Monday 4 February 2013

இலங்கையில் நடுநிலையாளராகச் செயற்படும் தகுதி தென் ஆபிரிக்காவிற்கு இருக்கிறதா?

இலங்கையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தென் ஆபிரிக்க விடுதலை இயக்கமான ஏ.என்.சி எனப்படும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் பெரும் உதவிகளைச் செய்திருக்கிறது. தென் ஆபிரிக்காவில் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கான பயிற்ச்சி நிலைமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படைகளுக்கான பயிற்ச்சி வெளி நாடு ஒன்றிலேயே மேற்கொள்ளப்பட்டது. அது தென் ஆபிரிக்காதான் என்றும் கூறப்பட்டது. 

இன ஒதுக்கல் கொள்கையுடைய ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆபிரிக்க மக்களின் போராட்டத்தில் அங்கு வாழும் தமிழர்கள் பெரும் பங்கு வகித்தனர். உலகெங்கும் வாழும் தமிழர்களும் தென் ஆபிரிக்க விடுதலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தென் ஆபிரிக்கா விடுதலை பெறமுன்னர் அங்கிருந்த இன ஒதுக்கல் ஆட்சியாளர்களுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தன. அப்போது இலங்கை அதிபராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தன பேய்களிடமிருந்து கூட உதவி பெறுவேன் எனக் கூறி தென் ஆபிரிக்காவிடம் இருந்து படைக்கலன்களை இறக்குமதி செய்தார். இதுவும் தமிழர்களையும் ஆபிரிக்க விடுதலை இயக்கத்தையும் நெருங்கச் செய்தன.

இப்போது வரும் செய்திகளின்படி முன்பு நோர்வே செய்துவந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான சமாதானத் தூதுவர் வேலையை தென் ஆபிரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் உலகத் தமிழ் பேரவையைச் சேர்ந்தவர்களும் தென் ஆபிரிக்கா சென்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

2012 செப்டம்பரில் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணைகள் உள்நாட்டு ரீதியில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தென் ஆபிரிக்காவின் நிலைப்பாடு என அதன் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்திருந்தார். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவைன் அறிக்கையை பல பன்னாட்டு அமைப்புக்கள் அதிருப்திகரமானவை என்று தெரிவித்த பின்னரும் தென் ஆபிரிக்கா இப்படிக் கூறியிருந்தது. 

தென் ஆபிரிக்காவில் இன ஒதுக்கல் ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெறுவதை இறுதிக் கட்டத்தில் வட அமெரிக்கா நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே நெறிப்படுத்தின. விடுதலை பெற்ற தென் ஆபிரிக்கா தமக்கு எதிரான ஒரு நாடாக மாறக் கூடாது என்பதிலும் தென் ஆபிரிக்காவுடனான தமது வர்த்தகம் மேம்படுத்துவதிலும் தென் ஆபிரிக்காவில் தமது முதலீடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் உறுதி செய்து கொண்டன்.

தென் ஆபிரிக்காவைத் தமிழர்களுக்கு இனம் காட்டிய 2009.
2009-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டு வந்த போது இந்தியா அத் தீர்மானத்தை தலைகீழாக மாற்றி இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. இந்தியாவின் வேண்டுதலின் பேரில் இலங்கையைப் பாராட்டும் தீர்மானத்திற்கு தென் ஆபிரிக்கா வாக்களித்தது. இது பற்றி ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரசில் கேள்வி எழுப்பப்பட்ட போது இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டுப் பிரச்சனையில் இந்தியாவை அனுசரித்தே வாக்களிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. மேற்படி தீர்மானம் பிழையானது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் நியமித்த நிபுணர்கள் குழுவே தெளிவாகத் தெரிவித்திருந்தது.

ஆபிரிக்கப் பிராந்திய நாடு ஒன்று தொடர்பான ஒரு பிரேரணை பன்னாட்டு அரங்கில் வரும் போது இந்தியா  தென் ஆபிரிக்காவின் நலம் சார்ந்து செயற்பட வேண்டுமாய்ன் தென் ஆபிரிக்காவும் இந்தியாவின் அயல் நாடுகள் தொடர்பான பிரேரணை வரும் போது இந்தியாவை அனுசரித்தே வாக்களிக்க வேண்டும். மேலும் இந்தியாவும் ஆபிரிக்காவும் தமது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் ஒன்றை ஒன்று அனுசரித்தே போக வேண்டும். அத்துடன் BRICS நாடுகள் எனப்படும் பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய மக்கள் தொகை கூடிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்திய-தென் ஆபிரிக்க நட்பும் ஒத்துழைப்பும் முக்கியமானவை.

நேர்வேயின் எரிக் சொல்ஹேய்ம் சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட போது அவர் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற இந்திய-அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் படைக்கலன்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் அவர் மௌனித்து விட்டார். பின்னர் அவ்வப்போது விடுதலைப் புலிகளைக் கடுமையாகத் தாக்கு மாநாடுகளில் உரையாற்றுவார். விடுதலைப் புலிகள் மீது சேறு பூசுவதற்கு என்றே நோர்வே சில மாநாடுகளைக் கூட்டியது. நோர்வேயின் நோக்கம் இலங்கை இனப் பிரச்சனைக்க்கு தீர்வு காண்பதல்ல விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதே என்பது இலங்கையில் தமிழர்காளின் பிரச்சனை இன்றும் தீர்க்கப்படாமல் முன்பு இருந்ததிலும் பார்க்க மோசமாகியிருப்பதில் இருந்து தெரிகிறது.

இலங்கை இனப்பிரச்சனையில் தென் ஆபிரிக்காவின் நடுநிலைமை என்பது இந்திய நலன் சார்ந்ததாகவே இருக்கும். இந்தியா தான் தமிழர்களின் விரோதி என்பதையும் தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பேரினவாத நிலைப்பாட்டை பல செய்கைகள் மூலம் எமக்கு உணர்த்தி விட்டது. இந்தியாவில் ஆட்சி மாறினால் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமாக இந்தியா நடக்கும் என்ற சிலரின் நம்பிக்கையை சுஸ்மா சுவராஜ்ஜின் இலங்கைப் பயணமும் அவரது கட்சியினர் மஹிந்த ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து பௌத்த கலாச்சார போதனா நிலையத்தை திறக்க வைத்தமையும் தவிடி பொடியாக்கி விட்டன.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை அங்கு நடந்தது ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மட்டுமே என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த தென் ஆபிரிக்கா தனது செய்கை தவறானது என்று அறிவிக்கும்வரை அதற்கு இலங்கைப் பிரச்சனையில் நடுநிலை வகிக்கும் யோக்கியதை கிடையாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...