Monday 10 September 2018

சிரியப் போரின் இறுதிக் கட்டமா இக்கட்டின் உச்சமா?


2018 செப்டம்பர் மாதம் 4-ம் திகதி சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது இரசியப்படைகள் தாக்குதலை ஆரம்பித்தன. இது ஒரு இரத்தக் களரி மிக்கதாக அமையப் போகும் போரின் ஆரம்பமாகும். எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியப் பிரதேசங்களை மீட்ட பின்னர் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இரு பெரும் பிரதேசங்கள் இருக்கின்றன. ஒன்று இத்லிப் மாகாணம். மற்றது குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரொஜாவா பிரதேசம். ரொஜாவ என்பது குர்திஷ் மக்கள் தமது நிலப்பரப்பிற்கு வைத்த பெயர். அங்கு அவர்கள் தமது அரசை The Democratic Federation of Northern Syria என அழைக்கின்றனர்.

பீப்பாய் குண்டுகள் (barrel bombs)
2018 செப்டம்பர் 7-ம் திகதி ஈரானில் சிரியா தொடர்பாக ஒரு சந்திப்பு நடந்தது அதில் ஈரான், இரசியா, துருக்கி, சிரியா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. சிரிய அதிபர் அங்கு செல்லவில்லை. புட்டீன், எர்டோகான், ரௌஹானி ஆகியோர் கலந்து கொண்டனர். இத்லிப்பில் தாக்குதல் செய்யாமல் பேச்சு வார்த்தை நடத்தும் படி துருக்கிய அதிபர் எர்டோகான் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 2018 செப்டம்பர் 9-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரசிய மற்றும் சிரிய விமானப்படைகள் இத்லிப்பில் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின. வெடி பொருட்களும் சிதறு குண்டுகளும்(shrapnel) நிறைந்த பீப்பாய் குண்டுகள் (barrel bombs) அங்கு வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கத் தொண்டு நிறுவனமொன்று இரண்டு மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்கின்றது.

இத்லிப் மாகாணம்
இத்லிப் மூன்று மில்லியன் மக்களைக் கொண்ட இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு போராளி அமைப்புக்கள், இரசியா ஆதரவு போராளி அமைப்புக்கள், இரசியாவில் பிரிவினை கோரிப் போராடும் செஸ்னிய இஸ்லாமியப் போராளி அமைப்பு, சீனாவில் தனி நாட்டுக்காகப் போராடும் உய்குர் இஸ்லாமியப் போராளிக் குழுவான தேர்க்கிஸ்த்தான் இஸ்லாமியக் கட்சி என பலதரப்பட்ட அமைப்புகள் இயங்குகின்றன. மொத்தம் எழுபதாயிரம் போராளிகள் அங்கு நிலைகொண்டுள்ளனர். இரசியாவின் படைத்தளம் அமைந்துள்ள லதக்கியா மாகாணத்திற்கு அண்மையில் இதிலிப் மாகாணம் இருக்கின்றது. இத்லிப்பில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் பல தடவைகள் இரசியப் படை நிலைகள் மீது தாக்குதல் முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டன. லதக்கியாவில் இரசியப் படையினர் நிம்மதியாக நிலை கொள்ள இத்லிமப் மாகாணம் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

சிக்கலான இத்லிப்
உய்குர் இஸ்லாமியப் போராளிக் குழுவான தேர்க்கிஸ்த்தான் இஸ்லாமியக் கட்சி சிரியாவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றது. அத்துடன் துருக்கிய உளவுத்துறையுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணுகின்றது. ஆனால் துருக்கி ஆதரவு குழுக்கள் சில இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய போது அது துருக்கி ஆதரவுக் குழுக்களுக்கு எதிராகப் போராடி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைப் பாதுகாத்தது. அது பாதுகாத்த அமைப்புக்களில் ஹயட் தஹ்ரிர் அல் ஷாம் முக்கியமானது. எஸ்ஸின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்பதற்கு போர் நடந்த போது இரசியா தனது ஆதரவுக் குழுக்களை இத்லில் மாகாணத்திற்கு அனுப்பி வைத்தது. இப்படிப் பட்ட பல ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட போராளி அமைப்புக்களை வைத்துப் பார்க்கும் போது சிக்கலே உன் பெயர் சிரியப் பிரச்சனையா என எண்ணத் தோன்றும். அஹ்ரர் அல் ஷாம் அமைப்பும் நௌர்டீன் அல் ஜென்கி அமைப்பும் இணந்து சிரிய விடுதலைப்படை அமைப்பு உருவாக்கப்பட்டது.

