானியாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பலான HMS Queen Elizabeth இல்3010 சிறிய அறைகள்(compartments) ஆதாரத் தேவைகளுக்கா உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன ஆதாரக் கப்பல்கள்
சீனாவின் ஆதாரக் கப்பலான குவாங் குவா கௌ உலகின் மிகப்பெரியக் கப்பல்களில் ஒன்றாகும். இது 693 அடி நீளமும் 223 அடி அகலமும் கொண்டது. 98,000 தொன் எடையுள்ளது. கப்பல் நிர்மானத் துறையில் சீனாவின் பாரிய முன்னேற்றத்திற்கு குவாங் குவா கௌ ஆதாரக் கப்பல் சான்று சொல்கின்றது சீனாவின் ஆதாரக் கப்பல் ஆழ்கடல் துளையிடல், ஆழ்கடலில் கடற்படுக்கையில் அகழ்வு வேலைகள் செய்தல், தற்காலிக கடற்படைத் தளங்களை நிர்மணித்தல் போன்றவற்றைச் செய்யக் கூடியது. அத்துடன் பலவித அனர்த்த நிவாரண நடவடிக்கைகளையும் செய்யக் கூடியது. இது வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலையே தன்னுள் வைத்துத் தாங்கிச் செல்லக் கூடியது. சீனாவின் பொருளாதார வலிமையும் தொழில்நுட்ப மேம்பாடும் குவாங் குவா கௌ போன்ற பாரிய ஆதராக கப்பல்களை உருவாக்கும் திறனை வழங்கின. அதன் மூலம் உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் சீனக் கடற்படை எதிர்காலத்தில் செயற்படவும் ஆதிக்கம் செலுத்தவும் குவாங் குவா கௌ ஆதாரக் கப்பல் வழிசமைக்கும். உலகின் மிகப்பெரிய கப்பல்களில் குவாங் குவா கௌ ஆதாரக் கப்பலும் ஒன்றாக இருப்பதால் அதன் அசையும் வேகம் குறைவாக உள்ளது. இதனால் ஒரு போரின் போது அவசரத் தேவைகளை இவற்றால் உரிய நேரத்தில் வழங்க முடியாமல் போகலாம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அத்துடன் இது பத்தாண்டுகளுக்கு மேல் நின்று பிடிக்காது எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. 

கடல்சார் படைகள்
ஆதாரக்கப்பல்களின் சேவை கடற்படை மற்றும் கடல்சார் படைகளுக்கு (Marines) மட்டுமல்ல தரைப்படைக்கும் விமானப் படைக்கும் பல சந்தர்ப்பங்களில் தேவைப்படும். ஆனால் அவற்றின் சேவைகள் மிக அவசியாமகத் தேவைப்படுவது கடல்சார் படைகளுக்கே. போர்க்கப்பல்கள், விமானங்கள், நிலத்தில் பயணிக்கும் தாங்கிகள் பார ஊர்திகள் எனப் பலதரப்பட்ட படைக்கலன்களுடன் கடல்சார் படைகள் செயற்படும். முன்னணி வல்லரசு நாடுகளின் கடல்சார் படைகள் தமது நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல் தொலைவில் உள்ள நாடுகளில் தமது படை நடவடிக்கையில் ஈடுபடும் போது அவற்றிற்கு ஆதாரக் கப்பல்களின் சேவை மிக அவசியமானதாகும்.

உலக கடலாதிக்கப் போட்டியில் ஆதாரக் கப்பல்களின் சேவை இன்றியமையாதவையாகும் எனத் துணிந்து சொல்லலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...