Friday, 10 June 2016

ஏவுகணை விற்பனையில் இந்தியா இனிக் கல்லா கட்டும்

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவை MTCR எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Missile Technology Control Regime என்னும் கூட்டமைப்பில் ஓர் உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ள அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார். MTCR அமைப்பு உறுப்பு நாடுகள் எந்த விதமான ஏவுகணைகளை மற்ற நாடுகளுக்கு விற்பது என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. MTCRஇல் இணைவதற்கு இந்தியா கொடுத்த விண்ணப்பத்திற்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நாள் 2016 ஜுன் மாதம் 6-ம் திகதியுடன் முடிவடைந்ததால் இந்தியாவின் உறுப்புரிமை இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெருங்கிவரும் இந்தியாவும் அமெரிக்காவும்
இந்திய ஆட்சியாளர்களுடனும் அரசுறவியலாளர்களுடனும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது கடினமான ஒன்று என அமெரிக்க வெளியுறவுத் துறையினர் கருதியிருந்தமை 2000-ம் ஆண்டு பில் கிளிண்டன் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தில் இருந்து சிறிது சிறிதாக மாறத் தொடங்கி தற்போது இரு தரப்பினர்களிற்கும் இடயில் அந்நியோன்யம் துளிர்விடத் தொடங்கியுள்ளது என்பதை மோடி அமெரிக்காவிற்கு செய்த மூன்று நாட் பயணம் சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்கா இந்தியாவுடனான உறவிற்கு 2000-ம் ஆண்டில் இருந்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகப் பல கண்டனங்கள் எழுப்பப்பட்ட போதிலும் அவரது இந்தியாவுடனான உறவுக் கொள்கை வெற்றிகரமானது என பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.

நோக்கங்கள் வேறு
உலகில் தொழில்நுட்பப் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதெற்கு என Nuclear Suppliers' Group, the Missile Control Technology Regime, the Australian Group and the Wassenaar Arrangement ஆகிய நான்கு அமைப்புக்கள் இருக்கின்றன. இவை தமது தொழில்நுட்ப ஆதிக்கத்தை நிலைநிறுத சில நாடுகளால் உருவாக்கப் பட்டவையாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக  ஈரானிற்கு புதிய தொழில்நுட்பம் போகமல் தடுப்பதும்  இவற்றின் பகிரங்கப்படுத்தப்படாத நோக்கமாகும்.

MTCRஅமைப்பின் இரட்டை வேடம்
 1987-ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட MTCR ஏற்கனவே 34 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஏவுகணைத் தொழில்நுட்பம் பல நாடுகளுக்கும் பரவுவதையும் அணுக்குண்டு தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை எல்லா நாடுகளும் உருவாக்கக் கூடாது என்பதிலும் இந்த MTCR அமைப்பு கவனம் செலுத்துகின்றது. வட கொரியா அணுக்குண்டை உற்பத்தி செய்த போதிலும் அவற்றைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைத் தொழில்நுட்பம் அதனிடம் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. MTCR உறுப்புரிமை இந்தியாவிற்கு இல்லாதிருந்த போது அதற்கு பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது தடை செய்யப் பட்டிருந்தது. அதேவேளை பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை பாக்கிஸ்த்தானிற்கு சீனா வழங்கிக் கொண்டிருந்தது. 2003-ம் ஆண்டு அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பேய் இது தொடர்பாக MTCRஅமைப்பைக் கடுமையாகச் சாடியிருந்தார்.  இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் சிவ தானு பிள்ளை இந்தியா முழுக்க முழுக்க உள்ளூர் அறிவிலேயே தங்கியிருந்து ஏவுகணைகளை உருவாக்கியது இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டம் போல் கடினமானதாக இருந்தது என்றார். இந்தியாவின் Defence Research and Development Organisationஇற்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்க 15 ஆண்டுகள் எடுத்தன. MTCRஅமைப்பு 500கிலோ கிராமும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள குண்டுகளை 300கிலோ மீட்டர்களுக்கு மேல் எடுத்துச் செல்லும் கருவிகளின் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதித்திருந்தது. இது ஏவுகணைகளுக்கும் ஆளில்லாப் போர் விமானங்களுக்கும் பொருந்தும். இத் தொழில் நுட்பம் "பயங்கரவாதிகளின்" கைகளுக்குப் போக்கக் கூடாது என்பதில் "அரச பயங்கரவாதிகள்" அதிக கரிசனை காட்டினர். ஆனால் பிரான்ஸும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தக் கட்டுப்பாட்டை மீறி படைக்கலன்களை விற்பனை செய்திருந்தன. ஏவுகணைக் தொழில்நுட்பங்களை சீனாவிடமிருந்து பாக்கிஸ்த்தான், ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் பெற்றுக் கொண்டன. 

இந்தியாவிற்கு விதிவிலக்கு
அணுப்படைக்கலப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகள் மட்டுமே MTCRஇல் உறுப்புரிமை பெறலாம் என்ற நியதியில் இருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா பலவிதமான படைக்கலங்களை அமெரிக்காவிடமிருந்து விலைக்கு வாங்கலாம். அமெரிக்க உளவுத் துறை பரவலாகப் பயன்படுத்தும் Predator drone என்னும் ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்கலாம். ஆனால பாக்கிஸ்த்தானியப் படைட்த்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பாக்கிஸ்த்தானுக்குள் சென்று அங்குள்ள தலிபான் தலைவர்களைக் கொல்லக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்களை அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கு விற்பனை செய்யாது என எதிர்பார்க்கலாம்.

இந்திய ஏவுகணை வியாபாரம் இனிக் கல்லாக் கட்டும்
இந்தியாவின் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பாயக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு 2011-ம் ஆண்டில் இருந்தே வியட்நாம் ஆர்வம் காட்டி வருகின்றது. பிரம்மோஸ் இரசியாவுடன் இந்தியா இணைந்து தயாரித்த supersonic cruise missile ஆகும். இனி இந்தியா  வியட்நாமிற்கு பிரம்மோஸ்களை விற்பனை செய்யலாம். இந்தோனேசியா, தென் ஆபிரிக்கா, பிரேசில், சிலி ஆகிய நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க அக்கறை கொண்டுள்ளன. மேலும் பிலிப்பைன்ஸ், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து ஆகிய நாடுகளும் பிரம்மோஸை வாங்கலாம். வெளிநாடுகளுக்கு படைக்கலன்கள் விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகும் போது உற்பத்தித்திறன், தரம் ஆகியவை மேம்படும். உலகிலேயே அதிக படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா இனி படைக்கலன்களை ஏற்றுமதி செய்வதிலும் முன்னேறலாம். இனிப் படைத்துறை ஏற்றுமதியில் இந்தியா சீனாவிற்கு சவாலாக அமையும். மேலும் இந்தியாவின் விண்வெளித் திட்டமும் தனக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில்  வாங்கலாம்.

விண்வெளியிலும் இந்தியாவிற்கு வாய்ப்பு
செவ்வாய்க் கிரகத்திற்கு செய்மதி அனுப்புவதில் சீனாவை முந்திய இந்தியாவிற்கு பல விண்வெளித் தொழில்நுட்பங்களை இதுவரை இரசியாவால் விற்பனை செய்ய முடியாமல் MTCR அமைப்பின் விதிகள் தடை செய்திருந்தன. இனி இரசியா இந்தியாவிற்கு விண்வெளிப் பயணத்தில் முன்னணி வகிக்கும் cryogenic rocket engineஐ இரசியாவிற்கு விற்பனை செய்யும்.  இந்தியாவும் இரசியாவும் இணைந்து ஏவுகணைப் பாதுகாப்பு முறைமைகளை உற்பத்தி செய்தால் பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டுகள் செல்லாக் காசாகிவிடும்.

என்ன இந்த பிரம்மோஸ்?
 இந்தியாவும் இரசியாவும் இணைந்து 2004-ம் ஆண்டு முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை (Cruise Missiles) உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது. பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை. அதிகரித்த உயர நிலையில் பாயும் 400 கிலோ மீட்டர் தூரம் பாயக்கூடியது.  ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட பாதையில் மட்டும் பயணிக்கும் இடையில் தனது பாதையை மாற்றாது. இடைமறிப்பு ஏவுகணைகளை தவிர்க்கும் நுட்பம் இதில் இல்லை. ஒரு பிரம்மோஸ் ஏவுகணையை இலக்குத் தப்பாமல் அழிக்க அமெரிக்காவின் Sea Sparrow Missiles நான்கை ஏவ வேண்டி இருக்கும். ஒரு அமெரிக்க நாசகாரிக் கப்பலால் 12 பிரம்மோஸ்களை மட்டுமே அழிக்கலாம். இந்தியாவின் கொல்கத்தா வகையைச் சேர்ந்த நாசகாரிக் கப்பலில் 49 பிரம்மோஸ்களும் இந்தியாவின் அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்கள் 24  பிரம்மோஸ் ஏவுகணைகளையும் கொண்டிருக்கும்.  2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.

ஆத்திரப்படும் பாக்கிஸ்த்தான்
இந்தியா MTCRஅமைப்பில் இணைவதற்கு எதிராக அதன் உறுப்பு நாடுகளிடம் பாக்கிஸ்த்தான் பெரும் பரப்புரைச் செய்தது. இந்தியாவை MTCRஅமைப்பில் இணைத்துக் கொள்வதையிட்டு பாக்கிஸ்தானிய மூதவை உறுப்பினர் முஷாஹிட் ஹுசேய்ன் சயிட் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா எல்லா அரசுறவியல் முனைகளிலும் எம்மைத் தோற்கடித்து எம்மைச் சுற்றி வளைக்கின்றது என்றார் அவர். ஈரானுடனும் ஆப்கானிஸ்த்தானுடனும் பாக்கிஸ்த்தானிற்கு நல்ல உறவு இல்லாத நிலையில் அந்த இரு நாடுகளுடனும் இந்தியா தனது உறவை அபிவிருத்தி செய்கின்றது என்றார் அவர் மேலும். நரேந்திர மோடியின் ஈரானிற்கான பயணத்தின் போது ஈரான், ஆப்கானிஸ்த்தான், இந்தியா ஆகிய நாடுகளிடையான முத்தரப்பு கடப்பு ஒப்பந்தம் ( Trilateral Transit Agreement) 2016-ம் ஆண்டு மே மாதம் -24-ம் திகதி கைச்சாத்திட்டமை பாக்கிஸ்த்தானியருக்குப் பேரிடியாகவும் அமைந்திருந்தத்து. சீனாவும் இந்தியா MTCRஅமைப்பில் இணைவதை விரும்பாத போதிலும் கடுமையான எதிர்ப்பைக் காட்டவில்லை.

அடுத்த இலக்கு
இந்தியாவின் அடுத்த இலக்கு அணுவலு விநியோககர்கள் குழுவில் - Nuclear Suppliers Group (NSG) இணைவதாக இருக்கும். அதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. MTCRஅமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் Nuclear Suppliers Group (NSG) அமைப்பிலும் உறுப்பினர்களாக இருக்கின்றன. இதனால் NSG அமைப்பில் இணைந்து கொள்வது இந்தியாவிற்கு இலகுவாக இருக்கும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மெக்சிக்கோ, சுவிஸ் போன்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.  இந்தியா NSG அமைப்பில் இணைவதற்கு எதிராக சீனா கடும் பரப்புரை செய்கின்றது, நியூசிலாந்து, அயர்லாந்து, துருக்கி, தென் ஆபிரிக்கா, ஒஸ்ரியா ஆகிய நாடுகளும் எதிர்ப்பதாக பாக்கிஸ்த்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டில் இருந்து NSG அமைப்பின் விதிகளில் இருந்து இந்தியாவிற்கு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டன. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருக்கும் NSG அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவை அனுமதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோன் கெரி ஏற்கனவே NSG அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இந்தியாவை அனுமதிப்பதை எதிர்க்க வேண்டாம் எனக் கடித மூலம் கேட்டுள்ளார். NSG அமைப்பில் இந்தியாவை இணைத்தால் பாக்கிஸ்த்தானையும் இணைக்க வேண்டும் என சீனா அடம்பிடிக்கின்றது. ஆனால் அணுப்படைகலன்கள் பரவலாக்குதல் தொடர்பாக பாக்கிஸ்த்தானின் செயற்பதிவும் (track record) இந்தியாவின் செயற்பதிவும் வேறுபட்டவை. அணுக்குண்டு உற்பத்தித் தொழில்நுட்பம் பாக்கிஸ்த்தானிடமிருந்து ஈரானிற்கும் வட கொரியாவிற்கும் கைமாறியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இந்தியா தனது தொழில்நுட்பத்தை எந்த நாட்டிற்கும் விற்பனை செய்யவில்லை.

அடுத்த ஏவுகணை
இந்தியாவின் பிரம்மோஸ் திட்டத்தின் தலைவர் சிவதாணு பிள்ளை புராணங்களில் உள்ள அஸ்த்திரங்களைப் போலவே எமது ஏவுகணைகள் அமையும். திருமாலின் கையில் இருக்கும் சுதர்சனாம் என்னும் பெயர் கொண்ட சக்கரத்தைப் போன்று எதிரி இலக்கைத் தாக்கி விட்டு மீண்டும் எமது கையில் வந்து சேரும் ஏவுகணைகளையும் உருவாக்கவுள்ளோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். கடவுள்களின் கட்டிட அமைப்பாளரான விஸ்வகர்மா சூரியனின் துகள்களில் இருந்து சிவபெருமானுக்கு திரிசூலமும், திருமாலுக்குச் சக்கரமும், தேவர்களுக்கு புட்பகவிமானமும் அமைத்தார் எனக் கதைகள் சொல்கின்றன. சுதர்சன சக்கரத்தில் ஒரு கோடி கூர்கள் இருக்கின்றன. ஆனால் சிவபுராணத்தின் படி திருமாலுக்கு சிவபெருமான் சக்கரத்தை வழங்கினார்.

அமெரிக்கா ஏன் இந்தியாவை MTCRஇல் அனுமதித்தது?

