Thursday 17 May 2012

அநியாயத்திற்கு ஆதங்கப்படும் எரிக் சொல்கெய்ம்

"என்னை சிங்களவர்கள் வெள்ளைப் புலி என்றார்கள். தமிழர்கள் பிரபாகரனை தவறாக வழிநடத்தியவர் என்றார்கள்." என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் இலங்கைக்கு சமாதான ஏற்ப்பாட்டாளராகக் கடமையாற்றிய நோர்வேயின் முன்னள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம். அத்துடன் அவர் நிற்கவில்லை இலங்கை தனது நாட்டில் வெளி நாட்டவரைத் தலையிடச் சொல்லிவிட்டு பின்னர் அவர் மீது வசை பாடும் ஒரு விநோதமான நாடு என்றும் சொல்கிறார் எரிக் சொல்ஹெய்ம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்படச் சிலர் கலந்து கொண்ட நோர்வேயில் 15-02-2012 இலன்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே எரிக் ஐயா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எப்படி இருந்தவர் இப்படி ஆனார்!
தமிழர்களின் நண்பன் என்ற வகையிலும் இலங்கையின் நண்பன் என்ற வகையிலும் தான் தமிழர்களுக்கு என்று ஒரு தனியான நாடு சரிவராது என்று எரிக் ஐயா சொல்கிறார். அது தனது எண்ணம் மட்டுமல்ல அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவற்றின் எண்ணம் என்கிறார் எரிக் ஐயா. இந்த ஐயா சாமாதானத் தூதுவராக வர முன்னர் தமிழர்கள் எப்படி இருந்தனர்? இன்று எப்படி இருக்கின்றனர்? இந்த ஐயா சமாதானத் தூதுவராக இருந்த போது மூன்று இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சமாதானத் தூதுவர் போர் முடிந்தவுடன் தனது பணியை நிறுத்திக் கொண்டார். உண்மையன சமாதானத் தூதுவராக இருந்திருந்தால் சமாதானம் ஏற்பட்டபின்னர்தான் தனது பணியை முடித்திருக்க வேண்டும்.


இணைத் தறுதலை நாடுகள்
ஐயா சொல்ஹெய்ம் அவர்களே இலங்கையில் போர் மூலம் தீர்வு காண முடியாது பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும் என்று சொல்லிக் கொண்டு நீங்களும் உங்கள் இணைத் தலைமை நாடுகளும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தி இலங்கைப் படையினருக்கு பண உதவி ஆயுத உதவி வழங்கி தமிழர்களின் போராட்டத்தை நசுங்கடித்தது தவிர தமிழர்களுக்கு நீங்கள் என்ன நன்மை செய்தீர்கள்? இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உருவாக்கப்பட்ட இணைத் தலைமை நாடுகள் தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் மௌனமாகப் போனது ஏன்? போர் முடிந்த பின்னரும் முடியாமல் இன்றுவரை தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை கண்டும் காணமல் இருப்பது ஏன்?

 ஐநா நிபுணர்களின் அறிக்கைக்கு என்ன நடந்தது?

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கையில் போர்க் குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரியப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொல்லியது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றது. ஐநா நிபுணர்குழு அறிக்கையை உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை புறந்தள்ளி விட்டு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மட்டும் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவது ஏன்?

வில்லன் நம்பியார்கள்
கொழும்பின் படைத்துறை ஆலோசகராக சதீஷ் நம்பியாரும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலரின் ஆலோசகராக விஜய் நம்பியாரும் கடமையாற்றியதைச் சுட்டிக்காட்டிய நீங்கள் அவர்களின் சதிகள் பற்றிக் குறிப்பிடாதது ஏன்? விஜய் நம்பியார் போரின் இறுதி நாட்களில் இலங்கை சென்று என்ன செய்தார்? ஐநாவில் அறிக்கை சமர்பிக்க மறுத்தது ஏன்?

அதிகாரப்பரவலாக்கம் கெட்ட வார்த்தை.
ஒரு காலத்தில் இலங்கையில் இனப்பிரச்சனைக்கு இணைப்பாட்சி(சமஷ்டி) முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. சிங்களவர்கள் அதைத் திருப்பிப் திருப்பி தவறானது என்று பொய் சொல்லி இணைப்பாட்சியை ஒரு கெட்ட வார்தை ஆக்கிவிட்டனர். பின்னர் அதிகாரப் பரவலாகக்ம் என்பது ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் சிங்களவர்கள் மத்தியில் ஒரு கெட்ட வார்த்தையாக்கப்பட்டது. இப்போது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்ற பதம் முன்வைக்க்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணக்குழுவின் பரிந்துரைகள் ஒரு சர்வ ரோக நிவாரணி போல் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை கூறுகின்றன. ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிச் செயல்பட்டு விட்டது என்று இலங்கை அரசதரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் நல்லிணக்கமும் ஒரு கெட்ட வார்த்தை ஆக்கப்பட்டுவிடும்.


உங்கள் நிகழ்ச்சி நிரலை நாம் அறிவோம்
இலங்கையில் போர் மூலம் தீர்வுகாண முடியாது பேச்சு வார்த்தை மூலம் தான் தீர்வுகாண முடியும் என்று கூறிக் கொண்டே இலங்கை அரசிற்கு தமிழர்களின் போராட்டத்தை நசுக்க உதவினீரகள். இப்போது இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை ஒழிக்க இலங்கைப் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறீரகள். சீன சார்பற்ற ஒரு அரசை கொழும்பில் நிறுவிய பின்னர் உங்கள் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை தமிழர்களைக் கைகழுவி விட்டு விடும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...