மதவாத ஆட்சி வேண்டும் அமைப்புக்கள்
ஹயட் தஹ்ரிர் அல் ஷாம் (Hay'et Tahrir al-Sham (HTS) ) என்பது நஸ்ரா முன்னணியில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு போராளி அமைப்பு. நஸ்ரா முன்னணி அல் கெய்தாவின் கிளை அமைப்பு. தஹ்ரிர் அல் ஷாமும் துருக்கி ஆதரவு சிரிய விடுதலைப் படையும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. தஹ்ரிர் அல் ஷாம் சிரியாவில் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடைய அமைப்பு. இந்த அமைப்பை அமெரிக்கா துருக்கி உட்படப் பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. அபு மொஹம்மட் அல் கொலானி தலைமை தாங்கும் இந்த அமைப்புடன் துருக்கிய உளவுத்துறை தொடர்புகளை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. துருக்கியின் தாளத்து ஆட அது மறுத்துவிட்டது. துருக்கியை ஒட்டிய இத்லிப்பின் பகுதிகளையும் இத்லிப் மாகாணத்தின் தலைநகரான பப் அல் ஹவாவைத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. இத்லிப்பில் அதிக நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்த அமைப்பே. அசாதினதும் இரசியாவினதும் படைகள் இத்லிப்பைக் கைப்பற்றாமல் இருப்பதற்கு தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பைக் கலைத்து விட்டு அதன் போராளிகள் துருக்கியுடன் நெருக்கமான தேசிய விடுதலைப்படையில் இணைவேண்டும் என்ற வேண்டுகோளையும் தஹ்ரிர் அமைப்பு நிராகரித்து விட்டது. தஹ்ரிர் அமைப்பில் உள்ள கரும்போக்காளர்கள் அதன் தலைவர் அபு மொஹம்மட் அல் கொலானி துருக்கியின் கருவியாக மாறுகின்றார் எனக் குற்றம் சாட்டியதும் உண்டு. சிரியாவில் உள்ள் அல் கெய்தா தலைவர்களும் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பின் தலைமை தன் தத்துவார்த்த நிலைகளில் இருந்து விலகிவிட்டதாகக் குற்றம் சுமத்தினர். ஆனால் மிக உறுதியான் நிலைப்பாட்டில் இருக்கும் துருக்கியை எதிர்த்துக் கொண்டு துருக்கியின் எல்லையில் நிலை கொண்டுள்ள அமைப்புக்குத் தலைமை தாங்குவது இலகுவான செயல் அல்ல. இந்த நிலையில் இத்லிப்பின் எதிர்காலம் குறித்து துருக்கி ஒரு புறம் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்புடனும் மறுபுறம் இரசியாவுடனும் தொடர் பேச்சு வார்த்தையில் சில மாதங்களாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பைக் கலைக்க முடியாது என அதன் தலைவர் துருக்கிக்கு 2018 ஓகஸ்ட் 28-ம் திகதி தெரிவித்தார்

இஸ்ரேல் சும்மா விட்டு வைக்குமா?
2011-ம் ஆண்டு சிரியாவில் மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேல் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்படுவதை விரும்பவில்லை. 12இற்கு மேற்பட்ட போராளிக்குழுக்களுக்கு இஸ்ரேல் பலவகைகளில் உதவி செய்கின்றது. சில அமைப்பின் போராளிகளுக்கு மாதம் 75 டொலர்களை ஊதியமாகவும் இஸ்ரேல் வழங்குகின்றது. இஸ்ரேல் சில போராளி அமைப்புக்களுக்கு assault rifles, machine guns, mortar launchers and transport vehicles போன்றவற்றை வழங்குவதுடன். கறுப்புச் சந்தையில் படைக்கலன்கள் வாங்க நிதி உதவியும் செய்கின்றது. இஸ்ரேல் உதவி செய்யும் குழுக்கள் ஈரானிற்கு ஆதரவான போராளி அமைப்புக்கள் ஈரானுக்கு ஆதரவான குழுக்களை கோலான் குன்றுப்பக்கம் வராமல் பார்த்து கொள்வதை தடுக்கின்றன.  