இந்தியாவிற்கான அமெரிக்காவின் படைக்கல விற்பனை இனி அதிகரிக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியின்றி இந்தியாவால் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த முடியும். அதற்கு துணையாக இரசியா இருக்கின்றது. இது இரசிய இந்திய உறவை நெருக்கமாக்குவதுடன் இரசியாவின் படைக்கல விற்பனையை அதிகரிக்கும். இந்தியாவை MTCR அமைப்பின் உறுப்பினராக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குப் பிடிக்காத நாடுகளிற்கு இந்தியா ஏவுகணைகளை விற்பனை செய்வதைத் தடுக்கலாம். மன்மோகன் சிங் - சோனியா ஆட்சியில் இந்தியாவிற்கு அணு வலு உற்பத்தித் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய அமெரிக்கா கடும் முயற்ச்சி எடுத்தது. அதை நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி கடுமையாக எதிர்த்தது. இனி அந்த விற்பனை நடக்கப் போகின்றது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய முடியாது எனத் தடைவிதிக்கப்பட்ட நரேந்திர மோடியை அமெரிக்க நாடாளமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்ற வைத்ததும், அதற்குப் பலத்தை கைதட்டல்கள் கொடுத்ததும், அவருக்குப் பிடித்த ஷெல்ஃபியை பல நாடாளமன்ற உறுப்பினர்கள் அவருடன் நின்று எடுத்தது எல்லாம் ஒரு திட்டமிட்ட செயலா?

Tuesday, 7 June 2016

ஒசையின்றி நடக்கின்றது ஓர் உலகப் போர்

தென் சீனக் கடலில் சீனா நிர்மாணித்த தீவுகளுக்குச் சவால் விட அமெரிக்கப் போர் விமானங்களும் நாசகாரிக் கப்பல்களும் செல்கின்றன. சிரியாவில் வல்லரசு நாடுகளின் படை  நடவடிக்கைகளின் நடுவில் ஒரு மோசமான மனிதப் பேரவலம் நடந்து கொண்டிருக்கின்றது.   போல்ரிக் கடலிலும் கருங்கடலிலும் இரசியப் படைகளும் நேட்டோப் படைகளும் ஒன்றின் மூக்கு வரை மற்றதன் கைகள் வீசப்படும் நிலைவரை சென்றுள்ளன. எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நேட்டோ உறுப்பு நாடுகளை இரசியா 60 மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்கலாம் அதைத் தடுக்க நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பால் ஏதும் செய்ய எனப் படைத்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முறுகல் நிலைகளும் போரும் ஒரு புறம் நடக்க ஓசையின்றி ஒரு போர் உலகில் நடக்கின்றது. அது பெரிதாக மக்களைச் சென்றடைவதில்லை.

நான்காம் முனைப்போர்
மற்றப் படைத்துறை நடவடிக்கைகளுக்கு என ஜெனிவா உடன்படிக்கை ஐக்கிய நாடுகளின் சாசனம் எனப் பல விதி முறைகள் இருப்பது போல் இணைய வெளிப் படைத்துறைக்கு என ஏதும் இல்லை. இதனால் இணையவெளிப் போர் கட்டுப்பாடின்றி நடக்கின்றது.  ஓசையின்றி நடக்கும் இப் போர் தரை, வானம், கடல் ஆகிய மூன்றிலும் நடக்கின்றன.  பல நாடுகளிடையேயும் தீவிரவாத அமைப்புக்களுக்கும் அரசுகளுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போரில் துப்பாக்கிகள் வெடிப்பதில்லை குண்டுகள் வீசப்படுவதில்லை. அந்தப் போர்தான் இணையவெளிப்போர். இணைய வெளியில் உளவுகள் பார்க்கப் படுவதுண்டு, தகவல்கள் கொள்ளை அடிக்கப் படுவதுண்டு. தாக்குதல்கள் நடத்தி பெரும் சேதங்கள் விளைவிக்கப் படுவதுண்டு. பல நாடுகளும் தீவிரவாத அமைப்புக்களும் இணையவெளிப் படைப்பிரிவை அமைத்துள்ளன.  தரைப்படை, கடற்படை, வான் படை போல் இணையவெளிப் படையும் போரின் இன்றியமையாத பிரிவாக உருவாகிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. நாடுகள் கூட்டாகச் செய்யும் போர் ஒத்திகையில் இணைய வெளித் தாக்குதல்களும் ஒன்றாக அமைந்துள்ளன. தனிப்பட்ட ரீதியில் இணையவெளியில் தாக்குதல்கள் திருட்டுக்கள் செய்பவர்களை hacktivists என அழைக்கின்றனர்.

அமெரிக்காவின் 2018-ம் ஆண்டுத் திட்டம்
ஐக்கிய அமெரிக்கா 2018-ம் ஆண்டில் நிறைவேற்றப்படும் இணையவெளி படைத் திட்டம் ஒன்றை வரைந்துள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திடுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப்படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சி, ஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள  Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும்.  ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.  அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும்.

தகவல் வாரி அள்ளும் விமானம்
2016 மே மாத நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் EP-3E Aries என்னும் வேவு விமானம் சீன எல்லைக்கு அண்மையாக பன்னாட்டு வான் பரப்பில் பறந்து கொண்டிருக்கையில் சீனாவின் இரண்டு J-11 போர் விமானங்கள் அதற்கு 50 அடி அண்மையாகச் சென்று அதற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பறந்தன. ஐக்கிய அமெரிக்கா இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. EP-3E Aries என்பது நான்கு இயந்திரங்கள் உள்ள 105அடி நீளமும் 34 அடி உயரமும் கொண்ட இலத்திரனியல் வேவுவிமானமாகும். இது பறக்கும் இடத்தில் இருந்து பல சதுரமைல் பரப்பளவில் உள்ள இலத்திரனியல் தகவல்களை வாரி அள்ளக் கூடியது எனச் சொல்லப்படுகின்றது. இந்த விமானத்தில் இணையவெளிப் படை வீரர்களும் உள்ளடக்கப் பட்டுள்ளனர். அவர்கள் இலத்திரனியல் கருவிகளை இயக்கி எதிரியின் தகவல் தொடர்பாடல்களை அபகரித்துக் கொள்வர். இப்படிப் பட்ட விமானம் தனது நாட்டிற்கு அண்மையாகப் பறப்பது ஆபத்து என்ற படியால் சீனா அதை இடைமறித்தது

கூட்டுக் களவாணிகள்
சீனாவும் இரசியாவும் இணைந்து அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் கணினிகளை ஊடுருவி அமெரிக்க அரசுறவியலாளர்கள் மற்றும் உளவாளிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டியுள்ளன. விமானச் சேவைகளின் கணினிகளை ஊடுருவி அதன் பயணிகளின் விபரங்களையும் பயண விபரங்களையும் திரட்டி அதில் அரசுறவியலாளர்கள் யார் உளவாளிகள் யார் என்பது பற்றியும் அவர்களது நடமாட்டம் பற்றியும் தகவல்களை இரசியாவும் சீனாவும் பெற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் தாம் திருடிய தகவல்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறியும் கொண்டன என லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளிவிட்டிருந்தது. அதே பத்திரிகை. ஜுனேய்ட் ஹுசேய்ன் என்ற ஒரு தனிநபர் அமெரிக்காவின் 1300அமெரிக்காவின் படைத்துறை மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள், முகவரிகள் போன்றவற்றை இணையவெளி ஊடுருவல் மூலம் திரட்டி பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து அவர்களைக் கொல்லும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் பேருக்கான வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
சீனாவிடம் “இணையவெளி நீலப் படைப்பிரிவு” என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை “இரவு யாளி” என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
இந்தியப் படைத்துறை இரகசியங்கள் சீனாவின் கையில்
சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.
சீனாவின் இணையவெளிப் படைப்பிரிவு
இணைய வெளித் தாக்குதல், இணையவெளித் திருட்டு ஆகியவற்றில் சீனா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. ஒரு இலட்சம் படைவீரர்களைக் கொண்ட சீனாவின் இணையவெளிப் படைப்பிரிவு 12 பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அதில் மூன்று ஆராய்ச்சி மையங்களும் உண்டு. 2015-ம் ஆண்டு சீனா தனது படைத்துறையை மறுசீரமைத்த போது பல வேறுபட்ட துறையினரின் கட்டுப்பாடுகளில் இருந்த பல்வேறு இணைய வெளிப் படைப்பிரிவினர் ஒரு கட்டளைப் பணியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் Fortune எனப்படும் ஊடகம் சீனா அமெரிக்காவில்  இணையவெளி ஊடுருவல் செய்த இடங்களைக் கொண்ட ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அவ் ஊடுருவல்கள் மூலம் அமெரிக்காவின் வாகன உற்பத்தி தொடர்பான இரகசியங்கள், மருந்தாக்கல் இரகசியங்கள், படைத்துறை இரகசியங்கள், குடிசார் போக்கு வரத்துக் கட்டுப்பாட்டு முறைமைகள் பற்றிய தகவல்கள் உட்பட பல தகவல்களை சீனா திருடியதாக Fortune குற்றம் சாட்டியது. 500இற்கு மேற்பட்ட இணைய வெளி ஊடுருவல்கள் சீனாவில் இருந்து அமெரிக்காவில் 2005இலிருந்து 2015 வரை செய்யப்பட்டதாக Fortune தெரிவித்திருந்தது.  Boeing, Lockheed Martin ஆகிய விமான உற்பத்தி நிறுவனங்களின் கணனித் தொகுதிகளை சீனா ஊடுருவி அமெரிக்கப் போர் விமானங்களின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டது எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

வட கொரியாவின் இணைய வெளிப் படையணி
இணையவெளிப் போர் முறைமையில் முன்னணி்யில் இருக்கும் நாடுகளில் வட கொரியாவும் ஒன்றாகும். அது பல இளைஞர்களை கணனித் துறையில் பயிற்ச்சிக்கு என வெளி நாடுகளிற்கு அனுப்பி பின்னர் அவர்களை வைத்து தன் இணையவெளிப் படைப்பிரிவை உருவாக்கியது. பொருளாதாரப் பிரச்சனையில் இருக்கும் வட கொரியாவிற்கு மிகவும் குறைந்த செலவில் இணைய வெளிப் படைப்பிரிவை உருவாக்க முடிந்தது. வட கொரியாவின் இணைய வெளிப் படையில் 6,000 பேர் உள்ளனர். Bureau 121 என அழைக்கப்படும் இவர்களால் 2014-ம் ஆண்டு இலகுவாக Sony Picturesஇன் கணனிகளை ஊடுருவி உலகை உலுப்பக் கூடியதாக இருந்தது. வட கொரிய அதிபரை பேட்டி காண்பதை முக்கிய பங்காகக் கொண்ட Sony Picturesஇன் திரைப்படம அதிபரைக் கேலி செய்வதாக அமைந்ததால் ஆத்திரப்பட்ட வட கொரிய அரசு தனது இணைவெளிப்படையினரைக் கொண்டு Sony Picturesஇன் கணனிகளை ஊடுருவச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக்க பிரித்தானியாவின் தாக்குதல்
பிரித்தானியாவின் RAF Rivet என்னும் உளவு விமானம் லிபியாவின் சேர்டே நகரில் நிலை கொண்டுள்ள ஐ எஸ் போராளிகளின் தொடர்பாடல்களுக்கு எதிராக 2016 மே மாதம் 14-ம் திகதி ஒரு இணையவெளித் தாக்குதலை நடத்தியது. விமானத்தில் இருந்து ஒலிபரப்பப்பட்ட அலைவரிசைக் குழப்பி ஐ எஸ் போரளிகளின் தொடர்ப்பாடலை முற்றாக துண்டித்தது. தமது விமானத்தில் இருந்து வலு மிக்க்க ஒலிபரப்பிகளால் நாற்பது நிமிடங்கள் செய்யப் பட்ட இத் தாக்குதலால் ஐ எஸ் போராளிகள் கலவரமடைந்ததாக பிரித்தானியப் படையினர் தெரிவித்தனர். ஐ எஸ் போராளிகளுக்கு எதிராக ஒரு தரை அல்லது வான்வெளித் தாக்குதல் செய்யப்படும் போது இப்படிப்பட்ட தொடர்பாடல் துண்டிப்புக்கள் அவர்களை திக்கு முக்காடச் செய்யும். 2011-ம் ஆண்டு பிரித்தானியா தந்து இணையவெளி படைவலுவை 650மில்லியன் பவுண்கள் செலவில் பல ஆயிரம் இணையவெளி வல்லுனர்களை படைத்துறையில் இணைத்து அதிகரித்துக் கொள்வதாக அறிவித்தது.

எதிர்காலப் போரில் முதலில் களமிறங்குவது இணைய வெளிப்படை.
இணையவெளியில் பல தாக்குதல்களும் திருட்டுக்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரிலும் 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் போரிலும் வான்படையினரே முதலில் தாக்குதல்களைத் தொடுத்தனர். இனி வரும் காலங்களில் நடக்கும் போரில் இணையவெளிப் படையினரே முதலில் செயற்படுவர். 2014-இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைக்க முன்னர் பல இணைய வெளித் தாக்குதல்களை உக்ரேன் மீது மேற்கொண்டது. பொய்பரப்புரை, படைத்துறை வழங்கல் முறைமைகளைச் செயலிழக்கச் செய்தல், உட்கட்டுமானங்களைப் பராமரிக்கும் கணனிகளைச் செயலிழக்கச் செய்தல் ஆகியவை இரசியாவால் செய்யப்பட்டதாகக் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப் பட்டன.

