Saturday 29 December 2012

சிரியாவில் குத்துக் கரணம் அடித்த இரசியா

டிசம்பர் 24-ம் திகதி சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையினதும் அரபு நாடுகளின் சபையிந்தும் சிறப்புத் தூதுவர சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைச் சந்தித்தார். டிசம்பர் 26-ம் திகதி சிரியப் படையினரின் காவற்துறையின் அதிபர் ஏ ஏ ஜே அல் ஸல்லால் சிரியாவை விட்டு தப்பினார். டிசம்பர் 28-ம் திகதி அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் அலெப்போ நகரில் உள்ள Mannagh உழங்கு வானூர்தித் தளத்திலும் பன்னாட்டு விமான நிலையத்திலும் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். சிரியாவில் நாளுக்கு நாள் அசாத்தின் ஆட்சி ஆட்டம் காண்கிறது.

21 மாதங்களுக்கு மேலாகத்தொடரும் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியில் சிரிய விமானப் படையினரால் கடும் இழப்புக்களைச் சந்தித்து வரும் கிளர்ச்சிக்காரர்கள் சிரிய விமானப் படையை அழிக்கும் முயற்ச்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அலேப்போ நகரில் நாலு விமானப் படைத் தளங்களை தாம் முற்றுகையிட்டதாக கிளர்ச்சிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சிரிய உள்நாட்டுப் போரில் விமானப் படை அண்மைக்காலங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களுக்கு எதிரான விமானத் தாக்குதலைப் பொறுத்த வரை ஒரு கையறுநிலையிலேயே இருக்கின்றனர்.

அசாத்தின் ஆட்சியை ஆதரிக்கும் இரசியா
இரசியாவின் மத்திய கிழக்குத் தந்திரோபாயத்திற்கு சிரியா முக்கியமானதாகும். சிரியாவில் இரசிய படைத் தளம் ஒன்றும் இருக்கிறது. இரசியாவின் நீண்ட கால நட்பு நாடாக சிரியா இருந்து வருகிறது. சிரியாவில் மேற்கு நாடுகள் விமானத் தாக்குதலை லிபியாவில் செய்தது போல் செய்யலாம் என் எதிர்பார்த்து இரசிய படைத்துறை ஆலோசகர்கள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டு அவர்கள் நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்குவது பற்றி பயிற்ச்சி அளித்து வருகின்றனர். சிரியாவிற்கு எதிராக விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இவர்கள் நேரடியாகவும் செயற்படலாம். இரசியாவுடனான ஒரு நேரடி மோதலை மேற்கு நாடுகள் விரும்பவில்லை.

கிளர்ச்சிக்காரர்களுக்கு கரம் நீட்டிய இரசியா
சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இருக்கும் தொடர்பைக் கடுமையாகக் கண்டித்து வந்த இரசியா திடீரென டிசம்பர் 28-ம் திகதி சிரியக் கிளர்ச்சிக்காரர்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு மாஸ்க்கோவிற்கு அழைத்தது. ஆனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் இந்த அழைப்பை ஏற்கவில்லை. இதுவரை காலமும் வெளியார் தலையீடு சிரியாவில் இருக்கக் கூடாது என்று கூறிவந்த இரசியா இப்போது தான் தலையீடு செய்வது ஏன் என்ற கேள்வியையும் முன்வைத்தனர். அத்துடன் இரசியா தனது செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இரசியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதாயின் அது ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரபு நாடு ஒன்றில் நடைபெற வேண்டும் என கிளர்ச்சிக்காரர்கள் இரசியாவிற்கு அடித்துச் சொல்லி விட்டனர். 2012இன் நடுப்பகுதியில் இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டி வரும் கிளர்ச்சிக்காரர்கள் இரசியாவை அதனது நிலைப்பாட்டில் இருந்து மாற்றி விட்டதா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...