குர்திஷ் மக்களை வெறுக்கும் துருக்கி
இஸ்லாமிய சகோதரதுவ அமைப்புடன் துருக்கி நெருங்கிய உறவை வைத்திருக்கின்றது. அதனது ஆதரவு பெற்ற NLF எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய விடுதலை முன்னணிக்கு துருக்கி பல உதவிகளைச் செய்தது. அத்துடன் அஹ்ரர் அல் ஷாம், நௌருடீன் அல் ஜெங்கி படையணி, பல்லக் அல் ஷாம், ஜைஸ் அல் அஹ்ரர், உட்பட பல போராளி அமைப்புக்களைக் கொண்ட சுதந்திர சிரியப்படை(Free Syriam Army) துருக்கியின் ஆதரவு பெற்று சிரியாவில் இயங்கி வருகின்றது. அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து தொலைப்பதில் தீவிரமாக இருக்கும் சுதந்திர சிரியப்படை குர்திஷ் போராளிகளுக்கு எதிரான அமைப்புமாகும். சிரியாவிலோ ஈராக்கிலோ குர்திஷ் மக்களுக்கு என ஒரு கட்டுப்பாட்டுப் பிராந்தியம் இருக்கக் கூடாது என்பது துருக்கியின் மிகத் தீவிரமான நிலைப்பாடாகும். அத்துடன் குர்திஷ் மக்கள் வாழும் சிரியாவினதும் ஈராக்கினதும் வட பகுதிப் பிராந்தியங்கள் தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்பது துருக்கி முதலாம் உலகப் போர் முடிவடைந்த போதில் இருந்தே விருப்பமுடையதாக இருக்கின்றது.

இத்லிப்பில் வேதியியல் தாக்குதல் நடக்குமா?
இத்லிப் நகரை எப்படி மீட்டெடுப்பது என்பது தொடர்பாக சிரியா, இரசியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் கடந்த பல வாரங்களாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இத்லிப்பின் அஃப்ரின் நகரையும் அல் பப் நகரையும் குர்திஷ் போராளிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள். துருக்கிப் படைகள் சுதந்திர சிரியப் படை என்னும் போராளிகளின் கூட்டமைப்புடன் இணைந்து அங்கு ஆக்கிரமிப்புச் செய்தபோது குர்திஷ் போராளிகள் பின் வாங்கிச் சென்றனர். அப்போது துருக்கி இத்லிப் மாகணத்தைச் சுற்றிவர பன்னிரண்டு படை அவதானிப்பு நிலையங்கள் என்னும் பெயரில் தனது படையினரை நிலை கொள்ளச் செய்தது. இத்லிப்பை மீளக் கைப்பற்ற வேண்டும் என்ற சிரிய அதிபர் அசாத்தினதும் இரசியாவினதும் திட்டத்தை அது சிக்கலாக்கியது. இரசியா சிரியாவில் குர்திஷ் போராளிகளுடனனான மோதலைத் எப்போதும் தவிர்த்து வந்தது. சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் போலியான வேதியியல் தாக்குதல் நடத்த வெளிநாடுகளில் இருந்து நிபுணர்கள் வந்துள்ளனர் என இரசியப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

இக்கட்டான நிலையில் சிரியா
இத்லிப்பில் நிலைகொண்டுள்ள துருக்கியப் படைகள்,  துருக்கி ஆதரவுப் படைகள், அல் கெய்தா ஆதரவு அமைப்புக்கள் போன்றவற்றை வெற்றி கொள்ள பெரும் படையணிகளை களமிறக்க வேண்டியிருக்கும். பெரும் இழப்புக்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் ஏற்கனவே எதிரி அமைப்புக்களிடமிருந்து கைப்பற்றிய நிலப்பரப்புக்களை இழக்க வேண்டியிருக்கலாம். தடை செய்யப்பட்ட படைக்கலன்களை பாவிக்க வேண்டிய சூழல் கூட உருவாகலாம். வேதியியல் குண்டுகள் பாவித்தால் தாக்குதல் செய்வோம் என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இக்கட்டான நிலையில் இரசியா
துருக்கியின் வேண்டுகோளை நிராகரித்து  ஹயட் தஹ்ரீர் அல் ஷாம் {Hay'et Tahrir al-Sham (HTS)} அமைப்பு சரணடைய மறுத்த நிலையில் இரசியா அதை இலக்கு வைத்து தனது தாக்குதல்களை 20148 செப்டம்பர் 04-ம் திகதி ஆரம்பித்தது. இரசியாவிற்கு சிரியாவின் முழுப்பகுதியையும் அதிபர் பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதும் மத்திய தரைக்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதும் முதன்மை நோக்கங்களாகும். அத்துடன் இரசியாவுடன் உறவை அதிகரித்து வரும் துருக்கியைப் பகைக்கக் கூடாது என்பதிலும் இரசியா கவனமாக இருக்கின்றது. அமெரிக்காவுடனான துருக்கியின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் துருக்கி இரசியாவைப் பகைத்தால் அது  மீண்டும் அமெரிக்காவுடன் நெருக்கமடையும் என்பதையும் இரசியா அறியும். துருக்கி மேற்கு நாடுகளின் நட்பை ஒரு போதும் இழக்காது என இரசியா நம்பினால் மட்டுமே இதிலிப்பைக் கைப்பற்றும் அதிபர் அசாத்தின் முயற்ச்சிக்கு இரசியா முழுமையான ஆதரவை வழங்கும். இரசியா என்னதான் ஆதரவு வழங்கினாலும் அதிபர் பஷார் அல் அசாத் இரசியாவின் முழுமையாக சொற்படி கேட்பதில்லை.