Tuesday, 31 May 2016

இரசியாவிற்கு எதிரான எரிவாயுப் போரும் அதன் படைக்கல உற்பத்தியும்

இரசியப் பொருளாதாரம் ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது, இன்னும் ஓராண்டுக்குள் இரசிய அரசு முறியலாம் எனச் சில பொருளியலாளர் எதிர்வு கூறுகின்றனர்.  இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு குறைந்து கொண்டே போகின்றது. அதன் பாதீட்டில் வரவிலும் பார்க்க செலவு அதிகரித்திருப்பதை தொடர்ந்து பேண முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. உக்ரேனிடம் இருந்து பிடுங்கிய கிறிமியாவைத் தக்க வைக்க பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இரசியாவின் பொருளாதாரம் இத்தாலியிலும் சிறியதாகி விட்டது. இப்படி இரசியாவிற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.  2011இல் இருந்து2015வரை இரசியப் படைக்கல ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இரசியப் பொருளாதாரத்தின் அச்சாணி
காஸ்புறம் (Gazprom)என்ற இரசிய நிறுவனம் உலகின் மிகப் பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவனமாகும்.  2015-ம் ஆண்டில் இருந்து உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததால் காஸ்புறம் (Gazprom) புதிய முதலீடுகள் செய்வதை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரிய நிறுவனமாக காஸ்புறம் (Gazprom) இருப்பதால் அதை முகாமை செய்வது கடினமாக இருக்கின்றது என்று சொல்லி அதைப் பல கூறுகளாகப் பிரித்து தனி நிறுவனங்களாக்கி தனித் தனியாக நிர்வகிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பலதரப்பில் இருந்தும் விடப்பட்டுள்ளது. இரசிய அரசுக்கு சொந்தமான காஸ்புறம் (Gazprom) இரசிய அரசின் பொருளாதார அச்சாணி மட்டுமல்ல உலகில் இரசியா முன்னெடுக்கும் புவிசார் அரசியல் நகர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 2015-ம் ஆண்டு அதன் இலாபம் 6விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. காஸ்புறம் (Gazprom) நிறுவனத்தின் பெறுமதி 2008-ம் ஆண்டில் இருந்ததுடன் ஒப்பிடுகையில் 86விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. 2016--ம் ஆண்டு காஸ்புறம் (Gazprom) நிறுவனத்தின் காசுக் கையிருப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டும் வகையில் அதன் இலாபம் மிகக் குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

படைக்கல வியாபாரம்
இரசியாவின் பொருளாதாரம் படைக்கலன்களின் உற்பத்தியில் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று சொல்லும் அளவிற்கு இரசியாவின் பொருளாதாரத்தில் அதன் பங்கு பெரிதாக உள்ளது.  இரசியாவிடமிருந்து இந்தியாவும் சீனாவும் பெருமளவு படைக்கலன்களை வாங்குகின்றன. இதன் மூலம் மலிவு விலையில் படைக்கலன்களை வாங்குவதோடு அவற்றின் தொழில்நுட்பத்தையும் வாங்குகின்றன. 2014-ம் ஆண்டில் இருந்து  உலகச் சந்தையில் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி அதிகரித்துச் செல்வதுடன் மேற்கு நாடுகளின் ஏற்றுமதி விழ்ச்சியடைகின்றது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இரசியா படைத் துறைத் தொழில் நுட்பத்தில் அதிக முதலீடு செய்தமை நல்ல பயன் அளிக்கின்றது. சிரியாவின் இரசியா தனது வழிகாட்டல் ஏவுகணைகளை பரீட்சித்துப் பார்த்ததுடன் உலக நாடுகளுக்கும் அதன் திறமையைப் பறைசாற்றியது. 2014-ம் ஆண்டு இரசியாவின் முன்னணி படைக்கல உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் 48.4 விழுக்காட்டால் உயர்ந்தது.  உலகப் படைக்கல விற்பனையில் இரசியா மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. அந்த விற்பனையில் இரசியாவின் பங்கு 10 விழுக்காட்டிற்கும் அதிகமானதாகும்.  இரசியா உருவாக்கிய விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகிலேயே சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் அவற்றை வாங்கியுள்ளன. வீழ்ச்சியடையும் எரிபொருள் விலையும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையும் இரசியாவின் நாணயமான ரூபிளின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்ததால் உலகச் சந்தையில் இரசியப்படைக்கலன்களை மலிவாக வாங்கக் கூடியதாக இருக்கின்றது. மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி அமெரிக்கா படைக்கலன்கள் விறபனை செய்ய மறுக்கும் நாடுகளுக்கு இரசியா படைக்கலன்களை விற்பனை செய்கின்றது. அவ்வகையில் சிரியா, பெலரஸ், அஜர்பைஜான், கஜக்ஸ்த்தான், உகண்டா, வெனிசுவேலா ஆகிய நாடுகளிற்கு இரசியா பெருமளவு படைக்கலன்களை விற்பனை செய்கின்றது.

திறனற்ற உற்பத்தி
இரசியாவில் திறனற்ற நிர்வாகத்தால் பல படைக்கல உற்பத்திகள் உரிய நேரத்தில் செய்ய முடியாமல் இருப்பதாக அமேரிக்காவின் வோல் ஸ்ரிட் ஜேணல் 2015 நவம்பரில் சுட்டிக் காட்டி இருந்தது.  நேட்டோ நாடுகளிற்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியா வடிவமைத்த ஆர்மட்டா(Armata) தாங்கிகளின் உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன் உற்பத்தியில் காலதாமதம் ஏற்பட்டதுடன் உற்பத்திச் செலவும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. விளடிமீர் புட்டீனின் 2020-ம் ஆண்டு இரசியாவின் படைத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டதில் ஆர்மட்டா(Armata) தாங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பால் இரசியா தாங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. யூரல்ஸ் மலைச்சாரலில் உள்ள நகர் ஒன்றில் இத் தாங்கிகளை உற்பத்தி செய்யும் Uralvagonzavod தொழிற்சாலை பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது உலகின் மிகப் பெரிய தாங்கி உற்பத்தி நிறுவனமாக இருந்த இந்தத் தொழிற்சாலைக்குக் கடன் கொடுத்தோர் அதன் மீது வழக்கும் தொடுத்துள்ளனர்.  இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான T-50 jet fighter இல் நூறு உற்பத்தி செய்வதாக முதலில் திட்டமிட்டிருந்தது. இப்போது அது பன்னிரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு இரசியக் கடற்படையில் அடுத்த தலைமுறை அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் (next-generation Borei nuclear submarines) எட்டை உற்பத்தி செய்து முடிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆறு மட்டுமே உற்பத்தி செய்து முடிக்கப்படும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இரசிய அரசின் செலவீனக் குறைப்பு நடவடிக்க்கையில்  படைத்துறையின் செலவுகள் குறைக்கப்பட மாட்டாது என விளடிமீர் புட்டீன் பகிரங்கமாக முழங்கிய போதும் இரகசியமாக பல செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க டொலரின் பெறுமதியில் இரசியப் படைத்துறைச் செலவு உலகின் மூன்றாவது பெரியது என்னும் நிலையில் இருந்து ஏழாவது என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கு ரூபிளின் பெறுமதி வீழ்ச்சியும் ஒரு காரணியாகும். இந்தியாவிற்கு இரசியா தயாரித்த விக்ரமாதித்தியா விமானம் தாங்கிக் கப்பலும் சீனாவிற்குத் தயாரித்த ஐ எல் 76 படைத்துறைப் போக்குவரத்து விமானமும் உரிய நேரத்தில் விநியோகிக்க இரசியாவால் முடியாமல் போனதிற்கு இரசியாவின் திறனற்ற உற்பத்தியே காரணமாகும்.

தமது சுதந்திரத்தைப் பற்றிக் கவலைப் படாத இரசியர்கள்.
உலகில் சுதந்திரமாகப் பொருளாதாரம் செயற்படக்கூடிய 178 நாடுகளைக் கொண்ட பட்டியலில் ஹொங்கொங் முதலாம் இடத்திலும் சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும் நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் இரசியா 153வது இடத்திலும் இருக்கின்றன.  இரசியாவில் எடுத்த கருத்துக் கணிப்பீட்டின் படி 51விழுக்காடு மக்கள் சமூக நலக் கொடுப்பனவுகளுக்கும் அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். 9 விழுக்காடு மக்கள் மட்டுமே பேச்சுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். 53 விழுக்காடு மக்கள் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துதல் முக்கியம் என நினைக்கின்றார்கள்.

இந்திய அமெரிக்கப் படைத்துறை ஒத்துழைப்பு
இந்தியாவும் அமெரிக்காவும் படைதுறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியா அமெரிக்காவிலும் பார்க்க அதிக தயக்கம் காட்டுகின்றது. இந்தியாவிற்கான இரசியப் படைத்துறை ஏற்றுமதி இரசியாவைப் பொறுத்த வரை ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். உலகில் அதிக அளவு படைத்துறைக் கொள்வனவு செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. 2009-ம் ஆண்டில் இருந்து 20013-ம் ஆண்டு வரை இந்தியப் படைத்துறையின் இறக்குமதியில் 75விழுக்காடு இரசியாவில் இருந்து சென்றது.  ஆனால் அதன் பின்னர் இந்தியாவிற்கு பற்பணி நடுத்தர தாக்குதல் போர் விமானங்கள் தேவைப் பட்ட போது அவற்றை பிரான்ஸில் இருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப் பட்டது. தொடர்ந்து இந்தியா இரசியாவின் ஐ எல்-76 விமானங்களை வாங்காமல் அமெரிக்காவின் ஹேர்குல்ஸ் போக்குவரத்து விமானங்களை (C-130J Super Hercules transport aircraft) வாங்கியது. மேலும் நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து வாங்கத் தீர்மானித்தது. 2014-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிக அமெரிக்கப் படைக்கலன்களை வாங்கும் நாடாக இந்தியா உருவெடுத்தது.  2020இற்கும் 2025இற்கும் இடையில் இந்தியா தனது படைத்துறைத் தேவையில் 75 விழுக்காட்டை தானே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இது இரசியப் படைத்துறை உற்பத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் முன்னணிப் போர் விமான உற்பத்தி நிறுவனங்களான Northrop Grumman, Boeing, Lockheed Martin Corp, Raytheon Company ஆகியவையும் சுவீடனின் Saab AB நிறுவனமும் இந்தியாவில் போர் விமான உற்பத்தி செய்வதில் அக்கறைக் காட்டுகின்றன. நரேந்திர மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக இணைவது என்ற போர்வையில் இந்தியாவிற்கு போர் விமானங்களை விற்பனை செய்வது இந்த நிறுவனங்களின் நோக்கம். 2016-ம் ஆண்டு மே மாதம் 11-ம் திகதி அமெரிக்கப் பாராளமன்றத்தில் இந்தியாவை மற்ற நோட்டோ நாடுகளிற்கும் இஸ்ரேலுக்கும் இணையான படைத்துறைப் பங்காளி நாடாக்கும் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிரியச் சிக்கலில் இரசியா
2016-ம் ஆண்டு மே மாதம் 14-ம் திகதி சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள T-4 என்னும் குறியீட்டுப் பெயருடைய இரசியப் படைத்தளம் மீது ஐ எஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். அதில் இரசியாவின் மிக்-25 போர் விமானம் சேதமடைந்தது. நான்கு எம்-ஐ-24 உலங்கு வானூர்திகள் எரிந்தன. 20 துருப்புக் காவி வண்டிகள் சேதமடைந்தன. களஞ்சியம் ஒன்று பாதிக்கப் பட்டது. இரசியா இவற்றை மறுத்து கட்டுக்கதை என்ற போதும் செய்மதிப் படங்கள் அதை உறுதி செய்கின்றன என்றது ஒரு பிரித்தானிய ஊடகம். இரசியாவிற்கு எதிரான கருத்துக்களை தயக்க மின்றித் தெரிவிக்கும் மேற்குல ஆய்வாளர்கள் சிரியா போன்ற சிக்கல்களில் இரசியாவை மாட்ட வைப்பதன் மூலம் அதன் பொருளாதார வீழ்ச்சிக்கும் புட்டீனின் ஆட்சி மாற்றத்திற்கும் வழிவகுக்கலாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சிரியாவை சோவியத்தின் ஆப்கானிஸ்த்தான் போல மாற்ற வேண்டும் என அவர்கள் கருத்து வெளியிடுகின்றனர். ஐ எஸ் அமைப்பின் முதலாம் எதிரியாக இரசியா மாறியுள்ளது என்ற கருத்தும் நிலவுகின்றது.

ஆசியான் நாடுகளும் இரசியாவும்
2016 மே மாதம் 19-ம் 20-ம் திகதிகளில் இரசியாவின் சொச்சி நகரில் இரசிய - ஆசியான் இடையிலான உச்சி மாநாடு நடைபெற்றது.    இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியன்மார், கம்போடியா ஆகிய நாடுகளைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்புடன் இரசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாகும். ஆசியான் நாடுகளுடனான இரசியாவின் வர்த்தகம் 2015-ம் ஆண்டு 13.7 பில்லியன் டொலர்கள் மட்டுமே. இதைப் பெருக்க இரசியா விரும்புகின்றது. இது அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்திற்கு சவாலாகும். வர்த்தகமும் பொருளாதாரமும் ஒரு புறம் இருக்க இரசியாவும் ஆசியான் நாடுகளும் தென்  சீனக் கடல் தொடர்பாக ஓர் ஒழுக்காற்றுக் கோவையை உருவாக்க ஒத்துக் கொண்டுள்ளன. அது இதுவரை காலமும் தென் சீனக் கடலில் சீனாவுடன் முரண்படும் நாடுகளுக்கு தானே இரட்சகன் என நினைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு ஓர் இடியாகும். முதலில் நேட்டோவுடன் இணைய முனைந்த ஜோர்ஜியா, உக்ரேன் ஆகிய இரசியாவின் அயல் நாடுகளை இரசியா துண்டாடியது. அடுத்து சிரிய அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கும் சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் கனவிற்கும் இரசியா முட்டுக்கட்டை போட்டது. இப்போது தென் சீனக் கடலில் இரசியா கால் பதிக்க முனைகின்றது.

இரு முனை எரிவாயுப் போர்
புட்டீனின் உலக ஆதிக்கக் கனவைத் தகர்க்க இரச்சியாமீது மேற்கு நாடுகள் பொருளாதாராத் தடைகளை விதித்தன. பின்னர் எரிபொருள் விலைகளைச் சரிய வைத்தன. இவை இரண்டும் புட்டீனின் சண்டித்தனத்தைக் குறைக்க வில்லை. இதனால் இரசியாவிற்கு எதிரான எரிவாயுப் போரை அமெரிக்காவும் மேற்கு நாடுக்களும் தொடுத்துள்ளன.  அந்தப் போர் இரு முனைகளில் தொடுக்கப் பட்டுள்ளன.  ஒன்று கஸ்ப்பியன் கடல் எரிவாயுவை மேற்கு ஐரோப்பாவிற்கு விநியோகிப்பது. . அடுத்தது அமெரிக்காவில் இருந்து திரவ எரிவாயுவை கப்பல்கள் மூலம் மேற்கு ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வது. கஸ்ப்பியன் கடற்பிராந்திய நாடான அஜர்பைஜானில் இருந்து துருக்கியூடாக இத்தாலிக்கு எரிவாயுவை குழாய் ஊடாக 45பில்லியன் டொலர்கள் பெறுமதியான விநியோகிக்கும் திட்டம் 2017-ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப் பட்டது. Trans-Adriatic Pipeline என அழைக்கப் படும் இத்திட்டம் 2020-ம் ஆண்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்கப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவைக்கு இரசியாவில் தங்கியிருப்பதை தவிர்ப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 2016 மே மாதம் 17-ம் திகதி பிரித்தானிய சஞ்சிகையான எக்கொனமிஸ்ற் இரசியாவின் எரிபொருள் நிறுவனமான காஸ்புறோமிற்கு வெட்டப் படும் பிரேதக் குழியாகும் என்ற தலைப்புடன் Trans-Adriatic Pipeline திட்டத்தைப் பற்றிய செய்தியை வெளிவிட்டது. ஐக்கிய அமெரிக்காவில் இருந்து திரவ எரிவாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகம் செய்வதன் மூலம் மேற்கு நாடுகள் இரசியாவில் இருந்து குழாயூடாக பெறும் எரிவாயுவிலும் பார்க்க  குறைந்த விலையில் மேற்கு ஐரோப்பியர்கள் வாங்க முடியும். அத்துடன் இரசியாவின் எரிபொருள் இன்றி மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மூன்றில் இரண்டு பகுதி வீடுகளில் அடுப்பு எரியாது மக்கள் குளிரில் நடுங்குவார்கள் என்ற நிலை மாற்றப்படும். ஒரு நீண்ட கால அடிப்படையில் ஐரோப்பாவில் இரசியாவின் எரிபொருள் மேலாதிக்கத்தை ஒழித்துக் கட்ட  சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பையும், கஸ்பியன் கடற்பிராந்தியத்தில் இருந்தும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் மேற்கு ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வதையும் சமாளிக்க இரசியா தனது எரிபொருள் உற்பத்தியின் திறனை அதிகரிக்க வேண்டும். 

விளடிமீர் புட்டீனின் இரசியாவை மீண்டும் உலக அரங்கில் முன்னிலைப் படுத்தும் கனவின் முக்கிய அம்சம்  2020-ம் ஆண்டளவில் இரசியாவின் படைத்துறையை நவீன மயப்படுத்துவதாகும். நவீன மயப் படுத்தப் பட்ட படைத்துறையைப் பேணுவதற்கு உகந்தவகையில் இரசியாவின்  பொருளாதாரமும் வலுவான நிலையில் இருத்தல் அவசியம் அல்லது சோவியத் ஒன்றியத்திற்கு நடந்தது இரசியாவிற்கும் நடக்கும்

Monday, 23 May 2016

வல்லரசுகள் இடையிலான வான் மேலாதிக்கப் போட்டி

வான் மேலாதிக்கம் போர்களை வெல்லும் என்பதை எல்லாப் படைத்துறை நிபுணர்களும் ஏற்றுக் கொள்ளாத போதிலும் அது போர் தோல்வியைத் தடுக்கும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்கா எந்த ஒரு போரையும் வான் மேலாதிக்கம் இன்றி வெற்றி கொள்ளவில்லை. அரை நூற்றாண்டு காலமாக ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் வான் மேலாத்திக்கப் போட்டியில் ஈடுபட்டிருனது. 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா கால் நூற்றாண்டு காலம் வான் மேலாதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அந்த மேலாதிக்கம் குறைந்து வருகின்றது. இந்தக் குறைவு அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை இழப்பதில் போய் முடியுமா?

வான் மேலாதிக்க வரலாறு
1911-ம் ஆண்டு இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் நடந்த போரில் விமானத்தில் சென்று குண்டு வீசுவது ஆரம்பித்தது. 1939-ம் ஆண்டு போலந்தின் விமானப் படையை அழித்த பின்னர் ஜேர்மனிய விமானப் படையினர் போலந்தின் தரைப்படையினர் மீது தாக்குதல் தொடுத்து ஜேர்மனியத் தரைப் படையினர் இலகுவாக போலாந்தை ஆக்கிரமிக்க முடிந்தது. இதே வழியில் ஜேர்மனி பிரான்சையும் கைப்பற்றியது. இரசியாவை விமான மேலாண்மையால் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கைப்பற்றிய ஜேர்மனியப் படைகள் மீது பனி பொழியும் காலத்தில் இரசியப் படைகள் தாக்குதல் செய்யும் போது ஜேர்மனியத் தரைப் படைகளுக்கு உதவியாக விமானப் படையினர் செல்ல காலநிலை உகந்ததாக இருக்கவில்லை. 1950இல் கொரியப் போரில் முதற்தடவையாக வானில் இருந்து போர் விமானங்கள் மோதிக் கொண்டன. 1967இல் சிரியாவிடமிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் முதலில் அழித்தது. பின்னர்ம்எகிப்தினதும் சிரியாவினதும் விமானப் படைகளை இஸ்ரேல் துவம்சம் செய்து அரபு-இஸ்ரேலியப் போரில் பெரு வெற்றி ஈட்டியதுடன் பெரும் நிலப்பரப்பையும் கைப்பற்றிக் கொண்டது. அரபு இஸ்ரேலியப் போரில் அமெரிக்கா, பிரான்ஸ், இரசியா ஆகிய நாடுகளின் போர்விமானங்கள் பரீட்சிக்கப் பட்டன. பங்களா தேசப் போரின் போது இந்தியா பாக்கிஸ்த்தானிய விமானப் படையை செயலிழக்க வைத்தது.
போர் விமான வகைகள்
வானில் வைத்து எதிரி விமானங்களுடன் சண்டை செய்யும் விமானங்கள் சண்டை விமானங்கள் .
எதிரி இலக்குகள் மீது குண்டு வீசுபவை குண்டு வீச்சு விமானங்கள்.
எதிரிகளின் படையினர் மீது தாக்குதல் செய்பவை தாக்குதல் விமானங்கள்.
 எதிரியை உளவு பார்ப்பவை வேவு விமானங்கள்
எதிரியின் நடமாட்டங்களை பார்த்துத் தகவல் வழங்குபவை கண்காணிப்பு விமானங்கள்.
எதிரியின் கணனிகளை ஊடுருவிச் செல்லும் கணனிகளைக் கொண்டவை இலத்திரனியல் போர்விமானங்கள் .
மேற்கூறிய செயற்பாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களைச் செய்யக் கூடியவை பற்பணி விமானங்கள்.
ஆளில்லாப் போர் விமாங்களைப் பல நாடுகள் உற்பத்தி செய்கின்றன. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பரவலாக் ஆளில்லாப் போர் விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்கா இத்துறையில் பெரும் அனுபவத்தைப் பெற்றுள்ளது.

இரசியாவிற்கான நட்பின் பரிசு
இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரித்தானியா இரசியாவிற்கு போரில் இணைந்து செயற்பட்ட நாடு என்ற வகையில் இரசியாவிற்கு Rolls-Royce Nene centrifugal-flow jet engine என்னும் விமான இயந்திரங்களை வழங்கியது. இதில் இருந்து தரமான விமானங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை இரசியா வளர்த்துக் கொண்டது. 1979இல் ஈரானின் மன்னர் ஷாவின் வீழ்ச்சிப் பின்னர் ஈரானிடமிருந்த அமெரிக்கப் போர்விமானங்களில் உள்ள தொழில் நுட்பங்களை இரசியா பெற்றுக் கொண்டது. கொரியப் போரில் அமெரிக்காவின் F-86 போர் விமானம் வட கொரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்டு அதன் தொழில்நுட்பம் இரசியாவால் பெற்றுக் கொள்ளப்பட்டது.  வியட்னாம் போரின் போது  ஐக்கிய  அமெரிக்காவின் 250இற்கு மேற்பட்டா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய இரசியாவின் S-75A Dvina என்னும் சாம் ஏவுகணைகளை இரசியா இப்போது மிகவும் மேம்படுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கும் அவற்றை விற்றுள்ளது.

ரடார்களும் ரடார்களுக்கு புலப்படாத் தன்மையும்
வான் மேலாதிக்கப் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பது விமானங்களை இனம் காணும் ரடார்களும் அவற்றிற்குப் புலப்படாமல் இருக்கும் Stealth தொழில்நுட்பத்திற்கும் இடையிலான போட்டியே.  1970களில் எண்மியப் படுத்தப்பட்ட(Digital) ரடார்களை இரசியா உருவாக்கியது. இதனால் 1970களில் இரசிய விமான எதிர்ப்பு முறைமைகளுக்கும் ரடார்களுக்கும் புலப்படாத விமானம் அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டது. அது தொலைதூரம் பறக்கக் கூடியதாகவும் அதிக அளவு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு போர் விமானத்தை உருவாக்கும் ஒப்பந்தம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரால் தெரிந்தெடுக்கப்பட்ட சில விமான உற்பத்தியாளர்களுக்கு மிகவும் இரகசியமாக வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட விமானத்தை முதலில் உருவாக்குவதில் முதலில் வெற்றி கண்டது Northdrop நிறுவனம். 1988-ம் ஆண்டு B-2 போர்விமானம் உருவாக்கப் பட்டது. 172 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது B-2 போர்விமானம். இதன் 80 விழுக்காடு அல்மினியத்திலும் பாரம் குறைந்ததாகவும் உருக்கிலும் பார்க்க உறுதியானதுமான கரி இழைகளால் உருவாக்கப்பட்டது. ஆறாயிரம் மைல்கள் எரிபொருள் மீள் நிரப்புச் செய்யாமல் தொடர்ந்து பறக்கக் கூடியதாகவும் 40,000 இறாத்தல் எடையுள்ள அணுக்குண்டு உட்படப் பலதரப்பட்ட படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக் கூடியதாகவும் B-2 போர்விமானம் உருவாக்கப்பட்டது. எதிரியின் ரடார்களில் இருந்து வரும் ஒலி அலைகளை உறிஞ்சக் கூடிய radar-absorbent material (RAM) பூச்சு இதன் மேற்பரப்பில் பூசப்பட்டிருக்கும். மிகவும் அழுத்தமானதாகும் அழகிய வளைவுகளைக் கொண்டதாகவும் இதன் மேற்பரப்பு வடிவமைக்கப் பட்டது. அத்துடன் எதிரியின் ரடாரில் இருந்து வரும் அலைகளைக் குழப்பும் இலத்திரனியல் கருவிகளும் B-2இல் உள்ளடக்கப் பட்டிருந்தன. ஒரு B-2 இன் உற்பத்திச் செலவு இரண்டு பில்லியன்களாகும். 1990களில் B-2 பாவனைக்கு வந்த போது சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது. இதனால் B-2 விமான உற்பத்தி குறைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புத்துறை 16 ஆண்டுகளாக 396பில்லியன் டொலர்கள் செலவு செய்து F-25 போர் விமானங்களை உருவாக்கியது. இது நன்கு பாதுகாக்கப்பட்ட வான்பரப்பினூடாக எந்த ரடார்களுக்கும் புலப்படாத வகையில் பறந்து செல்லக் கூடியதாக அமைந்தது. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் புலப்படாத் தொழில் நுட்பம் (stealth technology) அவர்களது வான் மேலாதிக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது. கடந்த முப்பது ஆண்டுகளாக விமானாங்களை புலப்படாமற் பண்ணும் தொழில்நுட்பங்களிற்கும் அத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்களை எப்படிக் கண்டு பிடிப்பது என்ற தொழில்நுட்பங்களிற்கும் இடையில் மிக உக்கிரமான போட்டி நடந்து கொண்டிருக்கின்றது. 1980களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் இரசியாவும் புலப்படாத் தொழில் நுட்பத்தை (stealth technology) உருவாக்கி விட்டது. 1999-ம் ஆண்டு கோசோவா போரின் போது அமெரிக்காவின் F-117 விமானம் செக் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விழுந்த விமானத்தின் விமானியை நேட்டோப் படையினரின் உலங்கு வானூர்திகள் மீட்ட போதிலும் அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை சீனாவும் இரசியாவும் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொண்டனர்.  அதிலிருந்து சீனா புலப்படாத் தொழில் நுட்பத்தை உருவாக்கியது.
சிறந்த 10 போர் விமானங்கள்
இலத்திரனியல்
1960களில் விமானங்களை அவற்றின் வெப்பத்தில் இருந்து இனம் காண்பதற்கு  infrared உணரிகள் உருவாக்கப்பட்டன. ஒளியில் உள்ள ஏழு நிறங்களில் ஒன்றான் சிவப்பின் அலைவரிசையிலும் அதிகமானதாகவும் microwavesஇன் அலைவரிசைகளிலும் குறைவானதாகவும் உள்ள அலைவரிசையை infrared அலைவரிசை என்பர். விமானங்களின் வெப்பத்தில் இருந்து வரும் கதிர்வீச்சின் infrared அலைவரிசையைக் கொண்டு  விமானத்தை இனம் காணும் முறைமையை  infra-red search and track (IRST)  என அழைப்பர். இவை மேம்படுத்தப் பட்டு 1980களில் வெப்பத் தேடிச்செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. விமானத்தில் இருந்து வெளிவரும் அதிலும் முக்கியமாக விமானத்தில் உள்ள கணனித் தொகுதிகளில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளை வைத்து விமானத்தை இனம்காண Electro Magnetic Snooper உருவாக்கப்பட்டன.
தானியங்கி விமான எதிர்ப்பு முறைமை
அமெரிக்காவின் போர் விமானங்களை இனம் கண்டு அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி அவற்றை அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகளுக்கு விற்பனை செய்வது இரசியாவின் புவிசார் அரசியலுக்கு அவசியமான ஒன்றாகியது. இரசியா தான் உருவாக்கிய விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை சீனாவிற்கு விற்பனை செய்கின்றது. இரசியா சீனாவிற்கு விற்பனை செய்த S-300PMU-2 என்னும் நடமாடும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரேயடியாக நூறு இலக்குகளை இனம் காணக் கூடியது. . F-35ஐ உற்பத்தி செய்த லொக்கீட் மார்ட்டின் நிறுவனம் F-35ஐ இனம் காணவரும் எல்லாவற்றையும் அது குழப்பிவிடும் என மார்தட்டியது. ஆனால் இரசியாவின் எஸ்-400 விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை அதை உலுப்பி விட்டது. அமெரிக்கா உருவாக்கும் F-35 Lightning I விமானங்களில் அது காவிச் செல்லும் படைக்கலன்களை வெளியில் பொருத்தாமல் விமானத்தினுள் பொருத்தப்பட்டிருக்கும். இது ரடார்களைத் தவிர்க்கும் ஒரு உத்தியாகும். ஆனால் இதற்கு முந்திய விமானங்களிலும் பார்க்க இந்த விமானத்தை இலகுவில் இனம் காண முடியும் என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். ஆனால் F-35இல் பொருத்தப் பட்டிருக்கும் Active Electronically Scanned Array (AESA) என்னும் ரடார் எதிரி விமானங்களையும் இலக்குகளையும் இலகுவில் இனம் காணக் கூடியது.
அமெரிக்காவின் அதிரடியான B-21
அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த B-21 போர்விமான உற்பத்தி 2015-ம் ஆண்டு Northrop Grumman நிறுவனத்திடம் ஓப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் வலுவை உலகமயப்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஐம்பது ஆண்டுக்கான கேந்திரோபாய முதலீடாகவும் B-21 நீள் தூரத் தாக்குதல் குண்டுவீச்சு விமானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர்.  B-21இன் பின்புறம் W வடிவத்திலும் இறக்கைகள் 33 பாகைகள் சரிவானதாகவும் இருக்கும். Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரண்மாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்ட்தன்மை, , சிறந்தswept-wing fighter பொறிமுறை, பல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை  உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன.
விமானத் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அம்சம் ஒரு விமானம் எவ்வளவு தொலைவில் வைத்து எதிரி விமானங்களை இனம் காணும் என்பதாகும். எதிரி விமானம் தன்னை இனம் காணமுன்னர் எதிரிவிமானத்தை இனம் காண்டு கொண்டால் எதிரியை முந்திக் கொண்டே அதை நோக்கித் தாக்குதலைத் தொடுக்கலாம். அமெரிக்காவிடம் இந்த துரித இனம்காணும் தொழில்நுட்பம் இரசியாவிலும் பார்க்கவும் சீனாவிலும் பார்க்கவும் சிறந்தவையாக இருக்கின்றது. இரசியாவின் SU-35 விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களை இனம் காணுவதற்கு நூறு மைல்களுக்கு முன்னதாகவே F-35 விமானங்கள் அவற்றை இனம் கண்டுவிடும்.
அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன. 