இக்கட்டான நிலையில் துருக்கி
தன்னுடைய பிரதேசமாக துருக்கி கருதும் அல்லது கனவு காணும் இத்லிப்பில் தனக்கு சார்பான போராளிக் குழுக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தன்மீது நடக்கும் தாக்குதல் என துருக்கி இரசியாவிடமும் சிரியாவிடமும் தெரிவித்துள்ளது. ஆனால் இரசியாவும் சிரியாவும் இத்லிப்பைக் கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளன. 2011இல் சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து 3.5மில்லியன் சிரிய மக்கள் துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர். சிரியாவில் அமைதி நிலை திரும்பினால் மட்டுமே அவர்கள் நாடு திரும்புவார்கள். இக்கட்டான நிலையில் இருக்கும் துருக்கியப் பொருளாதாரத்திற்கு சிரியாவில் அமைதி திரும்புதல் அவசியம். அல் கெய்தாவிற்கும் அதன் ஆதரவு பெற்ற மற்ற அமைப்புக்களுக்கும் துருக்கிய மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. அவர்கள் இத்லிப்பில் கொன்று குவிப்பது துருக்கிய ஆட்சியாளர் மீது மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்கும். இத்லிப் மீது தாக்குதல் செய்யப்பட்டால் அங்கிருந்து மேலும் பெருந்தொகையான மக்கள் துருக்கியில் தஞ்சம் புக வாய்ப்புண்டு. அவர்களுடன் தீவிர்வாதிகளும் துருக்கி போய்ச் சேரலாம். துருக்கியில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளம் அமெரிக்காவிற்கு எதிராக துருக்கி பாவிக்கும் துருப்புச் சீட்டு. ஆனால் அமெரிக்கா இப்போது துருக்கியின் போட்டிய் நாடாகிய கிரேக்கத்திற்கு தனது படைத்தளத்தை மாற்றும் திட்டத்துடன் இருக்கின்றது.

இக்கட்டான நிலையில் அமெரிக்கா
2016-ம் ஆண்டு இத்லிப்பின் மூன்று அமைப்புக்கள் இணைந்து இதிலிப் விடுதலைப்படை என்ற அமெரிக்க ஆதரவு அமைப்பை உருவாக்கின. அமெரிக்காவின் ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் பங்காற்றின. அது போன்ற அமெரிக்க ஆதரவு குழுக்களை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிற்கு உண்டு எனச் சொல்ல முடியாது. இது போன்ற குழுக்களை தனக்குத் தேவையான போது பாவித்து விட்டு காலைவாருவது அமெரிக்காவைப் பொறுத்தவரை சாதாரணம். ஆனால் இத்லிப்பை சிரிய அரச படைகள் கைப்பற்றிய பின்னர் அவற்றின் அடுத்த இலக்கு ரக்கா மாகாணம் உட்பட்ட குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரொஜாவா பிரதேசமாகும். அங்கு ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான படை நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும் போராளிகளுக்குப் பயிற்ச்சி அளிக்கவும் என இரண்டாயிரம் படை நிபுணர்கள் நிலை கொண்டுள்ளனர். அவர்கள் வெளியேற வேண்டிய நிலை உருவாகும். அதன் பின்னர் சிரியாவில் அமெரிக்காவிற்கு என எந்த ஒரு பிடியும் இருக்காது. இத்லிப் பிரதேசத்தில் உள்ள அல் கெய்தா ஆதரவுக் குழுக்களுடனும் அமெரிக்காவிற்கு இரகசியத் தொடர்புகள் உண்டு. இனி உலகின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு போராளி அமைப்புக்களும் அமெரிக்காவை நம்பாத நிலை உருவாகலாம்.

இக்கட்டான நிலையில் ஈரான்
சிரியாவிலும் ஈராக்கிலும் ஈரான் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக செய்த நடவடிக்கையால் ஈரானில் வாழும் குர்திஷ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அவர்களை அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானுக்கு எதிராகத் திருப்பலாம்.

துருக்கி தனது மூக்கைப் பாதுகாப்பதற்கு அல் கெய்தா ஆதரவு பெற்ற படைக்குழுக்களுக்கு படைக்கலன்கள் வழங்கினால் இதிலிப் பெரும் போராக மாறும். அது மோசமான இரத்தக் களரியாக அமையும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...