குமையி
வான் மேலாதிக்கத்தின் முக்கிய அம்சமாக ஜாமிங் எனப்படும் குமையியை அமெரிக்காஅ உருவாக்குகின்றது. அமெரிக்க வான் படையினரும் Raytheon என்னும் தொழில் நுட்ப நிறுவனமும் இணைந்து இலத்திரனியல் போர் முறையின் முக்கிய அம்சமாக அடுத்த தலைமுறை  குமையியை (next generation jammer) உருவாக்குவதற்கான முதற்படி வடிவமைப்பு வேலைகளை வெற்றிகரமாக முடித்துள்ளன. இது ஒரு  வான்வழி இலத்திரனியம் தாக்குதல் முறைமையாகும் ( airborne electronic attack system). இரு வகையான குமையிகள் உள்ளன. முதலாவது பொறிமுறைக் குமையிகள்(mehcanical jammers) இரண்டாவது இலத்திரனியல் குமையிகள் (elctronic jammers). பொறிமுறைக் குமையிகள் எதிரியின் ரடார்களைப் பிழையான வகையில் செயற்படச் செய்யும். இலத்திரனியற் குமையிகள் எதிரியின் ராடர்களுக்குச் செறிவான வலுமிக்க சமிக்ஞைகளை அனுப்பி அவற்றைச் செயலிழக்கச் செய்யும். அடுத்த தலைமுறை இலத்திரனிய்ற் குமையிகள் எதிரி விமானங்களுக்கு ஒரு போலியான விமானத்தை உணரவைக்கும்.

சீனா
கடந்த 30 ஆண்டுகளாக சீனா போர் விமானங்களைத் தயாரித்து வருகின்ற போதிலும் விமான இயந்திரத் தொழில்நுட்பத்தில் மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா பின் தங்கியே இருக்கின்றது. சீனாவின் J-22 மற்றும் J-31ஆகிய போர் விமானங்களின் பறப்பு வேகம் அமெரிக்காவின் F-22, F-35 ஆகியவற்றின் பறப்பு வேகத்திலும் பார்க்கக் குறைந்ததே.  சூ பின் என்ற சீனர் அமெரிக்காவின் போர்விமான உற்பத்தி இரகசியங்களை இணையவெளியூடாகத் திருடிய குற்றத்தை 2016 மார்ச் மாதம் ஒத்துக் கொண்டது சீனா தனது படைத்துறை இரகசியங்களைத் திருடுவதாக அமெரிக்கா தொடர்ந்து வைத்த குற்றச் சாட்டை உறுதி செய்தது. சீனாவின் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட புலப்படாத் தொழில்நுட்பத்துடன் கூடிய J-20 போர் விமானங்கள் அமெரிக்காவின் F-22 ரப்டர் விமானங்களையும் சீனாவின் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட பல பணிகள் செய்யக் கூடிய  J-31 போர் விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களையும் ஒத்தனவாக இருப்பதற்குக் காரணம் சீனா இணையவெளி மூலம் ஊடுருவி அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான லொக்கீட் மார்ட்டினின் போர் விமானங்களின் தொழில்நுட்பத்தைத் திடுடியமையே எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.  சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் உருவாக்கப் பட்ட மிக்-29 போர் விமானங்களின் எஞ்சின்களே. சீனா இரசியாவின் SU-35 என்னும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இருபத்தி நான்கை வாங்கும் ஒப்பந்தத்தை 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்திட்டது. இது சீன விமானப் படைக்கும் அமெரிக்க விமானப் படைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது. ஆனால் சீனா விமான உருவாக்கற் தொழில்நுட்பத்தை அதிலும் எஞ்சின்கள் உருவாக்கும் வல்லமையை எப்படியாவது வளர்த்திட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனை கொண்டுள்ளது. இரசியாவிடமிருந்து சீனா வாங்கிய SU-27 விமானங்களில் உள்ள தொழில்நுட்பத்தை reverse engineering முறையில் பிரதி பண்ணி சீனா தனது J-11-D போர் விமானங்களை உருவாக்கியதாக் இரசிய ஊடகமான ஸ்புட்நிக் குற்றம் சாட்டியிருந்தது. இரசியாவின் SU-35ஐ சீனா வாங்க முற்பட்ட போது இரசியா மறுத்துவிட்டது.

வான் மேலாதிக்கப் போட்டி முடிவின்றித் தொடரும்
அமெரிக்காவிற்கும் மற்ற வல்லரசு நாடுகளிற்கும் இடையிலான போர்விமானத் தொழில்நுட்ப இடைவெளி குறைந்து வருவதை அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்க விமானங்களில் லேசர் தொழில்நுட்பவும் மைக்குரோவேவ் தொழில் நுடபமும் இணைக்கப்படும் போது அவற்றின் வான் ஆதிக்கம் மிகவும் வலுவடையும். இரசியா தனது எஸ்-400 விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை மேம்படுத்தி எஸ்-500ஐ உருவாக்கி வருகின்றது. ஐக்கிய அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை உருவாக்கி வருகின்றது. இரசியா தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளித்தால் அது அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்திற்கு தொடர்ந்து சவால் விடுவது மட்டுமல்ல இணையாகவும் உருவெடுக்க முடியும். 2014-ம் ஆண்டு இரசியா தனது 6-ம் தலைமுறைப் போர்விமான உருவாக்கத்தை அறிவித்தது.  விமானத்தின் உடல் எடையில் இரசியா அதிக கவனம் செலுத்துகின்றது. குறைந்த எடையில் நீண்டகாலம் பாவிக்கக் கூடிய வகையில் உலோகக் கலவையை அது உருவாக்குகின்றது. காற்றில்லாத வானவெளியிலும் பறக்கக்கூடியதாக இரசியாவின் 6-ம் தலைமுறைப் போர் விமானங்கள் அமையவிருக்கின்றன. இவையும் சிறப்பான இலத்திரனியல் தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும். முழுமையான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து இணைய வெளியின் ஊடாக ஊடுருவி தகவல்களைப் பெறுவதை அமெரிக்காவால் தற்போது தடுக்கமுடியாமல் இருக்கின்றது. சீனாவிற்கு அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்தைச் சமாளிக்க இரசியாவின் தொழில் நுட்பம் தற்போது தேவைப்பட்டாலும் அதனால் நீண்டகால அடிப்படையில் முன்னணி வகிக்க முடியும். பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தமது வான் மேலாதிக்கத்தை தக்கவைக்க முடியும். அடுத்த 25 ஆண்டுகளும் வல்லரசு நாடுகள் வான் மேலாதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தும்.

Monday, 16 May 2016

வட போச்சே நிலையில் வட கொரியா


சீனப் பொதுவுடமைக் கட்சி தனது பேரவைக் கூட்டத்தை (கொங்கிரஸ்)  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாது நடத்துவது போல் வட கொரியாவின் ஒரே ஒரு கட்சியான தொழிலாளர்களின் கட்சி தனது பேரவைக் கூட்டத்தை நடத்துவது இல்லை. வட கொரியாவின் பொதுவுடமைக் கட்சி 1946-ம் ஆண்டில் இருந்து சோவியத் ஒன்றியப் பொதுவுடமைக் கட்சியின் ஒரு கிளை போல இருந்தது. 1966-ம் ஆண்டு மிகவும் இரகசியமாக நடந்த் கூட்டம் ஒன்றில் கொரியப் பொதுவுடமைக் கட்சி தனித்து இயங்கும் முடிவு எடுக்கப்பட்டது.  அத்துடன் அப்போதைய கொரியத் தலைவர் கிம் உல் சுங் தன்னை அதிகம் முன்னிலைப்படுத்தி காரியங்களை ஆற்றத் தொடங்கினார். வட கொரியாவில் பொதுவுடமைக் கட்சியான கொரியத் தொழிலாளர்கள் கட்சியும் படைத்துறையுமே இரு பெரும் அதிகார மையங்களாகும்.
 
கொரியப் போர்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நேரடியாக மோதிக் கொண்டது 1950-ம் ஆண்டில் இருந்து 1953-ம் ஆண்டுவரை நடந்த கொரியப் போரிலாகும்.  முதன் முறையாக நாய்ச் சண்டை எனப்படும் போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டைகள்  கொரியப் போரில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்தன. கொரியப் போரில் சீனாவும் பங்கு கொண்டிருந்தது. ஜப்பானும் கொரியப் போரில் அதிக அக்கறை காட்டியது. கொரியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றபடியால் இரண்டாம் உலகப் போரால் களைத்துப் போயிருந்த நாடுகள் கூட கொரியப் போரில் அதிக அக்கறை காட்டின.  வட கொரியா தென் கொரியப் போர் கொரியாவை ஆக்கிரமித்து முழுமையாக கைப்பற்ற  இருந்த நிலையில் உருவானது. மூன்று ஆண்டுகள் கழித்து    வட கொரியா தென் கொரியாவை விட்டு வெளியேறியது. கொரியப் போர் முடிந்த பின்னரும் வட கொரியா தென் கொரியாவை தன்னுடன் மீண்டும் இணைக்கும் ஆர்வத்துடன் இருக்கின்றது.
 
மூன்று தலைமுறை
கொரியாவை மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் ஆண்டு வருகின்றது எனச் சொல்லும் அளவிற்கு கிம் உல் சூங் முதலிலும் பின்னர் அவரது மகன் கிம் ஜொங் இல்லும் அவரைத் தொடர்ந்து அவர மகன் கிம் உல் ஜொங்கும் வடகொரியாவில் அதிகாரத்தில் இருந்து வருகின்றனர். முதலாமவரான கிம் உல் சூங் கட்சியில் அதிக கவனம் செலுத்தினார். சிறந்த பேச்சாளரான இவர் மக்கள் முன் தோன்றி சிறப்பாக உரையாற்றக் கூடியவர். ஆனால் இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த மகன் கிம் ஜொங் படைத்துறையில் அதிக கவனம் செலுத்தினார். வட கொரியாவில் ஒரு அணுக் குண்டு உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதனால் வட கொரியா தனது முதலாவது அணுக்குண்டு வெடிப்புச் சோதனையில் 2006-ம் ஆண்டு வெற்றி கண்டது.  இரண்டாம் கிம் ஜொங் இல் பொது இடங்களில் உரையாற்றுவது குறைவு. ஆனால் மூன்றாம் கிம் உல் ஜொங் தனது தந்தையைப் போல் அல்லாமல் பேரனைப் போல் பொதுத் தொடர்பில் அதிக அக்கறை காட்டியதுடன் வட கொரியாவின் படை வலுவை முன்னேற்றுவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றார்.
 
வட - தென் கொரிய முறுகலின் பின்னணி
1910இல் இருந்து 1945வரை ஜப்பானிய அட்டூழிய ஆட்சிக்குக் கீழ் இருந்த கொரியாவை ஜப்பானிடம் இருந்து அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பிடுங்கிப் பங்கு போட்டுக் கொண்டன. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்தன. 1950இல் அமெரிக்காவிற்காகவும் சோவியத்திற்காகவும் இரு கொரியாக்களும் பலமாக மோதிக் கொண்டன. இருபது இலட்சம் பேர் பலியாகினர். 1953-ல் போர் முடிவுக்கு வந்தது. பின்னர் இரு நாட்டுக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் நிலை இருந்து வருகிறது. தென் கொரியா பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி கண்டு ஆசியாவில் உள்ள அபிவிருத்தி அடைந்த இரண்டு நாடுகளில்( மற்றது ஜப்பான்) ஒன்றாகத் திகழ்கிறது. இரு கொரியாக்களும் ஒன்றை ஒன்று பெரும் பகையாளிகளாகக் கருதுகின்றன. மோசமான பொருளாதரத்தைக் கொண்ட வட கொரியா தனது படை வலிமையை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. நீண்ட தூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. தென் கொரியா அமெரிக்காவிடமிருந்து பெருமளவு படைக்கலனகளை வாங்கி வைத்திருப்பதுடன் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுகிறது. தென் கொரியாவில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. 1953இன் பின்னர் மிகவும் கொதி நிலையில் இருக்கும் எல்லையாக  வட-தென் கொரிய எல்லை இருந்து வருகிறது. வட கொரியா தனது நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தனது படைபலப் பெருக்கத்தால் மறைத்து வருகிறது எனப்படுகிறது. இப்படிப் போட்டியுள்ள இரு நாடுகளில் ஒன்று அணுக் குண்டு வெடிப்புப் பரிசோதனைகளையும் நடுத்தூர மற்றும் தொலை தூர ஏவுகணைகளைப் பரிசோதனை செய்வதும் உலகை உலுக்கியுள்ளது. வட கொரியாவின் அணுக்குண்டு தயாரிப்பைத் தொடர்ந்து அதன் மீது அமெரிக்காவும் தென் கொரியாவும் பொருளாதாரத் தடையை விதித்தன. இது வட கொரியாவை மேலும் ஆத்திரப்படுத்தியது.
 
 
வட கொரிய அணுக்குண்டு வரலாறு
1961இல் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் வட கொரியா தனது அணுத் தொழில் நுட்பத்தை தொடக்கியது. 1961இல் அணுமின் உலையை வட கொரியா உருவாக்கியது. 1985இல் மேலும் அதை அபிவிருத்தி செய்தது. வட கொரியாவின் அணுத் தொழில் நுட்பத்தை விரும்பாத அமெரிக்காவும் தென் கொரியாவும் 1994இல் வட கொரியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி இரு மென்னீர் அணு உலைகளை அமைத்துக் கொடுத்தன. பின்னர் 1991இல் வட கொரியா பாக்கிஸ்த்தானிய அணு விஞ்ஞானி A Q கானிடமிருந்து யூரேனியம் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. 1998இல் ஏவுகணைத்தொழில் நுட்பத்தையும் விண்வெளிக்கு செய்மதி அனுப்பும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது. 2002இல் வட கொரியா அமெரிக்காவுடனும் தென் கொரியாவுடனும் 1994இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி அணுக் குண்டுகளை உருவாக்க ஆராய்ச்சிகள் செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.  2003இல் வட கொரியா பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. 2006 வட கொரியா தனது முதலாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து அறுவர் குழுப் பேச்சுவார்த்தை எனப்படும்  அமெரிக்கா, சீனா, தென் கொரியா, இரசியா யப்பான் ஆகிய நாடுகளுடன் வட கொரியா ஒரு அணுக்குண்டு தொடர்பான பேச்சு வார்த்தையை மேற்கொண்டது. 2007வரை தொடர்ந்த இந்தப் பேச்சு வார்த்தை இறுதியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்துவதாகவும் பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் மீளிணைவதாகவும் அறிவித்தது. பதிலாக வட கொரியாவிற்கு நிதி உதவி செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து 2008இல் வட கொரிய தனது அணு உலை ஒன்றை மூடியது. 2009இல் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கிய வட கொரியா அறுவர் குழுப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது. 2009 ஜூனில் வட கொரியா தனது இரண்டாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் பல வட கொரியர்கள் வறுமையால் வாடினார்கள். இதைத் தொடர்ந்து 2012 பெப்ரவரியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி அமெரிக்காவில் இருந்து உணவைப் பெற்றுக் கொன்டது. 2012 டிசம்பரில் வட கொரியா தனது பலதட்டு ஏவுகணையை விண்ணில் செலுத்த முயன்றது. அது இரண்டு நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. 2013 மார்ச்சில் வட கொரியா தனது மூன்றாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து வட கொரியாவிற்கு எதிரான புதிய தடைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் நிறைவேற்றப்பட்டது. வட கொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தென் கொரியாவில் தனது படைபலத்தை அதிகரித்து வருகிறது.  அமெரிக்கா தனது படை நகர்த்தல்கள் எதையும் இரகசியமாகச் செய்யவில்லை. வட தென் கொரிய முறுகல் நிலை ஒரு புறம் கிழக்குச் சீனக் கடலில் சீன ஜப்பான் முறுகல் மறுபுறம் என யப்பானியக் கடலும் மஞ்சள் கடலும் கொதி நிலையில் இருக்கையில் ஒரு தவறான படை நடவடிக்கை பெரும் மோதலை உருவாக்காமல் இருக்கவே ஐக்கிய அமெரிக்கா தனது தென் கொரியாவைப் பாதுகாக்கும் படை நகர்த்தல்களைப் பகிரங்கமாகச் செய்து வருகிறது. அமெரிக்காவின் நவீனரக விமானங்கள் தனகு கிழக்குக் கொல்லைப் புறத்தில் நடமாடுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் வட கொரியா ஒரு அணுக்குண்டு நாடாக மாறுவதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது. வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சீனா தடுக்காமல் இருப்பது பல படைத்துறை வல்லுனர்களை ஆச்சரியதில் ஆழ்த்தியுள்ளது.
 
கட்சியில் தனது பிடியை இறுக்கிய கிம் உல் ஜொங்
பொதுவுடமை நாடுகளில் பாராளமன்றத்திலும் பார்க்க கட்சியின் பேரவை அதிக அதிகாரங்களைக் கொண்டது. ஆனால் வட கொரியாவில் அதன் அதிபர் கிம் உல் ஜொங் உச்ச அதிகாரங்களைக் கொண்டவராகத் திகழ்கின்றார். கடந்த 36 ஆண்டுகளாக நடக்காத கொரியத் தொழிலாளர்கள் கட்சியின் பேரவைக் கூட்டம் 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ம் திகதி தொடங்கி நடந்தது.  பொதுவாக பொதுவுடமை ஆட்சி நாடுகளில் பேரவைக் கூட்டத்தில் புரட்சிகர மாற்றங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் 2016 மே மாதம் தொடங்கிய வட கொரிய தொழிலாளர்களின் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் பாரிய முடிவுகள் எடுக்கப் படும் என எதிர்பார்க்கப் பட்டது. உலகிலேயே அதிக அளவு அரசுத் தலையீடு உள்ள பொருளாதாரமானமாக வட கெரியா இருக்கின்றது. வியட்னாமிலும் சீனாவிலும் நடந்தது போன்ற பொருளாதாரச் சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்படும் என பெரிதும் நம்பப்பட்டது. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிவித்த சோவியத் ஒன்றியத்திற்கும் அதன் அதிபர் கோர்பச்சோவிற்கும் என்ன நடந்தது என்பதைப் பற்றி கிம் உல் ஜொங் நன்கறிவார். ஏற்கனவே படைத் துறையில் தனது பிடியை இறுக்கிக் கொண்ட கிம் உல் ஜொங் கட்சியிலும் தனதி பிடியை வலுப்படுத்த பேரவைக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.  அத்துடன் வட கொரியா படைத்துறையில் அடைந்து கொண்டிருக்கும் முன்னேற்றத்தைப் பறைசாற்ற பேரவைக் கூட்டம் பயன் படுத்தப்பட்டது.  ஆனால் கூட்டத்தின் முக்கிய அம்சமாக ஒரு ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப் பட்டது. அதன்படி வட கொரியாவின் பொருளாதாரத்தையும் படைத்துறையையும் ஒன்றாக அபிவிருத்தி செய்வதாக முடிவு செய்யப்பட்டது
 
சீனாவின் கவசம்
.கொரியத் தீபகற்பம் வட கொரியாவையும் தென் கொரியாவையும் கொண்டது. வட கொரியா சீனாவுடன் எல்லையைக் கொண்டது. இந்த எல்லை கொரியத் தீபகற்பத்தின் வட மேற்குப் பகுதியாகும். கொரியத் தீபகற்பத்தின் வடக்கில் ஜப்பானியக் கடலும். தெற்கில் மஞ்சள் கடலும் தென் கிழக்கில் கொரிய நீரிணையும் இருக்கின்றன. ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா இரசியா ஆகியவற்றிடமிருந்து தனித்தனியாகவும் கூட்டாகவும் சீனாவிற்கு வரக் கூடிய அச்சுறுத்தல்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக வட கொரியா இருக்கின்றது. இந்தக் கவசத்தை இழக்க சீனா தயாராக இல்லை. இதனால் சீனா வட கொரியா ஒரு பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்க உதவிக் கொண்டே இருக்கின்றது.
 
ஒலிபெருக்கிகளூடான பரப்புரை
வட கொரியாவும் தென் கொரியாவும் எல்லைகளில் ஒலி பெருக்கிகள் மூலம் ஒன்றிற்கு எதிராக மற்றது பரப்புரை செய்வதுண்டு. இப்படிப்பட்ட பரப்புரைகள் செய்து ஒன்றை ஒன்று ஆத்திரப்படுத்துவதில்லை என 2004-ம் ஆண்டு உடன்பாட்டுக்கு வந்தன. ஆனால் 2015ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி வட கொரியப் படையினர் வைத்த கண்ணி வெடிகளால் தென் கொரியப் படையின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியா தனது ஒலிபெருக்கிகளூடான பரப்புரையைத் தொடங்கியது.  தென் கொரியாவின் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும் டிவிடிக்கள் மூலமும் மெமரி ஸ்ரிக் மூலமும் வட கொரியாவிற்குக் கடத்தப்படுவதால் வட கொரியாவிலும் பார்க்க தென் கொரியா பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்கின்றது என வட கொரியர்கள் உணர்ந்து அதனால் தமது நாட்டை வெறுக்கின்றார்கள் என வட கொரிய அரசு அச்சமடைந்துள்ளது.
 
தென் கொரியாவின் ஆத்திரம்
வட கொரியாவை ஒரு அணுப் படைக்கலன் கொண்ட ஒரு நாடாக நாம் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை என்கின்றது தென் கொரியா. இரண்டு நாடுகளினதும் பொருளாதார நிலைமை மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் போல் இருக்கின்றது. ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டும் தான் வளர்ச்சியடைந்த நாடுகள். வட கொரியாவின் அணுப்படைக்கலன்கள் உற்பத்தியாலும் ஏவுகணை உற்பத்தியாலும்  தென் கொரியாவிலும் பார்க்க அதிக கரிசனை கொண்ட நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1910-ம் ஆண்டில் இருந்து 1945-ம் ஆண்டுவரை ஜப்பான் கொரியாவை ஆண்ட போது செய்த கொடுமைகளை கொரியர்கள் மறக்கவில்லை. வட கொரியா தன்னைப் பழிவாங்குமா என்ற் அச்சம் ஜப்பானிடம் இருக்கின்றது. 2016- மார்ச் மாதம் வட கொரியாவின் அணுக்குண்டுப் பரிசோதனையை அடுத்து ஐநாவினால் கொண்டு வரப்பட்ட வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை சமாளிக்கக் கூடிய உத்திகள் எதுவும் வட கொரியாவின் ஐந்து ஆண்டுத் திட்டத்தில் இருக்கவில்லை. பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளைச் சமாளிக்க மக்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்ப்டுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் ஊட்டச் சத்து இல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை 32விழுக்காட்டால் அதிகரித்துள்ளது.
 
போச்சே போச்சு
அணுக்குண்டுகள் செய்த வட கொரியாவால் அவற்றைத் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளை இதுவரை உருவாக்க முடியவில்லை. ஆனால் பல ஏவுகணைப் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து அது எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருக்கின்றது. 2016 ஏப்ரல் மாதம் 27-ம் 28-ம் திகதிகளில் வட கொரியா இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதித்தது. இரண்டும் புஸ்வாணமாகிப் போனது. முஸ்டான் என்னும் நடுத்தரத் தூர ஏவுகணைகளைளே வட கொரியா பரிசோதிக்கப்பட்டுப் பிழையாகிப் போனது  என தென் கொரியா சொல்ல அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.  இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் வெற்றியடைந்திருந்தால் அது 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ம் திகதி ஆரம்பமான பேரவைக் கூட்டத்தில் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். உலக அரங்கிலும் பெரும் அதிர்வலைகள் உருவாகியிருக்கும். வட போச்சே!!!
 

Monday, 9 May 2016

அடுத்த ஐநா பொது செயலர் தேர்வும் குழறுபடிகளும்

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய செய்திகள் பெரிதாக அடிபடுவதால் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலர் யார் என்ற செய்தி மறைக்கப்பட்டு விட்டது. இரு பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுபவர்களும் 2017--ம் ஆண்டு ஜனவரி மாதம்  பதவி ஏற்பார்கள். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 2016 நவம்பர் மாதம் ஐநா பொதுச் செயலர் பதவிக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். ஐநா உலக மக்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல உருவாக்கப்படவில்லை ஆனால் உலக மக்கள் நரக வேதனை அனுபவிக்காமல் இருக்க உருவாக்கபட்டது என்றார் ஐநாவின் இரண்டாவது பொதுச் செயலராக இருந்தவர்.

பொதுச் செயலர் தெரிவும் பேரம் பேசலும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின் 97-ம் பந்தியின் படி அதன் பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச் சபை பொதுச் செயலரைத் தெரிவு செய்யும். ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இரசியா, சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளின் ஒருமித்த ஆதரவு பெற்ற ஒருவரே பொதுச் செயலராக வர முடியும். பாதுகாப்புச் சபை பொதுச் செயலரைப் பரிந்துரை செய்யும் போது எந்த ஒரு வல்லரசு நாடாவது தனது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தைப் பாவித்து தனக்கு வேண்டாதவர் பொதுச் செயலராக வருவதைத் தடுக்க முடியும். ஐந்து வல்லரசு நாடுகளின் ஒருமித்த ஆதரவு  பெறுவதி சிரமம் மிக்கதாகும். இதனால் வெவேறு உலக அமைப்புக்களின் முக்கிய பதவிகளை இந்த ஐந்து நாடுகளும் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாட்டைச் சேர்ந்த பான் கீ மூன் ஐநா பொது செயலர் பதவிக்கு அனுமதித்தமைக்குப் பதிலாக சீனாவைச் சேர்ந்தவருக்கு உலக வங்கி அதிபர் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் படைத்துறையில் பணிபுரிந்த சித்தார்த் சட்டர்ஜி பான் கீ மூனின் மகளைத் திருமணம் செய்தவர். இதனால் இந்தியாவின் ஆதரவும் பான் கீ மூனுக்கு இருந்தது. ஐநாவில் இரசியாவும் இந்தியாவும் பல துறைகளில் ஒத்துழைப்பதால் இரசியா பான் கீ மூனைத் தெரிவு செய்வதில் ஆட்சேபனை செய்யவில்லை. பான் கீ மூன் இரண்டாம் பதவிக் காலத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் உச்சப் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது.
பிராந்திய அடிப்படையிலான தேர்வு
ஐநா சபையின் பதவிகளுக்கு தேர்வு நடக்கும் போது பிராந்தியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சுழற்ச்சி முறையில் வேறு வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு பதவு வழங்கப்படும். பான் கீ மூன் ஆசியப் பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட போது ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த செல்வி நவநீதம் பிள்ளைக்கு மனித உரிமைக் கழக ஆணையாளர் பதவி கொடுக்கப்பட்டது. பான் கீ மூனிற்கு முன்னர் பொதுச் செயலர் பதவியில் இருந்த கோபி அனன் நடுவண் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னர் இருந்த பௌட்ரஸ் காலி ஆபிரிக்கப் பிராந்திய நாடான எகிப்தைச் சேர்ந்தவர். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த எவரும் இதுவரை ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்கு வந்ததில்லை. ஐநாவின் வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர் பொதுச் செயலராகாக் கடமையாற்றியதில்லை. இதனால் அடுத்த பொதுச் செயலர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக நிலவுகின்றது.
கோட்டை விடப்படும் திறமை
ஐநா பொதுச் செயலர் தேர்வில் பிராந்திய அடிப்படையிலும் வல்லரசு நாடுகளிடையிலான பேரம் பேசுதலும் அதிக முக்கியத்துவம் பெறும் போது திறமையும் நேர்மையும் ஓரம் கட்டப்படப்படுகின்றது என்பதற்கு பான் கீ மூனின் தேர்வு நல்ல உதாரணமாக அமைந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் செயலராக பான் கீ மூன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஊடகமான போரின் பொலிசி என்னும் சஞ்சிகையில் "பான் கீ மூன் ஏன் உலகின் மிக ஆபத்தான கொரியர்" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் பான் கீ மூன் பல அவல நிலைகளின் போது மௌனமாக இருந்தது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இலங்கை உள் நாட்டுப் போரில் போது தமிழ் மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கைக்குச் செல்லாமல் போர் முடிந்த பின்னர் போனதையும் அந்தச் சஞ்சிகை சுட்டிக் காட்டி இருந்தது. திறமை மிக்க கோபி அனன் அமெரிக்காவின் சொற்படி நடக்க மறுத்த படியால் ஒரு திறமை அற்றவர் பதவிக்கு வருவதை அமெரிக்கா விரும்பியது எனவும் அந்த சஞ்சிகை சுட்டிக் காட்டியது.

கிழிபட்ட பான் கீ மூன்
திறமையும் நேர்மையும் அற்ற பான் கீ மூன் இரு ஐந்து ஆண்டுகாலப் பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார். பான் கீ முனிற்கு முன்னர் செயலராக இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போதும் திரு திருவென விழித்தபடி காட்சியளிப்பார்; புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சைகள் 2012-ம் ஆண்டு சூடு பிடித்திருந்தது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக "கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. அவரும் பொது இடங்களில் தோற்றமளிப்பதை தவிர்த்துப்க் கொண்டார்.
2009 டிசம்பரில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். பான் கீ மூனின் மகளின் கணவரான சித்தார்த சட்டர்ஜீக்கு பதவி உயர்வு வழங்கியது பான் கீ மூனின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியது. இந்த சித்தார் சட்டர்ஜி இந்திய அமைதிப் படை தமிழர் தாயகத்தில் செய்த முதற் படை நடவடிக்கையான புலிகளின் தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்மூலமாக்குதலின் போது தலைமை தாங்கிச் சென்றவர். அத் தாக்குதலில் அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதுவரின் வார்த்தைகளின் படி இந்தியப் படையினர் இலையான்கள் போல் அடித்துக் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் சித்தார்த் சட்டர்ஜீ ஒரு தமிழின விரோதியாக மாறினார் எனக் கருதப்படுகின்றது.
பான் கீ மூனின் தலைமை ஆலோசகரான விஜய் நம்பியார் இலங்கையின் போர்த்துறை ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் சகோதரர். விஜய் நம்பியார் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை சென்று விட்டு வந்து பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து அடாவடித்தனம் செய்தவர். இதனால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியா அப்போது மிரட்டியும் இருந்தது. சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதில் விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன என ஐயப்படப்படுகின்றது.

மோசமான செயலர்
ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள், இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிட்டார்.  அவர் கண்ணுக்குப் புலப்படாதவராக இருக்கின்றார் என்றார் அந்த நூலாசிரியர். இதே வேளை பான் கீ மூனின் உதவியாளர்கள் சிலர் அவரை புகழவும் செய்தனர்  ஒரு ஜப்பானியர் அவரை யோகிக்கு ஒப்பிட்டார். யோகி எப்படிக் கதைக்கிறார் என்பதல்ல முக்கியம் அவர் எதைப் போதிக்கிறார், எப்படிச் செயற்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர்.
சென்று வாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் ரவுப்
பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ரவுப் அவர்கள் Good night, Ban Ki moon என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை 22-07-2010இலன்று எழுதினார். பொதுச் செயலாளர்கள் அவர்களின் திறமையின்மைக்காகவே தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். பான் கீ மூனிற்கு எதிராக அவர் வைக்கும் குற்றச் சாட்டுக்களிலும் இலங்கை உள்நாட்டுப் போரை அவர் கையாண்ட விதம் முக்கிய இடம் பெறுகிறது. முன்னாள் கோபி அனனின் திறமை அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்ததால் திறமையற்ற பான்கீ மூன் தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஐநாவை எப்போதும் ஒரு தடையாகப் பார்க்கும் சீனா அதன் பெருமையைக் குறைக்கவே பான் கீ மூனை பொதுச் செயலராக்க அனுமதித்தது என்கிறார் ஜேம்ஸ் ரவுப்.
அமெரிக்க சார்பாளரை அமெரிக்க கைவிடுமா?
இது வரை இருந்த எட்டு பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூன் தான் மிகத்திவீரமான அமெரிக்க ஆதரவாளர். முன்னாள் பொதுச் செயலர் கோபி அனன் அமெரிக்கா ஈராக்கில் செய்தவற்றை பகிரங்கமாக கண்டித்தவர். ஐரோப்பியாவில் நல்ல பெயரெடுத்தவர். இவரைப் பிடிக்கததால் ஜோர்ஜ் புஷ் பான் கீ மூனை பொதுச் செயலராக்கினார். ஒபாமா நிர்வாகம் இலங்கைப் போர் குற்ற விசாரணையை காரணம் காட்டி அவரை பதவியில் நீடிக்கச் செய்தது. பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோது தனது வேட்பாளரைப் போட்டியில் இருந்து விலகச்செய்து அவரது வெற்றிக்கு இலங்கை பெரும் பங்காற்றியது. அது மட்டுமல்ல இலங்கையில் போர் நடந்த வேளை பான் கீமூன் அவர்களை இலங்கை "நன்கு கவனித்து" கொண்டதாகவும் பேசப்படுகிறது. இலங்கையில் தமிழ் ஐநா ஊழியர்களை இலங்கை அரசு கைது செய்து மோசமாக நடத்தியபோது ஐநா பாராமுகமாக இருந்தது.

வெழுத்து வாங்கிய சுவீடன் பெண்
பான் கீ மூனின் திறமையின்மை தொடர்பாக ஒரு செய்திக் கசிவு 2012-ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இது பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த ஐநா உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் பின்னர் அமெரிக்கத் தினசரியான வாஷிங்டன் போஸ்ற்றில் வெளிவந்தது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். ஐநா வரலாற்றில் இங்கா பிரித் ஆலெனியஸ் போல் வேறு எவரும் அந்த அளவு மோசமாக விமர்சித்ததில்லை. இங்கா பிரித் ஆலெனியஸ் ஐநாவின் ஊழல்கள் தொடர்பாக செய்த விசாரணைக்கு பான் கீ மூன் முட்டுக் கட்டை போட்டார் என்பதால் அவர் ஆத்திரமடைந்திருந்தார்.
இஸ்ரேலின் போர்க்குற்றத்தை பான் கீ மூன் மறைத்தாரா?
2014-ம் ஆண்டு காசா நிலப்பரப்பில் ஹாமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் செய்யும் போது ஐநாவின் கட்டிடங்கள் மீது இஸ்ரேலிய விமானன் படையினர் செய்த குண்டு வீச்சுத் தாக்குதல்கள் போர்குற்றமாகும் என ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ஓர் அறிக்கையை ஐநா சபைக்குச் சமர்ப்பித்திருந்தார். இதில் அப்பாவி மக்கள் அகதிகளாகத் தங்கியிருந்த ஏழு கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன. அதை பான் கீ மூடி மறைத்து ஓர் அறிக்கையை வெளிய்ட்டார். அந்த அறிக்கை இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டால் தயாரிக்கப் பட்டதாக குற்றச் சாட்டுக்கள் வெளிவந்திருந்தன. விக்கிலீக்சும் இது பற்றி தகவல் வெளியிட்டிருந்தது.  இந்த மூடி மறைப்பு தொடர்பாக அப்போதைய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சூசன் றைஸ் நான்கு தடவைகள் தொலைபேசியில் உரையாடி இருந்தார். 
வல்லாதிக்கத் தேர்தல்
ஐநா பொதுச் செயலர் தேர்தல் என்று சொன்னாலும் அதற்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்கும் வெகு தூரம். இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் செய்யப் படும் உடன்பாட்டில்தான் இந்தத் தேர்தல் பெரிதும் தங்கியுள்ளது. வழமையாக பொதுச் செயலர் தேர்வு பாதுகாப்புச் சபையில் மூடிய அறைக்குள் நடை பெறும் ஆனால் இந்த முறை பகிரங்கமாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பகிரங்கமாக நடந்தாலும் பல திரை மறைவுப் பேரம் பேசல்கள் நிச்சயம் நடக்கும். 193 உறுப்பு நாடுகளையும், முப்பது நிறுவனங்களையும், நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களையும் கொண்ட ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட முனைபவர் தனது விபரங்களையும் இரண்டாயிரம் சொற்களைக் கொண்ட உலகம் தொடர்பான தனது பார்வைக் கூற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏழு பில்லியன்களுக்கு ஒன்று என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஐநாவில் பல சீர்திருத்தங்களை முன்வைக்கின்றது. அதில் ஒன்று ஐநா பாதுகாப்புச் சபை ஒருவரைத் தெரிவு செய்து பொதுச் சபையின் அனுமதிக்கு அனுப்புவதை விடுத்து இருவரை பரிந்துரை செய்து அவர்களில் ஒருவரை பொதுச்சபை தெரிந்து எடுக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இது நடக்காத காரியமாகும்.
இந்த முறை தேர்தலில் மனுத் தக்குதல் செய்துள்ளவர்கள்:
1. ஐரீனா பொக்கோவா என்னும் 63 வயதான பல்கேரிய நாட்டுப் பெண்மணி. இவர் யுனெஸ்க்கோவின் ஆளுநர் நாயகமாக இருக்கின்றார்.
2. ஹெலென் கிளார்க் என்னும் 66 வயதான நியூசிலாந்து நாட்டுப் பெண்மணி. இவர் தற்போது ஐநாவின் அபிவிருத்தித் திட்டத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
3. நட்டலியா ஜேர்மன் என்னும் 47 வயதான பெண்மணி. இவர் மொல்டோவா நாட்டின் முன்னாள் துணைத் தலைமை அமைச்சர்.
4. வெஸ்னா புசிக் என்னும் 62 வயதான பெண். இவர் குரோசியா நாட்டின் துணைத் தலைமை அமைச்சர்,
5. அண்டோனியோ குடெரெஸ் என்னும் 66 வயதான ஆண். இவர் போர்த்துக்கல்லின் முன்னாள் தலைமை அமைச்சர்.
6. ஸர்ஜன் கெரிம் என்னும் 67 வயதான ஆண். இவர் மெசடோனியாவின் முன்னாள் வெளிநாட்டமைச்சர். ஐநாவின் பொதுச் சபையில் தலைமைப் பதவி வகித்தவர்.
7. டனிலோ டேர்க் என்னும் 64 வயது ஆண். இவர் ஸ்லொவெனியாவின் ஐநாவிற்கான தூதுவராகவும் ஐநாவின் துணைப் பொதுச் செயலராகவும் கடமையாற்றியவர்.
8. ஐகர் லுக்சிக் என்னும் 39 வயதான ஆண் மொண்டிநிகரோவின் முன்னாள் தலைமை அமைச்சரும் தற்போதைய வெளிநாட்டமைச்சரும் ஆவார்.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெண் என்ற நிபந்தனையை பல்கேரிய ஐரீனா பொக்கோவா, மொல்டோவாவின் நட்டலியா ஜேர்மன், குரோசியாவின் வெஸ்னா புசிக் ஆகிய மூவரும் திருப்தி செய்கின்றனர். ஆனால் இவர் யுனெஸ்க்கோவின் தலைமைப் பதவியில் இருக்கையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அதில் பலஸ்த்தீனத்திற்கு உறுப்புரிமை வழங்கப்பட்டதால் அவர் அமெரிக்காவைத் திருப்தி செய்ய மாட்டார். இந்த முறை வேட்பாளர்கள் தமது நிலை தொடர்பாக பொதுச் சபை உறுப்பினர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் எட்டு வேட்பாளர்களில் நால்வர் மட்டுமே பரப்புரைக் களத்தில் இதுவரை இறங்கியுள்ளனர். மற்றவர்கள் சும்மா இருக்கும் சங்கை ஏன் ஊதிக் கெடுப்பான் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
எப்படித்தான் தேர்தல் நடந்தாலும் எவர் வென்றாலும் ஐநா சபை என்பது உலகிலேயே திறனற்ற ஒரு அமைப்பு, ஊழல் நிறைந்த அமைப்பு என்ற நிலையை மாற்றப்பட மாட்டாது.

Monday, 2 May 2016

கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க இரசிய முறுகல்

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக்கலன்கள் இரசியாவின் எல்லைக்கு அண்மையாக வந்து அச்சுறுத்துவதற்கு எதிராக இரசியா தேவையான எல்லா வழிவகையிலும் செயற்படும் என அதிபர் விள்டிமீர் புட்டீன் சூளுரைத்துள்ளார். அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் ஒன்றிற்கும் வேவு பார்க்கும் விமானம் ஒன்றிற்கும்  ரோந்து விமானம் ஒன்றிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் இரசியப் போர் விமானங்கள் பறந்தன என்ற குற்றச் சாட்டை அமெரிக்கா முன் வைத்தமைக்குப் பதிலாகவே இரசிய அதிபர் இப்படிக் கருத்து வெளியிட்டுள்ளார். கிழக்கு ஐரோப்பாவில் இரசியப் படைகளுக்கும் நேட்டோப் படைகளுக்கும் இடையிலான முறுகல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கு புதிதாக நியமித்துள்ள படைத் தளபதி Curtis Scaparrottiமீது கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நிலைமை தொடர்பாக அமெரிக்க மூதவையின் படைத்துறைச் சேவைக்கான குழுவினர் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

இரசியப் பூச்சாண்டி
நேட்டோப் படையினர் தமது எல்லையில் இருந்து 75 மைல் தொலைவில் வந்து விட்டனர் என இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்து அதன் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியதன் பின்னர் இரசிய விரிவாக்கம் என்ற அச்சம் கிழக்கு ஐரோப்பாவில் அதிலும் முக்கியமாக போல்ரிக் நாடுகளில் உருவாகியுள்ளது. அந்த நாடுகள் தம்மை மீண்டும் இரசியா தன்னுடன் இணைப்பதைத் தடுக்க நேட்டோப் படைகளை தமது மண்ணிற்கு வரவழைக்கின்றன. போல்ரிக் கடலின் கிழக்குக் கரையில் உள்ள எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளை போல்ரிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த போல்ரிக் நாடுகளிலும் போலந்திலும் இரசியாவிற்கும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. போல்ரிக் கடலின் கிழக்குப் புறத்தில் லித்துவேனியாவிற்கும் போலாந்திற்கும் இடையில் உள்ள கலினிங்கிராட் (Kaliningrad) என்னும் துறை முகப் பிராந்தியம் இரசியாவின் கட்டுப்பாட்டில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததில் இருந்து இருக்கின்றது. அங்கு இரசியா தனது படவலுவை வியப்பூட்டும் வகையில் அதிகரித்துள்ளது.  சுவீடன், பின்லாந்து, இரசியா, எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலாந்து, ஜேர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகள் போல்ரிக் கடலைச் சுற்றவர உள்ளன.

கப்பல் இடைமறிப்பு
அமெரிக்காவின் USS Donald Cook என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பல் (guided missile destroyer) போல்ரிக் கடலிற்குள் 2016 ஏப்ரல் மாதம் 10-ம் திகதி பிரவேசித்தது. இரசியாவின் எஸ்.யூ-24 போர் விமானங்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதற்குத் தொல்லைகள் கொடுத்தன. ஒரு கட்டத்தில் 30 அடி அண்மையாகவும் பறப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இரசியாவின் எஸ்.யூ-24 போர் விமானம் ஒலியிலும் வேகமாகப் பறக்கக் கூடியதும் எல்லாவிதமான கால நிலைகளிலும் செயற்படக் கூடியதுமாகும்.  USS Donald Cook நாசகாரிக் கப்பலில் போலந்தின் உலங்கு வானூர்தி  இந்த நெருங்கிப் பறத்தல் தொடர்பாகவே அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறைக்கான தெரிவுக் குழுவினர் அதிக கரிசனை கொண்டுள்ளனர். USS Donald Cook ஒரு நான்காம் தலைமுறை வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலாகும். இதன் நீளம் 154மீட்டர். விமான எதிர்ப்புப் போர் (anti-air warfare ), நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் (anti-submarine warfare), கடற்பரப்பு எதிர்புப் போர் (anti-surface warfare ) ஆகிய மூன்றையும் இது செய்யக் கூடியது.இதில் உள்ள டொமாஹோக் ஏவுகணைகள் 2,500 கிலோ மீட்டர் வரை பாயக் கூடியவை. அத்துடன் அணுக்குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இதில் சாதாரண நிலையில் 56 டொமாஹோக் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். போர்ச்சூழலில் 96 ஏவுகணளைகளாக இது அதிகரிக்கப்படலாம். கப்பல்களுக்கு நெருங்கிப் பறத்தல் மட்டுமல்ல அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களும் இரசிய நீர்மூழ்கிக் கப்பல்களால் நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப் படுகின்றன.



இரசியாவைச் சீண்டுதல்
போல்ரிக் கடலில் இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்த கடற்படைத் தளமான கலின்கிராட்டிற்கு அண்மையாக USS Donald Cook பயணித்தமை இரசியாவை சீண்டும் ஒரு செயலாகும். ருமேனியாவில் அமெரிக்கா தனது அணுக்குண்டு தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை நிறுத்தியிருப்பது  நடுத்தர தூர அணுப்படைக்கல உடன்படிக்கைகளை மீறும் செயலாகும் என இரசியா கருத்து வெளியிட்டிருந்தது.  2015-ம் ஆண்டு டிசம்பரில்Brian McKeon, the US Principal Deputy Under Secretary of Defense for Policy வெளிவிட்ட கருத்து இப்படி இருந்தது:
  • We are investing in the technologies that are most relevant to Russia's provocations, developing new unmanned systems, a new long-range bomber, a new long-range stand-off cruise missile and a number of innovative technologies. இரசியாஅவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்களுக்கு ஏற்ப எமதூ தொழிநுட்பங்களில் முதலீடு செய்கின்றோம். ஆளில்லா (போர் விமான) முறைமை, ஒரு  புதிய தொலைதூரத் தாக்குதல் குண்டு வீச்சு விமானங்கள், ஒரு புதிய தொலைதூர இடை நிலை நிறுத்து வழிகாட்டு ஏவுகணைகள் உட்படப் பல புதுப்புனைவு தொழிநுட்பங்கள் இதில் அடங்கும். 

சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகள்
2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பு கிழக்கு ஐரோப்பாவில் சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகளை (Enhanced Rotational Force ) கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்துவதாகவும் தொடர் பயிற்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் முடிவு செய்திருந்தது.  நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற தனது தொடர் வேண்டு கோள்களுக்கு மாறாக இப்பட்டி முடிவு எடுக்கப் பட்டுள்ளது என இரசியா அப்போது கருத்து வெளியிட்டிருந்தது.  இந்த நேட்டோக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவின் HMS Iron Duke என்னும் Type 23 வகையைச் சேர்ந்த Frigate கப்பல்,  Type-45 வகையைச் சேர்ந்த நாசகாரிக் கப்பல், மூன்று கடற்கண்ணி வாரிஅள்ளும் கப்பல்கள் ஆகியவை 530 கடற்படையினருடன் அனுப்பப்பட்டன. பிரித்தானியாவின் இந்த நகர்வை பனிப்போர்க் காலத்திலும் பார்க்க அதிக வலுவுடைய முன்னோக்கிய நகர்வு என நேட்டோவிற்கான பிரித்தானியப் பிரதிநிதி அடம் தொம்சன் தெரிவித்திருந்தார். பிரித்தானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் பலன் அதிகரித்த நேட்டோப் படைப் பரவலமர்த்தல் எமது எதிரிக்கு ஒரு கடுமையான செய்தியைத் தெரிவிப்பதுடன் எமது நட்பு நாடுகள் அச்சுறுத்தப்படும் போது நாம் பதில் கொடுக்கத் தயாராக உள்ளோம் என்பதையும் உணர்த்துகின்றத்து என்றார். மேலும் அவர் 2016-ம் ஆண்டு போல்ரிக் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்துவோம் என்றார்.

வேவு விமான இடைமறிப்பு

2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் திகதி போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்க வேவு விமானமான ஆர் சி-135ஐ பாதுகாப்பற்ற முறையிலும் தொழில்சார்பற்ற வகையிலும் எஸ் யூ-27 இரசியப் போர் விமானம் இடை மறித்ததாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்க வேவு விமானமான ஆர்சி-135 எதிரியின் இலத்திரனியல் பொறிமுறை தொடர்பான தகவல்களைத் திரட்ட வல்லது. ஆனால் இரசிய அதிகாரிகள் தமது எல்லையை நோக்கி ஓர் இனம் காணமுடியாத பொருள் மிக வேகமாக வந்ததாகவும் அதற்கு தமது விமானங்கள் விடைகொடுக்கும்படி நடந்து கொண்டதாகவும் தெரிவித்ததுடன் தமது விமானி பன்னாட்டு விமானப் பறப்பு விதிகளுக்கு அமையவே செயற்பட்டதாகவும் கூறினார்கள். தமது விமானம் அமெரிக்க விமானத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய எந்த ஒரு செயலையும் செய்யவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் போல்ரிக் பிராந்தியத்தில் நெருக்கடியை அதிகரிப்பதாக அமைந்தது. அத்துடன் போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்காவினது அதிகரித்த படை நகர்வுகளுக்கு இரசியாவும் தனது பதில் நகர்வுகளைத் தீவிரப்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்க வேவு விமானத்திற்கு 50 அடி வரை நெருங்கி வந்த இரசியப் போர் விமானம் உருளைச் சுற்றல் (Barrel Roll) என்னும் அச்சுறுத்தல் பறப்பையும் செய்தது. எதிரி விமானத்தின் பதைக்கோட்டை சுற்றிச் சுற்றி பறந்து சென்று அதைக் கடந்து சுற்றியபடியே செல்லும் நகர்வை உருளைச் சுற்றல் (Barrel Roll)  என்பர்.  இதன் போது எதிரி விமானம் தனது திசையை மாற்ற முடியாமற் செய்யப்படும். போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படையினரின் நடமாட்டத்தை தனது கொல்லைப் புறத்திற்கு எதிரி வந்துவிட்டது போன்ற உணர்வை இரசியப் படைகளுக்கு ஏற்படுத்துகின்றது. இரசியப் படையினர் அமெரிக்கப் படையினருடன் ஒரு முழுமையான நேரடி மோதலை தவிர்க்க விரும்பும் அதேவேளை அமெரிக்காவின் படை நகர்வுகளைப் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கத் தயாரில்லை என்பதை அமெரிக்காவிற்கு உணர்த்த விரும்புகின்றனர்.

ரோந்து விமான இடைமறிப்பு
2016 ஏப்ரில் 29-ம் திகதி வெள்ளி காலை அமெரிக்காவின் ரோந்து விமானமான ஆர் சீ - 35 போல்ரிக் கடற் பிராந்தியத்தில் பறந்து கொண்டிருக்கையில் இரசியாவின் எஸ்.யூ-27 போர் விமானம் அதற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் உருளைச் சுற்றல் (Barrel Roll) பறப்பைச் செய்தது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க வேவு விமானத்திற்கு 25 அடிகள் வரை அண்மையாக இரசியப் போர் விமானம் பறந்து சென்றது. அமெரிக்காவின் ரோந்து விமானமான ஆர்.சீ-35 பன்னாட்டு விமானப் பரப்பில் பறந்து கொண்டிருக்கையிலேயே இந்தச் சம்பவம் நடந்ததாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்தது.



அலைவரிசைக் குழப்பி பரீட்சிக்கப் பட்டதா?

அமெரிக்காவின் USS Donald Cook என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலுக்கு நெருக்கமாகாப் பறந்த இரசிய எஸ்.யூ-24 போர் விமானம் எந்த ஒரு படைக்கலன்களையும் தாங்கிச் செல்லவில்லை. ஆனால் அது இரசியா உருவாக்கிய புதிய Khibiny என்னும் பெயர் கொண்ட எலத்திரனியல் அலைவரிசைக் குழப்பி முறைமையைக் (electronic jamming system) கொண்டிருந்ததாகவும் அவை அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலின் ரடார்களை குருடாக்கி விட்டதாகவும்  தொடர்பாடல் கருவிகளை செயலிழக்கச் செய்ததாகவும் இரசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  அமெரிக்காவின் USS Donald Cook நாசகாரக் கப்பல் மிக நவீன ஏஜிஸ் தாக்குதல் முறைமையைக் (Aegis Combat System) கொண்டுள்ளது. இது கணனிப் பொறித் தொகுதிகளையும்  நான்கு ரடார்களையும் கொண்டு எதிரி இலக்குகளை இனம் கண்டு துரிதமாகத் தாக்கவல்லது. இதில் 50இற்கு மேற்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உண்டு. இரசியாவின் புதிய எலத்திரனியல் அலைவரிசைக் குழப்பி முறைமை 350மைல்கள் விட்டம் கொண்ட ஒரு வட்டப்பரப்ப்பில் எந்த எதிரி ரடார்களையும் குழப்பக் கூடியவை எனச் சொல்லப்படுகின்றது. இதனால் USS Donald Cook இல் இருந்த அமெரிக்கக் கடற்படையினரின் மனோ நிலை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சொல்லப் படுகின்றது. 27 பேர் பதவி விலகும் விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை இது தொடர்பாகக் கரிசனை காட்டியதற்கும் இதுவே காரணம் எனவும் சொல்லப்படுகின்றது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வைத் தொடர்ந்து அமெரிக்க நாசகாரிக் கப்பல் ஹங்கேரித் துறைமுகத்திற்குச் சென்று விட்டது.

கிழக்கே போன அமெரிக்காவின் F-22 போர் விமானங்கள்
இரசியாவின் நெருங்கிப் பறத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து போல்ரிக் நாடுகளில் ஒன்றான லித்துவேனியாவிற்கு அமெரிக்காவின் F-22 விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே 2015-ம் ஆண்டு எஸ்தோனியாவிற்கும் போலாந்திற்கும் F-22 விமானங்கள் அனுப்பி வைக்கப் பட்டிருந்தன. போல்ரிக் பிராந்தியத்தில் மட்டுமல்ல கருங்கடல் பிராந்தியத்திலும் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை மோசமடைகின்றது. இந்த நிலைமையைச் சமாளிக்க இரசியாவின் முன்னாள் நெருங்கிய நட்பு நாடும் முன்னாள் பொதுவுடமை நாடும் தற்போது அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பாராடும் நாடும் நேட்டோவின் உறுப்பு நாடுமான ஹங்கேரிக்கு அமெரிக்காவின் F-22 விமானங்கள் இரண்டு அனுப்பப்பட்டுள்ளன. உலகில் முதலில் செயற்படத் தொடங்கிய ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாக F-22 விமானம் இருக்கின்றது.  F-22 மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் மிகத் தொலவில் வைத்தே எதிரி விமானங்களையும் இலக்குகளையும் இனங்காணும் திறன் மிக்கது.

நேட்டோப் படையினரின் பெரும் போர்ப் பயிற்ச்சி
2016 ஜூன் மாதம் ஐக்கிய அமெரிக்காவின் 13,000படையினரும் இருபத்தி நான்கு மற்ற நேட்டோ நாடுகளின் 12,000 படையினரும் இணைந்து ஒரு பெரும் போர்ப்பயிற்ச்சியை போலந்தில் செய்யவிருக்கின்றனர். பதினொரு நாட்கள் நட்டக்கும் இப் போர் பயிற்ச்சியில் நேரடியாக சுடுகலன்கள் பாவித்தல், விமானத் தாக்குதல் நகர்வுகள், வான் போர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள், போர்த் தாங்கித் தாக்குதல் ஒத்திகைகள் ஆகியவை நடக்கும். Anaconda-2016 என்னும் குறியீட்டுப் பெயர் இந்தப் போர் ஒத்திகைக்கு சூட்டப்பட்டுள்ளது. இதில் உக்ரேன் நாடும் கலந்து கொள்ள வேண்டும் எனப் போலாந்து தெரிவித்துள்ளது. இதற்கு ஜேர்மனி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சுழற்ச்சி முறைப் படை நகர்வின் நோக்கம்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்ல் சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகளை (Enhanced Rotational Force ) நேட்டோப் படையினர் ஈடுபடுத்துவது மோசமான ஒரு மூலோபாயத்தை கொண்டது. பெருமளவு படையினரை ஒரேயடியாகக் கொண்டு போய்க் குவிப்பது செலவு மிக்கது. அத்துடன் இரசிய மக்களைக் கலவரமடையச் செய்து அவர்களை விளடிமீர் புட்டீனின் பின்னால் அணி திரளச் செய்யும். சில நூறு அல்லது ஆயிரக் கணக்கில் சுழற்ச்சி முறையில் படையினரை அங்க்கு அனுப்பி பயிற்ச்சியில் ஈடுபடுத்துவதால் பிராந்திய நிலைமைக்கு ஏற்ப போரிடும் திறனை அவர்கள் பெறுகின்றார்கள். இப்படி தொடர்ந்து சுழற்ச்சி முறையில் பல்லாயிரக் கணக்கான படையினரை பயிற்றுவிப்பது ஒரு புறம் நடக்கும். மறு புறத்தில் இரசியாவின் எல்லைப் புற நாடுகளில் பெருமளவு படைக்கலன்களை களஞ்சியப் படுத்தி வைக்கப்படும். ஒரு போர் உருவாகும் நிலை ஏற்படும் போது பல்லாயிரம் படையினரைக் கொண்டு போய் ஒரு குறுகிய கால அவகாசத்தில் இறக்கும் வசதி நேட்டோப் படையினரிடம் உண்டு. இது இரசியப் படைகளுக்குப் பெரும் சவாலாக அமையும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...